Skip to Content

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

  1. சில்லறை ஆசைக்குரிய எந்தச் செயலும், ஆனந்தத்தின் பிறப்பிடமாக இருக்க முடியும். ஜீவியத்தை உயர்த்தி, போக்கை மாற்றினால் போதும்.

    ஜீவியம் உயர்ந்தால், சில்லறை ஆசையிலும் ஆனந்தம் வரும்.

    செயலால் உயர்ந்தவை, தாழ்ந்தவை என்றுண்டு. வேதம் பயில்வது, பிறர் உயிரைக் காப்பாற்றுவது, உணவுப்பொருள் உற்பத்தி செய்வது ஆகியவை செயலால் உயர்ந்தவை. கோள் சொல்வது, பிறர் வாழ்வை பாழ் செய்வது, கொலை செய்வது ஆகியவை செயலால் தாழ்ந்தவை. அரிபொருளான விதிவிலக்காக, நல்ல செயலும் தவறாக இருக்க முடியும். அது செய்யும் நோக்கத்தைப் பொருத்தது. Devil quoting scriptures சாத்தான் வேதம் சொல்வது போல் என்ற மொழி வழங்குவது அதனால்தான்.

    1942இல் ஒரு தலைசிறந்த மாணவன் SSLC பரீட்சை எழுத வேண்டும். எல்லா பாடங்களிலும் முதல் மார்க் வாங்கும் மாணவன் என்பதால், கணிதத்தில் 0 வாங்கினாலும் வருஷா வருஷம் பாஸ் போட்டு SSLCக்கு வந்துவிட்டான். மன்னராட்சி நடக்குமிடம். சிறிய ஊர். பையனையும் அவன் குடும்பத்தையும் பள்ளியில் அனைவரும் அறிவர். SSLC பாஸ் செய்துவிட்டால் கணித பாடம் இனி தேவையில்லை. பாஸ் என்பது நடக்காத காரியம். தலைமை ஆசிரியர் ‘பச்சை மிளகாய்’ எனக் கட்டுப்பாட்டில் பெயர் வாங்கியவர். அவரே கணித ஆசிரியர். கணிதப் பரிட்சையன்று அவர் "இந்த மாணவன் பெயிலாகக் கூடாது, நான் எந்த நரகத்திற்குப் போனாலும் சரி, அந்தப் பாவத்தை நானே என் கையால் செய்கிறேன்'' என்று அவனிடம் ஓடி வந்தார். 3 கணக்கு அவனுக்குச் சொல்-க் கொடுத்து எழுதச் சொன்னார். பையன் பாஸ் செய்துவிட்டான். தலைமை ஆசிரியரே இந்தத் தவற்றைச் செய்வது மன்னிக்க முடியாததொன்று. அவர் நோக்கம் கருதி அது பாவமான செயலிலிருந்து மாறி புண்ணியமான செயலாகிறது.

    ஆசை யோகத்திற்கும், தவத்திற்கும் எதிரி. ஆனந்தமும், ஆசையும் ஒரே (vibrations) மாதிரியானவை. ஆனந்தம் உயர்ந்தது, ஆசை தாழ்ந்தது. ஆசையின் சுவடு அழியும்வரை ஆனந்தத்தை உணர முடியாது என்று அன்னை கூறுகிறார். (Desire, petty desire) ஆசையும், சில்லறை ஆசையும் சிறிய மனிதனுக்குரியவை. ஆசையே தடையென்றால், சில்லறை ஆசையைப் பற்றிச் சொல்ல வேண்டாம். விதிக்கு விலக்குண்டு.

    செய்யும் நோக்கம் கருதி எந்தச் செயலும் ஆனந்தத்தை உணர முடியும். அடிப்படைத் தத்துவமாகப் பூரண யோகத்திற்கு அமைந்தது, "எந்தச் செயலையும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தலாம்'' என்பது. காமக்குரோத லோப மோகம் தபஸ்விக்கு எதிரி. மனதைக் கடக்கும் வரை இந்தச் சட்டம். மனதைக் கடந்தால் தெய்வநிலையைத் தாண்டுகிறோம். தெய்வநிலையைத் தாண்டி, அகந்தை அழிந்து, மனத்திலிருந்து விடுபட்டால் காமமும் ஆன்மீக முன்னேற்றத்திற்குரிய கருவியாக முடியும் என்பதை விளக்கும்படி கேட்ட சாதகருக்கு பகவான், "அது சரி. அந்நிலைக்கு வந்தவருக்கு அதைக் கற்பிக்க இயலும்'' என்றார்.

    பொதுவாக வாழ்வில் சிறியவர் பெரிய காரியம் செய்யும் சந்தர்ப்பங்களையும், பெரியவர் சிறிய காரியங்களைச் செய்யும் சந்தர்ப்பங்களையும் நாம் பார்ப்பதுண்டு. அது வாழ்வில் விதிவிலக்கான செயல்கள். அத்தலைப்பில் வருவதே மேற்சொன்ன சட்டம். ஆனால் இது அன்னை வாழ்வுக்குரியது. அதாவது வாழ்வு மையத்திலிருந்து மாறி, நிரந்தரமாகவும் மாறி, அன்னை வாழ்வின் மையத்திற்கு வந்தபின், இது உண்மையாக முடியும்.

    இது உண்மையானால் ஆசையாக இருந்தாலும் பரவாயில்லை, தவறில்லை என்ற நிலையிருக்காது. சிறிய ஆசை, சில்லறை ஆசையாக இருப்பதால், அச்செயல் திருவுருமாற்றமடைந்தால் அது பேரின்பமாகவும், பெரிய ஆனந்தமாகவும் மாறுகிறது.

    திருவுருமாற்றத்தில் வேறோர் அம்சமும் உண்டு. திருவுருமாற்றம் வரும் நிலையில், சில்லறை ஆசைகள் மாறி, ஆசை நிலையைக் கடந்து ஆனந்த நிலையை அடைந்திருக்கும். விதிவிலக்காக அதுபோல் மாறாதவையும் உண்டு. மாறாவிட்டாலும், சிறிய ஆசையானாலும், நோக்கம் கருதி ஆனந்தத்தை உற்பத்தி செய்யும். உலகுக்கே இவை புதியவை என்பதால் பலருக்கும் புரியும் உதாரணம் தருவது எளிதன்று. ஓரிரு சாதகர்களை அன்னை கேலி செய்வதுண்டு. ஆசாரப் பிராமணக் குடும்பத்தவர் சென்ற தலைமுறையில் கிறிஸ்துவராகி, வெள்ளைக்காரியை மணந்தவர், வேட்டியே கட்டியதில்லை. அவரை அன்னை சிறு பிள்ளை மாதிரி (silly baby) சில சமயங்களில் நடத்துவதுண்டு. பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு அவர் வந்தபொழுது யார் இந்தப் பொம்பளை எனக் கேட்டார். அவரை ஒரு முறை தலையில் குட்டினார். அந்தக் குட்டு ஆனந்த அலைகளை அவருள் எழுப்பியது. சில்லறையாகச் செய்தாலும், ஆனந்தம் பிறக்கும்.

  2. சிறிய விஷயங்களில் இம்மாற்றத்தைச் செய்வது கடினம். பெரும்பாலான செயல்களை மாற்றிவிட முடியும். சில, மாறுதல்களுக்கு இடம் கொடுக்காமல் நிற்கும். அவை அழிக்கப்பட வேண்டியவை.

    அழிய வேண்டியது மாறாது. மாற முடியாதது அழிவை அழிக்கும்.

    அடிப்படையில் சிறியது, பெரியது என்பதில்லை. ஆனந்தம் பெற மேல் உலகுக்குச் செல்ல வேண்டும். இந்த உலகில் ஆனந்தமில்லை என்பது நாம் அறிந்த உலகம். ஆனந்தத்தை இந்த உலகில் அனுபவிக்க முடியும் என்பது மட்டுமன்று, இவ்வுலகில் ஆனந்தம் பெற்றால் அது ஆனந்தத்தி-ருந்து (bliss) சிருஷ்டியின் ஆனந்தமாக (delight) மாறும். அது பெரியது என்ற தத்துவம் பகவான் ஸ்ரீ அரவிந்தருடையது. அந்த ஆனந்தத்தைத் தேடியே இறைவன் சிருஷ்டித்தான். அவன் லீலையை மேற்கொண்டதே அதற்காகத் தான். நாம் அதைப் பெற வேண்டும். அதற்கு நாம் இறைவனாக வேண்டும். இறைவனுக்கு முன் சத்தியஜீவனாக வேண்டும்.

    மாற்றம் எல்லா நிலைகளுக்கும் உண்டு என்பது தத்துவம். நடைமுறையில் பெரியதை மாற்றலாம், சிறியதை மாற்றுவது எளிதன்று. விரயம் என்பது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதேபோல் மரணம், அழிவு என்பவை மனிதனுக்குக் கஷ்டம், வருத்தம் தரக்கூடியவை. சிருஷ்டியில் எழுபவையெல்லாம் வாழ்வதற்குத் தகுதியுள்ளவையல்ல. தகுதியற்றதை வாழ்வு அழிக்கிறது. இந்தத் தத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சியை அன்னை தாம் வளர்த்த பூனையின் குட்டி போட்டபொழுது நடந்ததைச் சொல்லி விளக்குகிறார். அவர் இதை விளக்கச் சொல்லவில்லை. வேறு சந்தர்ப்பத்தில் சொல்லிய கதை அது. பூனை தான் போட்ட குட்டிகளில் இரண்டு முடமாக இருந்ததைப் பார்த்து, இவை பிழைக்கக் கூடியவையல்ல என்று கண்டு, அதன் மீது உட்கார்ந்து அந்த இரண்டு குட்டிகளையும் கொன்றுவிட்டது. "அழிக்கப்பட வேண்டியவை அழிக்கப்பட வேண்டும்'' என்ற சட்டம் இங்கு செயல்படுகிறது. நமக்கு அது மனதிற்கு இதமாக இருக்காது. ஆனால் வாழ்க்கை நியதி அது.

    சமூகம் மாறும்பொழுது, பல பயனற்றுப் போகும். கார் வந்தபின், வந்து பிரபலமான பின், குதிரை, குதிரை வண்டி ஐரோப்பாவிலிருந்து மறைந்துவிட்டன. இனி அவற்றை மியூசியத்தில்தான் வைக்க வேண்டும். அவை அழிந்துவிட்டன என நாம் வருத்தப்படுவதில்லை. அதேபோல் சமூகத்தில் இன்றுள்ள பழக்கங்கள் அனைத்தும் திருவுரு மாற்றமடைந்தாலும், சில திருவுருமாற்றமடைய மறுக்கும். அவை அழிக்கப்பட வேண்டியவையாகும். போட்டி, ஒத்துழைப்பாக மாறும். பொறாமை உதாரகுணமாகும். சோம்பல் சுறுசுறுப்பாக மாறும். தன் கடைசி வருஷத்தில் அன்னை, "என்னால் எந்தக் குற்றத்தையும் மன்னிக்க முடியும். கொடுமை செய்பவர்களையும் மன்னிக்கும் மனம் எனக்குண்டு. ஆனால் கொடுமை செய்து அதில் சந்தோஷம் அடைபவரை என்னால் பொறுக்க முடியாது'' என்றார். பிறரைக் குறைவாகப் பேசுவது, தன் குழந்தையை அழவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற சில குணங்கள் மாற மறுத்தால், அவற்றை அழிக்க நாம் தயங்குதல் கூடாது. அந்தக் குணங்கள் அழியும் நேரம் உலகத்தில் வந்து விட்டால் அவை அன்னை சக்தியைத் தேடி வந்து, "எங்களை அழித்து விடுங்கள்" என்று மன்றாடும்.

  3. எவ்வளவுக்கெவ்வளவு மட்டமானதாகவும், சிறியதாகவுமிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அச்செயல் திருவுருமாற்றத்தால் அதிக ஆனந்தத்தை உற்பத்தி செய்யும்.
    • மட்டம் உயர்வின் திட்டம்.
    • வெறுத்து விலகியதை விரும்பி நாடும் மனிதன்.

    செயல் திருவுருமாற்றத்தால் எதிரான பலனைக் கொடுக்கும். திருவுருமாற்றம் பகவான் உலகுக்கு அளித்த புதிய வரப்பிரசாதம். புத்தர் நோய்வாய்ப்பட்டவனால் மனம் மாறி ஞானம் பெற்றபின், நோயை அழிக்க முயன்றார். அவருடைய ஞானத்தை ஏற்றுக்கொண்டது உலகம். ஏன் நோயை ஆரோக்கியமாக மாற்றக் கூடாது என நினைவு எழவில்லை. துன்பம் வந்தால் மனிதன் அதைப் போக்க முயலுவான். அதை இன்பமாக மாற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை. பல இலட்சம் கடன் உள்ளவன், உழைத்துக் கடனை அடைக்க முயலும்பொழுது, எப்படி இத்தனை இலட்சம் கைமீதியாகும் என நினைப்பதில்லை. அதுவும் இக்கடன், கைமீதியாக மாறும் என்ற எண்ணம் இன்று உலகில் இல்லை. இவை வாழ்வின் அம்சங்கள்.

    பகவான் திருவுருமாற்றம் (reversal of consciousness,transformation) என்பது மரணம், இறவாமையாக மாறுவது போலுள்ள அம்சங்களாகும். அது போன்றவை,

     

    உலகம்
    பிரபஞ்சமாவது
    மரணம்
    இறவாமை
    நோய்
    ஆரோக்கியம்
    ஜடம்
    சச்சிதானந்தம்
    சோகம்
    ஆனந்தம்
    மனம்
    சத்திய ஜீவன்
    எண்ணம்
    மௌனம்
    உணர்வு
    அன்பு
    இயலாமை
    அளவிறந்த திறமை
    வரம்புக்கு உட்பட்டது
    வரம்பில்லாமல் அளவு கடந்தது
    மனிதன்
    சத்தியஜீவன்

    இது யோகத் தத்துவமானால் நம் அன்றாட வாழ்வில் சிறியது, பெரியதாகவும்; வேண்டாதது, வேண்டியதாகவும்; உபத்திரவம் உதவியாகவும்; வெறுப்பு, நட்பாகவும் மாறுவது திருவுருமாற்றமாகும். அன்பர்கள் அன்றாட வாழ்வில் இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி பார்க்கிறார்கள். எந்த முதலாளி, தொழிலாளியை நீக்கினாரோ, அவர் பிறகு தொழிலாளியின் நிலை மாறியதால் அவனிடமே உதவி கேட்கிறார். நம்மைக் குறைவாகப் பேசியவர்களே உயர்வாகப் பேசுகிறார்கள். இவையெல்லாம் பக்தர் அறிவது. இங்குக் குறிப்பாகச் சொல்லப்படுவது சற்று மாறானது.

    நம்மிடம் பகைமை பாராட்டும்பொழுதும் அதற்கும் ஒரு முறையுண்டு. பகையை உயர்ந்த முறையிலும் வெளிப்படுத்தலாம், மட்டமாகவும் வெளிப்படுத்தலாம். மட்டமான முறையில் பகையை வெளிப்படுத்தும்பொழுது மனம் புண்படுகிறது. பகை, கோபத்தை மூட்டும். மட்டம் மனத்தைப் புண்படுத்தும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் திருவுருமாற்றம் செயல்படும் விதத்தை மேலே குறிக்கின்றேன்.

    குடிதண்ணீரில்லாத ஊரில் எப்படி விவசாயம் செய்யமுடியும் என்ற நிலை திருவுருமாற்றமடைந்ததால், தண்ணீர் அபரிமிதமான ஊராக அது மாறியது. பெரிய ஸ்தாபனத்தில் இரண்டாம் நிலையில் முதன்மையாக இருப்பவரை அனைவரும் நேரடியாகவும், உளமார வெறுத்தனர். அவரிடம் ஏற்பட்ட திருவுருமாற்றம் அவரை முதல் நிலையில் முதன்மையானவர்க்குக் கிடைக்காத புகழைப் பெற்றுத் தந்தது. புகழில்லாதவர், புகழடைவது வளர்ச்சி. கெட்ட பெயர் நல்ல பெயராக மாறுவது திருவுருமாற்றம். பயிரிட நீர் வசதியில்லை என்பது ஒரு நிலை. குடிக்க தண்ணீர் இல்லை என்றால் மோசமான நிலை. அது திருவுருமாற்றமடையும்பொழுது, நீர் கிடைத்தால் பெரியது. ஆனால் அபரிமிதமான நீர் கிடைத்தது. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையிருக்கிறதோ அது திருவுருமாற்றமடையும்பொழுது, அவ்வளவுக்கவ்வளவு உயர்ந்து விடுகிறது என்பது தத்துவம்.

  4. தாழ்ந்த பண்புகளை விட்டொழித்த பின்னரே உயர்ந்த பண்புகள் பலிக்கும். உயர்ந்தவற்றை ஏற்றுக்கொண்ட பின்னரும், தாழ்ந்தவற்றின் மீது ஆசையும், பெருமையும் மனிதனை விடாது. ஜனநாயகம் வந்த பின்னும் போருக்கு மரியாதையிருக்கிறது. சன்னியாசத்தை மேற்கொண்ட பின்னும் பணத்திற்குண்டான மரியாதை போவதில்லை.

    விட்ட குறை தொட்ட குறை.

    இங்கிலாந்தில் முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை நிறுவ மன்னரைக் கொலை செய்தனர். ஜனநாயகம் பிறந்தது. கொஞ்சநாள் கழித்து இறந்த மன்னர் மகனைத் தேடிக் கண்டுபிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். இன்றும் இங்கிலாந்தில் மன்னரே நாட்டின் தலைவர். அழித்த அரசனை மீண்டும் தேடிக் கண்டு இரு நூற்றாண்டாகப் போற்றுகின்றனர். உலகம் ஒரு பழக்கத்தை லேசில் கற்றுக் கொள்வதில்லை. கற்றுக் கொண்டதை லேசில் விடுவதில்லை. மனம் மீண்டும் மீண்டும் நாம் கைவிட்டதை நாடும் தன்மையுடையது. 1930க்கு முன் கெஜட் பதவி ஆபீசர்களில் பலர் ஆங்கிலேயராக இருந்தனர். அதனால் அவர்களை "துரை' என்பார்கள். 1950க்குள் இந்நிலை மாறியது. இலாக்கா தலைமை தவிர மற்ற பதவிகளை இந்தியர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தனர். 1970வரை கெஜட் பதவி ஆபீசரை ‘துரை’ என்று குறிப்பிடும் பழக்கம் இருந்தது. ‘துரை’ போன பின்னும், அவரிடத்தில் நம்மவர் வந்த பின்னும் பழைய பெயர் முழுவதும் மாறுவதில்லை.

    அதேபோல் தாழ்ந்ததை விட்டு, உயர்ந்ததை மேற்கொண்ட பின்னும், மனம் பழைய நிலையை விரும்பும், போற்றும். மனத்தைப் பொறுத்தவரை தாழ்ந்தது, உயர்ந்தது என்பதைவிட பழகியதை விட முடியாது என்பதே அதன் நிலை.

    முடியாட்சி இருந்த நாளில் 'வீரன்' என்பவன் சிறந்தவன். வீரம் ஏற்பட்டு பிரபலமாகி, 'வீரன்' ஏற்பட்டு, வீரன் தலைவனாகி, அரசன் ஏற்பட்டது சரித்திரம். மனிதகுலம் நாகரீகம் பெறுமுன் மக்கள் கூட்டமாக வாழ்ந்த நாளில் கூட்டத்தைக் காப்பாற்றுவது முக்கியம். கூட்டத்தைக் காப்பாற்றினால் தான் உயிர் பிழைக்கலாம். எதிரிகளின் கூட்டத்திலிருந்தும், காட்டு விலங்குகளிலிருந்தும், எல்லோராலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. காடு என்று எங்கோ மலையடிவாரத்தில் பல நூறு மைலுக்கு அப்பாலுள்ளது இக்காலம். உலகமே காடாக இருந்தது அந்த நாள். காட்டில் மனிதன் வாழ்ந்தான். காட்டை அழித்து நாட்டை உற்பத்தி செய்தான். நாலு மைல் அகலத்தில் ஊர் இருந்தால் ஊரின் எல்லையில் காடு. இரு ஊர்களுக்கிடையே காடு. எனவே எந்த நேரமும் காட்டுவிலங்கால் உயிருக்கு ஆபத்து. புலியைக் கொன்று, புலிப் பல்லை எடுத்தவன் வீரன். வீரனை மணக்க நங்கை விழைவாள். தான் வீரன் என்று நிரூபிக்கும் புலிப் பல்லை அவள் கழுத்தில் அணிந்து அவளை மணப்பது ஒரு வகை. அப்படி ஏற்பட்டதே இன்றைய தாலி என்று ஒரு செய்தி. வீரன் எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதால் வீரனே தலைவன். அவன் கூறுவதே நியாயம். இரு வீரர்கள் மாறுபட்டால் மல்யுத்தம் நடக்கும். ஜெயிப்பவன் நியாயஸ்தன். இது ஆதிகாலத்து நியாயம். நியாயம் ஜெயிக்கும் என்பது ஜெயித்தவன் நியாயம் என்றாயிற்று. இது ஆயிரம் ஆண்டு பழக்கம். இன்றும் இருவர் மாறுபட்டால், "வா, சண்டை போடலாம், யார் ஜெயிக்கின்றார்கள் பார்க்கலாம்'', என்ற உணர்வுக்குப் பெருமையுண்டு. நியாயத்திற்கும், அபிப்பிராயத்திற்கும், அறிவின் தெளிவுக்கும், உடல் வலிமைக்கும் எப்படி தொடர்புண்டு? இன்றுவரை மனித நியாயம் இப்படியே வழங்குகிறது.

    சன்னியாசி அனைத்தையும் துறந்தவன். வேந்தன் அவனுக்குத் துரும்பு. ஒரு புதிய ஊருக்குப் போனால், தங்க சன்னியாசி 'இந்த ஊரில் யார் செல்வர்' என்று விசாரித்து அங்கு போய்த் தங்குகிறான். தன்னைப் பார்க்க வருபவர்களில் பணம் உடையவர்க்கு அதிக கவனம் செலுத்தும் சன்னியாசிகள் உண்டு.

    தான் கைவிட்ட கருத்துக்களை, இலட்சியங்களை இன்னும் பெருமையுடன் கருதுவது மனித மனம். மனம் மாறினாலும், உணர்வு மாறுவதில்லை. உணர்வு மாறினாலும் பழக்கம் மாறுவதில்லை. அனைத்தும் மாறிய பின்னரே, அன்னை வருவார். பகவானுடன் நெடுநாள் இருந்தவர் தாம் போட்டிருந்த பூணூலைக் கூட விட முடியவில்லை. இதுவே மனித சுபாவத்தின் உண்மை.

  5. Systems முறைகள் முதலில் அதிகப் பலன் தரும். பிறகு ஜீவனிழந்து பலனற்றதாகும். முறைகள் நம்மால் ஏற்படுத்தப்பட்டவை என்பதால், அவை செயல்படும் வகையைச் சற்று விரிவுபடுத்தி மீண்டும் அவற்றிற்கு ஜீவன் அளிக்க முடியும். கொடுமையும், அதிகாரமும் செல்வாக்கை இழந்துவிட்ட போதிலும், அவற்றிலுள்ள தீவிரப் பணிவை வளர்த்து மீண்டும் அவற்றைப் பயனுள்ளதாகச் செய்யமுடியும்.

    பயனற்ற முறைகளையும் ஜீவனுள்ளதாகச் செய்யலாம்.

    முறைகள் என நான் இங்கு குறிப்பிடுவது திருமணம், சொத்துரிமை, மதம், பேரம், கடன், குடும்பம் போன்ற சமூக அமைப்புகள். உரிமை ஏற்பட்டு, சொத்துரிமை வந்தது. அதனால் வாரிசு ஏற்பட்டது. இவை ஏற்பட்ட ஆரம்பத்தில் ஜீவனுள்ள சிறப்புடன் விளங்கின. கூட்டம் குடும்பமாகிய காலத்து, நாம், நம் குடும்பம் என்ற பாசம் எழுந்து பண்பாயிற்று. எந்த நிலத்தில் யார் பயிரிடுவது, யார் எந்த மரத்தடியில் குடியிருப்பது, வீடு, குகை என்று இருந்தால் அதை யார் பயன்படுத்துவது என்ற முறையில்லாத காலத்தில் வலிமையுள்ளவன், வலிமையற்றவனை அவனிடத்திலிருந்து விரட்டிவிட்டு அவன் நிலத்தை, வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டான். சொத்துரிமை என்று ஏற்பட்டபொழுது, வலிமையற்ற அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பட்டது. நிம்மதி ஏற்பட்டது. அதுவே நாகரீகமாக நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். ஜீவனோடு எழுந்த இம்முறைகள் நாளாவட்டத்தில் ஜீவனற்றுப் போகின்றன.

    பாசத்தை வளர்க்க ஏற்பட்ட குடும்பம், இன்று மாற்றாந்தாய்க்கு பையனைக் கொடுமைப்படுத்தும் வாய்ப்பை அளிக்கிறது. நியாயத்தை பாதுகாக்க ஏற்பட்ட சொத்துரிமை, நிலத்தைப் பயிரிட முடியாத சோம்பேறிக்கு இன்று வாரிசு என்பதால் நிலத்தைக் கொடுக்கிறது. அதனால் குடும்பம் நஷ்டமடைகிறது. திருமணம் என ஒன்று ஏற்படாத நாளில் கணவன், மனைவி என்பதேயில்லை. அதனால் வியாதிகள் பரவி அகால மரணம் ஏற்பட்டது. குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெற்றவன் ஏற்பதில்லை. அது விலங்கின் வாழ்வு. திருமணம் எனும் அமைப்பு, குடும்பம், கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் என்பதை ஏற்படுத்தியதால், கட்டுப்பாடு, பொறுப்பு, பாசம் உண்டாகி மனிதன் உயர்ந்துவிட்டான். திருமணம் ஏற்படாதபொழுது, குழந்தைகளைக் காப்பாற்ற தகப்பனார் இல்லை. ஆனால் தாயார் யார் உதவியாலும் குழந்தைகளைக் காப்பாற்ற முடிந்தது. திருமணம் ஏற்பட்ட பின், கணவன் இறந்துவிட்டால் அவள் நிற்கதியாகி நிற்கிறாள். குழந்தைகளை வேறொருவர் மூலம் காப்பாற்ற "திருமணம்'' என்ற அமைப்பு தடையாகிறது. எந்தத் திருமணம் குழந்தைகளைக் காப்பாற்ற ஏற்பட்டதோ, அதே திருமணம், மனைவி கணவனை இழந்த நிலையில், குழந்தைகளைக் காப்பாற்ற தடையாயிருக்கிறது.

    படிப்பு என்ற முறை பட்டம் பெற்றுத் தந்தது. 80 வருஷத்திற்கு முன் B.A. படித்தவனை தேவராகக் கருதினார்கள். பட்டத்திற்கு மரியாதை அதிகமாக இருந்ததால் பட்டத்தையே பெயராகவும் ஏற்படுத்தினார்கள். லால் பகதூர் என்பவர் சாஸ்திரி பட்டம் பெற்றபின் அவரை சாஸ்திரி என்று அழைத்து லால்பகதூர் சாஸ்திரி என்றாக்கினார்கள். இன்று பட்டம் உண்டு. அதற்குரிய படிப்பில்லை. பட்டம் என்ற முறை ஜீவனிழந்து களையிழந்துவிட்டது.

    களையிழந்த முறைகளைக் கைவிட்டு உலகம் புது முறைகளை நாடுகிறது. புது முறைகளை ஏற்க முடியாமல், பழைய முறை திறன் இழந்த காலத்தில், பழைய முறையின் அடிப்படையைச் சற்று விரிவு படுத்தினால் அது மீண்டும் உயிர்பெற்றுக் களையோடு அமையும். உதாரணமாக, B.E. பட்டம் பெறுமுன் முதல் மாணவரையும், முன்னணி மாணவர்களையும் கம்பனிகள் ஏற்றுக் கொள்கின்றன. இன்ஜீனியரிங் கல்லூரி மாணவர்களை முதல் ஆண்டிலிருந்து கம்பனிகள் ஏற்கும் அமைப்பை உற்பத்தி செய்தால், மாணவர்கள் திறமையைத் தேடுவார்கள். இன்று போன களை அன்று திரும்பி வரும்.

    கொடுமை பயங்கரமானது. அதுவும் ஒரு முறையாக இருந்த காலம் உண்டு. கொடுமைக்கு மனிதன் பணிந்தான். பணிவு உயர்ந்தது. பணிவைப் போற்றினால் கொடுமையும் மாறி பலன் தரும். இராணுவத்தில் பணிவு முக்கியம். அதனால் ராணுவ வீரர்கள் சிறந்த திறமையுடன் விளங்குகின்றனர்.

    ஜீவனற்ற முறைகளை அவற்றுள் உள்ள வித்தான நல்ல அம்சங்களைப் பாராட்டுவதால் மீண்டும் ஜீவனுள்ளதாகச் செய்ய முடியும்.

தொடரும்...

*****



book | by Dr. Radut