Skip to Content

பகுதி 16

  1. இறைவனுக்குப் பிரச்சினையில்லை. சிருஷ்டி மலர்வதை அனுபவிக்கும் இறைவன், அதைத் துரிதப்படுத்தி அனுபவிக்கின்றான்.

மலர்ச்சியின் ஆனந்தம்.

நாம் இறைவனை நினைக்கும்பொழுது மனித உருவத்தில் அவனைக் கருதுகிறோம். நமக்குப் பெயரிருப்பதைப்போல் அவனுக்கும் பெயரிடுகிறோம். நமக்குள்ள உணர்ச்சி, அறிவு போன்றவை அவனுக்கும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆஸ்பத்திரியில் சேர்ந்திருப்பவருக்கு, அங்கு வருபவர்களைப் பார்த்தால் அவர்களும் நோயாளிகள்என நினைப்பது சகஜம். நோயாளிகள் தவிர ஆஸ்பத்திரி சிப்பந்திகள், நோயாளிகளுடன் வருபவர்கள், டாக்டர்கள், பழம், ரொட்டி சப்ளை செய்பவர்களும் வருவது நோயாளிக்குத் தோன்றுவதில்லை. தன்னைப்போல் பிறரை நினைக்கும் பழக்கம் ஆண்டவனை நினைக்கும்பொழுது அவருக்கு என்ன பிரச்சினை, தன் பிரச்சினையை ஆண்டவன் எப்படித் தீர்க்கின்றார்என நினைப்பது இயல்பு. அவருக்குப் பிரச்சினைகளில்லைஎனத் தோன்றுவது சிரமம். தகப்பனார் சம்பளத்திற்குள்ள உத்தியோகத்தை ராஜினாமா செய்தபின் சொந்தத்தொழில் ஆரம்பித்தார். மகன் அவரை இப்பொழுது யார் உங்களுக்கு சம்பளம் தருகிறார்கள்என்று கேட்டான். இப்பொழுது தகப்பனார் பிறருக்குச் சம்பளம் கொடுக்கிறார், அவருக்கு யாரும் சம்பளம் தருவதில்லை. அவர் பெறுவது வருமானம் என சிறுவனுக்குப் புரிவதில்லை.

வேலையிலுள்ளவரை ஆபீசுக்குப் போகிறோம். வீட்டு வேலையிருந்தால் லீவு போடுகிறோம். ரிடையர் ஆனபின் வாழ்நாள் ழுவதும் லீவுதான். வேலைக்கே போகாத செல்வருக்கு வாழ்வே லீவுதான். மனிதன் காலத்திற்குட்பட்டவன். இறைவன் காலத்தைக் கடந்தவன். மனிதனுக்குக் காலம் முக்கியமானதால் அவசரம் உண்டு. இறைவனுக்கு அவசரமில்லை. இயற்கை (Nature) காலத்தால் ஏற்பட்டது. என்றாலும் இறைவன் காலத்தைக் கடந்தவன்

என்பதுபோல், இயற்கையும் காலத்தால் மனிதனைப்போல் கட்டுப்படாதது. இறைவன் காலத்தைவிட உயர்ந்தவன். இயற்கை காலத்தினின்றும் தாழ்ந்தது. இருவரும் காலத்தால் பாதிக்கப்படாதவர்கள். இயற்கைக்கும் அவசரமில்லை. தான் செய்யும் காரியங்களை நிதானமாக, அனுபவித்து, ஆனந்தம் வெளிப்படும் வகையில் பொறுமையாகச் செய்வது இயற்கையின் பழக்கம். (She has eternity before her ) காலம் கடந்த நிலை அவளுடையது என்கிறார் அன்னை.

இறைவன் இருக்கிறான். இப்படித் தானிருக்க வேண்டும்என்ற நியதி அவனுக்கில்லை. ஒளியாகவுமிருக்கலாம், இருளாகவுமிருக்கலாம், அசைவாகவுமிருக்கலாம், அசைவற்றும் இருக்கலாம். வேறு எந்த வகையாக இருக்க அவன் பிரியப்பட்டாலும் அப்படியிருக்க முடியும். லீலை என்பதை இறைவன் மேற்கொண்டுள்ளான். சும்மா இருந்து சுகம் பெறும் நிலையை மாற்றி சிருஷ்டியை ஏற்படுத்தி, பரிணாமம் மூலம் புதுவகையான ஆனந்தத்தை அனுபவிக்க அவன் முடிவு செய்ததால், சிருஷ்டியுள்ளது.

அந்த சிருஷ்டி மலர்வதே அவன் நாடும் ஆனந்தம்.

மலர்ச்சி பரவியும் நிறைந்துமிருப்பது பேரானந்தம்.

பிரச்சினை மனத்திற்கும் மனிதனுக்கும் உரியது.

மலர்ச்சியும் ஆனந்தமுமே இறைவனுக்குரியது.

சிருஷ்டி அவனுக்குத் தருவது இயற்கையின் மலர்ச்சி.

பூரணயோகம் நாடுவது ஆன்மீக மலர்ச்சி.

ஆன்மா, ஆண்டவனாகி, ஏற்படும் மலர்ச்சி அவன் நாடுவது.

ஆண்டவனாகிய ஆன்மா ஸ்ரீ அரவிந்தர்.

அன்னை அப்பாதையில் அவரையும் கடந்து நின்றார்.

நம்மையும் அப்பாதைக்கு அழைப்பது பூரணயோகம்.

ஏன் இந்த சிருஷ்டி? என்ற கேள்வியை நாம் கேட்க முடியாது என்ற பரம்பரைக் கருத்தை ஸ்ரீ அரவிந்தர்,

"எல்லாம் வல்லவன் இறைவன். எல்லாவற்றையும் தன்னுள் பெற்றவன். எந்தத் தேவையும் இல்லாதவன், எவராலும் வற்புறுத்த முடியாதவன், சிருஷ்டியை மேற்கொண்டான்எனில் அதற்குக் காரணம்என்று நாம் கூறமுடியுமா?'' என்ற கேள்வியை எழுப்புகிறார். எழுப்பியவர் அவரே விடையளிக்கிறார். அவ்விடை,

"ஆனந்தம் பெற இறைவன் சிருஷ்டியை மேற்கொண்டான் என்பதே பொருத்தமான பதில்''

என்ற சொற்களால் கூறுகிறார்.

மனிதன் இறைவனாக வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம். மனிதனாக உள்ளவரை அவனுக்குப் பிரச்சினையுண்டு, இறைவனுக்குப் பிரச்சினையில்லை. நாம் ஆனந்தத்தைத் தேடுகிறோம், சில சமயம் கிடைக்கிறது, பல சமயம் வலி கிடைக்கிறது. இறைவன் நாடும் ஆனந்தம் தவறாது கிடைக்கிறது. இதுவே நாம் இறைவனைப் பற்றியும், சிருஷ்டியைப் பற்றியும் அறிந்தது. இப்பொழுது ஸ்ரீ அரவிந்தர்,

பரிணாமத்தைத் துரிதப்படுத்தி சத்தியஜீவன் பிறக்கவேண்டும்

என்கிறார்.

பிரச்சினையில்லாத இறைவன், தவறாது தான் தேடும் ஆனந்தத்தைப் பெறுபவன் ஏன் பரிணாமத்தைத் துரிதப்படுத்தி சத்திய ஜீவன் பிறக்கவேண்டும் என்கிறான். பரிணாமம்தான் அவன் தேடும் இன்பமாயிற்றே, ஏன் அதைத் துரிதப்படுத்தவேண்டும் என்பது கேள்வி. இறைவன் தேடுவது ஆனந்தம், சச்சிதானந்தத்தில் ஆனந்தம் (Bliss) எனப்படும். அதைவிட உயர்ந்த ஆனந்தம் சிருஷ்டியில் இறைவன் வெளிப்படும்பொழுது எழும் ஆனந்தம் (Delight).

  • ஆனந்தத்திற்கு இவ்விரு நிலைகள்தானுண்டா?
  • ஆனந்தம் அதிகரிக்க அளவில்லை, ஏனெனில் அது அனந்தம்.

பரிணாமம் இன்று நடப்பதுபோல் நடந்தால் இறைவன் பெறும் ஆனந்தம் ஒன்று. அது துரிதப்படுத்தப்பட்டால், இறைவன் பெறும் ஆனந்தம் அதிகம்.

அன்னை தம் கடைசி நாட்களில் இறைவன் பெறும் ஆனந்தத்தைக் கண்டார். கண்டவர், "ஓகோ, இறைவன் இப்படித்தான் ஆனந்தத்தை அனுபவிக்கிறானா?'' எனக் கூறினார். சத்தில் ஆரம்பித்து, ஜடத்தில் முடிந்து, மீண்டும் ஜடத்தில் ஆரம்பித்து சத் வரை சென்று, முடிவாக, பிரம்மத்துள் சிருஷ்டி கிரகிக்கப்படுவதில் இன்று நாம் - மனிதன் - உள்ள நிலை 10. மேலும் சிருஷ்டியில் 6 நிலைகள் உள்ளன.

  • நிலை உயர்ந்தால் ஆனந்தத்தின் தரம் உயரும்.
  • அது இந்த சிருஷ்டிக்குரியது.
  • பிரம்மத்திற்கு அதுவே முடிவன்று.
  • பிரம்மம் எதையும் செய்யும், எந்த நிலைக்கும் உயர்த்தும்.

சிருஷ்டி மலர்வது, இறைவனின் மலர்ச்சி. அம்மலர்ச்சியின் தரத்தைப் பொருத்தது இறைவனின் ஆனந்தம்.

******

  1. புரியாதவரை மனிதனுக்குப் பிரச்சினையுண்டு. புரிந்தால் பிரச்சினை இல்லை. புரியாதவரை பிரச்சினையாக இருந்தது, புரிந்தவுடன் பிரச்சினையாக இருப்பதில்லை. பார்வை மாறினால் பிரச்சினை கரைகிறது.

மாறியபார்வை, கரையும் பிரச்சினை.

அனுபவமில்லாத விஷயம் மலைபோலப் பாரமாக இருக்கும். தவறாகப் புரிந்துகொண்டவை பயத்தை எழுப்பும். விளங்காதவை சிக்கலாகப்படும். முதல்முறை கோர்ட் சம்மன் பெற்றவர்,

ஆடிப்போவார். திவாலானதுபோல் நடுங்குவார். கோர்ட் விவகாரம் தெரிந்தவர்கட்கு அந்தப்பயம் இருக்காது. சம்மன் வந்தால் என்ன செய்யவேண்டும்என்று தெரியும். அது பிரச்சினையாகாது.

சட்டத்திலும், நடைமுறையிலும், வாழ்க்கையின் வழிகளிலும் நமக்குப் புரியாதவை ஏராளம். அது நமக்குப் பிரச்சினையாகிவிடும். பிரியமான கணவன், அதிகமாகத் தன்னை விரும்புவதைத் தவிர்க்க மனைவி எரிந்து விழுந்தாள். கொஞ்ச நாளில் கணவன் மனைவியைப் புரிந்துகொண்டான். நெருக்கத்தைக் குறைத்துக்கொண்டான். தூரம் ஏற்பட்டது. மனதால் விலகியவர், நடைமுறையில் விலகும்வரை தூரம் ஏற்பட்டு அதுவே வாழ்க்கை முழுவதும் அமைந்தது. தான் கணவனை விலக்கியதை அவள் அறியமாட்டாள்.

இதுபோன்ற மற்றொரு மனைவியைக் கணவன் பொறுத்துக் கொள்ளாமல் அவள் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். தான் வாழ்ந்த நாட்களை நினைத்து அவன்மீது மனதால் பிரியப்பட்டு அழுதாள். அவனே வந்து அழைத்துக்கொண்டு போனான். ஒருத்திக்குப் பிரச்சினை தீரவில்லை, அடுத்தவளுக்குத் தீர்ந்தது. ஆனால் இருவருக்கும் புரியவில்லை.

மனதாலும், குணத்தாலும் விலக்கினால் வாழ்வில் விலகிவிடுவோம் என்பது புரியவில்லை. புரிந்தால் அதனால் ஏற்பட்ட பிரச்சினை விலகும்.

தம்பி தனக்குப் போட்டியாக நடப்பதை அண்ணனால் பொறுக்க முடியவில்லை. நாளுக்கு நாள் அவன் செய்வனவெல்லாம், சொல்லும் சொற்கள் எல்லாம் காதில் நாராசமாக விழுந்தன. இனி இந்தத் தம்பி முகத்தில் விழிக்கக் கூடாதுஎன்று முடிவு செய்துவிட்டான். தம்பி அண்ணனிடம் வந்து தன் தாம்பத்ய வாழ்க்கையை அந்தரங்கமாகப் பேசினான். சொல்வனவற்றை எல்லாம் கேட்டால் இப்படியும் ஒருத்தி இருப்பாளா, பேசுவாளாஎன நினைக்க முடியவில்லை. தம்பியின்மீது அளவுகடந்த பரிதாபம் ஏற்பட்டது.

போட்டியால் அவன் எழுப்பிய கோபமும் சற்றுக் குறைந்தது. வாழ்க்கை இப்படியிருந்தால் தம்பி வெளியில் எப்படி வேலை செய்வான்என்று யோசனை செய்யும்பொழுது திடீரென தம்பி தன்னுடன் அடாவடியாகப் போட்டி போடுவது தாம்பத்ய கோளாறில்எனப் புரிந்தது. புரிந்தவுடன் மனம் மாறியது. தானே முன்வந்து போட்டியைவிட்டு விலகினான்.

தகப்பனார் அக்காவுக்குத்தான் செய்வார், எனக்குச் செய்யமாட்டார் என்று நினைக்கும் தம்பிக்கு, தகப்பனாரின் செயல் தன் எண்ணத்தால் உற்பத்தியானதாகப் புரிவதில்லை. தான் அதுபோல் நினைத்ததால்தான், தகப்பனார் அப்படி நடக்கின்றார்என்று அவனால் நினைக்கவும் முடிவதில்லை. ஆனால் அதுவே உண்மை. உண்மையை மனம் ஏற்றால் செயல் மாறிவிடும், தகப்பனார் மாறிவிடுவார்.

ஜடம் சச்சிதானந்தமாவது திருவுருமாற்றம்என்று எழுதிய பகவான், அத்திருவுருமாற்றத்தை நம் ஜீவனில் எப்படிப் பூர்த்தி செய்வதுஎன இரு பெரியநூல்கள் எழுதினார். அவற்றின் சுருக்கமாக,

ஜடத்தைப் பற்றிய நம் எண்ணம் மாறினால்,

ஜடம் சச்சிதானந்தமாக மாறும்.

பார்வை மாறினால் உலகம் மாறும்,

என்று எழுதினார்.

பிரச்சினை என்பதற்கு விபரம் தெரியாதபொழுது ஏற்படும் குழப்பம்எனவும் கூறலாம். விபரம் தெரியாதவரை உடல் நடுங்கும், தெரிந்தால் பயம் போய்விடும் என்பது ஒரு மனநிலை. விபரம் தெரிந்த இடத்திலும் நம்பிக்கை சரியில்லாததால் பயமும் குழப்பமும் ஏற்படும். இவற்றிற்கெல்லாம் நம் வாழ்வில் பல உதாரணங்கள் உண்டு.

*******

  1. மாறிய பார்வை மனத்தின் பிரச்சினைகளைக் கரைக்கிறது. உணர்வில் மாறிய நோக்கம் உள்ளத்தைப் பூரிக்கச் செய்யும். உடல் உணர்வு Physical sensitivities மாறினால் உள்ளும் புறமும் திருவுருமாறும்.

உடல் திருவுருமாறும் உள்ளுணர்வு.

மாற்றம் சக்தி வாய்ந்தது. என்மீது நண்பர் வெறுப்பாக இருக்கிறார் என்பது, எனக்கு அவர்மீது வெறுப்புஎன்று நாம் அறியவேண்டும். என் மனதிலுள்ள வெறுப்பே அவரிடமிருந்து பிரதிபலிக்கிறது, நான் மாறினால் அவர் மாறுவார் என்பது உண்மை. அதைச் சோதனை செய்து பலன் கண்டு பிரமித்தவர் அநேகர். மனத்தின் அபிப்பிராயத்தைவிட உணர்வுக்கு சக்தியுண்டு. உணர்வு மாறினால் உலகமே மாறும். எவருக்குமே நல்லது செய்ய முடியாதவர் ஒருவர், தீங்கு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடமாட்டார். இவருக்குக் கீழ்பட்டு நடப்பவரிடம், "உன் திட்டங்கள், கம்பனிகள் முன்னுக்கு வரக் கூடாதது அல்லவா?'' என்று நேரே கேட்கும் குணம் உள்ளவர். இவர்மூலம் எனக்கு நல்லது நடக்கவே முடியாதுஎன்று எவரும் அறியும் உறவு. பக்தர் அந்நிலையிலும் அந்த உணர்வுக்கு இடம் தரவில்லை. கொஞ்சநஞ்சம் இருந்த தவறான உணர்வையும் நேர் எதிராக மாற்றி, "அன்னை இவர்மூலமும் எனக்கு நல்லது செய்ய முடியும்'' என்று கருதிய அதே நேரம், அவர் வாழ்விலே பெற்ற பெரியசொத்தைப் பெறும் வாய்ப்பை அந்த நல்ல' மனிதர் முன்கை எடுத்து முடித்து வைத்தார். உணர்வு சக்தி வாய்ந்தது. அது மாறினால் எதுவும் மாறும்.

கணவனுடைய தவறான தொடர்பைப்பற்றி மனைவிக்குச் செய்தி வருகிறது. அவள் நம்புகிறாள். நம்பியதே உண்மையாகிறது. மனைவியைப்பற்றி தாறுமாறான செய்தி கணவனுக்கு வருகிறது. க்ஷணத்தில் கொலைக்குத் தயாராகிறது. மகன் போதை மருந்தில் மூழ்கிவிட்டான்என கல்லூரியிலிருந்து கடிதம் வருகிறது. இனி எனக்கு உயிர் போனால் நல்லதுஎன பெற்றோர் நினைக்கிறார்கள். உயிரும் போகிறது. இதுபோன்றவை கடுமையான, கொடுமையான

நிகழ்ச்சிகள். மனிதனுக்கு வரக்கூடாது. வந்துவிட்டால் அத்துடன் அனைத்தும் முடிந்துபோகும்.

இத்தனையும் உண்மையானாலும், அன்னையிடம் வேறொரு உண்மையும் உண்டு. என் கணவரை எனக்குத் தெரியும். அவரைப் பற்றி எதையும் நான் நம்பமாட்டேன். அன்னையை மட்டுமே நான் நம்புகிறேன் என்ற நேரம் மனம் பேதப்பதற்குப் பதிலாக தெம்பாகத் துள்ளி எழும். வந்த சேதியைக் கவனித்தால் நடந்த விஷயத்தில் கணவனுடைய பெருமைப்படும் குணம் வெளிப்பட்டது தெரியும். நடந்த நிகழ்ச்சியானாலும் அதன் முடிவை நிர்ணயிப்பது செய்தியன்று, உள்ளுறை உணர்வு. உணர்வு சரியாக இருந்து மனம் அன்னையை நம்பினால், உயர்ந்த செய்திமட்டுமே வரும். நடக்க இருந்த தவறும் தடம் மாறி நல்லதாக முடியும். இது உணர்வுக்குரிய திறன். உடலின் திறன் தலையாயது, மிகப் பெரியது. யோகப்பலனை அளிக்கவல்லது. உள்ளும் புறமும் திருவுருமாற்றம் தரவல்லது. அதனால் புறநிகழ்ச்சிகளை நிர்ணயிக்க முடியும், உலகின்போக்கை நிர்ணயிக்க முடியும்.

எந்தச்சூழ்நிலையையும் மனமாற்றம் மாற்றும்.

எந்தநிகழ்ச்சியையும் உணர்வு மாறினால் மாற்ற முடியும்.

நடந்துபோன நிகழ்ச்சியும் மாறி நல்ல பலனைத் தரவேண்டுமானால் உணர்வின் மாற்றம் உடலின் ஆழத்தைத் தொடவேண்டும்.

அண்ணனும் தம்பியும் உதவாதஇடத்து அடி உதவும். தவறு செய்து அடி வாங்கியவனுக்கு மீண்டும் அதையே செய்யத் தோன்றும், ஆசையாகவுமிருக்கும். அந்நேரம் வாங்கியஉதை நினைவுக்கு வரும், உடல் நினைவுபடுத்தும், எல்லாம் அடங்கிவிடும்.

சிலபேர் துடுக்காகப் பேசுவார்கள், மறித்துப் பேசுவார்கள், மறுத்துப் பேசுவார்கள், அப்படிப்பேச சந்தோஷப்படுவார்கள். அதற்காகப் பெருமைப்படுவார்கள். இவர் அதிகாரியாக இருந்தால், கீழுள்ளவர்கள்

கேட்டுக்கொள்வார்கள். "பல்லெல்லாம் கொட்டும்படி அறையலாம் போலிருக்கிறது'' என்று நினைத்துக்கொள்வார்கள். ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற பழக்கம். டாக்டரைப் பார்க்கவேண்டும். முக்கிய விஷயம். ஊரில் பெரிய டாக்டரைப் பார்க்கவேண்டும். அவர் மருந்து கொடுப்பார், கேள்வி கேட்க அனுமதிக்கமாட்டார், கேட்டால் கோபப்படுவார். தனக்கு என்ன வியாதிஎன அறிய ஆவல். டாக்டருக்கு வேண்டியவர் ஒருவர்மூலமாகப் பெண் டாக்டரிடம் போனாள். தன் வழக்கப்படி துடுக்காகப் பேசினாள். டாக்டர் பதில் சொல்லவில்லை. பெண்ணை அனுப்பிவிட்டு, நண்பரை நோக்கி, "இனி இந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வராதே'' என்றார். இவள் புத்திமதியால் மாறமாட்டாள். குறிப்பாக இந்தப்பெண் தகப்பனாரிடமும், தாயாரிடமும், கணவனிடமும் அடி வாங்குபவள். அண்ணன் தம்பி உதவாதபொழுது உதவும் அடியும் இவளிடம் பலன் தரவில்லை. இவர்களை, "இவரெல்லாம் திருந்தமாட்டார்'' என்று விட்டுவிடுகிறோம். ஏன்எனில் இவர் பழக்கம், அறிவையும் உணர்வையும் கடந்து உடலில் ஊறியுள்ளது. உடல் துடுக்காகப் பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்க்குத் தங்கள் சொல்லுக்கும், அதன் பலனுக்கும் உள்ள தொடர்பு தெரிவதில்லை.

ஒரு சமயம் உடல் ஆப்பரேஷனுக்குப் போனார். பெரிய ஆப்பரேஷனில்லை, வயது குறைவாக இருப்பதால் சிக்கல்லை. டாக்டர் ஆப்பரேஷன் செய்யவேண்டுமென்றார். இவர் வீட்டில் சம்மதித்தனர். தகப்பனார் அன்னை அன்பர், அதிக அனுபவமுள்ளவர். பெண் யாரையும் மறுத்துப் பேசுவாள். தகப்பனாரை மறுத்துப் பேசுவதில் அலாதிப் பிரியம். அவர் கண்டிப்பதில்லை. இப்பெண்மீது கெட்ட எண்ணமுள்ள ஒரு வயதான பெண்மணி இவரைப் பார்க்க வந்தார். தகப்பனார் வழியிலேயே பார்த்து அவருக்குச் சமாதானம் சொல்லியனுப்பிவிட்டார். தகப்பனார் போனபின் அப்பெண் மீண்டும் வந்தார். ஆப்பரேஷனைவிட தகப்பனார் பேச்சைத் தட்டவேண்டும் என்ற ஆர்வம் பெண்ணுக்குண்டு. வழியில் திரும்ப தகப்பனார் அனுப்பினார்எனக் கேள்விப்பட்டு வந்த கெட்டஎண்ணமுள்ளவரை

அன்பாக உபசரித்தார்! அதாவது தன் துடுக்கான பழக்கத்தால், கெட்டஎண்ணத்தின் முழுவேகத்தை வரவேற்றார்!! ஆப்பரேஷன் சாதாரணமாக முடிந்தது. பட்ட அவதி பெரியது. வலியைக் குறைக்கும் மருந்தை இவருக்குக் கொடுக்க முடியவில்லை. அவதிஎன்றால் படாதபாடு, பாடாவதிபட்டார். அதன்பிறகு துடுக்குப்பேச்சு பாதி குறைந்தது. மீண்டும் ஆப்பரேஷன், மீண்டும் அவதி. துடுக்கு மேலும் குறைந்தது. அவதிப்பட்ட உடல் ஆழ்மனத்தை மாற்றும். அதுவே உடல் திருவுருமாறும் உள்ளுணர்வு.

******

  1. புறத்தே ஏற்படும் இத்திருவுருமாற்றத்தை மனம் அறிந்தால் பிரச்சினை வாய்ப்பாகும்.

வாய்ப்பான பிரச்சினை.

அன்னையிடம் வந்தபின் பிரச்சினைகள் தீர்கின்றன. இதுவரை தீராதவையும் தீர்கின்றன, இவற்றிற்கெல்லாம் தீர்வில்லை என்பனவும் தீர்கின்றனஎன்று பல அளவில் அனைவரும் கண்டுள்ளனர். அன்னையிடம் வந்தும் எனக்குத் தீராத பிரச்சினைகளுண்டு என்பவரும் உண்டு!

வாய்ப்பு என்பதையும் பக்தர்கள் கண்டிருந்தாலும், பிரச்சினை தீரும் அளவோடு, வாய்ப்பு வந்து பலிப்பதை ஒப்பிட முடிவதில்லை. பிரச்சினைகள் 100இல் 97 தீருகின்றன என்பவருக்கும், வந்த வாய்ப்பு 100 ஆனால் பலித்தது 4, 5 எனவும், 10க்குமேல் பலிப்பதைக் காண்பதில்லை எனவும் பொதுவாக நாம் அறிவோம்.

பிரச்சினை தீருவதற்கும், வாய்ப்பு பலிப்பதற்கும் சட்டம் ஒன்றே என்றாலும் வாய்ப்பைப்பெற அதிக திறமை வேண்டும்.

தாய்மொழியைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கும்பொழுது எளிதாக, அழகாகக் கற்றுக்கொள்கிறது. புதிய புத்தகத்தை

3 மாதத்தில் கற்கிறது. எல்லாமொழிகள் பயில்வதற்கும் சட்டம் ஒன்றே என்றாலும், பிறமொழியைக் குழந்தைக்குப் பயிற்றுவிக்கும் பொழுது அதே புத்தகத்தை 3 வருஷத்தில் கற்றுக்கொள்கிறது. அதுவும் அவ்வளவு திருப்தியாக இருப்பதில்லை.

தாய்மொழி மனத்திலும், வாயிலும், உள்ளேயும், புறத்திலும் எங்கும், எப்பொழுதும், நிறைந்துநின்று நிலவி வருவதுபோல் மனிதன் பிரச்சினைகளால் அளவுகடந்து சூழப்பட்டும், அதனால் (pressure) கசக்கப்பட்டும், விடுபட ஆர்வமாக இருப்பதால், அன்னையை அவன் அழைக்கும்பொழுது குரல் முழுமையாக ஆழத்திலிருந்து எழுந்து உடனே தீர்வளிக்கிறது.

வாய்ப்பு பிறமொழிபோல் கேட்பதரிது. புத்தகத்தில் மட்டும் இருக்கிறது, காதில் ஒலிப்பதில்லை. மனத்தில் நிலவுவதில்லை. இயற்கையான சூழலோ, ஆர்வமோ அளவு கடந்திருப்பதில்லை. எனவே தீவிரம் இருப்பதில்லை. வாய்ப்பு எவ்வளவு விரும்பத்தக்கதானாலும், அதை நாடுவதில் தீவிரம் இல்லை.

மனம் அத்தீவிரத்தை அளிக்கவல்லது.

சூழ்நிலை மாறுவதை மனம் அறிந்துகொண்டால் பிரச்சினை தீருவதுடன் அது வாய்ப்பாக மாறும். முதல் செய்த வியாபாரம் திவாலானபின் ஏன் அது திவாலாயிற்றுஎன்று மனம் சிலருக்குப் புரிந்துகொள்ளும். அடுத்தாற்போல் அவர் செய்யும் தொழில் அபரிமிதமாகப் பெருகும். 50,000த்தில் செய்த 7 தொழில்கள் விரயமானவர் அதன் சூட்சுமத்தை அறிந்தார். 10 ஆண்டுகளில் அவர் பிள்ளைகள் 50 கோடியில் தொழில் செய்கிறார்கள். பிரச்சினை என்பது செய்யும் காரியத்தில் தேவையானவை குறைந்தாலோ, அதற்குரிய திறமை குறைந்தாலோ, எதிரான சந்தர்ப்பங்களிருந்தாலோ காரியம் பிரச்சினையாகிறது. வாய்ப்பு வரும்பொழுது நம் நிலைமை சரியாக இல்லாததால், பிரச்சினையாகத் தோன்றும். ஆப்பரேஷனில் பொறுக்க முடியாத

வலி எழுந்த நிகழ்ச்சியை எழுதினேன். "வரும் பெண் என் மீது வெறுப்புள்ளவள். அவளிடம் நான் பிரியமாகப் பழகினால் அவள் வெறுப்பை நான் ஏற்பதாக அர்த்தம். என் பிரியம் அவள் வெறுப்பின்மீது பிரியமாக மாறும். அதன்பின் வெறுப்பு அதன் வேலையைச் செய்யும்'' என்று அப்பெண்ணிற்குப் புரிந்து அவர்களை விலக்கினால், அது திருவுருமாற்றம். பெரியவர்கள் விலக்குவதை நான் விலக்க வேண்டும் என்பது நல்லகுணம். அப்படி விலக்கியிருந்தால் அதிகப்படியான வியாதியோ, வலியோ பட்டிருக்க வேண்டியிருக்காது. தனக்குள்ள கெட்டகுணம் தன்னைப் பார்க்க வருபவர்கள் கெட்டகுணமாகப் பிரதிபலிக்கிறது. அவர்களை விலக்குவது என் கெட்டகுணத்தை விலக்குவதாகும் என்பது மனமாற்றம். என் மறுத்துப்பேசும்குணத்தால், எனக்குக் கெட்ட குணமுள்ளவர் தேடி வருகிறார்கள். இந்த மறுத்துப்பேசும்குணத்தை ஏற்று குணமாக மாற்றுகிறேன் என்பது புறத்தேயுள்ள திருவுருமாற்றம். அத்திருவுருமாற்றம் வழியாக அருள் செயல்படும். டாக்டர் வந்து ஆப்பரேஷனே தேவையில்லை என்பார் அல்லது சிறு உபாதையுடன் ஆப்பரேஷன் முடியும். கெட்டகுணமுள்ளவர் வருகிறார் என்ற பிரச்சினை ஆப்பரேஷன் தேவையில்லைஎன்ற வாய்ப்பாக மாறும்.

*******

  1. புறநிகழ்ச்சியால் உடலைத் தீண்டும் இவ்வனுபவம் கழுத்தை நெறிக்கும் கைகளை இறைவனின் ஸ்பர்சமாக அறியும்.

ஸ்பர்சத்தின் இனிமை.

ஒன்றான இறைவன் பலவான ஜீவன்களானான், ஏகன் அநேகனானான் என்பது தத்துவம். மனிதப் பிறவியில் நாம் நம்மை மட்டும் அறிகிறோம். பிரம்மம் தன்னைமட்டும் அறியும். சத்தியஜீவியத்தில் மனிதன் தன்னை இறைவனாகவும், மற்றவர்களை இறைவனாகவும் அறிவதுடன், தன்னுள் அத்தனை ஜீவாத்மாக்களில்

இருப்பதையும், மற்ற அத்தனைஜீவன்களிலும் தானிருப்பதையும் உணர்கிறான். இந்த நான்கு நிலைகளையும் ஒரே சமயத்தில் அறியவல்லது சத்தியஜீவியம்.

மனம் ஒன்றைமட்டும் அறியும். அத்தனைஜீவாத்மாக்களும் தன்னுள் இருப்பதை அறிந்த மனிதன், அதைமட்டும் ஏற்க முன்வந்தால், மனத்தின் அறிவு செயல்படும் வகை வேறு. அனைவரும் தனக்காக வாழவேண்டும்என அவன் நினைக்கின்றான். அது சுயநலமாகிறது. தான் பிறஜீவன்களிலிருப்பதை அறிந்தால் பரநலம் ஏற்படுகிறது.

இந்த நான்கு ஆன்மீகஅனுபவங்களையும் பெற்றவன் பிறரைத் தானாக உணர்ந்து, தன்னை இறைவனாக அறிந்து, பிறரையும் இறைவனாக அறியமுடிகிறது. பிறர் கை தன்னைத் தீண்டினால், அது இறைவன் தன்னைத் தீண்டுவதாகும் எனவும் புரியும். கழுத்தை நெறிக்கும் பிறனுடைய கையைத் தன் கையாக அறியும்பொழுது, தானே தனக்கு ஊறு செய்யவில்லைஎன்று தெரிகிறது. அதன் சூட்சுமம் விளங்குகிறது. அதுவும் இறைவனின் கரம்எனத் தெரிகிறது. எனவே அது இறைவனின் ஸ்பர்சத்திற்குரிய கருணை வெள்ளத்தை எழுப்புகிறது.

உலகம் ஓர் அற்புதக் காட்சி என்பதும், புறநிகழ்ச்சி இறைவன் எனவும், தானே இறைவன் என்பதும் அறிந்தவுடன்; ஐக்கியம்என்ற உணர்வெழுந்து ஆன்மா மலர்ந்து உடல் சிலிர்த்து உள்ளம் பூரித்து மனம் மகிழ்வெய்துகிறது.

இது சத்தியஜீவிய உணர்வு.

அலிப்பூர் ஜெயில் ஸ்ரீ அரவிந்தர் பெற்ற காட்சி இது. அவருக்குக் கைதிகள் கிருஷ்ணனாகக் காட்சி அளித்தார்கள். அதனால் அவர்மீது நடத்தப்பட்ட கேஸ் இறைவனின் செயலாக இருந்தது. வக்கீலுக்குத் தம் கேஸ் பற்றிய விவரங்களை அவர் கூற முன்வந்தபொழுது உள்ளேயிருந்து குரல் பேசாதே' என்றது.

கேஸ் இறைவனுடையது.

கேஸே இறைவன்.

விசாரணை இறைவனின்ஸ்பர்சம்.

தீர்ப்பு ஆண்டவனுடையது.

என்னால் விடமுடியாத பந்தங்களை விடுவிப்பதற்காக என்னை சிறைப்படுத்தினாய்என்று இறைவனிடம் பகவான் கூறுகிறார்.

உன் கழுத்தை நெறிக்கும் கைகளையும் இறைவனின் ஸ்பர்சமாக அனுபவிக்கவேண்டும் என்பது பகவான்வாக்கு. அவர் எழுதியவற்றைத் தத்துவமாகவோ, வியாக்கியானமாகவோ, உரை எழுதியதாகவோ எடுத்துக்கொள்ளாமல், அவை இறைவன் அருளிய சொற்கள், வேதவாக்குஎன ஒருவரால் எடுத்துக்கொள்ள முடியுமானால், அவருக்குப் பூரணயோகத்தின் ஞானம் பலித்ததாக அர்த்தம். ஸ்ரீ அரவிந்தம் என்றால்,

  • உலகில் ஆனந்தம் தவிர வேறில்லை.
  • தீமை, வலி என்பவை உலகில்லை, அது அகந்தையின் பார்வை.
  • பூரணயோகஞானதிருஷ்டிக்கு உலகம் ஓர் அற்புதக்காட்சி.

சாதாரண மனிதன் தவம் செய்ய விருப்பப்பட்டால், "தவம், உனக்கில்லை'' என்று பதில் வரும். அது முன்னாள் நிலைமை. முடியாட்சியைப் போன்றது. பணக்காரன் ஆட்சியில் ஏழைக்கு ஒன்றுமில்லை என்பதுடன் ஏழை தனக்குள்ள சௌகரியத்தின் மரியாதையை அனுபவிக்க பணக்காரன் விடமாட்டான். ஜாதித்திமிர், பணத்திமிர், ஏழைக்கு இருப்பதை அனுபவிக்க அனுமதிக்காது. மக்களாட்சியில் உரிமை எல்லோர்க்கும் உண்டு. எல்லா உரிமைகளும் எல்லோர்க்கும் உண்டு. திறமைக்குத் தகுந்தபலன் உண்டு. அன்னையின் யோகம், "யோகம், உனக்கில்லை'' என்று கூறாது. யோகம் அனைவருக்கும் உண்டு. பலன் பயிற்சியைப் பொருத்தது என்பது அன்னை சட்டம். ஸ்பர்சத்தின் இனிமையை நாமெல்லாம் காணமுடியுமாஎன்று கேட்டால், அன்பர் அதற்குரிய தீவிரத்தை

க்ஷணநேரம் பெறமுடியும். அந்தநேரம், அந்தஅளவில், ஸ்பர்சத்தை அறியமுடியும். நிலத்தில் பக்தர் வேலை செய்யும்பொழுது அன்னை நினைவைப் பூர்த்திசெய்ய முயன்று வெற்றி பெற்றார். இனி, நினைவில்லாமல் குனிவதோ, நிமிருவதோ இல்லைஎன்ற நிலை ஏற்பட்டது. நீர் இறைக்கும் இன்ஜின் பெல்ட் அறுந்து வேகமாக ஓடும்பொழுது அவர் முதுகில் அறைந்தது. இது வலி தாங்காது, உயிர் போகும். அவருக்கு அந்த வலி தெரியவில்லை, சற்று இதமாகவுமிருந்தது. அவ்வளவு வேகமாக அடித்தும் காயம் படவில்லை, இரத்தம் கட்டவில்லை. இது எல்லாஅன்பர்கட்கும் உரியது.

******

  1. ஒன்றை நாடினாலும், விழைந்தாலும் கழுத்தை நெறிக்கும் கைகளாகக் கடவுள் உன்னைத் தீண்டுகிறார்.

விருப்பின் விளைவு.

இறைவனின் போக்கே தம் போக்குஎன இருக்கும் அன்பருக்கு இறைவனின் ஸ்பர்சம் கருணைவெள்ளமாக அமைகிறது. இது கஷ்டம் தீர்வதாக அமைந்தால், "கருணைக்கடலே'' என துதி பாடுகிறோம்.

இறைவனின் பாதையிலிருந்து மாறியபின்னும் இறைவனின் ஸ்பர்சம் முன்போலவே அமைகிறது. என்றாலும் நம் பாதை மாறியதால் ஸ்பர்சம் கருணை வெள்ளமாக இருப்பதில்லை. நாம் விலகிப் போவது அதிகமானால், ஒரு கட்டத்தில் அவன் தீண்டுதல் தண்டனையாகவும், கழுத்தை நெறிப்பதாகவும் அமைகிறது. அவனோ, அவனது தீண்டுதலோ மாறுதல் இல்லை. நம் போக்கு மாறுகிறது. நீந்துவதில் சிறப்பானவன் கடல் நீச்சலடிக்க ஆர்வம் கொண்டால், கடல் அவனைத் தன் மடியிலிருத்தி முத்தமிடுகிறது. நீந்தத் தெரியாவிட்டால் கடல் அவனுக்கு மரணத்தைத் தருகிறது. கடல் தன் நிலையிலிருந்து மாறவில்லை, நம் நிலை மாறுகிறது.

 

நாம் ஒன்றை நாடும்பொழுது இறைவன் அதை நமக்கு அளிக்கின்றான். அது கிடைக்காத நேரம் பிரார்த்தனை செய்தால் பலிக்கிறது. சில சமயம் பிரார்த்தனையும் பலிப்பதில்லை. மீண்டும் அதை நாடினால் தடை ஏற்படுகிறது. தொடர்ந்து நாடினால் தண்டனை கிடைக்கிறது. பின்னும் மனம் அதிலிருந்தால் இறைவனின் ஸ்பர்சம் கழுத்தை நெறிப்பது போலிருக்கிறது.

களேபரம் செய்த தொழிலாளிகள் தாங்களே தங்கள்வீட்டைக் கொளுத்திவிட்டு, முதலாளிமீதும், ஆபீசர்கள்மீதும் போலீஸில் புகார் கொடுத்தார்கள். போலீஸ் அவர்களைக் கைதுசெய்ய புறப்படும் சமயம் முதலாளியும், ஆபீசர்களும் அங்குத் தங்கள் புகாரைக் கொடுப்பதற்காக வந்தனர். போலீஸ் அவர்களைக் கைதுசெய்ய திட்டமிட்ட சமயத்தில் அவர்களே வந்தது போலீஸின் எண்ணம் நிறைவேறுவதாக இருந்தது. இந்தஎண்ணம் தெரிந்திருந்தால் அவர்கள் அந்தப் பக்கம் வந்திருக்கமாட்டார்கள். ஏட்டு முதலாளிக்கு வேண்டியவர். "சார், சாப்பிடவேண்டும்என்று சொல்விட்டுப் போய்விடுங்கள்'' என்று அவர் கூறியதை முதலாளி புரிந்துகொண்டார், ஆபீசர்களுக்குப் புரியவில்லை. அவர் தப்பித்துக்கொண்டார், மற்றவர்களைக் கைதுசெய்தனர். நாம் எதை விட்டு விலகவேண்டுமோ அதையே நாடிச் சென்றால், அது விலங்காக மாறுகிறது.

யோகத்தையும், அன்னையையும், பகவானையும் ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் வாழ்வை அன்னையிடம் ஒப்படைத்தவர்கள். அதனால் அவர்கள் நாடவேண்டியதோ, தேடிப் போகவேண்டியதோ ஒன்றும் இல்லை. சாதாரண மனிதன் நாடுவதைச் சாதகன் நாடுவது தவறு. அதனால் இறைவனின் தீண்டுதல் கழுத்தை நெறிப்பதுபோல் தென்படுகிறது. அதையும் கருணையின் கடாட்சமாக அறிந்தால், அதுவும் கருணைவெள்ளமாக மாறும். அது முடிவான பக்குவம் உள்ளவருடைய நிலை.

இறைவன் என்றும் நம்மைத் தீண்டுகிறார்.

நம் நிலைக்கேற்ப அது நமக்குத் தெரிகிறது.

பரமாத்மாவே ஜீவாத்மா என்பது ஸ்ரீ அரவிந்தம். ஜீவாத்மா அகந்தையால் சூழப்பட்டுள்ளது. அகந்தையின் வளர்ச்சிக்குள்ள பருவங்கள் பல. அவை:

1) தன் கூட்டுக்குள் வளரும் அகந்தை. இதன் பாகங்கள் ஏராளம். 3 என்றோ, 6 என்றோ, இரண்டையும் இணைத்து 18 என்றோ கூறலாம். நாம் 3 நிலைகளைமட்டும் கருதுவோம்.

  • காரியங்களைச் செய்யக் கற்றுக்கொண்டு அகந்தை வளர்வது.
  • அடுத்தவர்களுடன் பழகக் கற்பதால் அகந்தை வளர்வது.
  • விஷயங்கள் புரிவதால் மனத்தில் அகந்தை வளர்வது.

2) தன் கூட்டைவிட்டு வெளியேயுள்ளவற்றின் உதவியால் அகந்தை வளரும். அகந்தையைக் கடப்பதால்,

  • வளரும் திறமை.
  • எழும் பழக்கம்.
  • விளங்கும் கருத்துகளை அகந்தை மீண்டும் தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முயல்வது.

3) ஆத்ம விழிப்பு ஏற்படுவதால்,

  • காரியங்கள் கலை நுணுக்கத்துடன் அமைவது.
  • கலைகளில் திறமை வெளிப்படுவது.
  • தத்துவம், விஞ்ஞானத்தெளிவு வருவது ஆகியவற்றை மீண்டும் அகந்தை தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது.

ஸ்ரீமத் பகவத்கீதையின் முக்கிய கட்டங்கள் :

  • பலனை நம்பாதே.
  • எதை ஆர்வமாக நாடினாலும் அதை மனிதன் சாதிப்பான்.

  • ஆசையை அழித்துவிடு.
  • அகந்தையை களைந்துவிடு.
  • சர்வதர்மங்களையும் மறந்து சரணடைந்து மோட்சத்தை நாடு.

ஆத்ம விழிப்பு ஏற்படும்வரை அகந்தையின் வளர்ச்சிக்குப் பெரும்போராட்டமில்லை. அது உள்ள சூழ்நிலையில் அதிகாரத்திற்கு எளிமையாகக் கட்டுப்படும். அதனால் சிரமம் எழுவதில்லை. ஆத்ம விழிப்பு ஏற்பட்டபின் ஆண்டவன் அகந்தையான மனிதனை நாடுகிறான். மனிதன் நல்லுணர்வோடிருந்தால் ஆண்டவனுடைய ஸ்பர்சம் பரவசமாகவும், கெட்டஎண்ணத்துடனிருந்தால் கொடூரமாகவும், ஆசையோடு செயல்பட்டால் அவஸ்தையாகவும், அன்போடு நடந்தால் இனிமையாகவும் வருகிறது. அதனால் ஸ்ரீ அரவிந்தம் முடிவாகக் கூறுவது,

  • மனிதன் அகந்தையை விடுமுன் ஆன்மவிழிப்புப் பெறுகிறான்.
  • அகந்தையிருப்பதால் இறைவனின்ஸ்பர்சம் இடையூறாக இருக்கிறது.
  • ஆர்வம் அதிகமானால் கடுமை அதிகமாகும்.
  • எப்பொழுது கடுமை கொடுமையாகிறதோ அதுவே அகந்தைக்கு அதிர்ஷ்டமான நேரம்.

மேற்சொன்ன கருத்து இதன் ஓர் முக்கியப் பகுதி. அதை விருப்பத்தின் விளைவு என்கிறோம்.

*******

  1. நாடுவதை நிறுத்தி பார்வையை உள்ளே செலுத்தினால் வாழ்வு அற்புத உணர்வாக அணைக்கும்.

உள்நோக்கின் அற்புதம்.

நம் பார்வை உள்ளே செல்வதில்லை. மனம் புறவிஷயங்களை நாடுவதால் பார்வை வெளிச் செல்கிறது. பார்வை மனத்தின் பகுதி. எனவே மனம்போனவழி பார்வை செல்கிறது. வெளிச்செல்லும் பார்வைக்கு சக்தி குறையும். உட்செல்லும் பார்வைக்கு சக்தி அதிகரிக்கும். வெளியே சென்றால் பிரச்சினை எழும், தெளிவு குறையும். உட்சென்றால் பிரச்சினைகள் தீரும், தெளிவு நிறையும். நிறைந்ததெளிவு செறிவு பெற்றால் உணர்வுமயமாகி, உட்ஜோதியைத் தொடும். ஜோதி உணர்வை அற்புதமாக்கும். உணர்வின் ஜோதிக்கு வாழ்வு கட்டுப்படும். கட்டுப்படாத வாழ்வு தொந்தரவு செய்யும். கட்டுப்பட்ட வாழ்வு ஆதரவு அளித்து, அணைக்கும்.

உடலின் வேதனை பரவி தாங்கமுடியாமல் துடிக்கும்பொழுது, அன்னைக்கு வேண்டிக்கொண்டால் வலிபோகும் என்றொருவர் சொல்லியதை மனம் ஏற்றது. பிரார்த்தனை செய்ய நோயாளி சம்மதித்தார். அன்னை தம் கையால் உடலை வருடிவிடுவதாக நினைத்து பிரார்த்தனை செய்வது சிறப்பு என்றார் வந்தவர். அப்படியே செய்தார் நோயாளி. கொஞ்ச நேரத்தில் கண்மூடி அயர்ந்து தூங்கிவிட்டார். உணர்வு சிதறும்பொழுது வலி ஏற்படுகிறது. உணர்வு வெளிச்செல்லும்பொழுது வலி எனும் பிரச்சினையை உண்டு பண்ணுகிறது. உணர்வு உள்நோக்கிச் சென்றால், பிரச்சினை தீரும், வலி  போகும் என்பது விளக்கம். அந்த விளக்கம் வலிபடும் நோயாளிக்குப் பலன் தரப்போவதில்லை. உணர்வு உள்நோக்கிச் செல்லவேண்டும் என்ற கருத்தை, அன்னைக்குப் பிரார்த்தனை செய் என்று மாற்றிச் சொன்னார். அன்னையை மனம் நினைத்தால் மனம் வலியிருந்து விலகும், வெளிச் செல்லாது. அன்னை உள்ளேயிருக்குமல்லவா? அன்னையை நினைக்க உணர்வு உட்செல்கிறது. உட்சென்ற உணர்வு அன்னையில் குவிகிறது. அன்னை உடலை வருடிவிடுவதாக நினைக்கும்பொழுது, வலிஎனும் உணர்வு அன்னை உணர்வோடு தொடர்புகொண்டு, அன்னை மையத்தை நோக்கிச் சென்று குவிகின்றன. உணர்வின் செறிவு அன்னை ஜீவியத்தின் செறிவை எட்டும்பொழுது, அற்புத உணர்வேற்படுகிறது.

வாழ்வில் நம் உணர்வு வலியானபின் வலிமையற்றுள்ளது. வலிமையற்ற உணர்வு வெளிச்செல்லும்பொழுது, இருக்கும் வலிமையும் குறையும், வலி அதிகமாகும். வாழ்வின் உணர்வுக்கு வலிமை அதிகமாகவும், நம் உணர்வின் வலிமை குறைவாகவும் இருப்பதால் நாம் வலிபடுகிறோம். பிரார்த்தனையாலும், அன்னை நினைவாலும், அன்னை உடல் வலியுள்ள இடத்தை வருடிக் கொடுப்பதாக நினைப்பதாலும், வெளிச்செல்லும் உணர்வு உள்நோக்கிச் செல்கிறது.

உள்நோக்கி செல்லும் உணர்வு பிரச்சினையை அழிக்கும். பிரச்சினை வயானால், அது வலியைப் போக்கும். உணர்வு அன்னையில் சேர்ந்தால் வலிமை பெருகும். வலிமையுள்ள உணர்வுக்கு அற்புதம் உண்டு. அதனால் அற்புதஉணர்வு எழும். அற்புதஉணர்வு தன் வலிமையால் வாழ்வைக் கட்டுப்படுத்தும். கட்டுப்பட்டவாழ்வு அன்புக்குரிய ஆதரவைத் தரும். வாழ்வு அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஓர் அடுக்கில் உள்ள அற்புதம் கீழே சென்று பார்த்தால் வெறுங்காட்சியாகத் தெரிகிறது. மேலும் ஒருபடி கீழே போனால் வெறுங்காட்சியாக இருந்தது, கடுமையாகத் தெரியும். அற்புதத்திலிருந்து கீழே வருவதற்குப் பதிலாக ஒருபடி மேலேபோய்ப் பார்த்தால் பெரிய அற்புதமாக இருக்கும். தொடர்ந்து மேலே போனால் காட்சி மறையும், உணர்வு மிஞ்சும். தொடர்ந்தால் உணர்வுமிருக்காது. இது சிருஷ்டிக்குரிய நிலைகள். தெய்வ வழிபாட்டில் இதுபோன்ற நிலைகளைக் காணலாம். விக்ரஹ வழிபாடு ஒரு நிலை. அதன்கீழ் கிராமதேவதைஎனக் காளி' வழிபாடு பலியுடன் - ஆடு, கோழி பலி கொடுப்பது - நடக்கிறது. காட்டேரி வழிபாடு அதன் கீழுள்ளது. விக்ரஹ வழிபாட்டைக் கடந்து மேலே சென்றால் தத்துவம், பிரம்மம்எனக் கூறுகிறது. பிரம்மத்திலும் இருவகைகளுண்டு. அவற்றைக் கடந்த புருஷன், புருஷோத்தமன்

உண்டு. முடிவாகத் துரியநிலை எனும் சச்சிதானந்தம். பிரம்மம் அதையும் கடந்தது.

புறத்தை நோக்கிப் போவதும், அகத்துள் செல்வதும் அடுத்த அடுத்த கட்டங்கள். புறத்தில் அர்த்தமற்றதாகத் தெரிபவை அகத்தில் அற்புதமாகத் தெரியும்.

*****

  1. உள்ளே போவதைவிட உள்ளே அன்னையைத் தேடுதல் நன்று. ஆன்மா அன்னையை உள்ளே தேடுவது ஆனந்தம் Bliss . அறிவாலும், செயலாலும் அன்னையை அகத்தில் தேடுவது சிருஷ்டியின் ஆனந்தம் (delight).

சிருஷ்டியின் ஆனந்தம்.

மேல்மனம் வாழ்க்கைக்குரியது. இது சிறியது, காலத்திற்குக் கட்டுப்பட்டது. அறியாமையாலானது, அகந்தைக்குரியது. உள்ளே போனால் காலத்தின் பிடி தளரும், அறியாமை குறையும், அகந்தை விலகும். உள்ளே போகாமல் எந்தயோகமும் செய்யமுடியாது. பூரணயோகத்திலும் உள்ளே போவது முதற்படி. போய் அங்கு சைத்தியப்புருஷனைக் காணவேண்டும். இது பெரிய உண்மை; பொது உண்மை. உலகத்தைச் சுற்றிவந்தால் மாம்பழம் தருகிறேன் என்றால், உலகத்தைச் சுற்றிவருவது முறை. அதைவிட்டு பெற்றோரைச் சுற்றிவருவது அதற்குச் சமம் என்பதும் உண்மை. அதுபோன்ற உண்மையை மேலே எழுதினேன்.

அன்னையை வாழ்வில் காண்பது சாதகனுக்கும், பக்தனுக்கும் உள்ள பொதுவிதி. ஏழையில் ஆண்டவனைக் காண்பது, நேரில் ஆண்டவனைக் காண்பதைவிடச் சிறப்பு. வாழ்வில் அன்னை முறைகளைக் கடைப்பிடிப்பது சிரமம். அன்னையைக் காண்பது அதைவிடச் சிரமம். பக்குவமான பக்தியுள்ளவர்க்கு முறைகளைவிட அன்னையைக் காண்பது எளிது. ஆண்டவனைக் காண முயன்ற

சக்கிக்கு நாளைக்கு வருகிறேன் என்றார் ஆண்டவன். நாள் முழுவதும் கடந்தபின் அவன் ஏமாந்தபொழுது, "நான் பிச்சைக்காரனாகவும், உதவி வேண்டும் பெண்ணாகவும், கொடுமைப்படும் சிறுவனாகவும் வந்தேன். உன் உதவி பெற்றேன். அதில் நீ பெற்ற தரிசனம் ஆண்டவன் தரிசனமல்லவா?'' என்றார் ஆண்டவன் என்பது டால்ஸ்டாய் எழுதிய கதை. வாழ்வில் ஆண்டவனைக் கண்டவன் சக்கிலி.

.

உள்ளேபோய் மனோமயப்புருஷனை நாடுதல், நிர்வாணம் பெறுதல், சைத்தியப்புருஷனைக் காண்பதற்குப் பதிலாக இந்தச் சக்கிலிபோல உள்ளே அன்னையை மட்டும் தேடினால் நாம் நாடும் சைத்தியப்புருஷன் அன்னையாகக் காட்சி அளிப்பான். சைத்தியப் புருஷனைக் காண்பது யோகம். அன்னையை அதில் காண்பது யோக சித்தி.

ஆன்மா நிஷ்டையில் உள்ளே போனால் அன்னையைக் காணலாம். அது Bliss ஆனந்தம் தரும். அறிவாலும், செயலாலும் அன்னையை அகத்தில் தேடஉதவுவது சமர்ப்பணம். சமர்ப்பணத்தை அன்னை ஏற்கவேண்டும்என விழைந்தால், அன்னை அதை ஏற்க முன்வந்து ஏற்றால், அன்னை நம் சமர்ப்பணத்தை ஏற்கும் நேரம் ஆனந்தம் (bliss), சிருஷ்டியின் ஆனந்தமாக (delight) மாறும். ஆனந்தத்தை பணத்திற்கு ஒப்பிட்டால், சிருஷ்டியின் ஆனந்தத்தை பணம் தரும் பயனுக்கு - சாப்பாடு, உடை, வசதி, பிரயாணம் - ஒப்பிடலாம். அது ஒருபடி உயர்ந்தது. பூரணயோகத்திற்குரியது.

  • உள்ளே போவது, புறத்தில் தேடுவதைவிட உயர்ந்தது.
  • அதனினும் நன்று, உள்ளே அன்னையைத் தேடுவது.
  • நாம் உள்ளே போவதைவிட ஆன்மா உள்ளே போக முயல்வது சிறப்பு.
  • உள்ளே போன ஆன்மா, அதற்குரிய ஆன்மாவைத் தேடாமல், அன்னையைத் தேடுவது அடுத்தக் கட்டம்.

  • அப்படி அன்னையை உள்ளே தேட ஆன்மாவாலும் முடியும், அறிவாலும் முடியும், செயலாலும் முடியும்.
  • அத்தேடலுக்குரிய பலன் delight சிருஷ்டியின் ஆனந்தம்.

யோகங்கள் பரமானந்தம், சத்தியானந்தம் போன்ற ஆனந்தங்களைக் குறிக்கின்றன. அவை குறிப்பது சச்சிதானந்தத்தில் உள்ள ஆனந்தம். அது பூவுலகுக்கு வாராது. வந்தால் நிலைக்காது. அதை நிலைக்கச் செய்வது திருவுருமாறிய ஜடம். ஜடம் திருவுருமாறியபின் ஆனந்தம் (Bliss) அதனுள் வெளிப்பட்டால் அது சிருஷ்டியில் ஆனந்தம் (delight)ஆக மாறுகிறது. ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தில்தான் இந்த ஆனந்தம் பேசப்படுகிறது. ஆனந்தத்திற்கு சிருஷ்டியுடைய ஜீவன் திருவுருமாறி இடம் அளித்தால் சிருஷ்டியில் ஞானம், அஞ்ஞானத்திலிருந்து எழுந்து பேரானந்தம் வெளிப்படும். இதுவே சிருஷ்டியில் இறைவன் தேடும் ஆனந்தம். இதற்காக ஏற்பட்டதே லீலை. சிருஷ்டிக்கே காரணம் இது என்கிறோம்.

******

  1. இது ஒரு முயற்சி, முடிவில் சிருஷ்டியின் ஆனந்தமாகும். இடையில் ஆனந்தம் ஏற்படும்.

ஆனந்தத்தில் முடியும் முயற்சி.

மனிதனுக்குப் பெரிய அதிர்ஷ்டம் வந்துவிட்டால், பெரிய பதவி கிடைத்துவிட்டால், இலட்சியமானஅன்பு கிடைத்துவிட்டதுஎன்று நினைத்துவிட்டால், மனம் வாழ்வின் அன்றாடவழக்கங்களை விட்டுப் புதியதை மனம் மீண்டும் மீண்டும் நினைக்கும். உடன் உள்ளவர்கள், "அவர் மனதில் இப்பொழுதெல்லாம் நாம் இல்லை. வாழ்வு வந்துவிட்டது. மனம் அதிலேயே இருக்கிறது'' என்று நினைப்பார்கள். அதற்கடுத்த கட்டத்தில் மனம் அதையும் நினைக்கும் நிலையில்லை என்றிருக்கும். தன்னை மறந்து, பரவசப்பட்ட நிலையில் செயலிழந்து, காற்றில் மிதப்பார்கள். வாழ்வில் பலருக்குக் கிடைக்கும் ஆனந்த

அனுபவம் இது. அன்னையின் ஸ்பரிசத்தை முதல் ஆன்மாவில் கண்டவர்கள் இதுபோன்று உணர்வதுண்டு. சிலருக்குச் சிறுஅளவில் பிறகு நீடிக்கும். பலருக்கு நினைவாக நீடிக்கும்.

மனத்தை வாழ்வின் செயல்களிலிருந்து வலிய விலக்கி அன்னையை நாடினால், எண்ணம் நம் முயற்சியை மீறி ஆட்கொள்வது தெரியும். அதை மீறி அன்னையை நாடினால், முயற்சியே முதல் ஓரளவு ஆனந்தமாக இருக்கும். நாம் விலக்கும் எண்ணஅலைகள் விலகாதவரை முயற்சி சிரமமாக இருக்கும். விலகினால் இதமாக இருக்கும். விலக்கும்பொழுது அவை கட்டுப்பட்டு விலகினால், இன்பமாக அன்னைநினைவு உள்ளிருந்து எழுவதைக் காணலாம். அதைச் சில நிமிஷங்களுக்குமேல் தொடர்வது சிரமம். தொடர்ந்தால் முயற்சி இன்பநிலைக்கு அழைத்துச் செல்லும். நெடுநாளில் இம்முயற்சி நிச்சயப்பலனை அளித்து நெடுநேரம் நீடிக்கும்நிலை ஏற்பட்டால், நினைவிலிருந்து அன்னைக்கு நாம் செல்ல முயலலாம்.

நினைவிலும் பலநிலைகள் உண்டு. நாமே முயன்று சொல்லால் நினைவுபடுத்துவது, சொல் தானே எழுவது, சொல் பின்னணிக்குப் போய் நினைவு எழுவது, நினைவு உணர்வாக மாறுவது, உணர்வு உருவமாகவே மாறுவது, அவற்றை எல்லாம் நாம் அழைப்பது, அவை தாமே எழுவதுஎனப் பல்வேறு நிலைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டமாக முன்னேறுதல், தவமுயற்சி; இது முழு யோகமாகும். நினைவுக்கு அடுத்தது உணர்வு. அதற்கடுத்தது செயல்.

ஒவ்வொன்றிலும் அத்தனைக் கட்டங்கள் உள்ளன. நினைவையும், உணர்வையும், செயலையும் கடந்தபொழுது, அன்னை நிதர்சனமாக உள்ளே எழுவார். அது ஒளிமயமாக இருக்கும். அறிவுக்குரிய ஒளி பிரகாசமாகவும், ஆன்மாவுக்குரிய ஒளி ஜோதியாகவும் இருக்கும். வெண்ணிற ஒளி அன்னைக்குரியது. சிவந்த நிறம் உடலைக் குறிப்பது. வயலெட் உணர்வையும், மஞ்சள் மனத்தையும் காட்டும். வைரஒளி அன்னைக்கேயுரிய தனிச் சிறப்பான ஒளி. நீலம் கிருஷ்ணனுக்கும்,

வெண்மை கலந்த நீலம் ஸ்ரீ அரவிந்தருக்கும் உரியன. பொன்னிறம் கடைசியொளி. அது சத்தியஜீவிய ஒளி. நம் மனநிலைக்கும், ஆர்வநிலைக்கும், சூழலுக்கும், முயற்சியின்தரத்திற்கும் ஏற்ப அன்னையுருவம் வெவ்வேறு உருவம் தாங்கி உள்ளே எழும். அன்னையை நாடினால், அவர் நம்மை நாடுவார். அரை க்ஷணமும் நாடுவார், அகலாமலுமிருப்பார். இம்முயற்சி முடிவில் ஆனந்தப் பெருக்கை அளிக்கும்.

அன்னையை அகத்தில் தேடுவது ஒரு முயற்சி. முடிவில் சிருஷ்டியே ஆனந்தமாகும். மனிதன் புறத்தில் வாழ்கிறான், புறத்தால் வாழ்கிறான். அதில் வெற்றி, தோல்வியுண்டு. ஒன்று மற்றதாக மாறும் நிலையும் உண்டு. அகம் துறவிக்குரியது. துறவறத்தில், வாழ்வின் வெற்றியோ தோல்வியோ எழுவதில்லை. சுத்தபிரம்மமும் உள்ளே இருப்பதால், அகவாழ்வில் அதைக் காணமுடியும். அதனுள் சென்று வாழ முடியும்.

ஸ்ரீ அரவிந்தர் கூறுவதும் பிரம்மம். அது பிரகிருதியுள் உள்ள பிரம்மம். அதுவும் அகத்தில் உண்டு.

  • மனிதனுக்குரியது புறம், அகமில்லை.
  • புறத்தில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும்.
  • அகம் துறவிக்குரியது.
  • ஆழ்ந்த சமாதியைத் தரும் பிரம்ம நிஷ்டைக்குரியது அகம்.
  • மனிதனுக்குரிய அகம், சந்தோஷம், கவலையாகும்.
  • மனிதனுக்கு அகத்துள் ஆன்மீகத்தை மரபு தரவில்லை.
  • ஸ்ரீ அரவிந்தர் அகத்தை மனிதனுக்குத் தருகிறார்.
  • துறவியின் அகத்தை, பூரணப்படுத்தி மனிதனுக்கு ஸ்ரீ அரவிந்தம் தருகிறது.
  • வாழ்விலுள்ள பிரம்மம் - Being of the Becoming- அகத்திலும் உள்ளது. அதுவே ஸ்ரீ அரவிந்தத்திற்குரியது, இல்லறத்திற்குத் துறவறத்தின் தூய்மையைத் தருவது. தூய்மையுடன் வலிமையையும் தருவது.

********



book | by Dr. Radut