Skip to Content

11. வாழ்வின் பொது உண்மைகள் – I

மனத்தையும், ஜடத்தையும் விலக்கினால் மீதியுள்ளவை அனைத்தும் வாழ்வு (life) என்ற தலைப்பில் வரும். நாம் அறிந்தது குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு, உலக வாழ்வு ஆகும். குடும்பம் சமூகத்திலிருந்து ஓரளவு மாறுபடுவதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். அதே போல் சமூக வாழ்வு உலக வாழ்வில் ஒரு பகுதி என்பதும் தெளிவு. சமூகம் என்பது நாகரீகமடைந்த மனிதனை மட்டும் சொல்கிறது. அதைத் தாண்டிய மனிதர் ஓரளவும், மற்ற ஜீவராசிகள் ஏராளமாகவும் இருக்கிறார்கள். வாழ்வு எனப்படுவதன் பகுதிகள் இவை. மனிதன் ஏற்படுவதன் முன் ஏற்பட்டது வாழ்வு. வாழ்வின் உண்மைகள் என்று நான் குறிப்பிடுவது எல்லா நாட்டிற்கும் பொருந்தும்; எல்லா காலத்திற்கும் பொது. ஒரு நாட்டுச் சட்டம் அடுத்த நாட்டில் செல்லாது. ஓர் ஊர்ப் பழக்கம் அடுத்த ஊருக்குப் பொருந்தாது. ஆனால் உயிருள்ள அனைத்திற்கும் பசியுண்டு, உறக்கம் உண்டு, மரணம் உண்டு, வலியுண்டு. அதே போல் வாழ்வின் முழுமைக்கும் பொருத்தமான உண்மைகளைக் கீழே தருகிறேன். ஆகர்ஷண சக்தி பிரபஞ்சத்திற்குப் பொது.

அன்னை வாழ்வை ஏற்று, யோகம் செய்தவர்கள்; வாழ்வைப் புறக்கணிக்கும் யோகத்தைப் புறக்கணித்தவர்கள்; வாழ்வை ஏற்று, அதைத் தெய்வீக வாழ்வாகத் திருவுருமாற்றம் செய்ய முனைந்தவர்கள். எனவே வாழ்வின் அம்சங்களையும், குணங்களையும், தன் சட்டங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டால், அன்னையை அதிகமாகப் புரிந்துகொள்ளலாம். இவை ஆன்மீகச் சட்டங்களில்லை; மனிதன் வகுத்தவையல்ல; சர்க்கார் ஏற்படுத்தியவை அல்ல. உதாரணமாக, பயிற்சியால் மனிதன் எட்ட முடியாத நிலையில்லை என்பது மனிதனுக்கும், நாய்க்கும், கிளிக்கும் பொருந்துவதோடு, தாவரங்களுக்கும் பொருந்தும். அவை போன்றவற்றை எழுதி, அவற்றில் விளக்கம் தேவைப்பட்டவைகளுக்கு மட்டும் விளக்கம் தருகிறேன். 

  1. எந்த மனிதனையும் பயிற்சி அவன் உள்ள சூழ்நிலையின் உச்சக்கட்டத்திற்குக் கொண்டு போகும்.
    இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு 100 ஆண்டுகட்கு முன் பெர்னாட்ஷா ஒரு நாடகம் எழுதியிருக்கின்றார். அதை “ஸ்ரீ அரவிந்த அன்னை” ஆகஸ்ட் 91 இதழில் விமரிசித்து நீண்ட கட்டுரை எழுதியிருக்கின்றேன்.
     
  2. பிறப்பாலும், வளர்ப்பாலும் கிடைக்காத மனிதத் தன்மை, பின்னர் கிடைக்காது.
    மனிதக் குழந்தையாகப் பிறந்தாலும் காட்டிலேயே வளர்ந்தால், மிருகம் போலவே வாழ்கிறான் என்பதைச் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி காட்டுகிறது. காட்டில் காணாமற்போன குழந்தை முட்டி போட்டு நடப்பதையும், பேச முடியாமல் ஊளையிடுவதையும் கண்டார்கள். வளர்த்தால், நாம் வளர்ப்பது போல் குழந்தை வளரும். நம் குழந்தைகளைப் பற்றி நாம் சொல்லும் குறை, நம்மையே சொல்லிக்கொள்வதாகும். எப்படி அன்பாக வளர்த்தாலும், பிறப்பில் அன்பில்லாத குழந்தைக்கு அது வாராது. புத்திசாலித்தனம், உடல் அமைப்புப் போல அன்பும், மனிதத் தன்மையும் பிறப்பில் பெற்றோர் கொடுப்பது. அது ஒரு வரையறையை ஏற்படுத்திவிடும். அது போக, இருப்பதை நாம் பேணி வளர்க்க வேண்டும். இவை இரண்டுமே ஒருவரின் மனிதத் தன்மையை நிர்ணயிக்கும்.
     
  3. அவசரமாகச் செயல்படுவதை நாம், ஆர்வமாகச் செயல்படுவதாக அறிகிறோம்.
     
  4. சமூகம் நம்மை இலட்சிய வாழ்வுக்குத் தயார் செய்வதில்லை. எப்படியாவது பிழைக்கக் கற்றுக் கொடுக்கின்றது.
     
  5. நம்முடைய ஆழ்ந்த உணர்வை நாம், தெய்வம் என உணர்கின்றோம்.
    தெய்வம் என்பது வானுலகில் உறைவது என்று நாம் அறிவோம். நம் ஜீவாத்மாவிலும் உள்ளது தெய்வம் என நாம் அறிகிறோம். ஆனால், நடைமுறையில் மனிதன் வணங்குவது பல தெய்வங்களையே. மனித மனநிலைகள் பல்வேறாகப் பிரிந்திருப்பதால், ஆதி நாளில் மனிதனுக்கு உள்ள எல்லா நிலைகளுக்கும் தெய்வங்களை உருவாக்கியுள்ளனர். இதற்கு ஒரு பொதுப்படையான அஸ்திவாரம் உண்டு. இடத்திற்குச் சக்தியுண்டு, செயலுக்குச் சக்தியுண்டு, ஸ்தாபனத்திற்குச் சக்தியுண்டு என்பதே அவ்வுண்மை. ஓரிடத்தில் ஏராளமான மரங்கள் வளர்ந்து, நெடுநாள் அது காடாக இருந்தால், காட்டுக்குத் தனிச் சக்தி ஏற்படுகிறது. அதிக நாள் கழித்து அந்தச் சக்தி உருவம் பெற்று, உயிர் பெற்று தெய்வமாகிறது. ‘காட்டில் மோகினிப் பிசாசு’ இருக்கின்றது என்று வழங்கும் சொல்லில் உள்ள கரு இது. ஜல தாரைகளுக்கும் இதே தத்துவம் உண்டு. அங்கும் ஜீவனுள்ள சக்திகள் உலவுகின்றன. ஆங்கிலத்தில் அவற்றை nymph என்றும், காட்டில் உள்ளவற்றை elf என்றும், அவற்றுள் நல்லதை மட்டும் செய்யக் கூடியவற்றை fairy என்றும் கூறுவர். குட்டிச் சாத்தான், மோகினி, கொள்ளிவாய்ப் பிசாசு போன்றவைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். கிராமம் சேர்ந்து வாழுமிடம் என்பதால், அங்கு கிராம தேவதைகளுண்டு. முனியன், வீரன், ஐயனார் என்று அழைக்கப்படுபவை அவை.

    ஜடம், உணர்ச்சி, அறிவு, தவம், யோகம், தெய்வம் என்று படிப்படியாக வாழ்வு அமைந்துள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் உரிய தெய்வங்கள் பல. சிவன், விஷ்ணு ஆகியவர்கள் தெய்வ லோகத்திற்கு உரியவர்கள் என்பதால், அவர்கள் பிரபலமானவர்கள். ஆயிரக்கணக்காக மற்ற தெய்வங்களிருந்தாலும், பொதுவாக அவர்களுக்குப் பெயர் இருப்பதில்லை. வழிபாட்டுக்குரிய தெய்வங்களுக்கு மட்டும் பெயர் உண்டு. மழை அத்தியாவசியமானது என்பதால், மாரியைக் கொடுக்கும் அம்மன் ஒன்றுண்டு. மாரியம்மன் கோவில் இல்லாத ஊரில்லை. குடும்பத்திற்கு ஒரு தெய்வம் ஏற்பட்டு, அதைக் குலதெய்வமாக வழிபடுகிறோம். சிவன், விஷ்ணு ஆகியவர்கள் மனத்தின் உயர்வுக்குரிய தெய்வங்கள்; மோகினி போன்றவை ஜடத்திற்குரிய தெய்வங்கள். ‘நமக்கில்லாத சக்தியை உடையவர்கள்’ என்ற பொருளில் தெய்வம் என்கிறோம். Vital beings உணர்ச்சிக்குரிய தெய்வங்களே பிரபலமானவை. சிவன், விஷ்ணு கோயில்களைவிடப் பிரபலமான சிறிய கோவில்கள் உண்டு.

    Vital beings உணர்ச்சிக்குரிய தெய்வங்களுள் நல்ல தெய்வங்களுண்டு; கெட்ட தேவதைகளும் உண்டு; துஷ்ட தேவதைகளும் உண்டு. இந்தத் தேவதைகள் ஆன்மீகப் பக்குவம் உள்ளவர்களை நாடி, ஆக்கிரமித்துக்கொண்டு சித்து விளையாடுவது உண்டு. அவை பிரபலமானால், அவர்களைத் தெய்வங்கள் என்றும், மகான்களென்றும் உலகம் கருதும். ஆசாரமான பரம்பரையில் வந்தவர்கள் சித்து விளையாடுமிடங்களைத் தெய்வமில்லாத இடம் என்று புறக்கணிப்பார்கள். இவை பொதுவான விஷயங்கள்.

    நாம் நம் குடும்ப வழிபாட்டுப் பழக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். நம் குடும்ப மதத்தை ஏற்றுக்கொள்கிறோம். நாமாகச் சொந்தமாகப் பட்டம் பெறுவதைப் போல் பாஷையைத் தெரிந்தெடுப்பதில்லை; மதத்தைத் தெரிந்தெடுப்பதில்லை; இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

    நம் மனத்தினுள் உள்ள ஆன்மாவால்தான் தெய்வத்தை உணர முடியும். ஆன்ம விழிப்பு யாரோ ஒருவருக்குண்டு. எனவே நாம் பிறந்து, வளர்ந்த சூழ்நிலையிலுள்ள வழிபாடுகளையும், தெய்வங்களையும் ஏற்றுக்கொள்வதே பொதுவான பழக்கம்.

    ஆன்மா விழிப்பாக இல்லாவிட்டால், அனைவருக்கும் உணர்வு விழிப்பாக இருக்கிறது. ஆழ்ந்த உணர்வுள்ளவர்கள் தங்கள் உள்ளம் நிரம்பும் இடங்களில் தெய்வத்தைக் காண்கிறார்கள். உள்ளத்தை நிரப்பும் பெரியவர்களை மகான்களாக ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த ‘மகான்கள்’ உண்மையானவருக்கு மகான்களாகவே அமைவார்கள். மற்றவர்களுக்கு, மற்ற சிறு தேவதைகள் தெய்வங்களாக அமையும். நாம் ஏற்றுக்கொண்டது தெய்வமானால், அங்கு ஆழ்ந்த சாந்தியோ அல்லது ஆனந்தமோ இருக்கும்.

    தன் உள்ளம் உணர்வால் நிரம்பும் நிலையை மனிதன் என்றும் தெய்வமாகக் கருதுகிறான். அது உண்மையாகவுமிருக்கும்; பொய்யாகவும் இருக்கும்.
     
  6. இதுவரை தான் அறியாததை மனிதன் ‘அற்புதம்’ என்று ஏற்றுக் கொள்கிறான்.
     
  7. மனித வாழ்வு புறச் சூழ்நிலையாலும், வெளியிலிருந்து வரும் சக்திகளாலும் ஆளப்படுகிறது.
     
  8. ஒருவர் வாழ்வில் நடந்த அனைத்து நல்லவைகட்கும் உற்பத்தி ஸ்தானமாக ஓரிடம் மட்டும் அமையும். அது ஒரு நபராகவோ, ஒரு சந்தர்ப்பமாகவோ, ஒரு சுபாவமாகவோ இருக்கும்.
     
  9. அதே போல் ஒருவருக்கு ஏற்பட்ட அனைத்துத் துர்அதிர்ஷ்டங்களுக்கும் உறைவிடமாக ஒன்றே அமையும்.
     
  10. வாழ்வு பல நிலைகளில் அமைந்துள்ளது. அடுக்கடுக்காக அமைந்துள்ள அந்தப் பல நிலைகள் வாழ்வு செயல்பட அவசியம்.
     
  11. அனைவரும் ஏற்றுக்கொள்வதை உலகம் பகுத்தறிவு என்கிறது.
    பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்வது பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இருக்கும். உலகம் தட்டையானது என்று அனைவரும் ஏற்றுக்கொண்ட காலம் உண்டு. அனைவரும் ஏற்றுக் கொண்டதால் அது உண்மையாகாது. இன்றும் அது போன்ற பல உண்டு.
    அனைவரும் ஏற்றுக்கொள்வதால் மட்டுமே ஒரு விஷயம் உண்மையாகிவிடாது, பகுத்தறிவாகிவிடாது என்று நாம் தெளிவு பெற வேண்டும்.
     
  12. ஒரு ஜன்மத்தில் ஒரு மனிதன் கற்றுக்கொள்வது ஒரு பாடம். அடுத்த பாடம் கற்றுக்கொள்ள அடுத்த ஜன்மம் எடுக்க வேண்டும்.
     
  13. தேவைகளின் பிடியிலிருந்து விடுபட்ட மனிதன், முதல் காரியமாகத் தன் தாழ்ந்த ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறான்.
     
  14. குறையே வாழ்வின் அஸ்திவாரம். நிறைவு அஸ்திவாரமில்லை.
    நம் வாழ்வில் குறை என்றுணர்வன கண் பார்வையில்லை, வருமானமில்லை, புத்தியில்லை என்பன போன்றவை. வாழ்வு வளர்வது; வளர வேண்டியது; வளர்ச்சியில்லை என்றால் வாழ்வு, சாவாக மாறிவிடும். நிறைவு, முடிவு, குறைவு, ஆரம்பம் என்றால் இக்கூற்று விளங்கும். வாழை குலை தள்ளும்பொழுது நிறைகிறது. நிறைவு வந்தவுடன் வாழை மரம் செத்துவிடுகிறது. அதனால் நிறைவு தவறு ஆகாது. ஒரு கட்டடம் முடிந்த பின், மாடியில் இன்னும் ஓர் அறை கட்ட வேண்டும் என்று எண்ணமிருந்தால், அதற்குரியவற்றில் கற்களை அரைகுறையாக விட்டு வைப்பார்கள். அது பூர்த்தியான அழகான வீட்டிற்கு திருஷ்டிப் பரிகாரமாக அமையும். அப்படி விட்டு வைப்பதால்தான் மேலும் ஒன்று எளிதில் கட்ட முடியும். குறையாக, கண் உறுத்தலாகத் தோன்றுவது நிறைவின் ஆரம்பம். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், குறை என்பது குறையன்று, ஆரம்பம்; அத்துடன், வாழ்வின் அஸ்திவாரமும் ஆகும் என்பது விளங்கும்.

    தத்துவரீதியாகப் பார்த்தால், எல்லாக் குறைகளுக்கும் இந்த விளக்கம் பொருந்தும். Error is the handmaid of Truth என்று ஸ்ரீ அரவிந்தர் இதையே கூறுகிறார்.
     
  15. குருவையும், கோவிந்தனையும் ஒன்றாகக் கண்டால், முதலில் குருவுக்கு நமஸ்காரம் செய்.
    இது வைஷ்ணவப் பரம்பரையில் வந்த வழக்கு. நம்மவர் அனைவருக்கும் பொருந்தும். இதற்கு உள் அர்த்தம் ஒன்றுண்டு. உன்னால் கோவிந்தனை எட்டித் தொட இயலாது. குருவை நாடி, வணங்கி, சேவிக்கலாம். கோவிந்தன் தெய்வமானாலும், எளிய மனிதனுக்கு எட்டாத தெய்வம். குரு மனிதனானாலும், பக்தனுக்கு எட்டும் தெய்வம். நம்மால் எட்டித் தொடக்கூடிய மனிதர், நம்மால் எட்ட முடியாத தெய்வத்தைவிட அதிகப் பலன் தருவார் என்பதே இதன் உள் அர்த்தம். இது பல மதங்களிலும் நடைமுறையில் உள்ளது.
     
  16. ஒருவருக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவம் பலர் வழிபாட்டுக்குரிய மதச் சடங்காகிறது.
    ஆழ்வார்களும், நாயன்மார்களும், ரிஷிகளும், மகான்களும் கடவுளைக் கண்டவர்கள். நாம் கடவுளைப் பற்றி அவர்கள் வாயால் கேட்டறிகிறோம். நமக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படுவது முடியாது. அந்த அனுபவம் ஏற்பட்டவர்கள் சொல்லும் உண்மையை ஏற்று, அதை வழிபாடாகக் கொள்வதே நம்மால் முடியும்.
     
  17. அணு ஜடத்தின் அஸ்திவாரம். அது போல் செயல் வாழ்வின் அடிப்படை.
     
  18. நீ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தவறாது தலையிடாவிட்டால், உன்னால் உயிரோடிருக்க முடியாது.
     
  19. நிகழ்ச்சிகளின் போக்கை நிர்ணயிப்பது மனித உள்ளத்தின் அந்தரங்க நோக்கம்.
     
  20. ஒருவனுடைய அந்தரங்க நோக்கமே ‘அவர் யார்?’ என்று நிர்ணயிக்கிறது.
     
  21. தனி மனிதனாக எப்படி வாழ முடியும் என்ற பயம் சமூகத்தை உருவாக்கியுள்ளது.
     
  22. ஒத்திட்டுப் பார்க்க ஒருவர் இல்லை என்றால், தான் பெற்ற உயர்வுக்கு மதிப்பில்லை. மறுப்பவர் எவரும் இல்லை எனில், இலட்சியவாதி இலட்சியத்தைப் பொருட்படுத்தமாட்டான்.
     
  23. எந்தச் சாதனையையும் நாடாத மனிதன் தனக்குப் பிடித்த அபிப்பிராயத்தை முழுமுதற் கருத்தாகக் கொள்கிறான்.
     
  24. மனிதன் தன் சுயநலத்தை மட்டும் பாராட்டுகிறான். தன் சுயநலத்திற்குத் துணையாகவுள்ள மனிதர்களையும், செயல்களையும், கொள்கைகளையும் ‘இலட்சியம்’ என ஏற்றுக் கொள்கிறான்.
     
  25. குரலைத் தாழ்த்திப் பேசுவது உண்மையான ஆன்மீக முன்னேற்றம்.
     
  26. எவ்வளவு உயர்ந்த கட்டுப்பாடானாலும், சுபாவத்தை ஒட்டி இருந்தால்தான் அது பலன் தரும்.
     
  27. தன் இதயத்தின் ஆசையை மனிதன் ‘ஆன்மா’ என்று பெயரிட்டு அழைக்கின்றான்.
     
  28. சூட்சுமத் திருஷ்டி, ஞான திருஷ்டியாகாது.
     
  29. இறைவனுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பின் இரகஸ்யத்தை அறிவது விவேகம்.
     
  30. ஆழ்ந்த அன்பின் கரை படிந்த உருவத்தை நாம் வெறுப்பு என அறிகிறோம்.
    இருவர் பழகுதல் உறவுக்கு அடிப்படை. குடும்பத்தில் பழகினாலும், இரத்த பாசத்தால் பிணைக்கப்பட்டிருந்தாலும், தொழில் செய்யுமிடத்தில் தினமும் பழகினாலும், பழக்கம் உறவை ஏற்படுத்துகிறது. உறவால் பற்று, பாசம், அன்பு ஏற்படுகிறது. தனக்காக ஏற்படுவது பற்று; பிறருக்காக ஏற்படுவது பாசம்; பாசத்தின் உயர்ந்த தெய்வீக உருவம் அன்பு.

    நெடுநாள் ஒரே வீட்டில் குடியிருந்தவர்கள் பிரியும்பொழுது மனம் வேதனைப்படுகிறது. பிரிந்தபின் வேறு உறவுகள் ஏற்படுகின்றன. உயிருக்குயிராக 6, 7 ஆண்டு இருந்தவர்கள் நினைவு இன்று வருவதில்லை; மீண்டும் பார்த்தாலும் ஆர்வம் எழுவதில்லை என்ற உறவுகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. இங்கு உண்மையில் உறவே ஏற்படவில்லை. பழக்கம் இருந்திருக்கின்றது. பழக்கம் போன பின் உறவும் போய்விட்டது. Out of sight, out of mind தூரப் போனால் மறந்துவிடுகிறது என்று சொல்கிறது ஆங்கிலப் பழமொழி.

    இலட்சிய நட்பை விவரித்து பிளேட்டோ, ‘பிரிவால் துன்பம் ஏற்பட்டால், அது உயர்ந்தது’ என்கிறார். அதுவும் ‘மற்றவரால் எந்தப் பலனும் இல்லாத உறவானால், அது பிரியும்பொழுது துன்பம் கொடுத்தால், அதுவே இலட்சிய உறவு’ என்கிறார்.

    அன்பு தெய்வீகமானது. பெற்றோருக்குக் குழந்தைகள் மீதுள்ளது பற்று; இரத்தத்தால் ஏற்பட்டது. குடும்பத்திலும், நட்பிலும் இருப்பது பாசம். பற்று உடலில் உற்பத்தியானது; பாசம் உணர்வால் ஏற்பட்டது. அன்பு ஆன்மாவில் எழுகிறது. அருகில் இருக்கும்பொழுது ஊற்றாக எழும். இனிமை இதன் குணம். பிரிவால் துன்பம் தாராதது. ஒரு குறிப்பிட்டவருக்கு மட்டும் செல்வது பற்றும், பாசமும். அன்பு அனைவரையும் நாடும்.

    நாம் நடைமுறையில் பாசத்தை அன்பாக நினைக்கின்றோம். பாசத்தை அடுத்தவர் ஏற்றுக்கொண்டால் மனம் நிறைகிறது; ஏற்றுக் கொள்ளாவிட்டால் கோபம் வருகிறது. பாசத்தில் குறை ஏற்பட்டால் மனம் கொதிக்கிறது. பாசம், வெறுப்பாக மாறுகிறது. யார் மீது நமக்கு வெறுப்பிருக்கின்றதோ, அவர் மீது உண்மையில் நமக்குப் பாசம் அதிகம். பாசம் இல்லாத இடத்தில் குறை ஏற்பட்டால், அந்த உறவு மடிந்துவிடும்.
     
  31. நாத்திகனுடைய மனத்தில் இறைவனிருக்கின்றான். ஆஸ்திகனுடைய வேஷம் அவனியிலில்லை.

    பக்தி உண்மையானது. வழிபாடு பக்தியை வெளிப்படுத்தும் முறை. இது உண்மையாகவும் இருக்கலாம்; போலியாகவுமிருக்கலாம். நாத்திகன் வழிபாட்டின் போலித்தனத்தை வெறுத்து ஒதுக்குகிறான். அவன் மனத்தில் உண்மையுள்ளது. போலி வழிபாட்டை எதிர்க்க வந்த நாத்திகன், வழிபாட்டையே எதிர்க்கின்றான். முடிவாக, இறைவனையே நம்ப மறுக்கின்றான்.

    ஆஸ்திகன் உண்மையாகவும் இருக்கலாம்; போலியாகவும் இருக்கலாம். ஏனெனில், அவன் வழிபாடு போலி வேஷத்தை மூடி மறைக்கும்.

    நாத்திகன் போலியாக இருக்க முடியாது. ஏனெனில் அவனிடம் வழிபாடில்லை. ஆழ்ந்த நம்பிக்கை தெய்வத்தின் பேரில் இருப்பதால் தான் அவனிடம் அது வெறுப்பாக மாறி, மறுப்பாக வெளிவருகிறது. தெய்வத்தின் மீது நம்பிக்கையே இல்லாதவனுக்கு மறுப்பு எழுப்பும் வேகம் இருக்காது.
     
  32. வாழ்வில் எந்த அம்சம் பூரணம் எய்தி சிறப்படைந்தாலும், அங்குத் தெய்வம் பிறக்கும். கற்புடைய மாதரின் தெய்வீக சக்தி, அவர்களுடைய கற்பு சிறப்படைவதால் ஏற்படுகிறது.
     
  33. பொதுவாக மனிதனைச் சோம்பேறி என்கிறார் அன்னை.
    வேலை செய்யப் பிரியப்படாதவனை நாம் சோம்பேறி என்கிறோம். அன்னை அதைச் சொல்லவில்லை. உதாரணத்திற்கு, இரசாயன உரமிடும் விவசாயத்தைச் சொல்கிறார். உரமில்லாமல் பயிரிட்டால், ஏக்கரில் 15 மூட்டை நெல் கிடைக்கும். இரசாயன உரம் 30 மூட்டை பெற்றுத் தரும். இரசாயன உரமிடாமல் மண் வளத்தைக் காத்து, எருவிட்டு, மண்ணில் தானே மண் சத்தி உண்டாகி, அதில் மண்புழு ஏற்பட்டால், அதே 30 மூட்டை நெல் எடுக்கலாம். உரத்தை வாங்கித் தூவுவது எளிது. மண்ணைப் பாதுகாத்து, அதன் சத்தை வளர்ப்பது கடினம். இந்தக் கடின வேலையைச் செய்ய எவரும் முன் வரமாட்டார். அதை சோம்பேறித்தனம் என்கிறார் அன்னை.

    ஒரு புது வேலை என்றால், ‘எப்படி நம் சிரமத்தைக் குறைக்கிறது?’ என்று நாம் கருதுகிறோம். உரலில் மாவு அரைப்பதை விட கிரைண்டரில் அரைப்பது எளிது. எளிதானவற்றை மனம் நாடுகிறது. எளிதானவற்றை நாடும் மனம் சோம்பேறியானது.

    பட்டம் படித்தால் சுலபமாக வேலை கிடைக்கும். பட்டம் பெறாமல் திறமை பெற வேண்டுமானால், அது சிரமம். பட்டத்தை ஒதுக்கி, படிப்பை நாட எவரும் விரும்பமாட்டார்கள். இந்த மனப்பான்மையை அன்னை சோம்பேறித்தனம் என்கிறார்.
     
  34. வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ஏற்படும்பொழுது நாட்டில் மறைந்து இருந்த வலிமை, ஒற்றுமை, தேசபக்தி வெளிப்படும்.
     
  35. உணர்வுக்கு உண்மையானவற்றைச் ‘சத்தியம்’ என மனம் ஏற்றுக்கொள்கிறது.
    சத்தியம் என்பது ஆன்மாவுக்குள்ள உண்மை. மனத்தால் சத்தியத்தை தெளிவாக அறிய முடியாது. உணர்வுக்குச் சத்தியத்தை அறியும் திறன் அதைவிடக் குறைவு. உடலால் சத்தியத்தை அறிய முடியாது.

    கோர்ட்டில் வக்கீல் அடித்துப் பேசினால், மேஜையை தட்டிப் பேசினால், கட்சிக்காரருக்குத் திருப்தி. சத்தம் செல்லுபடியாகாது, சட்டமே செல்லும் என்பதை மறந்து கட்சிக்காரர் திருப்தியடைகிறார். வக்கீலுக்கே திருப்தி ஏற்படுகிறது. தீர்ப்பு வரும்பொழுது உண்மை தெரியும்.
     
  36. சத்தம் உணர்வுக்குரிய உண்மை. அதையே சத்தியம் என்று நினைப்பது இயல்பு. தவறு செய்யாதவனுக்கு முன்னேற்றமில்லை.
    இலாபத்தைத் தேடுபவனுக்கு இலாபம் வரும்; நஷ்டமும் வரும். ‘நஷ்டம் ஒருபொழுதும் கூடாது’ என்பவன் தொழில் செய்ய முடியாது; சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும். அவனுக்கு நஷ்டம் கிடையாது. சம்பளத்திற்கு வேலை செய்பவனுக்குச் செல்வம் சேராது.
     
  37. எந்த வயதிலும் உடல் இளமை பெறும். உடற்பயிற்சியாலும் அதைப் பெறலாம்.
    வயதானால் உடல் தளர்கிறது. தளர்ந்த உடல் மீண்டும் இளமை பெறாது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். உடற்பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு, இது உண்மையில்லை என்று தெரியும். 78 வயதில் ஓர் அமெரிக்கப் பெண் விமானத்திலிருந்து குதிக்கும் பயிற்சியை (sky-diving) மேற்கொண்டார். அதை மிகவும் ரசித்துப் பயின்றார். ‘என் வாழ்நாளிலேயே நான் மிகவும் உற்சாகமாக இருப்பது இப்பொழுதுதான்’ என்றார். வயதானால் உடல் தளரும் என்பது உண்மை. இந்த உண்மையை நாம் 50ஆம் வயதிலேயே ஏற்றுக் கொள்கிறோம். ஏற்றுக்கொள்வதால் தளர்ச்சி ஏற்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் 87, 88 வயதில் திடகாத்திரமாக இருக்கிறார்கள். பார்வைக்கு 55 வயது போல் காண்கிறார்கள். 93 வயதில் தாமே கார் ஓட்டுகிறார்கள். இவையெல்லாம் உடலைப் பற்றிய உண்மைகள்.
     
  38. புறத் தோற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்வதை நாம் விஸ்வாசம் என்கிறோம்.
    செல்வம் இழந்தபொழுது, கட்சி தோற்றபொழுது நம்மைச் சுற்றி உள்ளவர்களுடைய விஸ்வாசம் புரியும். தொழிலாளர்களை ஒன்று சேர்த்து, தலைமை தாங்கி, வேலை நிறுத்தம் செய்யும் தலைவன், வேலை நிறுத்தம் தோற்றது என்றவுடன், மன்னிப்புக் கடிதம் கொடுப்பவரில் முதல்வனாக இருப்பதுண்டு. செல்வர்களுடன் நெருங்கியவர்களில் ஒருவரை அவர் அதிகமாக நம்புவார். ‘நிலைமை எப்படி மாறினாலும் இவர் ஒருவர்தாம் என்னுடனிருப்பார்’ என்று யாரை நம்புகிறாரோ அவர்தாம் முதலில் விலகிப் போவார். இதை நாம் அடிக்கடி பார்ப்பதுண்டு. புறத் தோற்றத்தை நாம் உண்மை என்று ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் தவறு இது. கீழ்ப்படிந்து நடப்பதை, விஸ்வாசமாக நாம் புரிந்துகொள்வதால் இத்தவறு ஏற்படுகிறது.
    • சரளமாகப் பேசுபவரைப் புத்திசாலித்தனமுடையவராகக் கருதுகிறோம்.
    • குறிப்பாக ஆங்கிலம் சரளமாக வாயிலிருந்து வந்தால், தலையில் புத்தியிருப்பதாக முடிவு செய்கிறோம்.
    • செல்வம் இருந்தால், நாணயம் இருக்கும் என்று நினைக்கின்றோம்.
    • சிறந்த பயிற்சி பெற்றவரை, அவர் பெற்றுள்ளது பயிற்சியால் என்று கருதாமல், திறமைசாலி எனக் கணிக்கின்றோம்.
    • அளவு கடந்து கீழ்ப்படிபவரை, அடக்கமானவர் என்கிறோம்.
    • உயர்ந்த ஆடையை உடுத்தியவரை, உயர்ந்தவர் என நினைக்கின்றோம்.
    • அதிகமாகப் பேசாதவரை, நல்லவர் என்பார்கள்.
    • நல்ல சிவந்த மேனியிருந்தால், முகத்தின் விகாரம் தெரியாது.

    புறத் தோற்றத்தையும், அகவுண்மையையும் பிரித்துப் பார்க்கும் திறன் தேவை.
     
  39. நாம் பேசும் கருத்துகள் நம் சொந்த எண்ணங்கள் இல்லை.
    ஆறு எங்கோ உற்பத்தியாகி, எங்கோ சங்கமம் அடைகிறது. நம்மூர் வழியாகப் போவதால் நமக்குப் பயன்படுகிறது. இதை நம்முடைய சொந்த ஆறு என்று நினைப்பதில்லை. எண்ணங்கள் பிரபஞ்சத்தில் உற்பத்தியாகி, பலர் வழியே சென்று, நம்மையும் தொடுகின்றன. நம்மை விட்டகன்று, மேலும் பலரிடம் செல்கின்றன. நாம் அவற்றை நம் சொந்த எண்ணங்கள் என்று நினைக்கின்றோம்; நம் புத்தியில் உற்பத்தியானதாகக் கருதுகிறோம். வெளியேயுள்ள காற்றை நாம் உள்ளே வாங்கி, மூச்சாக வெளியே விடுகிறோம். மூச்சு வெளியே செல்வது தெரிகிறது; உள்ளே போவது தெரிவது இல்லை. நுரையீரல் காற்றை உற்பத்தி செய்வதில்லை; காற்றைச் சுவாசிக்கின்றது. காற்றின் உற்பத்தி ஸ்தானம் ஆகாயம்; முடிவும் அதுவே. சிறிது நேரம் நம்முள்ளே வந்து செல்கிறது. அதே போல்தான் எண்ணம். அது நம்முள் உற்பத்தியாகவில்லை. உலகத்தில் உலவும் எண்ணம் நம்முள் சென்று, வெளிப்படும்போது நம் எண்ணமாகத் தோன்றுகிறது.
     
  40. எண்ணமும், சிந்தனையும் விளக்கத்திற்குரிய கருவிகள். அவற்றால் புரிந்துகொள்ள முடியாது; புரிந்துகொள்வது மனம்.
    வாய் சாப்பிடுகிறது. கையும், விரலும் அதற்குக் கருவிகளாக உள்ளன. அதே போல் மனம் புரிந்துகொள்கிறது. அதற்கு எண்ணமும், சிந்தனையும் கருவிகளாக அமைகின்றன. கையாலும், விரலாலும் சாப்பிட முடியாததைப் போல் எண்ணத்தால் புரிந்துகொள்ள முடியாது.
     
  41. புறத் தூய்மையைச் சமூகம் போற்றுகிறது. மனத் தூய்மையைக் குடும்பம் ஏற்றுக்கொள்கிறது. உணர்வின் உற்பத்தி ஸ்தானத்திற்குரிய தூய்மையை ஆன்மா விழைகிறது.
     
  42. நாம் புனிதம் என்றுணர்வது அனைவரும் போற்றுவது; போற்றி, ஏற்றுக்கொள்வது. பூரணமான புனிதத்தை நாம் அறிவதில்லை, நாடுவதில்லை.
     
  43. மன மாற்றம், மத மாற்றம் திடீரென ஏற்படுவதுண்டு. அந்த மாற்றங்கள் புற வாழ்வின் பகுதிகளே. உள்ளம் நிறைவு பெற்று, எழும் உணர்வால் ஏற்படும் மாற்றமே நிலையானது.
     
  44. சில சமயங்களில் கற்பனை ஜீவன் பெற்று, உண்மை நிகழ்ச்சியாய் காண்பதுண்டு. மற்ற சமயங்களில் சில உண்மை நிகழ்ச்சிகளும் ஜீவனிழந்து, களையிழந்து, கற்பனை போல் தோன்றுவதுண்டு.
     
  45. மனிதன் தனக்குத் தவிர்க்க முடியாமல் தேவைப்படுவதைத் தெய்வமாகக் கருதுவான். வாழ்க்கை எனும் அரங்கில் அதையே "பிரம்மம்" என்றும் கருதுவார்கள்.
     
  46. சமூகம் இன்று சத்தியமாக இருக்கின்றது. ஆனால் உள்ளத்தின் உண்மையே சத்தியம். சத்தியம் வாழ்வைப் பொருத்தவரை நிழல் உருவமே.
     
  47. மலர்ந்த இதயத்தின் இனிய சுமுகம் மனிதனுக்கு எட்டுவது இல்லை. அதிகாரத்திற்கும், சந்தர்ப்பத்திற்கும் அடிமைப்படுவதையே நிம்மதியான வாழ்வு என மனிதன் அறிகிறான்.
    வாழ்வின் உயர்ந்த நிலையில் சௌஜன்யமான, சுமுகமான வாழ்வு அமைகிறது. தாழ்ந்த நிலையில் சச்சரவு நிறைந்த வாழ்வு நிலவுகிறது. அறிவு, பொறுமை, பண்பு, செல்வம் குறைவான இடங்களில் சண்டையும், பூசலும் மலிந்திருக்கும். அன்பு, பொறுமை, பாசம், கல்வி, பண்பு, செல்வம் ஆகியவை நிறைந்த இடங்களில் சண்டையும், பூசலும் இருக்கா. பிறர் மகிழ்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் வாழ்வு "நிலை' என்பதால், அங்கு உள்ளம் உயர்ந்து இருக்கும். இவற்றிடையே இரண்டு நிலைகள் உள்ளன. பண்பால் அன்பு பெருகாவிட்டாலும், மன வேற்றுமையைப் பெரிதுபடுத்தக் கூடாது என்பதால் (harmony) சுமுகமாக வாழ முயன்று, வெற்றி பெறும் நிலை அது. அதிகாரத்திற்கும், சந்தர்ப்பத்திற்கும் கட்டுப்பட்டு விட்டுக் கொடுத்து (compromise) சண்டையில்லாமலிருப்பது ஒரு நிலை.

    சண்டையும், பூசலும் முதல் நிலையானால், விட்டுக் கொடுத்து வாழ்வது இரண்டாம் நிலை. சுமுகமாக வாழ்வது மூன்றாம் நிலை. உச்சக்கட்டத்தில் அன்போடு நிறைந்த பண்பான வாழ்வு அமைகிறது.

    சுமுகத்திற்கும், விட்டுக் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் அதிகம். பிறர் தேவைகளை அறிந்து, பிறர் மனநிலையைப் பாராட்டி, அவற்றை நாமே ஏற்று, அதற்காக நம் தேவைகளை மாற்றிக்கொள்வது சுமுக வாழ்வு. லேட்டாக வரும் தொழிலாளியைக் கண்டித்தால் வேலை நிறுத்தம் வரும் என்று கண்டிக்காமலிருப்பதும், ஆபீசருடைய குறையைப் பாராட்டினால் அடுத்த பிரமோஷன் கிடைக்காது என்பதால் அடங்கிப்போவதும் விட்டுக் கொடுத்துச் சச்சரவில்லாமல் வாழ்வதாகும்.
     
  48. நாமறிந்த உலக வாழ்வில் சுமுகத்தைவிட விட்டுக் கொடுக்கும் சந்தர்ப்பங்களே அதிகம். விரக்தி மட்டுமே தனக்குச் சொந்தம் என்று உணர்ந்து முயற்சியிலிருந்து விலகிய மனிதனை உலகம் விவேகி என்றழைக்கிறது.
     
  49. பெரும்பான்மைக் கருத்தால் உண்மையை அறிய முடியாது. ஒரு வியாதி என்ன என்பதை ஓட்டு எடுத்து நிர்ணயிக்க முடியாது.
    இந்த ஊரில் பள்ளிக்கூடம் வேண்டும், வேண்டாம் என்ற இரு கருத்துகள் நிலவினால், அதை ஓட்டெடுப்பால் நிர்ணயித்தால், பெரும்பான்மைக் கருத்துத் தெரியும். அதைச் செயல்படுத்தினால் ஊருக்கு நல்லது. ஆங்கில விற்பன்னர் ஒருவருக்கு இலக்கணம் சரியாக வாராது. அற்புதமாக ஆங்கிலம் பேசுவார். வகுப்பில் இலக்கணம் நடத்தும்பொழுது ஒரு சர்ச்சை வந்தால், அதை ஓட்டுக்கு விட்டு நிர்ணயிப்பார். மெஜாரிட்டி கருத்து இலக்கணத்தை எப்படி நிர்ணயிக்கும்? அது சரியாகவும் இருக்கும், தவறாகவும் இருக்கும். இம்முறை இங்கு பயன்படாது.

    பாண்டித்யம் உள்ள ஒருவரே அதை நிர்ணயிக்க முடியும். 30 பேர் மாற்றமாகச் சொன்னாலும், பாண்டித்யம் உள்ள ஒருவர் சொல்வதே சரியாகும். ஒரு வியாதியை நிர்ணயிக்க (to discover a fact), ஓரிடத்தில் என்ன நடந்தது என்று கண்டறிய, பெரும்பான்மைக் கருத்து பயன்படாது.

    சுமுகத்தை நிலைநிறுத்த உதவும் மெஜாரிட்டி கருத்து, சூட்சுமத்தைக் கண்டறிய உதவாது. வரலாற்றில் ஒரு சம்பவம் எப்படி நடந்தது என்பதை நிர்ணயிக்க (expert opinion) விஷய ஞானம் உள்ளவருடைய கருத்தே பயன்படும்.
     
  50. அளவு கடந்து தெம்பும், திறனும் இழந்துபோனால் துர்அதிர்ஷ்டம் வரும். திடீரென அவை அதிகரித்தால் அதிர்ஷ்டம் வரும். இதைச் சாதிக்கும் சாதனங்கள் வாழ்வில் அமைந்துள்ளன. அவை நாமிருக்கும் நிலையில் இல்லை. அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவது நமக்கடுத்த உயர்ந்த நிலையிலிருக்கின்றது. துர்அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவது நம் நிலைக்கு முன் நிலையிலுள்ளது.
     
  51. உணர்வின் அறிவு (ஆசையின் அறிவு) வலிமையைக் கொடுக்கின்றது. உடல் பெற்ற அறிவு பெருஞ்செல்வத்தைக் கொடுக்கும்.
    அறிவுக்குத் திறனில்லை; தெளிவுண்டு. ஆசைக்கு அறிவில்லை. அதன் உணர்ச்சி வேகமாகச் செயல்படும்; அறிவோடு செயல்படாது. வேகமாக, தீவிரமாகச் செயல்படுவதால் அதற்கு வலிமையுண்டு. ஆனால் அறிவில்லாமல் அந்த வலிமை முழுப் பயன் தாராது. நிதானமுள்ள அறிவாளியின் சொல்லைக் கேட்பவர் குறைவு. கோபக்காரனுக்குப் பயந்து அடங்குபவர் அதிகம்; கோபத்திற்கு வலிமை உண்டு. ஆனால் எல்லாச் சமயங்களிலும் செல்லாது; எல்லாச் சமயங்களிலும் பலன் தாராது. கோபக்காரனுக்கு அறிவு வந்துவிட்டால் அவன் சொல்வதை நிதானமாகச் சொல்லமாட்டான். கோபம் வேகமாக மாறும். அறிவோடு கூடியதால் அனைவரும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

    கோபம் வேகமாக மாறினால் அதற்கு வலிமையுண்டு. கோபம் தவறான உணர்வு. எந்த உணர்வுக்கும் அதற்குரிய அறிவு வந்துவிட்டால், வலிமை ஏற்படும். கடமையுணர்வை கண்மூடித்தனமாகச் செய்வதற்குப் பதில் அறிவோடு செய்தால், கடமை என்ற அறிவுக்கு இல்லாத வலிமை கடமையுணர்வுக்கு ஏற்படும்.

    பற்று, பாசம், நட்பு, பெருந்தன்மை, உதவி மனப்பான்மை, பரிதாபம், அனுதாபம், பக்தி போன்றவை நல்ல உணர்வுகள். இவற்றுக்கு அறிவு ஏற்பட்டால் நல்ல வலிமை ஏற்படும்.

    ஆசை, பேராசை, பொறாமை, துரோகம் போன்றவை தவறான உணர்வுகள். உணர்வுக்கு அறிவு வந்தால் வலிமை ஏற்படும் என்பது பொது உண்மை. தவறான உணர்வுக்கு அறிவு வந்தால் தவறான வலிமை ஏற்படும்.

    மனத்திலுள்ள அறிவுக்குக் கல்வி என்று பெயர். உடல் பெறும் அறிவுக்கு நுட்பம் என்று பெயர். நீண்ட அனுபவத்தால் இன்ஜினீயர், வக்கீல், பேச்சாளர், பேராசிரியர், எழுத்தாளர், பாடகர் போன்றவர்கள் தங்கள் அறிவின் திறத்தை உயர்த்திக்கொண்டு தொழிலின் நுட்பத்தை அறிகிறார்கள். “அவர் பெரிய பேச்சாளர், குறிப்பு இல்லாமல் பேசுவார், பேச்சு சரளமாக வரும்” என்று நாம் சொல்லும்பொழுது, முதலில் அவர் மனம் பெற்ற திறமை முதிர்ந்து உடலில் கலந்து, ஆழ்ந்து உடலுடைய அறிவாக மாறிவிட்டது என்று பொருள். கண்ணை மூடிக்கொண்டு டைப் செய்கிறார்; கை தானே படம் வரைகிறது; கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்; இவையெல்லாம் பரம்பரையாக எங்களுக்கு அத்துபடி என்பனவெல்லாம் உடல் பெற்ற அறிவைக் குறிக்கும் சொற்கள். உடல் அறிவு பெற்றவுடன் குத்தகைக்காரன் நிலத்திற்குச் சொந்தக்காரனாகிவிடுவான். இந்த அறிவின் திறன் அதிக வருமானத்தைக் கொடுப்பதுடன், அடுத்த நிலைக்கு அவனை உயர்த்தும். கூலிக்காரன் குத்தகைக்காரன் ஆவதும், தலையில் மூட்டை தூக்கிப் புடவை விற்றவர் மொத்த வியாபாரி (wholesale) ஆவதும் இப்படிப்பட்ட அறிவால். அதுவே உழைப்பின் சிறப்பு. உழைப்பு வெறும் உழைப்பானால் கூலி கிடைக்கும். அறிவோடு கூடிய உழைப்பானால் கம்பனி மேனேஜர், கம்பனி முதலாளி ஆவார்.

    அவரவர் நிலையில் பெருஞ்செல்வம் எனக் கருதும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடியது உடல் பெறும் அறிவு.
     
  52. தீய சக்திகள் மனிதனைத் தாக்கினால், அவன் தப்புவது அரிது.
     
  53. ஆனந்தம் மனிதனைத் திகைக்க வைப்பதுண்டு. சோகம் மனித சிந்தனையை வேரறுப்பதுண்டு. அது போல் சிந்தனையை இழந்த மனிதன் சிந்தனையின் ஆதிக்குச் செல்கிறான். சிந்தனையின் உற்பத்தி ஸ்தானம் சத்தியத்தை அறியும் திறன் உடையது. அந்த நேரத்தில் செய்யும் பிரார்த்தனை உடனே பலிக்கும்.
     
  54. பிரார்த்தனை பலிக்கும்பொழுது நம் எண்ணம் நிறைவு பெறுகிறது. நாம் விரும்பியது நிறைவேறியபொழுது அதை அன்னையின் சித்தம் நிறைவேறியதாகக் கொள்கிறோம்.
    அன்னையின் சித்தம் நிறைவேற வேண்டுமானால், நாம் குறிப்பிட்ட பிரார்த்தனை செய்யாமல், “உங்களிஷ்டப்படி நீங்கள் பூர்த்தி செய்வதை நான் உளமார ஏற்றுக்கொள்கிறேன்” என்று பிரார்த்திக்க வேண்டும். பரீட்சை எழுதியவன், “பாஸ் செய்ய வேண்டும்” என்றுதான் பிரார்த்திப்பான். அன்னை இஷ்டப்படி பாஸ் செய்தாலும், பெயில் ஆனாலும் நான் சந்தோஷப்படுவேன் என்று நினைக்கவும் முடியாது. அதைச் சொல்வது ஆத்ம சமர்ப்பணம். அதை மனமார ஏற்றுக் கொள்ள உயர்ந்த பக்தி வேண்டும்.
     
  55. தன் எண்ணத்தின் இரகஸ்யத்தை அறிபவன் வெற்றிக்கு உரியவன். அதே போல் உணர்வின் இரகஸ்யம், செயலின் இரகஸ்யத்தை அறிபவனுக்கு உயர்ந்த வெற்றிகளுண்டு.
    நாம் வெற்றி பெற்ற இடங்களை யோசனை செய்து பார்த்தால், பல இடங்களில் வெற்றி நம்மை அறியாது வந்திருக்கும். அதாவது நம் எண்ணத்தின் இரகஸ்யத்தை நாம் புரிந்துகொள்ளவில்லை. நாம் அறியாவிட்டாலும், தானே அது தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்து கொண்டது என்று அர்த்தம். அந்த இரகஸ்யத்தை நாம் அறிந்து இருந்தால், வாழ்வின் முடிவில் பெற்றதை ஆரம்பத்தில் பெற்று இருக்கலாம். அதுவே வெற்றிக்குரிய இரகஸ்யம். உணர்ச்சி விஷயத்தில் இது அதிகப் பலனையும், செயல் விஷயத்தில் உச்சக்கட்டப் பலனையும் கொடுக்கும்.

    பிரபலமடைந்த எழுத்தாளர், பதவிக்கு வந்த பேச்சாளர், செல்வம் பெற்ற கணக்குப்பிள்ளை, செல்வாக்குப் பெற்ற சிறிய மனிதன் ஆகியோர் “இதெல்லாம் வரும் என்று நான் மனதில் நினைத்ததே கிடையாது” என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். தம் செயலின் இரகஸ்யத்தை உணராமல் வெற்றியை கடைசியில் பெற்றவர்கள் இவர்கள்.
     
  56. வாழ்வில் சத்தியஜீவியம் அடிக்கடி செயல்படுகிறது. நம்ப முடியாத நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதும் அதுவே.
     
  57. வாழ்விலும் சத்தியஜீவியம் பின்னணியிலிருந்து செயல்படுகிறது. Instinct பிறப்புடன் வந்த உணர்வு என்பது சத்தியஜீவியம்.
     
  58. ஆசை அழிந்தவுடன் (power) திறன் வெளிப்படுகிறது.
     
  59. மனித மனத்திற்கு, இருப்பதை ஏற்கும் திறனுண்டு. ‘ஏன்’ என்ற கேள்வி பொதுவாக எழுவதில்லை. ஏன் ஆறு ஓடுகிறது, சூரியன் உதிக்கின்றான் என்ற கேள்வி சாதாரண மனிதன் மனதில் எழுவதில்லை.
     
  60. மனத்தில் அது போன்ற கேள்வி எழுந்தால், சிந்தனா சக்தி பிறந்துள்ளதென்றாகும்.
     
  61. சூட்சுமத்தில் அன்னையிடம் சிங்கம் உள்பட அனைத்தும் உண்டு. நம் அளவில் நாம் நமக்குத் தேவையானதை எல்லாம் பெறலாம்.
    ஒரு சாதகரிடம் அன்னை பேசும்பொழுது, “சிங்கம் தவிர என்னிடம் எல்லாம் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் கேள்” என்றார். அடுத்த நிமிஷம், “சிங்கமும் என்னிடம் இருக்கின்றது. என் அறையில் பல சிங்கங்கள் உள்ளன. சூட்சுமப் பார்வைக்கே அவை தெரியும். என்னைப் பார்த்து அவை குழந்தை போல் சிரிப்பதுண்டு”என்கிறார்.

    அன்னையிடம் இல்லாதன இல்லை. பெறத் தகுதியுள்ளவர் எதையும் பெறலாம். பட்டம் பெற ஒரு தகுதி வேண்டும். உள்ளூரில் கல்லூரியிருந்தால் நமக்குப் பட்டம் கிடைக்காது. பெற்ற பெருஞ் செல்வத்தைக் காப்பாற்ற ஒரு தகுதி தேவை. 30 வயதானவரும் மேலே சிந்தாமல் ஒரு டம்ளர் காபியோ, தண்ணீரோ குடிக்க முடியவில்லை என்பதைக் காணலாம். காபி குடிக்க அவருக்குத் தகுதி இல்லை. எதையும் பெற ஒரு தகுதி வேண்டும். அது உள்ளவருக்கு அப்பொருள் கிடைக்கும். அன்னை கேட்காமல் கொடுப்பார். தகுதி இருந்தால் கேட்க வேண்டிய அவசியமில்லை.
     
  62. ஏமாற்றமடைந்தவனுக்கு எதிர் கால வாழ்வுண்டு; முன்னேற்றம் உண்டு. தடம் புரண்டு செல்லும் மனிதனை வழிக்குக் கொண்டு வர ஆன்மா வகுத்த வழி ஏமாற்றம்.
     
  63. அழிவு இரு வகைப்படும். உள் மனத்தின் குழப்பம் உற்பத்தி செய்வது ஒரு வகை. புற வாழ்வின் ஒத்துழைப்பில்லாமல் ஏற்படுவது மறு வகை.
     
  64. சிருஷ்டியின் கையில் வாழ்வு ஒரு துரும்பு.
     
  65. முன்னேற்றம், வளர்ச்சி, அனுபவம், இவை தூய்மையால் வருவது போல், தூய்மையற்ற நிலைகளாலும் வரும்.
     
  66. பரோபகாரம் அகந்தையின் சாயல் உடையது.
     
  67. வலிமையுடையவனுடைய கோபம் திறனுடையது.
     
  68. வெற்றியைவிட, வெற்றிகரமான தோற்றத்தை நாடுபவர் அதிகம்.
     
  69. ஓரளவு கொடுமையை, “தவிர்க்க முடியாதது” என்று உலகம் ஏற்றுக்கொள்கிறது.
     
  70. சில்லரை விஷயங்களில் மகிழ்ந்து தன்னை இழப்பவனே மனிதன்.
     
  71. உடலும் அதன் தேவைகளுமே நிதர்சனம்.
    உடற்பயிற்சியால் உடலை எப்பொழுதும் வலிமைப்படுத்தலாம். எருவும், தண்ணீரும் கொடுத்தால் பட்டுப்போகும் நிலையிலுள்ள மரமும் துளிர்த்து, பூத்து, காய்க்கும். வறண்ட தோலும், ஒடுங்கிய முகமும், துர்நாற்றம் வீசும் உடலும் உள்ளவருக்கும் வசதி கொடுத்து, நல்ல போஷாக்குக் கொடுத்தால், வறண்ட தோல் சிவந்த மேனியாகும், ஒடுங்கிய இடங்கள் நிரம்பும், துர்நாற்றம் தூரப் போகும்.

    உடலுக்குரிய தேவைகள் மறுக்கப்பட்டால் அது வாடுகிறது. அவற்றைக் கொடுத்தால் துளிர்க்கின்றது. இது உடலுக்குரிய குணம். ‘அதிகமாகத் தேய்ந்துவிட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது. இதை ஒன்றும் செய்ய முடியாது’ என்பன போன்ற தடைகள் இல்லை.

    1965இல் இந்தியா பஞ்சத்தை எதிர்நோக்கும் நாடாக, மேற்சொன்ன வர்ணனைக்குரிய இடமாக இருந்தது. பூமிக்குப் புதிய வித்தும், விவசாயிக்குப் புதிய பயிற்சியும், விஞ்ஞானிக்குப் புதிய அந்தஸ்தும் கொடுத்தவுடன், பசுமைப்புரட்சி தோன்றியது. உணவு உற்பத்தி அபரிமிதமாகப் பெருகி, பஞ்சத்தை எதிர்நோக்கும் நாடு, பஞ்சத்தைப் போக்க எடுத்துக்காட்டாக அமைந்தது.

    மனித வாழ்வுக்கு உடல் அஸ்திவாரம். அதன் தேவைகளைப் பூர்த்தி செய்தால், மனித வாழ்வு எந்த உயர்வையும் எட்டும்.
     
  72. ஆசை வாழ்வின் இரகஸ்யம். ஊன்றிப் பார்த்தால், அவ்வாசையின் அஸ்திவாரம் தேவை, பாதுகாப்பு (security).
     
  73. புனித இலட்சியம் மனித வாழ்வுக்குப் புறம்பானது. அடுத்த ஜன்மத்திற்குரியது.
     
  74. தன் மனம் விரும்பி ஏற்றுக்கொள்வதை மனிதன் சத்தியம் என்கிறான்.
     
  75. வாழ்வின் அந்தரங்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எதையும் மனிதன் விரும்பி ஏற்றுக்கொள்வான்.
     
  76. ஜீவனை உயர்த்தும் கலைஞர்கள் சிருஷ்டிகர்த்தாக்கள். உணர்ச்சியையும், கிளர்ச்சியையும் எழுப்புகின்றவர்கள் கலையை ஜீவனற்றதாக்குபவர்கள்.
     
  77. ஜீவனின் ஆழ்ந்த பகுதிகள் கொடுமையைப் போற்றுவதால், மனம் துறவறத்தை நாடுகிறது.
     
  78. ஆதி மனிதனுடைய போராட்டம் தன் உடலையும், உயிரையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக அமைந்தது. இன்று சமூகத்தில் தன் அந்தஸ்தைக் காப்பாற்ற மனிதன் போராடுகிறான்.
     
  79. இலாபத்தைவிட மனிதன் ஆசையை அதிகமாக நாடுகிறான். எதற்காகவும் பிரார்த்தனை செய்யாதவனும், தன் அந்தரங்க ஆசைகளைப் பூர்த்தி செய்யப் பிரார்த்திக்க முன் வருவான்.
     
  80. பெண்ணின்றி ஆணில்லை என்பது இயற்கை நியதி. அவர்களிடையே நிலவும் பாசத்தின் அடிப்படை இதுவே.
     
  81. இயற்கையாக மனிதனுக்கு உயர்ந்த ஆர்வம் எழுவதில்லை. தாழ்ந்த உணர்ச்சிகளே அவனை ஆள்கின்றன.
     
  82. வதந்திகள் வளர்ந்து, காலப்போக்கில் “மரபு” என்று நிலைக்கின்றன. அவை மனிதனுடைய கற்பனையை ருசியுடன் நிரப்புகின்றன. பெரும்பாலும் அவை கற்பனையிலேயே உற்பத்தி ஆகின்றன.
     
  83. வாழ்க்கை, சிறப்பை நாடுவதில்லை. சௌகரியம் வந்த பின் மனிதன் தன் அந்தஸ்தைக் காப்பாற்றப் பாடுபடுகிறான்.
     
  84. எந்த இலட்சியத்தையும் தீவிரமாக நாடும் ஆர்வம் மனிதனுக்கு இல்லை.
     
  85. மனிதன் தீய சக்திகளுக்குப் பணிந்து வணங்குவதால், அவை அவனைத் தீண்டுவதில்லை.
     
  86. தான் இருக்கும் நிலைமையில் அறியாமையை இலட்சியமாக்கி, அதையே ஞானம் என்றுணர்வது மனித இயல்பு.
     
  87. எதிரியைப் பணிந்து வாழ்வது வெற்றி எனவும், எதிர்ப்பை உற்பத்தி செய்வதை முன்னேற்றமெனவும் மனிதன் கணிக்கின்றான்.
    மனிதனை வலிமையுள்ளவன், வலிமை குறைந்தவன் என்று பிரித்தால், வலிமை குறைந்தவன் எதிரிக்கு உடனே பணிகிறான். அதனால் அவன் வாழ்வு காப்பாற்றப்படுகிறது. இது அவனுக்கு வெற்றி.

    வலிமை மிகுந்தவன் செய்யும் எல்லாக் காரியங்களும் அவனுக்கு எதிர்ப்பை ஏற்படுத்துகின்றன. இந்த எதிர்ப்பை மீறி வெல்ல அவன் முயல்கிறான். வலிமை மிகுந்தவனால் எதிர்ப்பை கிளப்பாமல் இருக்க முடியாது. வலிமை குறைந்தவனால் எதிரியை மீற முடியாது.
     
  88. ஆர்வமாகச் செயல்படுவதையோ, ஜீவனுள்ள வாழ்வையோ மனிதன் நாடுவதில்லை.
     
  89. கோபம் வரும்பொழுது ஒரு கணம் நிதானித்தால், வெளியில் இருந்து நம்முள் கோபம் நுழைவது தெரியும். தெரிந்த பின் அவரால் அதைத் தடுக்க முடியும் என்றால், அவரால் எந்தத் தோல்வியையும் தவிர்க்க முடியும்.
     
  90. புத்தி, உணர்ச்சி, கிளர்ச்சி, நினைவு, சிந்தனை, பாசம், பற்று, கோபம், நம்பிக்கை, சந்தேகம் போன்ற வாழ்வின் அம்சங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை. அவற்றின் தன்மை என்ன என்று விவரமாகப் புரிந்துகொள்ளுதல் ஞானம்.
     
  91. யூதர்களுடைய தெய்வம், கிருத்துவ மதத்தின் பின்னுள்ள தெய்வம், இன்று கோயில்களிலுள்ள சக்தி ஆகியவை அசுரர்களாகும் என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார்.
     
  92. உடலுக்கும், உணர்வுக்கும் குதர்க்கம் தெரியாது. மனம் மட்டுமே குதர்க்கமானது. உடலால் பாவத்தைச் செய்ய முடியாது. அதே காரணத்தால் உடலால் செய்யும் புண்ணியம் அறிவின் இலட்சியங்களைவிட உயர்ந்தது.
     
  93. ஆதாயத்தை விட்டு, ஆனந்தத்தை நாடுதல் சிறப்பு. தெய்வம் உள்பட எதையும் மனிதன் ஓர் ஆதாயத்திற்காகவே நாடுகிறான்.
     
  94. எதிர்ப்பை வெற்றிகரமாக மீறி இலட்சியத்தைப் பின்பற்றினால், அது இலட்சியமாகப் பூர்த்தியாகும். கசப்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்று, இலக்கை நோக்கித் தளராது செல்வது இலட்சியப் பாதையின் இலட்சணம்.
     
  95. ஆன்மாவை ஜடம் ஆட்சி செய்யும் அரங்கு வாழ்வு.
     
  96. அனைத்தும் இறைவன் என்பதால் எந்தப் பொருளிலிருந்தும் அருள் சுரக்க முடியும். E.g., வானின் அருள், நிகழ்ச்சியின் அருள், நேரத்தின் அருள், மெஷினின் அருள்.
     
  97. இறைவனுடைய அருளுக்கு மனிதனுடைய குணங்கள் தடை. மனிதனுக்கு அருள் செய்ய இறைவன் மனித குணங்களின் எதிர்ப்பிலிருந்து தப்ப வேண்டும்.
    எனவே மனிதனுடைய எதிர்ப்புத் தவறும்போது ஏற்படும் இடைவெளியில் அருள் செயல்படுவதால் நடப்பதே மனித சாதனை.

    சர்க்காரின் உயர்ந்த திட்டங்களை அரசியல் கட்சி தனக்கு உபயோகப்படுத்திக்கொள்கிறது. கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் திட்டங்களால் தாங்கள் பயனடையவே முழு முயற்சி எடுக்கின்றார்கள். திட்டங்கள் டெல்லியிலிருந்து சென்னை வந்து, மாவட்டத் தலைநகர் தாண்டி, உள்ளூர் வரும் வரை ஒவ்வொரு நிலையிலும் அரசியல் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மற்றுமுள்ள புரோக்கர்கள் ஆகியவர்களையும் தாண்டி வந்து எஞ்சியதே மக்களுக்கு. அதன் பின் மக்களுடைய ஊழலையும் தாண்டி வந்து நிலத்தில் பயன் தர வேண்டும். இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள கல்வி, தொழில், போக்குவரத்து முன்னேற்றம் இது போல் எஞ்சியனவே. அதே போல் ஆண்டவனுடைய அருள் ஒவ்வொரு கட்டத்திலும் மனித குணங்களாலும், சமூக ஸ்தாபனங்களாலும், உலக மரபாலும், மனத்தின் பழக்கங்களாலும் எதிர்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பை மீறி அருள் செயல்படுவதால், இன்று உலகம் இயங்குகிறது.
     
  98. தான் எனும் நிலையைத் தாண்டாத மனிதன் தன் குரலைக் கேட்க விரும்புகிறான்; தான் எழுதியவற்றை ரசிக்கின்றான்; தன் திறமையை நினைந்து வியக்கின்றான்.
     
  99. உடனிருந்து உடலைக் காப்பாற்றுபவன் இறைவன்.
     
  100. நமக்குக் குறையுள்ள இடத்தில் நாம் பிறருக்கு அறிவுரை கூறுகிறோம்.

 



book | by Dr. Radut