Skip to Content

09. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

ஒரு 19 வயது பையனுக்குக் கான்சர் வந்து மோசமான நிலையை அடைந்து, டாக்டர்கள் இன்னும் எத்தனை மாதம் என்று அறுதியிட்டபின், அவன் படுக்கையாக இருந்தபொழுது அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டனர். இனி எதுவும் இல்லை என்ற நிலை வந்தபின், பையனை ஆசிரமம் அழைத்து வந்தால் ஒருவேளை நல்லது நடக்காதா என்ற எண்ணம் தோன்றியபொழுது, பையன் எழுந்து நடமாட முடியாத நிலையில் இருப்பதால் அதைக் கைவிட்டனர். ஆனால் பையன் பிடிவாதமாக எப்படியாவது தன்னை அழைத்துப் போக வேண்டும் என்றதன் பேரில் நாற்காலியில் உட்கார வைத்துத் தூக்கி வந்து பஸ்ஸில் ஏற்றி பாண்டிச்சேரி கொண்டுவந்தனர். பாண்டி பஸ் ஸ்டாண்டில் நாற்காலி தேடிப்போன தகப்பனார் திரும்புவதற்குள் பையன் இறங்கி ரிக்க்ஷா வரை மெதுவாக நடந்து வந்தான். சந்தோஷப்பட்ட பெற்றோர்கள் அவனை அன்று ஆசிரம (Jan. 1) கி வரிசைக்கு கொண்டு வந்தனர். அன்று சுமார் 1 1/2 மைல் அவனால் நடக்க முடிந்தது. இதுவே பொதுவான பலன். ஆசிரமச் சூழலுக்கு உள்ள திறன். அந்தச் சூழல் புதுவையிலிருந்து 7 1/2 மைல் அளவுக்குப் பரவியிருக்கிறது.

ஒருவர் பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்து, அவருக்கு சிகிச்சைக்குப் பதிலாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றனர். அவர் ஆடிட்டர். ஆப்பரேஷன் ஆயிற்று. வியாதி போகவில்லை. வேலூர் சென்று காண்பித்தார். அவர் வியாதியை நிர்ணயித்து மாத்திரை கொடுத்தனர். உடனே குணம் தெரிய ஆரம்பித்தது. முதல் ஆஸ்பத்திரியில் செய்த ஆப்பரேஷன் தவறு, இல்லாத வியாதிக்காகச் செய்த ஆப்பரேஷன் என்றும் தெரியவந்தது. வீடு திரும்பினார். ஆனால் ஒரு நாளைக்கு 8, 10 மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்ற நிலையும், வாழ்க்கையே மாத்திரையால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற நிலையும் இரண்டு வருஷங்கள் நீடித்தபின் ஆசிரமம் வந்தார். புதுவை வந்தாலே புத்துணர்வு வருகிறது என்று கண்டார். Blessing Packet பெற்றார். வியாதியே முழுமையாகப் போய்விட்டதுபோல் உணர்ந்தார். 20, 25 நாட்கள் வரை இந்தப் புதிய தெம்பு இருப்பது வழக்கம். கடைசி 5, 10 நாளில் ஓரிரு மாத்திரை சாப்பிட வேண்டி இருக்கும். அடுத்த Blessing Packet புதிய தெம்பை மீண்டும் அளிக்கும். வியாதியின் வேர் அற்று வருகிறது. தம்பியின் வாழ்வில், தங்கைக்கு அமைந்த வாழ்வில், கிராமத்திலுள்ள நிலத்தின் வருமானம், செய்யும் தொழில், நட்பு, உறவு ஆகிய அனைத்து இடத்திலும் புதிய வாழ்வு ஏற்பட்டது. 7, 8 மாதங்களில் வியாதியே மறந்துபோய்விட்டது. மீண்டும் அவர் காணிக்கை அனுப்பிக்கொண்டிருந்தார். இனி காணிக்கை அனுப்பத் தேவையில்லை என்று மற்றவர்கள் கருதினர். கடந்த 12 வருஷங்களாக அவர் காணிக்கையைத் தொடர்ந்து அனுப்புகிறார். அதை நிறுத்த மனம் இல்லை என்று சொல்வது வழக்கம்.

17 ஆண்டுகளாக உள்ளங்கையில் பொறுக்க முடியாத வலி உடைய ஒருவர் கையெழுத்துப் போட்டால் கை வலிக்கிறது என்பார். நண்பர்களுடன் சமாதிக்கு வந்தவர் கை சமாதியில் பட்டவுடன் வலி குறைவதைப் பார்த்தார். அது என்ன இடம் என்று கேட்டார். தெய்வ நம்பிக்கை இல்லாதவர், கை வலிக்காக அடிக்கடி புதுவை வந்து சமாதியைத் தொட விரும்பினார். இரு முறை வந்தார். கை வலி முழுவதுமாக விலகியது. தொடர்ந்து வர வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. 60 வயதைத் தாண்டிய பெண்ணுக்குச் சர்க்கரை வியாதிக்காக கடந்த 12 வருஷமாக சிகிச்சை செய்து, தினமும் 3 ஊசி போட ஏற்பாடாயிருந்தது. மகன்கள் படித்தவர்கள்; தாயார் கிராமத்தில் இருக்கிறார். தினமும் ஊசி போட்டுக்கொள்ள பிரியப்படாததால் தாயார் அதை நிறுத்திவிட்டார். கால் கட்டி வந்து சீழ் நிரம்பி வலி தாங்காமல் பெரிய ஆஸ்பத்திரிக்கு 12 வருஷமாகப் பார்த்துவந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்கள். டாக்டருக்கு நம்பிக்கையில்லை. ஆஸ்பத்திரியிலுள்ள மற்றவர்கள் காலை எடுக்க வேண்டும் என்று பேசுவது மகனுக்குத் தெரிந்தது. மற்ற டாக்டர்களை விசாரித்தார். காலை எடுத்தால் மட்டும் உயிர் பிழைக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார்கள். மகன் பதறிப்போய் டாக்டரிடம் ஓடினார். டாக்டருக்குக் கோபம். “படித்தவர்கள் இப்படி அலட்சியமாக இருந்து காலம் கடந்த நேரத்தில் வந்தால் நான் என்ன செய்ய முடியும்? முடிந்ததைச் செய்கிறேன். ஒன்றும் கேட்க வேண்டாம்” என்றார். இதுவரை கோயிலுக்கே போகாதவர், சாமி கும்பிட நினைத்தார். என்னிடம் வந்து, “ஏதாவது செய்ய முடியுமா?” என்று கேட்டார். “தாயாருக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்றேன். “அவர்களுக்கு எதுவும் தெரியாது” என்றார். “நம்பிக்கை முழுமையாக இருந்தால் நல்லது” என்ற கருத்தை ஏற்றுக்கொண்டார். தானே நம்பிக்கையுடன் பிரார்த்திப்பதாகச் சொல்ல விரும்பினார். ஆனால் நாத்திகவாதத்தை விட்டுவிட மனமில்லாமல் போராடினார். ஒருவழியாகப் பிரார்த்தனை செய்ய ஒத்துக்கொண்டார். “அரைகுறையான பிரார்த்தனைக்கு முழுப் பலன் எதிர்பார்க்க முடியாது. முழு நம்பிக்கையுடனும், முழு மனதுடனும் பிரார்த்தனை செய்தால்தான் இந்த விஷயம் பிடிபடும். மேலும் இது மற்றவர் செய்யும் பிரார்த்தனையாக இருப்பதால் தீவிரமாக இருக்க வேண்டும்” என்றேன். மேலும் சில முறைகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால், நாத்திகத்திற்கும், வறட்டுப் பிடிவாதத்திற்கும் இடமில்லை என்பது புரியும்படி விளக்கமாகச் சொல்லியபின், தாமே தாயாருக்காகப் பூரணமாகப் பிரார்த்தனை செய்ய முன்வந்தார். தாயார் நினைவு வரும்பொழுதெல்லாம் அதை ஒதுக்கி, அன்னையை நெகிழ்ந்த உணர்வோடு நினைவுகூர்தல் வேண்டும் என்பதை மட்டும் முக்கியமாகச் சொன்னேன். சாமந்திக்கு (life energy) சக்தி என்ற பெயர். அவருடைய கம்பெனி பாண்டியிலிருப்பதால் அதன் மூலம் தினமும் ஒரு கிலோ சாமந்தி வாங்கி சமாதிக்கு வைக்கும்படியும் சொன்னேன். கால் குணமாகும் வேகம் ஆஸ்பத்திரியிலுள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தோலை (ண்டுடிண ஞ்ணூச்ஞூt) காயத்தின் மீது தைக்க வேண்டும் என்றார்கள். பிறகு அதுவும் தேவையில்லை என்றார்கள். கால் குணமாகி ஆஸ்பத்திரியை விட்டு அந்த அம்மாள் வரும்பொழுது, அவரைப் பலரும் சூழ்ந்து ‘அதிர்ஷ்டக்காரர்’ என்று பாராட்டியபோது, ஒரே ஒரு டாக்டர் மட்டும் மகனைத் தனியே அழைத்து “உங்கள் தாயார் காலோடு நடப்பதை என்னால் பார்த்தும் நம்ப முடியவில்லை” என்றார்.

ஒரு நாள் காலையில் 10, 11 மணியிருக்கும். ஒரு டெலக்ஸ் செய்தியை அவசரமாகக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்கள். ‘அமெரிக்காவில் ஒரு சாதகரை இரண்டு நாள் முன்னதாக ஜுரம் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும், அன்று காலையில் டாக்டர் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்பதாகவும், ஒரு முக்கிய உறுப்பை அகற்ற வேண்டும்; இருபத்திநாலு மணிக்குள் செய்ய வேண்டும்’ என்றும் செய்தி சொல்லியது. டாக்டர் சொல்லியபடியே செய்ய வேண்டும் என்று பதில் செய்தி அனுப்பிவிட்டு, அவரைச் சேர்ந்தவர் 6 பேரை அழைத்து, “ஒன்றாகச் சேர்ந்து தியானம் செய்தால் நல்லது” என்றேன். 15, 20 நிமிஷம் தியானம் செய்து கலைந்தனர். அனைவரும் சோகமாக இருக்கும்பொழுது 2 மணி நேரத்திற்குப்பின் அடுத்த டெலக்ஸ் (tஞுடூஞுது) வந்தது. நோயுற்ற பாகம் வழக்கத்தைவிட 5 மடங்கு வீங்கியிருந்தது, கடந்த 1 மணி நேரத்தில் வீக்கம் குறைந்துள்ளது. இப்பொழுது வீக்கம் குறைந்திருப்பதால், டாக்டர் ஆப்பரேஷன் தேவை இல்லை எனக் கருதுகிறார் என்றது செய்தி.

வடநாட்டில் ஒரு ரயில்வே ஊழியர். 35 ஆண்டுகட்குமுன் அவருக்கு ஒரு வகையான காசநோய். 40, 50 நாட்களுக்கு ஒரு முறை இரத்தம் வாந்தியாக வரும். படுக்கையாக இருந்து மருந்து சாப்பிட்டு, சில நாளில் குணமாகும். அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆசிரமம் வந்தார். பாண்டிக்குப் போக இரயிலில் உட்கார்ந்ததும் தெம்பாக இருந்தது. சமாதி அருகே புதிய பலம் வருவதைப் பார்த்தார். ஊருக்குப் போய் உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிட்டு, ஒரே சகோதரியை அழைத்துக்கொண்டு, பாண்டியிலேயே வந்து தங்கிவிட்டார். வாந்தி 45 நாட்களுக்கு ஒரு முறை வருவது 7, 8 மாதத்தில் ஒரு முறையாகி, பிறகு நின்றுவிட்டது. 40, 50 அடிக்குமேல் நடக்க முடியாது. மற்றபடி எந்தத் தொந்தரவும் இல்லை. சில ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்தபின் அன்னையின் பெயரை உச்சரிப்பது, மலர்களின் விசேஷம் ஆகியவற்றைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டு, தாமும் அது போல் ஏதாவது செய்ய வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டார். அதன்படி ஒரு நாள் அவர் முடிவு செய்து, (1) நினைவை அன்னையின் பக்கம் முழுமையாகத் திருப்புவது, (2) சாமந்தி மலரை வைத்துத் தியானம் செய்வது, (3) ஒரு மணிக்கு ஒரு முறை - அதாவது மணி அடிக்கும் நேரத்தில் - தவறாமல் அன்னையை நினைவுகூர்வது என்ற 3 முறைகளையும் ஏற்றுக்கொண்டு, அரை மணி தியானம் செய்துவிட்டுப் போனார். மறுநாள் வந்தார். “நேற்றைய தினம் எனக்குப் புத்துயிரும், புதுத் தெம்பும் வந்தது. ரிக்ஷாவில் வந்தவன், ரிக்ஷாவை அனுப்பிவிட்டு, 6 பர்லாங் நடந்து வீட்டுக்குப் போனேன். என் வாழ்க்கையில் இது ஓர் அற்புதம்” என்றார்.

தோளில் வலியிருக்கிறது என்று டாக்டரிடம் காண்பித்த 25 வயதுப் பெண்ணிடம் உள்ளூர் டாக்டர் தோள் எலும்பு வளர்கிறது, ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றார். பயந்துபோய் பெரிய ஊரில், பெரிய ஆஸ்பத்திரியில் காண்பிக்கவே, அதையே அந்த டாக்டர் சொன்னார். ஆப்பரேஷனுக்குத் தேதி குறித்துவிட்டு, ஆசிரமம் வந்து நல்ல முறையில் ஆப்பரேஷன் முடிய வேண்டி (Blessing Packet) பிளெஸ்ஸிங் பாக்கெட் பெற்றுக்கொண்டு ஊர் திரும்புமுன் என்னை வந்து குடும்பத்துடன் பார்த்தார்கள். ஆப்பரேஷன் அவசியம் என்று கருதினால், அன்னை ஆப்பரேஷனை நல்லபடியாக முடிப்பார். ஆப்பரேஷன் கூடாது என்று உறுதியாக நம்பினால் நல்லது என்றேன். ஆப்பரேஷனைத் தவிர்க்க ஒரு வழி இருக்கும் போலிருக்கிறது என்றதில் அவர்கள் அனைவருக்கும் சந்தோஷம். ஒரு வாரம் வரை பிரார்த்தனை செய்யுங்கள். டாக்டரிடம் சொல்லி தேதியைத் தள்ளிப் போடச் சொல்லுங்கள். எதுவும் உங்கள் நம்பிக்கையைப் பொறுத்தது என்று சொல்லி அனுப்பினேன். அடுத்த வாரம் அனைவரும் வந்தார்கள். ஒரே நாளில் வலி முழுவதும் போய்விட்டதாகவும், ஆப்பரேஷனை மறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். பெண் மிகவும் தீவிர பக்தை ஆகிவிட்டாள்.

ரிடையரான பேராசிரியருக்கு ஒரு மகன் டாக்டர். ஒரு மகள் டாக்டர். மருமகன் டாக்டர். இவர் சுமார் 50 வருஷத்திற்குமுன் ஸ்ரீ அரவிந்தர் அன்னை தரிசனம் செய்து, பின்னால் மறந்துவிட்டவர். 20 வருஷத்திற்கு முன்னால் மீண்டும் ஆசிரமம் வர ஆரம்பித்து, 7 வருஷமாகத் தீவிரமாக வந்தவர், பின்னர் இங்கு வருவதை நிறுத்தி விட்டார். அத்துடனில்லாமல், “அன்னை லோகமாதா பாண்டிச்சேரியில் மட்டும் இல்லை; எங்கள் ஊரிலும் இருக்கிறார். இங்கிருந்தே வழிபடலாம்” என தமக்கே விளக்கம் கொடுத்துக்கொண்டார். அன்னையை எந்த ஒரு சிறு விஷயத்திற்கும் அழைத்துச் செயல்படுபவர். (Eczema) தோல் சம்பந்தமான வியாதி வந்து உடல் முழுவதும் கறுத்துவிட்டது. சென்னையில் தம் மகன் மூலம் ஸ்பெஷலிஸ்ட்களிடம் காட்டி 3 மாதமாக மருந்து சாப்பிடுகிறார். மருந்துக்கு ஓரளவு வியாதி கட்டுப்படுகிறது. பூரண குணம் ஆகவில்லை. இந்த வியாதி பூரணமாகக் குணமாகாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அன்னையை இடைவிடாது நினைப்பதால் தான் உபத்திரவம் குறைவாக இருக்கிறது என்று மற்றவர்களிடம் சொல்லிவந்தார். ஆசிரமம் போகக்கூடாது என்ற பிடிவாதத்தை விட மனமில்லை. அன்னை அருளால் வியாதி பூரண குணம் அடையும். பிடிவாதம் குறுக்கே நிற்கிறது. அத்துடன் வியாதி குணமாகாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவர்மீது அளவு கடந்த அன்புடையவர் ஒருவர், அவர் முழுமையாகக் குணமடைய வேண்டும் என விரும்பிப் பிரசாதத்தை அவருக்கு அனுப்பி, தாமும் பிரார்த்தனை செய்தார். ஓரிரு நாள் பிரசாதம் வந்தவுடன் பேராரிசியருக்கு அதுவரை இல்லாத குணம் தெரிய ஆரம்பித்தது. தினமும் பிரசாதம் அனுப்பும்படிக் கேட்டார். 7-ஆம் நாள் உடல் கருமை முழுமையாக விலகி, பூரண குணம் தெரிந்தது. கையில் மட்டும் 1/2 அங்குலத்திற்குக் கறுப்புக் குறையவில்லை. வியாதி போய் விட்டது. பேராசிரியர் தம் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

40 வயதுள்ள அம்மாள் ஒருவர் வாழ்க்கையில் பெரும் பகுதியை ஆஸ்பத்திரியில் கழித்தவர், கண் பார்வை, வயிற்று வலி, நெஞ்சு வலி, கை வீக்கம், முதுகு வலி, ஆப்பரேஷன் என்று பல வகையான வியாதிகள். அவருக்கு வசதி வந்தபின் பிரைவேட் டாக்டர்களிடம் காட்ட ஆரம்பித்தார். ஒரு வியாதி தீர்ந்தால், அடுத்தது வரும். ஏற்கனவே கவர்மெண்ட் ஆஸ்பத்திரி, இப்பொழுது பிரைவேட் நர்சிங் ஹோம்; மாற்றம் அந்த அளவில்தான் இருந்தது. என்னிடம் வந்து அவர் கணவர் இது விஷயமாகக் கேட்டார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படுவது குணவிசேஷத்தால்தான். அதை மாற்றிக்கொள்ள முன்வந்தால் பலன் இருக்கும் என்று அபிப்பிராயம் சொன்னேன். அதன் பிறகு இரண்டு வருஷம் கழித்து கை வீக்கம் அதிகமாகி, டாக்டர்களுக்குப் பிடிபடாத நிலை ஏற்பட்டபின் மீண்டும் கணவர் வந்தார். மீண்டும் அதே அபிப்பிராயம் சொன்னேன். மனைவி சம்மதிப்பதாகச் சொல்லி, என்ன செய்யலாம் என்று கேட்டார். “எனது வியாதி தீரும் அளவுக்கு என் குணத்தை மாற்றிக்கொள்கிறேன்” என்று தினமும் ஜெபம் போல் சொன்னால் போதும். பிரார்த்தனை தேவையில்லை என்றேன். மருந்துகூட சாப்பிடாமல் 3 நாளில் பாதி வீக்கமும், 7-ஆம் நாள் முழு வீக்கமும் தானே வாடிவிட்டது.

நோய் ஏற்பட்டால் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தல்; ஆசிரமத்திற்கு எழுதிப் பிரசாதம் பெறுதல்; ஒளியை, சாந்தியை அழைத்து உடலையும், நோயுற்ற பாகத்தையும் நிரப்புதல்; அன்னையின் கையால் நோயுற்ற பாகத்தைத் தடவிக் கொடுப்பதாக நினைப்பது போன்றவை பலன் தரும். இவ்வளவு செய்தும் நோய் போதிய அளவு குணமாகாவிட்டால் என்ன செய்யலாம் என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய சந்தர்ப்பத்தை அன்னை கொடுத்ததில்லை.

அன்னையை ஏற்றுக்கொண்டவர்களுக்குத் திடமான உடல் நலம் ஏற்பட ஒரு சுருக்கமான வழியைச் சொல்லலாம். உடல் அன்னையை நினைவில் வைத்துக்கொண்டால் உடல் நலம் பெருகி, உடல் வெண்கலம் போல் அமையும். உடல் அன்னையை நினைப்பது என்றால் என்ன என்று கேள்வி எழும். அப்பைய தீக்ஷிதர் தமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்திலும் சிவனை நினைக்க வேண்டும் என்று விரும்பினார் என்று ஒரு செய்தியுண்டு. நமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்தில் நினைவு இருந்தால், அது உடல் நினைவு வைத்திருப்பதாக அர்த்தம். குளிர்காலத்தில் தூங்கும்போது அருகில் போர்வையை வைத்துக் கொண்டால், இரவில் குளிர் அதிகமாகும் நேரம் போர்வையை எடுத்து நாம் போர்த்திக்கொள்கிறோம். காலையில் பார்த்தால் போர்த்தியிருப்பது தெரியும். எப்பொழுது போர்த்திக்கொண்டோம் என்று தெரியாது. உடலே தன் தேவையை உணர்ந்து, நமக்குத் தெரியாமல் செய்த செயல் அது. உடலுக்கு நோய் என்று வந்தவுடன், மாத்திரை நினைவு வராமல், டாக்டர் நினைவு வராமல், பயம் ஏற்படாமல், கவலையுண்டாகாமல், அன்னை நினைவு வந்தால் அன்னையை உடல் நினைவு வைத்திருக்கிறதாகக் கொள்ளலாம்.

***********

13. ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள்

1. உலகில் எந்த ஒரு புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென்றாலும், முதலில் அதை ஆஸ்ரமத்தில் கொண்டுவர வேண்டும். பிரபஞ்சத்திலுள்ள எல்லா அம்சங்களும் பூமியில் இருக்கின்றன. பூமி பிரபஞ்சத்தின் பிரதிநிதி. அதேபோல் பூமியில் உள்ள எல்லா அம்சங்களையும் ஒன்று சேர்த்து ஸ்ரீ அரவிந்தாஸ்ரமம் அமைக்கப்பட்டுள்ளது. புதியதாக இங்கு எது செய்தாலும் அது உலகத்தில் பரவும். யோகத்திற்காக ஆஸ்ரமம் ஏற்படுத்தியதுபோல், வாழ்க்கைக்காக அன்னை ஆரோவில் நகரை நிர்மாணித்தார். 3-வது உலக யுத்தத்தைத் தடுப்பதற்காக அன்னை செய்த யுக்தியிது. ஆரோவில் உள்ளவரை 3-ஆம் யுத்தம் வாராது.   மனித சுபாவத்தின் எல்லா அம்சங்களையும் பிரதிபலிக்குமாறு ஆரோவில் ஏற்பட்டுள்ளது.

2. விதி வலியது அன்று. உரமான எண்ணங்கொண்ட மனித உள்ளத்தின் முன் விதி பின்வாங்கும்.

விதி என்பது இறைவனால் ஏற்பட்டது அன்று. நம் முந்தைய பிறப்புகளில் ஏற்பட்ட செயல்களின் பலனே விதி என்று நாம் கூறுவது. புருஷன் என்ற ஆத்மாவும், பிரகிருதி என்ற இயற்கையும் சேர்ந்ததே சிருஷ்டி. விதி, பிரகிருதியினால் உற்பத்தியாவது. மனிதன் தன் ஆத்ம பலம் வெளிப்படும் வகையில் தெளிவு பெற்றால் விதி அதற்குக் கட்டுப்பட வேண்டியது நியாயமன்றோ? தொன்றுதொட்டு வாழ்ந்த மனிதன் ஆத்ம பலன் துறவிக்கும், பிரகிருதியின் விதி குடும்பஸ்தனுக்கும் என வாழ்ந்து வருகிறான். பிரகிருதியின் சூழலில் வாழும் மனிதன் விதியின் விலக்க முடியாத பிடியில் இருப்பதும் நியாயமே. ஸ்ரீ அரவிந்தர் மனித வாழ்வை, தெய்வீக வாழ்வாக மாற்றுவதை இலட்சியமாகக் கொண்டவர். இந்த நிலையில் உள்ள வாழ்க்கை பிரகிருதியின் பிடியில் இல்லாமல், ஆத்மாவின் ஆதிக்கத்திலிருக்கும். ஆகையால் விதி வலியதன்று.

3. கர்மம் பாதிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை.

விதி என்பதும் கர்மம் என்று நாம் குறிப்பிடுவதும் அடிப்படையில் ஒரே அமைப்பையுடையவை. இவை இரண்டும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டவையில்லை. மனிதன் தன் முந்தையச் செயல்களால் நிர்ணயித்துக் கொண்டவை. அதிக வலிமையுடைய கர்மத்தை விதி என்றும், மற்றவற்றை கர்மம் என்றும் நாம் குறிப்பிடுகிறோம். தன் சுபாவத்தின் பிடியில் உள்ள மனிதன் கர்மத்திற்கும், விதிக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். தான் பிரகிருதியின் (இயற்கை) அம்சமான சுபாவத்தின் கூறு இல்லை; புருஷனான ஆத்மாவின் அம்சம் என உணர்ந்து, அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மனிதனுக்கு, தானே ஏற்படுத்திக்கொண்ட பழைய நிலைகளை - கர்மாவை - மாற்றிக்கொள்ளும் திறன் உண்டு.

4. விஞ்ஞானிகளும், சாதாரண மனிதனைப்போல் மூடநம்பிக்கை உள்ளவர்களே.

ஞானம் என்பது ஒரு விஷயத்தை அது இருப்பதுபோல் அறிந்து கொள்வது. தனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தைக் கொண்டு புதிய விஷயத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதன் மூடநம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறான். மின்சாரத்தைப்பற்றி விளக்கமாகக் கேட்டுக்கொண்ட அறிவிலி “எல்லாம் சரி, இந்த விளக்கில் எண்ணெய் எங்கு ஊற்ற வேண்டும் என்று சொல்லவில்லையே” என்று கேட்டதற்குக் காரணம், அவன் மின்விளக்கை, அதன் அமைப்பை, எண்ணெய் விளக்கு மூலம் புரிந்துகொள்ள முயல்கின்றான். விஞ்ஞானியின் முறை இதுவே. ஆதலால் அவர்கள் தங்கள் துறையில் ஏராளமான மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு குழுவினர் தங்கள் மூடநம்பிக்கைகளை நம்பாத மற்ற குழுவினரைக் கேலி செய்கின்றனர். இந்த அடிப்படையை விளக்கும் வகையில் ஸ்ரீ அரவிந்தர் ஒரு கணித மேதையும், மூடநம்பிக்கை உள்ளவனும் சந்தித்துப் பேசுவதாகவும் மேதையை அவன் கேலி செய்வதாகவும் எழுதியுள்ளார்.

5. நோயுற்ற உடல் தன்னைத் தானே குணம் செய்துகொள்கிறது.

டாக்டர்கள் உடலில் வியாதியை உற்பத்தி செய்து, பின்னர் அதை உடலின் திறத்தால் குணம் செய்கின்றனர்.

6. தமிழும், சமஸ்கிருதமும் ஒரே தாயின் இரு புதல்வர்கள்.

7. எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து மனித சமுதாயம் ஒருமைப்படும். எல்லா அரசாங்கங்களும் ஒரே உலக சர்க்காரின் கீழ் வர வேண்டும்.

(தொடரும்)

************



book | by Dr. Radut