Skip to Content

08. நூற்றாண்டு வெளியீடு

1920இல் பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பெரிய நூல்களை 1933இல்தான் முதன்முதலாக வெளியிட்டார்கள். 1950இல் ஆசிரமமே அந்நூல்களை வெளியிட முனைந்தது. 1972இல் அவருடைய நூற்றாண்டில் அவர் இதுவரை எழுதிய அனைத்தையும் சேர்த்து 30 வால்யூம்களாக வெளியிட்டார்கள். அதனினும் பெரிய விசேஷம், அவற்றுக்கு indexஆக ஒரு வால்யூம் வெளிவந்தது. இன்றுவரை தனிப் புத்தகங்களுக்கு index கிடையாது.

1978இல் அன்னைக்கு நூற்றாண்டு கொண்டாடும்வரை அவருடைய எழுத்துகள் ஆசிரம Bulletinஇல் வெளியாயின. புத்தக உருவில் 4, 5 புத்தகங்களே சிறு அளவில் வெளிவந்தன. நூற்றாண்டு விழாவையொட்டி அன்னை எழுதிய அனைத்தையும் 16 வால்யூமாக வெளியிட்டதுடன், ஒவ்வொரு வால்யூம் முடிவிலும் ஒரு indexஐச் சேர்த்துள்ளனர். படிப்பில் ஆர்வமுள்ள பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்த index வரும் முன் ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஓர் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதால், அம்முயற்சியை எடுக்க முன்வருபவர்கள் குறைவு. 1978இல் வெளியிட்ட இந்த செட்டின் கடைசிப் பிரதியை அன்பர் ஒருவர் வாங்கி வந்தபொழுது, “அடுத்த செட் அச்சிட நாளாகும். அதன் விலை மிக அதிகமாக இருக்கும்” எனக் கேள்விப்பட்டு நான் வருத்தம் அடைந்தபொழுது, மலிவு விலையில், சிறிய எழுத்தில் ஒரு செட் வெளியிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். உயர்ந்த பக்தியுள்ள ஓர் அன்பருக்காக அதை வாங்கினேன்.

அன்னையை அறிந்தபின், அவரைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் அறிய வேண்டுமென்ற ஆவல் அளவுகடந்து பக்தர்களுக்கு ஏற்படுவதை நான் காண்கிறேன். அத்துடன் அவர் எழுதிய அனைத்தையும் பயிலும் ஆவலும் பரவலாக இருக்கின்றது. இந்த ஆவல் பூர்த்தியாக வேண்டுமானால், அந்த 16 வால்யூம் செட் ஒன்றை வாங்கிப் படிக்க வேண்டும். அன்னை பிரெஞ்சில் பேசியவற்றை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளதால், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே இது பயன்படும். அன்னை எழுதியவற்றைச் சுருக்கி, அதன் சாரமாக உள்ளவற்றை என் கட்டுரைகளில் வெளியிட்டிருக்கின்றேன். சுமார் 6000 பக்கம் கொண்டது அந்த 16 வால்யூம்களும். மேலும் ஒரு 6000 பக்கமும் வெளியாயிருக்கின்றது. இவையிரண்டும் சேர்ந்தது, அன்னை எழுதியதில் ஒரு சிறு பகுதியே. எனவே நான் வெளியிட்ட சாரமும், சுருக்கமும் ஒரு சில துளிகளாகவே இருக்கின்றன.

அவருடைய முழு வெளியீடுகளை அதிகபட்சப் பலனுடன் படிப்பதெப்படி என்பதை விளக்கவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை கடினமானவை. ஆனால் அதே கருத்தை அன்னை எளிமையாகச் சொல்கிறார். ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை புத்தக ரூபமுடையவை. அன்னை புத்தகமாக எதையும் எழுத முற்படவில்லை. சனிக்கிழமை, புதன் கிழமைகளில் விளையாட்டு மைதானத்தில் ஆசிரமக் குழந்தைகளுக்கு அவர்கள் பிரெஞ்சு மொழியில் விளக்கங்கள் சொல்வதுண்டு. சாதகர்கள் அவற்றைக் கேட்டிருந்து, நினைவிலிருந்து எழுதி, அன்னையிடம் கொடுத்து, அவர்கள் சரி என்று சொல்லியபின் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளியிட்டார்கள். அதுவே இப்புத்தக உருவத்தில் இருக்கின்றது. குழந்தைகளுக்குச் சொன்னதால் மிக எளிமையாகச் சொல்கிறார்கள். எவருக்கும் எளிதில் புரியும்படி அவை அமைந்து உள்ளன. படிப்பதற்கு எளிமையாக இருந்தாலும், பூரண யோகத்தைப் பற்றிப் பேசுவதால் படிப்பவர்க்கு இந்நூல்கள் உயர்ந்த ஞானத்தைத் தருகின்றன. இந்நூல்களைப் பயில்வதைப் படிப்பு என்று சொல்வதை விட, படிப்பவர் உள்ள ஆன்மீக நிலையில் அவருக்குரிய யோகம் எனலாம். யோகத்தை நிஷ்டையாலும், தவத்தாலும், யாகத்தாலும், சேவையாலும், சமாதியாலும், பக்தியாலும், வாழ்வாலும் நிறைவேற்றுவதைப் போல் “கல்வியால் ஒருவர் செய்யும் யோகம்”என்ற முறையில் இந்நூல்களைப் படிப்பது அமையும்.

இந்நூல்களைப் பயில்வதால் அன்னை பக்தர்கள் அடையும் பொதுவான பலன்களைப் போன்ற பலன்கள் உண்டு. நாம் அன்னையை வணங்குவதால் தெளிவு, நிம்மதி, பக்தி போன்றவை அதிகரிக்கும். அதேபோல் நூல்களைப் பயில்வது சிறப்பான முயற்சி என்பதால் பொதுவாக நல்லவை அதிகரிக்கும்; மற்றவை குறையும்.

நூல்களைப் பயில்வதால் ஞானம் அதிகரிப்பதைப் போல், அறிவுக்குரிய தெளிவும் சிறப்பாக அதிகப்படும். மனத்திலுள்ள நிம்மதியின் தரம் உயரும். நாம் தினமும் செய்யும் காரியங்களின் பலன் ஓரளவு உயரும். அன்னையை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதை அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியும். “இனி நம்மை விட்டு அகலாது” என்று நாம் ஏற்றுக்கொண்ட சோகம் குறையும். அது போன்ற பிரச்சினைகளில் சில தாமே விலகும். ஆச்சரியம் என நாம் கருதும்படிப் பல்வேறு சிறு விஷயங்கள் அன்னையிடம் முதலில் நாம் வந்தபொழுது நடந்ததைப் போல் சற்று அதிகமான அளவில் நடக்கும். செய்யும் காரியங்களில் நம் திறமை ஆரம்பத்தில் அதிகரித்ததைப் போல் அடுத்த கட்டத்தில் திறமை உயரும். உடல்நலக் குறைவுகளில் சில நம் முயற்சியில்லாமல் விலகும். உன் தொழிலுக்குரிய புதிய கருத்துகள் திடீரென உதயமாகும். சுத்தமும், இனிமையும் உயரும். கிடைக்காமலிருந்த விசா (visa) திடீரெனக் கிடைக்கும். அன்னையிடம் வந்தபொழுது நடந்த நல்லவைகள் அடுத்த உயர்ந்த கட்டத்தில் நடப்பது இந்நூல்களைப் பயில்வதன் பலனாகும்.

வாழ்க்கையில் பலன் பெறுவதில் எந்த விஷயத்திலும் பலன் பலதரப்பட்டதாக இருக்கின்றது. விவசாயம், வியாபாரம், படிப்பு, தொழில், மந்திரம், நட்பு, பக்தி ஆகிய எந்தத் துறையிலும் பலன் ஓர் அளவாகவோ, ஒரே அளவாகவோ இல்லை. ஒரே சூழ்நிலை பல நபர்களுக்குப் பல்வேறு அளவுகளில் பலன் தருவதைப் போல் அன்னையிடம் வருபவர்களுக்கும் பலன் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளது. சுமார் 10 நிலைகளாகப் பிரிக்கலாம். ஒரு தொண்டர் அன்னையை வழிபட ஆரம்பித்து, அம்மாநில முதல் மந்திரியானார். அவருடன் வந்த அவர் கணவர் M.P.யானார். பலன் ஈடுபாட்டைப் பொருத்துள்ளது. அதே போல் இந்நூல்களைப் பயில்வதில் முதற் கட்டமான பலனை மேலே விளக்கினேன். முடிவான பலன் ஒன்றுண்டு. அது யோகம் சித்திப்பது. இடையே பல நிலைகள் உள்ளன. அவற்றுள் ஒவ்வொருவருக்கும் அவர் உள்ள நிலைக்கேற்ப அதிகபட்சப் பலன் என்றுண்டு. அதைப் பெறுவது எப்படி என்பதே இங்கு ஆராயப்படுவது ஆகும்.

உதாரணமாக, சாஸ்திரம் உயர்ந்த பலனைத் தரும் என்றாலும், ஒரு குரு தம் பரிவால் சிஷ்யனுக்கு அதைவிட அதிகமாகக் கொடுக்க முடியும் என்பதை நாம் அறிவோம். இந்நூல்களை குருவின் மீதுள்ள பக்தியுடன் பயின்றால், அதற்குரிய பவித்திரத்துடன் நூல்களை ஏற்றுக் கொண்டால், குரு பக்தியால் பெறுவதை இந்நூல்களிலிருந்து பெறலாம். மேலும், குருவால் கொடுக்க முடியாத ஆன்மீக அனுக்கிரஹத்தையும் இந்நூல்கள் கொடுக்கவல்லவை. எந்தக் குருவாலும் சிஷ்யனுக்கு அளிக்க முடியாத அனுக்கிரஹத்தை உள்ளுறை ஜகத்குருவால் மட்டுமே கொடுக்க முடியும். உள்ளுறை ஜகத்குருவை ஏற்றுக்கொள்ள முயல்பவர்க்கு இந்நூல்கள் அந்த ஆன்மீகப் பலனையும் தரவல்லவை.

பயில்பவர் தம்மையறியாமல் பெறுவது நூலின் சிறப்பு. நூலின் சிறப்பை உணர்ந்து தம் பக்தியைப் பவித்திரமாக்கி, தெளிவோடு பலன் பெற விழைபவர் பெறும் சிறப்பு, அவருடைய ஆன்மீக முயற்சிக்குரிய பலன். டெல்லியில் 2 வருஷம் தங்கியிருந்ததால் ஹிந்தி பேசக் கற்றுக்கொள்வதற்கும், வடநாட்டில் பிறந்தவர் முறையாக “விசாரத்” படித்துக் கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு தன்னை அறியாமல் பெறுவதற்கும், தெளிவோடு பெறுவதற்கும் உண்டு.

தொடர்ந்து பல நாட்கள் இந்நூல்களைப் பயில்வதால், அருள் நம் சூழலில் வந்து சில நாள் தொடர்ந்தும் இருப்பதுண்டு. அது நிகழ்வதால், நறுமணம் நிறைந்த சூழலில் நாம் மிதப்பது போன்று தோன்றும் என்கிறார் அன்னை. கருணையின் ஸ்பரிசம் கரை கடந்திருப்பதால் சூழலே இறைவனின் இதமான ஸ்பரிசமாகத் தோன்றும் என்கிறார். நூல்களைத் தொடர்ந்து பயில்வதால் ஜீவனில் அருள் நிறைந்து, அது வழிந்து புறச்சூழலை நிரப்பும்பொழுது (fleeting careness) இனிய உணர்வின் இன்ப வருடலால் சூழல் உன்னைத் தழுவும்.

இவ்விதம் படிக்கும் முறைகளில் சில: 

  1. ஒரு பிரச்சினை ஏற்படும்பொழுது அது சம்பந்தமான விஷயங்களை இந்நூல்களில் தேடினால் சுமார் 100, 200 குறிப்புகள் கிடைக்கும். அவற்றுக்கு எதிரானவற்றையும் கண்டு பயிலலாம். அத்துடன் படிப்பவர்க்கு இப்பிரச்சினை எந்த எந்தக் குணங்களைத் தழுவுகிறதோ அவற்றையும் ஆராய்ச்சி செய்யலாம். உதாரணமாக, வாழ்வில் பல விஷயங்களில் வெற்றி பெறும் ஒருவர் சில விஷயங்களில் தோல்வியடைந்தால், வெற்றி, தோல்வி என்ற தலைப்புகளில் 16 வால்யூம்களிலும் வரும் குறிப்புகளை எடுத்துப் பயின்றால், அவை 100க்கு மேலிருக்கும். பொதுவாக நூலைப் பயிலும் போதில்லாத தெளிவும், பயனும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை ஆராயப் படிக்கும் பொழுது கிடைக்கும். தான் வெற்றியடையும் இடங்களில் உள்ள சந்தர்ப்பங்களையும் அங்கு வெளிப்படும் குணங்களையும் கவனித்துத் தோல்வியடையும் இடங்களில் அதேபோல் உள்ளவற்றையும் கவனித்து, இந்நூல்களில் அவற்றைப் பற்றி அன்னை என்ன எழுதியிருக்கிறார் என்று கண்டால், பெறும் பலன் அதிக அளவாக இருக்கும். விஷய ஞானம், யோக ஞானமாக மாறும். அதன் மூலம் நாம் தொடர்ந்து பெற்ற தோல்விகள் குறைந்து வெற்றியாக மாறும் நிலையும் வரும். எந்தத் திறமைகளை நாம் உயர்ந்தது என்று கருதியிருந்தோமோ, அவற்றில் சில தோல்விக்குக் காரணம் என்றும் புரியும். எவற்றை ஒதுக்கியிருந்தோமோ, அவற்றின் உயர்வும் தெரியவரும். 15, 20 ஆண்டுகளில் வாழ்க்கை தரும் பாடங்களை 15, 20 பக்கம் படித்துப் பெறலாம். நாம் ஒரு விஷயத்தை அறிய மேற்கொண்ட ஆராய்ச்சி, வேறு விஷயங்களை நமக்குணர்த்துவதையும் காணலாம். நம்முடைய சொந்தப் பிரச்சினை என்பதால், மனம் ஆழத்திலிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடும். அதனால் ஆராய்ச்சி நம்மை அறியாமல் பிரார்த்தனையாக மாறி, நம் பிரச்சினையே மறைவதும் உண்டு. சொந்தக் குணத்தில் சிலவற்றைப் பற்றிப் புதியதாக அறிந்ததைப் போல், பொதுவாக நாம் தாழ்ந்த குணம், உயர்ந்த குணம் என்று முடிவு செய்தவற்றில் இந்த ஆராய்ச்சியால் பல குணங்களின் நிலை மாறுவதைக் காணலாம்; எதிராகவும் மாறும். உயர்ந்தன என்று நாம் கண்டவை உயர்ந்தவை அல்ல, தாழ்ந்தவை என்றும் காணலாம்.
    பிரச்சினையுடன் நாம் ஆழ்ந்து ஈடுபட்டிருப்பதால், ஆராய்ச்சி ஆழ்ந்த ஈடுபாட்டிற்குரிய பலனைக் கொடுக்கும். அதாவது வழக்கத்திற்கதிகமான பலனைத் தரும்.
  2. ஒரு பிரச்சினை என்றால் நஷ்டம், கஷ்டம், பயம், ஆபத்து, வருத்தம் ஆகியவை உடன் வரும். அதுவே ஒரு புதிய வாய்ப்பு என்றால், நல்லவை மட்டுமே உடன் வரும்; மற்றவை அங்கிருக்காது. அதனால் இதே ஆராய்ச்சியை ஒரு வாய்ப்பை மையமாக வைத்து மேற்கொண்டால், மேற்சொன்ன அதே பலன்கள் உயர்ந்த நிலைகளில் மட்டும் ஏற்படும். நம் உள்ளுறை திறமை அதிகமாகும் வாய்ப்புண்டு.
  3. பொதுவாக, மனதில் குழப்பமுள்ளவர்களுண்டு. ஏதோ ஒரு சமயம் குழப்பமான நிலை எவருக்கும் ஏற்படுவதுண்டு. பல குழப்பங்களுக்கு முடிவுண்டு. சில குழப்பங்களை மற்றவரிடம் சொன்னால், இவையெல்லாம் ஒருவர் வாழ்க்கையில் வரக்கூடாதே என சஞ்சலப்படுவார்கள். எந்தக் குழப்பத்திற்கும் அன்னையிடம் முடிவு உண்டு. அதனால் இந்நூல்கள் குழப்பத்திலிருந்து தெளிவு பெற உதவும். குழப்பம், அதற்கெதிரான தெளிவு, அது உள்ள இடமான மனம், அதற்குக் காரணமான பயம், பதட்டம் ஆகியவற்றை இந்நூல்களில் கண்டு, அன்னை அவற்றைப் பற்றிச் சொல்வதைப் படித்தால் குழப்பம் போன இடம் தெரியாது. இவ்வளவு தெளிவாக நான் என் வாழ்நாளில் சிந்தித்ததேயில்லை என்று தோன்றும். குழப்பத்தால் ஏற்பட்ட பிரச்சினையும் பேர் அளவுக்கு அழியும். மனித இயல்பின் தத்துவார்த்தங்களில் சில விளங்கும். ஒரு விஷயத்தை எப்படி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது தெளிவாகும்.
  4. நமக்குள்ள சிறந்த குணங்கள் எவை என்பது நமக்குத் தெரியும். மனச்சாட்சிப்படி நடத்தல், தூய்மை ஆகிய இரு குணங்களை நாம் எடுத்துக்கொள்வோம். பொதுவாக, அன்னையின் கருத்து, எதைப் பற்றியும் உலகத்தின் அபிப்பிராயத்திலிருந்து மாறுபட்டிருப்பது வழக்கம்; நேர் எதிராகவும் இருப்பதுண்டு. அதனால் நாம் உயர்ந்ததாகக் கருதும் குணங்களைப் பற்றி அன்னை என்ன சொல்கிறார் என்று அறிய முனைந்தால் புதியன புறப்படும். தூய்மை என்றால் நமக்குச் சுத்தம் என்றும், மனத்தின் நேர்மை எனவும் தெரியும். அதனால் அதைப் போற்றுகிறோம். அன்னை தூய்மையைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால், இறைவனை மட்டும் நம்பியிருக்கும் மனநிலையே தூய்மை என்கிறார். நம்மிடம் தூய்மை உள்ளது. அது நாமறிந்த நிலைக்கேற்றவாறுள்ளது. அதைச் சோதனை செய்து, அன்னை சொல்வது போல் மாற்றிக்கொள்ள வேண்டுமானால், அது முடியுமா என்று நாம் சிந்திக்க வேண்டும். இறைவனை மட்டும் நம்பி நாம் செய்யும் காரியங்கள் குறைவு. நம் திறமையை நம்பிச் செய்யும் காரியம் அதிகம். நம் நேர்மையை நம்பிச் செய்பவையுண்டு. அன்னையின் விளக்கப்படி நம் நேர்மையை நம்பிச் செய்யும் காரியம் தூய்மையானதன்று என்றாகிறது. நாம் பழக்கத்தை நம்பியும், ஊர் வழக்கத்தை நம்பியும் செய்யும் காரியங்கள் அநேகம். ஆபத்து வந்து எதையும் நம்ப முடியவில்லை என்ற நிலையில் மட்டுமே நாம் இறைவனை நம்பிச் செயல்படுகிறோம் என்பது தெரியவரும். அது போன்று இந்த வருஷம் நடந்தவை இரண்டு காரியங்கள் மட்டுமே; சென்ற ஆண்டு அதுவுமில்லை என்றால், அன்னையின் கருத்துப்படி நம் தூய்மை 100க்கு 1 என்றாகிறது.
    நூலைப் படித்துத் தெளிவு பெறுதல் என்பது முதல் கட்டம். அவற்றை வாழ்வில் பின்பற்றுவது என்பது யோகம். இக்கட்டுரையில் நாம் முதற்கட்டத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். நாம் தூய்மையுடன் இருக்கின்றோம் என்று வாழ்க்கையை நடத்தும்பொழுது, அன்னையின் விளக்கம் அத்தூய்மை 1% என்று சொல்கிறது. தூய்மைக்குரிய உண்மையான விளக்கத்தையும் நாம் அறிகிறோம். இது உயர்ந்த ஞானம். இதனால் நம் தூய்மையை உயர்த்தும் வாய்ப்பு ஏற்படுகிறது.
    மனச்சாட்சி உயர்ந்தது. அன்னை மனச்சாட்சியை எதிரி என்கிறார். அதற்குரிய விளக்கத்தையும் எழுதுகிறார். உடலாலும், உணர்வாலும், அறிவாலும் செயல்படுபவனுக்கு மனச்சாட்சி கலங்கரை விளக்கம். ஆன்மாவை மையமாகக் கொண்ட வாழ்க்கையை மேற்கொண்ட பின் அதற்குக் கீழ்ப்பட்ட மனச்சாட்சி அவனுக்கு விலங்காக இருக்கும். இதையும் அன்னை தெளிவுற விளக்குகிறார். நாம் மனச்சாட்சியைப் போற்றினால், அதைவிட உயர்ந்த நிலையுள்ளது என்று அறிகிறோம்.
    நம் உயர்ந்த குணங்களைப் பற்றி அன்னை கூறுவதைப் படித்த பின், நம் தாழ்ந்த குணங்களைப் பற்றியும் படித்தால் அறிவு விளங்கும். அவற்றை நாம் விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்படும்.
  5. தினமும் பூஜை செய்வதுபோல் 5 அல்லது 10 பக்கங்கள் படிப்பதும் ஒரு முறை. இதைக் காலையில் செய்தால், அன்றைய காரியம் செவ்வனே நடக்கும். படுக்கும் முன் படித்தால், அதைவிட அதிகப் பலனிருக்கும். ஒரு சாங்கியம் போல் இம்முறை ஆகிவிடும். அதனால் குறைந்தபட்சப் பலனே ஏற்படும். பெரும் பலன் ஏற்பட இது உதவாது. பெரும் பலனுக்கு மனம் ஈடுபட வேண்டும்.
  6. (Scholar) விஷய ஞானத்தைத் தேடும் பண்டிதர் போல் படிப்பது ஒரு முறை. இதனால் ஏற்படும் பலன் முக்கியமாக அறிவைச் சார்ந்தது. யோக, வாழ்க்கைப் பலன்கள் இரண்டாம்பட்சமாகவே இருக்கும். என்றாலும் சாங்கியமாகப் படிப்பதைவிட அதிகப் பலனுண்டு.
    இம்முறையைத் தீவிரமாக ஒருவர் மேற்கொண்ட பின் முதலில் அவர் கண்டறிவது ஒன்றுண்டு. “இதுவரை எந்தச் சொல்லையும், எந்த விஷயத்தையும் நான் தெளிவாக உணரவில்லை” என்பது அவருக்கு விளங்கும். ஆராய்ச்சி செய்பவருடைய முதல் வேலை நூலில் என்ன சொல்லியிருக்கின்றது, இதுவரை சொல்லப்பட்டதிலிருந்து எப்படி அது வேறுபடுகிறது என்று கண்டறிய வேண்டும். உதாரணமாக, “சந்தேகம்” என்ற கருத்தைப் பற்றி அன்னை என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். நாம் பரீட்சை எழுதியிருக்கிறோம். பாஸ் பண்ணுவது சந்தேகம் என்றால், செய்த வேலை தெளிவாக இல்லை; அதனால் பலன் நிச்சயமில்லை; எனவே சந்தேகம் எழுகிறது என்று நாம் அறிவோம். அன்னை மாற்றிக் கூறுகிறார். மனதில் எழும் சந்தேகம் புற நிகழ்ச்சிகளை உருவாக்கி, நாம் சந்தேகப்பட்டபடி நிகழ்ச்சிகளை நடத்திவைக்கும். அதனால், சந்தேகம் விஷம் போன்றது என்கிறார். ஆராய்ச்சி செய்பவர், சொல்லிலிருந்து விஷயத்திற்கு வந்தால், மனம் குழம்புகிறது. மனத்தில் சந்தேகமில்லை என்றால், பலனில் சந்தேகம் இல்லை. மனத்தில் சந்தேகமிருந்தாலும், பலன் சந்தேகமின்றி கெட்டுவிடும் என்பது அன்னையின் விளக்கம். சந்தேகத்தைப் போக்க எடுக்கும் முயற்சி யோக முயற்சி. அன்னை சொல்லியவற்றை அறிய முயல்வது பாண்டித்யம் (scholar). இது போன்று ஆராய்ச்சிக்குரிய கருத்துகள் 300, 400க்கு மேற்பட்டவை. ஆராய்ச்சியாகப் படித்தால் அறிவு அளவு கடந்து தெளிவுபடும். அதற்குரிய வாழ்க்கைப் பலனும் உண்டு. இது ஒரு சிறந்த முறை. உச்சக்கட்ட உயர்ந்த முறையில்லை என்றாலும் சிறந்த முறையே.
  7. ஒரு பகுத்தறிவுவாதியாக அன்னை நூல்களைப் பயிலலாம். அதனால் பகுத்தறிவு வளரும். பகுத்தறிவின் எல்லையைக் காணலாம். பகுத்தறிவால் இறைவனைக் காண முடியும் என்று பகவான் சொல்வதன் உண்மையையும் கண்டறியலாம்.
  8. அன்னையுடன் இரண்டறக் கலக்க இதை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம். அதற்கு முதலிலிருந்து வரிசையாகப் படிக்கக்கூடாது. மனம் நெகிழ்ந்து நாடும் தலைப்புகளில் ஒன்றை எடுத்து, அதில் மனம் கரைந்து ஈடுபடும்வரை படிக்க வேண்டும். அதைத் தாண்டி, அது வெறும் படிப்பானவுடன் படிப்பதை நிறுத்திவிட வேண்டும். மனம் நெகிழ்ந்த பின் அது ஈடுபடும் படிப்பு நெகிழ்ச்சியை அதிகமாக்கும். கொஞ்ச நாளைக்குப் பின் மனம் நேரம் வந்தவுடன் படிப்பை ஆர்வமாக நாடும். படித்தால் கண் கலங்கும். தொடர்ந்து பயின்றால் படிக்கும் சமயத்தில் நம்மை மறந்து அன்னையுடன் ஐக்கியமாவதைக் காண்போம். இது மிக உயர்ந்த முறை. உணர்ச்சிவசப்பட்டவர்களுக்கு உகந்தது. பலன் கருதாமல் நாடும் முறை இது. அன்னை தரிசனம் பெறும் வழியை வகுத்துத் தரக்கூடியது இது.
  9. யோகம் செய்ய முடியவில்லை என்பதால் அதற்குப் பதிலாகப் படிப்பை நாடுவது ஒரு முறை. யோகத்தை மேற்கொள்ளும் ஆர்வம் இருந்து, அதை நடைமுறையில் நிறைவேற்ற திறனில்லாதவர்க்கு இம்முறை பயன்படும். யோக முறைகளான தியானம், சமர்ப்பணம், திருவுருமாற்றம், பக்தி, ஞானம், நம்பிக்கை போன்றவற்றின் முழுப் பட்டியலைத் தயார் செய்துவிட்டு, முதல் விஷயத்தை எடுத்து அதை ஆராய்ச்சி செய்பவர் போல் யோக மனநிலையுடன் படித்தால், தியானம் நம்மைத் தொடுவது தெரியும். எந்த விஷயத்தைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்கிறோமோ அதற்குரிய பலன் ஓரளவு கிடைக்கும். தியானம் என்ற கருத்தைப் பண்டிதர் போல் ஆராய்ச்சி செய்தால், அதைப் பற்றி கட்டுரை எழுதவும், பிரசங்கம் செய்யவும் உள்ள தெளிவு ஏற்படும். அதற்குப் பதிலாக யோக மனப்பான்மையுடன் ஆராய்ச்சி செய்தால், தியானமே நம்மை வந்து தொடும். ஒன்றை முடித்துவிட்டு அடுத்த விஷயத்தை அது போல் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இம்முறையால் யோகம் செய்ய முடியவில்லை என்ற குறை பேர் அளவுக்குக் குறையும். ஓரளவு யோகப் பலனும் ஏற்படும்.
  10. நான் பண்டிதனுமில்லை, யோகியுமில்லை; எனக்கு ஆராய்ச்சி தேவையில்லை; என் குடும்பம் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதே என் அவா என்பவர்கள், அதே குறிக்கோளுடன் படிக்க வேண்டுமானால், வளம், திறன், சக்தி, சுத்தம், நேர்மை, முறை, தைரியம், விஸ்வாசம், பண்பு போன்ற கோட்பாடுகளை ஊன்றிப் பயில வேண்டும். இவையெல்லாம் மனிதனுடைய செல்வத்தை நேர்மையாக வளர்க்கும் திறன் உடையவை. இவற்றை ஆழ்ந்து பயின்று, முடிந்தவரை பின்பற்றினால், பயில்வதற்குரிய நல்ல பலனும், பின்பற்றுவதற்குரிய முழுப் பலனும் தவறாது கிடைக்கும். 

“16 வால்யூம்களையும் வாங்கி வந்துவிட்டேன். ஆனால் படிக்க முடியவில்லை; படிக்க மனம் ஒப்பவில்லை” என்பவர்களும் உண்டு. இந்நூல்கள் ஒருவகையில் “அன்னை”யேயாகும். நம் வீட்டில் அவை இருப்பது அன்னையிருப்பது போலாகும். போட்டோவில், “நான் உயிருடன் இருக்கின்றேன்” என்று அன்னை கூறுவது போல், இந்த நூல்களில் அன்னை உயிருடன் இருக்கின்றார். படிப்பவர்க்கு அவர்கள் படிக்கும் முறைக்கேற்ப அன்னை தம்மை அளிக்கின்றார். எதுவும் முடியாதவரும் இந்நூல்களை வாங்கி வந்துவிட்டால், அடிக்கடி அவற்றை எடுத்து இரண்டு நிமிஷம் பார்ப்பதால் அதனுடன் ஒரு ஜீவனுள்ள தொடர்பேற்படும். மனதில் ஓர் எண்ணம் ஏற்பட்டால், உடனே ஒரு புத்தகத்தை எடுத்துத் திறந்து பார்த்தால், நம் கருத்துக்குரிய விளக்கமோ, தெளிவோ ஏற்படும். ஒரு செல்வர் மனை வாங்கினார். அதைத் தொடர்ந்து மற்றொரு மனை விலைக்கு வந்தது. புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். முதல் சொல் “Go ahead”, “ஏற்றுக்கொள்” என்ற கருத்தில் இருந்தது; ஏற்றுக்கொண்டார்; பெரும் பலன் விளைந்தது. தினமும் 4, 5 முறை இப்பழக்கத்தைக் கைக்கொண்டால் புத்தகத்துடன் ஏற்படும் தொடர்பு அன்னையுடன் ஏற்படும் தொடர்பாக மாறும். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒட்டியும், மனதில் எழும் எண்ணங்களை ஒட்டியும் புத்தகத்தைப் பார்க்கும் பழக்கம், நமக்கும் புத்தகத்திற்கும் தொடர்பேற்படுத்தி, ஒரு வகையில் படிக்கும் பலனை அளிக்கும்.

ஸ்ரீ அரவிந்தர் தம் கருத்துகளின் சாரமாக 547 சிறு குறிப்புகள் எழுதியுள்ளார். அவற்றை அன்னை இந்நூலில் எடுத்து விளக்குகின்றார். அவ்விளக்கங்களைப் படிப்பது ஒரு வகையில் ஸ்ரீ அரவிந்தருடைய எல்லாப் புத்தகங்களையும் படிப்பதற்குச் சமம். நூற்றாண்டு செட்டில் இது 10வது வால்யூம்.

தமிழ் படிக்க முடியாத குழந்தைகள் இன்று அதிகமாக உண்டு. ஆங்கிலம் அறியாத பெற்றோருக்கு தமிழறியாத குழந்தைகள் அமைந்தால், இந்நூல்களைக் குழந்தைகளிடம் கொடுத்து தங்களுக்கு வேண்டிய பகுதியை விளக்கமாக எடுத்துச் சொல்லும்படிச் செய்வது நல்லது. அதனால் நூலில் உள்ள கருத்தைப் பெரியவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. குழந்தைகளுக்கு அன்னையை அறிமுகம் செய்வதற்கு இது சிறந்த வழி.

மேற்சொன்ன உயர்ந்த நோக்கங்கள் எதுவுமின்றி, வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க இந்நூல்களைப் பயன்படுத்தலாம். ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டால், அவற்றைப் பற்றி அன்னை என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று எல்லா இடங்களிலும் தேடும் பொழுது பிரச்சினையைத் தீர்க்கும் வழி புலப்படும்; பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

16 வால்யூம் கொண்ட செட் வாங்க முடியாதவர்கள் அன்னை எழுதிய சிறு புத்தகங்கள் ஏதாவது ஒன்றை வாங்கி, அந்த அளவில் பயன்படுத்தலாம். இந்த செட்டில் முதல் வால்யூம் Prayers and Meditations. அதைத் தனியாக விற்பதால், அதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். தியானமும், பிரார்த்தனையும் என்ற தலைப்பில் அதன் தமிழ் மொழிபெயர்ப்புக் கிடைப்பதால் அதுவும் பயன்படும்.

இதுவரை அன்னை தரிசனங்களுக்கும், புது வருஷத்திற்கும், மற்ற முக்கிய நாட்களுக்கும், ஒரு சிலருக்குப் பிறந்த நாளுக்கும் கொடுத்த செய்திகளைத் திரட்டி, ஒரு வால்யூமாக பிரசுரித்து இருப்பதால், புத்தகங்களைப் பிரித்து நம் மனதிலுள்ளவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க இந்த வால்யூம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஒரு புதிய சந்தர்ப்பம் வந்தவுடன், என்ன செய்வது என்று தெரிவதில்லை. அன்னையின் முறைகளை இச்சந்தர்ப்பத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்று நாம் தெரிந்துகொள்ளவில்லை என்றால்தான் இந்நிலைமை ஏற்படும். நாம் செய்யும் ஆராய்ச்சி இதை நாம் தெரிந்து கொள்ள உதவ வேண்டும். பிரச்சினையின் கூறுகளைப் பற்றியும், நம் மனநிலையைப் பற்றியும் அன்னை சொல்பவற்றைப் படித்தால் அது விளங்கும்.

ஓர் ஆபீஸில் பல ஆண்டுகளாக நாம் வேலை செய்யும்பொழுது, இந்த ஆபீஸால் நமக்கு அதிகபட்சப் பலன் ஏற்படுவது எப்படி என்று ஒருவர் வாழ்க்கையை நடத்தி வந்திருந்தால், அவர் இந்நூலை எடுத்து வேலை, கடமை, மனிதன், வெற்றி, தோல்வி என்ற பகுதிகளைக் கவனித்தால், அவரது நோக்கம் சரியில்லை என்பது அவருக்குத் தெரியவரும். தாழ்ந்த மனநிலைகளை வாழ்க்கை நோக்காக ஏற்றுக்கொண்டு, அவை தாழ்ந்தவை என்றே அறியாதவர்க்கு அவைகளை உணர்த்தும் திறனுடையது இந்நூல்.

எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற தெளிவு எனக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் செய்யத் தைரியம் வருவதில்லை என்பவர் இந்நூலைப் பயின்றால், சரியானவற்றைச் செய்வதற்குரிய தைரியமும், தவறானவற்றைச் செய்யாமலிருக்கும் தைரியமும் உண்டாகும்.

அன்னையின் சொற்களைப் பல இடங்களில் மாறிய அர்த்தத்தில் நாம் புரிந்துகொள்வதுண்டு. நூலைப் பயிலும்பொழுது அன்னையின் சொற்களுக்குரிய அர்த்தம் புலனாகும். “குழந்தைகளை அடிக்கக் கூடாது” என்று அன்னை வலியுறுத்திச் சொல்வதைக் “குழந்தைகளை கண்டிக்கக்கூடாது” என்று புரிந்துகொள்வது வழக்கம். நூலை விளக்கமாகப் பயிலும்பொழுது “அடிக்கும்” மனநிலைக்கும், “கண்டிக்கும்” மனநிலைக்கும் உள்ள வித்தியாசம் விளங்கும். அடித்து அடக்குவது எளிது. ஆனால் அடிக்கக்கூடாது. அவசியம் கண்டிக்க வேண்டும். அடிக்காமல் கண்டித்தால் பலன் இருப்பதில்லை; குழப்பம் ஏற்படுகிறது. மனம் கடுமையாயிருந்தால் அடிக்க விழைகிறது. மனத்தில் கடுமை உள்ளவரை குழந்தையை அடிக்கக்கூடாது. அடித்தால் கெட்டுப்போகும்; முரண்டு செய்யும். நம் மனத்தில் கடுமையில்லாமல், தன்னடக்கம் இருந்தால் குழந்தை கட்டுப்படும். கட்டுப்படாத குழந்தையை மனத்தில் கடுமையில்லாமல் கண்டித்தால் அடங்கும் என்பதை அன்னை விளக்குகிறார்.

விழிப்பு முக்கியம்; விழிப்பின்றி பலனில்லை என்பதை அன்னை வலியுறுத்துகிறார். “என் செய்வது, நானும் பல வருஷமாக அன்னையைத் தொழுகிறேன்; நன்மைகள் ஏற்படுகின்றன. அன்னை சொல்வது போல் என் மனத்தில் விழிப்பேற்படவில்லை” என்பவர் இந்நூலை முறையாகப் பயில ஆரம்பித்தால் விழிப்பு ஏற்படுவதைக் காணலாம்.

தெளிவுக்காகப் படித்தவர், தொடர்ந்து படித்தால் யோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதைக் காண்பார். Life Divineஇல் கூறியுள்ள கருத்துகள் அநேகம். வலியும், ஆனந்தமும் ஒன்று; கஷ்டம் வாய்ப்பின் மறு உருவம் போன்ற கருத்துகள் புரிய இந்நூல் உதவும்.

ஜடமாய்ப் பிறந்து, ஜடமாய் வளர்கிறேன் என்பவர்கள் இந்நூலைப் படித்தால், ஜடமாகவே இருந்தாலும் தங்களை அறியாமல் உள்ளே ஆன்மீக விளக்கமும், வெளியே வாழ்க்கைப் பொலிவும் உண்டாவதைக் காண்பார்கள். தொடர்ந்தும் படித்தால், தன்னை அறியாமல் நடந்த நல்லவை, நாம் அறியும் அளவில் நடப்பதையும் காணலாம்.

அன்னை அநேக பூனைகளை வளர்த்தார்கள். அன்னையுடைய நண்பர் ஒரு ரஷ்யப் பெண்மணி இறந்தபொழுது, அவர் ஆன்மா ஒரு பூனை மூலம் அன்னையை வந்து கண்டது. ஒரு பிரெஞ்சு இளைஞன் போர்க்களத்திலிறந்தபோது மற்றொரு பூனை மூலம் அன்னையை வந்து ஆவலுடன் பார்த்தான். தான் வளர்த்த மற்றொரு பூனை வயதானபொழுது, அப்பொழுது பூனை தானிருந்த வீட்டின் மதில் மேல் உட்கார்ந்து அன்னையிருக்கும் இடத்தை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்து இறந்தது. அன்னையிடனிருந்தவர்கள் உயிர் பிரிந்தவுடன் நேராக அன்னையை அடைவது வழக்கம். வந்து அவர் ஆன்மாவில் தங்குவதுண்டு. வயதான பெண்மணி ஒருவர் சமாதி தரிசனம் செய்து, தமக்கு நிம்மதியான சாவு வேண்டும் என்று வேண்டிக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்து சில தினம் கழித்து மாலையில் பேசிக்கொண்டிந்தபொழுது திடீரென அமைதியாக இறந்தார். மறுநாள் அவர் மகள் தியானத்தில், அவர் அன்னையுடன் இருப்பதைக் கண்டார். வாழ்வில் வளம் தரும் அன்னை, வாழ்வுக்குப் பின் ஆன்மீக அடைக்கலம் தருகிறார். தன் மார்பைச் சுட்டிக்காட்டி, அங்கு ஒரு பெருங்கூட்டமே குடியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்நூல் நமக்கும் அன்னைக்கும் இம்மையிலும், மறுமையிலும் தொடர்பேற்றிக் கொடுக்கும்.

இந்நூலில் பல இடங்களில் தம் சொந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளை அன்னை குறிப்பிடுகிறார். அவை சிறப்பானவை. அவருடைய எழுத்தில் இல்லாத விளக்கம், இந்நிகழ்ச்சிகள் மூலம் நமக்குக் கிடைக்கும். தாம் சொல்வதற்கு நேர் எதிராக அன்னை பல முறை செயல்படுவதுண்டு. இந்நூலில் உள்ள விளக்கங்களும், நிகழ்ச்சிகளும் அதன் காரணத்தை நாம் அறிய உதவும்.

தம்மையோ, ஸ்ரீ அரவிந்தரையோ, ஆசிரமத்தையோ, பிரபலப்படுத்தும் செயல்களை அன்னை ஒருபொழுதும் விரும்பவில்லை. சத்பிரேம் என்பவரை ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதச் சொல்லி அதிக நாள் வலியுறுத்தினார். Sri Aurobindo or the Adventures of Consciousness என்ற பெயரில் அது வெளியாகி, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பிரசித்தியடைந்தது. இவை இரண்டுக்கும் உள்ள முரண்பாடு நமக்குத் தெரிகிறது. நூல் அம்முரண்பாட்டை விளக்கி, விலக்கும்.

ஒளிமயமான அன்னை, இருள்மயமான உலகத்தில் அவதாரம் செய்ததே தெய்வத்தின் தியாகம் என வர்ணிக்கப்படுவது. தன் ஒளியை அழித்து, உலகத்தின் இருளைப் போக்குவதே தெய்வம் நம்மை நாடி வருவதாகும். எத்தனை ஆயிரம் வகைகளில் அந்தத் தியாகம் வெளிப்பட்டது என்பதை அன்னையின் பூவுலக வாழ்வு விவரமாக விளக்குகின்றது. தினமும் அன்னையைச் சந்திக்கும் சாதகர் ஒருவர் ஒரு நாள் கவலையுடன் முறையிடுகிறார்; “உங்களுக்கு உடல்நலம் குன்றியபொழுதெல்லாம் என் குணம் கெட்டுவிடுகிறது” என்கிறார்.

அன்னை சிரித்தார். “உன் குணம் கெட்டபொழுதெல்லாம் என் உடல்நலம் குன்றிவிடுகிறது'' என்று பதிலிறுத்தார். அன்னையைத் தரிசிக்கும் பாக்கியத்தை உணர்ந்து அவரிடம் வருபவர்களைப் பார்த்து, ஆசீர்வதிக்க அன்னை பிரியப்படுவார். கோபத்துடனோ, விரக்தியுடனோ, வக்ர குணத்துடனோ அன்னையைத் தரிசிக்கப் போகக்கூடாது. அதனால் அன்னைக்குச் சிரமம். அது அவர் உடல் நலனையும் பாதிக்கும். அத்துடன், அதைத் தலைகீழாகப் புரிந்து கொள்வது மனித மனம். அப்படிப் புரிந்துகொண்டு அன்னையைக் குறை சொல்பவரும் உண்டு.

அன்பர்கள் ஆசிரமம் வரும்பொழுது பவித்திரமான உணர்வோடு வந்தால், பிரயாணத்திலோ, ஆசிரமத்திலோ அவர்களுக்கு எந்தத் தடையும் இருப்பதில்லை. அப்படி வருபவர்களே பெரும்பாலோர். மாறாக உள்ளவர்களும் உண்டு. வழியில் தடை, ஆசிரம வாயிலில் தடை, உள்ளே போனால் தகராறு, வாக்குவாதம், இவற்றிற்கெல்லாம் மற்றவர்களே காரணம் என மனம் நினைக்கின்றது. தானும், தன் குணவிசேஷமும் காரணம் என்று அறிவதில்லை.

விருப்பத்துடன் வருபவர்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது. தயக்கத்துடன் வருபவர்களுக்கு வழி தெரிவதில்லை. பயத்துடனும், சந்தேகத்துடனும் வருபவர்களால் உள்ளே நுழைய முடிவதில்லை. “ஆசிரமம் நமக்குத் தேவையா? இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா?” என்பவர்களுக்கு எங்குச் சென்றாலும் தகராறு வருகிறது. புற நிகழ்ச்சிகளே அகவுணர்வின் பிரதிபலிப்பு என்பதை அவர்கள் உணருவதில்லை. அன்னையை அறிந்தபின் அவர் வாழ்வு நிலை மாறி, அடிக்கடி புதுவை வரும் நிலையும், புதுவைக்கே வரும் நிலையும் ஏற்படுவதே சகஜம்; மனத்தில் பக்தி வளர்வதற்கு அறிகுறி. கணவன் ஆசிரமம் போவதால், வீட்டை விட்டுப் போய்விடுவாரோ என்று மனைவி பயப்படுவது நியாயம்தான் என்று மனப்பூர்வமாக நம்பும் பக்தர், நெருங்கிய ஆசிரமத் தொடர்பு ஏற்பட்டபின், வெளி மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, மாதக்கணக்காக இங்கே வர முடியாமற் போகிறது. இது தம் மனநிலையின் பிரதிபலிப்பு என்று அவர் உணருவதில்லை. “ஏன் எனக்கு இந்த மாற்றம்?” என்று அன்னையைக் கேட்கும் மனநிலையுடையவர்களே அதிகம்.

அன்னையை நினைத்தமாத்திரத்தில் உடல் கோளாறுகள் விலகுவது வழக்கம். நம் குரல் அன்னையின் சூழலை எட்டியவுடன், அவரை அறியாமல் சூழலிலிருந்து வரும் பதில் நோயைத் தீர்க்கும். அன்னைக்கு நோய் வந்ததில்லை. “திருவுருமாற்றம் ஏற்பட உடல் நோயை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார். யோகம் செய்வதால் பல நோய்களை அன்னை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அது போல் ஒரு முறை அவர் கால் வீங்கியது. “காலையிலும், மாலையிலும் இறைவனுக்கு என் நோயையும், காலையும் அர்ப்பணித்தேன். அதுவே சிறந்த முறை” என்கிறார். நெடுநாளைக்குப் பின் கால்கள் குணமாயின.

தெய்வம், கடவுள், பரம்பொருள், பிரம்மம் என்றெல்லாம் நாம் அழைப்பது நம்மைச் சுற்றியுள்ளது; நம்முள்ளும் உள்ளது. பக்குவம் ஆனவர்களுக்குத் திடீரென திரை விலகி, அது காட்சி அளிப்பது உண்டு. சிலருக்கு வாழ்நாளில் ஒரு முறை கிட்டும்; பலருக்கு அது கிடைப்பதில்லை. அன்னையின் நூல்களில் தன்னை மறந்தபொழுது, அது தவறாது கிட்டும்.

பரிபூரண யோகம் மிகவும் கடுமையானது. அன்னை அதன் கடுமையை விலக்கிவிட்டார்கள். இந்நூல்களைப் பயில்பவர்களுக்கு அன்னை செய்த மாற்றத்தின் பலன் ஏதாவது ஒரு ரூபத்தில் கிடைக்கும்.

ஒரு தந்திர குரு பிரபலமானவர். அன்னையைத் தரிசிக்க வந்தவர், அன்னைக்கு யோக சிட்சை கொடுக்கும் மனப்பான்மையுடன், ஆசி வழங்கும் நோக்குடன், ஆனால் வெளித் தோற்றத்திற்கு அடக்கமாக வந்தார். அன்னையுடன் தியானம் செய்தார். “பல யுகங்களில் பெறக்கூடியதை அவருக்குக் கொடுத்தேன்” என்றார் அன்னை. போகும்பொழுது சிஷ்யனாக மாறிப் போனார்.

இந்நூல்களில் அடங்கியுள்ள தலைப்புகள் எவை என்பதை பல உதாரணங்கள் மூலமாக எழுத வேண்டுமானால், அது நீண்டுவிடும் என்பதால், பெரும்பாலான தலைப்புகளை அவற்றிற்குரிய முக்கியத்துவத்துடன் கீழே குறிப்பிடுகின்றேன். உதாரணமாக, தன்மானம் என்ற தலைப்பை, “யோகம் செய்ய ஆரம்பித்த பின் தன்மானத்திற்கு அங்கு இடம் இல்லை” என்று குறிப்பிடுகிறேன். ஏனெனில், பொதுவாக ஒரு தலைப்பைப் பற்றிய நம் கருத்திலிருந்து அன்னையின் கருத்து மாறுபடும் வகையைக் காட்டும் வகையில் எழுத வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

  • சோம்பேறித்தனம் சாந்தியாக மாறும்பொழுது, இடையில் துன்பமாக மாறுகிறது.
  • சோம்பேறித்தனத்தை அழிக்க அவசரத்தை இறைவன் உற்பத்தி செய்தார். இனி அது தேவையில்லை.
  • மலர்களை நுகர்வது உடலுக்குச் சக்தியை அளிக்கும்.
  • ஒவ்வொரு காரியமும் எப்படி அமைந்துள்ளது என்ற பூரண ஞானமே, கருணையாகும்.
  • பண்பு சிறந்த இடத்து சிறு முயற்சி பெரும் பலனை அளிக்கும்.
  • மனத்துள் பிணக்கின்றி பெறும் நிறைவு வீரம் எனப்படும்.
  • பிறரை ஏமாற்ற விரும்புகிறவர், நிகழ்ச்சிகளின் உண்மையை அறிவதில்லை.
  • (Human love) நம்மிடையே உள்ள பாசத்தால், நம் சக்தியின் பெரும் பகுதி விரையமாகிறது.
  • பாசத்தின் மூலம் நாம் நாடும் திருப்திக்கு ஏமாற்றமும், மனப்புண்ணுமே பலன்.
  • அமைதியே திறமைக்கு அஸ்திவாரம்.
  • மனம் வன்முறையை நாடாவிட்டால், பயம் அழிந்துவிடும்.
  • விஷமங்களுக்கெல்லாம் நிதானமின்மையே அஸ்திவாரம்.
  • வேண்டாத நிகழ்ச்சிகளுக்கு இடம் கொடுப்பது பயம்.
  • வெறுப்பு கவர்ச்சிக்கு அறிகுறி.
  • தற்பெருமை உடனே தீய சக்திகளை அழைக்கின்றது.
  • பிறரைத் தண்டிக்கும் நினைவுள்ளவரை தண்டனை நாடி வரும்.
  • தொடர்ந்த சமர்ப்பணம் நிரந்தரமான செல்வம்.
  • மனதின் பேராசை உடலுள் கட்டியாக மாறுகிறது (tumour).
  • மனதின் சந்தேகத்தை நிகழ்ச்சிகள் வலுப்படுத்தும்.
  • பாசம் பவித்திரமானால், அதை வெல்லும் சக்தி இல்லை.
  • மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள சைத்திய புருஷன் தெய்வங்களுக்கில்லை.
  • லக்ஷத்தில் ஒருவருக்கும் சைத்திய புருஷனுடன் தொடர்பில்லை.
  • 30 ஆண்டு யோகத்தில் ஆன்மா (சைத்திய புருஷன்) வெளிவருவது அதிர்ஷ்டம்.
  • முதிர்ந்த ஆன்மா மறுபிறவி எடுக்க நாளாகும்; ஆயிரம் ஆண்டும் ஆகும்.
  • விலங்கினையொத்தவர்களே உடனே மறுபிறவி எடுக்கின்றார்கள்.
  • ஆன்மா முதிர்ச்சி பெற்ற பின் அது பிறவி எடுக்க வேண்டிய அவசியமில்லை. தான் இஷ்டப்பட்டதைச் செய்யலாம்.
  • நன்றியுணர்வை இயல்பாகப் பெற்றவர்கள் அருளின் அழகை உணர முடியும்.
  • உற்சாகம் அகங்காரத்திலிருந்து மனிதனை விடுவிக்கும்.
  • உற்சாகமும், நன்றியும் ஆன்மீக உணர்வுகள்; அகந்தையினின்று விடுதலை பெற அவை உதவும்.
  • ராக்ஷஸனிடமும் இறைவன் இருக்கின்றான்.
  • இறைவன் தீமை வளராமல் பாதுகாக்கின்றான். நன்மைக்கு அளவு கடந்த திறனை அளிக்கின்றான்.
  • ஆன்மீக விழிப்பேற்பட்ட பின் இதுவரை சுபாவத்தில் இல்லாத திறமைகள் ஏற்படும்.
  • விழிப்பு ஏற்பட்ட பின் பிரச்சினை இருக்காது.
  • அமைதியும், ஆனந்தமும் நிலைபெறும்வரை முயற்சி தேவை.
  • மனம் தாராளமாக இருந்தால், கவலை உன்னை அணுகுவது இல்லை.
  • இருப்பது அதிகமானால், தாராள மனப்பான்மை குறையும்.
  • கஷ்டத்தை வலியுறுத்தினால், அது வளரும்.
  • சத்வ குணமுள்ளவர்க்கே பகுத்தறிவு உண்டு.
  • தீய சக்திகளால் தொட முடியாத பகுதி சைத்திய புருஷன் மட்டுமே.
  • தீமையைக் குணப்படுத்தும் திறன் மனிதனுக்கில்லை; இறைவனுக்கேயுண்டு.
  • அதிர்ஷ்டம் என்று எதுவும் இல்லை. தான் அறியாத காரணங்களால் நிகழ்பவற்றை மனிதன் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறான்.
  • உன்னிடம் உள்ள குறைகளைப் பிறரிடம் கண்டால், உன்னால் அவற்றைத் தாங்க முடிவதில்லை.
  • தன்னால் மாற்றக்கூடிய குறைகளை மட்டுமே மனிதனுக்கு வாழ்வு உணர்த்துகிறது.
  • கர்வம் விபத்தை வரவழைக்கின்றது.
  • உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதே திருவுருமாற்றத்திற்குரிய பெரிய தடை.
  • எதையும் எதிர்கொள்வதே தைரியம்.
  • (Sincerity) உண்மை அபூர்வம் என்பதால், நாம் அதற்குத் தலைவணங்க வேண்டும்.
  • உன் மேஜை டிராயரை ஒழுங்காக அடுக்கினால், அறிவுக்குத் தெளிவேற்படும்.
  • உன் மனதை அரிக்கும் எண்ணத்தை பேப்பரில் எழுதிக் கிழித்து எறிந்தால், அது விலகும்.
  • (Common sense) பகுத்தறிவு தவற்றை விலக்க உதவும்; ஆனால் சக்தியுடையதன்று.
  • ஆசை ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றி வரும் தன்மை உடையது.
  • ஆசையின் ஆரம்பம் அன்பு.
  • தன் செயல் சரி என்ற உணர்வு, அறியாமைக்கும் அகந்தைக்கும் உரியது.
  • சுயநலத்தால் பொறாமை உற்பத்தியாகிறது.
  • உடலைவிட அகந்தை மனத்திலும், பிராணனிலும் நிறைந்து உள்ளது.
  • அகந்தை தான் அழிய வேண்டும் என்றும் விழைவதுண்டு.
  • மனிதன் துன்பத்தை வெறுக்கிறான்.
  • அவனுள் ஆழ்ந்த நிலையில் துன்பத்தை ரசிக்கும் குணம் உண்டு. அனைவரிடமும் உள்ள குணம் இது. 

இந்நூலிலுள்ள இதரத் தலைப்புகளுக்கு உதாரணமாகச் சிலவற்றைக் குறிக்கின்றேன்.

மனம், விரயம், தீய சக்தி, வயோதிகம், அமெரிக்கா, விலங்கினம், கலை, ஜோஸ்யம், அசுரன், அணுகுண்டு, நோக்கம், ஸ்ரீ அரவிந்தர், ஆசிரமம், அவதாரம்.

அழகு, தொழில், உடல், புத்தர், அணு, வாய்ப்பு, குழந்தைகள், கிருஸ்துவ மதம், கலர், கம்யூனிஸம், சமூகம், கருணை, மாற்றம், சமையல், சிருஷ்டி, கொடுமை.

மரணம், ஆசை, உறுதி, நோய், இறைவன், அன்பு, டாக்டர், கனவு, பூமி, கல்வி, அகந்தை, உணர்வு, சமத்துவம், அனுபவம், நம்பிக்கை, பொய்மை, குடும்பம், விதி, பயம், உணவு, எதிர்காலம்.

கடவுள், சர்க்கார், அருள், நன்றி, குரு, உடல்நலம், ஹிட்லர், மனித குலம், ஐக்கியம், நோய், அழியாமை, இந்தியா, தனி மனிதன், பூச்சி, சர்வதேசிய அரசியல்.

காளி, கர்மம், ஞானம், கிருஷ்ணா, சட்டம், பொய், வாழ்வு, ஒளி, இறைவன், விஸ்வாசம், LSD, மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி, மந்திரம், ஜபம், வைத்தியம், நினைவு, பணம், தர்மம், அன்னை, தியானம்.

இயற்கை, எண், சித்திரம், கைரேகை, கடந்த காலம், சாந்தி, சிறப்பு, அரசியல், பாண்டிச்சேரி, தரிசனம், பிரார்த்தனை, நிகழ் காலம், பாதுகாப்பு, சைத்திய புருஷன், ராதை, ராட்சசன், சித்தி, சத்தியம், பகுத்தறிவு, மறுபிறவி, தூக்கம், சமஸ்கிருதம், விஞ்ஞானம், பாவம், ஆன்மீகம், வெற்றி, துன்பம், தற்கொலை, சரணாகதி, அகக் காட்சி, சோம்பேறித்தனம், காலம், திருவுருமாற்றம், பிரபஞ்சம், வெற்றி, வன்முறை, பிராணன், யுத்தம், செல்வம், மேல்நாடுகள், உலகம், வழிபாடு, யோகம்.

16 வால்யூம்களிலும் பரவிக்கிடக்கும் அன்னையின் கருத்துகளில் பலவற்றைத் “தெளிவான சுருக்கம்” என்ற முறையில், அதாவது படிக்கும்பொழுது மூலக் கருத்து ஓரளவு தெளிவுபடும்படித் திரட்டி, சுருக்கி எழுதுகிறேன். 

  • அன்னை சூட்சும உலகில் ஸ்ரீ அரவிந்தரைக் கண்டார். கம்பீரமான கவர்ச்சி நிறைந்த எழிலுடன் ஸ்ரீ அரவிந்தர் அமர்ந்திருந்தார். அவ்வுலகில் பொருள்கள் சுயம் பிரகாசத்துடன் இருந்தன. சத்தியஜீவியம் ஆன்மாவை விலக்கி, உடலில் நேரடியாகப் புகுந்தது. அன்னையின் கால் வழியாக நுழைந்து, பொன்னொளி இதமாக மேல் நோக்கிப் பரவியது.
  • அவ்வுலகில் அன்னை பேசியவற்றை எல்லாம் “அர்த்தமற்றவை” என்பது போல் ஸ்ரீ அரவிந்தர் கேட்டுக்கொண்டு, பதில் சொல்லாமலிருந்தார்.
  • ஆகஸ்ட் 15, கடந்த காலத் தவறுகளை அழிக்கும் நாள்.
  • செயல் அகத்திற்கும், வாழ்வு புறத்திற்கும் உரியதே ஆன்மீகம் என்பது.
  • உடலைத் திருவுருமாற்றம் செய்ய மந்திரம் தேவை. ஸ்ரீ அரவிந்தர் எந்த மந்திரத்தையும் தரவில்லை. “மந்திரங்கள் கூடா” என்பது அவர் கொள்கை. 1970இல் அன்னை அடைந்த யோக நிலையை ஸ்ரீ அரவிந்தர் பெற்றிருந்தால், மந்திரங்களின் அவசியத்தை உணர்ந்திருப்பார். ஜபம் மட்டுமே உடலைத் தொடும். மந்திரத்தோடு செய்யும் யோகமும், மந்திரமின்றி செய்யும் யோகமும் மாறுபட்டிருப்பது தெளிவு என்கிறார் அன்னை.
  • சலனமற்ற மனமே ஞானத்திற்குரியது. ஒரு விஷயம் நமக்கு முழுவதும் புரிய வேண்டுமானால், நாம் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதன் மீது அக்கரையில்லாமலிருக்க வேண்டும்.
  • அவதாரப் புருஷர்களுடைய குறை என்பது அவர்கள் ஜனித்த சூழ்நிலையின் குறையேயன்றி, அவர்களுடைய குறையில்லை.
  • 1946இல் பராசக்தி சூட்சும உருவில் அன்னைக்குத் துணையாக வந்தார். அவர் வந்த பின் நடக்க முடியாதவை க்ஷணத்தில் நடந்தன.
  • பூரணச் சரணாகதியை 3 வகைகளாக உருவகப்படுத்தலாம். அக்கருத்தையும், அதைப் பிரதிபலிக்கும் செயலையும் கீழே குறிப்பிடுகிறேன். 
  1. “உன் திருவுள்ளமே நிறைவேற வேண்டும்; என் விருப்பமன்று”.
    • சாஷ்டாங்க நமஸ்காரம்.
  2. “நீ நினைத்தபடி மட்டுமே நிகழட்டும், நீ நினைத்தபடி மட்டுமே நிகழட்டும்”.
    • புத்தகத்தைப் பிரிப்பதைப் போல் தலையிலிருந்து கால் வரை உன்னைப் பிளந்து இறைவன் முன் வை.
  3. “யுகாந்தர காலத்திற்கும் உனக்கே நான் உரியவன்”.
    • அவன் மடியில் தவழும் குழவியாக உன்னைப் பாவிக்க வேண்டும். 

இவற்றுள் எந்த ஒன்றையாவது முறையாகச் செய்தால் அகந்தை கரையும்.

  • பூமாதேவிக்கு நேரம் வந்துவிட்டது.
  • சத்தியஜீவியத்தைப் பெற்றவர்களுக்கே பூமியின் மீது பொழியும் சத்தியஜீவியத்தை உணர முடியும்.
  • ஒவ்வொரு நிமிஷமும் பிரபஞ்சம் புதியதாய்ச் சிருஷ்டிக்கப் படுகிறது.
  • தானும் புவியில் துன்பத்தை அனுபவிக்க ஒத்துக்கொண்டால் தான், மனிதன் இறைவனைப் புவியில் அவதாரமெடுக்கச் சம்மதிப்பான்.
  • தனக்குச் சேவை செய்யச் சம்மதிக்கும் உயர்ந்த ஜீவன்களை மட்டுமே மனிதன் உலகில் வாழ அனுமதிப்பான்.
  • மதக் கோட்பாடுகளையும், ஆன்மீகக் கருத்துகளையும் கலந்து குழப்புதல் கூடாது. கடந்த காலத்தைச் சேர்ந்தது மதம். எதிர் காலத்திற்குரியது ஆன்மீகம்.
  • ஜாதகத்தின்படி சொல்வது முடிவானதன்று. நட்சத்திரங்கள் நம் வாழ்வை நிர்ணயிப்பதில்லை. இறைவன் மீது நம்பிக்கை இல்லாதவரே ஜாதகத்தை நம்பிச் சஞ்சலமடைகிறார்கள். யோகிகளால் மட்டுமே எதிர் காலத்தை நிர்ணயமாகச் சொல்ல முடியும்.
  • ஓம் இறைவனின் கையெழுத்து (signature).
  • யோகத்தை மேற்கொண்டவர்க்கு ஜாதகம் பலிக்காது. யோக சித்தி, நட்சத்திரங்கள், கிரஹங்களைவிடச் சக்தி வாய்ந்தது.
  • எண்களுக்கு அன்னை கொடுத்த அர்த்தம்.

1
பிரம்மம்
ஆதி.
2
சிருஷ்டிக்க எடுத்த முடிவு
சிருஷ்டியின் ஆரம்பம்.
3
சிருஷ்டியின் ஆரம்பம்
சச்சிதானந்தம்.
4
படைப்பான பூவுலகம்
படைப்பான பூவுலகம்.
5
சக்தி
சக்தி.
6
சிருஷ்டி
புதிய சிருஷ்டி.
7
சித்தி
சித்தி.
8
சூட்சும சக்தி
உள்ளும், புறமும் உள்ள எதிரிகளினின்று பாதுகாப்பு.
9
அசையாமல் நின்று
பூர்த்தி செய்யும் திறன்
புதிய ஜனனம்.
10
சொல்வன்மை
சிறப்பு.
11
முன்னேற்றம்
முன்னேற்றம்.
12
படைப்பு சிறந்து
நிலைபெறுதல்
ஆன்மீக, லௌகீக முன்னேற்றம்.
திருவுருமாற்றம்.

மேற்கண்ட இரு முறைகளிலும் அன்னை 1 முதல் 12 வரை எண்களை விவரித்துள்ளார். 

  • கைரேகை சாஸ்திரம் மிகவும் நல்ல சாஸ்திரம். ரேகை பார்ப்பவரின் திறமையே அதன் சிறப்பை நிர்ணயிக்கும்.
  • ஓர் இலட்சியத்தை நிலைநிறுத்த வன்முறை பயன்படாது. அநியாயத்தால் நியாயத்தை நிலைநிறுத்த முடியாது.
  • அசைக்க முடியாத நம்பிக்கை அருளில் இருந்தால், அதிகபட்சப் பாதுகாப்புண்டு.
  • தன்னலமற்ற செல்வம்: ஏராளமாகச் செல்வத்தைப் பெறுபவன், வரும்பொழுதே அதைக் கொடுத்துவிட்டால் அது தன்னலமற்ற செல்வமாகும்.
  • கீழ்ப்படியக் கற்றுக்கொண்டவன் ஆளும் திறமையுடையவன்.
  • உனக்கு நல்லது செய்பவர்களைக் கண்டு முகம் சுளிக்காமல் இருக்க உன்னதமான சுபாவம் வேண்டும்.
  • விஞ்ஞானமும், ஆன்மீகமும் தேடுவது ஒன்றே. இருவரும் இறைவனையே தேடுகிறார்கள். ஆன்மீகம் இறைவனை அறியும்; விஞ்ஞானம் அறியாது.
  • பொன்னொளி: இனி பிப்ரவரி 29 இறைவனின் திருநாளாகும்.
  • கொஞ்ச நாளாகப் பிறக்கும் குழந்தைகள் - குறிப்பாக அன்னை பக்தரிடையே - விசேஷமான குழந்தைகளாக இருக்கின்றன.
  • பிறப்பிலிருந்து இறப்புவரை வாழ்வு ஆபத்து நிறைந்தது. தைரியசாலி பயமின்றி வாழ்வைக் கடக்கின்றான். புத்திசாலிகள் முன்ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். பயப்பட்டவர்கள் பார்த்ததை எல்லாம் நினைத்துப் பயப்படுகிறார்கள். முடிவாக இறைவன் திருவுள்ளமே அனைவர் வாழ்விலும் பூர்த்தியாகிறது.
  • அழுபவனை நிறுத்துவது எப்படி?
  • உண்மையான, ஆழ்ந்த அன்பைச் செலுத்து; அழுவதைத் தடுக்க முயலாதே.
  • பொய்யை அறிவு விலக்குவதைப் போல், நோயை உடல் விலக்கி விரட்ட வேண்டும்.
  • ஆழ்ந்து உன்னுள் புதைந்துள்ள சாந்தியைக் கண்டுபிடி. அதை உடலின் அணுக்களுக்குள்ளும் புகுத்து. சாந்தி வந்தால் உடல் நலமும் வரும்.
  • பேசாதே; செயல்படு.
  • உலகுக்கு அறிவிக்காதே; பூர்த்தி செய்.
  • ஆனந்தமயமான அற்புத உலகம் உன் வாயிலில் உன் அழைப்புக்காகக் காத்திருக்கின்றது.
  • பழமையை விட்டொழித்தாலன்றி, புது உலகத்தை அமைப்பது முடியாது.
  • காலையும், மாலையும் செய்யும் பிரார்த்தனை:
    பிரபோ, உனக்கே உரியவனாகும் தகுதியை நான் விழைகிறேன். என்னை உன் இலட்சியக் குழந்தையாக மாற்றிவிடு.
  • சரியான நேரத்தில், சரியான காரியத்தை, சரியான முறையில் செய்ய நாம் மனத்தால் சஞ்சலப்படாமலிருக்க வேண்டும்.
  • “இனி நான் அதைச் செய்யமாட்டேன்” என்று சபதம் செய்து, அதை நிறைவேற்றுபவருடைய மன்னிப்பை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.
  • உண்மையாக ஒருவன் மனிதன் என்ற தகுதியைப் பெறச் செய்வன இரண்டு: அகத் தூய்மை, புறத் தூய்மை.
  • சக்தியை விரயம் செய்யும்பொழுதுதான், மனிதனுக்கு வாழ்வின் சிறப்பு விளங்குவதாக நினைக்கின்றான்.
  • காலையில் எழுந்திருக்கும்போதே களைப்பாயிருந்தால், உன் ஜீவன் தமோ குணத்தால் - சோம்பேறித்தனம் - நிரம்பியது எனலாம்.
  • பகுத்தறிவுவாதிக்கு அன்னை சொல்லிது: “என்னைக் குறை கூற உனக்கு உரிமையில்லை. ஏனெனில் உன் அபிப்பிராயப்படி நீ குறை காண்கிறாய். நான் சொல்வதெல்லாம் கற்பனை என்றாலும், உன் கற்பனையை ஏற்றுக்கொள்வதைவிட என் கற்பனையையே ஏற்றுக்கொள்ள நான் விரும்புகிறேன்”.
  • தேவையான வலிமையை உன்னுள்ளே கண்டுபிடித்துக்கொள்.
  • பால்கனி தரிசனத்தில் அன்னை தோன்றியபொழுது (ஆகஸ்ட் 15) பக்தர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பிரார்த்தனை எழுந்தது. நாட்டின் நிலை சரியில்லை என்ற எண்ணம் அலையலையாகக் கிளம்பியது.
    “இது ஸ்ரீ அரவிந்தர் தினமாயிற்றே; என்னுடைய நாளன்றே” என அன்னை நினைத்து, தம்முன் ஸ்ரீ அரவிந்தரை நிறுத்தினார். அவர், “இறைவனுக்கு, தாம் என்ன செய்கிறார் என்பது தெரியும்” என்றார். அன்னை அதைக் கேட்டு புன்முறுவல் பூத்தார்.
    சாந்தி மழையாகப் பொழிந்தது; அலைகள் அடங்கின.



book | by Dr. Radut