Skip to Content

பகுதி 2

  1. உலகத்தில் துன்பம் இல்லை என்ற கருத்தை மனம் நிரந்தரமாக ஏற்றுக் கொள்ளுதல் நன்று. அது மனத்திற்கு ஆன்மீகத்தை அளித்து பேரின்பத்தை நிலை நாட்டும்.

இன்ப துன்பங்களைக் கடந்த மனம் ஆன்மீகப் பேரின்பத்தை நிலையாகப் பெறும்.

பகவான் ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும் அறிவது பாக்கியம். அவர்களை ஏற்றுக்கொள்ளுதல் அதிர்ஷ்டம். ஏற்றுக்கொள்வதில் பல நிலைகள் உள்ளன. ஆன்மா அவர்களை ஏற்றுக்கொண்டு, நம் மனத்தின் ஒத்துழையாமையை மீறி, அவர்களை வந்தடையும் சந்தர்ப்பங்களைக் கொடுத்து, நம்மை ஆசிரமம் வரவைப்பது முதல் நிலை. இந்நிலையில் நாம் அவர்களை வணங்குவோம். ஆனால் அவர்கள் கோட்பாடுகள் எதையும் மனம் அங்கீகரிக்காது. அவர்கள் கோட்பாடுகளை மனம் ஏற்றுக்கொண்டு முழுவதும் நம்பிய பின்னரும், உணர்வு ஏற்காது. உணர்வு ஏற்ற பின்னரும் செயல் ஏற்காது.

ஆன்மாவின் தெளிவில் இங்கு வந்த நாம், அன்னையின் கோட்பாடுகள் அனைத்தையும் மனதால் அங்கீகரிக்க முடியாவிட்டாலும், ஏதேனும் ஒன்றை நம்புவது நல்லது, முதற்படி. உலகில் துன்பம் இல்லை என்பது ஒரு கோட்பாடு. மனம் இதை ஏற்றுக்கொள்ள முயன்றால், உள்ளே ஏற்பு இருக்காது. பரம்பரையாக நாம், துன்பம் கர்மவினையால் ஏற்பட்டது, அவரவர்கள் அதை அனுபவிக்கின்றார் என்று நம்புகிறோம். துன்பமேயில்லை என்று பகவான் சொல்வதால் அதில் உண்மையிருக்கும் என்று புரியாமல் ஏற்றுக்கொள்ளலாம். அதுவும் நல்லதே.

துன்பம் என்பது அகந்தைக்கே. இயற்கையில் துன்பமில்லை என்பதே அவர் கொள்கை. வெயிலில் விளையாடும் பையனைப் பார்த்து நாம் பரிதாபப்பட்டால், பரிதாபம் நம் மனதில் தானிருக்கிறது. பையன் வெயிலில் விளையாட பிரியப்படுகிறான். அவனுக்கு விளையாட்டில் சந்தோஷம், வெயில் தெரிவதில்லை. பரிதாப உணர்வு நம் நோக்கத்தில் மட்டும் ஏற்பட்டதே தவிர பையன் பரிதாபப்படும் நிலையில்லை என்பதே உண்மை.

அதேபோல் அகந்தை கண்கொண்டு நாம் உலகத்தைப் பார்த்தால் உலகத்தில் துன்பம் தெரிகிறது. நமக்கு அகந்தையில்லை எனில் உலகில் துன்பமில்லை என்பது அவர் விளக்கம். இதை மனம் ஏற்றுக்கொள்ளுதல் நல்லது. பகவானை நாம் வழிபடுவதற்கு அர்த்தம் அவர் சொல்வதை நம்புவது. அவர் சொல்வதையும் நம்பமுடியாமல் அவரை வழிபடுதல் அர்த்த புஷ்டியுள்ளதாகாது.

பகவான் சொல்லியதால் நான் உலகத்தில் துன்பமில்லை என நம்புகிறேன். அது சரி, என் வாழ்க்கையில் துன்பம் இருக்கிறதே. அதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும் என்றால், முதலாவதாக பகவானை ஏற்றுக்கொண்டவுடன் நம் துன்பம் குறைய ஆரம்பித்தது உண்மை என விளங்கும். மேலும் உலகில் துன்பமில்லை என்று அவர் சொல்வதை மனம் ஏற்றுக்கொண்ட சில நாட்களுக்குள் நம் வாழ்க்கையில் துன்பம் மேலும் குறைவது தெரியும். இவையிரண்டும் அவர் கூற்றுக்கு ஒரு சாட்சி.

அத்துடன் அகந்தையால்தான் துன்பம் வருகிறது என்கிறார். அதை நம் வாழ்வில் சோதனை செய்து பார்த்தால், நமக்குத் துன்பம் உள்ள இடங்களில் நான் என்ற முனைப்புள்ள இடங்கள் இருப்பது தெரியும். என் மரியாதை என்னாவது? அப்படி ஒரு உதவி எனக்குத் தேவையில்லை, என் வீட்டாரைச் சொன்னாலும், என்னைச் சொன்னாலும் ஒன்றுதான் போன்ற உணர்வுகள் மேலிட்ட இடமாக இருக்கும். இந்த இடங்களில் நான் பிறருக்கு என்ன புத்திமதி சொல்வேனோ அதை ஏற்றுக்கொள்ள மனம் தயாராக இருந்தால் இந்தப் பிரச்சினைகள் கரைய ஆரம்பிக்கும். ஏற்றுக்கொண்டால், கரைந்துவிடும்.

மீதியுள்ள இடங்கள் பாசம், பற்று மிகுதியானவை. கணவன், மனைவி, பெற்றோர், உடன் பிறந்தவர், குழந்தைகள் மீதுள்ள பாசத்தால் நாம் வேறு இடத்தில் விட்டுவிட்ட அகந்தைப் பிரச்சினைகள் வரும். பாசம், பற்று அகந்தையின் உணர்வுக்குரிய சின்னங்கள். நியாயத்தை ஏற்று, பாசத்தை விலக்கினால், இன்றுள்ள பிரச்சினை விலகும். அதனால் ஏற்பட்ட துன்பமும் விலகும். இது தவிர வேறு துன்பம் உண்டு. அவை

நம் அறிவுக்கெட்டாதவை. அவை நோயாகவோ, வேறு உருவத்திலோ இருக்கும். அகந்தையை விலக்க முடிவு செய்து அதன் பின் பிரார்த்தனை செய்தால் அப்பிரச்சினைகள் கரையும். துன்பம் நம் வாழ்வில் 99 பாகம் மறையும். இது நாம் பெறும் ஆன்ம விளக்கம். அதற்குரிய பேரின்பம் வந்து நிலைத்திருப்பதைக் காணலாம்.

******

  1. கல்வி மனிதனுடைய பழக்கத்தையும் நடத்தையையும் மாற்றும். அனுபவம் சுபாவத்தை மாற்றப் பெரிதும் உதவும்.

நடத்தையை மாற்றும் கல்வி. சுபாவத்தை மாற்றும் அனுபவம். கல்வி அறிவை வளர்ப்பது. அறிவு பழக்கத்தையும், நடத்தையையும் நிர்ணயிப்பது. எனவே கல்வி உயர்ந்தால் பழக்கமும், நடத்தையும் உயரும். கல்வியால் விவரம் தெரிவதால் மூட நம்பிக்கைகளும், பயமும், குறையும், தெளிவு ஏற்படும். அதற்குரிய நல்ல பழக்கமும், நடத்தையும் ஏற்படும். இன்று நமக்கு 40 வயதானால், நம்முடன் சிறு வயதிலிருந்து பழகிப் படிக்காமலிருப்பவர்கள், 5ஆம் வகுப்புடன் நிறுத்தியவர்கள், 8ஆம் வகுப்போடு விட்டவர்கள், S.S.L.C. முடித்தவர்கள், B.A. படித்தவர்கள், M.A. படித்தவர்கள், டாக்டர், இன்ஜீனியர் படித்தவர்கள் ஆகியவரை நாம் நினைவுபடுத்திப் பார்த்தால் படிப்பு உயரும்பொழுது பழக்கமும், நடத்தையும் பொதுவாக உயர்வதைப் பார்க்கலாம். நம்மைவிட அதிகப் படிப்புள்ளவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பழக்கத்தில் அதற்குத் தகுந்தாற்போல் மாறியுள்ளது தெரியும். இதற்குப் பொது விதிவிலக்குண்டு.

அறிவு மனநிலையை மட்டுமே உயர்த்தும். உணர்வு நிலையை அறிவு அதிகமாகத் தொடாது. அதனால் சுபாவம் உணர்வு மூலம் செயல்படுவதால் சுபாவத்தைப் படிப்பு அதிகமாகப் பாதிக்காது. படித்தும் சுபாவம் மாறாதவர்களைப்பற்றி நாம் பலவாறு கேள்விப்படுகிறோம்.

M.A. படித்தவர், எடுத்ததற்கெல்லாம் கோபப்படுகிறார். படித்து என்ன பயன்?

பேராசிரியராக இருக்கிறார். கடன் வாங்கத் தயங்குவதில்லை. இவ்வளவு படிப்பும் கடன் வாங்கும் பழக்கத்தை மாற்றவில்லையே.

சுயநலமி என்று இவனைச் சிறு வயதிலேயே அறிவோம். எல்லாப் பட்டங்களும் பெற்ற பின் அப்படியே இருக்கிறான். அதில் மாற்றமில்லை.

கருமித்தனம், பொறாமை, எரிச்சல், சந்தேகம், ஆசை போன்ற சுபாவங்கள் படிப்பால் அடிப்படையில் மாறுவதில்லை. ஓரளவு வெளிப்படுவதில் குறையும். சிறுவயதிலேயே பெரிய உத்தியோகத்திற்குப் போனவர்கள், தகப்பனாருடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள், வாழ்க்கையில் அடிப்பட்டவர்கள், ஏமாந்தவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள், அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள், பொறுப்பான ஸ்தாபனங்ளில் வேலை செய்பவர்களை 10 ஆண்டு கழித்துப் பார்த்தால், அவர்கள் சுபாவம் பெரிய அளவு மாறியது தெரியும். விளையாட்டுத்தனமாக 28 வயதுவரை இருந்தவர்க்குப் பொறுப்பு வந்திருக்கும். சுயநலமாக மட்டுமே செயல்பட்டவர் சுயநலம் காரியத்தைக் கெடுத்துவிடும் என்று புரிந்து கொண்டிருப்பார். ஓட்டைவாய் என்று பெயர் வாங்கியவர்கள் விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளக் கற்றுக் கொண்டிருப்பார்கள். கருமியாக இருந்தவர்கள், ஓரளவு மாறியிருப்பார்கள். இவர்களை அறிந்தவர்கள் எப்படி இவ்வளவு மாற்றம் வந்தது என்று நினைப்பார்கள், அடிப்படையான சுபாவம் மாறாது. என்றாலும் அனுபவம் சுபாவத்தை மாற்ற உதவும். கல்வி பழக்கத்தையும், நடத்தையையும் மாற்ற உதவும். கல்வியும், அனுபவமும் சேர்ந்த இடத்தில் நல்ல மாற்றங்களிருக்கும்.

அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்வில் 10 அல்லது 20 வருஷத்தில் கிடைக்கும் பலன் ஒன்று அல்லது இரண்டு வருஷத்தில் கிடைக்கும். வாழ்க்கையில் கிடைக்காத நல்ல மாற்றங்கள் அன்னையிடம் கிடைக்கும். அன்னை நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி செய்தால் பெரிய மாற்றங்கள் சுபாவத்திலும், நடத்தையிலும் காணலாம். இரண்டு ஆண்டுக்கு முன் பார்த்தவர், எப்படி இவ்வளவு

பெரிய மாற்றம் ஏற்பட்டது? பழைய நண்பரைக் காணோம். நீங்கள் புதிய மனிதராகிவிட்டீர்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு. அன்னை மனிதர்களை மாற்றி விடுவாரோ, ஆச்சரியமாக இருக்கிறதே என்பதை நாம் அடிக்கடி கேட்கலாம்.

கல்வி, அனுபவம், பதவி, செல்வம், செல்வாக்கு மனிதனை உயர்த்தும்; மாற்றும். அன்னையை வழிபட்டால் அத்தனையும் சேர்ந்து உயர்ந்த அளவில் கிடைக்கும் என்பதை அன்பர்கள் தங்கள் சொந்த வாழ்விலும், பிறர் அனுபவத்திலும் கண்டுள்ளனர்.

*******

  1. தனக்குரியவற்றை எல்லாம் தன் அகந்தையின் உரிமையாகக் கருதுகிறான் மனிதன். அகந்தையை இழந்தபின் அவனையும், அவன் உடமைகளையும் இறைவன் ஆட்கொள்வான்.

மனம் விழையும் சரணாகதியை, ஜீவன் ஏற்றுக் கொள்ளும் தருணம், ஆன்மா மலரும் அற்புத நேரமாகும்.

******

  1. மனம் விழையும் சரணாகதியை ஜீவன் ஏற்றுக்கொள்ளும் தருணம் ஆன்மா மலரும் அற்புத நேரமாகும். அவ்வற்புதத் தருணத்தை ஜீவனின் அந்தரங்கம் விழித்து ஏற்றுக் கொள்ளும். புலன்களின் ஸ்பர்ஸத்தை விட தெளிவான விளக்கம் அது.

அந்தரங்க ஸ்பர்சம் ஆத்மாவின் ஸ்பர்சம்.

*******

  1. உண்மையின் அடிப்படையில் எதிர்பார்ப்பது நம்பிக்கை, ஆசையின் அடிப்படையில் எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை.

உண்மைக்கு நம்பிக்கை; ஆசைக்கு மூடநம்பிக்கை. புத்திசாலியான மாணவனுக்கு 23% மார்க் வந்தால், அதை மீண்டும் சோதனை செய்ய விண்ணப்பித்தால்,

மார்க் 83 % என்று வருகிறது. மக்கு அதே சோதனையைச் செய்தால் 23% ஊர்ஜிதமாகும்.

******

  1. ஓர் இரகசியம் தெரிந்தால் அந்த விஷயத்தை ஜெயிக்கலாம். உலகத்தின் இரகஸ்யம் தெரிந்தால் உலகை வெல்லலாம். மனித உடல் சத்தியஜீவனாகும் இரகஸ்யத்தை அன்னை தேடினார். உணர்வுக்குரிய இரகஸ்யம் உண்டா? அறிவுக்குரிய இரகஸ்யம் உண்டா? செல்வத்திற்குரிய இரகஸ்யம் எது? முன்னேற்றம், கல்வி, நாகரீகம் ஆகியவற்றிற்கு இரகஸ்யம் உண்டா?

இரகஸ்யமில்லாத இடமில்லை.

விவரம் தெரியாமல் நெடுநாளாக ஒரு பலனுக்காக ஆசைப்படுபவர்கள், அப்பலனைப் பெற்றவர்களைக் கண்டு பொறாமைப்படுவதுடன், எப்படி இவர்களுக்கு எல்லாம் இது கிடைக்கிறது. நமக்கு மட்டும் கிடைப்பதில்லை. இந்த இரகஸ்யம் எப்படிக் கிடைக்கும் என்று நினைப்பார்கள்.

அதுபோல் ஆசைப்படுவது பணம், அந்தஸ்து, புகழ், செல்வாக்கு, மரியாதை போன்றவற்றிற்காகும்.

இவற்றில் இரகஸ்யம் என்பதுண்டு. அவை இரண்டு வகையான இரகஸ்யங்களாகும். முதல் வகை எளிதானது, எல்லோரும் பிரியப்படுவது, ஆனால் எல்லோருக்கும் கிடைக்காதது. அடுத்தவகை சிரமமானது, எல்லோருக்கும் கிடைக்கக்கூடியது, சிலர் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடியது.

ஒரு பூட்டைத் திறக்க முடியாவிட்டால், பல சாவிகளையும் போட்டுப் பார்க்கிறோம். அதற்குரிய சாவி எது என்பது இரகஸ்யம். அது தெரிந்தால் எளிது. இது முதல் வகை. செல்வத்தைத் தேடுபவர் துபாய்க்குப் போனால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதை முதலில் சொல்வதுபோல இரகஸ்யம் தெரிந்தது. அங்குச் சென்றோம். செல்வம் கிடைத்தது. இது எளிய முறை. இது எல்லோருக்கும் கிடைக்காது. எல்லாச் சமயங்களிலும் இது போன்ற இரகஸ்யம் இருப்பதில்லை.

தொழில் நடத்துபவருக்கு இலாபத்தின் இரகஸ்யம் மார்க்கெட்டிலிருக்கிறது. விளம்பரத்தில் இரகஸ்யம் இருக்கிறது என்று தெரிந்தவுடன் முயன்று அத்துறையை வளர்த்து இலாபத்தைப் பெறுகிறார். இரண்டு தலைமுறைகளாகக் கல்வியை ஆர்வமாக நாடிப் பெற முடியாத குடும்பத்திற்குக் கல்வியைப் பெறுவதன் இரகஸ்யம் கல்வியின் முக்கியத்துவத்தை நாம் உணருவது என்று தெரிந்தவுடன் அடுத்த தலை முறையைப் படிக்க வைக்க முடிகிறது.

தொழில் சரியாக நடக்கவில்லை என்பவரிடம் உங்களுக்கு நல்ல திறமையான மேனேஜர் தேவை என்ற இரகஸ்யம், உடனே அவர் தொழிலை இலாபகரமாக்கிவிடுகிறது. உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையிருந்தால் ஊரில் மரியாதையிருக்கும் என்பது இரகஸ்யமானாலும் எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அந்தஸ்தை நெடுநாளாகத் தேடும் மிராசுதாரர் அதன் இரகஸ்யம் அரசியல், சர்க்கார் உத்தியோகம் என்றறிந்தால் முயன்று அதைப் பெறுவார். முயன்று பெறும் முறையும் உயர்ந்த இரகஸ்யம் என்றாலும், எல்லோரும் அதற்குப் பிரியப்படமாட்டார்கள். அரசியல் தொடர்பால் உயர்ந்த உத்தியோகம் பெறலாம் என்பது போன்ற இரகஸ்யத்தையே அனைவரும் விரும்புவர்.

முதல் வகையான எளிமையான இரகஸ்யத்தை நாம் கருதவேண்டாம். அடுத்தவகை இரகஸ்யம் பெரியது. நாடு முன்னேறுவதற்கும், தனி மனிதன் முன்னேறுவதற்கும் பெரிய உபாயம் அது.

இந்தியா 47இல் சுதந்திரமடைந்து இன்றுவரை 50 ஆண்டுகளாக ஒரு நாடு தொழில் மயமாக உள்ள இரகஸ்யம் எது என்று உலகம் பூராவும் தேடினார்கள். கிடைக்கவில்லை. இந்த இரகஸ்யத்தைக் கண்டுபிடித்து அதற்காக ஒருவர் நோபல் பரிசு பெற்றுள்ளார். எனினும் அதை இந்திய சர்க்கார் இன்றுவரை தெரிந்து கொள்ளவில்லை. 1967இல் பஞ்சம் வந்து, நாட்டைக் கெடுபிடி செய்த நேரம் உணவு உற்பத்தியைப் பெருக்கினார்கள். பஞ்சம் போவதற்காகச் செய்த முயற்சி அது. அதனால் விவசாயம் பெருகியது. 1977 தல் நாடு தொழில் வளம் பெற ஆரம்பித்துவிட்டது.

இது தானே நடந்த ஒன்று. அவர் கண்டுபிடித்து பரிசு பெற்ற இரகஸ்யம் ஒரு நாடு தொழில் முன்னேற வேண்டுமானால், அங்கு விவசாயம் இலாபகரமாக அபிவிருத்தியாக வேண்டும் என்பதே. பலனைப் பெற்ற பின்னும் இந்தியா இதை உணரவில்லை. உண்மையிலேயே இது பெரிய இரகஸ்யம். இன்று இந்தியா இதை உணர்ந்தால், நாட்டில் தொழில் அபரிமிதமாகப் பெருகும்.

சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா தொழில் அளவுகடந்து முன்னேறியுள்ளன. அதன் இரகஸ்யம் quality products & cheap labour மலிவான விலையில் உயர்ந்த பொருள்களைத் தயாரிப்பதே. இன்னும் இந்தியா இந்த இரகஸ்யத்தால் பலன் பெறவில்லை.

அன்னை தேடியது யோக இரகஸ்யம். அது கிடைத்திருந்தால் 30,000 ஆண்டுக்குப் பின்னால் பெறும் பலனை மனித சமுதாயம் இன்று பெறலாம்.

பூரண யோகத்தில் 30 வருஷப் பலனை 3 மாதத்தில் பெறும் இரகஸ்யத்தை பகவான் நூறு இடங்களில் எழுதியிருக்கின்றார். நெடுநாள் தவமிருந்து அவர் கண்டுகொண்ட இரகஸ்யம் அது. இதுவரை அன்னை தவிர மற்றெவரும் அதனால் பலன் பெறவில்லை. ஆனால் வாழ்வில் பலன் பெற பல இரகஸ்யங்கள் உள்ளன. அவற்றைக் கண்டு கொண்டவர்கள் ஒரு தலை முறையில் அல்லது சில தலைமுறைகளில் பலன் பெற்றுள்ளனர். அவற்றை அன்னை பக்தர்கள் கண்டு கொண்டு மற்றவர் எடுத்த முயற்சியை எடுக்க முன்வந்தால் சில தலைமுறைகளில் அவர்கள் பெற்றதை, அன்பர்கள் சில ஆண்டுகளில் பெறுவார்கள்.

செல்வத்தைப் பெறும் இரகஸ்யம் தளராத உழைப்பு. கல்வியைப் பெறும் இரகஸ்யம் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து போற்றுவது. முன்னேற்றத்திற்குரிய இரகஸ்யம் நாடு முன்னேறும் துறைகளில் தொழில் செய்வது. நாகரீகத்திற்குண்டான இரகஸ்யம் மற்ற இரகஸ்யங்களை அறிந்து பின்பற்றுவது.

நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் செல்வம் பெற்றதும், கல்வியால் முன்னேறிய பல ஜாதியினரும், சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் முன்னேறிய குடும்பங்களும், கடந்த இருபது ஆண்டாக நாகரீக வட்டத்துள் வந்துள்ள பகுதியினரையும் கவனித்தால் மேற்கூறிய உண்மை விளங்கும். இவர்களெல்லாம் பலன் பெற ஒரு தலைமுறைக்கு மேல் உழைத்தவர்கள். அந்த உழைப்பும் இரகஸ்யமும் நாட்டில் அவர்களை முன்னோடிகளாக்கிவிட்டன. எவரும் ஓர் ஆண்டில் திடீரென உயர்ந்தவரில்லை, அன்னை பக்தர்கள் அந்த இரகஸ்யத்தை புரிந்துகொண்டு, அதே முயற்சியை எடுத்தால் சீக்கிரம் பலன் பெறுவார்கள்.

*********

  1. தாம் பெற்ற கிருஸ்த்துவப் பயிற்சியை மனதிலிருந்து அழிக்க ஸ்ரீ அரவிந்தர் சிந்தனை மணிகளை (aphorism) எழுதினார் என்று அன்னை கூறுகிறார்.

சிந்தனை மணிகள் சிந்தனைக்கு விடுதலையளித்தது. பகவான் சிறுபிராயம் முதல் ஆங்கிலப்பள்ளிகளில் வளர்க்கப்பட்டவர். இங்கிலாந்தில் தம் இளமைப் பிராயத்தைக் கிருஸ்த்தவ பள்ளிகளில் செலவிட்டவர். தாய் மொழியும் அவருக்கு பேச வாராது. யோகானுபவம் ஏற்பட்ட பின் அவர் பெற்ற கல்வியும், அதனால் ஏற்பட்ட நம்பிக்கைகளும் யோகசித்திக்குத் தடையாக இருந்ததைக் கண்டார். புதுவையில் பகவான் இந்திய மகான்கள்போல வாழவில்லை. ஆங்கிலேயர் போன்றே வாழ்ந்தார். நம் நாட்டில் ஒரு மகானைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தெய்வம்போல் நடத்துவார்கள். அனைவரும் குற்றவேல் செய்யக் காத்திருப்பார்கள். அவர் சொல்லுக்கு மறுப்பு என்பது கிடையாது. மறுப்பாக நினைப்பதை சிஷ்யர்கள் பாவமாகக் கருதுவார்கள். பகவான் தம்முடன் இருந்தவர்களைச் சமமாக நடத்தினார். எந்த வேலையையும் மற்றவர்களுக்கு இடமாட்டார். பகவான் சொல்வது சரியில்லை என்று அவருக்குக் கடிதம் எழுதுவார்கள். ஒரு சிஷ்யர் பகவான் இருக்கும் அறையில் சிறுபிள்ளைபோல ஓடினார். பகவான் காலை மிதித்துவிட்டார். இங்கிலாந்து பாணியில்

பகவான் எழுந்து குனிந்து சிஷ்யரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவரைப் பார்க்க வருபவர்களை வரவேற்க பகவான் எழுந்து நிற்பார். இவையெல்லாம் இந்தியப் பாணிகளில்லை, ஆங்கிலேயருடைய பழக்கங்கள்.

ஆங்கிலப் படிப்பு பெரும்பாலும் கிருஸ்த்துவப் படிப்பு. தமிழிலக்கியம் படித்தபின் சைவம் தெளிவாவது போல், இலக்கியம் படித்தபின் கிருஸ்த்துவ மதக் கோட்பாடுகள் தெளிவாகும். அடிப்படையில் ஆங்கில நாகரீகமும், கிருஸ்த்துவப் படிப்பும் இந்திய மரபுக்கும், இந்து மத யோகக் கோட்பாட்டுக்கும் புறம்பானவை. மாறானவையும்கூட. அவை மனதிலிருக்கும்வரை யோகம் ஜீவனில் ஆழ்ந்து பலிக்காது. பகவான் தரையில் காலை மடக்கிக் கொண்டு உட்கார்ந்ததே இல்லை என்கிறார் அன்னை.

மனதில் ஆழ்ந்து பதிந்துள்ள கருத்துகளை விலக்க சிந்தனை மணிகளை எழுதியதாக அன்னை கூறுகிறார்.

விஞ்ஞானம், பகுத்தறிவு, வையகம், நரகம், மன்னிப்பு, நாத்திகம், பரோபகாரம், தர்க்கம், டிராய் நகர முற்றுகை, பாவம், மேதை, அறிவின் அனுபவம், விவேகம், விதி, சட்டம், விஞ்ஞானி, பரிணாமம், சிலுவை, ஏசு, கிருஸ்த்துவமதம், கிருத்துவர் கோயில், இயற்கை போன்ற ஐரோப்பியர் சம்பந்தமான கருத்துகளைப் பற்றி சிந்தனை மணியில் எழுதியிருக்கிறார்.

******

  1. சிந்திக்க முடியாதவன், தான் அறிந்துள்ள விவரத்தைப் புறக்கணித்துவிட்டு, முறையான சிந்தனையை மேற்கொள்வது ஒரு புரட்சி.

எந்த நிலை உயர்வதும் புரட்சியாகும்.

இது, பண்டிதர் ஞானம் பெறுவதற்குச் சமம். அனுபவமில்லாத பொதுமக்கள் பெற்றுள்ள அதிகமான விவரங்களை, அத்துறையில் உள்ள வல்லுநர் அறிவுடன் ஒப்பிடுவதுபோலாகும்.

எலிமெண்டரி பள்ளி ஆசிரியர் ஒருவர் பெயர் எடுத்தவர். உள்ளூரில் பிரபலமானவர். சிறப்பானவர் என்ற பெயர் எடுத்தவர். தாம் எப்படிச் சிறப்பான ஆசிரியர் என்பதை ஒரு சமயம் அவர் விளக்கும் பொழுது திருச்சி ரேடியோ ஸ்டேஷனில் 8.00 மணி அடித்தால் அவ்வொலி அலைகள் நம்மூர் வந்துசேர 10 நிமிஷம் ஆகும். எனவே கடிகாரத்தை 8.10இல் வைக்க வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொல்வதாகச் சொன்னார். சிந்திக்க முடியாதவன் படிப்பறிவில்லாதவன் சேகரம் செய்துள்ள விஷயம் பெரும்பாலும் இதுபோன்றே இருக்கும்.

கோர்ட் விவகாரம் அனுபவமானவர்கள், மெஷின்களை ரிப்பேர் செய்பவர்களில் பெயர் எடுத்தவர்கள், அடிக்கடி மேல் மட்ட தலைவர்களைச் சந்தித்துக் காரியங்களைச் சாதிக்கும் படிப்பறிவில்லாதவர்கள், உள்ளூரில் பிரபலமாக இருப்பார்கள். பலரும் அவரை நாடி வருவார்கள். அனுபவத்தால் பல காரியங்களைச் சாதித்தாலும் அவர்கள் கற்ற வித்தை அடிப்படையில் அர்த்தமற்றதாக இருக்கும்.

பட்டதாரியான பின்பும், அந்நிலையிலும் மேற்சொன்ன மனோபாவம் உள்ளவர்கள் விஷயங்களை இதுபோல் சேகரம் செய்திருப்பார்கள். நம்மிடம் இதுபோன்ற மனப்போக்கு பல விஷயங்களிலிருக்கும். முறையான சிந்தனை, சரியான விவரங்களின் அடிப்படையில் ஏற்பட்டது. நாம் நினைப்பதை அடிப்படையாகக் கொண்டதன்று. கல்லூரிப் பேராசிரியர் ஜீப் டயர்களில் (solid tyres) காற்றடிக்க வேண்டாம் என்று பேசுகிறார். எதன் அடிப்படையில் அந்த அபிப்பிராயம் அவருக்கு ஏற்பட்டது என்று கேட்டபொழுது நானே வைத்துக்கொண்டேன் என்றார்.

இதுபோன்ற கற்பனைகளாலான செய்திகளை மனதில் நிரப்பிக் கொண்டுள்ள சிந்திக்க முடியாத ஒருவன், தானே முன்வந்து, தான் நம்பியவற்றையெல்லாம் மறந்துவிட்டு, முறையாகச் சிந்திக்க கற்றுக் கொள்கிறேன் என்றால் அது அவனைப் பொருத்தவரை ஒரு புரட்சியாகும்.

பாண்டித்யம் உடையவர் பண்டிதர். தாம் கற்றவற்றைக் கசடு அறக் கற்றிருப்பார். படித்தது தெளிவாக இருக்கும். அது நினைவிலிருக்கும். அதைப் பொருத்தவரை தவறு வாராது. அவர் படித்த விஷயங்களில் சொந்தமாகச் சிந்திக்க வேண்டிய ஓர் இடம் வந்தால், அது அவருக்குப் புரிந்துகொள்ள முடியும் என்பது நிலையில்லை. தாம் கற்றதைத் தாண்டிய விஷயம் என்றால் அது அவருக்குப் புலப்படாது. ஞானம் சிந்தனையால் ஏற்படுவது. அதுவும் சொந்தச் சிந்தனையால் ஏற்படுவது. ஞானத்தைப் பெற அவர் எடுக்கும் முயற்சி அவரைப் பொருத்தவரை ஒரு புரட்சியாகும்.

முறையான (professional knowledge) தொழில் ஞானமில்லாமல் நிறைய அனுபவமுள்ளவர்கள் ஒரு துறையைப் பற்றிச் சேகரம் செய்துள்ள விவரங்களை, அத்துறை வல்லுநர் கேட்டால் பாதிக்குமேல் தவறானவையாக இருக்கும். இன்னும் கொஞ்சம் விஷயங்கள் சிரிப்பு மூட்டுவதாக இருக்கும்.

நம்மிடம் பல்வேறு துறைகளில் இதுபோன்ற அர்த்தமற்ற விஷயங்கள் சேர்ந்திருக்கும். அவையனைத்தும் கண்டு களைவது, அன்னை அதிகமாகச் செயல்பட உதவும்.

*******

  1. படிப்பறிவில்லாதவன் உதாரணத்தின் மூலம் எளிதில் புரிந்து கொள்வான், ஒரு விளக்கம் அல்லது முறை (an explanation or a method)அறிவுள்ளவனுக்குப் புரிய வைக்கும். நிலைக்கேற்ற நிரூபணம் உண்டு

இனிமையான பழக்கம் உணர்ச்சிபூர்வமானவனுக்கு விளக்கும்.

ஆசையுள்ளவனுக்கு ஆர்வம் தெளிவுறுத்தும்.

திறமை அல்லது நிறைவு உடலுக்குப் புரிய வைக்கும்.

மௌனத்தால் தபஸ்வி எளிதில் ஏற்றுக் கொள்வார்.

திருஷ்டி ரிஷிக்கு ஞானத்தைத் தரும்.

யோகி பார்த்தவுடன் புரிந்து கொள்வார்.ரூபத்தை அறிவது தெய்வம்.

தன்னையே பிரம்மமாகவும் உலகைத் தானாகவும்,மற்றவரை உலகமாகவும் அறிவது சத்தியஜீவியம்.

*******

  1. உயர்ந்த நிலையிலுள்ள நியாயம் தாழ்ந்த நிலையிலுள்ள நமக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. தாழ்ந்த குணங்களைப் பாராட்டுபவனுக்கு அதிக அநியாயமாகத் தெரியும். தெய்வ நியாயம், மனிதன் விலங்குகட்கு இழைக்கும் தீங்குபோல் தோன்றும். தாழ்ந்தவனுடைய நியாயம், உயர்ந்தவனுக்கு அநியாயமாகத் தோன்றும்.

    நியாயமே அநியாயம் 

கிருஷ்ண பரமாத்மாவின் செயல்கள் சாதாரண மனிதனுக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. ஷேக் அப்துல்லா நேருவின் நெருங்கிய நண்பர். நாட்டு நலனுக்குப் புறம்பான அவருடைய நடவடிக்கைக்காக அப்துல்லா சிறைப்படுத்தப்பட்டார். வெகு நாள் கழித்து அவர் விடுதலையாகி டெல்லி வந்தபொழுது, நேரு தன் ஆபீசரை அனுப்பி விமான நிலையத்தில் அவரை வரவேற்கச் சொன்னார். அப்துல்லாவின் செயல், சிறைவாசம், தம் பதவி இவற்றைப் புறக்கணித்து பழைய நட்புடன் நேரு நடந்து கொண்டது உயர்ந்த உன்னதமான செயல். பார்லி மெண்டில் நேருவைத் தவறு செய்கிறார் என்று சிறு விஷயத்திற்காகக் கண்டித்தார்கள். சாதாரண மனிதன் பெருந்தன்மையைப் பார்க்கத் தவறுவான். 

எதிரியை நல்ல சமயம் வந்தபொழுது, தீரப் பழி வாங்கினேன் என்று சிறிய மனிதன் கொண்டாட்டம் போடுவது, உயர்ந்த மனிதனுக்கு தவறாகத் தோன்றும். எதிரியானாலும், சமயம் வந்தபொழுது பழி தீர்க்கும் மனப்பான்மை சரியில்லை என்ற கொள்கை உடையவனுக்குப் பழி வாங்கி வெற்றி கொண்டாடுவது தவறு.

********

  1. பழைய நண்பர்களிடையே இன்று நாம் தேடும் மரியாதை, பழைய எதிரிகளைப் பழிவாங்கும் மனப்பான்மை ஆகியவை உணர்ச்சிக்குரிய மட்டமான முறைகள். அவை நம் மனத்தின் பலஹீனத்தைக் குறிக்கும்.

    மட்டமான உணர்வை மரியாதை என்று கருதுகிறோம்

நம் நிலை உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் பழைய உறவுக்கு அன்றிருந்த மதிப்பையே இன்றும் கொடுப்பது மனிதத்தனம். இன்று நிலை உயர்ந்ததால், பழைய நண்பர்கள் புது நிலைக்கேற்ற மரியாதை கொடுக்க வேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனம்.

*******

  1. புதிய ஆன்மீக அனுபவங்கள் நம்மை நாடி வரும்பொழுது நம் உணர்வின் பலஹீனங்கள் தவறாது தலை தூக்கும், தன் போக்கை வலியுறுத்தும். அதனால் அனுபவங்கள் அகலும். குறை குறையாகவே இருக்கும்

    சித்திக்கு எதிரான பழைய ருசிகள்

    *******

       137. கடந்ததைக் கடந்தால், எதிர்காலம் எதிர்கொள்ளும்.

*******

  1. மனத்தின் முன்னேற்றம், உணர்வின் தெளிவைப் பொருத்தது.

    தெளிந்த உணர்வே உயர்ந்த மனம்

******

  1. ஆசையால் இன்று நாம் செய்வதை, ஆசையில்லாமல் செய்ய முன் வருவதே திருவுருமாற்றம். தாழ்ந்த குணங்களால் உந்தப்பட்டுச் செயல்படும் மனிதன், உயர்ந்த நோக்கத்தால் அதே காரியத்தைச் செய்ய முன்வருவது திருவுருமாற்றமாகும்..

    ஆசையில்லாத உயர்ந்த நோக்கம் திருவுருமாற்றம்

********

  1. மனித நோக்கத்தைத் தெய்வ இலட்சியமாக மாற்றுவதே திருவுருமாற்றம்.

*******

  1. ஒருவர் பாராட்டும் பண்புகளை அவர் உறவில் நாமும் பாராட்டினால் நல்லுறவு நீடிக்கும். எந்த அம்சங்களால் ஒருவர் வாழ்வில் வெற்றி பெற்றாரோ, அதை, அவரைவிட அதிகமாக நாம் பெற்றிருந்தாலும் அவருடன் நல்லுறவு நீடிக்கும்..

    ஒத்த பண்பு உயிரோட்டமான நல்லுறவு

*********

  1. எந்தப் பிரச்சினை தீரவில்லையோ அவ்விஷயத்தில் நமக்கு அன்னை மீது நம்பிக்கையில்லை எனப் பொருள்..

    நம்பிக்கை போனால் பிரச்சினை வரும்

*********

  1. நமக்குள்ள சந்தர்ப்பத்தில் அன்னை சட்டப்படி எந்த பெரிய திட்டம் பூர்த்தியாகவில்லையோ அவ்விஷயத்தில் நம் முயற்சி, ஆர்வம், தெளிவு பூர்த்தி பெறவில்லை எனப் பொருள்..

    முழு முயற்சி பூரண பூர்த்தி

*********

  1. செயலுக்கான ஆர்வம் அடங்கியபின் மனம் அறிவை நாடும். செயலுக்கான ஆர்வம் எந்தச் சிறிய அளவிருந்தாலும் அது மறையும்வரை, அறிவுக்கான ஆர்வம் எழுவதில்லை..

    அறிவு எழ செயல் அடங்கவேண்டும்

*******

  1. உயர்ந்த அறிவையும், சிறந்த ஞானத்தையும் தேடும்வரை பெரிய ஆன்மீக அனுபவங்கள் ஒதுங்கி நிற்கும். அவை அழிந்தபின்தான் அனுபவங்கள் கிடைக்கும்..

    சித்தி பெற ஞானம் தடை

********

  1. எதிரெதிரானவை (ஒளி இருள்; உயர்வு தாழ்வு) வாழ்க்கைக்கு ஆழ்ந்த உற்சாகத்தைக் கொடுக்கும். வெறுப்பவன் வெறுப்பின் எல்லைவரை செல்வான். வாழ்வின் தாழ்ந்த ருசியைக் கடந்தவனே இம்முரண்பாட்டைக் கடந்தவனாவான்..

    முரண்பாட்டை கடந்த உயர்ந்த ருசி

*******

  1. புரிய வேண்டும் என்பது அறிவின் ஆர்வம். உடமையாக்கிக்கொள்ள வேண்டும் என்பது உயிரின் ஆர்வம். இடைவிடாது திரும்பத் திரும்ப ஒன்றையே செய்வது உடலின் ஆர்வமான பழக்கம். புரிய வேண்டும் என்ற அவசியமில்லை என்றால் மனத்தின் எல்லையைக் கடக்க முடியும். சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்றுமுயலாவிட்டால், ஆசை அழியும். செய்ததையே திரும்பத் திரும்ப செய்ய வேண்டும் என்ற விருப்பமில்லை என்றால் உடலின் பிடியிலிருந்து விடுபடலாம். இவை பிரகிருதியின் பிடியிலிருந்து ஆன்மாவை விடுவித்து, விடுதலை அளிக்கும்..

*******

  1. உயர்ந்த பெருந்தன்மையை உண்மையாகப் பெற்றிருந்தால்தான் குறுகிய உள்ளத்தின் தாழ்ந்த செயலையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள முடியும்..

    சிறியதின் சிறிய செயலைப் பெரியதாக ஏற்பதே பெருந்தன்மை

*******

  1. அனைவரும் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வமுள்ளவனுக்கு முன்னேற்றமுண்டு..

    அனைவரும் பெறுவதே முன்னேற்றம்

*******

  1. முன்னேற்றத்தின் தன்மையை அறியாதவன் பிறர் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுவான். ஒருவருக்கு முன்னேற்றம் வந்தால், அது அனைவருக்கும் முன்னேற்றம் வருவதன் அறிகுறி. முன்னேற்றத்திற்கே வழியில்லை என்ற நிலையில் ஒருவருக்கும் அது கிடைக்காது..

    எவருடைய முன்னேற்றமும் நமக்கு பேருதவி செய்யும்

*******

  1. தன் நிலை உயர்ந்த நிலை என்ற மனப்பான்மை முன்னேற்றத்தைத் தடை செய்யும்.

முன்னேற முடியாதவன் தன்னை உயர்வாக நினைப்பான்.

*******

  1. தன் குறையைக் காண முன்வந்தால் முன்னேற்றத்திற்கு வழியுண்டு. இன்றைய உன் நிலை முழுவதும் சரியானது என்ற மனநிலை இருப்பதையே உறுதிப்படுத்தும். உன்னிடமுள்ள எந்த உயர் குணத்திலுள்ள சிறு குறையும் உன்னை உறுத்தினால், அதிகபட்ச முன்னேற்றத்தை அடையலாம்.

குறையற்ற மனநிலையை அடைவதே முன்னேற்றம்.

*******

  1. உன்னுடைய அதிகபட்சத் திறமையை அறிந்து, அதற்குரிய இலக்கை நிர்ணயித்து, இன்றைய குண நலன்களை அந்தக் கண்ணோட்டத்தில் சோதனை செய்தல் நலம்.

குணமும், திறமையும் இலக்கை நிர்ணயிக்கும்.

******

  1. நமக்கில்லாத உரிமையை உணர்ச்சி கொண்டாடுவது கோபம் எனப்படுவது. உரிமையற்றவன் ஆக்கிரமிப்பை அழிப்பது ரௌத்திரம்.

கோபம் இல்லாததைக் கேட்கும். அழிவை அழிப்பது ரௌத்திரம்.

கோபம் தவறு எனில், எந்தக் காரணத்திற்கும் கோபம் வரக்கூடாதா என்ற ஐயம் ஏற்படுகிறது. நரசிம்மமூர்த்தி ஹிரண்யனை அழிக்க சாதுவான உணர்வால் முடியாது. கோபாவேசத்தை மேற்கொண்டால்தான் அவனை அழிக்க முடியும். அவர் கொண்ட ஆவேசம் அடங்க ஆறு மாதம்வரை காட்டில் அவர் திரிந்தார். இறைவனுக்கு ஆக்கல் எப்படி அவசியமோ அதுபோல் அழிப்பதும் அவசியம். அழிவை நிறைவேற்ற அவர் மனிதக் கருவியை நாடினால் அக்கருவிக்கு இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்ய வேகம் தேவை. அந்த வேகம் கோபாவேசமாக இருக்கும். மார் தட்டி, தொடை தட்டி, கர்ஜனை செய்து ஆங்காரம் எழுந்தால்தான் எதிரியை அழிக்க முடியும். அதை ரௌத்திரம் என்பார்கள். நாமே ஒருவன் மீது கோபப்படுவதற்கும், இறைவன் உள்ளிருந்து நம் கோபாவேசத்தைக் கிளப்பித் தன் காரியத்தைப் பூர்த்தி செய்வதற்குமுள்ள வித்தியாசம் நன்கு தெரியும். மேல் அதிகாரியின் உத்தரவை நாம் பூர்த்தி செய்கிறோமா, நாமே உத்தரவு போட்டோமா என்ற வித்தியாசம்போல் அது தெரியும். உரிமையில்லாதவன் ஓரிடத்தில் வந்து தன் காரியங்களைப் பூர்த்தி செய்ய முனைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றான் என்றால், அவனை அழிக்க வேண்டும் என்று நிதானமாக முடிவு செய்து, பலமாக அழிக்க நாம் ஏற்றுக் கொள்ளும் வேகம் ரௌத்திரம்.

******

  1. மனிதனுக்குக் கோபப்பட உரிமையில்லை. ரௌத்திரத்திற்கு ஆண்டவனின் அனுமதியுண்டு.

கோபம் மனிதனுடையது. ஆண்டவனுக்குரியது ரௌத்திரம்.

******

  1. இயற்கையின் வேகம் நம்முள் உந்துதலாக வெளிப்படுகிறது. விஷயங்களைப் புரிந்துகொள்ள மனம் விழைவது அரிது. அதுவே மனத்தின் வேகம்.

நம் உந்துதல் இயற்கையின் வேகம்.

Nature-Soul இயற்கை-ஆன்மா என்ற இரு பிரிவுகளுண்டு. ஆன்மாவின் செயல் ஆண்டவனின் செயல். இயற்கையின் செயல் என்பது மனம், உணர்வு, உடல் ஆகியவை தம் போக்கில் செயல்படுவதாகும். ஆண்டவன் செயல் தவறிருக்காது. உடனே பலன் தரும். இயற்கையின் செயலுக்குரிய முறையே தவறாகும். தவறு என்ற முறையை அறியாமையால் நிறைவேற்றுவது இயற்கையின் செயல், இதில் தவறு நிறைந்திருக்கும். பலன் நாள்பட்டு வரும். வாராமலும் போகும்.

வேலையைப் பூர்த்தி செய்ய தேவையானதை மட்டும் செய்வது இறைவன் செயல். மனமும், உணர்வும், உடலும் தங்களுக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்து கொள்ள வேலையை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வதால், இயற்கையின் செயலுக்குப் பலன் வாராது. கல்லூரியில் சேர்ந்த மாணவனுக்குப் படிப்பு முக்கியம். விளையாட்டும், சுற்றுலாவும் இரண்டாம் பட்சம். இவற்றிற்காகவே கல்லூரியில் சேர்ந்த மாணவன் போன்றது இயற்கையின் செயல். அதன் செயல் பலன் வரலாம். வாராமற் போகலாம். வந்தால் நாள் கடந்து வரும்.

உந்துதல் (impulse) என்பது நம்முள் உள்ள இயற்கையின் செயலை வெளிப்படுத்துதலாகும். நாம் சிந்தனையை உயர்ந்ததாகக் கருதுகிறோம். ஒருவரைச் சிந்தனை சிற்பி என்றழைக்கிறோம். பாசத்தைப் போற்றுகிறோம். உழைப்பு தெய்வீகமானது என்று நினைக்கின்றோம். சிந்திப்பவர்கள் குறைவு. பாசமானவர்களும் குறைவு. உழைக்க விரும்புகிறவர்களைத் தேடிப் பார்க்கவேண்டும். இவையல்லாம் மனித வாழ்வில் உயர்ந்தவை எனக் கருதப்படுவன. யோகத்தைப் பொருத்தவரை சிந்தனை மனத்தின் உந்துதல், பாசம் உணர்ச்சியின் உந்துதல், உழைப்பு உடலின் உந்துதல். சிந்திப்பவரால், எதையாவது சிந்திக்காமலிருக்க முடியாது. பாசமானவரால் பாசத்தைப் புறக்கணிக்க முடியவே

முடியாது. உழைப்பாளியால் சற்று நேரம் சும்மா இருக்க முடியாது. சிந்தனையும், பாசமும், உழைப்பும் நம்மை மீறி எழுந்தால் அவை உந்துதல்களாகும். அவை நம் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்தால், நமக்குக் கருவிகளாகும். மனமும், உணர்வும், உடலும், பக்குவப்பட்டு நிதானமடைந்த பின் நமக்குத் தேவைப்பட்டால் நாம் பிரியப்பட்டபொழுது நம் கட்டுப்பாட்டினுள்ளிருந்து செயல்படும் சிந்தனை இறைவனின் கருவி.

சிந்தனையும், பாசமும், உழைப்பும் உயர்ந்தவை. நம் கட்டுப்பாட்டில்லாதவரை அவை இயற்கையின் கருவிகள். நம் கட்டுப்பாட்டில் வந்தபின் இறைவனின் கருவிகள்.

*******

  1. உயர்ந்த உதவியை வலிய அடுத்தவருக்கு அளிக்க முன்வந்தால் பெரும்பாலும் அவர்கள் அதை அலட்சியப்படுத்துவதைப் பார்க்கலாம். இதுவரை என் அனுபவத்தில் அதுபோல் அலட்சியப்படுத்தாதவரைப் பார்த்ததில்லை. ஒரு சிலர் அதற்காக நம்மைக் குறை கூறி அவமானப்படுத்தவும் முயல்வார்கள்.

உயர்ந்த உதவி வலியப் போனால் உயர்வை இழக்கும்.

ஒருவரால் உயர்ந்த உதவியைச் செய்யமுடியும் என்றால், தேவைப்பட்டவர் கேட்டுப் பெறுவது முறை. வலிய முன் வருவது செய்பவரின் பெருந்தன்மையைக் குறிக்கும். தனக்குப் பெருந்தன்மையிருப்பதால், பிறர் அதை உணர முடியாதபொழுது வற்புறுத்தி அளிக்க முயல்வது அறிவுடைமையாகாது. பெறுபவன் தன் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்கிறான். கொடுப்பவருக்கு ஏதோ ஆதாயமிருப்பதாக நினைப்பார்கள். நினைத்தால் அலட்சியம் செய்வான். அடுத்த கட்டத்தில் அவமானப்படுத்துவான். அருள் செயல்படும் முறை இதுவே. தானே முன்வந்து அருள் மனிதனுக்குச் சேவை செய்யும். ஆனால் வலியுறுத்தாது. வலிய வரும். ஆனால் வற்புறுத்தாது. இறைவனையும் அவன் அருளையும் ஏற்பவர் ஒருவரானால், மறுப்பவர், அலட்சியம் செய்பவர், அவமானப்படுத்துபவர் கோடி பேர்.

*******

  1. சமூக வாழ்வில் ஒருவருடைய அகந்தை பரோபகாரமாக வெளிப்பட்டால், அது அடுத்தவரின் அகந்தையுடன் மோதி மேற்சொன்ன பலனைக் கொடுக்கும். பரோபகாரத்தின் மூலமும் அகந்தை வெளிவந்தால் அகந்தைக்குரிய பலன்தான் கிடைக்குமே தவிர பரோபகாரத்திற்குரிய பலன் கிடைக்காது.

உதவியுடன் அகந்தை கலந்தால், பலன் அகந்தைக்கு வரும்.

*****

  1. பிறருக்கு உதவி செய்யும் வேகம் எழுந்தால், அந்த உதவியைச் செய்வதற்குப் பதிலாக அந்த வேகத்தைச் சமர்ப்பணம் செய்தால், அடுத்தாற்போல் என்ன செய்வது என்பதற்குச் சமர்ப்பணம் வழி செய்யும். அச்செயல் எவர் மனதையும் புண்படுத்தாது.

உதவும் வேகம் சமர்ப்பணத்திற்குரியது. உதவிக்கன்று.

*******

  1. கொடுக்க ஆசைப்படுவதும், பெற ஆசைப்படுவதும் யோகத்தைப் பொருத்தவரை ஆசையே.

கொடுக்கவும் ஆசைப்படாதே.

******

  1. உணவு, உறக்கம், இனஉணர்வு போன்றவை இன்றியமையாதவை. இலட்சியத்தை ஏற்றுக்கொண்ட பின் இவை தவிர்க்க முடியாத தடையாக இருக்கா. உயர்ந்த உணர்வுகள் வந்தபின், தாழ்ந்தவை தடையாக இருப்பதில்லை. கடுமையான தடை மென்மையாக மாறுவதும் மேலும் உயர்ந்த நிலையில் இனிமையாக மாறுவதும் உண்டு.

கடுமையான தடை இனிமையான உதவியாகும்.

*******

  1. உலகம் என்று நாம் சொல்வது, நமக்கு

முக்கியமானவர்களும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுமே ஆவர்.

நாமே நமது உலகம்.

******

  1. உன்னுடைய சந்தோஷம், மரியாதை, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உரியவர்களே உன் உலகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் சொல்லப்போனால், இது போன்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒருவரே முக்கியமாக இருப்பார்கள், அந்த நான்கு, ஐந்து பேரே என் உலகம் என நீ பேசுவதாகும்.

உலகம் சுருங்கி ஒருவராவதும் உண்டு.

******

  1. வேறு வகையாகச் சொன்னால், யார் நம் மனதை நிரப்புகிறார்களோ, அவர்களே நம் உலகமாகும். அவர்கள் முக்கியமானவர்களாகவோ, உயர்ந்தவர்களாகவோ, இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு நண்பர், ஒரு கணக்குப்பிள்ளை, டிரைவர், சமையல்காரனும் ஏதோ ஒரு காரணத்தால் மனதை நிரப்பி உனக்கு முக்கியமானவனாகி, உன் உலகமாவதும் உண்டு.

உள்ளத்தை நிரப்புவது உலகம்.

*******

  1. அநேகமாகப் பிரார்த்தனை என்பது இறைவனை அவனுடைய கடமையிலிருந்து திருப்பும் முயற்சியாக இருப்பதுண்டு. இறைவனின் செயலிலிருந்து மனிதன் மாறுபட்ட விருப்பத்தை நாடுவதாலும், அந்த விருப்பம் பூர்த்தியாகாதபோது இறைவனைப் பூர்த்தி செய்யும்படிக் கேட்பதாலும் பிரார்த்தனைக்கு இக்குணம் ஏற்படுகிறது.

இறைவன் என் சேவகன் என்பது பிரார்த்தனையின் கொள்கை.

**********

  1. இறைவன் மனிதனையும் அவன் ஆத்மாவையும் மீண்டும் தன் பாதைக்குக் கொண்டுவரச் செய்யும் முயற்சிகளில் அவனுடைய பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வதும் ஒன்றாகும்.

பிரார்த்தனை சிருஷ்டியை மாற்ற இயலும்.

*******

  1. மனிதனுடைய பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வதால் இறைவன் தன் பாதையைவிட்டு விலகுவதும் உண்டு, தன் குறிக்கோளை அழிப்பதும் உண்டு.

தன் இலட்சியத்தை அழிப்பதன் மூலம் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் தன்மை இறைவனுக்குண்டு.

அழிவும் சிருஷ்டியாகும்.

*********

  1. ஒரு செயல் அது உள்ள நிலையில் (in its own plane) சந்தோஷத்தை உற்பத்தி செய்யுமானால், அந்நிலைக்கு அது சரியான செயலாகும்.

சந்தோஷப்பட்டால் சரி.

*******

  1. தவறு என்பது, அடுத்த உயர்ந்த நிலையில் சரி என்றாவதுண்டு. ஒரு நிலை தாழ்ந்தபோதும் தவறு சரி என்று மாறுவதுண்டு.

தவறு சரியாகும். சரியானதும் தவறாகும்.

********

  1. பொங்கிவழியும் சக்தி நிறைவளிக்கின்றது. நம் நிலைக்குரிய சக்தி தாழ்ந்த நிறைவையளிக்கும். அடுத்த உயர்ந்த நிலைக்குரிய சக்தி, இந்நிலையில், உயர்ந்த நிறைவைத் தரும்.

நிறைவு நிலைக்குரியது.

வயிறு நிறையும் உணவு தாழ்ந்த நிலையையும், அன்போடு பரிமாறும் உணவு இந்நிலையில் உயர்ந்த நிலைக்குரியதையும் குறிக்கும்.

எண்ணங்களால் நிறைந்த மனம் நாமுள்ள தாழ்ந்த நிலையையும், மௌனத்தால் நிரம்பிய மனம் நம் நிலையில் உயர்ந்த சக்தியையும் குறிக்கும்.

*******

  1. அதிகபட்ச அறிவு, அதிக பட்ச சந்தோஷம், அதிக பட்சத்திறமை ஆகியவை உயர்ந்தவை. நாமுள்ள நிலையில் இவை தெய்வத்திற்கு நிகரானவை. நாமுள்ள நிலையில் அதிகபட்சமான அறிவு, திறமை பெறுவது இறைவனை அடைவதாகும்.

அறிவும், சந்தோஷமும் ஆண்டவனாகும்.

******

  1. கயமையுடன், பெருந்தன்மை எந்த அளவில் தொடர்பு கொண்டாலும் ஏதாவது ஓர் அளவில் கரைபடாமலிருக்க முடியாது.

கயமை கறைப்படுத்தும்.

******

  1. பற்றுவிடல் : பிரச்சினையைப் பொருட்படுத்தாமல், அதில் உள்ள சிரமத்தைப் பொறுத்துக் கொண்டால் (equality) சமத்துவம் ஏற்பட உதவும். பற்றைவிட முயல்பவர் ஆரம்பத்தில் பற்றை விலக்கிப் பொருட்படுத்தாமலிருக்க முயல வேண்டும். அதனால் பற்று அறுபட்டால் யார் மீது நமக்குப் பற்றுள்ளதோ அவர் தம் மன நிலையை

மாற்றிக் கொள்வதால் சமத்துவம் ஏற்பட்டு நிலைக்க உதவும்.

பொறுமை நிதானம் தரும். பற்றறுத்தால் நிதானம் நிரந்தரமாகும்.

*****

  1. ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குயர இலட்சியம் உதவும். உயர்ந்த பின் அந்நிலையில் நிரந்தரமாக நிற்க (pragmatism) யதார்த்தவாதம் உதவும்.

இல்லாததைத் தேடுவது இலட்சியம். இருப்பதைப் பாராட்டுவது யதார்த்தம்.

இருப்பதைவிட்டு இல்லாத உயர்வை நாடுவது இலட்சியவாதம்.

இருப்பதின் உயர்வையும், அவசியத்தையும் பாராட்டுவது யதார்த்தவாதம்.

********

  1. உன்னுடைய நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், உனக்கு முக்கியமானவர்கள், உன் எதிரிகள் ஆகியவர்கள் நீ இன்றுள்ள மனநிலையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, எதிரிடையாகவோ சுட்டிக் காட்டுபவர்கள்.

உன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் நீயேயாகும்.

******

  1. சமயோசித புத்தி பவித்ரமான சத்தியமாகவோ, இருண்ட பொய்யின் உருவமாகவோ இருக்க முடியும்.

சமயோசிதம் மெய்யையும், பொய்யையும் ஏற்கும்.

*****

  1. எண்ணங்கள் அற்றுப்போவது மௌனத்தையடைய அவசியம். பேச வேண்டும் என்ற ஆசை அழிவதும் மௌனத்தை நிரந்தரமாகப் பெற அவசியம்.

பேச்சு அழிவது போதாது ; பேசும் ஆசை அழிய வேண்டும்.

******

  1. சமூக வாழ்வு, இலட்சிய வாழ்வு என இரண்டுண்டு. ஒவ்வொன்றும் தாழ்ந்தது, உயர்ந்தது என இரு பிரிவுகளாக இருக்கின்றன. சமூக வாழ்வின் தாழ்ந்த நிலையில் மனிதன் சிரமப்படுகிறான். உயர்ந்த நிலையில் வாழ்க்கையை அனுபவிக்கின்றான்.

மனிதச் சிகரத்திலிருந்து தெய்வ உச்சிக்குப் போகலாம்.

இலட்சிய வாழ்வு என்பது தெய்வீக வாழ்வு. இன்று உலகத்தில் இல்லாதது. அன்னை நமக்கு அளிப்பது. அதையும் முதல் நிலை, இரண்டாம் நிலை அல்லது தாழ்ந்தது, உயர்ந்தது என இரு பிரிவுகளாகக் கருதலாம். முதல் நிலையில் ஏற்படும் கஷ்டம், நஷ்டம் ஆகியவை கண்ணுக்குத் தெரியா. இரண்டாம் நிலையில் அவை மனதை உறுத்தும்.

சமூக வாழ்வில் உயர்ந்த நிலையை எய்தி, அங்கிருந்து இலட்சிய வாழ்வில் முதற்பகுதியை விலக்கி, உயர்ந்த நிலையான இரண்டாம் பகுதிக்கு நேரடியாகச் செல்வதே சிறப்பு.

சமூக வாழ்வின் முதற் பகுதி வறுமை, கொடுமை, மடமை நிறைந்தது. இரண்டாம் பகுதி செல்வம், சந்தோஷம், அறிவு நிறைந்தது. அன்னையையும் அவர்கள் இலட்சியங்களையும் ஓரளவு ஏற்றுக் கொண்டவுடன் நாம் தெய்வீக வாழ்வை நாடுகிறோம். சமூகத்தின் நம்பிக்கைகளையும், பழக்கங்களையும் விட்டுவிட்டு இந்நிலையை ஏற்றுக் கொண்டவுடன் மனம் சந்தோஷத்தால் நிறையும். சமூகத்திலிருந்த தடைகள், குறைகள், இடர்ப்பாடுகள் இருக்கா. வசதி வரும். காரியங்கள் கூடிவரும். எல்லாம் சௌகரியமாக இருக்கும். உயர்ந்த இலட்சிய வாழ்வின் இரண்டாம்

கட்டத்திற்கு வருவோம். இதைப் பெரும்பாலோரால் செய்ய முடிவதில்லை. உயர்ந்த இலட்சிய வாழ்வையும், அதன் சௌகரியங்களையும் அனுபவிக்க முற்படுபவரால், அதற்குரிய நெறியை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பெரிய இடத்துப் பிள்ளைகள் போன்றவர்கள் இந்நிலையிலுள்ளவர்கள். ஒரு தலைமுறை, இரு தலைமுறைகளாகச் சேகரம் செய்த செல்வம், அந்தஸ்து, நாணயம் அபரிமிதமாகப் பெரிய இடத்திலிருப்பதால், பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு அடக்கம், நாணயம், பொறுமை, நிதானம் அதிகமாகத் தேவை. பொதுவாக அவை அடுத்த தலைமுறையில் தான் வரும். இந்தத் தலைமுறையில் பொறாமை, நாணயமின்றி நடப்பது, அவசரப்பட்டு நிதானமிழந்து வயதிற்குப் பொருத்தமில்லாமல் நடந்து கொள்வது மலிந்து காணப்படும். இவற்றால் இப்பிள்ளைகளுக்கு ஏற்படும் நஷ்டம் பெரியது என்றாலும் பிற்காலத்தில் அந்தஸ்திற்குத் தகுந்தபடி உயர முடியாமல் தடுக்கும் நஷ்டம் கண்ணுக்குத் தெரியாது. ஏனெனில் தட்டுப்பாடு தெரியும் நேரமில்லை இது. நாணயமின்றி நடந்தால் பெரியவர்கள் பிள்ளைகளின் நாணயக் குறைவுக்கு ஈடு செய்துவிடுவார்கள். அவசரப்பட்டு நடப்பதால் ஆயிரம் காரியங்கள் கெட்டாலும், கெடுத்தவனுக்கு தண்டனை கிடைப்பதில்லை. குடும்பத்திற்கும் ஸ்தாபனத்திற்குமே அத்தண்டனை சேரும். இவர்களுக்கெல்லாம் பெரிய நஷ்டம் உண்டு. ஆனால் அது உடனே தெரியாது. பிற்காலத்தில் அந்தஸ்திற்குத் தகுந்த அளவு உயர விரும்பும்போது இளமையில் செய்த அனைத்தும் குறுக்கே வரும். ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது.

அன்னையையும், அவர்களின் இலட்சிய வாழ்வையும் ஏற்றுக்கொண்டவர்கள் பெரிய இடத்துப் பிள்ளைகள் போன்றவர்கள். அவர்களுக்குத் தினமும் பல வாய்ப்புகள், பல நூறு வாய்ப்புகள் வரும். அவர்களுக்குத் தெரியாது. அத்தனை வாய்ப்பையும் ஏற்றுப் பொறுப்புடன் செயல்பட்டால் அன்னை நமக்கு வழங்க இருக்கும் உயர்வு சீக்கிரம் வரும். மன நிலையில் சமூக

வாழ்விலும், செயலளவில் அன்னையின் இலட்சிய வாழ்விலும் இருப்பதால் வருவது இலட்சியத்திற்கானது வருகிறது. அதைப் பயன்படுத்துவது பழைய சமூக மன நிலையின்படி பயன்படுத்துகிறார்கள். அதனால் விரயம் ஏராளம். தவறு அதிகம். பாதிக்கப்படுபவர்கள் அநேகர். பாதிக்கப்படுபவை அதிகம். இவையெல்லாம் தெரிவதில்லை. இந்நிலையைப் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்னை பாடுபட்டார்.

சமூக வாழ்வின் உயர்ந்த கட்டத்திலிருந்து, அன்னை வாழ்வின் உயர்ந்த கட்டத்தை நேரடியாக அடைவதே சிறந்தது.

******

  1. பூரணயோகத்தின் சூட்சும இரகஸ்யங்கள்.

பிரபஞ்சம் மனிதனாகத் தன்னை சுருக்க முயல்கிறது.

வாழ்வில் (surface) மனிதன் இதற்குத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். ஆழத்தில் முடிவு தெரிகிறது.

மேலெழுந்த வாழ்விலிருந்து ஆழத்திற்குச் சென்றால் ஆன்மா விடுதலையடைந்து 3 சந்தர்ப்பங்கள் எழுகின்றன.

  1. நிர்வாணம் எய்திய ஆன்மா கரையும்,
  2. ஆன்மா புருஷனாகக் காட்சியளிக்கும்,
  3. சைத்தியப் புருஷனைத் தொடலாம்.

புருஷனைக் கண்டு, புருஷோத்தமனை அடைந்து மோட்சம் பெறுவது கீதை வழி. சைத்தியப் புருஷனைக் கண்டு, ஈஸ்வரனை அடைந்து தெய்வத்தை உலகுக்கு கொண்டு வருவது பூரண யோகம்.

********

  1. பிரகிருதியில் மறைந்துள்ள ஆத்மா வெளிவந்து தன் யாத்திரையைப் பூர்த்தி செய்யும் முதற்படி ஆத்ம சமர்ப்பணம்.

ஆத்ம சமர்ப்பணத்தின் முதற்படி.

********

  1. சிருஷ்டியின் முடிவை ஆரம்பமாகக் கொண்டு, ஆன்மீக வளர்ச்சியைத் தொடங்குவது ஆத்ம சமர்ப்பணம்.

ஆத்ம சமர்ப்பணம் ஆன்மீக வளர்ச்சி.

*******

  1. உடல், உணர்வு, மனம், ஆன்மா என்று 4 பகுதிகளாகப் பிரிந்து ஜீவன் செயல்படுவதாலும், அவற்றிற்குள்ள தொடர்பு முழுமையாக இல்லாததாலும், முழுமையான வாழ்வுக்கும், முழு ஜீவனுக்கும் பிரச்சினைகளும், சிக்கல்களும் எழுகின்றன.

தொடர்பு குறைந்தால் சிக்கல் எழும்.

********

  1. நம்முடைய அழகைப் போற்றினால், அறிவை மெச்சினால், செல்வத்தைப் பாராட்டினால் நமக்கு ஏற்படும் சந்தோஷம் பெருமை என்ற உருவில் வருகிறது.

நல்ல குணம் அடக்கம் தரும்.

நம் நல்ல குணத்தை மற்றவர் பாராட்டும்பொழுது நம்முள் எழும் சந்தோஷம் அடக்கவுணர்வை அளிக்கிறது.

*******

  1. அடக்கம் சந்தோஷத்திற்குச் சிறப்புள்ள நிறைவைத் தரும்.

******

  1. கடுமையான விரதங்களுக்குப் பதிலாக இனிமையான பண்புகளை ஏற்றுக்கொள்வது நல்லது.

விரதங்களை விலக்கி, பண்புகளை ஏற்போம்.

*******

  1. பக்தி அருளை எட்டித் தொடுகிறது. நம்பிக்கை அருளை அழைக்கின்றது. தூய்மை அருளைப் பலிக்கச் செய்கிறது.

பக்தி, நம்பிக்கை, தூய்மை அருளுக்குரியவை.

*****

  1. முழு முன்னேற்றத்திற்கு, முழு முயற்சியை, முழு நேரமும் எடுப்பதே பூரணயோகம். எல்லாக் கரணங்களும் சேர்ந்ததே முழுமை.

பூரணயோகம் முழுமையான யோகம்.

******

  1. முழு முயற்சியின் தவம் போன்ற கடுமையை முழு அன்பின் எழுச்சியாகிய நிறைவை அளிப்பது அன்னைக்கு நாம் செய்யும் சரணாகதி.

கடுமையான தவம் இனிமையான நிறைவாகிறது.

******

  1. மனதை அன்னைமீது நிறுத்தி, முயற்சி முழுவதையும் முறைப்படுத்தினால், அது அன்பின் எழுச்சியைப் பூர்த்தி செய்யும்.

அன்னை அன்பால் நிரப்பும் வகை.

*******

  1. எந்தக் காரியத்தைச் செய்ய ஆர்வமும், வேகமும் இருக்கின்றனவோ, அவை பூர்த்தியாகி மனம் நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன. அந்த காரியம் எந்த மனநிலையிலிருக்கிறதோ, அதுவே நாம் உறையும் மனநிலை.

*******

  1. சொன்னால் செய்யமாட்டான்.

பெரிய திட்டங்களைக் கைவிட்டால் ஆன்மீக அனுபவம் ஏற்படும் அன்னை. ஒரு நிலையில் மௌனம் சித்தித்தால், அடுத்த நிலைக்குப் போகமுடியும்.

காரியம் பூர்த்தியாகும் மகிழ்ச்சியே நம் உண்மை நிலை.

இந்த மூன்று கூற்றிலும் உள்ள உண்மை பொது. ஒருவர் நம் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டால், அதைச் செய்வார். பொதுவாகச் செய்யவேண்டும் என்ற அபிப்பிராயம் உள்ளவர்கள் வாயால் செய்கிறேன் என்று சொல்லமாட்டார்கள். வாயால் சொல்லியும், செய்வது குறைவு. நிச்சயமாகச் செய்கிறேன் என்று வலியுறுத்திச் சொல்பவர்கள் நிச்சயமாகச் செய்யமாட்டார்கள் என்பது வழக்கு. இந்த வழக்கு உண்மை. வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மனம், செய்ய விரும்பினால் செய்யும். செய்ய விருப்பமில்லாவிட்டால் நல்ல வார்த்தை சொல்ல வேண்டும் என்பதற்காகச் செய்கிறேன் என்பார்கள். செய்கிறேன் என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்த முயற்சிதான் நம் பேரில் அவர்களுக்குள்ள அக்கறை. அதை வெளியிட்ட பின் அது மறந்து போவது வழக்கம்.

இருக்கும் சக்தியைக் கொண்டு வார்த்தையைச் சொல்லிவிட்டால், இருப்பது அவ்வளவுதான் என்பதால், செய்வதற்குச் சக்தியிருக்காது.

நாட்டிற்குப் பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும், அன்னைக்குப் பெரிய சேவை செய்ய வேண்டும். பெரிய புத்தகம் எழுத வேண்டும் என்று பலர் அன்னையிடம் வருவதுண்டு. அவர்களுக்குள்ள அத்தனைச் சக்திகளும் இவற்றை நினைப்பதில் செலவாகின்றன. ஆன்மீக அனுபவங்களுக்கு நம்முள் உள்ள அனைத்துச் சக்திகளும் தேவை. இருக்கும் சக்தி திட்டங்களைப் பற்றிய நினைவிருப்பதால், அது உள்ளவரை ஆன்மீக அனுபவங்கள் வாராது என்கிறார் அன்னை.

அதே உண்மையை வேறொரு வகையாகச் சொல்லும் பொழுது நாமுள்ள நிலையை விட்டு அடுத்த நிலைக்குப் போக வேண்டுமானால், நாமுள்ள நிலையில் சக்தி செலவாகக்கூடாது. மௌனம் வேண்டும். ஒரு நிலையில் மௌனம் ஏற்பட்டால் தான், அடுத்த நிலையில் சாதிக்க முடியும்.

வழக்கிலும், அன்னை கூற்றிலும், ஆன்மீகப் பரம்பரையிலும் ஒரே உண்மை நிலவுவது இந்தியப் பண்பின் சிறப்பு.

******

  1. நம்முடைய உலகம் என்பது நம் உணர்வால் உருவானது. அவ்வுணர்வுகளை நிர்ணயிப்பது நம் பண்புகள்.

பண்பின் நிலை பக்குவத்தின் நிலை.

பண்புகளைப் பிரித்து ஒன்று முதல் பத்துவரை அல்லது ஒன்று முதல் நூறுவரை அளவீடு ஏற்படுத்தலாம். நம் பண்புகள் எவை, உள்ள நிலை எது என அறிவது முன்னேற்றத்திற்கு உதவும்.

சுருக்கமாகப் பண்புகளை வரிசைப்படுத்த முயன்றால் முதல் நிலையில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகை, அடுத்தாற்போல் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் முறை, முடிவாக அறிவை நிறைவு செய்து கொள்வது என்று பிரித்து, தேவைகளில் தரம் பிரித்தால் சுமார் 7, 8 தரங்களாகப் பிரிக்கலாம். அதேபோல் மற்ற அளவிலும் செய்தால் சுமார் 20, 30 தரங்கள் ஏற்படும். ஒவ்வொரு தரத்தையும் 3 அல்லது 4 வகைகளாகப் பிரித்தால் சுமார் நூறு நிலைகளில் பண்பு அமையும்.

அத்தியாவசியமான தேவை, அடுத்தபடியான தேவை, ஆசைக்குரிய தேவை, பெருமைக்குரிய தேவை என தேவைகளைப் பிரிக்கலாம்.

ஒவ்வொரு தேவையையும் நாம் எப்படிப் பெறுகிறோம் என்பதையும் பல நிலைகளில் வைக்கலாம். முயன்று பெறுதல் ஒரு நிலை; முயற்சியில்லாமல் கிடைக்குமா என்பது அடுத்த நிலை; திறமையால் பெறுவது; திறமையில்லாதவற்றைப் பெற ஆசைப்படுவது; கேட்காமல் வருவதை ஏற்றுக் கொள்வது; கேட்டுப் பெறுவது; சண்டை போட்டு வாங்குவது.

நான்கு வகைப்பட்ட தேவைகள் ஒவ்வொன்றையும் 8 வகைகளாகப் பிரித்தால் 32 நிலைகள் ஏற்படுகின்றன. எனவே 100 நிலைகளில் பண்புகளை எழுதி, அவற்றுள் நம் நிலை எது எனக் கணக்கிட்டால் நம் பண்பின் நிலையை (cultural value) நாமே நிர்ணயித்துக் கொண்டவர்களாவோம். இது நாம் அடுத்த கட்டத்திற்குப் போக உதவும்.

********

  1. மேல் நாட்டார் பெரியவர்களுக்கு நன்றி சொல்லும் சந்தர்ப்பங்களில் நாம் நமஸ்காரம் செய்கிறோம்.

நமஸ்காரம் சொல்லும் நன்றி.

******

  1. முக்கியம் என்பது மனிதனுக்கு மட்டும் உண்டு. பொருளிலும் இல்லை; செயலும் இல்லை.

மனிதனே முக்கியம், மற்ற எதுவுமில்லை.

********

  1. சம்பளத்திற்கு வேலை செய்பவன் தானே கடமைகளைப் பூர்த்தி செய்வான் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. அவன் கடமையைச் சம்பளம் கொடுப்பவர் நினைவுபடுத்த வேண்டும். நட்பிலும், உறவிலும் கடமைகளை நினைவுபடுத்தக்கூடாது. அவற்றைப்பற்றி பேசாமலிருப்பது நல்லது.

நட்பும், உறவும் கடமையைக் கடந்தவை.

*********

  1. முன்னேற்றம், (i) புதியதைக் கற்றுக் கொள்வது (ii) கற்றுக் கொண்டதைப் பூர்த்தி செய்வது என்ற இரு பகுதிகளைக் கொண்டது.

நம்பிக்கை, வழிபாடு, பணிவு என்பவை மனம், உணர்வு, உடலுக்குரியன.

கையால் செய்து, பிறகு ஆர்வம் பெற்று, முடிவில் அறிவால் தெளிவு பெறுவது முதல் வகை.

மீண்டும் மனதால் ஆரம்பித்து, உணர்வாலும், உடலாலும் பூர்த்தி செய்வது இரண்டாம் வகை. இரண்டும் முடிந்தால் காரியம் பூர்த்தியாகும்.

ஆதிநாள் மனிதன் உடல் ஆரம்பித்து மனதை நோக்கி முன்னேறினான். இன்றைய மனிதன் அறிவாளியாக இருப்பதால் அறிவால் ஆரம்பித்து உடலால் பூர்த்தி செய்கிறான்.

நம்பிக்கை - வழிபாடு - பணிவு என்பது மனதில் ஆரம்பித்து உடல் பூர்த்தியாவது. மனிதன் அறிவால் ஆரம்பிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

புதியதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளும்போது கை சுலபத்தில் வராது. முதல் டிரைவிங் கற்றுக் கொள்பவனுக்குக் gear கீயர் மாற்ற வாராது. அதுதான் உடையும். புதியதாக டைப்பிங் கற்றுக் கொள்பவன் எழுத்தை அழுத்தி அடிப்பான். பேனாவில் முதல்முறை இங்க் போடும்போது தரையெல்லாம் இங்க் ஆகும். சிலமுறை பயின்ற பின் கை செய்யக் கற்றுக் கொள்கிறது. அப்பொழுது வேலையைச் செய்து முடித்து விடுவான். அவன் செய்யும் வேலையைப் பார்ப்பவர்கள் கற்றுக்குட்டி என்று அறிவார். வேலை முரட்டுத்தனமாக (crude) இருக்கும். வேலை பிடிபட்ட பிறகு ஆசையாக இருக்கும். ஆசை வந்தபின் செய்யும் வேலை முரட்டுத்தனமாக இருக்காது. இருந்தாலும் பல சமயங்களில் தவறு வரும். பேனாவில் இங்க் விளிம்பு வரை போட்டால் நிப்பைப் பொருத்தும்போது இங்க் வழியும் என்று தெரிந்தாலும், நிறைய போட்டுவிட்டுப் பிறகு குறைப்பார்கள். வேலையில் உள்ள நுணுக்கங்களை மனம் கற்றுக் கொண்டபின் தவறில்லாமல் செய்யலாம். முதல் கையும், பிறகு ஆசையும், முடிவில் மனமும் (உடல், உணர்வு, அறிவு) வேலையைக் கற்றுக் கொள்கின்றன. மனம் பயின்றதை உணர்வு பயிலுவது அடுத்த கட்டம். அதை உடலும் அறிவது கடைசிக் கட்டம். கடைசிக் கட்டமாகிய ஆறாவது கட்ட அறிவு வந்தபின் அவர் கை தானாக வேலை செய்யும். செய்யும் வேலை நயமாக இருக்கும். Skill திறமை முழுமையாக இருக்கும். முதல் மூன்று கட்டங்கள் முதல் நிலையாக உள்ளவை. இதுபோன்றே ஆதி மனிதன் கற்றான்.

இன்று மனிதனுக்கு அறிவிருப்பதால் உடலில் ஆரம்பிக்க வேண்டியதில்லை. தையல் மெஷினானாலும், கம்ப்யூட்டர் ஆனாலும் அது எப்படி வேலை செய்கிறது என manual புத்தகம் உண்டு.

அதைப் படித்து அறிவால் தெளிவு பெற்று, பிறகு ஆர்வமுற்று, கையால் கற்றுக் கொள்வது இரண்டாம் நிலை. இந்த நிலைகள் பூர்த்தியாவது இரண்டாம் கட்டம்.

நம்பிக்கை - வழிபாடு - பணிவு என்ற மூன்று கட்டங்களை பகவான் விவரிக்கின்றார். முதல் நம்பிக்கை மனதில் ஏற்படுகிறது. உணர்வு பிறகு வழிபடுகிறது. உடல் முடிவில் பணிகிறது.

********

  1. சமர்ப்பணம் ஜோதியை நாடுவதால் ஆரம்பம் - விரிவு - முடிவு என்ற மூன்று நிலைகளைச் சுருக்கி முடிவான பலனை முதல் கொடுக்கிறது.

முடிவான பலனை முதல் தரும் சமர்ப்பணம்.

சிருஷ்டியில் அறிவும், சக்தியும் பிரிந்துள்ளன. அதனால் சக்தி அறிவில்லாமல் பல முறை செயல்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அறிவு பெற்று முடிவில் முழு அறிவு பெற்ற பின் பலன் வருகிறது. ஒரு வீடு கட்டிய பின்தான் தவறு புரிகிறது. பிறகு பல வீடுகளைப் பார்த்து எது சரி என்று கற்றுக் கொள்கிறோம். அடுத்த வீடு அடுத்த தலைமுறையில் கட்டும்போதுதான் முதல் வீட்டில் செய்த தவற்றைத் திருத்த முடிகிறது. சமர்ப்பணம் என்றால் சக்தியை அறிவுடன் இணைப்பது என்று பொருள்.

நாம் செய்யும் வேலைகளைச் சில ஆண்டு கழித்து அல்லது பல ஆண்டு கழித்தே முடிவாக கற்றுக் கொள்கிறோம். அதாவது சக்தி, அறிவுடன் இணைகிறது என்று பொருள். சமர்ப்பணம் என்றால் ஒரு வேலை வந்தவுடன் கை செய்யத் துடிக்கும். சக்தி நகரும். நகர்ந்த சக்தியைச் செயல்பட அனுமதிக்காமல், சக்தியை ஜோதியுடன் அதாவது அறிவுடன் இணைக்கின்றோம். சமர்ப்பணம் என்றால் நம்முள் வேலை செய்ய எழுந்த சக்தியை அதற்குரிய அறிவுடன் இணைக்கின்றோம். பல ஆண்டு கழித்து நடக்க வேண்டியதைச் சில நிமிஷத்தில் செய்து

விடுகிறோம். அதனால் முடிவான பலன் முதலேயே வருகிறது.

*******

  1. பூரண யோகத்தின் சுருக்கம் ஆத்ம சமர்ப்பணம். யோகம் என்ற கட்டடத்தில் ஆத்ம சமர்ப்பணம் ஒரு செங்கல்.

பூரணயோகத்தின் சுருக்கம் ஆத்ம சமர்ப்பணம்.

******

  1. ஜீவன் முழுவதும் நிறைந்த தியான நிலையைச் செயல் வெளிப்படுத்துவது எப்படி?

ஜீவன் நிறைந்த தியானம் என்பது சாந்தமான செயல். பரம்பொருள் பர வெளியில் நிறைந்துள்ளது. அதற்கு சட்டங்களில்லை.

சிருஷ்டிக்குச் சட்டம் உண்டு. மனிதனுக்குரிய சட்டங்களைப் பண்புகள் என அறிவோம்.

ஒவ்வொரு நிலைக்கும், வேலைக்கும் உரிய பண்புகள் உண்டு.

வேலை என்பது ஒரு யோசனையாக ஆரம்பிக்கின்றது.

அதை ஒரு கொள்கையாக மாற்றி ஸ்தாபனத்தில் பயன்படுத்துகிறோம்.

கொள்கை அடுத்த கட்டத்தில் திட்டமாகிறது.

திட்டத்தைப் பல பகுதிகளாக்குகின்றோம்.

கம்பனியின் ஒவ்வொரு பகுதியும் அது அதற்குரிய திட்டம் போடுகிறது.

எண்ணம் ஓர் இலட்சியமாகவோ, இலக்காகவோ வெளிப்படுகிறது. ஸ்தாபனத்திற்குரிய நடைமுறைக்குத் தேவையான திட்டமாக இலட்சியத்தை மாற்ற வேண்டும். நிர்வாகத்தின் தேவைக்கேற்ப திட்டத்தைப் பல பகுதிகளாக்க வேண்டும். உற்பத்தி செய்ய வேலைக்குகந்த பண்புகள் தேவை.

தூய்மை, மௌனம், நிஷ்டை ஆகிய யோக முறைகளால் ஜீவன் முழுதும் நிறைந்த தியான நிலையை எய்துகிறோம். பழைய பண்புகளான நிர்வாகத்திற்கு உரியவை, வேலைக்குரியவை ஆகியவற்றைப் பெறும் வகையில் அமைக்க வேண்டும். அதன் மூலம் ஜீவன் நிறைந்த தியான நிலை வேலையில் வெளிப்படும்.

உ.ம். ஒரு கம்பெனியின் உற்பத்தியை டெலிவரிக்குத் தகுந்தாற்போல் அமைக்க punctual நேரத்தில் வேலையை முடிக்க முயல்கிறோம். இது டென்ஷனில் முடிகிறது. அதையே சாந்தமாகச் செய்ய முயன்றால் ஜீவன் நிறைந்த தியானம் வெளிப்படும்.

*******

இரண்டாம் பாகம் முற்றும்.



book | by Dr. Radut