Skip to Content

6. தெய்வ நம்பிக்கை

பக்தியும், நம்பிக்கையும் தெய்வ வழிபாட்டின் அஸ்திவாரங்கள். நம்பிக்கை என்ற சொல் faith என்பதைக் குறிக்கும். Belief என்ற ஆங்கிலச் சொல்லையும் நம்பிக்கை என்று மொழிபெயர்க்கலாம். conviction என்பதையும் நம்பிக்கை என்று சொல்வதுண்டு. நான் இக்கட்டுரையில் நம்பிக்கை எனக் குறிப்பிடுவது faith என்ற பொருளில். ஸ்ரீ அரவிந்தர் இந்தத் தலைப்பில் 3 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். "ஆங்கிலத்தில் faith என்ற சொல் தன் கருத்தைச் சரிவரப் பிரதிபக்காது; சிரத்தை (sraddha) என்ற சமஸ்கிருத சொல்லே பூரணமாகத் தன் கருத்தை வெளியிடும்; என்றாலும் வேறு வழியில்லாமல் faith என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தால் பயன்படுத்துகிறேன்'' என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். வழக்கில் சிரத்தை என்றால் அக்கறை (interest) என்றாகும். அடிப்படைக் கருத்துக்கும், வழக்கில் உள்ள பல்வேறு சொற்களுக்கும் பல வகையான வேறுபாடுகள் இருப்பதால், தெய்வ நம்பிக்கை என்பது என்ன என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ள ஆன்மீகக் கருத்தைச் சொல்லி, அதன் அடிப்படையிலேயே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

ஆன்மீக ஞானம் புத்தியில் பிரதிபலிப்பதால் ஏற்படும் உணர்வை நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என்கிறார் பகவான். புத்தியில் தெளிவாக இல்லாத ஒன்று, ஆன்மாவில் இருந்து அதன் பிரதிபலிப்பு புத்தியில் ஏற்பட்டால், அதன் விளைவான உணர்வை நம்பிக்கை என்று குறிப்பிடுகிறார். ஓர் உத்தியோகத்திற்கு விண்ணப்பம் செய்கிறோம். அங்கு தேவைப்பட்டவர் ஒருவர். 12 பேர்

விண்ணப்பித்துள்ளார்கள். M.A. பட்டத்தில் I Class வாங்கி விண்ணப்பித்துள்ளார். இன்டர்வியூவுக்குச் சென்றபொழுது 12 பேரைப் பார்க்கிறார். அவர்களில் M.A I Class பலர், II Class சிலர், M.Litt. ஒருவர், Ph.D. ஒருவர். இந்த உத்தியோகம் தனக்கில்லை என்று அறிவு தெளிவாகச் சொல்கிறது. ஆனால் உணர்வு மாறாக இருக்கிறது. இன்டர்வியூ முடிந்தபொழுது Ph.D. வாங்கியவரைத் தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அறிவு தான் பெற்ற ஜெயத்தைப் பறைசாற்றுகிறது. எனினும் உணர்வு அசையாமல் அறிவிக்கப்பட்டது முடிவானதில்லை என்று நினைக்கிறது. உணர்வின் நிலையை வெளியே சொல்லக் கூச்சமாயிருக்கிறது. கல்லூரி வாயிலைக் கடக்கும்பொழுதும் உணர்வு தெளிவாக பழைய நிலையையே வற்புறுத்துகிறது. அறிவு அதை மூடநம்பிக்கை எனக் கேலி செய்கிறது. வெளியே வரும்பொழுது தன் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கேட்டுத் திரும்பினால் புரொபஸர் கூப்பிடுவதாகச் சொல்கிறார். அங்குச் சென்றால், "ஒருவரே தேவை. Ph.D. உள்ளவரை நியமித்துவிட்டோம். உங்கள் பதில் சிறப்பானதால் வேறோர் இடத்தை ஏற்படுத்தி உங்களையும் நியமிக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்று புரொபஸர் சொல்வதை அறிவு நம்புவதில்லை; உணர்வு பலித்து விட்டது. இதுவே நம்பிக்கை எனப்படுவது. அறிவுக்குப் புலப்படாத ஒன்றை (தெளிவாக இல்லை என்று அறிவுக்குப் புலப்படுவதை) ஆன்ம ஞானம் புரிந்துகொண்டு, புத்தியின் வழியாக அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு என்று சொல்வதை நம்பிக்கை உணர்வு என்கிறோம். நம்பினோர் கைவிடப்படார் என்பதும் இதுவே.

நம் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதற்கெல்லாம் அளவுண்டு. ஒரு பிரச்சினை ஏற்பட்டால் பிரார்த்தனையால் தீரும். தவறினால் சமர்ப்பணத்தால் தீரும். எந்த முறையும் பக்காத நிலையிலும் நம்பிக்கையை இழக்காவிட்டால், நம்பிக்கையால் தீரும். நமக்குள்ள நம்பிக்கை அளவுடையதாக இருக்கலாம். பிரச்சினை அதைவிடப் பெரியதாக இருக்கலாம். நம்பிக்கையைச் சற்று வளர்த்துக்

கொண்டால், பிரச்சினைக்கு அது சமமாகும்பொழுது பிரச்சினை தீரும். இந்த முறையின் பல பகுதிகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பகுத்தறிவும் நம்பிக்கையும்:

பொதுவாக மனிதன் வாழ்க்கையை தன் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்தபடி ஏற்றுக்கொள்கிறான். குடும்பத்தின் பழக்கங்களையே முக்கியமாகக் கருதி ஏற்றுக்கொள்கிறான். அடுத்தாற்போல், படிப்பால் ஏற்பட்ட மாறுதல்களையும் கைக் கொள்கிறான். அதற்கடுத்தாற்போல், தனக்கு என்று ஒரு பாதையை 25 முதல் 35 வயதிற்கு அமைத்து, அதன்படி நடக்கிறான்.

ஒரு முக்கியமான வேலையைச் செய்யும்பொழுது தன் குடும்பப் பழக்கத்தையே ஒருவன் மேற்கொள்கிறான். வீடு கட்ட வேண்டும் என்றால் பிறரிடம் உதவி வாங்கிப் பழக்கம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவன், தானே முன்நின்று கட்ட முடியும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி, வீடு கட்ட ஆரம்பிக்கிறான். அதனால் பெரும்பாலும் காரியம் கூடிவிடும். தடை ஏற்பட்டால் படிப்பால் தனக்கு ஏற்பட்ட அறிவைப் பயன்படுத்துகிறான். மேலும் சிரமம் வந்தால், தனக்கென்று ஏற்பட்ட பாணியை (individuality) ஒட்டிச் சமாளிக்க முயல்கிறான். இவையெல்லாம் பலிக்கும்பொழுது சில நம்பிக்கைகள் வளர்கின்றன. சட்டம் நமக்குச் சாதகமாக இருக்கிறது. அதனால் பலிக்கும் என்று ஒரு நம்பிக்கை. ஊரில் எவரும் அநியாயமாகப் பேசமாட்டார்கள். நம் பக்கம் நியாயம் இருக்கிறது. அதனால் பலிக்கும் என்றொரு நம்பிக்கை. என் திறமை எப்பொழுதுமே தோற்றதில்லை. இந்த விஷயத்தில் எனக்குத் திறமையிருக்கிறது. அதனால் பலிக்கும் என்று நம்புகிறோம். இதெல்லாம் பகுத்தறிவுக்கு உட்பட்டது. சட்டம், ரூல், நியாயம், திறமை, நிலைமை, வழக்கம், பழக்கம் போன்றவைகளில் நமக்கு நம்பிக்கையுண்டு. அந்த நம்பிக்கை பலன் அளிப்பது வழக்கம்.

டாக்டர் மீதுள்ள நம்பிக்கை அந்த வகையைச் சேர்ந்தது. இந்த நம்பிக்கைகளில் எல்லாம் பலிக்காத பிரச்சினை ஒன்று ஏற்பட்ட பொழுதுதான், இவற்றையெல்லாம் தாண்டி தெய்வத்தை நம்புகிறோம். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட தெய்வ நம்பிக்கை ஒன்றுண்டு. அது பகுத்தறிவுக்குப் புறம்பானதன்று; பகுத்தறிவுக்கு மேற்பட்டது. பகுத்தறிவில்லாதவன் அப்படிப்பட்ட நம்பிக்கையைக் கைக்கொண்டால் அது மூடநம்பிக்கையாகும். பகுத்தறிவுடைய ஒருவன், அதற்கு மேலுள்ள நம்பிக்கையைக் கைக்கொண்டால் அதையே இங்கு faith தெய்வ நம்பிக்கை, நம்பிக்கை என்று குறிப்பிடுகிறோம். இதனால் தெய்வம் நம் வாழ்வில் செயல்பட்டு ஒரு பிரச்சினை தீர வேண்டுமானால் சட்டம், திறமை, புத்தி, பழக்கங்கள் ஆகியவற்றில் உள்ள நம்பிக்கையை நாம் தாண்டி வர வேண்டும். அப்படி அவற்றைக் கடந்து வந்தால்தான் நம்பிக்கையின் முழுப் பலன் கிடைக்கும்.

உடல் நோய் வந்தபொழுது அன்னை மீது நம்பிக்கைக் கொண்டு பிரார்த்தனை செய்தால், நோய் பல சமயம் தீர்வது வழக்கம். சில சமயங்களில் குறைவது போலவும், அதிகமாவதாகவுமாக மாறி மாறி இருக்கும். நமக்கு அன்னை மீது நம்பிக்கை இருக்கிறது. அதே அளவுக்கு நம் உடலுக்கு நம்பிக்கையில்லை. உடல், யுகாந்த காலமாக மருந்து சாப்பிட்டுப் பழகியது. அதற்கு மருந்து மீது நம்பிக்கை இருக்கிறது. எனவே, அன்னை மீது நம்பிக்கையிருந்தாலும், மருந்து சாப்பிட்டால்தான் உடல் குணமாகும் என்று அறிந்து மருந்து சாப்பிட ஆரம்பித்தால், 10 வேளை மருந்து இரண்டாம் வேளையில் குணம் கொடுக்கிறது. உடலுக்கு மருந்தின்மீது நம்பிக்கையிருப்பதால் அன்னை மருந்து மூலமாக சீக்கிரம் நோயைக் குணப்படுத்துகிறார்.

ஆனால் டாக்டர் கைவிட்டபின் நமக்கும், நம் உடலுக்கும் மருந்து, பழக்கம், டாக்டர், எல்லாவற்றின் மீதும் உள்ள நம்பிக்கை போனபின், அன்னை மீது நம்பிக்கை வந்து பிரார்த்தனை செய்தால், டாக்டர் வியக்கும்படி நோய் மின்னல்வேகத்தில் குணம் அடைகிறது. "என் தகப்பனாரை எல்லா டாக்டர்களும் கைவிட்டனர். அவர்

குணமான பின்னும் எந்த டாக்டரும் நம்பவில்லை. இந்த அளவு முற்றியபின் கான்சர் எப்படிக் குணம் ஆயிற்று என்று தகப்பனாராலும், என்னாலும், டாக்டராலும் நம்ப முடியவில்லை'' என்று ஒரு பெண் அடிக்கடி சொல்வதுண்டு.

உடலுக்கு மருந்தின்மீது நம்பிக்கையிருந்தால் அன்னை மருந்து மூலமாகக் குணப்படுத்துகிறார். எல்லா நம்பிக்கைகளையும் இழந்தபின் அபரிமிதமாக, ஆச்சரியப்படும் வகையில், மின்னல்வேகத்தில் அன்னை பிரச்சினையைத் தீர்க்கின்றார். அன்னையின் தெய்வீகச் சக்தி அதிகமாக நம்மில் செயல்பட வேண்டுமானால், வழக்கமாக உள்ள நம்பிக்கைகளை நாம் விட்டுவிட்டு, அன்னை மீது நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். டாக்டர் கைவிட்டபின் நம்பிக்கையை இழப்பவர் பலர். அதன்பின் அன்னை மீது நம்பிக்கை ஏற்படுவது சிலருக்குண்டு. அதற்குப் பலன் உண்டு; பெரும்பலனும் உண்டு. டாக்டர் முழு நம்பிக்கையோடு வைத்தியம் செய்யும்பொழுதும் நம்முடைய முழு நம்பிக்கையையும் அன்னை மீது வைத்து, டாக்டரையும், மருந்தையும் கருவியாகக் கருதுவது உயர்ந்த நம்பிக்கை.

நம்பிக்கை முழுப் பலன் அளிக்க நமக்கு மற்ற விஷயங்களிலுள்ள நம்பிக்கை அற்றுப்போக வேண்டியது அவசியம் என்பதைப்போல், நம்பிக்கை பலன் அளிக்க வேறு சில நிபந்தனைகளும் உண்டு.

ஒரு வேலையில் நாம் செய்யக்கூடியது, செய்ய வேண்டியது என்று பல உள்ளன. அவற்றையெல்லாம் முடித்த பின்னரே நம்பிக்கை யுடன் செய்யும் பிரார்த்தனை பலிக்கும். எனக்கு அன்னை மீது நம்பிக்கையிருக்கிறது. ஆனால் கல்லூரிக்குப் போகமாட்டேன். எனக்குப் பாஸ் தானே வரும் என்பது நம்பிக்கையில்லை; பகுத்தறிவும் இல்லை; பொருத்தமில்லாத செயல். மாணவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்தபின் செய்யும் பிரார்த்தனைக்குத் தேவையான நம்பிக்கையையே இங்கு நாம் ஆராய்கிறோம். மேற்சொன்னபடி பேசுபவன் மாணவன் இல்லை; மாணவனுக்குரிய தகுதியைப்

பெற்றவனில்லை; அவனுக்கு வெற்றிக்கோ, தோல்விக்கோ உரிமை இல்லை.

தம் 15 ஏக்கர் நிலத்தை எட்டிப்பார்க்காதவர், தானே பெரும் விளைச்சல் வரும் என்று சொல்வதும், ரூ.650/- சம்பளம் உள்ளவர் தாம் தம் நம்பிக்கையால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகிறேன் என்று பறைசாற்றி முப்பதாயிரம், மூன்று வட்டிக்குக் கடன் வாங்கி ஊதாரிச் செலவு செய்பவரும், B.S.C III Class பாஸ் செய்துவிட்டு I.A.S. ஆபீஸராகப்போவதாகத் திட்டமிடுபவரும், 40 மாணவருள்ள பள்ளியில் ஒவ்வொரு வருஷமும் 28ஆம் rank வாங்கியவர் B.A.. இரண்டாம் முறை பாஸ் செய்து I.A.S. நிச்சயமாகக் கிடைக்கும் என்று உறுதியாக நம்புபவரும், சாப்பாட்டிற்கு எந்த வருமானமுமில்லாத குடும்பத்தில் 8 வயதுப் பையனை ராஜீவ் படித்த Dehradoon Military Collegeஇல் சேர்க்க பிரம்ம பிரயத்தனப்படுபவரும் நம்பிக்கையுடையவரில் சேர்ந்தவரில்லை. அவர்களிடம் காணப்படுவது ஆசை; சொல்லப்போனால் பேராசை; அதிலும் அறிவுக்குப் பொருத்தம் இல்லாத, அர்த்தமற்ற பேராசை. அவர்களை நான் இக்கட்டுரையில் விமர்சிக்க விரும்பவில்லை. அவர்களுடைய நிலை வேறு. நம்பிக்கை உடையவர்கள் நிலை வேறு.

நம்பிக்கையுடன் ஒரு பிரார்த்தனையை மேற்கொள்ளுமுன், அந்தக் காரியத்தில் நம்மால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் நம் திறன் முழுவதையும் செலுத்தி நம் திறமையைப் பூர்த்தி செய்துவிட வேண்டும். காரியத்திற்குத் தேவையானவற்றில் கால் பங்கே நம் திறமையால் பூர்த்தியடையுமானாலும், அந்தக் கால் பங்கைப் பூரணமாக நாம் செய்து முடிக்க வேண்டும். அதாவது நம்மால் முடிந்தவை அனைத்தையும் சொச்சமில்லாமல் செய்துவிட வேண்டும். அதன் பிறகே பிரார்த்தனை எழுகிறது. பிரார்த்தனைக்குரியதே நம்பிக்கை. தம்மால் செய்ய முடிந்ததைப் பாக்கியாக வைத்தவர்களை நம் பட்டியலில் சேர்க்கவில்லை. Mother begins where man ends. நம் திறமை முடியுமிடத்தில் அன்னை ஆரம்பிக்கின்றார்கள்.

உடலில் திட்டுத்திட்டாய் வெள்ளையாக இருக்கிறது. 10 வருஷமாக எத்தனையோ வைத்தியம் செய்துவிட்டேன்; பலன் இல்லை. நூற்றுக்கு நூறு நியாயமான வழக்கு. கீழ்க்கோர்ட்டிலும், அப்பீலிலும் தோற்றுவிட்டது. சொத்து பறிபோய்விடும். இரண்டு நாளில் போய் விடும். அறிவுக்கு எட்டிய வழியோ, கண்ணுக்குத் தெரிந்த பாதையோ இல்லை. டிபார்ட்மெண்டில் பரீட்சை எழுத 2 சான்ஸ் உண்டு. 2 exemptions உண்டு. 4உம் தாண்டியாய்விட்டது. பரீட்சை பாஸாகவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் வயது 40 பூர்த்தியாகிறது. அதற்குப்பின் பிரமோஷன் இல்லை. இதுபோல் கைவிடப்பட்ட மனைவி, பறிபோன சொத்து, தீராத வியாதி, 12 வருஷமாக வசூலாகாத கடன், ஆகிய பல நூறு பிரச்சினைகளைச் சொல்லலாம்; அன்னைக்கும் பிரார்த்தனை செய்துபார்த்தேன். மற்றதெல்லாம் பலிக்கிறது. இந்த விஷயம் மட்டும் பலிப்பதில்லை என்ற நிலையில் உள்ள பிரச்சினை ஒன்றை நம்பிக்கையை அதிகப்படுத்திக்கொண்டு, அதன் மூலமாகத் தீர்ப்பதெப்படி என்று கருதுவோம்.

இப்படிப்பட்டவர்கள் நிதானமாகப் பிரச்சினை விஷயத்தில் ஈடுபட ஆரம்பித்தால், "இது குணம் ஆகாது என்று எனக்குத் தெரியும்; ஆசை கெட்டகேடு; ஏதாவது மருந்து போட்டுக் கொள்கிறேன்'' என்பது போன்ற ஒரு பதில் மனதில் இருப்பதைக் காண்பார்கள். அதாவது, பிரச்சினை தீராது என்று திடநம்பிக்கை மனத்தின் ஆழத்திலிருக்கிறது. ஆசைக்காகப் பல செய்வதுபோல், அன்னைக்கும் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் மனத்தில் தீராது என்றுள்ள நம்பிக்கையே பலிக்கிறது. அது ஆச்சர்யமில்லை.

மனம் அப்படியிருந்தால், முதல் மனத்துடன் விவாதம் நடத்தி, "நான் அன்னையின் பக்தன். எனக்கு இந்தப் பிரச்சினை நிச்சயமாகத் தீரும். அன்னைக்குப் பிரார்த்தனை செய்தபின் பிரச்சினை தீரவில்லை என்றால் அன்னைக்குச் சக்தியில்லை என்று அர்த்தமில்லை. ஏதோ தடை என்னிடமிருக்கிறது. என்னிடமுள்ள தடையை ஆராய்ந்து, கண்டுபிடித்து, விலக்கி, பிறகு பிரார்த்திக்கிறேன்'' என்று நம்பிக்கை

இன்மையை விலக்கி, மனத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதுவே முதல் கடமை.

அதன்பின் இந்த வியாதிக்கு மருந்து எங்கெல்லாம் கிடைக்கும் என்று முழுவதும் ஆராய்ந்துவிட்டோமா, குறையிருக்கிறதா எனப் பரிசீலனை செய்ய வேண்டும். இந்தக் கடன் விஷயத்தில் நாம் காலத்தில், முறையாக வசூலிக்க முழு முயற்சி செய்திருக்கிறோமா என்று யோசிக்க வேண்டும். வழக்கு நடத்தும்போது நாம் செய்யக் கூடியது ஏதாவது பாக்கியாகிவிட்டதா என்று கண்டறிய வேண்டும். கணவன் கைவிட்டுப்போனதில் தன் பங்கு சிறிதளவேனும் உண்டா என்று கேள்வி எழுப்ப வேண்டும். 4 முறை பரீட்சை எழுதினோம், முறையாகப் படித்தோமா என்று நம்மை நாமே கேட்க வேண்டும். இப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பியவுடன் ஒரு மருந்தைப் பற்றிக் கேள்விப்படுவோம். கடன் கொடுத்தவரிடம் ஆரம்ப காலத்தில் அவருடைய தயவை எதிர்பார்த்தோம். வக்கீல் தலைப்பாடாக அடித்துக் கொண்டும் கோர்ட்டில் குறித்த காலத்தில் ஒரு சர்டிபிகேட்டைக் கொடுக்கவில்லை. பரீட்சைக்குப் பணம் கட்டிவிட்டு படிப்பதற்குப் பதிலாக வேறு வேலைகளைக் கவனித்தோம் என்பது தெரியவரும். சிலவற்றை அப்பொழுது சரி செய்யலாம். மற்றவை காலம் கடந்ததாக இருந்தால், மனத்தில் உணர்வுபூர்வமாகச் சரி செய்யலாம். அன்று செய்யத் தவறியதை இன்று உணர்ந்தால், உணர வேண்டிய அளவுக்கு உணர்ந்தால், செயலால் தவறியது உணர்வால் இன்று பூர்த்தி பெறும். அப்படிச் செயலாலும், உணர்வாலும், அறிவாலும், அன்று செய்தவற்றை இன்று முடிந்தவரை (to the point of exhaustion) பூரணமாகப் பூர்த்தி செய்துவிட்டு, மீண்டும் பிரச்சினையைப் பரிசீலனை செய்தால், தீர்வு காண வழி ஏற்பட்டது போன்ற உணர்வு தட்டுப்படும். ஏற்பட்ட வழிகளை எல்லாம் பயன்படுத்தி மேலும் மேலும் செயல்பட்டுக் கொண்டேயிருந்தால், நம்பிக்கை சிறிது வளர்வதும், சில சமயங்களில் தளர்வதும் தெரியும்.

என்னைக் கேட்கவில்லை; கொடுக்கமாட்டேன் என்று விட்டு

விட்டார்கள். நான் என்றுமே வாங்கிய பணத்தை இல்லை என்று சொல்லவில்லையே' என்று கடன்பட்டவர் சொன்னதாக ஒரு சேதி வரும். 40 வயதை 45ஆக மாற்றப்போகிறார்கள்; 4 பரிட்சையை 6ஆகச் செய்யப்போகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். சில சமயங்களில் நம் முயற்சிக்கு ஏற்ப நல்ல மாறுதல்கள் சிறிது, சிறிதாக வந்துகொண்டிருக்கும். வேறு சில சமயங்களில் கடைசிவரை பிரச்சினை கிணற்றில் போட்ட கல்போல இருக்கும். நம்மால் இன்று முடிந்ததைச் செய்தபின், இன்னும் கொஞ்ச முயல இடம் இருக்கிறது என்பதுபோல் பிரச்சினை வழிவிடும். அதையும் உடனே பூர்த்தி செய்ய வேண்டும்.

நம்பிக்கை வளரும் நிலையும் உண்டு; தளரும் நிலையும் உண்டு. விடாமுயற்சி, நம்பிக்கையை உற்பத்தி செய்யும் என்று அன்னை கூறுகிறார். நம்பிக்கையை வளர்க்க எல்லா முயற்சிகளையும் தவறாது செய்ய வேண்டும். எத்தனை நாளான பிரச்சினையானாலும், எவ்வளவு பெரிய சிக்கலானாலும், எல்லா நிலைகளிலுமே கைவிடப்பட்டன ஆனாலும், எனக்கு அன்னை மீது நம்பிக்கையிருக்கிறது; நான் தொடர்ந்து முயல்வேன்; முடிந்தவரை செய்வேன்; நடப்பனவெல்லாம் நல்லனவே. அன்னையை ஏற்றுக்கொண்டபின், என் குறைகளை விலக்கியபின், என் முயற்சியைப் பூர்த்தி செய்தபின் எப்படிப் பிரச்சினை தீராமருக்கலாம்? நிச்சயமாகத் தீரும். அத்துடனில்லாமல் அதன் மூலம் வேறு நல்லதும் நடக்கும் என்று நமக்கு நாமே அன்னை சொல்லியவற்றை நினைவுபடுத்திக்கொண்டு தொடர்ந்து முயன்றால் பலன் அபரிமிதமாக இருக்கும்.

என் வீட்டுக்காரர் இதுவரை பல உத்தியோகங்களில் மாறி விட்டார். இந்த முறையும் பழைய வேலை போய்விட்டது. அடுத்த வேலை எப்பொழுது கிடைக்குமோ தெரியவில்லை. இந்த முறை நான் அன்னை பக்தரானபின்னால் வேலை போய்விட்டது. அப்படி என்றால் என்ன பொருள்? பொருளிருக்கட்டும், நான் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப்போகிறேன்' என்று சொல்லிய பெண்ணுக்குப் புதிய நிலைமை உருவாகி, வீட்டுக்காரருக்கு ஒரு பெரிய கம்பெனியில் வேலை

கொடுப்பதாகச் சொன்னார்கள். அவர் போனார்; இல்லை என்றார்கள்; வந்து சோர்ந்து வீழ்ந்துவிட்டார். அப்பெண்மணி கணவர் சொல்லியதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு நம்பிக்கையிருக்கிறது. நிச்சயம் வேலை கிடைக்கும் என்று கணவரிடம் சொன்னார். கணவர் வெளியே போனார். அந்தக் கம்பெனியிருந்து அவரை வரச் சொல்லி தகவல் வந்தது. வெளியே போனவர் எப்படியோ அக்கம்பெனிக்குப் போனார். வேலை கிடைத்தது. போன வேலை 2,500 ரூபாய் சம்பளத்தில். கிடைத்த வேலை மூவாயிரத்தில். பின்னர் மேலும் சில ஆயிரமும் உண்டு என்று தெரிந்தது. தளராத நம்பிக்கையின் பலன் அது.

அலசி, அலசிப் பார்த்தால் முதலில் நமக்குப் பிரச்சினை தீராது என்று நம்பிக்கையிருப்பது தெரியும். அதைத் தகர்த்து எறிந்தபின், நமக்கு வேறு விஷயங்களில் நம்பிக்கையிருக்கிறது; சிபாரிசு இல்லை, அதனால் நடக்காது; பணமில்லை, அதனால் நடக்காது; பட்டமில்லை; அதனால் முடியாது; நமக்கு இவை போன்ற விஷயங்கள் கூடிவரா என்பன போன்று 10, 20 தடைகள் இருப்பது தெரியும். முள்ளின் மேல் விழுந்த துணியை எடுப்பதுபோல் ஒன்று, ஒன்றாய் மெதுவாக எடுக்க வேண்டும். அந்த நிலையில் நாம் செய்யக்கூடிய பெரிய காரியங்கள் இரண்டு, சிறிய காரியங்கள் இருபது விட்டுப்போய் இருப்பது தெரியும். அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் இப்பொழுது சரி செய்தால், மீண்டும் நம்பிக்கை தளர்வது தெரியும். இதெல்லாம் முடியுமா என்று ஒரு கேள்வி நிமிஷத்திற்கொரு முறை எழுந்தபடி இருக்கும். இதுவும் முடியும்; இதற்கு மேலும் முடியும் என்று அந்தக் கேள்விக்கு அது நிற்கும்வரை அயராது பதில் சொல்லிவிட்டு மேலே போய்க்கொண்டேயிருக்க வேண்டும்.

நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, நம்மால் விட்டுப்போனதை எல்லாம் பூர்த்தி செய்துகொண்டே நாம் அங்குலம், அங்குலமாக முன்னேறினால், அங்குலம் அடியாகி, அடி மைலாகி பிரச்சினை பூர்த்தி ஆகும். ஒருவர் அன்னைக்குச் சேவையாக 300 பிரதி புத்தகங்கள்

விற்பனை செய்ய முன்வந்தார். 3 பிரதி விற்பதற்குரிய கஷ்டத்தைப் பார்த்துப் பிரமித்துவிட்டார். வீட்டில் 3 பேர் சேர்ந்து பிரயத்தனம் செய்து 50, 70, 100 என்று தாண்டி 141க்கு வந்த சமயம் ஒரு லைப்ரரி 147 புத்தகங்கள் வாங்கிக்கொள்ள முன்வந்து அவர்கள் குறிக்கோளைப் பூர்த்தி செய்தது. கடைசிவரை கிணற்றில் போட்ட கல் போல இருந்த பிரச்சினை திடீரென மாறி முழுப் பலன் கொடுத்ததும் உண்டு. எந்த வகையானாலும் பலன் உண்டு; முழுப் பலனும் உண்டு. அதற்கு மேலும் எதிர்பாராத பலனும் உண்டு. நம்பிக்கை ஒரே ஒரு முறையும் வீண்போவதில்லை.

வாழ்க்கை:

வாழ்க்கைக்குச் சில நியதிகள் உண்டு. சில ஆற்றல் உண்டு. பல ஆற்றல்களுடன் சில பேராற்றல்களும் உண்டு. அவையெல்லாம் நமக்குப் பாடம். மனப்பாடமாகவும் தெரியும். அதன் சாரமாக மக்கள் அறிந்தவை சில; அதிர்ஷ்டம் வேண்டும்; பணம் வேண்டும்; பணத்தைச் சேர்த்துவிட்டால் மற்றவையெல்லாம் தாமே வரும்; நேர்மையாகப் போனால் காரியம் நடக்காது. ஒத்துவரும்வரைதான் நேர்மையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்; காரியத்தை முடிக்கப் பாடுபட வேண்டுமே தவிர மற்றவற்றிற்கெல்லாம் இங்கு வேலையில்லை.

இவையெல்லாம் மட்டமான மனிதர்களுடைய கோட்பாடுகள் இல்லை. பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் உள்ள மனப்பாங்கு. விதிவிலக்காக இலட்சியப்புருஷர்கள் உண்டு. இலட்சியமாக வாழ்ந்து இலட்சணமாக இருந்தவர்கள் குறைவு. இலட்சியத்தை ஏற்றுக் கொண்டதால் திரு.வி.க.வையே அலட்சியம் செய்தது சமூகம். வறுமையில் இறந்தார் திரு.வி.க. கடைசி காலத்தில் வறுமையில் வாழும் நேரத்திலும் வீடு தேடி வந்த பெரிய தொகையை, "என்னால் பிறருடைய உதவியை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று சொல்லித் திருப்பி அனுப்பியவர் அவர்.

நேர்மையாக இருந்தால் மனம் நிம்மதியாக இருக்கும். ஆனால் நாமறிந்த வாழ்க்கையில் நேர்மைக்குப் பிரதிபலன் வெற்றியாகவோ, பொருளாகவோ கிடைக்காது. மனச்சாட்சியைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் போகின்ற கதி நல்ல கதியாகும். சுத்தமான மனச்சாட்சிக்கும், வாழ்க்கை வளத்திற்கும் நேரடியாகத் தொடர்பு கிடையாது. செல்வம் மற்ற விஷயங்களைப் பொருத்தது. மனச்சாட்சியைப் பொருத்ததில்லை. வாழ்க்கையில் சத்தியம், நேர்மை, தூய்மை, பக்குவம், பவித்ரம், லட்சியம், கற்பு, இவற்றுக்குப் பலன் நிம்மதியான மனம் ஆகும். இவையெல்லாம் ஒருவர் பின்பற்றுவதால், அவருடைய தொழில் வளப்படும் என்பதில்லை; ஒரு வகையில் பாதிக்கப்படலாம்.

நம் வாழ்வில் தீராத பிரச்சினையை எடுத்து, இன்று கடந்த கால குறைகளை மனதில் நிவர்த்தி செய்தால், என்ன பலன் கிடைக்கும்? மனத்திற்கு ஒரு தெளிவு ஏற்படும். அதற்கு மேல் ஒன்றும் கிடைக்காது. தோற்றுப்போன நியாயமான கேஸை ஆராய்ந்து, நாம் செய்யத் தவறியவற்றை உணர்ந்தால், மீதி நாட்களும் அதைத் திருப்பித் திருப்பிப் பேசிக்கொண்டிருக்கலாம்; ஆவது ஒன்றுமில்லை. இன்று புதிய அறிவு வந்துவிட்டதால், கடந்த கால செயல்களை மாற்றும் திறன் அறிவுக்கில்லை. புதிய நல்லுணர்வு ஏற்பட்டதால் செய்த தவறுகள், பட்ட நஷ்டங்கள் மாறிவிடா.

ஆனால் அன்னையின் ஆத்மீகச் சக்தி உலகுக்குப் புதியது. இதுவரை வாழ்க்கைக்கு இல்லாத திறனைக் கொடுக்கிறது. புதிய அறிவு ஏற்பட்டால், புத்துணர்வு பிறந்தால், அதன் மூலம் அன்னையின் சக்தி பழைய குறைவுகளை நிறைவு செய்யும்; பழைய நஷ்டங்களை ஈடு செய்யும். அந்த வல்லமையை வாழ்க்கைக்கு அன்னையின் ஆன்மீகச் சக்தி இன்று அளித்துள்ளது. அந்தச் சக்தியால் இன்று நாம் பலன் பெற வேண்டும். தீராத பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அதை முடிக்கப் பல்வேறு உபாயங்களை அன்னை கூறுகிறார். இங்கு நாம் கருதுவது நம்பிக்கை என்ற கருவியை மட்டுமே. நம்பிக்கையை

வளர்ப்பதன் மூலம் அன்னையின் சக்தியைப் பயன்படுத்தி இதுவரை உலகத்தில் நடக்காத ஒன்றை நம் வாழ்க்கையில் எப்படி நடத்திக் கொள்வது என்பது மட்டுமே இங்கு கருதப்படுகிறது.

தீராத பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொள்வோம். அது அன்னையால் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, அன்று அப்பிரச்சினையில் நம் குறைகளைக் கவனித்து இன்று அவற்றை அறிவாலும், உணர்வாலும் மயிரிழை பாக்கியில்லாமல் நிறைவு செய்து, பிறகு அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், அப்பிரச்சினை தீரும் என்று சொன்னேன். மேலும் ஒன்று. ஒரு பிரச்சினை தீரும்பொழுது 10, 15 கட்டங்களைத் தாண்டிவரும். ஒவ்வொரு கட்டத்திலும் நம்முன் ஒரு பிரச்சினை தோன்றும். அதற்கு இரு வழிகள் தென்படும்; ஒன்று பழைய வழி, மற்றது புதிய அன்னை வழி. எந்தக் கட்டத்தில் பழைய வழியை நாடுகிறோமோ அதே கட்டத்தில் எல்லாம் நின்றுவிடும்.

உதாரணமாக, 15 ஆண்டுகளாகக் குடும்பத்தை வாட்டிவரும் கடன், மேற்சொன்ன முறையைக் கையாண்ட ஒருவருக்கு புதிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு 50,000 பெறுமான அவருடைய நிலம் 6 இலட்சத்திற்கு விலைக்கு வருகிறது. இந்த நிலையில் அவருக்கு இரண்டு விஷயம் தோன்றுகிறது. ஒன்று, கடனையெல்லாம் அடைத்து விட்டு, மகள் திருமணத்தை முடித்துவிட்டு, மீதிப் பணத்தை குடும்பத்திற்கு உதவியான நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவது. மற்றொன்று, நமக்கில்லாத பெருமையைத் தேடி செலவு செய்ததால் தான் இவர் தலைமுறையில் 15 காணி நிலத்தை விற்கும் இந்தக் கடன் எல்லாம் வந்தது. 3 வேளை நல்ல சாப்பாடு சாப்பிட முடியாத நிலையில் குடும்பம் இருப்பதை எல்லோரும் அறிவார்கள். தூரத்து உறவு கல்யாணத்திற்குப் போய், நம்மிடம் அவர்கள் எதிர்பாராத பெரிய பிரஸண்டேஷன் கொடுக்க மனம் துடிக்கிறது. அந்தப் பழைய குணம் தலைதூக்குகிறது. இதற்கு இடம் கொடுத்துவிட்டால், 6 இலட்சம் கேட்டவர் வேறொரு நிலத்தை வாங்கிக்கொள்வார். வந்தது

போய்விடும். புதிய நிலைமை உருவானபின் அன்னை வழியாக, நல்ல காரியங்களை மட்டும் ஒவ்வொரு கட்டத்திலும் கைக்கொள்ள வேண்டும். அதற்குரிய வகையில் நம்பிக்கையின் தரத்தை அவ்வப்பொழுது உயர்த்திக்கொள்ள வேண்டும்.

ஒரு கட்டத்தில் என் மரியாதை என்னாவது' என்று ஒரு கேள்வி எழும். அதைக் கருதினால் கிடைப்பது மரியாதையில்லை. காரியம் கெட்டுவிடும். சில சமயங்களில் மரியாதை தேடியவனுக்கு அவமரியாதை கிடைக்கும்.

அன்னையின் மீது நம்பிக்கை வைத்து, புதிய நிலைமை ஏற்பட்டு, இரண்டு கட்டம் தாண்டியபின் தன் திறமை மீது நம்பிக்கை தலைதூக்கும். நம் திறமையைச் செயல்படுத்திவிட்டு, நம்பிக்கையை அன்னை மீது வைக்க வேண்டும். இல்லை என்றால் திறமைக்கு மீண்டும் ஒரு தோல்வி ஏற்படும். பங்காளி துரோகத்தால் கைவிட்டுப் போன சொத்து அன்னை மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வரும் பொழுது பங்காளி மீது பெருமைக்காக அனுதாபம் ஏற்பட்டு விட்டுக் கொடுக்கத் தோன்றும். இது பெருந்தன்மையன்று; பெருமையைத் தேடும் புத்தி. அதற்கு உறவு, பாசம் ஒரு சாக்கு. அதற்கு இடம் கொடுத்தால் மீண்டும் பங்காளிக்குத் துரோகம் செய்ய இடம் கிடைக்கும். அன்று நமக்குப் பிரச்சினை ஏற்பட்டபொழுது சமூகம் வாயடைத்துப்போயிருந்தது. இன்று ஒரு கட்டத்தில் சமூகத்தின் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட மனம் விழையும். அதற்கு இடம் கொடுக்காமல் அன்னை மீது நம்பிக்கையை அடுத்த கட்டத்தில் புதுப்பித்துக்கொண்டு, நம் கடமையை மட்டும் சமூகத்தில் செய்து, பிரச்சினை முழுதையும் தீர்க்க முனைய வேண்டும். ஒரு கட்டத்தில், ஏற்கனவே காலை வாரிவிட்ட சட்டத்தை நம்பத் தோன்றும். 10 முறையும் பொய்த்துப்போன சிபாரிசு, அந்தஸ்தை மீண்டும் மனம் ஒரு பொருட்டாகக் கருதும். விட்டுக் கொடுத்தே (compromise) இன்று இப்பிரச்சினைக்கு ஆளாகியிருந்தாலும், 8ஆம் கட்டத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுக்க மனம் துடிக்கும். தந்திரமான யுக்திகள்

தலைகீழாகவே இதுவரை வேலை செய்திருக்கின்றன. எனினும் ஒரு யுக்தியைக் கையாளத் தோன்றும்.

அன்னை வழியைத் தெரிந்துகொள்ளுதல் சிரமம் இல்லை; கடைப்பிடிப்பது சிரமம். தான்' என்பது வரும்பொழுது அதை விலக்கி, தெய்வத்தை நம்ப வேண்டும். தன் திறமையில் நம்பிக்கை ஏற்பட்டால், திறமை ஒரு கருவியே. நம் நம்பிக்கையை அன்னையின் அருள் மீது வைக்க வேண்டும்' என்று சொல்லிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே காலை வாரிவிட்ட பாசம் ஏற்பட்டு பிரச்சினை பாதிக்கப்பட்டால், கடமையையும் நேர்மையையும் பூர்த்தி செய்வது அவசியம் என்று உணர வேண்டும். நாலு பேருடைய நியாய மனப்பான்மையை நம்ப வேண்டிய நேரம் வந்தால், நம்பிக்கையை அதிலிருந்து மாற்றி அன்னையை நம்ப வேண்டும். சட்டம் தலைதூக்கினால், அதையும் புறக்கணித்து அன்னையை நம்ப வேண்டும். சிபாரிசு, அந்தஸ்து, யுக்தி, ஆகியவற்றை எந்தக் கட்டத்திலும் கருதாமல், ஏற்கனவே அவை பயன்படாததை நினைவுபடுத்திக்கொண்டு, கடைசிவரை, பிரச்சினை முழுவதுமாகத் தீரும்வரை ஒவ்வொரு கட்டத்திலும் அன்னையை மட்டும் நம்பி, அந்த நம்பிக்கையைப் பேணி, வளர்த்து சிறப்பான முடிவை அடையலாம்.

நம்பிக்கை:

அன்னையிடம் வந்தபின் நல்லவையே நடக்கும். நடப்பவை நல்லதாக அறிவுக்குப் புலப்படாவிட்டால், நாளாவட்டத்தில் அந்த நல்லது கண்ணுக்குத் தெரியும். இன்று புரியவில்லை என்றால் புரியும் பொழுது அது பெரிய நன்மையாக விளங்கும். சிறிய நன்மைகள் உடன் விளங்கும். இன்று விளங்காவிட்டால் அவை பெரிய நன்மையாக இருக்கும்.

*******



book | by Dr. Radut