அகந்தை என்ற ஜீவாத்மா, பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா
நான், குடும்பம், ஊர்
- இவை மூன்றும் ஒன்றே. ஒன்றின் மூன்று பகுதிகளாகும். எதை நாம் நாமாகக் கருதினாலும் கருதலாம். ஆனால் எதுவும் பிரிந்து போகாது.
- பொதுவாக மனிதன் சுயநலம், 'நான்' என்றே வாழ்வான். அவன் கோணத்திலே குடும்பத்தையும், ஊரையும் கவனிப்பான். குடும்பமும், ஊரும் தனக்குச் சேவை செய்ய வேண்டுமென முழு மூச்சுடன் வேலை செய்வான்.
- நேரம் வரும்பொழுது குடும்பத்திற்குப் பணிவான். பெரிய நேரம் வந்தால் ஊரை மீற முடியாது. ஊர் என்பது ஜாதியாகவுமிருக்கும்.
- ஊர் நிர்ப்பந்தப்படுத்தாத நேரம், குடும்பம் கண்டுகொள்ளாத நேரம், தன் சுயநலத்தின் சுயரூபமாக ஊர்வலம் வருவான்.
- அகந்தை என்பது ஜீவாத்மா. ஜீவாத்மா என்பது பிரபஞ்சத்தின் ஆத்மா. அதுவே பரமாத்மா என்பது ஸ்ரீ அரவிந்தம்.
- மனிதனுக்கு ஜீவாத்மா என்று ஒன்றிருப்பதே தெரியாது. மனிதனாகவோ, அகந்தையாகவே வாழ்பவன் அகந்தையை இழந்து ஜீவாத்மாவாகிறான்.
- ஜீவாத்மா என்று தன்னையறிந்து ஜீவன் முக்தனானாலும், அவனுக்குப் பிரபஞ்சம் நினைவு வருவதில்லை. பிரபஞ்சம் வழியாகவே, தான் அகங்காரமானதையும் நினைப்பதில்லை. தன் ஆத்மாவுக்கு மோட்சம் தேடி பரமாத்மாவை அடைகிறான்.
- சிருஷ்டியில் பரமாத்மா, பிரபஞ்சமாகி, அகந்தையான ஜீவாத்மாவாகிறது.
- தன்னைக் குடும்பத்திலிழந்தவன் நல்லவன்.
- தன்னையும் தன் குடும்பத்தையும் ஊரில் இணைத்தவன் ஊருக்குப் பெரியவன்.
- அவன் ஊரை ஆள்வான். நல்லவனாக இருப்பான். ஊர் அவன் ஆள்வதை நாடும், விரும்பும்.
- அகந்தை அழிந்தால் ஜீவாத்மாவாகிறது. ஜீவாத்மா தன்னைப் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகப் புறத்திலும், அகத்திலும் கண்டு, அதன் மையத்தில் பரமாத்மாவைக் காண்கிறது.
- மனிதன் சுயநலமின்றி குடும்பத்திற்கு உழைப்பதும், தானும், தன் குடும்பமும் ஊருக்குச் சேவை செய்யும்பொழுது அதைவிட தனக்குத் தான் செய்யும் பெரிய சேவையில்லை என்பது தெரிகிறது.
- அகந்தை ஜீவாத்மா பரமாத்மா ஜீவாத்மாவினுள் பரமாத்மா என்ற கட்டங்கள் பரிணாமத்திற்குரியவை.
- அவை சுயநலமற்றவை.
- ஜீவாத்மா தான் மட்டும் மோட்சம் பெறுவது அதன் கடைசி சுயநலம் என்கிறார் பகவான்.
- ஈஸ்வரன் எல்லாக் காரியங்களும் அவனிஷ்டப்படி நடக்க வேண்டும் என்பதால் அவனே பெரிய சுயநலமி. அதனால் சுயநலத்தை நாம் கண்டிக்க முடியாது என்கிறார்.
******
- Login to post comments