Skip to Content

பகுதி 1

  1. கடமையை உணர்ந்து நடைமுறையில் பூர்த்தி செய்வது ஆன்மாவின் ஆர்வம்.

ஒரு வேலையை அதிகாரத்திற்குப் பணிந்து அல்லது கடமைக்காகச் செய்வது தவறாது பலனைத் தரும்.

அதே வேலையை அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்ந்து தன் அந்தராத்மாவின் முன்னேற்றத்திற்காகச் செய்தால், ஆன்மா மலரும்.

பிரார்த்தனையின் பலனுக்காக அன்னையை நம்பி வணங்கினால் பலன் தவறாது கிடைக்கும்.

பலனைத் தரும் அன்னையின் ஆன்மீக உயர்வை நம் ஆன்மாவில் உணர்ந்து நெஞ்சம் பூரித்தால் பலன் பெறுவதுடன் வாழ்வு சிறந்து ஜீவன் ஆன்மீகப் பெருவெளியில் அனந்தனின் அற்புதம் என மலரும்.

*******

நாம் ஒரு வேலையைச் செய்யும் பொழுது கையால் செய்கிறோம். அத்துடன் வேலையில் ஆர்வம் காட்டுகிறோம். அறிவால் வேலையைப் புரிந்து கொள்கிறோம். ஆன்மா இவற்றிற்கெல்லாம் தலைவனாக இருக்கிறது.

கையாலும், உணர்வாலும், அறிவாலும் செய்ய வேண்டிய வேலையைக் கையால் மட்டும் செய்பவருண்டு. அறிவால் மட்டும் செய்பவருண்டு. ஓர் அம்சம் அதிகமாகவும், மற்றவை இரண்டாம் பட்சமாகவும் இருப்பதுண்டு. உடல் தாழ்ந்த நிலையிலும் அறிவு உயர்ந்த நிலையிலும் இருப்பதால் எவ்வளவுக்கெவ்வளவு உயர்ந்த பகுதியால் செய்ய முயலுகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு உயர்ந்த பலனுண்டு. எல்லா அம்சமும் போதிய அளவிருந்து ஓர் அம்சம் முனைப்பாக இருப்பதே சிறந்தது. அதுவும் உயர்ந்த அம்சம் முனைப்பாக இருப்பதே சிறந்தது.

ஒரு மளிகைக் கடை நடத்துபவருக்கு உழைப்பு, ஆர்வம், அறிவு தேவை. உழைப்பு மட்டுமிருந்தால் கடை வெற்றிகரமாக நடந்தாலும் சிறு அளவைத் தாண்டாது. ஆர்வமிருந்தால் பெருகும். ஆர்வமிருந்து உழைப்பில்லாவிட்டால் ஆர்வம் பலன் தாராது. அறிவுமிருந்தால் கடை பெருகி திடீரென அவர் பெரிய நிலைக்கு வரும் அளவுக்கு உயர முடியும்.

சாதாரண மளிகைக் கடைக்காரர், குடும்பத்தின் கடமைக்காக அல்லது தகப்பனாரின் அதிகாரத்திற்காக வேலை செய்தால் பலன் நிச்சயமாக வரும். அதே வேலையை தாம் ஓர் ஆன்மா, தமக்கு ஓர் ஆன்மீகக் கடமையுண்டு, அதற்காக மளிகைக் கடையை நடத்துகிறோம் என்று உணர்ந்து கடமையைப் பூர்த்தி செய்தால், கடை பெரும் பலன் தரும். அவர் ஆன்மா, கொங்கணவனைச் சந்தித்த கசாப்புக் கடைக்காரனைப் போல், தவவலிமை பெறும்.

கடை பலன் தர வேண்டும் என்று அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

பலனைத் தரும் அன்னையின் ஆன்மீக உயர்வை தம் ஆன்மாவில் உணர்ந்து நெஞ்சம் பூரித்தால், கடை படிப்படியாக உயருவதுடன், குடும்ப வாழ்வு அன்பாலும், பாசத்தாலும் சிறந்து ஜீவன் ஆன்மீகப் பெருவெளியில் சம்பந்தர் வானவீதியில் பார்வதியைக் கண்டது போல், அன்னையைக் கண்டு அற்புதம் எனும் மலராக மலர்ந்து மணம் வீசும்.

    >
  1. மனத்தை ஒருநிலைப்படுத்துவதும் ஆத்ம சமர்ப்பணமும் ஒன்றே. நிலைப்படுத்தும் பொழுது நாம் மனத்தால் மட்டும் செயல்படுகிறோம். சமர்ப்பணம் செய்யும்பொழுது புற நிகழ்ச்சியையும் மனம் தழுவுகிறது. முந்தையது மோட்சத்தை நாடுவது. அடுத்தது திருவுருமாற்றத்தை நாடுவது.

******

மனம் நமது கரணங்களில் ஒன்று. அதை ஒருநிலைப்படுத்தினால் சிறப்பாக வேலை செய்யும். தானறிந்த வேலை தச்சு வேலை என்றாலும், சங்கீதம் பயிலுவதானாலும், ஆசிரியர் தொழிலானாலும், அதை மேலும் சிறப்பாகச் செய்ய ஒருநிலைப்படுத்துவது உதவும். உள்ள திறமையை மனத்தை ஒருநிலைப்படுத்துதல் சிறப்பிக்கும்.

சமர்ப்பணம் என்றால் செய்யும் புற வேலையை அகவுணர்வோடு

இணைத்து புறத்தை, அகத்திற்குக் கட்டுப்படுத்துவதாகும். இதைத் தெளிவாகச் செய்ய முதலில் மனம் நிலைப்பட வேண்டும். நிலைப்பட்ட பின் சமர்ப்பணம் செய்தால் செய்யும் வேலை சிறப்படைவதுடன், அவ்வேலையில் ஜீவன் மலரும்.

சமர்ப்பணம் புற வேலையை அகவுணர்வுக்குக் கட்டுப்படுத்துவதால், ஜீவன் அவ்வேலையைப் பொருத்தவரை முழுமை அடைகிறது. முழுமை அடைந்தால் உடனே அது வளர ஆரம்பிக்கும். அத்துடன் முழுமை அடைந்ததால், செயலில் இதுவரை இருந்த குறையிருக்காது. குறை நிறைவாகும். சமர்ப்பணம் செய்து தச்சன் ஒரு சாமானை முடித்தவுடன், இது வரை அவன் செய்தவற்றை விடச் சிறப்பான வேலையாக அது முடியும். வேலை முடிந்தவுடன் அடுத்த வேலை காத்திருக்கும், அது இதுவரை செய்ததைவிடப் பெரிய வேலையாக அமையும். ஜீவனின் வளர்ச்சி, வேலை பெருகுவதால் தெரிகிறது. வளர்ந்த பின் ஜீவன் அதே அளவு வேலையைச் செய்ய முடியாது. வேலை பெருகுவதும், ஜீவன் மலர்வதும் ஒன்றே.

சமர்ப்பணம் வேலையைப் பூர்த்தி செய்கிறது. நம் குறையை அகற்றி நிறைவாக்குகிறது. செய்யும் வேலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போகிறது. இது அந்த வேலையைப் பொருத்தவரை செய்பவருக்குத் திருவுருமாற்றம். குணம் மாறுவதாலும், வேலையின் அளவு பெருகுவதாலும் இதைத் திருவுருமாற்றம் என்கிறோம்.

  1. திருவடியில் திருமுடியைக் காண்பதும், தலையில் ஆண்டவனைக் காண்பதும், சிறிய மனிதனில் பெரிய ஆத்மாவைக் காண்பதும், கணவனில் ஈஸ்வரனைக் காண்பதும், மனைவியில் சக்தியைக் காண்பதும், சரணாகதி வாழ்வில் பூர்த்தியாகி யோக சித்தி அளிப்பதாம்.

*******

ஜீவாத்மா, பரமாத்மாவுக்குச் சரணம் செய்வதே சரணாகதி தத்துவம். ஜீவாத்மா தன் சொந்த மோட்சத்தை நாடும் சுயநலத்தை விட்டுக் கொடுத்து, பரமாத்மாவின் சித்தம் தன்னில் பூர்த்தியாக விழைவதே சரணாகதி எனப்படும். இதுவே பூரணயோகச் சட்டம்.

நான் சரணாகதியை மேற்கொள்ள விரும்பினால், முதல்

மனிதனாகிய நான், அதுவும் அகந்தையால் ஆளப்படும் நான், என்னுடைய ஜீவாத்மாவைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நான் சரணாகதியை நினைக்க முடியும். ஜீவாத்மாவைக் கண்டவன் ஜீவன்முக்தன். அது பெரிய நிலை. யோகநிலை. நான் வாழ்வை மேற்கொண்டு குடும்பம் நடத்துபவன். எனக்கும் சரணாகதிக்கும் சம்பந்தமில்லையே என நினைப்பதே மனிதன் நிலை. அவன் நினைவும், விளக்கமும் சரி. ஆனால் அதுவே முடிவில்லை.

சரணாகதியை, அத்தத்துவத்தின் பவித்திரத்தோடு கடைப்பிடிக்க, எளிய கிரகஸ்தராலும் முடியும். நம் பரம்பரையில் ஆண்டவனைக் காண முடியவில்லை என்ற பொழுது அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்றார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தினார்கள். கண்ணுக்குத் தெரியாத கடவுளை, கண்ணுக்குத் தெரியும் தாயாரில் வணங்கு என்றார்கள். அதுபோன்ற முறையைப் பின்பற்றி, தவப்பயனை அடைந்தவர் பலர். அதே வழக்கப்படி முதலாளியை இன்றும் கிராமபுரங்களில் ஆண்டே என்று அழைக்கின்றார்கள். பின்பற்றுபவர் மனநிலை பவித்திரமாக இருந்தால் அவர்களுக்கு ஞானதிருஷ்டியும் அதனால் ஏற்படுகிறது. பொதுவான அனைவருக்கும் இக்கொள்கையால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். நம் சொந்த அனுபவத்தில் இதுபோன்ற கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றிய பலரை நினைத்துப் பார்த்தால், அவர்கள் தங்களைப் போன்றவர்களை விட வாழ்வில் அதிக வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

அன்னை பக்தர்களில் (Your Boss is your Mother) உன் தலைவனே உனக்கு அன்னையாகும் என்பதை உளமாரப் பின்பற்றியவர்கள் சில ஆண்டுகளில் அத்தலைவன் உள்ள அந்தஸ்திற்கு வந்து விடுவார்கள். வாழ்க்கை எந்தக் கொள்கைக்கு வெற்றி அளிக்கின்றதோ அதே கொள்கைக்கு அன்னை சிகரமான பெரிய வெற்றியை அளிக்கின்றார்.

இதன் இரகஸ்யம் ஒன்றுண்டு. சாதாரணமாகப் பெரிய கம்பெனிகளில் சேர்மேன் ஆபீஸ் திறமையாகச் செயல்படும். அடுத்து அடுத்த நிலையில் திறமை (ங்ச்ச்ண்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீஹ்) குறையும். கடைசி நிலையில் inefficiency திறமைக் குறைவு காணப்படும். ஏதோ ஓர் ஆபீஸில் கடைசி நிலையிலும், சேர்மன் ஆபீஸ் போல் திறமையாக வேலை நடக்கிறது என்றால் அது உயர்ந்த ஸ்தாபனம். உயர்ந்த ஸ்தாபனத்தில் தாழ்ந்த நிலையிலும், உயர்ந்த திறமை இருக்கிறது. ஒரு ஸ்தாபனத்தில் தாழ்ந்த நிலையிலும் உயர்ந்த திறமையை உற்பத்தி செய்ய முயன்றால், ஸ்தாபனம் உயர்ந்த நிலைக்குப்

போகும். தாழ்ந்த நிலையில் ஆபீஸ் மேனேஜரைச் சேர்மனாகப் பாவித்தால், அந்த உயர்வு ஏற்படும்.

திருமுடியை உயர்வாகக் காண்பதைவிட, திருவடியில் அதே உயர்வைக் காண உயர்ந்த பக்தி தேவை. அந்த பக்தி சரணாகதியால் வருகிறது. சிறிய மனிதனில் உள்ள ஆத்மாவும் பெரிய ஆத்மா என்ற தத்துவத்தை வாழ்க்கையில் நாம் புறக்கணிக்கின்றோம். அதை நடைமுறையில் வாழ்வில் நாம் கடைப்பிடிக்கும் பக்குவம் வந்தால், திரைமறைவிலுள்ள ஜீவாத்மா வெளிவருகிறது. அதை உளமார ஏற்றுக் கொண்டு முதலாளியை ஆண்டவனாகப் பாவித்தால், முதலாளியால் கொடுக்க முடியாததை, ஆண்டவன் கொடுத்துவிடுவான். அன்னை தவறாது கொடுக்கின்றார். வாழ்வுப் பலன்களை எவ்வளவு சுலபமாகக் கொடுக்கிறாரோ அதேபோல் ஆன்மீகப் பலனை மௌனம், சாந்தி, சித்தி போன்றவற்றையும் அன்னை வழங்குகிறார். சரணாகதி தத்துவம் உயர்ந்தது. அன்னை இங்கும் மற்ற இடங்கள் போல, அதிக பலனை கேட்காமல் அளிக்கின்றார்.

  1. மனம் திருவுருமாற்றம் பெற தெளிவு தேவை. உணர்வு திருவுருமாற்றம் பெற தெளிவு போதாது. நோக்கம் மாற வேண்டும்.

 உடலுக்கு இந்த இரண்டும் போதா. உடலில் உள்ள ஆன்மா   வெளிப்பட்டுச் செயல்பட்டால்தான் உடல் திருவுருமாற்றமடையும்.

******

இன்று நாம் மனிதராக இருக்கிறோம். மனத்தின் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறோம். எனவே நாம் சமூகத்தின் அங்கமாக மனத்தின் கருவியாகச் செயல்படுகிறோம். நாம் இறைவனின் கருவியாக மாறுவதைத் திருவுருமாற்றம் என்கிறோம். மனம் திறம்படச் செயல்பட எண்ணங்கள் தேவை. எண்ணங்கள் மூலமாக மனம் அதிகத் திறமையுடன் செயல்படுகிறது. எண்ணங்களைக் கூர்மைப்படுத்துவது அறிவு. உயர்ந்த அறிவு அதிக மனத்திறமையை அளிக்கும். உயர்ந்த அறிவு பெறக் குழப்பம் கூடாது. தெளிவு தேவை. அறிவு அதிகமாக உயர்ந்தால் ஆன்மீக அறிவான ஞானம் உதயமாகும். மனம் ஞானத்தின் கருவியாகும். எனவே இறைவனின் கருவியாகும். அதுவே திருவுருமாற்றம்.

மனத்தின் தெளிவு மற்ற கரணங்களைத் தொடாது. உணர்வு

திருவுருமாற்றமடைய மனத்தின் தெளிவு பயன்படாது. இன்று உணர்வு திறமையாகச் செயல்பட உதவுவது அதன் attitude நோக்கம். ஓர் ஆசையை மனம் ஆமோதித்தால் அது நோக்கமாக மாறுகிறது. நோக்கம் எந்தத் திசையிருக்கிறதோ, அந்தத் திசையில் மட்டுமே உணர்வு செயல்படும், திருவுருமாற்றம் பெற உணர்வின் நோக்கம் மாற வேண்டும், உணர்வு இறைவனை அடைவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். உடல் செயலாலானது. மனத்தாலும், உணர்வாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது. அது பழக்கத்திற்குட்பட்டது. பழக்கத்தை மாற்றினால்தான் உடல் திருவுருமாற்றமடைய முடியும். பழக்கத்தை மனமோ, உணர்வோ, ஏற்படுத்தவில்லை. அதனால் அவைகளால் உடன் பழக்கத்தை மாற்ற முடியாது. உடலுடைய பழக்கத்தை ஏற்படுத்தியது உடல் அசைவுகள். அவை நம் ஜீவனின் அஸ்திவாரத்தில் அமைந்துள்ளன. உடலுக்கு, செய்ததையே திரும்பிச் செய்யும் பழக்கம் உண்டு. அதை விட்டுவிட்டு, இறைவனின் எண்ணத்தை மட்டும் செய்யும் பழக்கம் வேண்டும். அஸ்திவாரத்திற்கு அப்பாற்பட்ட சக்தியால்தான் இதைச் சாதிக்க முடியும். அப்படிப்பட்ட சக்தி உடல் உள்ள ஆன்மா. அது வெளிவந்து செயல்பட்டால்தான் உடல் திருவுருமாற்றமடைய முடியும்.

  1. மனம் உள்ளே சுமுகத்தால் அமைதி பெறாவிட்டால், வலிமையானவன் கடுமையாகவும், எளிமையானவன் சோக மாகவுமிருப்பான்.

******

சுமுகம் (harmony) இனிமையை வெளிப்படுத்தும். சுமுகமில்லாவிட்டால் இனிமையிருக்க வேண்டிய இடத்தில் பிணக்கு இருக்கும். மனத்தில் பிணக்கிருந்தால் மற்ற காரியங்களை நிதானமாகச் செய்ய முடியாது. மனத்தின் பிணக்கைச் சமாளிக்க நம் சக்தியெல்லாம் செலவாகும். செய்ய வேண்டிய காரியங்களுக்குத் தேவையான சக்தியிருக்காது. கடுமையான சுபாவமுள்ளவனுக்குத் தான் செய்யும் காரியங்கள் சரிவரவில்லை என்றால் கடுமையாக இருப்பான், இதுவே வலிமை உள்ளவனுக்குரிய  பழக்கம்.

எளிமை ஆனவனுடைய நிலையும் அதுவே. மனத்தின் பிணக்கைச் சமாளிக்க இருக்கும் சக்தியைச் செலவு செய்துவிட்டு மற்ற காரியங்களைச் செய்ய சக்தியற்றவனாக அவனிருக்கும்பொழுது, அவனால் மற்றவர்களிடம் கடுமையாகவும் இருக்க முடியாது. காரியங்களும் முடியாது. அந்நிலையில் அழுகை வரும். அவன் சோகமாக இருப்பான்.

  1. சுமுகத்தால் ஏற்பட்ட அமைதி இறைவனுடன் கலக்கும் நிலையை அளித்தால் செயல் இனிமையும், உதார குணமும் வெளிப்படும்.

*******

மனத்தைக் கவனித்துப் பார்த்தால் கடைத் தெருப்போல இருக்கும். ஆயிரம் எண்ணங்கள் ஆயிரம் திசைகளில் ஓடிக் கொண்டிருக்கும். ஓர் அரைமணி நேரம் அவற்றைக் கவனித்துச் சோதனை செய்தால் அவை அனைத்தும் அர்த்தமற்றவை எனத் தெரியும். அரைமணி நாம் கவனித்த எண்ணங்கள் ஏதாவது ஒன்று அர்த்தமுள்ளதா, இந்த எண்ணமில்லாமல் போனால் நஷ்டம் தானே எனும்படி ஒரே ஒரு எண்ணத்தைக்கூடக் காண முடியாது. நூறு பேர் கூடியுள்ள இடத்தில் சிறுசிறு கூட்டமாக மனிதர்கள் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். என்ன பேசுகிறார்கள் என்று பார்த்தால் அத்தனையும் வெறும் கூச்சலாக இருக்கும். கடல் அலையில்லாமருக்க முடியாது என்பது போல மனம் எண்ண அலையில்லாமருக்க முடியாது. இதற்கு, பயன் என்று ஒன்றில்லை.

அத்துடன் ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்தால், நம் மனத்தில் உள்ள பிணக்குகளுக்கு நம் மனம் பதில் சொல்க் கொண்டிருப்பதால்தான் இந்த அலைச்சல் இருக்கிறது என்று தெரியும். கடல் ஓரத்தில் நிலமும் நீரும் சந்திப்பதால் காற்றோட்டம் இருக்கிறது. அதனால் அலை எழும்புகிறது. 10 மைல் கடல் உள்ளே சென்றால் நீர்ப்பரப்பு அமைதியாக இருக்கும். காற்றோட்டம் அலையைக் கிளப்புவதுபோல், மனத்தின் குறைகள், கவலைகள், பட்ட கஷ்டம், அவமானம், ஆத்திரம் ஆகியவற்றிற்குச் செய்யக்கூடியது என்று ஒன்றில்லாவிட்டாலும், மனம் கற்பனையான பதில்களை உருவாக்கிக் கொண்டிருப்பதால், எண்ண ஓட்டமிருக்கிறது. சுமுகம் ஏற்பட்டால் மனத்தின் அலைகள் நிற்கும். அது இறைவனையடைய வழி. அவ்வழியைப் பின்பற்றி, தியானத்தை மேற்கொண்டால், இறைவன் சாந்நித்யத்தைத் தொடலாம். இனிமையும், உதாரகுணமும் சேர்ந்தவன் இறைவன் என்பது அன்னையின் விளக்கம். இறைவனைத் தொட்ட பின் நம் செயலில் அவை வெப்படும்.

  1. சாஷ்டாங்க நமஸ்காரம் சரணாகதியை உடலால் வெளிப்படுத்துகிறது.

******

அடுத்தவன் வலிமையையும், உயர்வையும் ஏற்றுக் கொள்வதால் சரணாகதி உணர்வில் வெளிப்படுகிறது. மற்றவரின் எல்லாக் கருத்துகளையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை மனம் சரணாகதியை ஏற்றுக் கொண்டதாகும். ஏதும் அறியேன் என்பது வழக்கு மட்டுமன்று, சத்தியம் என்று தெளிவுற நம்புவது அடக்கம். அடுத்தவரின் நிலை எதுவானாலும், அதற்கு உயர்ந்த மதிப்பை உள்ளபடி கொடுத்து மனதால் ஏற்றுக் கொள்வது நடைமுறையில் உண்மையான சரணாகதியை வெப்படுத்தும் அடக்கமாகும்.

சரணாகதி என்ற முறையில்லாமல் இந்த யோகத்தைச் செய்ய முடியாது. ஆயிரம் ஆண்டுகளில் முடிக்கக் கூடியதை சரணாகதி உடனே முடிக்கும் என்கிறார் பகவான். சரணாகதி பூர்த்தியானால், இறைவன் செயல்பட ஆரம்பிக்கின்றான்.

நாம் எப்படிச் செயல்பட்டாலும் அது மனிதனுக்குரிய முறை. அவை மெதுவாகப் பூர்த்தியாகும். நாம் நகர்ந்து இறைவனைச் செயல்பட அனுமதித்தால் காரியம் உடனடியாகப் பூர்த்தியாகும். இந்த உயர்ந்த சரணாகதியை ஜீவனின் எல்லாப் பகுதிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால்,

நிபந்தனையின்றி நிகழ்வதையெல்லாம் நன்றி யறிதலுடன் ஏற்றுக் கொண்டு மனதால் போற்றி வாயால் வாழ்த்தும் மனநிலையாலே சரணாகதியை ஏற்றுக் கொள்ள முடியும்.

உடல் வணங்காது, தலை குனியாது, வளையாது. அதனால்தான் நமஸ்காரத்தை நம்மவர்கள் சாஷ்டாங்க நமஸ்காரமாக்கினார்கள். உடன் எட்டு அங்கங்களும் தரையைத் தொடும் அளவுக்கு உடலுக்கு அடக்கம் வரவேண்டும் என்பதே குறிக்கோள்.

உணர்வு துள்ளும், தானே பெரியவன் என்று நினைக்கும். தோற்ற பின்னும் தன் பெருமையைப் பேசும். நூறு முறை தோற்றாலும், தோல்வியை உணர்வு ஏற்காது. மற்றவர் வலிமையை மனதாலும் உணர்வு ஏற்காது. அதை ஏற்றுக் கொண்டாலும், அடுத்தவர் உயர்வை அரை நிமிஷம் கூடக் கேட்கச் சகிக்காது. எனவே அவையிரண்டையும் ஏற்றால் உணர்வுக்கு அடக்கம் வந்துவிடும். அப்பகுதி சரணாகதிக்குத் தயாராகும்.

மனத்தால் எவர் கருத்தையும், எந்தக் கருத்தையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இருவர் பேசும் பொழுது பார்த்தால், ஒருவர் சொல்வதற்கு அடுத்தவர் ஒரு வகையில் மறுப்பு சொல்லிக் கொண்டேயிருப்பது தெரியும். நம் மனத்தை, பிறரிடம் நாம் பேசும்பொழுது கவனித்தால், நாம் வாயால் ஏற்றுக் கொண்டவற்றையும் மனம் மறுத்துப் பேசுவது தெரியும். ஒருவருடன் அரை மணி நேரம் பேசியபின், அவர் சொல்லியவற்றில் நம் மனம் எத்தனை விஷயங்களை ஏற்றுக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி செய்தால், ஒவ்வொரு விஷயத்தையும் மனம் தீவிரமாக எதிர்ப்பதைக் காணலாம். மனத்தின் ஒரு பகுதி ஏற்றுக் கொண்டால், அடுத்த பகுதி எதிர்க்கும். ஒரு சமயம் ஏற்றுக் கொண்டால் அரை நிமிஷம் கழித்து எதிர்க்கும். இவையெல்லாம் போக வாயாலும், மனதாலும் ஏற்றுக் கொண்ட ஒன்றிரண்டு காரியங்களையும் கவனித்தால், அவற்றிற்கு மனத்திலும் எதிர்ப்பேயில்லை என்றால், உடனே மனம் சோர்வடைந்து, சோகமாகிவிடும். மற்றவரின் எல்லாக் கருத்துகளையும், எல்லாச் சமயங்களிலும், மறுப்பதும், எதிர்ப்பதுமே தன் கடமை, வழக்கம், இலட்சியம் என்பது மனதின் கொள்கை.

உண்மையில், மற்றவர் சொல்வது நம்மைப் பொருத்தவரையில் முழுவதும் உண்மை. விலக்கான ஆயிரத்திலொன்றை விலக்கினால், நம்மிடம் அடுத்தவர் பேசும் பொழுது நமக்குத் தேவையானவற்றை மட்டும் பேசும் அமைப்பு உலகிலுருக்கிறது. ஆப்பரேஷன் தியேட்டரில் கொண்டுவந்த அனைத்துக் கருவிகளும் ஆப்பரேஷனுக்குத் தேவையானவை. சமையல் ஆரம்பிக்கும்பொழுது அருகில் கொண்டுவந்த அத்தனைப் பொருள்களும் சமையலுக்குத் தேவை என்பதுபோல் அகத்திற்குத் தேவையான அனைத்தும் புறத்தில் அமைந்துள்ளன. இது யோகத்திற்குரிய உண்மை. ஆன்மீக உண்மை. நம் காதில் விழும் சொற்கள் அத்தனையும் நமக்குத் தேவையான கருத்துகள். அவற்றை மறுக்காமல் ஏற்றுக் கொண்டால், நாம் முன்னேறலாம். ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை மனத்தின் சரணாகதியாகும். நம்மைப் பொருத்தவரை இது இயலாத காரியம்.

உயர்ந்த அதிகாரமுள்ளவர்கள் முன்னிலையில் மட்டும் நாம் இதுபோல் செயல்படுகிறோம். அதிகாரத்திற்குப் பணிவது உலக வாழ்க்கை. ஆன்மாவுக்குப் பணிவது யோக வாழ்க்கை. அதிகாரமில்லாத இடங்களில் மனத்துள் உள்ள அதிகாரியை ஏற்று, அவன் ஆணைப்படி மற்றவர் கருத்தை எல்லாம் ஏற்கும் மனப்பான்மை உயர்ந்தது. அதுவும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டால், அது சரணாகதியைப் பூர்த்தி செய்யும்.

  1. தேசபக்தி, வாழ்க்கையில் வெற்றி, போன்றவை உணர்ச்சியில் இலட்சியத்தை நாடுவதால் மனிதனால் பெரிய காரியத்தைச் சாதிக்க முடிகிறது. யோகத்தை மேற்கொண்டவர் சாதனை செய்ய வேண்டுமானால், அன்னைக்கே நாம் மேலும் மேலும் உரியவராக வேண்டும் என்ற உணர்வு மேலிட்டு நிறைய வேண்டும்.

******

தேசபக்தியால் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பவர் காரியங்களைச் சாதிக்க வேண்டுமானால் நான் நாட்டுக்கே உரியவனாக வேண்டும். நாட்டோடு நான் இரண்டறக் கலக்கவேண்டும் என்ற உணர்வு மேட வேண்டும்.

வெற்றியை நாடுபவன் வெற்றிக்கே நான் உரியவன், எனக்கே வெற்றியுரியது என்பன போன்ற உணர்ச்சிகளால் நிறைய வேண்டும்.

அன்னையின் யோகத்தை ஏற்றுக் கொண்டு சாதிக்க விரும்புகின்றவனுக்கு அன்னைக்கே நான் உரியவனாக வேண்டும் என்ற உணர்வு மேலிட வேண்டும். தன்னையும், தன் கருத்தையும், உணர்வுகளையும், பழக்கங்களையும், சட்டங்களையும், மரபையும், நினைவையும், செயலையும் தெளிவாக விலக்கி அன்னையையும், அன்னையின் கருத்தையும், அன்னைக்கேற்ற உணர்வுகளையும், அன்னை ஏற்றுக் கொள்ளும் பழக்கங்களையும், அவர் சட்டங்களையும், அவர் ஏற்படுத்திய மரபையும், அவர் நினைவையும், அவருக்காகச் செயலையும் தெந்து மேலும் மேலும் ஏற்றுக் கொள்வதே அன்னைக்கே உரியவராதலாகும்.

  1. உலகில்லாத ஒன்றை திறமையாலோ, சுயநலத்தாலோ சிறிய மனிதன் சாதிப்பதுண்டு. அது பளிச்சிடும் அற்புதமானாலும், அதை மற்றவர்கள் பின்பற்ற மாட்டார்கள். தனித்தே நிற்கும். உலகம் போற்றினாலும், ஏற்றுக் கொண்டு பின்பற்றாத பெருஞ் சாதனையாக நிற்கும்.

********

1928இல் ராஜா அண்ணாமலை செட்டியார் ஒரு பல்கலைக் கழகம் நிறுவினார். 1947 வரை இந்தியாவில் 27 பல்கலைக் கழகங்களே இருந்தன. அதுவரை பல்கலைக் கழகங்கள் சர்க்காராலேயே நிறுவப்பட்டன. இந்திய கல்வி முறையை வற்புறுத்த வேண்டும் என்று பண்டிட் மதன் மோகன் மாளவியாவும், சமஸ்கிருத வல்லுநர் பகவன் தாஸும் ஆரம்பித்த காசி சர்வகலாசாலை தவிர தனி நபர் இன்றுவரை ஒரு சர்வகலாசாலையை நிறுவவில்லை. ஒருவர் செய்து வெற்றியான பின் அதைப் பார்த்து மற்றவர்கள் ஏராளமாகச் செய்வதுண்டு. 20 ஆண்டுக்கு முன் சென்னையில் ஒருவர் ஒரு leasing company தவணை முறையில் மெஷின் விற்கும் கம்பனியை ஆரம்பித்தார். அவரைப் பார்த்து 350 பேர் இந்தியா முழுவதும் அதே கம்பனியை ஆரம்பித்தனர். ஒரு காரியம் வெற்றியானால் பலரும் அதைப் பார்த்து பின்பற்றுவார்கள். கம்பனி பணம் சம்பாதிப்பது. பல்கலைக் கழகம் சேவை ஸ்தாபனம். இலாபமில்லாத இடம். எனவே யாரும் பின்பற்றவில்லை எனலாம். 30 வருஷத்திற்கு முன் சென்னையில் பொருளாதார ஆராய்ச்சிக்கு ஒரு ஸ்தாபனம் நிறுவினார்கள். இன்று நாடெங்கும் அதுபோன்ற ஸ்தாபனங்கள் பரவிவிட்டன. இதுவும் சேவை ஸ்தாபனமே என்றாலும் பரவிவிட்டது.

ஒரு காரியம் பரவுவதற்குப் பல காரணங்களுண்டு. இலாபமான காரியங்கள் எதில் பரவும். பிரபலப்படுத்துபவையும் எளிதில் பரவும். சுலபமாகச் செய்யக் கூடியதும் எளிதில் பரவும். என்றாலும் செய்பவரின் மனநிலையைப் பொருத்தும் ஒரு காரியம் பரவுவது நிர்ணயிக்கப்படும். முதல் முயற்சி தோல்வியானால், பின்னால் அதைச் செய்ய எவரும் முன்வர மாட்டார்கள். முதல் முயற்சி வெற்றியானாலும், அதனால் இலாபமோ, ஆதாயமோ, பிரபலமோ இருந்தாலும் மற்றவர்களால் செய்யக்கூடியதானாலும், முதலில் செய்பவர் தன்னலமற்றவராக இருந்தால் அது பரவும். தன்னலமானவர் செய்யும் காரியம் எவ்வளவு பெரிய வெற்றியானாலும் அது பரவாது. அது தன்னலத்திற்குரிய இராசி. G.D. நாயுடு செய்த அற்புதமான காரியங்கள் அநேகம். டாடா fundamental research அடிப்படை ஆராய்ச்சிக்காக இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஞ்ஞானப் பல்கலைக்கழகம் ஆரம்பித்தார். சர்.C.V. ராமன் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றது அங்குதான். அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் 1947 வரை அதுபோன்ற ஸ்தாபனம் ஏற்படவில்லை. 1947லும் சர்க்காரே அதுபோன்ற ஸ்தாபனங்களை ஆரம்பித்தது. இன்றுவரை தனியார் அதுபோன்ற முயற்சியைப் பின்பற்றவில்லை. சிறப்பாகப் பயிரிடுவதானாலும், 100% ரிஸல்ட் வரும் பள்ளியானாலும், பல்கலைக் கழகமானாலும், அவை வெற்றியடைந்தாலும், பிறரால் பின்பற்றக் கூடியவை என்றாலும், தன்னலமற்றவர் செய்யும் காரியங்கள் பரவுவது போல் தன்னலம் மிக்கவர் செய்பவை பரவுவதில்லை. அன்னையின் அருள் தன்னலமற்றது மட்டுமன்று. பிறர் நலம் பேணுவது. பக்தர் செய்யும் எந்தக் காரியமும் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகப் பரவுவதை நாம் தினமும் காணலாம்.

  1. தன்னலமற்ற தன்மை, பெருந்திறமை, பெருந்தன்மை அல்லது எந்தப் பெரிய குணம் சாதித்தாலும், தன் சாதனையை அதனால் உலகுக்கு வழங்க முடியும். உலகமும் ஏற்றுக் கொள்ளும்.

**********

  1. தனி மனிதனின் சாதனைகள் தனித்தே நிற்கும். அவை உலகத்தின் சாதனைகளாக மாற அவன் மனம் விரிந்து உலகத்தை தன்னுள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

*******

  1. சக்தி, சுபாவம், பண்பு (power, charecter values) வேகம் நிறைந்த சக்தியின் (force) வெளி உருவம் சக்தி (power). மனோ சக்தி உருவம் பெற்றால் சுபாவமாகிறது. ஆன்மாவின் வெளிப்பாடு நம் வாழ்வில் பண்பெனும் உருவம் பெறுகிறது.

********

ஒரு காரியம் நிகழ ஒரு காரணம் தேவை. அத்துடன் அக்காரியம் நடைபெற உதவும் அடிப்படை ஒன்று தேவை. வெளி உருவம், உள்ளுறையும் தன்மையின் வெளிப்பாடாகும். மனத்தின் எண்ணம், வாயால், சொல்லாக வெளிப்படுகிறது. சொல் வெளி உருவம். எண்ணம் உள்ளுறை சக்தி அல்லது தன்மை எனலாம்.

ஈரமாக பிசைந்த களிமண் பானையாக உருவம் பெறும்.

எண்ணம் சொல்லாக வெ வரும்.

அறிவு எண்ணத்தின் வடிவமாக வெப்படுகிறது.

ஜோதி என்ற உள்ளுறை தன்மை அறிவு எனும் வெளி உருவமாக மாறும்.

திறமை செயலாகிறது.

மனத்தின் ஆசை செயலில் பாசமாக உருவம் பெறுகிறது.

ஆங்கிலத்தில் forece, power என்ற இரண்டு சொற்களும் energy என்ற சொல்லின் வெளிப்பாடாக அமையும். வீசும் காற்றுக்குத் திசையில்லை, அதை ஒருவர் பயன்படுத்த முடியாது. ஆனால் அதற்கு வேகம் உண்டு. வேகத்திற்குரிய சக்தியுண்டு. இதை energy என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். பயன்படுத்த முடியாத, முறைப் படுத்தப்படாத சக்தியை energy என்கிறார்கள். ஓடும் நதியின் வேகம், சிறு குழந்தையின் சக்தி ஆகியவற்றை energy என்று சொல்கிறோம். வேகமாக ஓடும் காற்றை ஒரு குழாய் வழியே செலுத்தினால் அது முறைப்படுத்தப்படுகிறது. அதனால் அதை ஒரு விசிறியைச் சுழற்ற பயன்படுத்தலாம். முறைப்படுத்தப்பட்ட energyக்கு force என்று பெயர். Force செயல்பட்டால் பலன் கிடைக்கிறது. பலனை ஏற்படுத்தும் forceக்கு power என்று பெயர். Force ஒரு கருவி மூலம் power ஆக மாறுகிறது. மேட்டூர் அணையில் தேக்கியுள்ள நீரில் சக்தி (energy) தேங்கியுள்ளது. அதை ஒரு குழாய் மூலம் செலுத்தும் பொழுது (force) சக்தியாக மாறி ஒரு turbineஐச் சுழற்றுகிறது. டர்பைன் என்ற மெஷின் forceஐ electric power ஆக மாற்றுகிறது. தமிழில் இம்மூன்று நிலைகளையும் சக்தி என்ற சொல்லால் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

முறைப்படுத்தப்படாத சக்தி energy

முறைப்படுத்தப்பட்ட சக்தி force

ஒரு கருவி மூலம் முறைப்படுத்தப்பட்ட சக்தி பயன்படும் சக்தியாக மாறினால் அது power. மனதின் சக்தி உருவம் பெற்று பயன்படும் நிலையில் சுபாவமாகிறது. ஆன்மாவின் சக்தி பயன்படக் கூடியதாக மாறிய நிலையில் பண்பாகிறது. பண்பு சுபாவத்தைவிட உயர்ந்த சக்தி. சுபாவம் உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ இருக்கலாம். பண்பு உயர்ந்ததாக மட்டுமே இருக்க முடியும்.

அவசரம், நிதானம்; பொறாமை, தாராளம்; மந்தம், சுறுசுறுப்பு ஆகியவை சுபாவத்தை வெளிப்படுத்துபவை. விஸ்வாசம், கற்பு, நாணயம் போன்றவை பண்புகளாகும்.

  1. ஆன்மா தன்னை உணர்ந்து பரமாத்மாவை நோக்கிச் செல்லும் பாதைக்கு யோகம் எனப் பெயர். அன்னை மீதுள்ள நம்பிக்கையை நாம் கண்மூடித்தனமாகவும் வைக்கலாம். கண்மூடித்தனமான நம்பிக்கையை, தன்னை அறிந்த நம்பிக்கையாக மாற்றுவது நல்லது.

*********

  வாழ்க்கையில் ஓய்வு பெற்றவர்களில் பலரைச் சந்தித்து அவர்கள் எப்படிக் கல்வி பெற்றார்கள், பட்டம் எடுத்தார்கள், வேலையில் சேர்ந்தார்கள், குடும்பம் நடத்தினார்கள், பிள்ளைகளைப் படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டு வந்தார்கள் என விசாரித்தால், பொதுவாக இருவகைகளான பதில் வரும்.

  1. எப்படிப் படித்து வேலையில் சேர்ந்து இன்று ஓய்வு பெற்றேன் என்று எனக்கே தெரியாது. என்னமோ நடந்தது, ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் வந்து புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
  2. நான் சிறுவயதிருந்தே என் வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும் என்று என் பெற்றோர் சொல்லி, அதற்குரிய முறையில் ஒவ்வொரு கட்டத்திலும் முன்கூட்டித் தயார்செய்து செயல்பட்டோம். பெரும்பாலும் எதிர்பார்த்த அளவில் கூடி வந்தது. அந்த முன்யோசனையில்லை என்றால், இன்று இந்த நிலைமையிருக்க மாட்டேன்.

முதல் வகை கண்மூடித்தனமாகச் செயல்படுவது. அதில் சிலருக்கு வெற்றி கிடைக்கும். பலருக்குத் தோல்வி கிடைக்கும். வெற்றி கிடைத்தவர்க்கும் பலன் குறைந்தபட்சப்பலனே கிடைத்திருக்கும். அடுத்தவர் தம்மை அறிந்து செயல்பட்டவர். இவர்களில் பலருக்கு வெற்றி கிடைத்திருக்கும். தோல்வி சிலருக்குத்தான். வெற்றி கிடைத்ததில் பெரும்பாலோர்க்கு அதிகபட்ச வெற்றி கிடைத்திருக்கும். முதல் வகை unconscious behaviour அடுத்தவகை conscious planning. இரண்டாம் வகை எல்லா வழிகளிலும் சிறந்தது. இது வாழ்வு.

ஆன்மா கண்மூடித்தனமாக இருக்கும்பொழுது வாழ்வில் உழலுகிறது. தன்னையறிந்தபோது விழிப்புற்று மோட்சத்தை நாட முடிகிறது. இது யோகம்.

அன்னையை ஏற்றுக் கொள்வதையும் இந்த இருமுறைகளால் ஏற்றுக் கொள்ளலாம். முதல் முறைக்குக் குறைந்தபட்சப் பலனும், அடுத்ததற்கு அதிகபட்சப் பலனும் உண்டு.

  • நாம் இதுவரை வணங்கிய தெய்வங்களில் ஒன்றாக அன்னையை ஏற்றுக் கொள்வது.
  • நாம் யார் என்றறியாமல் வாழ்வதைப் போல் அன்னை யார் என்றறியாமல் தெய்வமாக வணங்குவது.
  • பிரார்த்தனை பலித்தால் பலனைப் பெற்று மற்றதை மறந்து விடுவது.
  • பிரார்த்தனை பலிக்காவிட்டால், அதற்கு ஒரு விளக்கம் நம் நிலைக்கேற்ப, மனதிற்குப் பொருத்தமாக நினைத்துக் கொள்வது.
  • பொதுவாக, சந்தோஷமாக எதையும் குறையாக நினைக்காமல் செயல்படுவது.
  • இது unconscious acceptance அன்னையைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளுதலாகும்.
  • அன்னையை வழிபட, ஆரம்பித்திருந்து நம் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள் இதுவரை நம் வாழ்க்கையில் ஏற்படாதவை என அறிவது. சில எவர் வாழ்க்கையிலும் ஏற்படாத மாறுதல்கள் என உணர்வது.
  • ஏன் அன்னையிடம் மட்டும் இது போன்று நடக்கின்றது என்று யோசனை செய்வது.
  • நமக்கு எப்படி மற்றவர்களுக்குப் பலிக்காதது பலிக்கிறது என்று விவரமாக அறிய முனைவது.
  • மற்றவர்களுக்குப் பலிப்பது நமக்கு ஏன் பலிக்கவில்லை என்று சிந்திப்பது.
  • அன்னை சொல்யிருப்பவற்றை அறிய முற்படுவது.
  • அதன் மூலம் பலிக்காதவை பலிக்கும்படி மாற்ற முயல்வது.
  • இது conscious acceptance தன்னை அறிந்து அன்னையை ஏற்றுக் கொள்வதாகும்.

இவையிரண்டும் ஒரே நிலையில் இல்லை. மனிதர்கள் தரத்தை ஒட்டி ஒவ்வொன்றையும் மேலும் பல பாகங்களாகப் பிரிக்கலாம். பொதுவாக, தன்னை அறிந்து செயல்படுவது நல்லது.

  1. எந்த விஷயம் மீண்டும் மீண்டும் ஆயிரம் முறை நம் மனத்தைத் தொடுகிறதோ அந்த விஷயத்தில் நமக்கு அதிகபட்ச அக்கறையுள்ளது என்று பொருள். அதுவே நம் ஜீவியத்தின் நிலை (level of consciousness).

******

வாழ்நாள் முழுவதும் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவருண்டு. போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் வாழ்நாள் முழுவதும் விடுதலையைப்பற்றி இடைவிடாமல் பேசியவருண்டு. இவர்கள் பலவகையினர்.

  • உள்ளும் புறமும் விடுதலையை நாடிய ஜீவன்.
  • புறவாழ்வில் பெருந் தியாகம் செய்தாலும், அகவாழ்க்கை நாடுவது வேறாக இருக்கும்.
  • புறவாழ்வில் பேச்சளவோடு நின்றாலும், அகம் இலட்சியத்தை உருக்கமாக நாடும்.
  • எதைப் பேசினாலும், எதைச் செய்தாலும் மனம் அவர்களுடைய சுய தேவைகளையே முதன்மையாக நினைக்கும்.

இலட்சிய வாழ்வு சிலருக்குத்தான் அமைகிறது. மற்றவருக்குக் குடும்பவாழ்வுதான் நிலையானது. ஓர் அரசியல் ஊழியர் அறுபது வயது வரை எந்த வருமானமும் இல்லாமல் பிறர் தயவால் மட்டும் நித்யகண்டம் பூர்ணாயுசு என்று வாழ்ந்து வந்தார். குழந்தை யில்லாதது சௌகரியமாய்விட்டது. அறுபதுக்கு மேல் புதிய சந்தர்ப்பங்கள் உருவாக ஆரம்பித்தன. ஒரு வீடு அமைந்தது. புஸ்தகக்கடை ஏற்பட்டது. நல்ல வசதி வந்துவிட்டதால் தனக்குப்பின் என்ற கேள்வி அடிக்கடி வந்து, மைத்துனியின் பெண்களில் ஒருவர் டாக்டராகவும், அடுத்தவர் சுப்ரீம் கோர்ட் வக்கீலாகவும் இருப்பவர்களுக்கு இந்த இரு சொத்தையும் கொடுப்பதாகத் தினமும் நூறு முறை சொல்லி வந்தார்.

அத்துடன் ஒரு பையனைக் கடையில் அமர்த்தி, அவனை வீட்டிலேயே வைத்துக்கொண்டு அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார். அவனிடம் கடை உனக்குத்தான் என்று பேச்சோடு சொல்வார். வசதிவந்த சில வருஷங்களில் மனைவி காலமானார். உடனே மைத்துனிப் பெண்களை மறந்துவிட்டார். பையனைப் பார்த்து வீடும், கடையும் உனக்கே என தினமும் நூறுமுறை சொல்ல ஆரம்பித்தார். சில மாதம் கழித்து இறந்து போனார். இறந்து போகும் தருவாயில் அண்ணனை அழைத்து தன் கடையையும், வீட்டையும் எடுத்துக்கொள்ளும்படிச் சொல்விட்டு இறந்து போனார்.

மனைவி உள்ளவரை மைத்துனிப் பெண்களைப்பற்றிப் பேசியதும், அவர் காலமானபின் பையனுக்குக் கொடுப்பதாகப் பேசியதும் வாய் வார்த்தை. மனத்தில் இருந்தது தன் அண்ணன் பிள்ளைகள். அவர் மனத்தைப் பொருத்தவரை அண்ணன் பிள்ளைகள் மனதில் ஆயிரம் முறை வந்திருப்பார்கள். அனுபவசாலிகள் இவருடன் பழகும்பொழுது தவறி இவர் சொல்லும் வார்த்தைகளைக் கவனித்தால், இவர் மனதிலுள்ளதை உடனே அறிந்து கொள்வார்கள். பிறர் அறியாமல் நம் மனம் வேறு விஷயங்களை நாடுவதைப்போல், நாமே அறியாமல் நம் மனம் நமக்கு முக்கியமானவற்றை விட்டுவிட்டு வேறு இடத்தில் லயித்திருக்கும். நம் மனம் எதில் லயித்துள்ளது என்று அறிய வேண்டுமானால், எந்த விஷயம் நம்மை அறியாமல் நம் மனத்தை ஆயிரம் முறையும் தொடுகிறது என்று பார்த்தால் புரியும்.

மனத்தில் நம்மையறிந்தோ, அறியாமலோ ஆழ்ந்துள்ள விஷயங்கள் சாதாரணமாகப் பேசும் பொழுது (subconscious slip) வாய் தவறி வரும் சொல்லில் தெரியும். அவை தவறி வருபவையல்ல. அதுவே உண்மை. சென்னைக்குப் போய் வந்து செய்தியைச் சொல்லும்பொழுது வாய் தவறி இரண்டு, மூன்று முறை மதுரை என்று வந்தால் மனம் சென்னையிலில்லை, அங்குச் சந்தித்த தமக்கையிலில்லை, மதுரையில் உள்ள தங்கைமீது உள்ளது என்று பொருள். தமக்கைப் பையனுக்குத் தன் பெண்ணை மணம் முடிக்குமாறு எல்லா ஏற்பாடுகளுக்கும் ஒத்துக் கொண்டாலும், தங்கைப் பையனை வேண்டும் என்று மனம் கூறுகிறது என்று பொருள்.

  1. பேசாமலிருந்தால் கேட்டு நடக்காத காரியம், கேட்காமல் நடப்பதைக் காணலாம். சிந்தனை செய்யாமலிருந்தால், சிந்தித்து விளங்காதவை சிந்திக்காமல் விளங்குவதைக் காணலாம்.

*******

பேசும்போது செயல்படுவது நம் மனஉறுதி (will) பேசாமலிருக்கும்பொழுது செயல்படுவது (silent will) மௌனத்தின் உறுதி. இது அதிக சக்தி வாய்ந்தது என்பதால் பேசாமருக்கும்பொழுது கேட்காமல் நடக்கும்.

சிந்திக்காவிட்டால் விளங்காது; சிந்தித்தால் விளங்கும் என்பது முதல்நிலை மனத்திறன். சிந்திப்பதையே இடைவிடாத செயலாக ஏற்றுக் கொண்டவருக்கு பல நாள் சிந்தனையாலும் விளங்காதவையுண்டு. பல வருஷங்களிலும் விளங்காததுண்டு. இவர்கள் திறமைமிக்க சிந்தனையாளர்கள். இந்த விஷயத்தில் சிந்தனையில் தோற்றவர்கள். சிந்திக்கும்பொழுது செயல்படுவது மேல் நிலையான மனம். சிந்தனை செய்யாதபொழுது செயல்படுவது ஆழ்ந்த நிலையிலுள்ள மனம். சிந்திக்கும்வரை ஆழ்ந்த மனம் செயல்படாது, படமுடியாது. சிந்தனைக்குப் புரியாதவற்றைச் சில நாள் மறந்திருக்க முடிவு செய்தால், திடீரென ஒரு நாள் பளிச்சென்று இதுநாள்வரை புரியாதது புரியும். நாம் சிந்திக்காமருப்பதால் அவ்விஷயம் மனத்தின் ஆழத்திற்குச் சென்றுவிடுகிறது. ஆழ்ந்த மனம் நம்மையறியாமல் சிந்தனை செய்கிறது. ஒருநேரம் அதற்குப் புரிந்தவுடன், விஷயம் மேல் வந்து நினைவில் தட்டுப்படும். ஆங்கிலத்தில் sleep over the matter  என்பார்கள்.

  1. ஒவ்வொரு செயலிலும் மனிதன் தான் அதை அதிகபட்சம் அனுபவிக்க முயல்கிறான். ஒவ்வொரு செயலிலும் அதிகபட்சம் அன்னையைக் கண்டு அனுபவிக்க முயல்வது யோக சித்தி.

******

படிப்பவன் படிப்பை அதிகமாக அனுபவிக்க முயன்று படித்தால் படிப்பில் பெரும் பலன் பெறுகிறான். விளையாடுபவன் விளையாட்டை அதிகபட்சம் அனுபவிக்கும்பொழுது நன்றாக விளையாடுகிறான். எந்தச் செயலும் பல நிலைகளில் அமைந்துள்ளது. பெற்றோருக்காகப் படிப்பது, மார்க் வாங்கப் படிப்பது, புரியவேண்டும் என்று படிப்பது, புரிந்து மேல்நிலைக்குச் செல்ல வேண்டும் என்று படிப்பது, கடமையை நிறைவேற்றப் படிப்பது, படிப்பை அதிகபட்சம் அனுபவிக்க வேண்டும் என்று படிப்பது போன்ற நிலைகள் உள்ளன. அதேபோல் ஒரு செயலை உடலால் செய்யலாம், உணர்வால் செய்யலாம், அறிவால் செய்யலாம், ஆன்மாவால் செய்யலாம், அன்னையாலும் செய்யலாம். அன்னையால் ஒரு செயலைச் செய்வதும் செயலில் அன்னையை அதிகபட்சம் காண்பதும் ஒன்றே. அன்னைக்காக இந்தச் செயல், அன்னை முறைகளை அறிவதற்காக இது, அன்னையை அறிய இதைச் செய்கிறேன், அன்னையை அதிகபட்சம் அறிய இதைச் செய்கிறேன் என்றால் அன்னையை அறியலாம். அன்னையை, தியானத்தில் அறிவதைவிட, செயலில் அதிகமாக அறியலாம். செயலில் அதிக பட்சம் அறிய முற்பட்டால் அன்னை சித்திப்பார். அது யோக சித்தியாகும்.

  1. ஒரு தலைமுறையில் முன்னோடிகளால் சாதிக்க முடிந்ததை அடுத்த தலைமுறையில் எல்லோராலும் முடிகிறது. சமூகம் இந்த நோக்கோடு ஸ்தாபனங்களை உருவாக்குகின்றது. சத்திய ஜீவியத்தை மனிதன் ஸ்தாபிக்க இறைவன் ஏற்படுத்திய ஸ்தாபனம் அன்னை.

***********

பள்ளிக்கூடம் ஏற்படுவதற்கு முன் படிப்பதற்கு, ஒரு குருவை நாடிச் சென்று, அவரிடம் பல ஆண்டுகள் பாடம் கேட்டு, பண்டிதம் பெற வயது 35, 40 ஆகும். அதுபோல் தமிழ்நாட்டில் எத்தனை பேரால் படிக்க முடியும்? ஒரு 100 அல்லது 200 பேரால்தான் முடியும். அவர்கள் ஒரு வகையில் முன்னோடிகளாக இருப்பார்கள். இன்று அதே படிப்பை பள்ளிக்கூடத்தில் வருஷத்திற்கு 200 ஆயிரம் பேர் முடிக்கின்றனர். முன்னோடிகளால் முடியாததில்லை. எல்லோரும் முன்னோடிகளாக இருக்க முடியாது. இருக்கவில்லை. இன்று ரேடியோவை, அதன் parts பகுதிகளை வாங்கி நாமே செய்து கொள்ள வேண்டும் என்றால் ஓர் ஊரில் 100 ரேடியோ இருக்கும். இன்று 100 ஆயிரம் இருக்கிறது. அதுவே அடுத்த தலைமுறைக்குள்ள வசதி. ரேடியோவைச் செய்யும் ஸ்தாபனங்கள் ஏற்பட்டுவிட்டதால், அனைவரும் அனுபவிக்க முடிகிறது.

பூரண யோகத்தை, பகவான் எழுதிய நூல்களைப் பயின்று, அறிந்து கொண்டு சொந்தமாகப் பயில ஆரம்பிக்கலாம் என்பது தத்துவம். பயில ஆரம்பித்தால் வ.உ.சி கப்பல் ஓட்டியது போருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் ஏராளமான சந்தேகங்கள் வரும். சரணாகதி என்றால் என்ன என்பதே சந்தேகமாகிவிடும். யார் அதைச் செய்வது? என்பதற்குப் பதில் நான் எனில், என் மனமா, உணர்வா, உடலா, ஆன்மாவா என்றால் பதில் இல்லை. ஆன்மா என்று வைத்துக் கொண்டால் ஆன்மா ஒரு பகுதிதானே, எப்படிச் சரணாகதி முழுமையாகும் என்பது கேள்வி. சரி ஆன்மாவில் ஆரம்பிக்கலாம் எனில், ஆன்மாவைக் காண 100 வருஷமாகும் என்ற தெளிவு ஏற்படும். பூரண யோகத்தை நாமே செய்ய முடியாது என்று தெளிவு வந்துவிடும். இது முதற்கட்டம். முயற்சிக்கு 100க்கு மேற்பட்ட கட்டங்களுண்டு.

அதற்குப் பதிலாக அன்னையிடம் நாம் சரணாகதியடைந்தால், ஆர்வம் உள்ளிருந்து பிறக்கும். பிறக்கும் இடம் எது என்பது என்று தெரியாவிட்டாலும் ஆர்வம்

எழும். ஆர்வம் சரணாகதிக்கு முன் தேவையானது. அதைப் பின்பற்றினால் அன்றே சரணாகதி அரை நிமிஷம் ஏற்பட்ட உணர்வு ஏற்படும். மேற் சொன்ன விசாரணையை 40, 50, வருஷமாகப் பூர்த்தி செய்ய முடியாதவர் அநேகர். ஒரே நாளில் சரணாகதியைக் கண்டு விடலாம். அதையே தொடர்ந்தால், சந்தேகம் விலகுமுன் சரணாகதி செயல்பட ஆரம்பிக்கும். ஓரளவு நிலைத்தவுடன் மேற் சொன்ன எல்லாக் கேள்விகட்கும் பதில் கிடைக்கும். அதன் பின் பகவான் நூல்களைப் படித்தால், அனுபவத்தின் பெயரால் அத்தனையும் புரியும். அனுபவம் ஏற்படுமுன் எதுவும் புரியாது.

Consciousness ஜீவியத்திற்கு யோகம் தேவை. ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் யோகத்திற்கு முன்னோடிகள். இறைவன் இந்த யோகத்தை அனைவரும் செய்ய ஒரு ஸ்தாபனம் அமைத்துள்ளார். அந்த ஸ்தாபனம் அன்னை. குழந்தையைப் படிக்க வைக்க, பள்ளி என்ற ஸ்தாபனத்திற்கு அனுப்பிவிட்டு நாம் கவலையற்றிருக்கிறோம். சோப்பு வேண்டுமானால், யார் செய்கிறார், எப்படிச் செய்கிறார் என்ற விசாரம் நமக்குத் தேவையில்லை. கடையில் போய் வாங்கிக் கொள்கிறோம்.

யோகம் செய்ய விசாரம் நமக்கு வேண்டியதில்லை. அன்னையை அழைத்தால் யோகம் தொடங்கும். தொடர்ந்து அழைத்தால் தொடர்ந்து யோகத்தை மேற் கொள்ளலாம். நாம் யோகம் செய்ய அன்னை இறைவன் ஏற்படுத்திய ஸ்தாபனமாகச் செயல்படுகிறார். அவரின்றி நாம் யோகம் செய்வது ரயில் வருவதற்கு முன் காசி யாத்திரை போவது போன்றது. அன்னை நம்மிடையேயிருந்தும், அனைவருக்கும் தம்மை வழங்கியும் யோகத்தை மேற்கொள்ள எவரும் முன் வரவில்லை. பகவானும், அன்னையும் மட்டுமே யோகத்தைச் செய்தார்கள். மற்றவர்கள் அவர்களை வணங்குவதால் வரும் யோகப்பயனை அடைந்தார்கள்.

  1. அழைப்பு:

முதலில் உன் சுபாவத்தின் சிறப்பிருந்து விலகி, பிறகு அன்னையை அழைத்தால் மனம் நிறைந்து, சக்தி பெருகி, பூரிக்கும். சுபாவத்திருந்து கொண்டே அன்னையை அழைப்பது சலிப்பேற்படுத்தும், களைப்பேற்படுத்தும், விரக்தியை உற்பத்தி செய்யும்.

அன்னையை அழைப்பது பவித்திரமான செயல், அவர் வரும் நேரம் நாம் பவித்திரம் அடைகிறோம். வீட்டுக்கு விருந்தினர் வரும் பொழுது, நாம் வழக்கமாகப் போடும் சண்டை, சத்தம், அலங்கோலமாக வீட்டை வைத்திருப்பது போன்றவற்றை அவர்களிருக்கும் நேரம் வரை விலக்கி அவர்களை உபசரிக் கின்றோம். அவர்கள் வருகை சந்தோஷம் தருகிறது. அப்படியின்றி விலக்க வேண்டிய செயல்களை விலக்காமல் அவர்களை வரவேற்றால், அவர்கள் வருகை விரசமாகி விடும். நமது சுபாவத்தின் அம்சங்கள் பல. அவற்றை முழுவதுமாக மாற்றுவது சிரமம். ஒரு நேரம் அவற்றை விலக்க முடியும். மனத்தின் ஓட்டம், பதட்டம், அவசரம், எரிச்சல் போன்றவற்றை அழைப்பின் போது விலக்க முடியும். விலக்காமல் அழைப்பை மேற்கொண்டால் அழைப்பு சிறப்பு தாராது.

  1. உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியுமானால், அளவுகடந்த சக்தி உன்னுள்ளே எழும்.

*********

மனிதனுடைய சக்தியின் பெரும் பகுதி உணர்விலிருக்கின்றது. வீரம், தைரியம், ஆசை, பாசம், பற்று, போன்ற நல்ல உணர்ச்சிகளையும், பழிவாங்குதல், பயம், வெறுப்பு போன்ற தவறான உணர்வுகளையும் நாம் அறிவோம். இவை சக்தியின் உறைவிடம். தவறான உணர்வுகள் நம் சக்தியை விரயமாக்குகின்றன.

பொதுவாக நம் வாழ்வில் எழும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். தவறான உணர்வுகளை மறைக்கின்றோம். வெளிப்படுத்தாமலும், மறைக்காமலும் அவற்றை முறைப்படுத்தினால், அவை கட்டுப்படும். சக்தி அனைத்தும் உறையுமிடமாதலால் அவை கட்டுப்பட்டால் அவற்றின் சக்தி நமக்குக் கட்டுப்படும். அதனால் பெருஞ் சக்தி எழும்.

பாண்டவர்களுடைய கோபம் துரியோதனன் சபையில் வெளிப்படமுடியாமல் தருமர் தடுத்தார். அவர்கள் வெற்றிக்குரிய அனைத்துச் சக்தியும் அக்கட்டுப்பாட்டினால் எழுந்ததே.

பரீட்சை சமயத்தில் சுற்றுலா, சினிமா, டிராமா, கிரிக்கெட் பந்தயம் போன்றவை தொடர்ந்து வருவதுண்டு. தன் கட்டுப்பாட்டில்லாதவன் அவற்றுள் கலந்து

கொள்கிறான். அவன் சக்தி விரயமாகிறது. அதில் கலந்து கொள்ளாமலும், மனதைக் கட்டுப்படுத்த முடியாமலும் அறையில் புத்தகமும் கையுமாக இருப்பவன் மனம் இவற்றை நாடினால், அடக்கியதற்கு பலனாக அவற்றை இழந்ததுதான் மிச்சம். பரீட்சையும் போய் விடும். மிச்சம் எரிச்சல்தான்.

அதற்குப் பதிலாக மனம் போராடி ஒரு முடிவுக்கு வந்து பரீட்சை சமயத்தில் இவற்றின் மீது ஆசைப்படுவது தவறு என்று கருதி, அதை மனம் ஏற்றுக் கொண்டால் இவை இனி மனத்திரையில் வாராது. இது அடக்குவதாகாது, கட்டுப்படுத்துவதாகும். மனத்திட்பம் முழுவதும் சலனமின்றி படிப்பில் ஈடுபடும். பரீட்சையில் வழக்கத்திற்கு அதிகமாக மார்க் வரும். எழுந்த ஆசைகள் அதிக சக்தியை உற்பத்தி செய்தன. கட்டுப்பாட்டால் அந்தச் சக்தியைப் பரீட்சைக்குப் பயன்படுத்தினோம். ஆசை எழுந்து கட்டுப்படுத்தியிராவிட்டால், இந்த அளவு சக்தி ஏற்பட்டிருக்காது என்று பிறகு புரியும்.

  1. மனத்தின் உயர் நிலைகளை எட்டுவதும் ஜீவனின் ஆழத்தைத் தொடுவதும் யோகப் பாதையின் இரு பிரிவுகளாகும். ஆழ்ந்த நிலையை அடைந்து உயர்வை நாடுவது பூரணம், பூரண யோகத்திற்குரிய இலட்சணம்.

********

மனம் உயர்ந்த கருவி. அதன் உயர்நிலை தெய்வலோகம். அதையடைந்தால், அங்கிருந்து ஆனந்தத்திற்கும், சச்சி தானந்தத்திற்கும் போகலாம். பரப்பிரம்மத்தையும் எட்டலாம். பரவெளியை அடையலாம்.

ஜீவனின் ஆழம் உடலில் உள்ளது. சித்து விளையாடும் திறனுள்ள ஆழங்கள் இவை. பொதுவாக உயர்ந்தால் அதை மட்டுமே நாடமுடியும். ஆழ்ந்து சென்றால் அதை மட்டுமே நாடமுடியும். இரண்டையும் சேர்த்து செய்யும் யோக முறையில்லை. பூரண யோகத்திற்கு விலக்கான பகுதியில்லை. விலக்கான சரணமில்லை. பூரணத்தை எய்த உயர்வும், ஆழமும் தேவை. உயர்ந்து செல்வது (ஹள்ஸ்ரீங்ய்ற்) முதற்பகுதி. ஆழ்ந்து செல்வது (ascent) அடுத்த பகுதி. உயர்ந்தும், பிறகு ஆழ்ந்தும் யோகப் பயணம் இருந்தால்தான் பூரணம் கிட்டும்.

  1. ஆன்மாவும் சக்தியும் பிரிந்து சக்தி ஆன்மாவை மறந்த நிலை மனிதனுடைய நிலை. தான் மறந்த ஆன்மாவை சக்தி நினைவு படுத்திக் கொண்டால், சக்தி சரணாகதியை நாடுகிறது எனப் பொருள். சரணாகதியை மனிதன் விரும்பி நாடுவது மனிதன் தன் தெய்வீகத்தை உணர்வதாகும்.

********

சச்சிதானந்த பிரம்ம நிலையில் ஆன்மாவும் சக்தியும் ஐக்கியமாக இருக்கிறார்கள். அடுத்த நிலையில் அவர்கள் தனித் தனி உருவம் பெற்று ஆனால் ஒன்றாகச் செயல்படுகிறார்கள். அந்த நிலை சத்திய ஜீவியத்திற்குரிய நிலை. ஆன்மச் சக்திக்கு அங்கு ஈஸ்வரிசக்தி எனப் பெயர். இந்நிலையில் ஈஸ்வரன் வேறு, சக்தி வேறு என்றில்லை. இருவரும் இணைந்துள்ளார்கள். என்றாலும் தனி வடிவம், உருவம் பெற்றுள்ளார்கள்.

அடுத்த நிலை தெய்வலோக நிலை. ஈஸ்வரசக்தி தாம் இணைந்துள்ள தன்மையை இழந்து பிரிந்த நிலையில் இங்குச் செயல்படுகிறது. பிரிந்தாலும் ஒன்று மற்றதை மறந்த நிலையிலில்லை. இங்கு இதை புருஷப்பிரகிருதி என்கிறோம். அடுத்த நிலை மனம். மனத்தில் பிரகிருதி புருஷனை மறந்து விடுகிறது. மறந்துவிட்டது என்றாலும், நினைவுபடுத்த முடியாது என்பதில்லை. நினைவுபடுத்த விரும்பினால் நினைவு வரும்.

வாழ்வு அதற்கடுத்த நிலை. பிளவு அதிகமாகிறது. மறந்ததே மறந்து விட்டது. ஆனால் ஆழ்மனத்தில் (subconscious) சக்தி, ஆன்மாவின் விருப்பப்படி நடக்கிறது. கடைசி நிலை ஜடம், ஜடமான உடல். இங்கு மறந்த நிலையே உணர்வு நிலையாக இருக்கிறது. எதை மறந்தோம் என்பதும் தெரிய முடியாத நிலை. நாம் உடலால் வாழ்கிறோம். உடலால் செயல்படுகிறோம். உடலே நாம். அதாவது சக்தி ஆன்மாவை மறந்த நிலை. அதுவே நம் நிலை. மீண்டும் சக்தி ஆன்மாவைக் கண்டுபிடித்தால் தெய்வ நிலைக்கு வருவோம்.

ஆன்மாவை, சக்திக்கு நினைவு படுத்துவது ஆர்வம் எனப்படும், பக்தி. அவற்றை இணைப்பது சமர்ப்பணம். சமர்ப்பணத்தால் நினைவிழந்த சக்தியின் செயல்களை



book | by Dr. Radut