Skip to Content

பகுதி 14

  • சிறியது, பெரியது, சௌகரியமானது, சந்தோஷம் தரக்கூடியது,

ஆகிய அனைத்தும் ஆரம்பத்திலும், பின்னர் நடைமுறையிலும் தொடர்ந்து தவறாது நிகழ்ச்சிகள்மூலம் நமக்குச் செய்தி அளிப்பது சகுனம் எனப்படும்.

நாலு வாலிபர்கள் சேர்ந்து அவர்களுடன் வேலை செய்யும் பெண்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபொழுது ஒரு பெண்ணைப் பற்றி அனைவரும் அபிப்பிராயம் சொன்னார்கள். ஒருவருக்குமட்டும் அவள் யார் என்று தெரியவில்லை. மறுநாள் அவளைக் கவனித்து அபிப்பிராயம் சொல்லும்படிக் கேட்டார்கள். மறுநாள் அவளை அவர் கவனித்தார், "விதவையின் தோற்றம்'' உள்ளவள் என்றார். மற்றவர்கட்கு வியப்பாக இருந்தது. பிறகு அவரே அவளைத் திருமணம் செய்யும்படி அமைந்தது. அவளால் அவர் உயிருக்கு ஆபத்து என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தபொழுது தாம் பல ஆண்டுகட்குமுன் சொன்ன சொல் அவருக்கு நினைவு வந்தது. ஆயுள் கெட்டியாக இருந்ததால், மரணம் வரவில்லை, பொய்யான மரணச் செய்தி வந்து போயிற்று, வருமானம் போயிற்று, உயிரின் இலட்சணமான உணர்வு அழிந்தது. அவர் நினைவு உண்மை, வாழ்வு நிதர்சனப்படுத்தியது. வயது வந்த பெண் சற்று நிதானமற்றவள் வழிதவறிப் போய் காணவில்லை. அவளைப் பல இடங்களிலும் தேடினார்கள். இரவில் 11 மணிக்கு தெருத்தெருவாகத் தேடி அலைந்து ஓரிடமாகப் பாதையோரம் உட்கார்ந்தபொழுது தெரிந்தவர் ஒருவர் வந்து விசாரித்து "என்னிடம் 50,000 ரூபாய் உள்ளது. கடனாக நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்களா?'' என்று கேட்டது வாழ்வில் நாம் அறியாத ஒன்று. சில ஆண்டுகட்குப்பின் அவர் பணத்தைத் திருப்பிக் கேட்க நினைத்து வாங்கியவரைச் சந்திக்க வந்தவர், அவர் போயிருந்த இடத்தின் எதிரில் வந்து காத்திருந்து பணம் வேண்டும்என நடுரோட்டில் கேட்கும்பொழுது மணி இரவு 11! அன்றைய ஆரம்பம், இன்றைய நிகழ்ச்சிக்குரிய சகுனம்.

சீனுவாச ராமானுஜம் பரீட்சையில் பெயிலானார். பிற்காலத்தில் உலகப் பிரசித்தி பெற்றார். பெயிலானது எதைக் குறிக்கிறது? அம்சம் பெரியதாகவும் அந்தஸ்து சிறியதாகவுமிருந்தால் உள்ள நிலையில் மற்றவர்கள் சாதிப்பதையும் சமயத்தில் சாதிக்க முடிவதில்லை. கணிதத்தில் மனம் முழுவதும் லயித்ததால் அவரால் ஆங்கிலத்தில் மனத்தைச் செலுத்த முடியவில்லை. அதனால் அவர் விலக்காக (exception) அமைந்தார்.

திருமண ஏற்பாட்டுக்குச் சொந்த ஊரைவிட்டு அவசரமாகப் புறப்பட்டவர், தாம் போகவேண்டிய ஊருக்குள்ள பஸ்ஸை ஒரு திருமணத்திற்காக ஏற்பாடு செய்துவிட்டதை அறிந்து, தடையாக இருப்பதை உணர்ந்து, பஸ் புரோக்கருடன் சண்டை போட்டார். மேலும் அவர் அறிந்தது பஸ் அங்கிருந்து காலியாகப் புறப்பட்டு, ஒரு கிராமத்திற்குப் போய் நிரம்பிப் போகும்என்றும் அறிந்தார். தாம் போகும் வேலை தம் திருமணம், அது தகறாரான நிலையில் உள்ளது. கடைசி பஸ்ஸில் டிக்கட் இல்லை. அதில் போகும் அத்தனைப் பேரும் திருமணத்திற்குப் போகிறார்கள். அதுவும் காலியாகப் புறப்படுகிறது. அது நிறையும் இடம் தம் சொந்தக் கிராமம்! அத்தனையும் நினைவிருந்தது, எதுவும் புரியவில்லை. திருமணம் ஆயிற்று, அத்தனையும் புரிந்தது. திருமணத்தை உறவினர் அத்தனைப் பேரும் எதிர்த்தனர். காலியான பஸ்ஸில் இடம் இல்லைஎன புரோக்கர் சொல்கிறான். "காலி''யான சம்பந்தம், முழு கிராக்கி செய்தார்கள். சொந்த ஊர்வரைதான் போகலாம்என்ற நிலை திருமணம் முடிந்தபின் சொந்தத்தில்தான் உறவுள்ளது. அதைத் தாண்டிய உறவு காலி என்பது விளங்கிற்று. அன்று புரோக்கருடன் அவர் போட்ட சண்டை திருமணத்திற்கு முன்னால் ஆரம்பித்து வாழ்நாள் முழுவதும் அவர் போட்ட "சண்டை''களைக் குறித்தது!

பெரிய திட்டத்தில் பொறுப்பேற்க அழைத்தபொழுது நேரம் இராகுகாலம், ஏற்றார். திட்டத்தையும், பொறுப்பையும் கொடுத்தார்கள். பாங்கில் பணம் வாங்கும் உரிமை power of attorney கொடுக்கவில்லை. இராகு காலம் பவர் ஆப் அட்டர்னியை விழுங்கியது.

பவரைப் பெற்றவர், "நான் பேங்கில் கையெழுத்துப் போட்டுப் பணம் வாங்கமாட்டேன். உனக்கு எல்லாச் சுதந்திரங்களும் தருகிறேன்'' என்றார். பணமில்லாத சுதந்திரத்தை என்ன செய்வது? இராகுகாலம் தன் கடுமையைக் காட்டுகிறது. நடந்ததை அன்னையிடம் சமர்ப்பணம் செய்தார். 4 மாதமாயிற்று. பாங்க் தானே முன்வந்து பணம் தருகிறது. பவர் இல்லாமல் எப்படி வாங்குவது! "நீங்கள் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் பவருக்குரிய கையெழுத்தைப் பெறுகிறோம்'' என்றது பேங்க். பாங்கில் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கமாட்டேன் என்றவர், எந்தக் கையெழுத்தும் இல்லாமல் சொந்தப் பணத்தை பாங்க் கொடுத்ததைப்போல் 4 மடங்கு கொடுத்தார். இராகுகாலம் கெட்டசகுனம். பவரை விழுங்கியது. திட்டத்தில் அன்னையிருப்பதால் எவரும் முறை தவறிப் பேசக்கூடாது. பேசினால் மாறாக, நேர் எதிர்மாறான பலன் வரும் என்பது அன்னைச் சட்டம். அதனால் அவர் தாமே பணம் தர வேண்டியதாகப் போயிற்று.

பாஸ் செய்ய முடியாதவனுக்கு முதல் மார்க் வாங்கிக் கொடுத்ததற்குப் பதிலாக அவன் செய்த சேவை கூலியைப் பெற்று பத்தில் ஒரு பாகம் வேலை செய்தான். அடுத்த 30 வருஷமாகப் பெற்ற பெரிய சொத்தில் கூலி பெற்றவர்கள் பத்தில் ஒரு பாகம் வேலை செய்தார்கள். சொத்து அந்தப் பையன் ஊரில் வாங்கும்படி அமைந்தது!

மனிதன் தோற்றத்தைப் பார்ப்பவன். அதுவும் இன்று கண்ணில் படுவதைமட்டும் கணக்குப் போடுபவன். சமூகம் அதன் கணக்குப் போடும். காலம் சமூகத்தைக் கடந்தது. இறைவன் காலத்திற்கும் அகப்படாதவன். "வெற்றி'' நிச்சயம் உண்டுஎன நான் கூறுவது இறைவன் கணக்குப்படி "வெற்றி''.

ஸ்ரீ அரவிந்தம் இறைவன் என்று கூறும்பொழுது மேல்உலகில் உள்ள இறைவனைக் கூறவில்லை, நம்முள் மறைந்துள்ள ஜீவாத்மாவையும் குறிப்பிடவில்லை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறும் இறைவன் நம்முள்ளிருந்து, நம் வாழ்வில் வெளிப்பட்டுச்

 

செயல்படும் இறைவனைக் குறிப்பிடுகிறார். அவருக்கு வெற்றி தவிர வேறெதுவும் தெரியாது.

  • சகுனத்தின் சட்டங்கள் எளியவை.
  • நல்லசகுனம் நல்லமுடிவையும், கெட்டசகுனம் கெட்ட முடிவையும் குறிக்கும்.
  • விலக்கான நேரங்களில் சகுனம் விலக்காகச் செயல்படும்.
  • இவையெல்லாம் வாழ்வில் உள்ள மனிதனுக்குரியவை.
  • துறவிக்கு வாழ்வில்லை. ஆனால் சட்டம் இல்லாமலில்லை.
  • துறவியின் சட்டத்தை நாம் ஆராயாவிட்டாலும், நாம் கூறும் சட்டமும் விலக்கும் துறவிக்குரியதுமில்லை.
  • துறவிக்கில்லாத சட்டம் மேல்உலகிலுள்ள இறைவனுக்கும் இல்லை.
  • நம் சட்டம் இறைவனுக்குரியது, ஆனால் வாழ்விலுள்ள இறைவனுக்கு உரியது.
  • நாம் அதை இல்லறத்தில் துறவறம் என்கிறோம்.
  • அங்கு இறைவன் என்பது சைத்தியப்புருஷனாகும்.

நான் அடிக்கடி கூறும் உதாரணத்தை மீண்டும் இங்குக் குறிப்பிடுகிறேன். அன்னைக்கு ஆசிரம வருஷச் செலவை சம்பாதித்துக் கொடுக்க ஏற்பட்ட திட்டம், அன்று அதைப்போல் 32 மடங்கு வருமானத்தைக் காட்டியது. நிலமும், பணமும், நீரும், டெக்னாலஜியும், ஊரும், உதவியும் ஆறாகப் பெருகியது. மனம் முனைப்பாகி 32 மடங்கைச் சுருக்கி 1இல் 1/10 மடங்காக்கியது. சேவை அழும்பாயிற்று, தலைமை தலைக்கிறுக்காயிற்று, உதவி உபத்திரவமாயிற்று, இந்தச் சுருக்கமான வருமானமும் சுடுகாடாயிற்று. ஆரம்பித்த அன்பரின் சமர்ப்பணம் மட்டும் வளர்ந்தது. அத்தனையையும் கடந்து 12 மாதம் கழித்து வருமானமாக

வரவேண்டிய 1/10 பாகம் காணிக்கையாக வந்தது. வேறுவகையில் அன்னைக்கு 3/10 பாகம் "காணிக்கை''யாக வந்தது. இது "வெற்றி''.

********

  1. ஞானம் முழுமை பெற்று கூர்மையானால் செயலை நிர்ணயிப்பது எது எனத் தெரியும். ஹாம்லெட், சிம்போசியம் எப்படி எழுந்தன எனத் தெரிந்தால் ஞானம் கூர்மை பெறும்.

இலக்கியச் சிறப்பறியும் ஞானம்.

விஞ்ஞானம் உலகை வளமாக்கியுள்ளது. பொருள்கள் எப்படிச் செய்யப்படுகின்றனஎன அறிவதால், விஞ்ஞானியால் அவற்றைச் செய்ய முடிகிறது. செயற்கையாகப் பொருள்களைக் கண்டுபிடிப்பதாலும், இயற்கையாகவுள்ள பொருள்களின் தன்மையை அறிவதாலும் நாம் வசதியாகவும், வளமாகவும் வாழ்கிறோம். செடியில் தான்யம் விளைவதைக் கண்டுபிடித்ததால், விவசாயம் ஏற்பட்டது. கல்லைச் சுத்தியலாகப் பயன்படுத்த முடியும் என்று ஆரம்பித்து இன்று பல்வேறு சுத்திகளை டெக்னாலஜி கண்டுள்ளது. எழுத்தாணி, பேனா, துணி, பேப்பர், வீடு கட்டுவது போன்ற இலட்சக்கணக்கான பொருள்களைக் கண்டுபிடித்துள்ளோம். வயிற்றிலுள்ள பிள்ளை ஆணா, பெண்ணா என்று கண்டு பிடித்துவிடுவான்என்று அன்று கூறியது இன்று உண்மையாகி விட்டது.

விஞ்ஞானம் உலகில் எப்படி மரம் வளர்கிறதுஎனக் கண்டுபிடித்துவிட்டது, ஏன் வளருகிறதுஎனக் காணவில்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

எப்படி வைரம், முத்து, செடி, விதை வளர்கின்றன என விஞ்ஞானம் கண்டுபிடித்ததால் நம்மால் வைரத்தையும், முத்தையும்

செய்ய முடிகிறது. செடியையும், விதையையும் சிறப்பிக்க முடிகிறது. ஏன் அவை உற்பத்தியாகின்றனஎனக் கண்டுபிடித்தால் வாழ்வுக்கு நாம் அடிமைப்படுவதற்குப் பதிலாக, நமக்கு வாழ்வு கட்டுப்படும்.

விதையிலிருந்து செடி எப்படி வருகிறதுஎன விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் ஏன்? என்ற கேள்விக்கு அங்குப் பதில்லை. உலகம் விதையையும் விளக்கவல்லது. உலகத்தை இறைவன் விளக்குகிறார்என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

அந்த விளக்கம் ஆத்மஞானமாகும்.

Cosmic Determinates என்ற அத்தியாயத்தில் Life Divineஇல் ஸ்ரீ அரவிந்தர் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுகிறார். அவர் கூறும் பதில்:

"இறைவன் திருவுள்ளம்'' என்பதே.

நம் எண்ணமும், இறைவனின் திருவுள்ளமும் இணையும் பொழுது நமக்குத் திருவுள்ளம் புரியும். அதுவரை செயலின் போக்கை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சமர்ப்பணம். சமர்ப்பணம் சரணாகதியாகி, மனிதமனம், இறைவனின் திருவுள்ளமாகும். உபநிஷத்தில் கூறுவதை பகவான் எடுத்துக்கூறி இவ்விளக்கத்தைத் தருகிறார்.

இந்திய விஞ்ஞானி திருவுள்ளத்தை அறிந்தால் - அவனால் அது முடியும் என்பதால் - விஞ்ஞானமும், ஆன்மீகமும் இணையும் அல்லது யோகி விஞ்ஞானியாக வேண்டும். உலகில் இத்துறைகள் இணைவது மாபெரும்மாறுதலாகும்.

விஞ்ஞானம் கண்டுபிடிக்காததில்லை எனலாம். Gene,Chromosome,  ஜீன், குரோமசோம் என்பவை எப்படி மனிதன் உயரம், முடியின் நிறம் போன்ற விவரங்களை நிர்ணயிக்கின்றன என்பதைக் கண்டுள்ளனர். சந்திரனுக்குப் போய்த் திரும்பிய ராக்கட் பூமியில் திரும்பிவரும் நேரத்தைக் கணக்கிட்டனர். அதுவும் சொன்ன

நேரத்திற்கு வந்துசேர்ந்தது. 9 செகண்ட் தாமதம்எனக் கணக்கிட்டனர். உலகின் விஞ்ஞான வளர்ச்சியை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. விஞ்ஞானம் அந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

பகவான் இக்கருத்தை மேலும் வளர்த்து விளக்குகிறார். ஷேக்ஸ்பியர் ஹாம்லெட் எழுதினார். அவரும், அவர் படைப்பும் உலகப் பிரசித்தியடைந்தன. மனிதனுடைய உயரம், நிறம் போன்ற அத்தனை விவரங்களையும் நிர்ணயித்த விஞ்ஞானம் ஹாம்லெட் எழுதிய ஷேக்ஸ்பியரின் மூளையில் எந்த மாற்றம், இந்தப் படைப்புக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கவில்லை. விதையிருந்து மரம் வளரும் எல்லா நிலைகளையும் துல்யமாகக் கூறும் விஞ்ஞானம், விதை எப்படி மரத்தின் உருவத்தைப் பெறுகிறது எனக் கூறமுடியவில்லை. இன்றுவரை விஞ்ஞானம் காணாதது இது. காணமுடியாதுஎன விஞ்ஞானிகள் கருதுவதும் இதுவே.

ஹாம்லெட் எழுதப்பட்டது எப்படி என்றாலும், அடுத்த நிமிஷம் நாம் என்ன செய்யப் போகிறோம் என்றாலும் ஒன்றே. அதை நிர்ணயிப்பது எது என்பது காணமுடியாததாக இருக்கிறது. பூரணயோகம் அதைக் காணமுடியும்என்று விளக்குகிறது. இது சிருஷ்டியின் இரகஸ்யம். Life Divine அந்த இரகஸ்யத்தை உலகுக்கு முதன்முதலாக அளித்துள்ளது.

நாம் பெற்ற ஞானம் அஞ்ஞானமாகும். அதை 7 வகைகளாகப் பிரித்து முதல் செய்வதறியாமல் இருப்பதும், முடிவாக ஆதியை அறியாததும் என்றுகூறி இடைப்பட்ட நிலைகளில் நம் ஜீவனின் பகுதிகளை அறியாதது, நாம் வாழும் உலகில் பகுதிகளை அறியாதது, காலத்தை அறியாதது, பிரபஞ்சத்தை அறியாதது, சிருஷ்டியை அறியாததுஎன 5 அஞ்ஞானங்களைக் கூறுகிறார். ஒரு காரியம் பூர்த்தியாக நாம் என்ன செய்யவேண்டும்என்று அறியாதது practical ignorance நடைமுறை அஞ்ஞானம். ஞானம் முழுமை பெறும்

நிலையில் செய்வது பூர்த்தியாகும். செய்வது பூர்த்தியானால் ஞானம் முழுமை பெறும்.

ஞானம் முழுமை பெற்றால் செய்யும் காரியங்களில் ஒன்றுகூட கெட்டுப்போகாது. ஞானம் கூர்மையானால் பூர்த்தியான காரியங்களின்பகுதிகள் தெளிவாகும். இது தத்துவம். பூரண யோகத்தைப் பொருத்தவரை நடைமுறைக்கு வாராத அம்சமேயில்லை என்று கூறலாம்.

பூரண ஞானம் பெறுவது சிரமம் என்றாலும், செய்யும் காரியங்களில் - மாநாடு நடத்துவது, திருமணம் செய்வது போன்றவற்றுள் - நாமறிந்த அனைத்தையும் அகந்தையின்றிச் செய்து முடித்தபின், அன்னையை அழைத்தால் காரியம் தவறாது பூர்த்தியாகும். இதற்குப் பூரணயோகத்தில் விலக்கில்லை. இதைச் செய்ய எந்தத் தீவிர பக்தராலும் முடியும். தாம் கட்டும் வீட்டில் விவரங்கள் எப்படி எழுந்தன, எப்படிப் பூர்த்தியடைந்தன என்பவற்றை முழுஆர்வம் உள்ள தீவிர பக்தர்கள் தவறாது காணலாம். அது ஞானத்தைக் கூர்மையாக்கும். நாம் செய்த காரியங்களுக்குள்ள ஞானம் கூர்மையாகும். அது பூரணஞானக் கூர்மையைப் பெற வழி கோலும்.

********

  1. பரம்பொருளே (Absolute) நிர்ணயிக்கிறான் என்பதால், ஹாம்லெட் எழுதியபோது பரம்பொருளின் நிலை எது என நாம் அறிய வேண்டும்.

ஹாம்லெட் எழுதிய பரம்பொருள்.

பேரிலக்கியம், அழியா இலக்கியம்எனச் சங்க இலக்கியம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், இராமாயணம், பாரதம், கீதை, வேதம், உபநிஷதம் ஆகியவற்றை

நாம் விவரிக்கின்றோம். அச்சிட்டோ, வரிவடிவத்தாலோ இலக்கியங்களைக் காப்பாற்றுகிறோம். ஷேக்ஸ்பியர், மில்டன், டான்டே, ஹோமர், அரிஸ்டாடில், பிளேட்டோ, சாக்ரடீஸ் ஆகியவரின் எழுத்து ஆரம்ப நாளிலிருந்து எழுதப்பட்டு காப்பாற்றப்பட்டது.

எழுதாவிட்டாலும், அழியாதது, அழியாஇலக்கியம், என்று பகவான் கூறுகிறார். மொழிபெயர்ப்பாலும் அதன் உயர்வு குறையாது என்கிறார். இவற்றை விளக்குவது தத்துவமாகும். எளிதில் விளங்காத தத்துவமாகவும் இருக்கும். கர்ணபரம்பரையாக வந்து இலக்கியம் காப்பாற்றப்படுகிறது என்பதையும் பகவான் ஏற்கவில்லை. அழியாஇலக்கியம் சூட்சும உலகில் அழியாமல் நிலைத்திருப்பதால் அது உலகில் அழிய வழியில்லை என்கிறார்.

படைப்புஎனில் மனிதன் ரோடு போடுகிறான், வீடு கட்டுகிறான், ஆயுதம் செய்கிறான், நல்ல காகிதம் செய்கிறான். மனிதன் உற்பத்தி செய்பவை பொருள்கள் (material objects ). அவை அவன் கையால் செய்யப்படுகின்றன, உழைப்பால் எழுகின்றன. மேஜையைச் செய்தால் மரம் உலுத்துப்போகும்வரை அது பயன்படுகிறது. அதன்பின் உடைந்து, உலுத்துப் போய் மண்ணோடு மண்ணாய், மனித உடம்புபோல் மறைகிறது. உடலால் உற்பத்தியாகும் ஜடப்பொருளின் நிலை அது. கதாசிரியர், கவிஞன், எழுத்தாளன் என்பவர்கள் அறிவாலும், உணர்வாலும் சொல் வடிவத்தில் சிருஷ்டிக்கின்றனர். பலர் எழுத்து அழிந்து மறைகிறது. சில நின்று நிலைக்கின்றன. ஆனால் ஓரிரு நூற்றாண்டில் மறைகின்றன. படைப்பு வேகமாகப் பரவி விரைவில் மறைவதுண்டு. மெதுவாகப் பரவி சில நூறு ஆண்டுகள் இருப்பதுண்டு. காலத்தால் ஏற்பட்ட இலக்கியம், காலம் மாறினால் மறைகிறது. மணிப்பிரவாளம் என்றொரு தமிழ் நடை சென்ற நூற்றாண்டில் இருந்ததையே இன்று நம் உலகம் அறியாது. '40, '50இல் பிரபலமான நாவல்களை இன்று எத்தனை பேர் படிக்கின்றார்கள்? என்றும் அதுபோல் இலக்கியம் எழுந்து

மறைவதுண்டு. காலத்தைப் பிரதிபலிக்கும் கருத்து, அதைக் கடந்து ஏற்கப்படாது.

எந்த நாட்டிலும் அழியா இலக்கியங்களாக ஏற்பட்டவை இன்று உலக இலக்கியங்களாகத் திகழ்கின்றன. மனிதன் கையால் உற்பத்தி செய்வதைப்போல் உணர்வாலும் உருவத்தை உற்பத்தி செய்ய முடியும். கற்பனையாலும் சிருஷ்டிக்க முடியும். இன்று மனிதனுடைய கற்பனையின் சிருஷ்டித்திறன் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், (material plane ) பொருள்களை சிருஷ்டிக்கும் திறனைப் பெறவில்லை என வேதாந்தம் கூறுகிறது. ஆனால் அதே திறன் (subtle plane ) சூட்சுமத்தில் சிருஷ்டிக்கவல்லது. சூட்சுமஉலகில் எண்ணம் சஞ்சரிப்பதால், எண்ணத்தால் உருவகம் பெறுபவை சூட்சும உலகுக்குரியவை. சிருஷ்டிஎன்று நாம் இங்குக் கூறுவது அழியாத சிருஷ்டி. பரம்பிரம்மம் ஒருவரில் - ஒரு கவியின் மனதில் - எழுந்தால், அது சூட்சுமஉலகில் எண்ணமாக, கதையாக, சொல்லாக, கவியாக சிருஷ்டிக்கப்பட்டால், அது உலவி வரும்பொழுது பரப்பிரம்மம் இருக்கும் இடங்களை எல்லாம் தொடும், தொட்டு உயிர்ப்பிக்கும். நம் எல்லோரிலும் பரப்பிரம்மம் இருப்பதால் கவிஞனின் படைப்பு சூட்சுமத்தில் எழுந்து நம்முள் உள்ள பரப்பிரம்மத்தைத் தொடும்பொழுது அது இனி அழியமுடியாது என்ற நிலையை அடைகிறது.

கவிஞனின் மனத்துள் பரப்பிரம்மம் எழுந்து, சூட்சுமஉலகில் எண்ண உருவில் இலக்கியமாகி, மாந்தரின் மனத்துள் உள்ள பரப்பிரம்மத்தைத் தொடுவதால், எழுத்து இலக்கியமாகிறது. அதுவே பேரிலக்கியம், அழியாஇலக்கியம் எனப்படுவதாகும். முன்சீப் கோர்ட்டில் தீர்ப்புச் சொல்கிறார்கள்எனில், அத்தீர்ப்பு ஒரு சட்டத்தின் பேரால் தரப்படுகிறது. சட்டம் என்பதை கோர்ட் போடவில்லை. சட்டம் சர்க்கார் போட்ட சட்டம். சர்க்கார் என்பது பார்லிமெண்ட். மேலும் சொன்னால், பார்லிமெண்ட் போட்ட சட்டமும் அரசியல் நிர்ணயச்சட்டத்தால் (constitution ) தீர்மானிக்கப்பட்டது.

  • முன்சீப் கொடுத்தது தீர்ப்பானாலும், நிர்ணயித்தது constitution அரசியல் நிர்ணயச்சட்டமாகும்.
  • ஷேக்ஸ்பியர் ஹாம்லெட்டை எழுதினாலும், எழுதுவதை நிர்ணயித்தது பரம்பொருளேயாகும்.
  • நம் காபியில் எவ்வளவு சர்க்கரை போடவேண்டும் என்பதை நிர்ணயிப்பதும் பரம்பொருளே என்கிறார் அன்னை.

Absolute என்பது பரம்பொருள். நமக்கோ, நம் மனத்திற்கோ, பரம்பொருளுடன் நேரடியான தொடர்பில்லை. சத்தியஜீவியத்திற்கு நிரந்தரமான நேரடியான தொடர்புண்டு. மனம் அடிப்படையில் சத்திய ஜீவியமாகும். ஹாம்லெட் எழுதியபோது சத்தியஜீவியத்தில் பரம்பொருளின்நிலை என்னஎன்று தெரிந்தால் அது ஞானமாகும். மனமும் சத்தியஜீவியத்தில் உற்பத்தியானது என்பதால் கேள்வி மாறி, "ஹாம்லெட் எழுதியபொழுது ஷேக்ஸ்பியரின் மனநிலை என்ன?'' என்று வரும்.

நம் காரியங்கள் கூடிவரும்பொழுது கேள்வி எழுவதில்லை. கெட்டுப் போகும்பொழுது கேள்வி எழுகிறது. கூடிவருவது பரம்பொருளால், கெட்டுப்போவதும் பரம்பொருளால்என்ற முடிவு மனத்தைக் குழப்புகிறது.

குழப்பத்திற்குக் காரணம் மனமில்லை, அதன் ஆதியான சத்தியஜீவியமுமில்லை. நாம் அகந்தையுள்ளிருப்பதால், குழப்பம் அகந்தைக்கு எழுகிறது.

  • காரியம் கூடிவந்தால் நேராகப் பூர்த்தியாகிறது.
  • காரியம் கெட்டுப்போனால் வேறுபாதைமூலம் பிறகு கூடி வருகிறது.
  • காரியம் கூடிவருவது திருவுள்ளம்.

காரியம் கெட்டுப்போவது திருவுள்ளம்.

நாம் கெட்டுப் போயிற்றுஎன அறிவது இறைவன் காரியம் கூடிவருவதாகும்.

"கெட்டுப்போவதை'' "கூடிவருவதாக'' அறிவது பிரம்ம ஞானம்.

  • நெடுநாள் கழித்து யோசனை செய்தால் இதனுள் உள்ள அர்த்தம் புரியும்.
  • நெடுநாள்கழித்துப் புரிவது காலத்திற்கு உட்பட்ட மனத்தின் செயல்.
  • "கெட்டுப்போகும்'' பொழுதே "கூடிவருவதாக'' அறிவது காலத்தைக் கடந்த மனம்.
  • காலத்தையும் அதைக் கடந்த நிலையையும் சேர்ப்பது சைத்தியப்புருஷன்.
  • அந்நிலை துறவறத்தில் இல்லறம். அதற்குத் தோல்வியே இல்லை.
  • பூரணயோகத்திற்குரியநிலை - சைத்தியப்புருஷன்.

******

  1. உடலுணர்வே நிர்ணயித்தால் நாம் ஜடத்தில் - உடல் - வாழ்கிறோம். விருப்பு வெறுப்புகள் உணர்வு நிலைக்குரியன. நல்லது கெட்டது மனத்திற்குரியன. தீமையற்ற நல்லது என மனம் அறிவது சத்தியஜீவியம்.

ஜடத்தின் உடல் உணர்வு.

களைப்பு மேலிட்டபொழுது, நாம் தூங்கும்பொழுது, உடலை மீற முடியாது. அது உடல் நிர்ணயிப்பதாகும். அதுபோல் ஒருவன் செயல்கள் உடலால் மட்டும் நிர்ணயிக்கப்பட்டால் அவன் ஜடமான மனிதனாவான். பொதுவாக நாம் மண்ணாங்கட்டி என்பது அவன் போன்றவர்களையேயாகும். உடலுணர்வுள்ளவன் சுறுசுறுப்பாக இருந்தால் அவன் சுறுசுறுப்பான மண்ணாங்கட்டியாவான். அறிவில்லாமல் சம்பிரதாயத்திற்காக ஆன்மீகப் பொக்கிஷங்களை கட்டாயப்படுத்தி குழந்தைகளை மனப்பாடம் செய்யச் சொன்னால்,

அறிவு வளராது, எரிச்சல் எழும். எரிச்சலை வெளிப்படுத்த முடியாவிட்டால் விரக்தி வரும். முடிவாக அவனுக்குச் சுறுசுறுப்பு வரும். அவனே சுறுசுறுப்பான மண்ணாங்கட்டி.

தெருவில் மேளசத்தம் கேட்டால் உள்ளே உட்கார முடியாது. கடைவீதி வழியே வரும்பொழுது கண்கவரும் பொருள்களைக் கடையுள்ளே கண்ணால் பார்த்தால் வாங்கவில்லை என்றாலும் உள்ளே போய்ப் பார்க்கத் தோன்றும். அவன் விருப்பாலும், அதன் எதிரான வெறுப்பாலும் உந்தப்படுவான்.

மனிதன் என்ன செய்வான்? பசி எடுத்தால் அத்தனையும் பறந்து போகும். பசித்தவன் எப்படித் திருடாமலிருக்க முடியாதோ அதுபோல் நம்மால் பல காரியங்களைச் செய்யாமலிருக்க முடியாது என்பதை எவரும் புரிந்துகொண்டாலும், அனைவரும் ஏற்க மாட்டார்கள். பசித்தால் திருடுபவனால் ஊரையோ, உலகத்தையோ, நாகரீகமான நல்ல பழக்கத்தையோ ஏற்படுத்த முடியாது. பசித்தாலும் புல்லைத் தின்னாது புலி என்பதே மனமுடைய மனிதன்நிலை. தேவையால்மட்டும் செயல்படுபவன் உடலாலான மனிதன். நியாயம் என்றால் மட்டுமே செய்பவன் நல்ல மனிதன்.

  • உடலுக்குரிய மனிதன் உணர்வற்ற ஜடம்.
  • உணர்ச்சியால் செயல்படுபவன் உணர்வுள்ள விலங்கு.
  • நல்லது கெட்டதுஎன்ற பாகுபாடுள்ளவனை நாம் மனிதன் என்கிறோம்.

அன்னையும் பகவானும் கூறும் சத்தியஜீவியம் இவற்றை எல்லாம் கடந்தது. நல்லதுஎனில் உலகில் உடனே தீமையிருக்கும். தீமை தனித்திருக்காது. எந்தக் கெட்டமனிதனிடமும் ஒரு நல்ல குணமிருக்கும். மனிதன் அவற்றைப் பிரித்து நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

தீமையற்ற நல்லது, நிழலில்லாத ஒளி, பொய்க் கலப்பற்ற சத்தியம் மனித வாழ்வில்லை. உலகை ஒளிமயமாக்கும் சூரிய

ஒளிக்கே அவ்வுயர்வில்லை. சூரிய ஒளியை ஆன்மீகச் சட்டப்படி ஜடத்தின் ஒளி (material light ) என்கிறார்கள். ஒளி, ஜோதி ஏற்பட்ட நேரம் ஜடம் சிருஷ்டிக்கப்படவில்லை. அதுவே ஆன்மீகஒளி (spiritual light  ). அதன்முன் சூரியன் கறுமையாகக் காணப்படுகிறான். அதேபோல் (spiritual darkness) ஆன்மீகஇருட்டின்முன் நடுப்பகலுக்கு எதிரான நள்ளிரவு ஜோதிமயமாகும்.

தீமையற்ற நல்லது

சத்தியஜீவியத்திற்குரிய நல்லது --------------------

நல்லது * கெட்டது

கெட்டதற்கு எதிரான நல்லதன்று.

*******

  1. மனம் தன்னைக் கடந்து செல்ல சத்தியம், நன்மை, அழகு, அனந்தம், ஆகியவற்றைநாடி அங்கு நிலைக்கவேண்டும்.

மனத்தைக் கடந்த சத்தியம்.

Self-existent Good, தீமையற்ற நல்லது என்பது ஆன்மீகக் கருத்து. ஸ்ரீ அரவிந்தர் இதைப் பெரிய Gயை உபயோகப்படுத்தி எழுதுகிறார். அடிக்கடி குறிப்பிடுகிறார். அதேபோல் Knowledge,Joy,Force,Peace,Silence , ஞானம், சந்தோஷம், சக்தி, அமைதி, மௌனம் ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.

நாம் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தால் நேர்முகத் தேர்வில் அவர்கள் கேள்விக்குப் பதில்சொல்லும்பொழுது நம் அனுபவம், பட்டம், படிப்பு, பரிசு, நமக்குத் தெரிந்த பெரிய மனிதர்களைப் பற்றிப் பேசுவோம். "நான் திருடியதில்லை, ஜெயிலுக்குப் போனதில்லை, அடிதடி சண்டை எனக்குத் தெரியாது, பெண்களைக் கடத்தியதில்லை'' எனக் கூறுவதில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் உள்ள ஊரிலிருந்து

வரும் விண்ணப்பதாரரின் மனதில் இருப்பவை அவை. நம்மைப் போன்றவர் மனதில் அவை வருவதில்லை. ஏனெனில் அவை நம் வாழ்வில்லை. நம்மை நல்ல குடிமகன், a good citizen என்பார்கள். திருடு, பொய், ஜெயில், சண்டை, கடத்தலறியாத குடிமகனை நல்லவன் என்கிறோம். ஆன்மாவின் அம்சங்களில் பல நன்மை, ஞானம், அழகு, சந்தோஷம். அவை மனித வாழ்வில் வந்தால் இங்குள்ள தீமை, அறியாமை, விகாரம், கவலையுடன் கலந்துவிடுகின்றன.

ஆரம்பத்தில் நன்மைக்குத் தீமை தெரியாது. எதிரான அம்சம் இருப்பதே தெரியாது. அதுவே தீமையற்ற நன்மை. மனம், வாழ்வு, உடல் - கீழ்உலகம். சத்தியஜீவியம், சச்சிதானந்தம் - மேல்உலகம். கீழ்உலகில் நல்லதும் கெட்டதும் கலந்துள்ளன. நாம் பிரித்து நல்லதைமட்டும் எடுத்துக்கொள்கிறோம். மேல்உலகில் கலப்பு இல்லை. நல்லதுமட்டும் உண்டு.

  • கலப்பு மனத்திற்குரியது.
  • கலப்பற்ற தூய்மை சத்தியஜீவியத்திற்குரியது.
  • கலப்பான நிலையைக் கடந்து கலப்பற்ற நிலையை அடைந்தால் மனத்தைக் கடக்கலாம்.

நாம் எங்குள்ளோம்என எப்படி அறிவது? மனத்தில் தவறு, குறை, கெட்ட எண்ணம், பொறாமை, சந்தேகம் எழுந்து அவற்றை விலக்கி நாம் முறையாகச் செயல்பட்டால் நாம் மனத்திற்குரியவராவோம். அவை எழாவிட்டால், எழுந்து விலக்கும் நிர்ப்பந்தம் இல்லாவிட்டால் நாம் மனத்தைக் கடந்த நிலையிலிருக்கிறோம். மடையனுக்குச் சந்தேகம் எழாது. அவனுக்குச் சந்தேகம் எழும் அளவுக்கு அறிவில்லை. நாம் மடமையிலிருந்து செயல்படுகிறோமா? மனத்தைக் கடந்த நிலையிலிருந்து செயல்படுகிறோமாஎன நாம் அறிவோம்.

  • மனத்தில் தவறு இருந்து அதை விலக்கி, அதனால் பாதிக்கப்படாத முறையில் செயல்படுகிறோம். இது overmental capacity தெய்வங்கட்குரிய சக்தி.
  • மனத்திலுள்ள குறையை ஆராய்ந்து அதனுள் உள்ள மெய்யைக் கண்டு அதன்மூலம் அதன் குறையை நிறைவாகச் சில சமயங்களில் மாற்றுகிறோம். அது சத்தியஜீவியத்திறமை.
  • மனக்குறை நம் செயலைக் கெடுப்பது மனிதநிலை, மனத்திற்குரியநிலை.

குரங்கு மரத்திலுள்ள பழத்தைத் தின்கிறது. நரி ஆட்டை அடித்துச் சாப்பிடுகிறது. எச்சில் இலைச் சோற்றை மனிதன் விரும்பி போட்டி போட்டு எடுத்துச் சாப்பிடுகிறான். விலங்கினமும், அதை ஒத்த மனிதனும் பசி என்பதால் நிர்ணயிக்கப்படுகிறார்கள். எச்சிலைச் சாப்பிடுபவன் சமூகத்தைச் சேர்ந்தவனில்லை. அவனைச் சமூகம் சேர்க்காது. எலியைக் கடித்துச் சாப்பிடும் பூனைக்கு மண், பாக்டீரியா, சுத்தம் கிடையாது. இவர்கள் ஜடத்தில் வாழ்பவர்கள். மனித நிலைக்குக் கீழ்ப்பட்டவர்கள்.

பங்காளிச் சண்டை, சம்பந்திப் பூசல், பரம்பரை எதிரி என்பவர்கள் நட்பாலும், உறவாலும் வாழ்க்கையை நிர்ணயிப்பவர்கள். அரசியல் நண்பர்கள், எதிரிகள், வியாபாரக் கூட்டாளிகள், எதிரிகள் விருப்பு வெறுப்புக்குரியவர்கள். இவர்கள் உணர்ச்சிவயப்பட்டவர்கள். இவர்களிடம் நியாயம் பேசமுடியாது. வேண்டியவனானால் நியாயம், வேண்டாதவன் ஆனால் தப்பு என்பதே கொள்கை. நல்லது எது என நினைக்க இவர்கட்கு நேரம் இருக்காது.

இலஞ்சம், காப்பியடிப்பது, திருமணமானபின் மனைவியைப் பணத்திற்காகக் கொடுமைப்படுத்துவது, பொய் சொல்வது, திருடுவது போன்ற தவறுகளைச் செய்யாதவர் பெரும்பாலோர். செய்ய விரும்பி மனச்சாட்சி தடை செய்வதைக் காண்பவர் வேறுநினைப்புள்ளவர்கள். இவர்கள் அனைவரும் மனம் உடையவர்கள். மனச்சாட்சியால் ஆளப்படுபவர்கள், மனச்சாட்சியைத் தெய்வமாகக் கருதுபவர்கள்.

முதல்வகையைச் சேர்ந்தவர்களை physical type ஜடம் என்றும், அடுத்தவகையினரை உணர்ச்சிவசப்பட்டவரெனவும் emotional type, மூன்றாம்வகையினரை ethical mental type நல்லதற்குக் கட்டுப்பட்டவரெனவும் பிரிக்கிறோம். இதைக் கடந்த நிலை- யொன்றுண்டு. அதுவே அன்னைக்குரியது.

ஒரு வாட்ச்மேன் நியமிக்கவேண்டி பலரைச் சந்தித்தால் அவர்களில் சிலர், "நான் திருடமாட்டேன், நான் வேலை செய்த இடங்களில் விசாரித்துப் பாருங்கள்'' என்பார்கள். பட்டதாரிகள் வேலைக்குப் போகுமிடத்தில் அதுபோல் சொல்லத் தோன்றுவதில்லை. வாட்ச்மேன் வேலைக்கு வருபவர்கள் சிலர் திருட்டுப் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், மற்றவர்கள் தாம் அதிலிருந்து மாறுபட்டவர்எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. பட்டதாரிகளில் திருடுபவர்களில்லை என்பதால் அதுபோல் அவர்கள் பேசுவதில்லை.

  • முதல்வகையில் திருட்டுக் கூட்டத்தில் திருடாத நல்லவரும்,
  • இரண்டாம்வகையில் திருட்டோடு சம்பந்தப்படாத திருடாதவரும் உண்டு.

இது சமூகத்திலுள்ள நிலை. அனைவரும் அறிந்தது. அன்னை கேட்பது நாம் அறியாதது. வாழ்வு இன்ப துன்பமுள்ளது. நாள் இரவும், பகலுமானது. உலகம் நல்லது, கெட்டதாலானது. நாம் வாழ்வில் துன்பம், இருள், கெட்டதை விலக்கி, இன்பம், பகல், நல்லதை நாடுகிறோம். இதற்கடுத்த நிலையில் விலக்கப்பட வேண்டியதில்லை. ஏற்கப்படவேண்டியதுமட்டுமே உள்ளதுஎனில் அதை நாம் எளிதில் புரிந்துகொள்வதில்லை. உதாரணங்களும் புரிய வைப்பதில்லை. எந்தப் பள்ளி, கல்லூரியிலும் பரீட்சை முடிவுகள் தெரிந்தால், பாஸானவர்களும், பெயிலானவர்களும் இருப்பார்கள். ஒரு பள்ளியில் "எங்கள் பள்ளியில் பரீட்சை எழுதினால் பாஸ்தான், பெயில் என்பதில்லை. கல்லூரி ஆரம்பித்ததிலிருந்து யாரும் பெயிலாகவில்லை'' என்று சொன்னால் அது நாமறிந்த பள்ளியிலிருந்து வேறுபட்டது.

அப்படியும் ஒரு கல்லூரி, 60 பேர் எழுதினால் 40 I கிளாஸ், II 20 கிளாஸ், III கிளாஸ் இல்லை, பெயிலும் இல்லைஎன எப்பொழுதும் சொல்லும்படியும் அக்கல்லூரி விளங்கியது.

மனத்திற்கு இருபுறம் உண்டு. அவையே நல்லது, கெட்டது, இருள், ஒளி, உயர்வு, தாழ்வு போன்றவை. மனத்தைக் கடக்க தெய்வலோகத்தைத் தாண்டிப்போய் சத்தியஜீவியத்தை எட்டவேண்டும். அங்கு இருளும், ஒளியும் இல்லை. சிறிய ஒளி, பெரிய ஒளியுண்டு; உயர்வு, தாழ்வு இல்லை. சிறிய உயர்வு, பெரிய உயர்வுண்டு; தெய்வங்களும் மனத்திற்குட்பட்டவர்களே. இவ்விஷயத்தில் அவர்களும் மனிதனைப் போன்றவர்கள்.

சத்தியஜீவியத்தில் நல்லதுண்டு. அது கெட்டதற்கெதிரான நல்லதன்று, நல்லது. ஆங்கிலத்தில் பகவான் goodxbad என்று நம் நிலையையும், சத்தியஜீவிய நிலையை Good எனவும் capital letter பெரிய எழுத்தைப் பயன்படுத்தி எழுதுகிறார். தமிழில் பெரிய எழுத்து இல்லாததால், அதுபோல் குறிப்பிட முடியாது. சத்தியஜீவியத்தில் கெட்டதில்லை, நல்லதுண்டு. அதேபோல் பொய் இல்லை, சத்தியம் உண்டு; விகாரமில்லை, அழகுண்டு; துன்பமில்லை, ஆனந்தம் உண்டு; வரையறை (limit) இல்லை, அனந்தம் உண்டு.

தற்காலிகமானவேலை, நிரந்தரமானவேலைஎன்ற பாகுபாட்டை நாம் அறிவோம். பெரிய அதிகாரி சிறிய அதிகாரியைக் கண்டிக்கிறார், தண்டிக்கிறார். பெரிய அதிகாரியை மந்திரி கண்டிக்கிறார். மந்திரியைச் சட்டம் கண்டிக்கும், தண்டிக்கும். ஹைகோர்ட் நீதிபதி வேலையைத் தற்காலிகமானதா, நிரந்தரமானதா எனக் கேட்பதில்லை. அவரை நியமித்தால் பிறகு 60 வயதில் அவர் ஓய்வு பெறுவார். அவருக்குமேல் அதிகாரிஎன ஒருவரில்லை. கண்டிக்க மேலே எவரும் இல்லை; தண்டனை எழாது. அவர்கள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள். சத்தியஜீவியம் அதைப் போன்றது. மனத்தைக் கடந்தநிலை அதுபோன்றது. நம் நாட்டில் நீதிபதிகள் 60இல், 65இல் ஓய்வு பெறுகிறார்கள். வேறு சில நாடுகளில் நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும்

வயதுஎன்று ஒன்று நிர்ணயிக்கப்படவில்லை. அவர்களே - நீதிபதிகள் - தான் ஓய்வு பெறுவதை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும்.

கீழ்மட்ட அதிகாரிகளுக்குப் புரியாத சட்டம், உரிமை, நிலைமை இது. வாழ்விலும் இதுபோன்ற இடங்கள் அரிபொருளாக இருக்கின்றன. அடிக்கடி நம் கண்ணில் பட்டதில்லை.

"நான் அகந்தையால் செய்த ஆர்ப்பாட்டங்கள் ஆயிரம். அத்தனையும் என் கணவர் பொறுத்துக்கொண்டார். நிலைமை மீறியபொழுது ஓர் அடி அடித்தார். அந்த அடி பட்டவுடன் அவர் மீது எனக்கு அன்பு சுரந்தது'' என்ற மனைவியின் அனுபவம் தாம்பத்தியத்தில் உள்ளதுஎனினும், கணவன் அடித்தால் கோபம் வருவதுதான் இயற்கை. அடிபட்டாலும் சுரப்பது அன்பு என்ற உறவு, அதற்குரிய உள்ளம் உயர்ந்தது. மனித வாழ்வில் அந்த உள்ளமும் ஆர்ப்பாட்டம் செய்கிறது.

அந்த உறவில் ஆர்ப்பாட்டம் செய்யும் மனநிலையில்லை எனில், அன்புமட்டுமே சுரக்கும் ஆனந்தஉறவாகும் அது. அதுவே வெறுப்பொழிந்த அன்பாகும்.

*******

  1. உடலாலானவன், உணர்வாலானவன், மனமுடையவன் அல்லன். அவனால் மனத்தைப் பயன்படுத்த முடியாது. மனத்தால் சிந்திக்க அவன் முதல் மனத்தைப் பெற வேண்டும். அதேபோல் நன்மையைக் (good) கருதும் நிலை அவனுள் இல்லை. அதைச் செய்ய சத்திய ஜீவியத்தைப் பெறவேண்டும். ஜீவனின் பகுதிகளாலான ஒரு புருஷனை (உ.ம். மனோமயப்புருஷனை) நாடுவதால் இதைப் பெறமுடியாது. சைத்தியப்புருஷனை நாடினால் இது முடியும். பகவான் பத்து வருஷமாகத் தேடிய இரகஸ்யம் இது.

பூரணயோகம் பரிணாம இரகஸ்யம்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் தேடியது சுதந்திரம், யோகமில்லை. சுதந்திரத்திற்காக யோகத்தை நாடினார். மௌனம், பிரம்மஞானம், அத்துவைத சித்தி, நிர்வாணம் ஆகிய சித்திகள் அவரை நாடி குறுகிய காலத்தில் வந்தன. "ராஜயோகத்தை 3 நாளில் செய்தேன்'' என குத்துமி கூறுவதாகத் தம் பாடல் எழுதுகிறார். ஜெயில் சுவாமி விவேகாநந்தர் கையில் கீதையைக் கொடுத்து 15 நாள்வரை தினமும் "வந்து'' நீ தேடுவது எதுவும் தேவையில்லை, நாடவேண்டியது "இது''தான்என சத்தியஜீவியத்தைச் சுட்டிக்காட்டினார். பின்னர் பகவானுக்கு அது பலித்தது. இது என்ன?

  • மனிதன் தான் உடலோ, மனமோயில்லை, ஆன்மாஎன அறிந்து உடலிலிருந்து பிரிந்து ஆன்மாவின் பிறப்பிடமான பரமாத்மாவை அடைவது மோட்சம்.
  • மனிதன் மோட்சம் பெறுவது திருவுள்ளமில்லை.
  • உலகில் பரமாத்மா வந்து வாழ்ந்து பூலோகம் சுவர்க்கமாவது திருவுள்ளம்.
  • இதை மனோமயப்புருஷன் மட்டும் செய்ய முடியாது.
  • நாம் ஆதியும் அந்தமுமில்லாததாக அறியும் ஆன்மாவுக்கு ஆதியும் அந்தமும் இடையே வளர்ச்சியும் உண்டு. அதை ஆன்மீகப் பரிணாமம் என்கிறார் பகவான்.
  • அது நடைபெறும் முனை பிரகிருதியின் ஆன்மாவெனும் சைத்தியப்புருஷன்.
  • ஞானயோகத்தால் விடுதலை பெற்ற ஜீவாத்மா நேரே பரமாத்மாவை அடைகிறது.
  • சைத்தியப்புருஷன் பிரகிருதியினின்று விடுதலை பெற முயலாமல் பிரகிருதியை மனத்திலிருந்து மௌனம், ஜோதி, ஞானம், தெய்வீகம் மூலமாக சத்தியஜீவியத்திற்குக் கொண்டு போகிறது.

இப்பரிணாமத்தில் சைத்தியப்புருஷன் ஈஸ்வரனாக மாறுகிறது.

  • மேலிருந்து சிருஷ்டி கீழே வந்தபாதைமூலம் மீண்டும் மேலே போவதாகும் இது.
  • ஜீவாத்மா தானே நேரடியாகப் பரமாத்மாவை அடைவது முழுமையன்று. பிரகிருதி விட்டுப்போகிறது. பிரகிருதி ஆன்மீக வளர்ச்சி பெற்றுயர்வது பரிணாமம். இதன் பாதை சிருஷ்டியின் பாதை.

சுவாமி விவேகாநந்தர் காட்டிக் கொடுத்த இலக்கையடைய பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்த உபாயத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு அவருக்கு 10 ஆண்டுகளாயின.

பகவான் கண்ட யோகஇரகஸ்யத்தை அவர் இரகஸ்யமாக வைத்திருக்கவில்லை. தம் நூல்களில் அவற்றை விவரித்தார். சாதனையாக யோகத்தை மேற்கொண்டவர்கள் மேலும் கேட்பதொன்றுண்டு, "எப்படி ஆரம்பிப்பது''? அதை பகவான் கூறியிராவிட்டால், அதை நாம் இந்த 50 ஆண்டுகளில் கண்டுபிடித்திருக்க முடியாது. அதையும் விவரமாக எழுதினார். அவ்வுபாயம் சரணாகதி. அதற்கும் முந்திய நிலையுண்டு. அதையும் கூறியுள்ளார். அதன் பெயர் சமர்ப்பணம். சமர்ப்பணத்தை மேற்கொள்ள பக்குவமான மனநிலையுண்டு. அதை அன்னை Psychic Education சைத்தியக்கல்விஎன்ற தலைப்பில் 6 விதிகளாகக் கூறுகிறார். அறிவை நம்பாமல், உடலைப் பேணாமல், உணர்வை வருத்தாமல், எந்த நேரமும் இறைவனை நோக்கி முன்னேற, புறத்தில் அகத்தைக் காணுதல் பக்குவம் தரும்.

பகவான் அத்துவைதசித்தி பெற்றதையும், நிர்வாணம் அடைந்ததையும் (poems) செய்யுளாக எழுதியிருக்கின்றார். ஆரம்பத்திலேயே அவருக்கு இந்தச் சித்திகள் கிடைத்தன. காஷ்மீரத்தில் மலைமீது உலவும்பொழுது சித்தி தம்மை நோக்கி வந்ததையும் குறிப்பிடுகிறார்.

மோட்சம் என்பது அவருக்கு உரியது. ஆனால் அது அவரது இலட்சியமுமில்லை, இலக்கும் இல்லை. உலகைத் திருவுரு மாற்றவேண்டும், மரணம் அழியவேண்டும், சத்தியஜீவன் பிறக்கவேண்டும் என்பவை அவர் எண்ணம். தியானத்தில் அமர்ந்தால் மனம் தூய்மைப்பட்டு, நிலைத்து, உயர்ந்து ஆன்மாவைத் தொட்டு அதனுடன் கலந்து, ஆன்ம விடுதலைக்குரியநிலை ஏற்படுவது அவருக்கு சகஜமானபின், அதை அவர் நாடாமல், எப்படி சத்திய ஜீவியத்தை அடைவது, அடைந்தபின் எப்படி அதை உலகுக்குக் கொணர்வது என்று யோகநிலைக்குரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

1943இல் வங்காளப் பஞ்சம் வந்தது. 30 லட்சம் பேர் இறந்தார்கள். 1950க்குப்பின் சைனாவில் பஞ்சம் வந்தது. அதைவிட அதிகம் பேர் இறந்ததாகச் சொல்கிறார்கள். ஐரோப்பாவில் black death வந்தபொழுது ஜனத்தொகையில் ஒரு பகுதி இறந்தனர். பன்னிரண்டாண்டு வற்கடம் (பஞ்சம்) என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் அடிக்கடி காணப்படுவது. 12 ஆண்டு மழை பெய்யாமல் ஊரை விட்டுப் போய், மழை பெய்ய ஆரம்பித்தபின் வந்ததை வரலாறு அறியும். 1965இல் பஞ்சம் ஏற்பட்டது. வெளிநாட்டுத் தானியம் வாங்கி ஒரு வருஷம் சமாளித்தால், ஒவ்வோர் ஆண்டும் 100 கோடி, 150 கோடி ரூபாய்எனத் தானியம் வாங்க வேண்டியிருந்தபொழுது, இது தவிர்க்க முடியாததுஎன உலகில் அனைவரும் நினைத்தனர். புத்தர் மரணம், காசநோயைக் கண்டு தவமிருந்து ஞானோதயம் பெற்று மரணத்தை வெல்ல முடியாது என்று முடிவு செய்தார். அந்த முடிவை பகவான் ஏற்க மறுத்தார். ஈ.சுப்ரமணியம் பஞ்சம் தவிர்க்க முடியாது என்பதை ஏற்க மறுத்தார். மறுத்தது சரி, எப்படிப் பஞ்சத்தை தவிர்ப்பது? சுப்ரமணியம் கண்டது, "உலகில் விவசாய விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. அது இங்கு வந்தால் பஞ்சம் தவிர்க்கப்படும். உற்பத்தியைப் பெருக்க முடியும்''. அதை எப்படி நிறைவேற்றுவது, யார் நிறைவேற்றுவது என்பது சுப்ரமணியத்தின் கேள்வி. விவசாய விஞ்ஞானிகள் விவசாயியை அணுகி விஞ்ஞான அறிவின் பலனை

நடைமுறையில் காட்டவேண்டும். அதைச் செய்தால் உற்பத்தி பெருகும் என்று முடிவு செய்தனர். அதையும் செய்தபின் விவசாயி புதுமுறை பயிரை ஏற்றால் நாடு பஞ்சத்தை ஒழிக்கும்என்று தெளிவு பெற்றார். விஞ்ஞானிகளும் அதைச் செய்தனர். விவசாயிகளும் அதை ஏற்றனர். நாடு மாறியது.

பகவான் மரணத்தை வெல்ல முடியாது என்பதை ஏற்க மறுத்தார். சத்தியஜீவியம் மரணத்தை வெல்லும்என்று கண்டார். எப்படி சத்தியஜீவியத்தை அடைவதுஎன அவருக்குத் தெரியவில்லை. அவர் அடைந்த சச்சிதானந்தம் சத்தியஜீவியத்தைவிட உயர்ந்தது. என்றாலும் சச்சிதானந்தம் மரணத்தை வெல்லலாம், சத்தியஜீவியம் வெல்லும். அன்னமயப்புருஷன், பிராணமயப்புருஷன், மனோமயப்புருஷன், ஜீவாத்மா மூலம் மோட்சம் பெறலாம். சத்தியஜீவனை அடைய முடியாது. பத்து வருஷம் அவருடைய முயற்சியால் சைத்தியப்புருஷனை நாடினால், அவன் மூலமாக ஜீவாத்மாவுக்குப் போனால், சத்தியஜீவியத்தை அடையலாம், அடைந்தால் சத்தியஜீவியத்தை உலகுக்குக் கொண்டுவரலாம் என்று கண்டார். கண்டதைப் பயின்று வெற்றி கண்டார். சத்தியஜீவியத்தை அவர் அடைந்தார். உலகுக்கும் கொண்டுவந்தார்.

புதுமுறை விவசாயத்தை மக்கள் ஏற்கவில்லை என்றால் சுப்ரமணியத்தின் முயற்சி ஏட்டளவிருக்கும், நாட்டுக்குப் பலன் தந்திருக்காது. பகவான் சத்தியஜீவியத்தை உலகுக்குக் கொண்டு வந்தபின்பு உலகம் மரணத்தை வெல்ல, சைத்தியப்புருஷனை நாடவேண்டும். உலகம் அதை நாடவில்லை. என்றாலும் ஒரு சிலர் (10, 12 பேர்) நாடினால் உலகம் அவர்கள்மூலம் மரணத்தை வெல்லும். அன்னை தவிர வேறொருவரும் அதை இலட்சியமாக ஏற்கவில்லை என்பதால், பகவான் சூட்சுமத்தைக் கண்டும், வெற்றி பெற்றும், உலகம் அதன் முழுப் பயனை, இந்திய விவசாயி பெற்றதுபோல் பெறவில்லை. தம் சூட்சுமஇரகஸ்யத்தை உலகுக்கு பகவான் வெளியிட்டும், அதைப் பாராட்டியவரில்லை.

*********

  1. இறைவன் என்ற புதிருக்கு அவனே விடை. வாழ்வில் இறைவன் புதிர். அவனை அடைந்தால் விடை எழும்.

புதிரும் விடையும் அவனே.

இறைவன் உலகை சிருஷ்டித்தவன். அவனே பிரம்மம். சர்வமும் பிரம்மம். அவனன்றி ஓரணுவும் அசையாது. இறைவன் ஆனந்தம். இறைவனே சத்தியம். எல்லாம் வல்லவன் இறைவன். எங்கும் நிறைந்தவன். எல்லாம் அறிந்தவன். கருணைக் கடல் என்பது கடவுள். அவன் திருவடி தரிசனம் பாபவிமோசனம், என்றெல்லாம் உலகம் அறியும். இவையெல்லாம் உண்மைஎன நாம் ஆழ்ந்து நம்புகிறோம்.

உலகை உற்பத்தி செய்த இறைவன் பூகம்பத்தையும் ஏற்படுத்துகிறான். எரிமலை வெடித்து இலட்சக்கணக்கான பேர் அழிகிறார்கள். பூகம்பம் பல நூற்றாண்டுகளாகச் சாதித்ததை, சில நிமிஷங்களில் தரைமட்டமாக்குகிறது. இதை ஏன் இறைவன் செய்கிறான், இதனால் இவனுக்கு என்ன வரும்? என்று நாம் சிந்திக்கத் தொடங்கினால், சிந்தனை நின்று போகிறது.

உலகம் உய்ய அவதாரம் எடுத்த இராமபிரானுக்கு வனவாசம் அமைகிறது, மனைவியை இராவணன் எடுத்துப் போனான். மனிதனுக்குள்ள அவலங்கள் எப்படி அவதாரப்புருஷனுக்கு வரும்? தர்மத்தை நிலைநாட்ட வந்த பரமாத்மா அதர்மத்தைத் தயக்கமின்றிக் கையாள்கிறார். ஏன் பரமாத்மா தர்மத்தைத் தாமே நிலைநாட்டக் கூடாது? எதற்கு அர்ஜுனனை நாடி, அவனுக்கு விஸ்வரூபத் தரிசனம் கொடுத்து, கீதோபதேசம் செய்து, அவனைப் போரிடச் செய்து, தர்மத்தை நிலைபெறச் செய்யவேண்டும். கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போலல்லவா இருக்கிறது?

ஏசுபிரான் உலகைக் காக்க வந்தார். தன்னையே காத்துக் கொள்ள முடியவில்லையே. புத்தர் துன்பத்தை அழிக்க வந்தவர், ஞானோதயம் பெற்றபின் துன்பத்தை அழிக்கவில்லையே, துன்பமே இல்லை என்றல்லவா சொன்னார்.

வேதரிஷிகளை நாம் தெய்வம் என்கிறோம். அவர்கள் கடவுள்களை நோக்கி மாடு வேண்டும், மழை வேண்டும் என்றல்லவா கேட்கிறார்கள். புனிதமான வேதத்தைப் படித்து மாட்டைத்தான் கேட்கவேண்டுமா?

சத்தியஜீவியத்தை உலகுக்குக் கொண்டுவந்து மரணத்தையும், வலியையும் அழிக்க பகவானும், அன்னையும் வந்தார்கள். அன்னை தாம் பட்ட வேதனையைப் பார்த்து இந்த யோகத்தை எவரையும் செய்யும்படி நான் கூறமாட்டேன் என்றார். பகவான் பட்டதை நினைத்தால் கண்கள் நீரால் நிறைகின்றன என்றார். இறைவனான பகவானே நேரில் வந்து யோகஇரகஸ்யங்களைக் கூறியபொழுது எவராலும் பின்பற்ற முடியவில்லையே.

பெற்ற குழந்தையைக் கொலை செய்யும் பெற்றோரை எப்படி இறைவன் உலகில் சிருஷ்டிக்க முடியும்? இது என்ன புதிர்? உலகில் இன்றுள்ள ஆயிரம் கொடுமைகளுக்கு அவனேயல்லவா பொறுப்பு. ஏன் ஓர் உலகத்தை சிருஷ்டித்து, அதில் துன்பத்தை ஏற்படுத்தி, பிறகு அங்கு அவதாரம் செய்து, பின் அத்துன்பத்தை அழிக்க வழி சொல், தாமே துன்பத்தை அனுபவித்து, உலகை அப்படியே துன்பவலையில் விட்டுப்போகவேண்டும் இறைவன்? இது ஒரு புதிரல்லவா? என்ற கேள்வி ஞானிகட்கும், மேதைகட்கும், விஞ்ஞானிகட்கும், எல்லோருக்கும் தோன்றுகிறது.



book | by Dr. Radut