Skip to Content

பகுதி 6

  1. சரியாகச் செய்தால் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்பது அகந்தையைக் கரைக்கும் என்கிறார் அன்னை. எது சரி?

பேச்சு, நோக்கம் போன்றவற்றிற்கு ஒரு நோக்கம் இருப்பதைப்போல் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்பதற்கும் ஓர் உண்மையுண்டு. வாயால் சொன்னால் அது சப்தமாகி சீக்கிரம் அலுத்துவிடுகிறது. ஆழத்திலிருந்து உண்மையில்லாமல் சொன்னால் சீக்கிரம் எரிச்சல் வரும். ஒவ்வொரு சமயத்திலும் நம் இச்சை (will) ஓர் அபிப்பிராயம், பிரியம், வேகம், உந்துதலாக வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். இறைவனை அழைப்பதன் முன் நம்மை ரத்து செய்ய வேண்டும். ஆழ்ந்த இடத்தில் திருவுள்ளத்தை நாட வேண்டும். அது சரி. அப்படி உச்சரித்தால் அது உள்ளுறை பிரம்மத்தைத் தொடும். அதற்கு மேல் உலகம் குரல் எழுப்பும். (refer 657)

ஆழ்ந்து திருவுள்ளத்தை நாடினால் உலகம் குரல் எழுப்பும்.

மனித வாழ்வில் இறைவனின் திருவுள்ளம் என்ன? மனிதன் இறைவனாவதே அவன் திருவுள்ளம். அது நிறைவேறட்டும் என்றால், அதற்குத் தடையான அகந்தை கரைய வேண்டும். எதையும் உண்மையாகவும் சொல்லலாம், உண்மையில்லாமலும் சொல்லலாம். செலவாளி கடன் வாங்கிக் கொடுக்கமுடியாத நேரத்தில் எதிர்பாராமல் பெருந்தொகை வரும்பொழுது, முதல் கடனைத் தரவேண்டும் என உண்மையாக நினைக்கும்பொழுது, மனம் தனக்கு ஆர்வமான செலவை நாடும். முடிவாகத் தன் ஆர்வத்தைப் பூர்த்தி செய்து கொள்வானே தவிர, கடனைத் திருப்பித் தருவதில்லை. பணம் வரும்பொழுது,

கடனை மறப்பது ஒரு நிலை. கடனைக் கொடுக்கக் கூடாது என்பது வேறொரு நினைப்பு. கடனைக்கொடுக்கவேண்டும்என்றநினைவும்,வேறுசெலவு செய்யும் நிலையும் ஒன்று, கடனைக் கொடுக்க வேண்டும் என்ற தீவிர உறுதி உண்மையான மனநிலையாகும்.

கடன் விஷயத்தில் 4 மனநிலைகளிருப்பதுபோல் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்பதிலும் 4 நிலைகளுண்டு. சொல்லும், நினைவும், நிலையும் தீவிரமாக உண்மையாக இருந்தால் அது சரியான முறையாகும்.

மந்திரத்தை வாயால் சொல்வதில் பலன் ஏற்படுவதைப் பார்க்கிறோம். விஷக்கடிக்கு மந்திரித்தால் அது எளிய செயல் என்பதால் வாயால் சொன்னாலும் பலன் ஏற்படுகிறது. ஆழத்திலிருந்து உண்மையில்லாமல் சொன்னால் மனக்கோட்டை கட்டுவதாகும். அதில் உண்மையில்லை என்பதால் அலுத்துவிடும். வற்புறுத்தினால் எரிச்சல் வரும். நாம் என்பது அபிப்பிராயமாகவும், இச்சையாகவும்(will), பிரியமாகவும், வேகமாகவும், உந்துதலாகவும் வெளிப்பட்டுக்

கொண்டேயிருப்பதைக் காணலாம். பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது மனம் வேறொன்றை நினைக்கும். கண்ணால் படிப்பதைவிட நினைப்பதற்கு வேகம் அதிகம். அத்துடன் மனம் பல நிலைகளில் உள்ளது. உதாரணமாகத் தனக்குப் பிரமோஷன் வேண்டும் என்று நினைப்பவர், அந்த நினைவுக்குப் பின்னால் பிரமோஷன் வந்தால் அந்தப் பெரிய போஸ்டில் நல்ல பெயரெடுக்க அதிகமாக உழைக்கவேண்டும், அது தன்னால் முடியாது என நினைப்பார். அந்த நினைவு பிரமோஷனைத் தடுக்கும். இடைவிடாது பிரமோஷனை நினைப்பதைவிட உள்ளூர உள்ள பயம் நிச்சயமாகப் பலிக்கும். அதனால் பிரமோஷன் வேண்டும் என்பது உண்மையில்லை என்று அறிய வேண்டும். மாறாகவுமிருக்கும். உதவி மேனஜேராக பிரமோஷனை விரும்புபவர் மனம், அவரை அறிந்தோ அறியாமலோ தீவிரமாக மானேஜராகிவிட்டால் முதலாளிக்குக் கம்பெனியைப் பற்றி சில ரகஸ்யங்களைச் சொல்லலாம். அது பலித்தால் பார்ட்னராகி விடலாம் என்ற நினைவிருக்கும். அது பலிக்கும். அது பலித்தால் உண்மை அதுவேயாகும். திருவுள்ளம் நிறைவேறட்டும் என்று நினைப்பதை, சொல்வதை அதுபோல் நம் மனதிலுள்ள பல நிலைகளைக் கடந்து, உண்மையாக ஆண்டவன் விருப்பம் நிறைவேறட்டும் என ஆழத்தில் உண்மையுடன் சொன்னால், அதற்குத் தடையான அகந்தை கரையும். அது பூர்த்தியாக உதவும் கற்பனை ஒன்றையும் அன்னை எழுதுகிறார். இறைவன் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை ஒவ்வொரு முறையும் கற்பனை செய்ய வேண்டும் என்கிறார்.

*******

  1. கையால் வேலை செய்கிறோம். அறிவால் புரிந்து கொள்கிறோம். அறிவு செயலைவிட உயர்ந்ததைப் போல், ஆன்மாவால் செயல்படக் கற்றுக் கொள்ள வேண்டும். புறநிகழ்ச்சிகளின் பலனை நாடுவதற்குப் பதிலாக, அகவுணர்வின் பலனை நாடினால் அளவு கடந்த ஆன்மீக வாய்ப்பு எழும்.

புறம் அகமானால் ஆன்மீக வாய்ப்பு அபரிமிதமாகும்.

ஆன்மா சாட்சியானது, செயலற்றது என்பதால் ஆன்மாவால் செயல்படுவது எப்படி? ஆன்மாவின் பிரதிநிதியான சைத்தியப்புருஷன் ஆன்மாவாகும். அது இடையறாது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் நாம் செயல்பட வேண்டும்.

ஆன்மாவால் செயல்படுவதை ஆன்மீக உழைப்பு எனலாம். ஆன்மீக உழைப்புக்குப் பலன் அளவு கடந்தது.

இங்கிலாந்தில் ஒரு பெண்மணி காலிங்பெல் அடிப்பதைக் கேட்டு வெளிவந்தாள். திடகாத்திரமான ஓர் ஆள் நின்றிருப்பதைக் கண்டு என்ன வேண்டும் என்றாள். அவன் பிச்சைக்காரன். சாப்பிட ஏதாவது வேண்டும் என்றவுடன் அவளுக்குக் கோபம் வந்தது. திடகாத்திரமாக இருக்கிறாயே, ஏன் வேலை செய்யக்கூடாது என்றாள். அவன் அறிவைப் பயன்படுத்த முயன்றான். பிரபல சினிமா நடிகையின் அழகோடு நீங்கள் சமையலறையில் உழலவில்லையா? நானும் அதைப் போன்று உழல்கிறேன் என்றான். இரு, என்ன இருக்கிறது என்று பார்க்கிறேன் என்றாள். கோபம் சந்தோஷமாக மாறியது. சமர்ப்பணம் செய்து வேலை செய்வது ஆன்மாவால் செயல்படுவதாகும். சமர்ப்பணம் ஆன்மீக முன்னேற்றத்தைத் தரும். அத்துடன் அபரிமிதமாக வேலையைப் பூர்த்தி செய்யும். தினமும் 7, 8 தபால் எழுதி அனுப்புபவர் தபால் ஸ்டிரைக் வந்தவுடன், வழக்கம்போல் தபால் எழுதினார். அவருடைய டைப்பிஸ்ட் தபால் ஸ்டிரைக் காலவரையறையின்றி இருக்குமாம். இப்பொழுது எழுதி எப்படி அனுப்புவது என்றார். தபால் ஸ்டிரைக் நமக்குப் புறநிகழ்ச்சி. அதை நாம் கருத வேண்டாம். அது நின்றபின் தபால் எழுதலாம் என்பது பக்தர்களாகிய நமக்குச் சரியில்லை. நாம் செய்வதைச் செய்ய வேண்டும். நம் கடமையில் குறையிருக்கக் கூடாது. அதுவே நம் பங்கு என்றார். அவர் எழுதினார், கடிதங்கள் டைப் அடிக்கப்பட்டு, தபாலுக்குத் தயாராகின. அடுத்த நாளும்,

மறுநாளும் அதையே செய்ய டைப்பிஸ்ட்டுக்குச் சலிப்பு. ஒரு நாள் கடிதங்களை டைப் செய்யவில்லை, தவற்றை உணர்ந்து அடுத்த நாள் அவற்றைச் சேர்ந்து முடித்தார். குவிந்திருந்த எல்லாத் தபால்களையும் அடுத்த நாள் மாலை 51/2  மணிக்குப் பதில் எழுதி முடித்தார். வேலை நிறைவேறியது போன்ற உணர்வு. 7 மணிக்கு ஸ்டிரைக் நின்றுவிட்டதாகச் செய்தி. தபால் ஸ்டிரைக் என்பது அகில இந்தியாவிலும் நடப்பது. ஒருவர் எழுதும் தபாலுக்கும் அதற்கும் தொடர்பு என்பது ஓரிழை, அதுவும் இலட்சத்தில், கோடியில் ஓரிழை, என்றாலும் அகவுணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் நாம் எத்தனைச் சிறிய பகுதி என்று கருதாமல், நாம் எதையோ சாதிக்கப் போகிறோம் என்று நினைக்காமல், புறநிகழ்ச்சியைப் புறக்கணித்து, அகவுணர்வான கடிதம் எழுதும் கடமையை மட்டும் கவனித்தால், தன் கடமை பூர்த்தியான நேரம், தனக்கு தடையாயிருந்த ஸ்டிரைக் விலகுவதைக் காணலாம். நான் எழுதி முடித்தேன். ஸ்டிரைக் அதனால் நின்றது என்ற ஞானம் உதயமானால் அது அகந்தை வளரும் வழி. அடக்கம் வளரும் முறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நான் எழுதியதால் ஸ்டிரைக்கை எப்படிப் பாதித்தது என்று ஆராய்ச்சி செய்வதைவிட, பாக்கியான தபால்களை எழுதி முடித்தவுடன், தடையாக இருந்த வேலை நிறுத்தம் நின்றது என்று புரிந்து கொள்வது உதவும்.

அகவுணர்வு, புறநிகழ்ச்சிகளை நிர்ணயிக்கும். அதைக் கண்டு கொண்டு அதன்மூலம் அகந்தையை வளர்க்காமல், ஆன்மீக உழைப்பை வளர்க்க முயன்றால், ஆன்மீக வாய்ப்புத் தொடர்ந்தெழும்.

******

  1. திருவுள்ளம் நிறைவேறட்டும் என்று மந்திரமாக உச்சரித்தால் ஆன்மா நம்மையறியாமல் விழித்துக் கொள்ளும். அதற்கும் பலனுண்டு. சூட்சுமத் தரிசனம், மனம் அடங்குதல், ஆசையின் வேகம் அழிவது, செயலும் இரண்டாகப் பிரிந்து நம்மை நாடியும் விலகியும் போவது ஆகிய பலன் தெரியும். ஆசைக்குரியது அகன்றுபோய், அது நம்மிடம் வக்கிரமாக நடந்துகொண்டு நமக்கு மனிதர்களைப் பற்றி அதிகமாகப் புரிய ஆரம்பித்து சூழ்நிலை மாறும். விடாமுயற்சி, ஆர்வம், ஞானத்தேடல் அவற்றைப் புது உலகமாக நமக்களிக்கும். (refer 655)
  • திருவுள்ளம் நிறைவேறப் பிரார்த்தனை செய்தால் ஆன்மா விழிக்கும்.
  • ஆசையழிந்து, சுபாவம் புரிந்து, சூழல் மாறி, ஞானத்தைத் தேடும் புது உலகம் பிறக்கும்.

மந்திரத்தின் உட்பொருளை மனதில் வாங்கி, புரிந்து, ஏற்றுக் கொண்டு அதன் சக்தியை மனத்தின்மூலம் 'ஜீவனுள்' பரவ அனுமதித்தால், அதன் முழுப்பலன் உடனே ஏற்படும். ஆன்மா விழிப்பாக இருப்பதில்லை, மனம் கருத்தை விளங்கிக் கொள்வதில்லை. மனம் விளங்கிக் கொண்டதை உணர்வு ஏற்றுக் கொள்வதில்லை. உடல் இருளால் நிறைந்து எதையும் அனுமதிப்பதில்லை. மனம் மந்திரத்தைச் சொல்வதையே எதிர்க்கும். நான் நன்றாகப் படித்துப் பாஸாக வேண்டும் என்று ஒரு சோம்பேறி நினைக்கும்பொழுது, படிக்க விரும்பாத உடல் அவன் சொல்லை மாற்றிவிடும். நான் நன்றாகப் படித்துப் பாஸாகக்கூடாது என்று வாய் உச்சரிப்பதைக் காணலாம். இது உடலின் எதிர்ப்பாகும். திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற எண்ணத்திற்கு உடலும், உணர்வும் உடன்பாடில்லை என்றாலும், மனம் புரிந்துகொள்ள முடியாத நிலையிலிருந்தாலும், மந்திரமாகத் திருவுள்ளம் நிறைவேறட்டும்  என்று உச்சரித்தால் அதற்கும் பலன் உண்டு. விழிப்பில்லாத ஆன்மா விழித்துக் கொள்ளும். ஜீவன் ஓரளவு சூட்சுமமாக இருப்பவர்கட்குச் சூட்சுமப் பார்வை உற்பத்தியாகி அன்னை சூட்சுமத் தரிசனம் கிடைக்கும். யோகம் பலித்த பிறகும் மனம் பூரணமாக அடங்காது. பலருக்கு மனம் அடங்கவே அடங்காது. திருவுள்ளம் நிறைவேறட்டும் என்பதை அதற்குரிய உச்சகட்ட உணர்வோடு இல்லாமல் வெறும் மந்திரமாகச் சொன்னாலும், மனம் அடங்கும்.

இந்திர பீடத்திற்கு ஆபத்து வரும் அளவு கடுமையாகத் தவம் செய்து பலித்தபின் தெய்வலோகக் கன்னிகையைக் கண்டு ஆசை எழுந்து, அத்தனைத் தவப்பலனையும் இழந்தவர்கள் முனி சிரேஷ்டர்கள். ஆசை அழிதல் என்பது உயர்ந்தது. ஆசையின் வேகம் அழிவதற்கே 60, 70 வயது போதாது. இம்மந்திரத்தால் ஆசையின் வேகம் அடங்குவதையும் காணலாம்.

செயல் நல்லது, கெட்டதாகப் பிரிந்து, நல்லது நம்மை நாடுவதையும், கெட்டது விலகுவதையும் காணலாம். தானே கெட்டது நம்மைவிட்டு விலகும் சந்தர்ப்பம் இன்று உலகவாழ்விலில்லாதது. நாம் ஆசைக்குரியதாக நமக்குப் பொருத்தமற்றதை விரும்புகிறோம். அது தானே தூரப் போகும். போனபின் அதன் குணத்தைக் காட்டும். அதனால் நாம் மீண்டும் அதை நாட வேண்டும் என்ற எண்ணத்தை மறப்போம். இந்நிலையில் நாம் விடாமுயற்சி, ஆர்வம், ஞானத்தை நாடும் பாங்கு ஆகியவற்றை மேற்கொண்டால், நம் உலகம் தாழ்ந்தது விலகி, உயர்ந்த புது உலகம் உற்பத்தியாகி, நாம் புது மனிதராவோம். இம்மந்திரம் அதன் உச்சகட்டத்தில் மனிதனை சத்தியஜீவனாக்கும், அதன் முழு உட்பொருளையும் நாம் பெறமுடியாவிட்டாலும், புது உணர்வு, புது நிலை, புது மனம் உற்பத்தியாகி புதிய உலகத்தை நமக்குக் காட்டவல்லது இது.

*******

  1. அறியாமை விழித்து அறிவாக மாறும்பொழுது அது செயலும், உணர்ச்சியிலும், எண்ணத்திலும் பிரதிபலிப்பது உள்ளுணர்வைக் கண்ணாடியாக வாழ்வு பிரதிபலிப்பதாகும்.

அறியாமை அறிவாகி நம்முள்ளுணர்வு வாழ்வை பிரதிபலிப்பது ஆன்ம விழிப்பாகும்.

இறைவனை அறியாதது அறியாமை. அறிவது அறிவு. ஒரு குழாய் கசிகிறது எனில், கசிவை அடைப்பது நம் செயல் (a physical work). ஏன் கசிவை அடைக்கிறோம் என்ற கேள்வி நமக்கு எழுவதில்லை. எப்படி அடைக்காமலிருக்க முடியும் என்ற கேள்வியே எழும். மனிதன் அறியாமையுடையவன். அவன் திறமையைச் செயல் வெளிப்படுத்த கசிவை அடைக்கும் முயற்சியை மேற்கொள்கிறான். நாமெல்லோரும் இப்படித்தான் செயல்படுகிறோம். இதை முறைமை, திறமை, அறிவு எனக் கொள்கிறோம். இது நம்மைப் போன்ற சாதாரண மனிதனுக்குச் சரி.

அன்னையை ஏற்றுக் கொண்டு, பக்தனாய், சாதகனாய், விழிப்புற விரும்புகிறவன் இப்படிச் செயல்படுவது சரியில்லை. அவன் உடலால் மட்டுமோ, அறிவால் மட்டுமோ செயல்பட்டால், அவனுக்கு அது அறியாமை. ஆன்மாவால் செயல்படுதல் அறிவுடைமையாகும். குழாய் கசிவதில் ஆன்ம விழிப்பு எப்படி வரும்? ஆன்ம விழிப்பு, ஆன்மீக சக்தி கசிவை அடைக்க முடியும், நிறுத்த முடியும் என்று நம்ப ஒருவருக்கு ஆன்மா விழிப்பாக இருக்கவேண்டும். ஆன்மா விழிப்பாக இருந்தால், கசிவை நிறுத்த முடியும் என்று நம்ப முடியும். நம்பினதால் கசிவு நின்ற நிகழ்ச்சியை வேறொரு கட்டுரையில் எழுதியிருந்தேன்.

கசிவு நின்றால் ஆன்மா செயல்பட்டுக் கசிவை நிறுத்திவிட்டது எனப்பொருள். அறியாமை விழித்து அறிவாக மாறியது எனப்பொருள். இது செயலும், உணர்விலும், எண்ணத்திலும் பிரதிபலிப்பது எப்படி?

ஜடமான ரிப்பேர் செய்யும் செயலை நம்புவது அறியாமை. கண்ணுக்குத் தெரியாத ஆன்மாவை நம்புவது அறிவுடைமை. கசிவு நிற்கும்என மனம் நம்பியவுடன், மனம் பரந்து விரிவதை உள்ளே உணரலாம். மனநிறைவாக அது தெரியும், மனம் நிறைந்தவுடன் நம்பிக்கை முழுமை பெறும். மனத்தில் ஏற்படும் நம்பிக்கை, குறுகிய மனம் விரிவது, மனம் நிறைவது ஆகியவை எண்ணத்தில் ஏற்படும் பிரதிபலிப்புகளாகும்.

ஆன்மா இனிமையானது. வாழ்வுக்கில்லாத இனிமை ஆன்மாவுக்குண்டு. ஆன்மா விழிப்புற்றவுடன் நெஞ்சில் இனிமை தோன்றும். நெஞ்சம் இனித்தால் ஆன்மா சைத்தியம் மேலே பூத்து வருகிறது எனப்பொருள். மற்றவர் மீது இதுவரை இல்லாத கருணையும், பரிவும் தோன்றும். ஜடப்பொருள்கள் மீதும் அன்பு சுரக்கும்.

கசிவு என்ற செயலும் நம் ஆன்ம விழிப்பு பிரதிபலித்து, கசிவு நின்றுவிட்டது என்று மாறும். கசிவு, துவாரம் அடையாமல், நின்றுவிட்டால், தடையில்லாத துவாரத்தின் வழியே தண்ணீர் கசியவில்லை என்றால், ஜடமான குழாய் ஆன்ம விழிப்பை ஏற்றுப் பிரதிபலிக்கிறது என்றுபொருள்.

இதைக் கண்டபின் முதல் செய்ய வேண்டிய காரியம், கசிவை அடைக்க வேண்டும். ஆன்மவிழிப்புக்கு அவசியமானது எல்லாப் பொருள்களும் ரிப்பேரில்லாமலிருப்பது. எனவே அதை முதற்காரியமாகச் செய்ய வேண்டும்.

******

  1. பகுத்தறிவு வெற்றிக்குத் தடை. சக்தி பிராணனை நிரப்பினால் காரியம் பூர்த்தியாகிறது. அறிவு சக்தியின் ஒரு பகுதியைச் செலவிடுகிறது. காரியம் முடிந்தபின் விளக்கத்தைத் தேடி அறிவு வரலாம். முதலிலேயே அறிவு செயல்பட்டால் காரியம் தடையாகும்.

பகுத்தறிவு விலகி சக்தி பிராணனை நிரப்பி காரியம் பூர்த்தியாகும்.

நமக்குக் காரியம் சிறப்பாகக் கூடி வந்தபொழுது நான் இதையெல்லாம் நினைக்கவில்லை. தானே நடந்தது. எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று பெரும்பாலும் சொல்வதாக இருக்கும்.

வேறு சில நேரங்களில் அதேபோல் காரியம் சிறப்பாகக் கூடி வந்தால், எல்லாம் முதலேயே திட்டமிட்டது. திட்டம், போட்டது போல் எழுத்துக்கு எழுத்து அப்படியே நடந்தது என்று சொல்வதாக அமையும்.

நம் நிலைமைக்கு மீறியது கூடி வருவது முதல் சொல்லியது, அடுத்தாற்போல் சொல்லியது நம் நிலைக்குட்பட்டதாகும். நம் நிலைமைக்கு உட்பட்ட காரியம் திட்டமிடுவதால், யோசனை செய்வதால், மீண்டும் மீண்டும் பேசுவதால் சிறப்பாகப் பூர்த்தியாகும். அம்முறையை நம் நிலைமைக்கு மேற்பட்ட செயல் பின்பற்றினால் பகுத்தறிவு தடையாகும். காரியம் பூர்த்தியாக வேண்டிய சக்தியில் ஒரு பகுதியைச் சிந்தனை செலவிடும். அதனால் காரியம் பூர்த்தியாகாது.

1977-இல் 2000 ரூபாய் சம்பாதிப்பவர் 15 இலட்ச ரூபாய் கம்பெனி ஆரம்பிக்க முயன்றபொழுது எவருக்கும் கிடைக்காததுபோல் அத்தனைப் பணமும் விரைவில் சாங்ஷனாயிற்று. தொழிற்கூடம் கிடைப்பது அரிது என்ற நிலையில் தற்செயலாய் இன்ஸ்பெக்ஷனுக்கு அடுத்த கட்டடத்திற்கு வந்த டைரக்டர் இக்கம்பெனியைப் பார்த்து வியந்து, ஒரு தொழிற்கூடத்தைக் கொடுத்தார். டெக்னாலஜி, மார்க்கெட், முதல், கூடம் எதிர்பாராமல் கிடைத்தன. பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. அடுத்தாற்போல் நடக்க வேண்டியவற்றைப் பற்றிச் சிந்தனை செய்தது. அதாவது மனம் ஓடியது. ஒவ்வொன்றாக ரத்தாகியது. அடுத்த 6, 7 வருஷம் போராட்டமாயிற்று. முடிவில் சிந்தனை நின்றது. சிந்திக்க எதுவுமேயில்லை. சிந்தனை ஓடவில்லை. பல கோடி தொழிலில் பங்கு அமைந்தது. சிந்தனை எழவில்லை. முழுத் தொழிலும் தனக்கே வந்தது.

ஆகையால் செயல்பாட்டிலும், தனக்கு மீறிய நிலையில், அறிவால் செயல்பட்டாலும் காரியம் தடையாகும். தனக்கு மீறிய

நிலையில் வருவது அருள். அதைப் போற்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம் திறமைக்கு உட்பட்ட இடத்தில் திட்டம், பகுத்தறிவு, சிந்தனை, எழுத்து, பேப்பர், அத்தனையும் பலன் தரும். புள்ளி போட்டால், போட்டதுபோல் நடக்கும். பார்ப்பவர் பிரமிக்கும் வகையில் காரியம் பூர்த்தியாகும். இதையும் சிந்தனையை விலக்கிச் செய்ய முடியும். அது சமர்ப்பணம். அது முடிந்தால், பலன் அளவு கடந்து வரும். தொழிலுக்குரிய முறையன்று அது. யோகத்தில் செயலைச் சமர்ப்பணம் செய்து மலரச் செய்யும் வழி அது.

*******

  1. ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி அவர் தத்துவம்.

பரிணாமம் முடிவானால் அதன் ஆரம்பம் உயிர் பிழைத்து வாழ்தலாகும். பிழைப்பு வளர்ச்சி அடுத்த நிலைக்குரிய வளர்ச்சி பரிணாமம் என்பது முழு அளவுகோலாகும். இந்த அளவுகோல் நம் ஒவ்வொரு கரணத்திற்கும் பொருந்தும். இன்று நாம் இந்த அளவுகோலின் எந்த நிலையில் இருக்கிறோம்? முதலில் நிலையான உயிர் பிழைத்தல் புரிகிறது. வளர்ச்சி நமக்குத் தெரிவதில்லை. உடல் வளர்வதாலும், அது நம் கண்ணுக்குத் தெரியாததாலும் அது புரிவதில்லை.

உடலின் வளர்ச்சியை அறிய முடியாத நிலையிலிருந்து, முயன்று ஆன்மீகப் பரிணாம வளர்ச்சிக்குப் போவது யோகம்.

  • நிலையான வாழ்வே ஆரம்பம்.
  • பிழைத்து வளர்ந்து மாறுதல் எந்நேரமும்.
  • நம்நிலை தெரிவது விழிப்பு.
  • தல் நிலையிலிருந்து முடிவான நிலைக்குப் போவது ஆன்மீகப் பரிணாமம்.

போதுமான தெம்பில்லாமல், வருமானமில்லாமல் பிழைக்க முடியுமா என்று போராடி பிழைப்பவன் (survival) தன் முயற்சியை விவரமாக அறிவான். தனக்கு வந்த இடர்களும் தான் எடுத்த முயற்சியும் அவனுக்கு நினைவிருக்கும்.

வளரும் குழந்தைக்குத் தான் வளர்வது தெரியாததுபோல் வளமான சந்தர்ப்பத்தில் பிறந்து, வசதியான வாய்ப்புகள் கல்வி, சொத்து, அன்பு, ஆதரவில் வந்து நிலை தொடர்ந்து உயர்ந்தால், அது சந்தோஷமாகச் சௌகரியமாக இருக்கும். தனக்கு வந்தவை வாய்ப்புகள் என்பது தெளிவாகத் தெரியாது. சில சமயங்களில் தெரியவே தெரியாது. இது வளர்ச்சியின் தன்மை. (This is unconscious growth).

இருக்கும் நிலையிலேயே குமாஸ்தா, சிறு விவசாயி, பெரிய வியாபாரி, அதிகாரி உள்ள வளர்ச்சி நமக்குத் தெரிவதில்லை. அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சி (development) என்பது குமாஸ்தா ஆபீசராகும் வளர்ச்சி, அதிகாரி அரசியல்வாதியாவது. இவை நாம் அறிந்த முயற்சிகள். சுலபத்தில் நடக்காது. பெருமுயற்சி தேவை. நூறில் ஒன்று பலிக்கும். சாண் ஏறினால் முழம் சறுக்கும். வெற்றி அரிது.

பரிணாமம் என்பது மனிதன் குரங்கிலிருந்து பிறந்தது. மனிதன் சத்திய ஜீவனாவது. சமூகத்தில் பரிணாம வளர்ச்சிக்கு ஓரளவு உதாரணம் சொல்லலாம். அனாதைப் பையன் தொழிலதிபராவது பரிணாம வளர்ச்சி எனலாம். அனாதைக்கும், தொழிலுக்கும் சம்பந்தமில்லை. இது அடுத்த கட்டமுமில்லை. அடுத்த பரிணாம நிலை என வர்ணிக்கலாம்.

பிழைப்பு வளர்ச்சி அடுத்த நிலைக்குரிய வளர்ச்சி பரிணாமம் என்பது முழு அளவுகோலாகும். இது மனத்திற்கும், உடலுக்கும், உணர்வுக்கும், ஆன்மாவுக்கும் பொருந்தும். முதல் தலை முறையில் படிப்பவன் 4 வகுப்போடும் அடுத்த அடுத்த தலை முறைகளில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து சில தலைமுறைகளில் பெரிய படிப்பு, பெரிய அறிவு பெறுவதும் வழக்கம். அது போன்றில்லாமல் முதல் தலைமுறையிலேயே வெளிநாட்டு Ph.D. டாக்டர் பட்டம் பெற்று மேதையாக முயல்வது போலுள்ள நிலை வளர்ச்சியை அறியமுடியாத மனிதன் பரிணாம வளர்ச்சியை நாடுவது, பல நிலைகளை ஒரே முயற்சியில் கடக்கும் செயல் இது.

இது மனித முயற்சிக்குரியதன்று. அன்னை சக்தியால் முடியக் கூடியது. மனிதன் சத்தியஜீவனாக அன்னை அருளால் உயர முடியும். இது முடியாதவர்கள் மற்ற கரணங்களில், வாழ்வில் இது போன்ற பலனை நாடலாம். அதற்கு அன்னையின் உதவியை நாடலாம். இதுவரை நம் அனுபவங்களில் நம்மை அறியாமல் அன்னை செயல்பட்டு ஓரளவு இது போன்ற பலன் பெற்றிருப்பதைப் பலரும் நினைவுபடுத்தலாம். நம்மையறியாமல் பலன் இதுபோல் வந்தது என்றால், நாம் முயன்று பெற விரும்பினால் (conscious effort) பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

நாமுள்ள நிலை எதுவானாலும் அதிலிருந்து உச்சகட்ட நிலைக்கு ஒருவர் போக விரும்பினால், அதற்குரிய முறைகளை அவர் பின்பற்றினால், அது நிச்சயம் பலிக்கும் என்பதற்கு அன்பர்கள் வாழ்வில் அநேக நிகழ்ச்சிகளுண்டு. நம்பங்கு அதற்குரிய முயற்சி. நாம் எட்ட நினைக்கும் நிலைக்குக் குறைவான நிலையின் பழக்கங்களை நாம் விருப்பமாக தயாராக அறவே அகற்ற முன்வர வேண்டும்.

*********

  1. இந்த நான்கு நிலைகளையும் நாம் ஒரு கரணத்திலாவது புரிந்து கொள்ள வேண்டும். இதைச் சமூக வளர்ச்சியில் எளிதில் புரிந்து கொள்ளலாம். அதுவே ஆரம்பத்திற்கு நல்ல முறை.

சமூகத்தில் இந்நிலைகளைப் புரிந்து கொள்வது நல்ல ஆரம்பம்.

பிழைக்க சிரமம் என்பவன் பிழைக்க முடிவது முதல் நிலை. அதே நிலையில் அதிக வசதி பெறுவது வளர்ச்சி.

நிலையுயர்வது அடுத்த கட்ட வளர்ச்சி. இந்தக் கட்டத்திற்கில்லாதது என்று நாம் அறியும் அடுத்த கட்டம் பரிணாமத்திற்குரியது.

உதாரணம்:

சர்க்கார் உத்தியோகம் கிடைக்கவில்லை என்பது முதல் நிலையாகவும், அதில் தொடர்ந்த பிரமோஷன் தடையின்றி வந்து உயர்வதை வளர்ச்சியாகவும், தனது திறமையால் சிறந்து IAS பெறுவது அடுத்த கட்ட வளர்ச்சியாகவும், அவரின் சிறப்பை அறிந்து ஓர் அகில இந்திய ஸ்தாபனம் அவரைத் தலைவராக அழைப்பதைப் பரிணாமம் என்றும் கொண்டு ஒவ்வொரு நிலைக்குரிய விளக்கத்தையும் பார்ப்போம்.

சர்க்கார் உத்தியோகத்திற்குத் தகுதியுள்ள ஆயிரம் பேரில் கிடைப்பது நூறு பேருக்கு என்றால், (வழி தவறி முயல்பவர்களை விலக்கி) அவர்கள் முயற்சியை சுருக்கமாகச் சொன்னால்,

  1. சர்க்கார் உத்தியோகத்திற்குள்ள தகுதியை அழிக்கும் எந்தச் செயலையும் விலக்கியவராக இருப்பார்கள்.
  2. அதற்குரிய பரீட்சை, நேர்முகத் தேர்வில் முதல் நூறு இடங்களில் வர, கல்லூரிப் படிப்பில் காட்டிய ஆர்வத்தைப் போன்று பதின்மடங்கு காட்டுவார்கள். அத்துடன் பொறுமை, நிதானம், சமயோசிதம், சாதுர்யம், சிறந்த பழக்கம், தைரியம் போன்றவை நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுத் தரும். இவர் குமாஸ்தாவாகவோ, ஆபீசராகவோ தேர்ந்தெடுக்கப் படுவர்.

இவர்களுக்குள்ள தகுதியிருந்தும், அதற்குரிய முயற்சி இல்லாதவர், முயற்சியி

ருந்தும் இதர தகுதிகள் பழக்கம், தைரியம், etc இல்லாதவர் வேலையைப் பெறுவதில்லை. இது முதல் நிலை வெற்றியானாலும், இந்த நிலையிலிருப்பவர்களுக்கு இவ்வெற்றி பெரிய வெற்றியாகும். இந்த நூறு பேரில் தொடர்ந்து தடையின்றி பிரமோஷன் பெற்று நல்ல பெயருடன் உயர்ந்து வருவது 20, 30 பேருக்கு மேலிருக்காது. அவர்கள் முதல் நிலையில் உள்ள தகுதிக்கு மேல் உயர்வதற்குத் தேவையான முயற்சியையும், புதிய நிலைக்குத் தேவையான நாணயம், கௌரவம், நல்ல பெயரும் எடுக்க வேண்டும், தொடர்ந்தும் பல ஆண்டுகள் அந்நிலை நிலைக்க வேண்டும். இந்த நூறு பேரில் 30 பேர் தொடர்ந்து பிரமோஷன் பெற்றால் IASக்கு வாய்ப்பு ஓரிருவருக்குக் கிடைக்கிறது. அவர்கள் நல்ல பெயர், நாணயம், திறமையில் தலை சிறந்து விளங்குபவராக இருப்பார்கள். அவர்களில் அது போன்ற 100 பேரில் மூன்று நான்கு பேர் பிரபலமடைந்து தனியார் துறையில் அல்லது சர்க்காரில் சிறந்த தலைமைப் பதவிக்கு அழைக்கப்படுகின்றனர்.

எல்லாத் துறைகளிலும் குடும்பம் நடத்துவது, விவசாயம் செய்வது, வியாபாரம் செய்வது, ஸ்தாபனத்தை நிர்வாகம் செய்வது,

எலக்ஷன் நடத்துவது, அன்னையை ஏற்றுக் கொள்வது இந்த 4 நிலைகளுக்குரிய வித்தியாசத்தை நாம் அறிவது பயன் தரும். அதில் சில உண்மைகளும் விளங்கும்.

போதிய முயற்சியில்லாதவனுக்கு முதல் நிலையே இல்லை. போதிய முயற்சி தொடர்ந்து இல்லாதவனுக்கு இரண்டாம் நிலை உயர்வு கிடையாது. முயற்சியுடன், தகுதியிருந்தால்தான் மூன்றாம் நிலையுண்டு.

முயற்சியும், தகுதியுமிருந்து, சிறப்பான சுபாவம் பல இருப்பவரே நான்காம் நிலைக்குரியவர்.

நாமுள்ள துறையிலும், நமக்குத் தொடர்புள்ள துறைகளிலும் இந்நிலைகளைச் சிந்தனை செய்து, ஆராய்ந்தால், நிலைகளுக்குள்ள வேறுபாடும், அவற்றிற்குள்ள நிபந்தனைகளும் விளங்கும். அந்தத் தெளிவை மற்ற எல்லாத் துறைகளுக்கும், குறிப்பாக அன்னையை ஏற்றுக்கொள்வதிலும் கண்டால் அன்னையை அடுத்த அடுத்த நிலைகளில் எப்படி அடையலாம் என விளங்கும்.

நாம் எந்த நிலைக்குத் தகுதியுள்ளவரானாலும், அன்னையை ஏற்றுக் கொண்டால் ஒரு நிலை உயர்ந்து அடுத்த நிலை பலிக்கும் என்பது அன்னைக்குரிய சிறப்பு.

*********

  1. சமுதாயம் சட்டத்திற்குட்பட்டது, மனித சுபாவத்தால் கட்டுப்பட்டது, என்பதை அறிவுடைய ஒருவன் புரிந்து கொள்ளலாம். தெளிவில்லாதவன் கண்ணில் இது படுவதில்லை.

மனிதச் சமுதாயம் அதன் தெளிவுடைய முன்னோடிகளால் நடத்தப்படுகிறது என்பதை அறிய அதிக தீட்சண்யம்

தேவை. முதல் இரு நிலைகளையும் தத்துவஞானி விளக்கலாம். மூன்றாவதை விளக்க ஒரு கவிஞன் தேவை. அவன் யுகதர்மத்தை நாடும் கவிஞனாக இருந்தால் மனித சமுதாயத்தின் இலட்சியக் குறிக்கோள் தனி மனிதனின் அந்தரங்க அபிலாஷைகளை வெளிப்படுத்துவதைக் காணலாம். தன்னையறிந்த யோகி தன் ஆன்மாவின் அசைவுகளை அறிவான். அதைப்போலவே மற்ற ஆன்மாக்கள் ஆன்மாவின் தாயாரை நோக்கிப் போவதையும் அறிவான். இதை உலகின் ஆன்மீகப் பரிணாமத் திருஷ்டி என்போம். அக்காட்சி ஆசையைத் தொட்டால் ஆர்வமாகிறது. அங்கு ஆரம்பித்து சரணாகதி மூலம் தன்னை பூரணமாக அர்ப்பணிக்கிறது.

மனிதச் சுபாவம் என்ற சட்டத்தால் சமுதாயம் கட்டுப்படாது. ஞானி, கவி, யோகி இதை அறிவார்.
சமுதாயச் சட்டதிட்டங்களை, அதன் ஸ்தாபனங்களை, கல்வித் திட்டத்தை, பண்பு முறையை, மார்க்கெட் நிலவரத்தைப் பள்ளியிலும் கல்லூரியிலும் விவரமாக விளக்குகிறார்கள். பத்திரிகைகள் மேலும் தெளிவுபடும் விவரங்களை அளிக்கின்றன.

மார்ட்டின் லூதர் சமுதாயத்தைவிட மேம்பட்டவர். உள்ளொளியால் உலகம் இயங்குகிறது. சட்டத்தை, தோற்றத்தைப் புறக்கணித்து, உள்ளொளியைப் பாராட்டு என்றார். சாக்ரடீஸ் அறிவின் சிறப்பை உலகுக்கு அறிவித்தார். மகாத்மா காந்தி அஹிம்சையைச் செயல்படுத்தினார். டால்ஸ்டாய் மனித இயல்புகள் மனிதனை ஆள்வதை விவரித்தார். இந்த மேதைகள் ஒருவகையில் ஞானிகள், தத்துவம் பேசுபவர்கள், மனிதச் சுபாவத்தின்

இரகஸ்யங்களை உலகுக்கு எடுத்து உரைத்து நம் நிலையை நமக்கு விளக்கி வழிகாட்டியவர்கள்.

சமுதாயம் மேலெழுந்த வகையிலே சட்டத்தின் சக்திக்கும், அடுத்த நிலையிலேயே மனிதனின் அபிலாஷைக்கும் கட்டுப்படுவது போல், மூன்றாம் நிலையில் பூமியின் சுபாவத்திற்கும், மனிதச் சுபாவத்திற்கும் (universal laws of nature and man) கட்டுப்படுவதை ஷேக்ஸ்பியர், ஹோமர், டாண்டே, வால்மீகி, வியாசர், கன்பூஷியஸ், இளங்கோ அடிகள் போன்ற பெருங்கவிகள் கண்டு, அவர்கள் கண்ட காட்சியைக் காவியங்களாக வடித்தவை ஆயிரமாயிரம் ஆண்டு உலகை ஆண்டு வருகின்றன.

இதுவே சிருஷ்டியின் முடிவன்று. முடிவான நிலை பேராசிரியருக்கோ, மேதைக்கோ, கவிஞனுக்கோ புலப்படுவதில்லை. அதைக் காண்பவன் யோகி. திரிகாலத் திருஷ்டி மூலம் அவன் உலகத்தை அற்புதமாகக் காண்கிறான். தீயவனான துரியோதனனும், இராவணனும், கம்சனும் யோகியின் பார்வையில் பிரம்மமாகக் காட்சியளிக்கின்றார்கள். அவருக்குத் திருடனுடைய அடி திருவடியாகத் தெரிகிறது. கொலையாளியின் நெஞ்சில் கருணை தெரிகிறது. துரோகம் செய்பவன் இறைவனுடைய கருவி, இறைவனுக்குரிய விஸ்வாசத்தை மனிதரிடம் துரோகமாகக் காண்கின்றான். பூகம்பமும், புயலும், வெடிக்கும் எரிமலையும் துர்அதிர்ஷ்டங்களல்ல, ஆண்டவனின் அரவணைப்பு அமிர்தமாக இல்லாமல், அனலாக இருக்கும் நிகழ்ச்சிகள். விபசாரியின் தொழில் தீமையானதன்று, சாதாரண ஆன்மாவால் செய்ய முடியாத சேவையை ஏற்றுக்கொண்ட பெரிய ஆன்மாவின் தியாகம், என்று அறிய முடிகிறது.

திருஷ்டி காட்சி ஆன்மாவைத் தொட்டால் தவம் பலிக்கும், மனத்தைத் தீண்டினால் மேதையாகிப் பெருநூல்களை எழுதுவான். அவன் உணர்வின் உறைவிடமான பிராணனைத் தொட்டால், இறைவன் மீது ஆர்வம் எழுந்து, பக்தியாக உருவாகும். ஆர்வம் தனக்குரிய 9 நிலைகளைக் கடந்து நம்பிக்கை, வழிபாடு, பணிவு,

துதி, அர்ப்பணம், ஆனந்தம், அன்பு, பூரிப்பு, சரணாகதி ஒன்பதாம் நிலையில் சரணாகதியாகிறது. சரணாகதியை உலகம் அறியும். வைஷ்ணவம் சரணாகதியைப் போற்றுகிறது. கீதைக்குச் சரணாகதியே மூச்சு. அவை மோட்சத்தையடைய சரணாகதியை நாடின. பூவுலகம் இறைவன் வாழும் திருத்தலமாகும். பொன்னொளி வீசும் புண்ணிய பூமியாக மாறுவதற்காக பகவான் சரணாகதியை நாடுகிறார்.

*******

  1. இந்தப் பெரிய ஆன்மீக அனுபவத்தைச் சமாதி நிலையில் காண்பது ஆன்மீக அனுபவமான காட்சி. அதையே ஒரு சிறு வேலை மூலமாகப் பெறலாம். நடைமுறையில் அவ்வேலை நமக்குக் கட்டுப்பட வேண்டுமானால், பூரணயோகத் திருஷ்டி தேவை.
  • ஆசை திருஷ்டியால் சரணாகதியைப் பூர்த்தி செய்யும்.
  • திருஷ்டி தரும் சமாதி;
  • பூரணயோகத் திருஷ்டி வாழ்வை யோகமாக்கும்.

புலன்கள் அவிந்த பின்னரே தியானம், நிஷ்டை, அதன் சிகரமான சமாதி நிலை. தியானத்தின் நிலைகள் பல. விழிப்பான நிலை 'ஜாக்கிரதா' எனப்படுவது. புலன் அவிந்து உள்ளே மனம் விழிப்படைந்து நிகழ்ச்சிகள் காட்சிகளாகத் தெரியும் 'சொப்பன நிலை'. அடுத்தது மனதைக் கடந்த 'ஷுஷுப்தி' நிலை. கடைசி கட்டமும், நான்காம் கட்டமுமான 'துரிய நிலை'. இவற்றிற்கு அடிப்படைப் புலன்கள் செயலிழப்பது. ஆன்மீக அனுபவம் உயர உயர அதைப் பெறும் 'சமாதி' நிலையும் உயர வேண்டும். சமாதி நிலையில் பெறுவது சமாதியிருக்கும்வரை தெரியும். சமாதியை விட்டு வெளிவந்து தியானம் கலைந்தபின் சமாதியில் கண்டது தெரியாது. ஏதோ உயர்ந்த ஒன்றைத் தொட்டது போன்ற உணர்வு விவரமில்லாமலிருக்கும். இதுவரை செய்த யோகங்களின் நிலை இது.

பூரணயோகத்தில் 'சமாதி'நிலை என்பதில்லை. சமாதியை unconscious stage தன்னையறியாதநிலை என்பதால் அது பூரணமாக இருக்க முடியாது என்பதால், பூரணயோகம் சமாதியை நாடவில்லை. மற்றும் பூரணயோக முறைகள் எதுவும் சாதகனைச் சமாதிக்கு அழைத்துச் செல்ல முடியாது. 'சமாதி' என்றே பகவான் ஓர் அத்தியாயம் எழுதியுள்ளார். யோகிகள் சமாதிநிலையில் புலன்களை அவித்து ஆன்ம விழிப்பால் பெறும் தெளிவை, புலன்களைத் தூய்மைப்படுத்தி, அவிக்காமல், விழிப்போடு வேலை செய்யும்பொழுது பெற்றால் அதையே நாம் சமாதி எனக் கருதலாம் என்கிறார். சமாதி நிலையில் ஆன்மா மட்டுமே விழித்துள்ளது. புலன்களும், மனமும், உணர்வும், உடலும் தங்களை அறிய முடியாத அளவுக்கு மறந்திருக்கின்றார்கள். அதனால்தான் நிஷ்டையில் உள்ள ரிஷி மேல் செல்லு, புற்று எழுந்தாலும் அவர் அதை அறிவதில்லை. பூரண யோகத்தில் எந்தக் கரணத்தையும் அவிப்பதில்லை. மாறாக எல்லாக் கரணங்களையும் துலக்கி, தூய்மைப்படுத்துவது முறை. புலன்களும், கரணங்களும் தூய்மைப்பட்டதால் அங்கு இருளில்லை. இருள் நிறைந்த கரணம் இடையூறாக இருப்பதால் தபஸ்வி அதை அவிக்கின்றார். இருளில்லாத கரணம் ஒளியால் நிரப்பப்பட்ட பொழுது அதை அவிக்க வேண்டிய அவசியமில்லை. அது இடையூறாக இருக்காது. கரணங்களும் அப்படியே அவிக்கப்படுவதில்லை. துலக்கப்படுகின்றன. சமாதியில் ஆன்மா மட்டும் பெறும் ஞானத்தை பூரணயோகம் ஆன்மாவுக்கும், ஏனைய அனைத்துக் கரணங்களுக்கும் அளிக்கின்றது. அதற்கு, செயல் கர்மம் தேவை. செய்யும் செயல் சமர்ப்பணமானால், சமர்ப்பணம் பூர்த்தியானால், பூர்த்தியான நிலையில் எந்த வேலையும், சிறு வேலையானாலும், சமாதி யோகிக்குப் பெற்றுத் தந்த அகக்காட்சியை, திருஷ்டியை vision பெற்றுத் தரவல்லது. அந்நிலையை எய்தினால் அது பூரணயோகத் திருஷ்டியாகும். அதைத் திரிகாலத் திருஷ்டி என்பர்.

திரிகாலத் திருஷ்டி பெற காலத்தைக் கடக்க வேண்டும். Synthesis of Yoga சின்த்தஸிஸ் ஆப் யோகா எனும் யோக நூல்

கடைசி அத்தியாயத்தை பகவான் திரிகாலத் திருஷ்டியை விவரிக்கப் பயன்படுத்துகிறார். மனித நிலையை மனத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கின்றார். முதல் நிலை இன்று நாம் உள்ள நிலை. இது அறியாமை மனம் (mind of ignorance) என்கிறார். உலகத்து ஞானம் முழுவதும் உள்ளேயுள்ளதுஎன அறிந்தபின், பெருமுயற்சி செய்து புறவழிச் செல்லும் பார்வையை, அகவழிச் செலுத்தி, உள்ளேயுள்ள ஞானத்தை எட்டினால் வெளியில் தேடிக் கிடைத்த அனைத்தும் உள்ளிருப்பதையும், தேடிக் கிடைக்காதவையும் உள்ளிருப்பதையும் காணலாம். அதை (mind of self forgetful knowledge) தன்னை மறந்த மனம் என்கிறார். இதை எய்தியபின் திருஷ்டி திரிகாலத் திருஷ்டியாகிறது.

ஞானம் நிறைந்த மனத்தை எட்டி, திரிகாலத் திருஷ்டி பெற ஆரம்பித்தால், சமாதிநிலை விலகிப் போகும். சமாதியில் பெறும் ஞானம் நாம் செய்யும் வேலையில் எழும். அதுவே பூரண யோகத் திருஷ்டி எனப்படுவதாகும்.

*******

  1. பெண்மையே ஆண்மையை எல்லா இடங்களிலும் பூர்த்தி செய்கிறது. முதல் நிலையில் அவனது உடன் அடுத்த பகுதி. பிள்ளைப்பேறு அதன் விளைவு. கடைசி நிலையில் அவள் ஈஸ்வரனான மனிதனுக்கு சக்தி.

பிள்ளைப் பேற்றிலிருந்து பெண்மை ஆண்மையை, ஈஸ்வர சக்தியை பூர்த்தி செய்கிறது.

வேலை பல பகுதிகளாகப் பிரிந்து, பகுதிகள் சேர்ந்து ழுமையாகிப் பூர்த்தியாகிறது. அவை பலவிதத்தின. ஆண், பெண் தத்துவம் அதில் முக்கியமானது. இதையும் பல தலைப்புகளில் பிரித்து எழுதலாம்.

ஒரு மெஷினில் பல பகுதிகள் உண்டு. ஒரு கடிகாரத்தில் நூறுவிதமான பகுதிகளுள்ளன. முள், டயல், கூடு, சாவி, அலாரம் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. மற்றவை தெரிவதில்லை. பகுதிகள் சேர்ந்து முழுமையை ஏற்படுத்துவது வேலைக்குரிய இலக்கணம். சிருஷ்டியின் அமைப்பு.

இரவும், பகலும் எதிரெதிரானவை. அவை சேர்ந்து நாளாகின்றன. மண்ணும் மரமும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாகவும், அவசியமாகவுமிருக்கின்றன. ஒன்றில்லாமல் அடுத்ததில்லை (complementaries). ஆணியும், மறையும் (nut and bolt) சேர்ந்து பிடித்துக் கொள்கின்றன. தனியாக ஒன்று பயன்படாது. இரண்டும் சேர்ந்து பயனை உற்பத்தி செய்யும் தன்மையுடையன. இரட்டை மாட்டு வண்டியின் ஒரு மாடு, அடுத்த மாட்டிற்கு அவசியம். வண்டியிலுள்ள ஒரு சக்கரம் அடுத்த சக்கரத்திற்கு அர்த்தம் கொடுக்கிறது. ஒன்றில்லாமல் அடுத்ததில்லை. இரு கை தட்டினால் ஓசை எழும். ஒரு கை ஓசை எழுப்பாது. வெறும் சாதத்தையோ, வெறும் சாம்பாரையோ சாப்பிட முடியாது. இரண்டும் சேர்ந்தால் சாப்பாடாகும். உலகத்தின் செயல்களை எல்லாம் பகுதிகளாகப் பிரித்தறியலாம். பலவற்றை எதிரெதிரான இரட்டையாகவும் (contraries), வேறு சிலவற்றை ஒன்றுக்கொன்று துணையான இரட்டையாகவும் (complementaries) காணலாம். சிருஷ்டியில், இயற்கையில், வளர்ச்சியில், பரிணாம வளர்ச்சியில் இவை நாம் காணும் பாங்கு.

அவற்றுள் தலையான பிரிவு ஆண், பெண் என்பது. (Positive, Negative) பாஸிட்டிவ், நெகடிவ் என்பவை எலக்ட்ரிசிட்டியின் பகுதிகள். இவ்விரு பகுதிகளின்றி மின்சாரமில்லை. ஒன்று மற்றதைப் பூர்த்தி செய்கிறது. நாம் பாஸிட்டிவ் என்பதை நெகட்டிவின் எதிரி என்று கொள்கிறோம். ஒரு பந்தயத்தில் இரு கட்சிகளுண்டு. அவற்றை நம் கட்சி, எதிர்க் கட்சி என்கிறோம். உடன்பாடாக வேலையைப் பூர்த்தி செய்வது மரமும், மண்ணும் ஒரு வகை எனில், எதிர்மாறாக வேலையைப் பூர்த்தி செய்வது மற்றொரு வகையாகும்.

எல்லா இடங்களிலும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் புதுமைக் கருத்துக்களைக் கூறுவதுபோல் இங்கும் கூறுகிறார். நெகட்டிவ் என்பதை நாம் பாஸிட்டிவின் எதிராகக் கருதுகிறோம். முழுமையின் ஒரு பகுதியை பாஸிட்டிவ் வெளிப்படுத்துகிறது. பாஸிட்டிவ்வால் வெளிப்படுத்த முடியாத முழுமையின் அடுத்த பகுதியை நெகட்டிவ் வெளிப்படுத்துகிறது என்கிறார். நாள் என்பது முழுமையானால் பகல் ஒரு பகுதி. பகலால் வெளிப்படுத்த முடியாத நாளின் பகுதியை இரவு வெளிப்படுத்தி, இரவும், பகலும் சேர்ந்து நாளைப் பூர்த்தி செய்கின்றன. நாம் பிறப்பை விரும்புகிறோம். இறப்பை விரும்புவதில்லை. இறப்பதால் மனிதனால் பிறக்க முடிகிறது. இறப்பு இல்லையேல், பிறப்பில்லை, முழுமையில்லை. வாழ்வு என்ற முழுமைக்குப் பிறப்பு முதற் பகுதி, இறப்பு அடுத்த பகுதி. பிறப்பும், இறப்பும் சேர்ந்தது வாழ்வு. உடல் இறந்து பிறப்பதால் life வாழ்வு உலகில் (eternal) அழியாமல் நீடிக்கிறது என்கிறார் பகவான். பூமியில் வாழ்வு நிலைபெற உடல் அழிந்து, பிறப்பதாக அவர் விளக்கம் தருகிறார்.

ஒளியையும், இருளையும் வேறு விதமாக விளக்குகிறார். வெள்ளை நிறம் தன் மீது படும் அத்தனை ஒளியையும் பிரதிபலிப்பதால், வெண்மையாகவும், கருமை தன் மீது படும் அத்தனை ஒளியையும் உள்ளே இழுத்துக் கொள்வதால் கருமையாகவுமிருக்கின்றன. எனவே வெள்ளை நிறத்தைவிட கருமையில் ஒளி அதிகம். அடர்ந்த ஒளியே இருட்டு என்று இருளை பகவான் விவரிக்கின்றார். அறியாமையை, அடர்ந்த அறிவு என்று அதேபோல் விளக்குகிறார். அறியாமை, அறிவைவிட உயர்ந்தது என்ற ஞானம், பூரணயோகத்திற்கு அடிப்படை ஞானமாகும்.

பெண் ஆணைப் பூர்த்தி செய்வது நாம் அறிவது. உடலால் பூர்த்தி செய்தால் வாரிசு உற்பத்தியாகிறது. உணர்வால் பூர்த்தி செய்தால் நட்பு எழுகிறது. மனத்தின் அறிவால் பூர்த்தி செய்தால் (original thought) புதிய சிந்தனை மேதைமை மனதிலெழுகிறது. ஆன்மாவால் பூர்த்தி செய்தால் பெண் சக்தியாகவும், ஆண்

ஈஸ்வரனாகவுமாகி சிருஷ்டி ஏற்படுகிறது. பெண் ஆணை எல்லா நிலைகளிலும் பூர்த்தி செய்கிறாள். பெண்ணின்றி ஆணில்லை. ஆணின்றிப் பெண்ணில்லை. அவை இரண்டும் சேர்ந்ததே சிருஷ்டி, உலகம், வாழ்வு, பூமி, பிரபஞ்சம். வானுலகம், தகப்பனாராகவும், பூமி தாயாகவும் வர்ணிக்கப்படுகிறது.

********

  1. தன்னை மனிதன் தயார் செய்துகொள்ளும் காலங்களில் மனிதன் பெண்ணை விலக்குவது அவசியமாகலாம். ஆனால் மனித முயற்சி அவளின்றி பூர்த்தியாக முடியாது.

பெண்ணில் பூர்த்தியாகும் ஆண்மை, பெண்ணை விலக்கித் தயாராகும்.

பிரம்மச்சரியம் என்பது எல்லோருக்கும் ஒரு வயதுவரை உண்டு. தவத்தை மேற்கொள்பவனுக்கு அது அவசியம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பிரம்மச்சரியம் நீடிப்பதா, தேவையில்லையா என முடிவு செய்வார்கள். தவத்தைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கட்கு பிரம்மச்சரியம் தவிர்க்க முடியாது. சன்னியாசி என்பவருக்குப் பெண் இல்லை. இருக்கும் பெண்ணையும் துறந்தால்தான் சன்னியாசம். மனைவியுடைய சன்னியாசி என்பவரில்லை. ரிஷி, யோகி, முனிவர் ஒரு கட்டம் பூர்த்தியானால் திருமணம் செய்து கொள்வதுண்டு. அவர்கள் சித்திக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் காலத்தில் திருமணம் இல்லை, சித்தித்தபின் திருமணம் இருக்கலாம். சன்னியாசியின் போக்கில் எக்காலத்திலும் பெண் எழுவதில்லை, எழ முடியாது.

எந்தக் காரியத்திற்குத் தன்னை மனிதன் தயார் செய்து கொண்டாலும், தயார் செய்கின்ற காலத்தில் அவனுடைய முழு சக்தியும் அவனுக்குத் தேவை. அக்காலத்தில் குடும்பத்துடனோ மனைவியுடனோ தன் சக்தியைப் பகிர்ந்து கொள்ள முடியாது. பகிர்ந்து கொண்டால் மேற்கொண்ட காரியம் பூர்த்தியாகாது. தொழில்,

அரசியல், சேவை ஆகிய இடங்களிலும் இது உண்மை எனினும் இவர்கள் சமூகத்தின் பங்காக இருப்பதால், திருமணம் வாழ்வில் ஏற்படுகிறது. ஆண் தீவிரமாக ஒன்றை தொழில், சேவை நாடும்பொழுது மனைவி இருப்பதையே மறந்துவிடுவான். அவன் நோக்கம் பூர்த்தியானபின்னரே குடும்பத்தையும், மனைவியையும் கவனிப்பான். அதன்பிறகு அது நினைவு வரும்.

தவம் அவனுடைய ஜீவனின் முழு சக்தியையும் முழுநேரம் 24 மணியும் தேவைப்படுவதால், தவத்தை மேற்கொண்டவன் தவம் செய்யும் காலத்தில் பெண்ணை விலக்குவது அவசியம். விலக்கியதால் தவம் பலிக்கிறது. பலித்த தவம் பூர்த்தியாக, அதன் தன்மைக்கேற்ப, மனைவி தேவை.

உதாரணமாக, தவத்தின் முதல் நிலைகளைக் கடந்து உச்சகட்டம் எய்தியவர் மனோமயப்புருஷனை அடைகிறார். ஜீவாத்மாவை அடைகிறார், மேலும் ஈஸ்வரனாக அவருக்கு சித்தி கிடைப்பது உச்சகட்டம், அரியபொருள், எனினும் அதை அடைபவருண்டு. ஈஸ்வர சித்தியடைந்தவர் தம் தவப்பலனை மற்றவர்க்களிக்க, உலகுக்குப் பயன்படுத்த, நேரடியாக முயன்றால் முடியாது. அதைச் சாதிக்க ஒரு சக்தி தேவை. பார்லிமெண்ட் தீட்டும் திட்டங்களை பார்லிமெண்ட் நேரடியாக அமுல்படுத்த முடியாது. அதற்கு ஒரு சர்க்கார் தேவை. சர்க்காரின்றி வெறும் பார்லிமெண்ட் மக்களுக்குத் தங்களுக்குள்ள அதிகாரத்தால் நல்லது செய்யமுடியாது. அதுபோல் ஈஸ்வரன்நிலை சித்தித்தபின், சக்தியின்றி சிஷ்யர்களையோ, உலகையோ அவர் எட்டித் தொட முடியாது. இந்நிலையை எய்தும்வரை பெண் விலக்கப்பட வேண்டும். எய்தியபின் பெண்ணின்றி காரியம் பூர்த்தியாகாது.

ஆரம்பக் காலத்தில் அன்னையின் தெய்வீகத்தைச் சாதகர்கள் காணவில்லை. தங்களைப்போல் அவரும் சீடர் என்றிருந்தனர். பகவான் அன்னையின் தெய்வீகத்தை விளக்கியபின்னும் சிலரால் அன்னையை ஏற்க முடியவில்லை. என் யோகப்பலன் உங்களை வந்தடைய நீங்கள் அன்னையை ஏற்க வேண்டும். அன்னையை ஏற்காமல் அது உங்களை வந்தடையாது. அன்னையை ஏற்க முடியாதவர்கள் ஆசிரமத்தைவிட்டுப் போகலாம் என்றார். அதுபோன்ற பலர் அன்னையைச் சந்திக்கும்பொழுது அன்னைக்கு நமஸ்காரம் செய்வதுமில்லை.

சாதகர்கள் பலர் பகவானுக்கு ஒரு பெண்ணைப் பற்றியும் அவள் ஆன்மீக உயர்வைப் பற்றியும் எழுதினால் இது என்ன திருமணத்திற்கு விண்ணப்பமா? என்பார். அது போன்ற ஒருவருக்கு எழுதும்பொழுது, பகவான், யோகம் சித்தித்து புருஷனை அடைந்தால், ஈஸ்வரன் சித்தித்தால் அந்நிலைக்கு சக்தி தேவை. அதற்கு முன் நிலைகளுக்கு 'சக்தி' வாழ்வில் எழுந்தால் யோக சக்தி சிதறி, யோகம் பாழாகும் என்று எழுதினார்.

******



book | by Dr. Radut