Skip to Content

பகுதி 13

  1. கடந்த 5000 ஆண்டுகளில் மனிதன் தன் மன நம்பிக்கைகளை Psychological change மேல்மனத்தில் மாற்றியுள்ளான்.

கடந்த 5000 ஆண்டுகளில் உலகம் மாறி, அதன் உருவம் மாறி, அதன் அடிப்படை உந்துதல் மாறி, அதன் போக்கு, இலட்சியம், கொள்கை, அமைப்புஎன அத்தனையும் மாறியதை வரலாறு அறியும். இத்தனை மாறுதல்களும் பகவான் மேல்மனத்தில் ஏற்பட்டவை என்கிறார். ஆதி மனிதனுக்குள்ள கோபம், நரமாமிசம் சாப்பிடும் குணம், கொடூரம், விலங்குணர்வு போன்றவை இன்றும் நாகரீக மனிதனுடைய உள்மனத்தில் அப்படியேயுள்ளது என்கிறார். இரண்டாம் மகாயுத்தத்தில் ஒரு கப்பல் தடம் மாறி நடுக்கடலில் நின்றுவிட்டது. கரை சேர வழியில்லாமல் மாதக்கணக்கானபொழுது, உணவில்லாமல் மாலுமிகள் ஒருவரை மற்றொருவர் சாப்பிட ஆரம்பித்தனர். பர்மா அகதிகள் நடந்து இந்தியா வந்தபொழுது பசி தாங்காமல் தம் குழந்தையைத் தாமே கடித்து மனிதன் சாப்பிட்டான். நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் இத்தனை நாகரீகம் வந்தும் போகவில்லை. உள்ளே அமிழ்ந்துள்ளது.

ஆதிமனிதன் கல்லால் கருவிகள் செய்ததைக் கண்டு இன்று ஆராய்ச்சியாளர் வியக்கின்றனர். நியூடன் பிறந்து சில

நூற்றாண்டுகளாகின்றன. நியூடனைவிட, சாக்ரடீஸைவிட இனி சிருஷ்டியில் மனித மனம் உயர முடியாது என்கிறார் பகவான். இன்று electron microscope மைக்கிராஸ்கோப் செய்ய இன்றைய நிலையில் எவ்வளவு அறிவும் திறமையும் வேண்டுமோ, அவ்வளவு அறிவும் திறமையும் கல்லால் கருவி செய்ய stone tools அன்று ஆதி மனிதனுக்குத் தேவைப்பட்டது என்கிறார் பகவான். இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில் மனிதனுடைய அடிப்படை புத்திசாலித்தனம் உயரவில்லை என்கிறார் பகவான்.

இலட்சக்கணக்கான மாறுதல் ஏற்பட்டுள்ளன. அவை மேல் மனத்தின் சாதனைகள். ஆழ்ந்த மனம் அன்றுபோல் இன்றும் உள்ளது. அதில் மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை.

மனித வாழ்வு வளர்ந்துள்ளது. அடிப்படை மனத்தின் அமைப்போ, திறனோ மாறவில்லை என்கிறார். நடந்தவன் இரயில் போகிறான், விமானத்தில் பறக்கிறான், ராக்கெட்டில் சந்திரனுக்குப் போகிறான். இவற்றைக் கண்டுபிடிக்க விஞ்ஞானமும், விஞ்ஞான அறிவும் வளர்ந்துள்ளன. உள்ளூரில் செய்ததையே வெளியூரிலும், வெளிநாட்டிலும் போய் செய்கிறானே தவிர, போகும் வேகம், வசதி, முறை சௌகரியமாக மாறியதே தவிர போகும் மனிதன் மாறவில்லை. அவன் அடிப்படை வாழ்வு மாறவில்லை. அந்த வாழ்வை நிர்ணயிக்கும் புத்திசாலித்தனம் உயரவில்லை. அன்றே - 5000 வருஷத்திற்குமுன்பே - அந்த அறிவு உச்சகட்டத்தை எட்டிவிட்டது என்கிறார். இனி உயர வழியில்லை என்பதால், பரிணாமத்தால் மனத்திலிருந்து உயர்ந்து Supermind சத்திய ஜீவியத்தை எட்டினால்தான் மனத்திற்கு வளர்ச்சியுண்டு.

வாழ்வும், வசதியும், ஊரும், உலகமும் மாறியது உண்மை. அவற்றை நிர்ணயிக்கும் உணர்வும், அறிவும், திறனும், மனமும் மாறவில்லை.

ஆயிரம் வருஷமாக இருந்த வேஷ்டி இன்று pant  ஆக பெரும்பாலும் மாறியுள்ளது. 12ஆம் நூற்றாண்டுவரை இந்தியப் பெண்கள் மேலாடையில்லாமலிருந்தனர். முஸ்லீம் ஆட்சி வந்து மேலாடையை ஏற்படுத்தினர். புடவை இன்று சுரிதாராகிறது. இட்லியும், தோசையும் 100அல்லது 200 ஆண்டுகட்கு முன் வந்ததே. அதுவும் மாறலாம். இவை உடை, உணவு மாற்றங்கள். 5000 ஆண்டுகளில் ஏற்பட்டவை பெருமாற்றங்கள். ஆனால் அவை அனைத்தும் மேல்மனத்திற்குரிய மாற்றங்களேயாகும். அவை,

  1. நாடோடியான மனிதன் ஊரை ஏற்படுத்தி அங்கேயே தங்கினான்.
  2. விவசாயத்தைமட்டும் நம்பி ஊரில் வாழ்ந்தான்.
  3. விவசாயத்தை நம் நாட்டில் 35% மக்களும் மேல்நாடுகளில் 97% மக்களும் கைவிட்டனர்.
  4. ஊரைச் சுற்றி 5 மைல் உள்ள குடும்பங்களுடன் சம்பந்தம் செய்தான்.
  5. இன்று திருமணம் தமிழ்நாடு முழுவதும் தடையின்றி நடக்கிறது. வெளியிலும் அனுமதிக்கப்படுகிறது.
  6. விஞ்ஞான வாழ்வை ஏற்றுக்கொண்டு, ரயில், காரில் பிரயாணம் செய்கிறான்.

இவ்வளவும் மேல்மனத்திற்குரிய பழக்கங்களில் ஏற்பட்ட மாறுதல்எனில் ஆழ்மனப்பழக்கங்கள் எவை? நம் ஆழ்மனப் பழக்கங்களும் விலங்கினத்திற்குரியவையும் ஒன்றே. பசி, தாகம், தூக்கம், இனஉணர்வு, நமக்கும் விலங்குகட்கும் ஒன்றே. விலங்கு வாழ்வு மாறுவதே ஆழ்மனம் மாறுவதாகும். சத்தியஜீவன் பிறந்தால்தான் அது மாறும்.

அறிவு ஒன்றுதான் நமக்கும் விலங்குகட்கும் உள்ள வித்தியாசம். போட்டி, பொறாமை, பொய் ஆகியவற்றை மனிதன்

கைவிட்டால் மேல்மனத்தில் மேற்பகுதியிலிருந்து மேல்மனத்தின் ஆழ்ந்த பகுதிக்கு மனிதன் மாறுகிறான். அம்மாறுதலே பெருமாறுதல் எனக் கருதப்படும்.

வாழ்க்கை வசதிகள் மாறியுள்ளன. அறிவு வளர்ந்துள்ளது. செயல் திறனடைந்திருக்கிறது. சக்தி ஏராளமாக வளர்ந்துள்ளது. உள்ளூரிலேயே இருந்த மனிதன் உலகெங்கும் சுற்றி வருகிறான். ஒருமொழி பேசியவன், பலமொழிகளை அறிய முயல்கிறான். கல்வி பரவி வருகிறது.

ஆனால், மனிதன், மனிதனாகவே இருக்கிறான். அதாவது திறமையான விலங்காக மாறியுள்ளான். அடிப்படையான விலங்கு வாழ்வைவிட்டு மனிதன் மாறவில்லை.

**********

  1. மனிதன் பிறந்தபொழுது கடைசி முறையாக ஜீவியம் மாறியது.

ஆதி ஜீவியம்.

பெரிய மாறுதல்கள் ஆரம்பத்திலேயே தலை எடுப்பதுண்டு. Human consciousness மனிதஜீவியமும் அப்படியே. மனிதன் பிறந்தபொழுது விலங்கின்ஜீவியம் மனிதஜீவியமாக மாறியது. அதன்பின் மனிதஜீவியம் இன்றுவரை அதன் அடிப்படையில் அன்றிருந்ததுபோலவே இருக்கிறது. அதில் மாற்றமில்லை.

இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்கள் பெரிய இலக்கியங்கள். ஆனால் நாளடைவில் அவற்றுள் இடைச்செருகல்கள் ஏற்பட்டதாகப் பண்டிதர்கள் நினைக்கிறார்கள். மொழிபெயர்ப்புஎன்று ஏற்பட்டபொழுது பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன. ஆனால் வேதம், உபநிஷதம், கீதை ஆகியவை அன்றிருந்ததுபோல் எந்த மாற்றமும்

இல்லாமலிருக்கின்றன. வேதம் பெரியது. எனவே மாறாது. இராமாயணம் கதை. எனவே மாறக் கூடியது.

அரசியல் நிர்ணயச் சட்டம் (constituition), நாட்டில் வழங்கும் சட்டம் (Acts of Parliment and Legislatures), சர்க்கார் உத்தரவு (G.O) ஆகியவற்றுள் அரசியல் நிர்ணயச்சட்டம் அடிப்படையானது. இந்தியாவில் கடந்த 44 வருஷமாக அதில் மாற்றமில்லை. திருத்தங்களுண்டு. திருத்தமும் அடிப்படையை ஒட்டியே இருக்கும். அமெரிக்காவில் அரசியல் நிர்ணயச்சட்டம் 200 ஆண்டுகளாக இருக்கிறது. மாற்றமில்லை. அதாவது அடிப்படையான மாற்றமில்லை. இங்கிலாந்தில் (written constitution) அரசியல் நிர்ணயச்சட்டம் எழுத்துருவமே பெறவில்லை. நாட்டில் சட்டங்கள், சர்க்கார் உத்தரவு மாறும். அதிகமாக மாறும். அடிக்கடி மாறும். அடிப்படையே மாறும். ஆனால் அரசியல் நிர்ணயச்சட்டம் மாறுவதில்லை.

மனிதனுக்குப் பழக்கம், நம்பிக்கை, அமைப்பு என்பவையுண்டு. இவை மேலெழுந்தவாரியானவை. இவை மாறும். ஜீவியம் இவற்றைக் கடந்தது. அடிப்படையானது. எனவே மாறாது. மனிதன் பிறந்த பொழுது விலங்கின்ஜீவியம் மனிதஜீவியமாக மாறியது. இனி மாற வேண்டுமானால் சத்தியஜீவியமாக மாறுமே தவிர அதன் இன்றைய அமைப்பு மாறுவதில்லை. .

ஜீவியம் மனிதன் பிறந்தபொழுது மாறியது பிறகு மாறவில்லை என்பதை பகவான் அன்று மனிதனுக்கிருந்த அறிவு இன்றுவரை அதிகப்படவில்லை என்ற கருத்தாலும் தெரிவிக்கின்றார்.

ஓரளவு இந்த உண்மையை, பேனா, எழுத்து, துப்பாக்கி, டைப்ரைட்டர், பேப்பர், மருந்துகள் ஆகியவற்றில் பார்க்கலாம். இவை கண்டுபிடிக்கப்பட்டபொழுது இருந்த அடிப்படைநிலை இன்றுவரை மாறாமலும், ஏற்படும் மாறுதல்கள் மேலெழுந்தவாரியாக இருப்பதையும் காணலாம். கப்பல் அன்றிலிருந்து, இன்றுவரை ஆயிரம் மாறுதல்களை அடைந்தாலும், முதல் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டபொழுது இருந்த

தோற்றம், மிதக்கும் தத்துவம் இன்றும் மாறவில்லை. கம்ப்யூட்டரும் அதேபோல் ஆரம்பத்தில் எப்படி addition based manipulation கூட்டல் கழித்தல் அடிப்படையில் ஏற்பட்டதோ இத்தனை மாறுதல்கட்குப் பின்னும் அதே அடிப்படையைக் கொண்டதாக உள்ளது. அரசமரம் அன்றுபோல் இன்றும் இருப்பதுபோல், எந்த ஜீவராசியும் (species) ஆரம்பத்திலிருந்து முடிவுவரை மாறுவதில்லை. அதனால்தான் ஸ்ரீ அரவிந்தர் ஆதிமனிதனுக்கு இன்றைய மனிதனுடைய அறிவு உண்டு என்றார்.

ஏற்படும் மாற்றங்கள் எவ்வளவு பெரியதாகத் தோன்றினாலும் அவை மேல்மனத்திற்குரியவையே. அடிப்படையான மனிதஜீவியம் (human consciousness ) மாறுவதில்லை. அங்கு மாற்றம் உண்டானால், சத்தியஜீவன் பிறப்பான்.

மனிதஜீவியம் என்பது மேலெழுந்தவாரியாக உடல் தோற்றம், உணவு, உடை பழக்கங்களால் அறியப்படுகின்றது என்றும், அதை நிர்ணயிப்பது உடலமைப்பு, செல்லின் அமைப்பு, gene,chromosome,DNA ஆகியவை. அவை மாறாதவரை மனிதன் மாறப் போவதில்லை. என்ஜின்என நாம் அறிவது மின்சார மோட்டாரால் இயக்கப்படுகிறது. பெட்ரோல், டீசலாலும் ஓடுகிறது. நீராவியால் ஓடிற்று. அதற்குமுன் water mill நதியின் ஓட்டத்தால் மோட்டார் இயங்கியது. எது மாறினாலும் அடிப்படையில் மோட்டார் என்பது சுழலும் சக்கரம்.

இதுவே உண்மையானால் நம் இலட்சியங்களாகக் கருதுபவை என்னாவது?

  • மனிதன் இறைவனை வழிபட வேண்டும்.
  • அன்பால் செயல்பட வேண்டும்.
  • விலங்குபோல் வாழக் கூடாது.

  • உலகம் சுருங்கி சிறு கிராமமாக வேண்டும்.
  • போர் அழிய வேண்டும்.
  • வசதி அதிகரிக்க வேண்டும்.
  • யோகம் செய்ய வேண்டும்.
  • மோட்சம் பெற வேண்டும்.
  • மனிதர்கள் சமமாக வாழ வேண்டும்.
  • ஜனத்தொகை பெருகக் கூடாது.
  • இயற்கை விபத்திலிருந்து மனிதன் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • அறிவு வளர்ந்து அன்பாக முதிர வேண்டும் என்ற இலட்சியங்களையும், இதர வேறு உலக இலட்சியங்களையும் நாம் கருதினால், ஆராய்ந்தால், ஆழ்ந்து சிந்தித்தால், அவ்வளவு மாறுதல்களும் மேல்மனத்திற்குரியன. எதுவும் மனித உடல் அமைப்பையோ, ஆழ்மனத்தையோ, அடிப்படையில் செல், DNAஇன் அமைப்பையோ தொடக் கூடியவையில்லை. அவை மாறாதவரை மனிதஜீவியம், மனிதஜீவியமாகவேயிருக்கும், மாறாது.

********

  1. உடல் மனத்தை நிர்ணயிப்பது சிறிய உண்மை. மனம் உடலை நிர்ணயிப்பது பெரிய உண்மை.

உண்மையின் இரு உருவங்கள்.

இலட்சியம், பாசம், நட்பு, உறவு, குடும்பம் போன்ற போற்றப்படும் கருத்துகளுக்கு அடிப்படையாகப் பணம், சொத்து, ஆதாயம் இருப்பதை உலகம் அறியும். இலட்சியவாதியை யதார்த்தவாதி (materialist) அந்த அடிப்படையில் கேலி

 செய்வான். இது உண்மை, ஆனால் முடிவான உண்மை இது அன்று. முடிவான உண்மையை அறியும்பொழுது

பணமும், சொத்தும் இலட்சியத்தாலும், இலட்சியக்கருத்துகளாலும் எழுந்தவைஎன அறியலாம்.

Life Divine நூலின் கடைசி அத்தியாயம் நூல் அதிக நீளமுள்ளது. சுமார் 55 பக்கமுள்ளது. ஆரம்பத்தில் முதல்அத்தியாயம் 4 பக்கம், முதல் 15அத்தியாயங்கள் 10 பக்கம். போகப் போக அத்தியாயங்கள் நீண்டு முடிவான அத்தியாயம் மிக நீளமானதாக அமைந்தது. அதை Divine Life என்றார். அதை மட்டும் தனியே படித்தால் அதை ஒரு தனிப் புத்தகம் என்று கருதுவார்கள். நூலின் முக்கியக் கருத்துகளின் சாரம் அதனுள் உள்ளன. அவ்வத்தியாயத்தில் முக்கியமானது மேலே சொல்லப்பட்ட கருத்தாகும்.

நடைமுறையில் பக்தர்களுக்கு இக்கருத்தை வேறுவகையாக விளக்கலாம். நாம் வாழ்வுக்கும், சந்தர்ப்பத்திற்கும், கர்மத்திற்கும், தலைவிதிக்கும், சமூகத்திற்கும், குடும்பத்திற்கும், கடமைக்கும், மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டுள்ளோம். இதனால் மனிதன் அந்த அளவில் சிறைப்பட்டவன். அவனுக்குச் சுதந்திரமில்லை. அன்னையின் வழி மாறியது. வாழ்வு அவனுக்குக் கட்டுப்படும். சந்தர்ப்பங்களை அவன் நிர்ணயிக்கலாம். கர்மத்தை அழிக்க முடியும். தலைவிதி என்பதை மனிதனால் மாற்ற முடியும். சமூகம் பக்தனைச் கட்டுப்படுத்தாது. குடும்பம் அவனுக்குட்படும். கடமை என்பது அன்னைக்கு மட்டுமேயுரியது. பக்தன் மனச்சாட்சியைக் கடந்தவன். மேற்சொன்ன உண்மையை மனம் புரிந்து ஏற்றுக்கொண்டால், ஆயிரம் வகையான சிறைகளிலுள்ள மனிதன், சுதந்திரம் பெறுவான்.

அவன் மனம் நினைத்தது நடக்கும்.

சிருஷ்டியின் இரகஸ்யத்தை உலகில் இதுவரை எவரும் கண்டதில்லை. இதுவரை சிருஷ்டியைப் பற்றிய கருத்துகள் சிறுபிள்ளைத்தனமானவை என்கிறார் அன்னை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் சிருஷ்டியைத் தத்துவமாகவும், ஒரு முறையாகவும், இந்த நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கருத்தை எடுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பதில் கூறும் வகையிலும் எழுதியுள்ளார். அந்த

விளக்கத்தின் முதற்பாகம் தெளிவாக முடிந்தபின் இது பெரிய கருத்து. கீழிருந்து மேலே போவதற்குப் பதிலாக (from matter to mind ) மேலிருந்து கீழே வந்தால் தெளிவிருக்கும் என்றவர் இது மாறும் இடத்தில் மேற்கண்டதைக் கூறுகிறார்.

உடல்தான் நடைமுறையில் நம்மை நிர்ணயிக்கிறது எனினும், உடலினுள் உள்ள subconscient ஆழ்ந்தமனமே உடலை நிர்ணயிப்பதால், முடிவாக நிர்ணயிப்பது மனமாகும் என்கிறார். தத்துவத்தைவிட்டு நடைமுறையில் இந்த உயர்ந்த தத்துவத்தின் பலனைப் பெற வேண்டுமானால் மேற்சொன்ன கருத்தைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்.

அடிமையான மனிதன் அன்னையை ஏற்றுக் கொண்டால் அனைத்தும் அவனுக்கு அடிமையாகும். சர்க்கார் தன் செலவில் ரோடு போடுகிறது, பள்ளிக்கூடம் கட்டுகிறது, அபிவிருத்திக்கானவற்றைச் செய்கிறது என்பது உண்மை. மறுக்கமுடியாதது.

  • சர்க்கார் மக்களுக்குச் செலவு செய்து சேவை என்பதைச் செய்கிறது என்பது சிறிய உண்மை.
  • சர்க்காருக்குப் பணம் இல்லை. அது பொதுமக்கள் பணம் என்பது பெரிய உண்மைஎன்று நாம் கூறுவது போன்றது மேற்கூறிய சட்டம்.

சிருஷ்டி என்பது பிரம்மம் சச்சிதானந்தமாகி, சத்தியஜீவியமுமாகி, மனத்தை உற்பத்தி செய்ததாகும். சிருஷ்டி மனத்தோடு முடிகிறது. மனமே சிருஷ்டியின் கடைசி கட்டம். மனம் வாழ்வாகவும், உடலாகவும் (ஜடம்) மாறியது என்பது ஸ்ரீஅரவிந்தம். உடலுக்கு வாழ்வு என்ற உயிரும், மனமும் உண்டுஎன நாம் அறிவோம். மனமே உயிராகவும், உடலாகவும் மாறியது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

உடல்என நாம் அறிவது subconscious mind ஆழ்மனத்தின் இருண்ட உருவம். உயிர் அடுத்தநிலை. முதலாளி மனம், மானேஜர்

உடல். மானேஜர் கம்பனி நிர்வாகத்தை மேற்கொண்டு தன்னையே முதலாளியாகக் கருத ஆரம்பித்தார். பின்னர் அதை நம்பினார். அதையே முடிவாகவும் நம்பினார். முதலாளியிடம் அதைக் கூறினார். முதலாளியும் இன்று அதையே நம்புகிறார் என்பதைப்போல், உடல் தன் ஆதிக்கத்தில் மனமிருப்பதாகக் கூறி அதை மனம் நம்பிவிட்டது. அதனடிப்படையில் A sound mind in a sound body என்ற பழமொழியும் எழுந்துள்ளது. இது இன்றுவரை உலகம் நம்புவது. ஸ்ரீ அரவிந்தம் சிருஷ்டியை விவரித்து மேற்சொன்ன விளக்கத்தால் கூறியது புதிய, பெரிய உண்மை. இந்த reversal of consciousness மனமாறுதல் பூரண யோகத்திற்கு இன்றியமையாதது. மனிதனுடைய தவறான எண்ணங்கள் பலவற்றிற்கு அடிப்படை இச்சிறிய உண்மை. அவை:

  1. பணம் வாழ்வுக்கு முக்கியம்.
  2. Technology  வாழ்வை முன்னேற்றுகிறது.
  3. சர்க்கார் சமூகத்தைவிடப் பெரியது.
  4. வாழ்வு சிரமங்களாலானது.
  5. மரணம் தவிர்க்க முடியாதது.

ஸ்ரீ அரவிந்தம் எதிராகக் கூறும் உண்மைகளை மனம் ஏற்க, யோகம் அதனடிப்படையில் சித்திக்க, இச்சிறிய உண்மையைக் கைவிட்டு, ஸ்ரீ அரவிந்தர் கூறும் பெரிய உண்மையை மனம் விளங்கி ஏற்று, செயல்பட வேண்டும்.

********

  1. உடல் அசைவுகளே நாம் என இருந்தால் உடல் மனத்தைக் கட்டுப்படுத்தும். மனத்தின் எண்ணங்களே நாம்என இருந்தால் மனம் உடலை நிர்ணயிக்கும்.

மனம் உடலின் அதிபதி.

'உலகம்' என்று சொல்லும்பொழுது அவரவர்களுக்கு அது வேறுபடும். கிராமத்தில் பிறந்து அங்கேயிருப்பவனுக்கு அவன் குக்கிராமமே உலகமாகும். முனிசிபாலி

ட்டியில் வேலை செய்பவன் சேர்மனே கடவுள் என்று நினைத்தால் அவன் உலகம் முனிசிபாலிட்டி ஆகும். ஒருவர் மனத்தின் விசாலத்தைப் பொருத்து அவர் உலகத்தின் அளவு நிர்ணயிக்கப்படும்.

மனிதன் தன்னை உடலாகக் கண்டால் அவனுக்கு உழைப்பு மட்டுமே உரியது; உணர்வாகக் கண்டால் உறவே அவனுக்கு உயிராகும்; மனித மனத்தின் சிந்தனைகளையே தானாக அறிபவன் ஞானம் அவனுக்குரியது; ஆன்மாவாகத் தன்னை அறிபவன் யோகி. 25 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்று பேசும் இளைஞன் உணர்வால் உயிரற்றவன். அவனுக்குச் சாப்பாடு முக்கியம், சௌகரியம் முக்கியம், வெளியில் போய் உள்ளே வந்தால் மனைவி காத்திருக்க வேண்டும். தம்பி இரவு 12 மணிக்குமேல் ஆபத்தான சூழ்நிலைக்குப் போனவன் திரும்ப வரவில்லைஎனில் போய்ப் பார்க்க முடியாதவன். பெருஞ்செல்வமிருந்தும் 34 வயதுவரை பெண்ணின் திருமணத்தை நினைக்காமல், காஷ்மீர், தாஜ்மஹால் பார்க்கவும், நகரத்தில் அரசியல் நண்பர்களுடன் பொழுதுபோக்கவும் நினைப்பவனுக்கு உடலே பிரதானம். அதன் அசைவுகளும் சந்தோஷமும் முக்கியம். அது போன்றவர்கள் சற்று வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டதால் அப்படியிருப்பார்கள். அவர்கள் வாழ்வைச் சீர்தூக்கிப் பார்த்தால், அவர்களுக்கு முக்கியமான நேரங்களில் நடந்தவற்றைக் கருதினால்,

பலன் சூழ்நிலையால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். மனத்தின் எண்ணங்களே நாமாவோம் என்பவன் நினைப்பதற்குச் சக்தியுண்டு. அவன் சூழ்நிலைக்குக் கட்டுப்பட வேண்டாம். அவன் சிந்தனை சூழ்நிலையை மாற்றும், சிந்தனை

சிறந்தால் சூழ்நிலையை நிர்ணயிக்கும். தன்னைத் தன் எண்ணங்களுடன் இணைத்துப் பார்ப்பவன் சிந்தனையாளன். சௌகரியத்தை நாடுபவன் மகளுக்குத் திருமணம் செய்ய முடிந்தால், மாப்பிள்ளை அவன் நிலைக்குக் கீழ்ப்பட்டவனாக அமைவான். வேறு வழியில்லை நான் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று என்பான். சிந்தனையை முக்கியமாகக் கருதுபவன் மகளுக்குத் திருமணம் செய்ய முனைந்தால் அவன் நிலைக்குயர்ந்த வரன் அமையும். சூழ்நிலையை மீறிய பலன் ஏற்படுவது அவனது மனத்தின் திறத்தால். நாம் எதனுடன் நம்மை இணைத்துக் கொள்கிறோமோ அது நம்மை நிர்ணயிக்கும். உடலோடு நாம் இணைந்தால் உடல் நிர்ணயிக்கும். அதாவது உடல் அடிமைப்படும். மனத்தோடு இணைந்தால் மனம் வாழ்வை அடிமைப்படுத்தும்.

ஒரே மாதிரியான இரு இளைஞர்கள் பெருவித்தியாசமான வேலைகளில் சேர்வதும், அதிக வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வதும் உண்டு. காரணம்,

  • ஒருவர் தம்மை உயர்வுக்குரியவர்என நினைக்கிறார்.
  • அடுத்தவர் தமக்கு உயர்வில்லைஎன முடிவு செய்திருக்கிறார்.

நாம் எதை நமக்குண்டு என முடிவு செய்கிறோமோ அது நமக்குப் பெரும்பாலும் கிடைக்கும்.

படித்தவன் சிந்திப்பான். சிந்தனை சிறந்தால் அது அவனை ஆட்கொள்ளும். அந்த நேரம் உடலும் உணர்வும் மறந்து போகும், இரண்டாம்பட்சமாகும். அப்படிப்பட்டவனுக்கு ஒரு வியாதி வந்தால் உடல் பயம் எழாது. யோசனை செய்வான். மருந்து சாப்பிடுவான். டாக்டர் இந்த வியாதி இப்படித்தான் ஒன்றும் செய்யமுடியாது. குணமாக 6 மாதமாகும் என்றால், டாக்டர் சொல்வதைப் புறக்கணித்துவிட்டு என்ன செய்யலாம்என நினைப்பான்.

உடலசைவுகளே முக்கியம் என்பவன் வியாதி வந்தவுடன் பயப்படுவான். உடல் நடுங்கும். செய்வதறியாது திகைப்பான்.

டாக்டரிடம் போக வேண்டும்என இதுபோன்றவர்க்கு அநேகமாகத் தோன்றாது. உடலே முக்கியமானதுஎன நினைத்ததால், அதற்கே பங்கம் வந்துவிட்டதாகத் தோன்றும். ஏதோ பெரிய விபத்து வந்துவிட்டதைப்போல் வீடு முழுவதும் அலறும்.

உடல் மனத்தை நிர்ணயிக்கும் பாணி இதுவேயாகும்.

  • ஆன்மாவே முக்கியம் என்பவர் உடலையும், மனத்தையும் புறக்கணிப்பார்.
  • இறைவனே முக்கியம் என்பவர் அதற்குரிய அறிகுறிகளைக் கண்டு ஆன்மாவையும் புறக்கணிப்பார். பிள்ளையைக் கறி சமைத்துக் கொடுஎன சிவனடியார் கேட்பது சிவபெருமானே கேட்பதுஎன்று நினைத்தவர்க்கு உடலில்லை, உயிரில்லை, மனத்தின் எண்ண அலைகளில்லை, ஆத்மாவுக்குரிய மோட்சம் நினைவில்லை.
  • அன்னையே முக்கியம், வாழ்வில் இறைவனே முக்கியம் என்பவர் அடுத்தது என்ன, அங்கு என்ன ஆனந்தம் எழும், எப்படி நாம் சரணாகதியை இப்பொழுது பூர்த்தி செய்யலாம் என்ற கருத்து சந்தோஷமாக எழும்.

*******

  1. சிந்தனை மூளையின் செயல். சிந்தனைக்குரியவன் (மூளையின்) ஜடத்தின் செயலால் நிர்ணயிக்கப்படுவான்.

சிந்தனைக்குச் சிறப்பன்று.

உடலசைவுகளைவிடச் சிந்தனை உயர்ந்தது. அது நம் வாழ்வை உடலிலிருந்து மனத்திற்கு மாற்றும். அதற்கடுத்த கட்டம் உண்டு. இங்குச் சிந்தனையை உடலுக்குரிய செயலாகக் கருதி, அதைவிட உயர்ந்த நிலையை அடைய முடியும்எனக் காட்டப்படும்.

படிக்காதவனைவிடப் படித்தவன் உயர்ந்தவன். பட்டத்திற்காகப் படித்துப் பட்டம் பெற்றவனைவிட அறிவுக்காகப் படித்தவன் அதிக உயர்வுள்ளவன்.

ஊர்ப் பஞ்சாயத்தைவிட முனிசிபல் சட்டம் சர்க்கார் அதிகாரத்தைச் செலுத்தும். முனிசிபாலிட்டியிலும் ஊரார் இருப்பதால், அதைவிட கோர்ட் சர்க்கார் அதிகாரத்தை நல்ல முறையில் செலுத்தும்.

சிந்திப்பவன் வாழ்வு ஜடத்திற்குக் கட்டுப்படாமல் மனத்திற்குக் கட்டுப்படும். சிந்தனையின்றி மௌனமானவன் வாழ்வு ஆன்மாவுக்குக் கட்டுப்படும். செயலிருந்து சிந்தனைக்கும், சிந்தனையிலிருந்து மௌனத்திற்கும் மனிதன் நகர்ந்து வந்தால் ஜடத்திலிருந்து மனத்திற்கும், மனத்திலிருந்து ஆன்மாவுக்கும் அவன் வாழ்வு மையம் நகர்ந்துவரும்.

(intellect is inert) அறிவு ஜடத்தின் உணர்வு என்பது பகவான் கூற்று. இரு நூற்றாண்டுகட்குமுன் உலகம் மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்தது. அம்மனிதர்களைப் பார்த்து பாரதி நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்தால் என்றான். எங்கும் அவனுக்குப் பிசாசு தெரியும். பிசாசின் வகைகளைப் பிரித்து கதை எழுதுவான். "பெரிய துரை எனில் உடல் வேர்ப்பான்'' என்பவை இந்நாட்டு நிலை. ஐரோப்பாவில் பாதிரிமார் ஆட்சி நிலவியது. அவர்களை மக்கள் நம்பியதால் அவர்கள் சொல்லிய "கதைகள்'' அனந்தம். அரசனே அவர்களை எதிர்க்க முடியாத நிலையும் ஏற்பட்டது. பைபிளைப் படிக்கவும் அனுமதியில்லை. பாதிரிகள் மட்டுமே பைபிளைப் படிக்கலாம். இந்தியாவில் வேதத்தைப் படிக்க அனுமதியில்லை. விஞ்ஞானம் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்தது, உடைத்தது. பாதிரிகளிடமிருந்து மனிதனுக்கு விடுதலை கொடுத்தது. ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆயிரம் மருந்துகளைக் கண்டுபிடித்தது. வலியை வென்றது. நோயை வென்றது. புயலையும்,

வெள்ளத்தையும், அம்மையையும், காலரா, பிளேக்கையும் வென்று வருகிறது. இலட்சக்கணக்கான விந்தைகளைப் புரிந்து வாழ்வை சுவர்க்கமாக்கிற்று. நூறாண்டில் நாம் பெற்ற சௌகரியம் கணக்கில் அடங்காதது. இது மனிதன் உடலசைவுகளைவிட்டுச் சிந்தனையை நாடியதைப் போன்றது. பகவான் விஞ்ஞானத்தை "மூடநம்பிக்கை'' என்கிறார். அதன் சாதனைகள் "மூளை'' intellect,physical mind   ஜடத்தின் சாதனை என்கிறார். மூளையைக் கடந்து அறிவுக்கு வந்தால், சிந்தனையைக் கடந்து ஆன்மாவுக்கு வரலாம். Divine Life தெய்வீகவாழ்வு அதனடிப்படையில் ஏற்பட்டது. மூடநம்பிக்கைக்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள மாற்றம் விஞ்ஞானத்திற்கும், சிந்தனையைக் கடந்த அறிவுக்கும் உண்டு. அதையே பூரண யோகம் நாடுகிறது.

சிந்தனை என்றால் என்ன? அது எதன் செயல்? மூளை என்பது மனத்தின் பீடம். மூளை என்பது தசையாலான உறுப்பு. சிந்தனை அதன் செயல். கண் உறுப்பு, பார்வை அதன் செயல் என்பதுபோல், மூளை என்பது ஜடமான கருவி.

  • தத்துவம் மனத்தின் எண்ணம்.
  • சிந்தனை மூளையின் செயலான எண்ணம்.

மூளையைச் செயல்பட வைப்பன புலன்கள். கண் பார்க்கிறது, காது கேட்கிறது. நாம் ஒருவரைப் பார்க்கிறோம். கண் அவர் உருவத்தை மூளைக்குச் சொல்கிறது. உண்மையில் பார்ப்பது கண் அன்று, மூளையே. மூளை கண்மூலம் பார்க்கிறது. நாம் பார்த்தவர் உருவம் மூளையில் பதிகிறது. அது புலனறிவு. இப்புலனறிவின் அடிப்படையில் மூளை செயல்படுவது சிந்தனையாகும்.

மனம் என்ன செய்கிறது? நாம் பார்த்தவர் உருவம் உயரமானது, கனமானது என்றால், புலன் கொடுத்த உயரம், எடையை ஒதுக்கிவிட்டு - புலனறிவை விலக்கி - மனம் மூளையிருந்து உயர்ந்து சிந்திப்பது சிந்தனை. இது மனதிற்குரிய சிந்தனை. பார்த்தவர்

உருவமும், எடையும் மூளைக்கு அதிர்ச்சி தருகிறது, பயம் எழுகிறது, உடல் பயத்தால் நடுங்குகிறது. மூளையின் செயல் இம்மனிதன் செயலை நிர்ணயிக்கின்றது.

மனம் மூளையிலிருந்து விடுபடும் தன்மையுடையது. உயரம், எடையைப் புறக்கணித்து மனம் "யார் இது?'' எனக் கேட்கிறது. இவன் கூலிவேலை செய்பவன் என்ற பதில் மனத்தை நிதானமாகச் செயல்படச் செய்கிறது. இம்மனிதனை ஜடமான மூளை நிர்ணயிக்காது.

ஸ்ரீ அரவிந்தம் பொதுவாக மனித நம்பிக்கையின் அடிப்படையை மாற்றி, மனம் உடலை நிர்ணயிக்கிறதுஎன்று கூறுகிறது. நாம் உடல் மனத்தை நிர்ணயிக்கிறதுஎன்று நம்புகிறோம்.

Matter என்ற அத்தியாயம் Life Divineஇல்கடினமானது. Knot of Matter  அடுத்தது. Matter   என்ற அத்தியாயத்தில் Matter சச்சிதானந்தம் என்று முடிகிறது.Knot of Matter    என்ற அத்தியாயத்தின் முடிவில் மனிதன் ஜடத்தைப் பற்றிய கருத்தை மாற்றிக்கொண்டால், ஜடம் திருவுருமாறும், ஜடம் சச்சிதானந்தமாகும். ஜடம் சச்சிதானந்தமானால் Kingdom of heaven on earth  பூலோகம் சுவர்க்கமாகும். அதன் இதர அம்சங்கள்:

  • மனிதன் சிந்தனையைக் கடந்தால் தெய்வமாவான்.
  • சமூகத்தை முடிவாகக் கருதாமல், மனத்தையே முக்கியமாக மனிதன் கருதுவதைத் தவிர்த்தால், உலகில் வறுமையிருக்காது, கவலை சந்தோஷமாக மாறும்.

********

  1. மனத்தின் தலையாய செயல் சிந்தனையில்லை, புரிந்துகொள்வதாகும். சிந்தனையின்றிப் புரிந்தால் மனம் உடலை நிர்ணயிக்கும்.

சிந்திக்காதே, புரிந்து கொள்.

உடலின் முக்கியக் கடமை செயல். உணர்வின் தலையாய கடமை செயலுக்குரிய சக்தியை அளிப்பது. அதுபோல் மனத்தின் முதல் பொறுப்பு செயல் அன்று, சக்தியைத் தருவதில்லை, புரிந்து கொள்வது.

சிந்தனையில் ஆரம்பித்து புரிவதில் முடிவது மனத்தின் வாழ்வு. நாம் சிந்தனையில் ஆரம்பித்து, சிந்தனையிலேயே நின்றுவிடுகிறோம். கல்லூரிக்குப் போன மாணவன் 4 வருஷத்திலோ, 8 வருஷத்திலோ படிப்பை முடித்துவிட்டு வாழ்வை ஆரம்பிக்கவேண்டும். 30, 40 வருஷமாகப் படித்துக்கொண்டேயிருப்பது வாழ்வாகாது, முறையாகாது.

நாம் சிந்தித்துக்கொண்டேயிருப்பதால் திறனற்றவராகிறோம். 20 ஆண்டாக ஒருவன் படித்துக்கொண்டிருந்தால் குடும்பம் அவன் செலவை ஏற்கும், குடும்பத்திற்கு அவன் கட்டுப்படவேண்டும். 6ஆம் வருஷம் படிப்பை முடித்து வேலைக்குப் போயிருந்தால், 14ஆம் வருஷம் குடும்பம் அவனுக்குக் கட்டுப்படும்.

  • சிந்தனை ஆரம்பத்தில் அவசியம்.
  • சிந்தனை புரிவதில் முடியவேண்டும்.
  • தொடர்ந்த சிந்தனையால், புரிந்துகொள்ளும் திறமை போய்விடும்.
  • சிந்திப்பதை நிறுத்தி, புரிந்துகொள்ள முயன்றால், செயல் உருவாகும்.
  • செயல் மனத்தால் உருவாக்கப்பட்டால், மனம் தலைமை தாங்கும், உடல் கட்டுப்படும்.
  • இது வாழ்வு முன்னேற உதவும்.
  • சிந்திப்பது தொடர்ந்தால் உடல் மனதை நிர்ணயிக்கும்.
  • உடல் மனத்தை நிர்ணயித்தால், படிப்பில்லாதவன் நாட்டின் தலைவனாகி ஆட்சி செலுத்துவது போலாகும்.
  • நாம் குடும்ப வாழ்வில் முன்னேற, அறிவின் அடிப்படையில் வாழ்வை அமைக்க, தேவையற்ற சிந்தனையை நிறுத்தி, புரிந்துகொள்ள முயன்று, அதன் அடிப்படையில் நடந்தால் வாழ்வு வளம் பெறும், அதிர்ஷ்டம் பிறக்கும்.

மனம் என்ற சொல் மனஸ் என்ற சமஸ்கிருதச் சொல். 5 புலன்களின் மையம் மனம். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் உணர்வுகளை மூளையில் அறியும் திறன் மனம். மனம் புலனுணர்வை அறியும் பாகம். புத்தி என்பதே அறிவுக்குறைவிடம். நடைமுறையில் நாம் மனம் என்ற சொல்லை mind என்பதின் தமிழாக்கமாகப் பயன்படுத்துகிறோம். mind என்பது மனமும் புத்தியும் சேர்ந்ததாகும். இதை மனம் என்ற சொல்லாலே நாம் பொதுவாகக் குறிக்கின்றோம்.

மனம் (mind) என்பதின் திறன்கள் பல. (thinking,feeling, memory,observation,creation,judgement,imagination,conception,perception,sensation, ratiocination,construction,ideation,opinionetc.) சிந்தனை, உணர்வு, ஞாபகம், கவனம், படிப்பு, தீர்ப்பு, கற்பனை, கருத்து, கருத்துணர்வு, பகுத்தறிவு, அமைப்பு, எண்ணமிகுதல், அபிப்பிராயம் போன்ற பல்வேறு திறன்கள் மனம்என நாம் கூறுவதற்குண்டு. இத்தனையும் சேர்ந்து நமக்குப் புரிந்துகொள்ளும் திறனை comprehension அளிக்கின்றன. புரிந்துகொள்வதற்குச் சிந்தனை நேரடியாகப் பயன்படும். சிந்தனையின்றியும் புரிந்துகொள்ள மனிதனால் முடியும். இதை நேரடி ஞானம் intution என்கிறோம்.

புதிதாக ஒருவரைச் சந்தித்துப் பழகினால், இவர் நேர்மையானவர் என்று கொஞ்சநாள் கழித்து அனுபவத்தில் புரிந்துகொள்கிறோம். அவரை நம்புகிறோம். வேறொருவர் வந்தால் நாம் இவரை அறிமுகப்படுத்தி இவர் நேர்மையானவர்எனச் சொல்ல நினைக்கும்பொழுது, வந்தவர் உடனே அவரை நேர்மையானவர் எனப் புரிந்துகொள்கிறார். நாம் பல மாதம் பழகி நேர்மையைப் புரிந்துகொண்டால், வந்தவர் பார்த்தவுடனே புரிந்துகொள்கிறார்.

எப்படி இவர் நேர்மையானவர்என உங்களுக்குத் தெரியும்எனக் கேட்டால் பார்த்தாலே தெரிகிறதல்லவா என்பார்.

அனுபவசாலிகள் பல பேரைப் பார்த்து நேர்மை எது, எது நேர்மையில்லை என்று பாகுபாடு செய்திருப்பார்கள். நெடுநாளைய அனுபவம் இன்று பார்த்தவுடனே புரிந்துகொள்ள உதவுகிறது. தகப்பனாருடைய அனுபவம் அதுபோல் பிள்ளைக்கு வருவதுண்டு. போன ஜென்மத்தில் ஆன்மா பெற்ற அனுபவமும் அதுபோல் நேரடியாகப் பொருள்களையும், மனிதர்களையும் புரிந்துகொள்ள உதவும். மனத்தை மௌனமாக்கினாலும் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும்.

சிந்தனை மூலம் புரிந்துகொள்வதைவிடச் சிந்தனையில்லாமல் புரிந்துகொள்ள மௌனம் உதவும்.

அனுபவத்தாலோ, பரம்பரையாலோ, பிறப்பாலோ, மௌனத்தாலோ ஒருவரால் சிந்தனையின்றி நேரடியாகப் புரிந்துகொள்ளமுடியுமானால், அவருக்கு நினைத்தது நடக்கும். அவர் மனம் நினைப்பதை அவர் உடலும், உலகமும் பூர்த்தி செய்யும். அவருடைய திறமை வளரும், உயரும். சிந்தனையே உயர்ந்த கருவி என்று முடிவாக நம்பும் இவ்வுலகத்தில் சிந்தனையைக் கடந்த நிலையுண்டு. அதற்கு உயர்ந்த திறனுண்டு என்று ஆன்மீகம் அறிவிக்கிறது.

******

  1. சகுனம் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஒரு திட்டத்தில் எழும். அவை வெற்றிக்கு அளவுகோல், அறிகுறிகள் வெற்றியாகப் பூர்த்தியானால், திட்டம் வெற்றியாகும். இது சட்டம், விலக்குண்டு.

வெற்றியின் அறிகுறிகள்.

சாவித்ரியைப் பிரித்துப் பார்க்கும் பழக்கம் நம்மவர்க்குண்டு. அது சொல்பவை அசரீரி போலிருக்கும். ஓர் அன்பர் அடிக்கடி அதைச் செய்தவர் தினசரி இதையே செய்வதும், அதன் அற்புதமான சொற்களை அனுபவிப்பதும், பலமுறை ஒரு நாளில் செய்வதுமாக இருந்தார்.

அன்னை பற்றிய வேறு சில புத்தகங்கள் ஒரு செட் வந்தபொழுது சாவித்ரியுடன் அவற்றையும் பார்க்க ஆரம்பித்தார். அவற்றுள் சில புத்தகங்களின் ஆசிரியரை அன்பர் அறிவார். ஆசிரியரிடம் பேசும்பொழுது தம் கேள்விகட்கு ஆசிரியர் சொன்ன பல பதில்கள் நினைவிருந்தன. அவர் எழுதிய புத்தகங்களைப் பிரித்துப் பார்த்தால் அவர் நேரடியாகச் சொன்ன பதில்கள் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அன்பருக்கு அது ஆச்சரியமாக இருந்ததே தவிர அது புரியவில்லை.

நாம் ஊன்றி மனதை ஒரு புத்தகத்திலிருத்திப் பிரித்துப் பார்த்தால், புத்தகம் ஆசிரியரின் எழுத்து உருவம் என்பதால் அவர் பேசும் அதே சொற்களைச் சொல்லவல்லது என்பதே இச்சட்டம்.

"சரி, இனி இந்த வேலையை - பிரித்துப் பார்ப்பதைக் - கைவிடுவோம்'' என்று முடிவு செய்துவிட்டார். வாரப்பத்திரிகை ஒன்றைப் படிக்க எடுத்தார். சாதாரணக் கதைப் புத்தகம் போன்ற பத்திரிகை அது. முதல் சொல் கண்ணில் பட்டது, "மனம் சந்தோஷமானால், வாழ்வு நிறைந்திருக்கும்''. ஒரு வாரம், பத்து நாட்களாக அன்பர் அன்னையின் 18 வால்யூம்களில் படித்தது "சந்தோஷம்'' என்ற தலைப்பு.

இதுபோன்ற விஷயங்களையும் காதில் போட்டுக்கொள்ளாமல் வேலையைக் கவனிப்போம்என அன்பர் முடிவு செய்தபின், எந்தப் புத்தகமும் அன்றிலிருந்து சாவித்ரிபோல் பேசுவதைக் கண்டார். மனம் அன்னையால் நிறைந்திருந்தால் கண்ணில்படும் எழுத்துகளெல்லாம் சாவித்ரியாகும் என்பது அன்னைக்குண்மை.

ஒரு பெரிய திட்டத்தை ஆரம்பித்தவர் தம் கண்ணில், காதில் படுவனவெல்லாம் சகுனங்கள் போலிருப்பதைக் காண்பார். அவை கூறும் செய்திகள் முக்கியமானவை. அவை எதிர்காலத்தைக் காட்டும், கடந்ததை உணர்த்தும், நிகழ்காலத்தை கண்ணாடிபோல் பிரதிபலிக்கும்.

******

  1. விலக்கான இடங்களில் அறிகுறிகள் தோற்பது திட்டத்தின் வெற்றியைக் குறிக்கும்.

வெற்றி தரும் கெட்டசகுனம்.

பொதுவான அறிகுறிகள் பொதுவான போக்கை உணர்த்தும். விலக்கான இடங்கள் உயர்ந்த நல்ல அறிகுறிகளைக் காட்டும், எதிரானதையும் காட்டும். இவைகளை நாம் சரிவர அறிய யலவேண்டும். அதற்கு வேண்டியது சட்டமன்று, பக்குவமான மனப்பான்மை. இவற்றுள் சில,

  • சிறிய நல்ல அறிகுறி பெரிய நல்லதைக் காட்டும்.
  • தவறான இடத்தில் தவறான அறிகுறி நல்லதற்கடையாளம்.
  • பெரிய இடத்தில் பெரிய நல்ல அறிகுறி நமக்குச் சிறிய நல்லது வருவதைக் குறிக்கும்.
  • இடம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். அறிகுறி நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். முடிவை நம் மனநிலை பக்குவமாக அறியவேண்டும்.

தொழிலதிபர் புதிய சரக்கை மார்க்கட்டில் அறிமுகப்படுத்தும்பொழுது மார்க்கட் விரும்பினால் பெரிய இலாபம், இல்லாவிட்டால் பெரிய நஷ்டம் என்ற நிலை. எதிர் வீட்டுக்காரர் வந்து தம் பையன் வகுப்பில் முதல் மார்க்கும் பரிசும் பெற்றதைச் சொல்லி சந்தோஷப்பட்டார். இந்தப் பையன் பாஸ் செய்யமுடியாதவன்,

முதல்மார்க் வாங்கியுள்ளான் என்பதை, "என் சரக்கு மார்க்கெட்டில் முதல்மார்க் வாங்கும்'' என எடுத்துக்கொண்டார். மார்க்கட்டில் சரக்கு பரிசும் பெற்றது. இது நேரடியான அறிகுறி. தெளிவானது. அதே சமயம் அவர் குமாஸ்தா வந்தான், "நான் கேட்ட எந்த இடத்திலும் கடன் கிடைக்கவில்லை, அதனால் நீங்கள் அவசியம் உதவ வேண்டும்'' என்றான். இவன் சூதாடி, மகளுக்கு ஆப்பரேஷன் எனப் பலரிடமும் கடன் கேட்டிருக்கிறான். கிடைக்கவில்லை. சூதாடிக்கு "இல்லை'' என்பது நல்ல சகுனம். இந்தியாவுக்கு உலக வங்கி $ 1 பில்லியன் கடன் கொடுத்தது என்ற செய்தி கண்ணில்பட்டால், நமக்கு நம் அளவில் நம் காரியம் பலிக்கும்எனப் பொருள். உள்ளூர் காலேஜில் நம் பையன் முதல் மார்க் வாங்கியிருந்தும் இடம் கிடைக்கவில்லை என்றபொழுது, அந்த ஆபீஸ் குமாஸ்தா நம் குடும்பத்திற்கு எதிரி. அதனால் அதுபோல் நடந்திருக்கிறது எனில் சரக்கை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தும் நேரம் "முதல்மார்க்கும் இடம் பெற்றுத் தராததுபோல் நல்ல சரக்குக்கும் வரவேற்பிருக்காது'' என நினைக்கத் தோன்றும். மனம் நிதானமாக (without reaction) இருந்தால் அடுத்த தபாலில் பெரிய காலேஜில் இடம் கொடுத்து தபால் வருகிறது. மனம் சஞ்சலப்பட்டிருந்தால் இந்த நல்லது நடந்திருக்காது. சரக்கு பிறகு பார்த்தபொழுது அதேபோல் வெற்றி பெற்றது.

********

  1. சட்டத்திற்கும் விலக்கிற்கும் இவை புறம்பானவை. அன்னை செயல்படும் இடங்கள் பொதுவாக அப்படிப்பட்டவை. இத்திட்டங்கள், அறிகுறிகள் வென்றாலும், தோற்றாலும் வெற்றி பெறும். மேலும் ஒரு நிலையுண்டு. திட்டமே தோற்றாலும் "வெற்றி'' நிச்சயமாக உண்டு.

தோற்றாலும், வென்றாலும் வெற்றி.

தண்ணீர் சூடானால் ஆவி வரும். ஆவி எழுந்தால் தண்ணீர் சூடாகிவிட்டதுஎன்று பொருள். இது (ஸ்தூல உலகில் material life) நிஜ உலகில் நடப்பதால் நமக்கு வியப்பாக இல்லை. நாம் ஒரு காரியத்திற்குப் போகிறோம். ஒரு வீடு வாங்கப் போகிறோம். பேரம் படியுமாஎனத் தெரியவில்லை. காலையில் 8 மணிக்கு நாம் வீட்டிலிருந்து புறப்படுகிறோம். விற்பவர்கள் காலை ஆறு மணிக்கே நாம் கேட்ட விலைக்குக் கொடுக்க முடிவு செய்துவிட்டார்கள் என்றால், அவர்கள் மனதில் ஏற்பட்ட நல்ல முடிவு, சூட்சும உலகில் நம் மனதை எட்டித் தொடும். இரவெல்லாம் நாம் பதைபதைப்பாக இருந்தால் 6 மணிக்கு அவர்கள் முடிவெடுத்த நேரம், அம்முடிவு சூட்சுமமாக நம் மனதை எட்டியவுடன் நம் மனம் அமைதியடையும். நாம் சூட்சுமமானவர்களானால் அதை அறிவோம். இல்லையேல் இல்லை. வீடு வாங்குவது நமக்கு வாழ்வில் ஒரு தரம். முக்கியமான செயல். பெரிய காரியம். வீடு வாங்கப் பணம் பெட்டியிருக்கிறது. நெல் விற்று வந்த பணம் அது. அந்த வீட்டை ஆளப்போவது மனைவி, சொத்தாகப் பெறப்போவது மகன். வீட்டை வாங்கியபின் நம் அந்தஸ்து உயரும். இன்று சகஜமாகப் பேசும் அண்ணன், அண்ணி, மாமன் மகன் வீடு வாங்கியபின் நமக்கு மரியாதை தருவார்கள். வயதில் பெரியவர்களுக்கு மரியாதை வந்தால் இளைஞர்களிடம் மரியாதை உணர்வைப் பிரியமாகக் காட்டுவார்கள். சிக்கனமான அத்தை எப்பொழுதும் வீட்டிற்கு வெறும்கையாக வருபவர்கள் வீடு வாங்கியபின் இரண்டு பழம் கொண்டு வருவார்கள். தெருவில் நடந்துபோகும்பொழுது தெரிந்தவர்களைக் கடந்துசென்றால் அவர்கள் இன்று நம்மைக் கவனிக்காமல் செல்பவர்கள், வீடு வாங்கியபின் பார்த்துச் சிரித்து வணக்கம் சொல்வார்கள். அவர்கள் அத்தனைப் பேருக்கும், வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களுக்கும், நடக்கும் நிகழ்ச்சிகள் அத்தனைக்கும் விற்பவர்கள் காலை 6 மணிக்கு முடிவு எடுத்தவுடன் விஷயம் தெரிந்துவிடும். நெல்லை உற்பத்தி செய்து வீடு வாங்கப் பணம் கொடுத்த நிலத்திலுள்ள பாளை வெடிக்காத தென்னை மரம் பாளை வெடித்த செய்தி நாம் புறப்பட ஒரு மணி நேரத்திற்குமுன் வரும். சிரித்தே அறியாத மனைவியின் முகத்தில்

புன்னகை எழும். தினமும் 7 மணிவரை தூங்கும் மகன் அன்று காலையில் எழுந்து சுறுசுறுப்பாக இருப்பான். அண்ணி தற்செயலாய் வந்து சற்று நேரம் பிரியமாக என்றுமில்லாமல் பேசுவார்கள். அத்தை வீட்டிலிருந்து பக்ஷணம் வரப்போவதாகச் செய்தி வரும். தெருவில் இறங்கியவுடன் எதிர்வீட்டுப் பங்காளி சந்தோஷமாக விசாரிப்பது புதியதாகத் தோன்றும். ஆபீசில் உடன் வேலை செய்பவர் வருஷக்கணக்காகப் பேசியறியாதவர் வழியில் பார்த்து சிரித்துப் பேசி, "எங்கோ முக்கியமாகப் போகிறீர்கள் போருக்கிறது. லீவு லெட்டர் தருவதானால் நான் எடுத்துப் போகிறேன்'' என்று கூறுவது வினோதமாக இருக்கும். அவரைத் தாண்டிப் போனால் சுமங்கலி நிறைகுடம் நீர் எடுத்துவருவாள். இதுவரை எதையும் கவனிக்காவிட்டாலும், சுமங்கலியையும் நிறைகுடத்தையும் பார்த்தவுடன் நல்ல சகுனம், பேரம் முடியும்என்று நினைக்கிறோம். எல்லாப் பொருள்களும், எல்லா நிகழ்ச்சிகளும் சூட்சும உலகத்தில் உயிரோடு இருந்து சகுனமாகின்றன என்றாலும், நமக்குச் சுமங்கலியும் நிறைகுடமும் நல்ல சகுனங்களாகத் தெரிகின்றன. ஏனெனில் அவற்றைமட்டும் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். அனைத்தையும் நாம் தெரிந்துகொள்ளவில்லை.

வீடு பேரம் முடிவதை இவை சகுனமாகக் காட்டுவதுபோல், அந்த வீட்டிற்குப் போனபின் பிரமோஷன் வரப்போவதையும், வீட்டை வாங்கியபின் அதன்மூலம் கேஸ் வரப்போவதென்றால் அதையும் சகுனங்கள் காட்டும். நாம் அவற்றைக் கூர்ந்து பயின்றிருந்தால் தெரியும்.

  • நல்லது தொடர்ந்து நல்லதாக இருப்பது,
  • நல்லது மூலம் அதிர்ஷ்டம் வருவது,
  • நல்லதில் கெட்டது கலந்திருப்பது,
  • நல்லதாக ஆரம்பித்து கெட்டதாக முடிவது,
  • நல்லதாக ஆரம்பித்து கெட்டதாக மாறி முயற்சியால் அதிர்ஷ்டமாவது,



book | by Dr. Radut