Skip to Content

சச்சிதானந்தம் (சத் புருஷன்)

நாம் பிரம்மத்தை அடையலாம், விவரிக்க முடியாது எனக் கேள்விப்பட்டுள்ளோம். அதுவே உண்மை எனவும் அறிவோம். அது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். பகவான் அரவிந்தர் பிரம்மத்தை அடையலாம், விளக்கலாம், விவரிக்கலாம் எனக் கூறுகிறார். விவரித்து Life Divine என்ற நூலை எழுதியுள்ளார். வாழ்க்கை என்பது நல்லது கெட்டது கலந்தது, பிரச்சினைகள் நிறைந்தது என்பதை உலகம் அறியும். நாம் அன்னையை வணங்க ஆரம்பித்த பிறகு பிரச்சினைகள் தீரவழியுண்டு. பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பகவானுடைய யோக சக்தி உலக யுத்தத்தை வென்றது. அவர்கள் செய்த யோகம் உடலின் திருவுருமாற்றம். அவர்களை ஜீவனில் ஏற்பவர்களுக்கு அவர்கள் நிரந்தரமாகப் பெற்ற சித்திகள் ஒருமுறை அனுபவமாக வரும். நாம் பிரச்சினைக்காக அன்னையை அழைத்தால் அன்னை தம்மை முழுவதுமாகத் தருகிறார். நம்மால் அவரை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ள முயலலாம். அப்படி முயன்றால் அவர் பெற்ற சித்திகளில் ஒன்று நமக்கு அனுபவமாக வரும். நாம் அன்னையையும் ஏற்பது இல்லை. அவர் தரும் அனுபவத்தையும் அறிவதில்லை. பிரச்சினை தீர்ந்ததே நாம் பெறுவது. வாழ்க்கையில் உள்ள நிலைமாறி நல்லதால் மட்டும் வாழ்க்கை நிரம்ப முடியும் என்று அறிகிறோம். அதுபோல் விளக்க முடியாது பிரம்மத்தை விளக்கலாம் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். மேலும் பிரம்மம் சித்திக்காதவர்களும் அறிவால் புரிந்து கொண்டு, பிரம்மத்தைப் பிறருக்கு விளக்கலாம். சம்பளம் வாங்கும் பேங்க் ஏஜண்ட் இலட்சக்கணக்காக, கோடிக்கணக்காக கடன் தர முடிவது போல் சித்தித்தவரே விளக்க முடியாத பிரம்மத்தை, சித்திக்காதவரும் புரிந்து கொண்டு விவரிக்கலாம் என்பது ஸ்ரீ அரவிந்தம் பக்தர்கட்குத் தரும் வரம்.

56 அத்தியாயங்களைக் கொண்ட Life Divine என்ற நூல் சத் புருஷன் என்பது ஒன்பதாவது அத்தியாயம். மனிதன் பிரம்மத்தைப் பார்க்க முயல்கிறான். ஆனால் பிரம்மம் அவனுக்கு நேரிடையாகத் தெரிவதில்லை. பிரம்மம் மனிதனுக்குச் சச்சிதானந்தமாகத் தெரியும். அந்த சச்சிதானந்தத்தையே நாம் சத் புருஷன் என்கிறோம். சச்சிதானந்தத்தின் அம்சங்கள் மூன்று. அதன் முதல் அம்சம் சத். அதைப்பற்றியது இந்த ஒன்பதாவது அத்தியாயம். அங்கு விவரிக்கப்படுவது சத்பிரம்மம். அதற்கு முன் அத்தியாயத்தில் வேதாந்த ஞானம் கூறப்படுகிறது. உலகம் உள்ளது என்பதை நாம் ஏற்க வேண்டுமே தவிர எப்படி உலகம் சிருஷ்டிக்கப்பட்டது. பரமாத்மாவிலிருந்து ஜீவாத்மா எப்படி உற்பத்தியாயிற்று என்று கேட்க மனிதனுக்கு உரிமையில்லை என்பது மரபு. ஸ்ரீ அரவிந்தர் இந்த விளக்கத்திலுள்ள உண்மையை ஏற்கிறார். அத்துடன் நிற்கவில்லை. பூரண யோகம் மரபிலிருந்து மாறுபட்டது. சில இடங்களில் வேறுபட்டது. பல இடங்களில் அடுத்த கட்டத்திற்குப் போவது. அடிப்படையில் ஸ்ரீ அரவிந்தம் மரபில் இல்லை என்று சொன்னவற்றை உண்டு என்று சொல்லும். முடியாது என்று சொன்னவற்றை முடியும் என்று கூறும். அதே போல் நமக்கு உரிமையில்லை என்றவற்றை உரிமையுண்டு என்று சொல்லும் இடம் இது ஒன்று. கர்மத்தை அனுபவித்துத் தீர வேண்டும் என்ற மரபுக் கொள்கையை ஸ்ரீ அரவிந்தம் மாற்றிக் கரைக்கலாம் என்பதை நாம் அறிவோம். மனிதன் வழிபட்டாலும், தவத்தாலும் இறைவனை அடையலாம் என்ற மரபை ஸ்ரீ அரவிந்தம் மாற்றி யோகத்தால் வாழ்வில் மனிதன் இறைவனாகலாம் என்று கூறுகிறது.

பரம்பொருள் இறைவன் ஆண்டவன் பிரம்மம் சச்சிதானந்தம் தானே உலகமாக மாறியது என்பது ஸ்ரீ அரவிந்தர் கூறும் தத்துவம். உலகில் உள்ளது ஒன்று, ஒன்று மட்டுமே. அது பரம்பொருள், அனந்தமான பரம்பொருள், அக்ஷயப் பாத்திரமான பரம்பொருள். ஆரம்பத்தில் ஸ்ரீ அரவிந்தர் கூறும் கருத்துக்கள் இரண்டு.

  1. பரம்பொருள் தானே உலகமாக மாறியது.
  2. உலகம் சிருஷ்டிக்கப்பட்டபின், அக்ஷயப் பாத்திரமான பரம்பொருள் குறையவில்லை. அது எடுக்க எடுக்கக் குறையா ஆனந்தம் ஆதியில்லாத, அந்தம் இல்லாத ஆனந்தம் (Infinity)

கடவுள் உலகத்தை சிருஷ்டித்தார் என்று கூறும்போது கடவுள் வேறு, உலகம் வேறு என்றாகிறது. இதை ஸ்ரீ அரவிந்தர் (Supra cosmic view) பிரபஞ்சத்தைக் கடந்த கடவுள் என்று கூறுகிறார். இதே போல் வேறு இரு கருத்துக்கள் உள்ளன. இந்த மூன்று கருத்துக்களிலும் உண்மைகள் உண்டு. எல்லா உண்மைகளும் சேர்ந்தது ஸ்ரீ அரவிந்தரின் கருத்து. Synthetic view (சிந்தடிக் வியூ) என்று கூறுகிறார். அதன்படி ஆண்டவனே உலகமாக மாறினார் என்கிறார். குடும்பம் என்பது கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம், சிறு குடும்பம் என்ற நிலைகளில் உள்ளன. இவற்றின் மாறுபாடுகளை நாம் அறிவோம். குடும்பமே மகனாயிற்று என்று கொண்டால், மகனோ, மகளோ அப்படி உணர்ந்தால் சிறு குடும்பம், தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம் ஆகியவை எப்படி மாறும் என நாம் அறியலாம். அக்கண்ணோட்டப்படி குடும்பத்தில் ஒவ்வொருவரும் தாமே குடும்பம், குடும்பமே தாம் என்று உணர்வார்கள். அந்தக் குடும்பத்தில் சந்தோஷம், சௌகரியம், சுபிட்சம் எப்படி இருக்கும் என நாம் கற்பனை செய்யலாம். ஆண்டவனே உலகம், நாமே ஆண்டவன், உலகமே ஆண்டவன் என்று உணர்ந்தால் நிலைமை எப்படி மாறும். இன்றுள்ள போர், பூசல், பிணக்குகள், போட்டி, பொறாமை எப்படி அழியும் என நாம் அறிவோம். அந்த அடிப்படையில் ஸ்ரீ அரவிந்தர் தம் தத்துவத்தை விளக்குகிறார்.

உலகம் முன்னேறுகிறது. உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தன்னையறியாமல் முன்னேறுகிறார்கள். அது ஒருவரில் வெளிப்படுவது. ஒருவரில் வெளிப்பட்டாலும் முயற்சியும், முன்னேற்றமும், பலனும் உலகத்திற்கு உள்ளது. ஒருவர் பெற்ற ஞானம் உலகத்திலுள்ள ஞானம். அது உலகத்திற்குரியது. ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்தது உலகம் கண்டுபிடித்தது என்பதால் அந்தச் செல்வம் உலகத்திற்கு உரியது. ஒருவர் பெற்ற செல்வமோ, ஞானமோ அனைவருக்கும் உண்டு என்பதன் பொருள் என்ன? அதிலுள்ள நியாயம் என்ன? தத்துவம் ஏதாவது அதிலுண்டா? என்றால் (உதாரணமாக) மரத்தில் பழம் பழுக்கிறது எனில் பழத்தைக் காம்பில் காண்கிறோம். பழம் கிளையிலுள்ள காம்பில் பழுப்பதற்கு அது மலராகப் பூத்து, துளிராகத் துளிர்த்து, கிளையாக வளர்ந்து பலன் பெறுகிறது. மரம் முழுவதும் வேரிலிருந்து அடிமரம் வரை அனைத்தும் சேர்ந்து ஒரு காம்பில் பழம் உற்பத்தியாகிறது. மரம் இல்லாமலோ, கிளை இல்லாமலோ, துளிர்க்காமலோ, மலராமலோ பழம் இல்லை. அதுபோல் சமூகம் என்பது ஜனசமுத்திரம். பழம் காம்பில் உற்பத்தியாகும் பொழுது அடிமரமோ, பட்டையோ நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் பழத்திற்கு வேண்டிய நீரையும், சத்தையும் மண்ணில் மறைந்துள்ள வேரும், அடிமரமும், கிளையும் கொண்டு வந்து கொடுப்பதை நாம் அறிவோம். ஒரு விஞ்ஞானி laboratory ஆல் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு தபஸ்வி குகையில் தியானம் செய்தாலும், ஒரு தொழிலதிபர் factory நடத்தினாலும் அது சமூகத்திலுள்ள ஒவ்வொருவருடைய முயற்சி, அறிவு, பக்தி, உழைப்பைப் பெறுகிறது என்பதை நாம் அறிவதில்லை. இந்தியாவில் இமயமலையில் தவசிகள், துறவிகள் உண்டு. கனடாவில் மலைக்குகையில் முனிவர் இருப்பதில்லை. ஏனெனில் கனடா மக்கள் மனதில் தியானம் இல்லை. இந்திய மக்களில் ஒவ்வொருவரும் தினமும் தாங்கள் அறிந்து வாயாலும், தாங்கள் அறியாமல் ஆத்மாவாலும் துதி பாடுவதாலும், பெண்கள் பக்தி செலுத்துவதாலும் ஒரு ரமண மகரிஷி தோன்றுகிறார். அமெரிக்காவில் எந்த மாணவன் மனதிலும் எதைக் கண்டுபிடிக்கலாம் என்ற விஞ்ஞான உணர்வு உண்டு. எந்தத் தொழிலாளி எந்த மெஷினில் வேலை செய்தாலும் அதை எப்படிச் சிறப்பாக மாற்றலாம் என்ற நோக்கமுண்டு. நாடே விஞ்ஞானமயமான நாடு. இலட்சக்கணக்கான பேராசிரியர்கள் தங்கள் துறையில் விஞ்ஞானச் சிந்தனையை மேற்கொண்டுள்ளார்கள். அதன் விளைவே அவர்கள் ராக்கெட்டில் சந்திரனுக்குப் போகிறார்கள். அந்த நாட்டின் சூழல் விஞ்ஞானமயமான சூழல். அது ஓர் ஐன்ஸ்டீனை உற்பத்தி செய்தது. நம் நாட்டில் ஆன்மீகச் சூழல் உண்டு. அது ரிஷிகளை உற்பத்தி செய்கிறது என்பதால் ஒருவர் பெற்ற எந்தப் பலனும் அனைவருடைய முயற்சியால் அடைந்த பலனாகும். அதனால் அனைவருக்கும் அப்பலன்கிட்ட வேண்டும். அதே போல் உலகத்தின் ஆன்மீக முன்னேற்றம் ஒருவருக்குச் சித்தியாக வெளிப்படுவதால் அது உலகத்திற்குரிய ஞானசித்தியாகும். நாம் அறியாத இந்த உண்மையை பகவான் ஸ்ரீ அரவிந்தர் நமக்கு அளிக்கிறார். எனவே நாம் பிரம்மத்தை அறிய முற்பட்டால் பிரம்மத்தை அடையலாம். பிரம்மத்தை விளக்கிச் சொல்லலாம். பிரம்மத்துடன் ஐக்கியமாகலாம். பிரம்மமாகலாம் என்று அவர் எழுதிய நூல் Life Divine ஒரு தகப்பனார் படித்தவராக இருந்தால் பிள்ளைக்குப் பாடம் நன்றாக வரும். பாடம் சொல்லிக் கொடுக்கலாம். படிக்காத தகப்பனார் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியாது. பாடம் சொல்லிக் கொடுக்க முடியாதே தவிர படிக்க வைக்க முடியும். குழந்தை மீது அக்கரை இருந்தால் படிக்காத தகப்பனாரும் படிக்க வைக்க முடியும். அதுபோல் பிரம்மம் சித்திக்காத அன்பரும் பக்தியும், நம்பிக்கையும் இருந்தால் பிரம்மத்தை அறியலாம். அத்துடன் பிறருக்கும் விளங்குமாறு சொல்ல முடியும். இது ஸ்ரீ அரவிந்தத்திற்கேயுரிய தனிச்சிறப்பு. இந்த அம்சம் அன்னையின் சக்தியில் பல இடங்களில் வெளிப்படும்.

Life Divine கடினமான நூல் என்ற பெயர் பெற்றதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று எவரும் கூறாத விளக்கங்கள் ஸ்ரீ அரவிந்தர் கூற முனைந்தது. உதாரணமாக (Spirit) ஆன்மா எப்படி உற்பத்தியாயிற்று என்று 237வது பக்கத்தில் கூறுகிறார். இதை ஒரு வரியில் கூறுகிறார். அந்த ஒரு வரியைக் கூறுவதற்கு முன் இரண்டு பக்க விளக்கம் கொடுக்கிறார். ஆங்கிலமே தாய்மொழியாகப் பெற்றவர்கள் இந்த நூலே இலட்சியம் என்றவர்கள் இப்பக்கங்களைப் படித்து புரிந்து கொள்ள சில ஆண்டுகளாயின. அன்பர்களுக்கு இது புரியலாம். புரிந்தால் அது அவர்களுடைய பக்தி, நம்பிக்கைக்குள்ள பெருமை.

Structure of the Life Divine - Outline

Life Divine இன் அமைப்பு

ஸ்ரீ அரவிந்தர் Life Divine என்ற நூலை இரண்டு புத்தகங்களாகவும், முதற்புத்தகத்தை 28 அத்தியாயங்ளாகவும், 2ஆம் புத்தகத்தை இரு பாகங்களாகவும் பிரித்து ஒவ்வொன்றிலும் 14 அத்தியாயங்களை எழுதினார்.

  1. முழுப் புத்தகத்திலும் பரம்பொருள் பிரபஞ்சமாக மாறுவது எப்படி? என்று சொன்னார். அதை முதல் புத்தகத்தில் எழுதி முடித்தார். அவர் எழுதும்பொழுது சச்சிதானந்தத்தில் ஆரம்பித்து எப்படி மாயையால் சத்திய ஜீவியத்தின் மூலம் மனம், வாழ்வு, உடல் ஏற்படுகின்றன என்று எழுதினார். இங்கு ஸ்ரீ அரவிந்தர் ஆன்மா, சத்திய ஜீவியம், மனம், வாழ்வு, உடல் (ஜடம்) ஆகியவை எப்படி சிருஷ்டிக்கப்பட்டன என்று தத்துவார்த்தமாகவும், அறிவிற்குப் புலப்படும் வகையிலும் எடுத்துக் கூறுகிறார்.
  2. இரண்டாம் புத்தகத்தில் ஞானம் அஞ்ஞானமாக மாறி ஆன்மீகப் பரிணாமத்தால் மீண்டும் ஞானமாக மாறுவதைக் கருத்தாகக் கொண்டார்.
  3. இரண்டாம் புத்தகத்தின் முதல் பகுதியில் பரம்பொருளை அனந்த ஜீவியம் என்கிறார். பிரபஞ்சத்தை அஞ்ஞானம் என்கிறார். அந்த சிருஷ்டியை விவரிக்கும் 14 அத்தியாயங்கள் அவை.
  4. இது இரண்டாம் புத்தகத்தின் இரண்டாம் பகுதி. இது ஞானம் ஆன்மீகப் பரிணாமம் அடைவதை விவரிக்கிறது.

ஆண்டவன் உலகமாக (பிரபஞ்சம்) மாறிவிட்டார். அவர் அப்படி மாறியதால் அவர் குறையவில்லை. ஆண்டவனால் குறைய முடியாது. ஏன் என்றால் அவர்தாம் பிரம்மம்.ஆண்டவன் அனந்த ஜீவியமாகத் தன்னை மாற்றிக் கொண்டு, அஞ்ஞானமாக தெரிவது சிருஷ்டி.

முதல் அத்தியாயம் - இது இதயத்தின் எழுச்சி என்ற தலைப்பு. இந்த அத்தியாயத்தின் முக்கியமான கருத்து முரண்பாடு உடன்பாடாகிறது.

இரண்டாம் அத்தியாயம் - இது ஜடமும் ஆன்மாவும் ஒன்றே என்று கூறுகிறது.

மூன்றாம் அத்தியாயம் - ஆன்மாவும் ஜடமும் ஒன்றே என்று கூறுகிறது.

நான்காம் அத்தியாயம் - ஜடமும் ஆன்மாவும் சேர்ந்த பரம்பொருளை விவரிப்பது.

ஐந்தாம் அத்தியாயம் - மனிதன் பரம்பொருளையும், ஜடத்தையும் இணைக்கும் கடமையைக் கொண்டவன் என்று கூறுகிறது.

ஆறாம் அத்தியாயம் - பிரபஞ்சத்திலிருந்து மனிதன் உற்பத்தியாவதை விவரிக்கிறது

ஏழாம் அத்தியாயம் - அகங்காரத்தைப் பற்றியது. அகங்காரம் எப்படிக் கரையும் என்று கூறுகிறது.

எட்டாம் அத்தியாயம் - வேதாந்த ஞானம் அறிவிலிருந்து புலன் விலக்கப்பட்டால் ஞானமாகிறது என்பது இந்த அத்தியாயம்.

9, 10, 11, 12ஆம் அத்தியாயங்கள் சச்சிதானந்தம். 9 ஆம் அத்தியாயம் சத்புருஷன். 10ஆம் அத்தியாயம் சித் சக்தி. 11, 12ஆம் அத்தியாயங்கள் ஆனந்தம்.

13ஆம் அத்தியாயம் மாயை. மாயை என்பது இல்லாததன்று. ஆண்டவனின் சிருஷ்டிக்கு மாயை கருவி. 14, 15, 16ஆம் அத்தியாங்கள் சத்திய ஜீவியத்தைப் பற்றியவை. உலகத்தை சிருஷ்டித்தது சத்திய ஜீவியம். மனமல்ல என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

17ஆம் அத்தியாயம் - ஆத்மா

18ஆம் அத்தியாயம் - மனம்

19, 20, 21, 22ஆம் அத்தியாயங்கள் - வாழ்வு

23ஆம் அத்தியாயம் சைத்திய புருஷன்

24, 25ஆம் அத்தியாங்கள் - ஜடம்

26, 27ஆம் அத்தியாயங்கள் - பரிணாமம்

28ஆம் அத்தியாயம் - சத்திய ஜீவியம். இதில் சத்திய ஜீவியம் நிச்சயமாகப் பலிக்கும் என்கிறார்.

நாம் சத் புருஷனைப் பற்றிப் பேசுகிறோம். சத் புருஷன் ஸ்தாணு சமுத்திரம்.உலகம் என்று கூறுகிறோம். இவற்றைக் கடந்து பிரம்மம் இருப்பதாகச் சொல்கிறோம். இவை எல்லாம் உண்மை. இவற்றைக் கடந்த உண்மை ஒன்றுண்டு. அது நாமும், உலகமும், சமுத்திரமும், ஸ்தாணுவும், சச்சிதானந்தமும், பிரம்மமும் ஒன்று. நம் கண்ணுக்குத் தெரிவது உலகம். அகந்தையற்ற பார்வைக்குத் தெரிவது சமுத்திரம். ஞானிக்குத் தெரிவது ஸ்தாணு. ஞானம் முதிர்ந்தால் தெரிவது சச்சிதானந்தம். ஞானம் சித்தித்தால் நாம் பிரம்மமாகி அனைத்தையும் பிரம்மமாகக் காண்கிறோம். பக்குவம் மாறினால் பார்வை மாறும். மாறிய பார்வைக்கும் மாறிய தரிசனம் கிடைக்கும். நமக்கு உட்படாத விஷயத்தில் நாம் பொறுப்பு ஏற்பது இல்லை. நமக்கு உட்பட்ட விஷயத்தைத் தான் நாம் பேச முடியும். சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட விஷயத்தைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் ஒரு நாள் நமக்கு அது உட்படும் என்று அர்த்தம். மனிதன் பிரம்மாண்டமான கடலில் கப்பல் செலுத்துகிறான். ஆகாயத்தில் விமானத்தில் பறக்கிறான். கடலையும், ஆகாயத்தையும் ஆட்சி செய்யும் திறன் மனிதனுக்கு எப்படி வந்தது? கடல் என்றால் என்ன? நீர் என்றால் என்ன? நீரின் தன்மை என்ன? ஆகாயத்தின் சட்டம் என்ன? என்று புரிந்ததால் அவற்றை ஆளமுடிகிறது. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதனுடைய சூட்சுமத்தை (அதாவது சாரத்தை) அறிய முடியுமானால் அதன்மூலம் அவற்றை ஆட்சி செய்யலாம் என்பது விஞ்ஞானம் சாதிப்பது. அதுவே தத்துவத்திலும் உண்மை. பிரம்மம் என்பது பிரம்மாண்டமானது. சூட்சுமமான அதன் தத்துவத்தை நாம் அறிந்தால் பிரம்மம் நமக்கு உட்படும் என்பதை ஸ்ரீ அரவிந்தர் தம்முடைய பூரணயோகத்தில் சாதித்தார். அவருடைய சாதனையின் பலனை உலகத்துக்கு அளிக்க முன்வருகிறார். நூலில் நான்கு கடுமையான அத்தியாயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சத் புருஷன். மிகக் கடுமையான அத்தியாயம் என்பது இரண்டாம் புத்தகத்தில் முதல் அத்தியாயம். அதன் தலைப்பு பிரபஞ்சத்தின் சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி எனப்படும். அந்த அத்தியாயத்தில் சிருஷ்டியின் ரகசியத்தை கூறுகிறார். இதுவும் நீண்ட அத்தியாயம். மிகக் கடினமான அத்தியாயமாக இருந்தாலும் ஆர்வத்துடன் பயின்றால் புரியும். இதன் வாதங்களைப் புரிந்து கொள்வது முதல்நிலை. தத்துவச் சாரங்களைப் புரிந்து கொள்வது இரண்டாவது நிலை. அதைப் பின்பற்றுபவர்களுக்கு வாழ்க்கை அதிர்ஷ்டமாகத் திருவுருமாறும்.

நாம் அதைப் பெற உதவும் சத் புருஷன். அந்தக் காலத்தில் ராஜாவைப் பற்றியோ, அவரின் செய்கைகளைப் பற்றியோ பேசினால் ராஜதுரோகம் என்று கூறி தலை போகும். ஆனால் இன்று மேடையேறி அரசியலையும், அரசியல்வாதிகளின் செய்கைகளைப் பற்றியும் அலசிப் பேசுகிறோம். அந்த உரிமை நமக்குச் சுதந்திரம் வந்தபின் ஏற்பட்டது. கடவுளுக்குப் பயந்து குடும்பம் செய்ய வேண்டும் என்ற நாம் சொல்வோம். அதனால் பக்தி என்ற சொல்லை பயபக்தி என்று சொல்கிறோம். Fear of God is the beginning of knowledge என்பது பைபிள் வாசகம். ஆண்டவனுக்குப் பயந்து செய்வது வழிபாடு. ஸ்ரீ அரவிந்தம் அந்த பயத்தை விலக்குகிறது. வழிபாட்டை மாற்றி பரிணாமம் ஆக்குகிறது. பயத்தை அன்பாக மாற்றுகிறது. ஆண்டவன் தன்னை அனுபவிக்க வேண்டும் என்று கேட்கிறது. ஆண்டவனை தான் அனுபவிக்க வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம். இதே கருத்து வேதத்திலும் காணப்படுகிறது. பயத்திற்கு இடம் இல்லை. பயம் இருந்தால் அதைத் தைரியமாகத் திருவுருமாற்றுகிறது. கடைசி அத்தியாயத்தில் திருவுருமாற்றம் இன்றியமையாதது என்று கூறுகிறார். பயம் தைரியமாகத் திருவுருமாற வேண்டும். மனிதன் இறைவனாக மாற வேண்டும். இதுபோல் திருவுருமாற்றம் நம் எல்லா எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், பழக்கங்களுக்கும் உண்டு. அவற்றுள் ஒவ்வொன்றிற்கும் ஓர் உதாரணம் கூறலாம்.

  1. இந்த உலகத்தில் நாம் முன்னேற முடியாது என்பவர் தம் எண்ணத்தைத் திருவுருமாற்றினால் அது முன்னேறுவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உண்டு என்ற கருத்தாக மாறும். அவர் வாழ்வு அதனால் உயரும்.
  2. அதிர்ஷ்டம் ஜாதகத்தில் இருந்தால் தான் உண்டு என்று நம்புபவர் நல்லெண்ணம் மட்டுமுள்ள அன்பர் அதிர்ஷ்டத்திலிருந்து தப்ப முடியாது என்று உணர்ந்தால் அன்றே வாழ்வில் அதிர்ஷ்டம் தலை எடுக்கும். இதே போல் நம் வாழ்க்கையில் 1000 அம்சங்கள் திருவுருமாற்றத்திற்காகக் காத்திருக்கின்றன.

பிரம்மத்தைப் பற்றிப் பேச பிரம்மம் சித்தித்தவரால் மட்டுமே பேச முடியும் என்கிறோம். ஆனால் சித்திக்காதவன் பேசுகிறான் என்றால் அவனுக்கு அந்தப் பிரம்மம் சித்திக்கும் என்று அர்த்தம். (வேதம், உபநிஷம் எல்லாம் ரிஷிகள் மனத்தால் பிரம்மத்தின் பகுதியைச் சமாதியில் கண்டனர். பகவான் சத்திய ஜீவியத்தால் முழுப் பிரம்மத்தையும் விழிப்பில் கண்டார். கண்டவரே விளக்க முடியாது என்றதை பகவான் காணாதவரும் விளக்கும் வகையில் கூறுகிறார். எந்த விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமானாலும் அனுபவத்தால் மட்டுமே பேச முடியும். பிரம்மம் என்னும் இடத்தில் அது சித்தித்தால் கூட பேச முடியாது. உரிமை இல்லாதவர்களுக்கு உரிமை வந்து இருக்கிறது. அந்த உரிமையைத் தகுதியால் பெற்றுக் கொள்ளவேண்டும். நவீன சாதனங்களை (பேனா முதல் T.V. வரை) கண்டுபிடிப்பது விஞ்ஞானி, உற்பத்தி செய்வது வியாபாரி, பயன்படுத்துவது பொதுமக்கள். விஞ்ஞானம், வியாபாரம், சேவை சேர்ந்து எதுவும் தெரியாத பொதுமக்களுக்கு எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்பைத் தருகின்றன. அதை விலை கொடுத்து வாங்க வேண்டியதுதான் நமது கடமை. அந்த வாய்ப்பு அத்துடன் முடியவில்லை. நாமும் வியாபாரம் செய்யலாம். நாமும் உற்பத்தி செய்யலாம். நாமும் விஞ்ஞானத்தைக் கற்கலாம். புதுப்பொருட்களைக் கண்டுபிடிக்கலாம் என்பது உலகத்திலுள்ள நிலைமை. அதேபோல் ஸ்ரீ அரவிந்தர் கண்டுபிடித்ததன் பலனை நாம் பிரார்த்தனையால் அனுபவிக்கலாம். அவர் எழுதிய நூல்களைப் படித்துப் புரிந்து கொள்ளலாம். பிறருக்கு எடுத்துச் சொல்லலாம். யோகத்தை மேற்கொண்டு நாமே சத்திய ஜீவியத்தை அடையலாம். பிரம்மத்தை அடையலாம். பயம் தேவையில்லை. தடை ஏதுமில்லை. முயற்சிக்குரிய பலனுண்டு. முழுப்பலனுக்கும் உரிமையுண்டு. நமக்குச் சுதந்திரம் வந்தவுடன் நாட்டில் அனைவருக்கும் பிரதம மந்திரியாகும் உரிமை வந்துவிட்டது. ஆனால் அந்தத் தகுதியை ஏற்படுத்திக் கொண்டால் நாட்டில் ஜனாதிபதியாகும் வாய்ப்பு எல்லோருக்கும் உண்டு. Bank ஏஜெண்ட் பணம் தர முடியாது. அவரிடம் சொந்தமாகப் பணமில்லை. ஆனால் இருக்கும் பணத்தை லோனாகத் தர முடியும். பணக்காரன் இல்லாதவனுக்குத் தொழில் ஆரம்பிக்க பணம் தரமாட்டான். தந்தாலும் அது திரும்பி அவர்களுக்கு வராது. ஆனால் பணமே இல்லாத ஏஜெண்ட்டுக்குப் பணம் தரக்கூடிய (power) திறமை வந்து உள்ளது.

Intuition ஞானம். Reason அறிவு. வேத ரிஷிகள் ஞானத்தால் பார்த்தார்கள். சிஷ்யனுக்கு ஞானம் வந்தபின்தான் புரியும் என்பதை சிஷ்யன் ஏற்றுக் கொள்கிறான். உலகிலுள்ளவர்களில் கொஞ்சம் பேருக்குத்தான் அந்தப் பக்குவம் உண்டு. அவர்களுக்குப் புரியும். ஆனால் அறிவால் அதைக் காண்பிப்பது, அதிலுள்ள பெரிய விஷயம் என்னவென்றால் உலகத்து அறிவு ஒரு ரிஷிக்கு ஞானமாக வருகிறது. உலகத்துப் பணம் தான் பெரிய செல்வருக்கு வருகிறது. அதாவது ஒரு கம்பெனி என்றால் 1000 பேர் உழைத்தால்தான் கம்பெனி முன்னேறும். அந்த முதலாளி செல்வராகிறார். அந்தச் செல்வந்தர் என்ன முடிவு பண்ணவேண்டும் என்றால் அந்தப் பணம் எல்லோரும் பெற வேண்டும் என்ற முடிவு செய்தால் அவர் ஆண்டவருக்கு உரியவர். சர்க்கார் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தி Bank என்ற ஒன்றை ஏற்படுத்தி பணக்காரரின் பணத்தை அதில் சேமிக்க வைத்து, அந்தப் பணக்காரரின் பணம் பத்திரமாக இருக்கவும், அது மற்றவர்களுக்கு உபயோகப்படும் விதமாக ஏஜெண்ட் செயல்படுவதுபோல் பகவானின் பிரம்மம் சித்திக்காதவர் பிரம்மத்தைப் பற்றிச் சொல்கிறார் என்றால் பகவான் அந்த உரிமையை எல்லோருக்கும் அளிக்கிறார் என்று அர்த்தம். மனத்தின் உற்பத்தி ஸ்தானம் Supermind. நாம் அதிலிருந்து வந்ததை மறந்துவிடுகிறோம். Mindக்கு, உண்டான குறுகிய பார்வையிலிருந்து விசாலமான பார்வைக்குப் போக நிஷ்டையில் தான் போக முடியுமே தவிர கண்ணைத் திறந்து போக முடியாது. தன்னை மறந்த நிலையில் பிரம்மத்தைப் பார்த்ததால் அது மறந்துவிடுவதால் (கனவு. மறந்துவிடும்) அதைச் சொல்ல முடியாது. மனம் Supermind-இன் பகுதி. அதை ஏற்ற பிறகு கண் மூடாமல் அங்குப் போகலாம். கண் மூடினால் போக முடியாது. தியானம் என்பது கூடாது. விழிப்பாக இருக்கவேண்டும். பகவான் தானம் அந்தப் பொறுப்பை ஏற்று ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தினார். அந்த ஸ்தாபனம் MOTHER. நாம் அன்னை அன்பர்களாக ஆனபின் அந்தப் பிரம்மத்தைப் பற்றி பகவான் நமக்குச் சொல்வது புரியும். அதை நாம் பிறருக்கு எடுத்துச் சொன்னால் புரியும். Bank எப்படி ஒர ஸ்தாபனமோ அதை எப்படி சர்க்கார் ஏற்படுத்தியதோ அதுபோல் அன்னை என்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தி நம்மை எல்லாம் ஏஜெண்டாக ஏற்படுத்தி பிரம்மத்தைப் பற்றிச் சொல்லக் கூடிய தகுதியை அளிக்கிறார். உலகத்து ஞானமும், சொத்தும் (செல்வம்), ஆனந்தமும், திறமையும், அறிவும், சக்தியும் கொஞ்சம் பேருக்கு மட்டும் பயன்படாமல் உலகத்திலுள்ள அனைவருக்கும் பயன்படும் ஸ்தாபனம் ஸ்ரீ அன்னை. அந்த ஞானத்தை இந்த அத்தியாயம் மூலமாக பகவான் நமக்கு அளிக்கிறார். அத்திறமையை, ஞானத்தை பகவான் எல்லோருக்கும் கொடுக்கிறார். அன்னை மூலமாகவே நாம் பெற்றுக் கொள்ள முடியும். அதனால் தான் (பகவான்) அன்னை இல்லாமல் ஸ்ரீ அரவிந்தர் இல்லை என்று சொல்கிறோம். அகந்தையின் பார்வைக்கு இந்த பிரம்மமோ. சச்சிதானந்தமோ, ஸ்தாணுவோ, சத் புருஷனோ தெரியாது. உலகத்தில் யார் எதைப் பெற்றுக் கொண்டாலும் அது உலகத்தின் சொத்து. அது எல்லோருக்கும் உரியது. சுயநலமான பார்வைக்கு அன்னை தெரியா. சுயநலமற்ற பார்வைக்கு முதலில் சமுத்திரமும், இரண்டாவதாக ஸ்தாணுவும் அடுத்தாற்போல் சச்சிதானந்தமும் முடிவான பிரம்மமும் தெரியும். சிருஷ்டியின் அமைப்பு எப்படி என்றால் ஒன்று உற்பத்தி ஆனால் அது திரும்பவும் பழைய நிலைக்குப் போகாது. (அரிசி சாதமாக ஆனபின் திரும்ப அரிசியாவது இல்லை). ஒவ்வொரு நிலைக்கும் ஒரு முறை உண்டு. அரிசி சாதமாக உலை கொதிக்க வேண்டும். ஆனால் பகவான் திரும்பப் போகமுடியும் என்கிறார். அது பரிணாமம். சாதம் அரிசியாக முடியுமா என்றால் முடியும். அந்த சித்தி கிடைத்தவருக்கு முடியும். எப்படி? குணம் இல்லாத பிரம்மம் குணத்தை ஏற்று சத் புருஷனாகிறது. அது குணத்தை கடந்ததால் பிரம்மமாகலாம். (மனம்) பகுதியான மனம் பகுதியை விட்டு முழுமையை மேற்கொண்டால் மீண்டும் சத்திய ஜீவியமாகலாம் என்பதை பகவான் சொல்கிறார். கர்மம் என்பது குணத்தால் ஏற்பட்டது. குணத்தை விட்டுவிட்டால் கர்மம் கரைந்து விடுகிறது. வறுமை சில குணக்குறைபாடுகளால் வந்துவிட்டது. வறுமைக்கு உண்டான குணத்தை விட்டுவிட்டால் செல்வம் வந்துவிடும். எந்தக் குணத்தால் நமக்கு வறுமை வந்ததோ அதை ஆராய்ந்து அந்தக் குணத்தை இன்று விட்டுவிட முடிவு செய்து விட்டுவிட்டால் செல்வம் வந்துவிடும். ஆன்மா அகந்தையை ஏற்றதால் சமுத்திரம் தெரியவில்லை. சமுத்திரம் என்றால் என்ன? அது எங்கு உற்பத்தியாயிற்று? (உதாரணமாக) படிப்பு இல்லாதவனுக்கு சட்டம் தெரியாது. அவனுக்கு உள்ள உரிமைகளை அறியமாட்டான். வாக்குரிமை என்றால் என்ன? என்று அவனுக்குத் தெரியாது. சர்க்கார் தரும் சந்தர்ப்பங்களும், சமூகம் அளிக்கும் அளவு கடந்த வாய்ப்புகளும் அவனுக்குத் தெரியாது. அவன் தன்னையும், தன் குடும்பத்தையும் தான் பிறந்து வளர்ந்த சந்தர்ப்பங்களையுமே அறிவான். அவனுடைய பிள்ளை கல்வி கற்று கவர்னர் ஆகலாம் என்று கனவில் கூடப் புரியாது. தலைவனாகி M.L.A.ஆகும் உரிமை அவனுக்குண்டு என்று யார் சொன்னாலும் நம்பமாட்டான். அறியாமை உள்ளவரை சமூகத்தின் விஸ்வரூபத்தை அவன் காண முடியாதது. அதே போல் அகந்தை உள்ளவரை நமக்கு சமுத்திரம் இருப்பதோ. நாமே சமுத்திரம் ஆகலாம் என்பதோ அதைக் கடந்த மூன்று நிலைகளோ (ஸ்தாணு, சச்சிதானந்தம், பிரம்மம்) அவனுக்குக் கனவிலும், கற்பனையிலும் வருவது இல்லை. அறியாமை எளியவன் கண்ணை மறைப்பதுபோல், அகந்தை ஆன்மீக உண்மைகளைக் காணமுடியாமல் தடுக்கிறது. சமுத்திரம் என்பது வாழ்வில் முடிவில்லாத ஆன்மீக வாய்ப்புகள். அந்த அலைகள் நம்மைச் சுற்றி ஏராளமாக எந்த நேரமும் இருப்பதையும் அதனால் நாம் பயன்பெற முடியும் என்பதையும் நமக்கு விளக்க ஏற்பட்ட ஸ்தாபனம் அன்னை. அன்னையே சமுத்திரம். சமுத்திரத்தின் உற்பத்தி ஸ்தானத்தில் உற்பத்தியானவர் அன்னை. சமுத்திரம் என்பது பிரபஞ்சம் முழுவதையும் உற்பத்தி செய்த சக்தி. சமுத்திரம் உலகத்தின் மூலம். ஆதி. நாம் சமுத்திரம் என்று சொல்வது நீராலான சமுத்திரமன்று. சக்தியாலான சமுத்திரம். இது அகண்ட பிரம்மாண்டமான சமுத்திரமானாலும் நம் அகத்துள் தன்னைச் சுருக்கி உறையும் சமுத்திரம். அகந்தையற்ற பார்வைக்கு சமுத்திரம் தெரியும். சிருஷ்டியில் ஒவ்வொரு நிலைமையிலும் ஒவ்வொரு குணத்தை ஏற்று அடுத்த நிலைக்குப் போகிறோம். அந்தக் குணத்தை விட்டு விட்டால் பழைய நிலைக்கு வந்துவிடலாம். சத், குணத்தை விட்டால் பிரம்மம் ஆகலாம். கிருஷ்ணாவதாரத்திற்கு முன் பக்தி இல்லை. அதற்கு முன் ஞானம் தான் இருக்கிறது. கிருஷ்ணன் over mind-ஐச் சேர்ந்தவர். அதுபோல் பிரம்மா, விஷ்ணு, சிவன் over mind gods. இராமாவதாரம் higher mind-இன் கடவுள். சைத்தியப் புருஷன் முதன் முதலில் கோபிகைகளுக்கே உற்பத்தியானது. அதற்கு முன் இல்லை. ஸ்ரீ அரவிந்தரும், மதரும் சுப்ராமெண்டல் அவதாரம். இந்த சமுத்திரம் தெரிவது, ஸ்தாணு தெரிவது நம் யோகத்தின் பகுதி இல்லை. ஆனால் எது தெரிய வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளும் திறமை உண்டு. நமக்குக் கடமை என்னவென்றால், சமுத்திரம் நம் வாழ்வில் பலிக்கும்படி நடக்க வேண்டும். இது நமக்கு ஞானமே தவிர நம் கடமை அன்னைக்கு சரண் அடைவதுதான். அன்னை அன்பராக இருந்து இந்த சமுத்திரம் எல்லோர் வாழ்விலும் பலிக்கும்படியாக நடந்துகொள்ள வேண்டும். அன்னை இஷ்டப்படிதான் நாம் இருக்கவேண்டுமே தவிர நம் இஷ்டம் என்று அங்கு இருக்கக் கூடாது. அன்னை மூலமாகவே அந்த சமுத்திரம் நம் வாழ்வில் பலிக்கும். நமக்கு ஒரு M.L.A. நண்பராக இருந்தால் அதன் வசதியுயம் செல்வாக்கையும் நாம் அறிவோம். நம் கம்பெனி முதலாளி நம்மை Officerஆக மட்டும் இல்லாமல் நண்பராக ஏற்றுக் கொண்டால் அதில்வரும் சந்தோஷம், சௌகரியம், செல்வாக்கு, அந்தஸ்து நாம் அறிந்ததே. Softwareஇல் வேலை செய்பவர் புதிய ideaவுக்கு என்ன power உண்டு என்று அறிவார்கள் சமீபத்தில் Hotline என்பதைக் கண்டுபிடித்தவர் சில ஆண்டுகளில் பல நூறு கோடி சம்பாதித்ததை உலகம் அறியும். இவருக்கு Software technologyஇல் பரிச்சியம் இருந்ததால் இந்தச் செல்வம் அது கொடுத்த வரப்பிரசாதம். Billgates என்பவர் சம்பாதித்ததை நாம் அறிவோம். அவருக்கு organisation உடைய சூட்சுமம் தெரியும். Organisation கொடுத்த அனுக்கிரகம் அவர் பெற்ற செல்வம். உலகில் எதுவும் இல்லாத மக்கள் ஏராளம். ஏதோ ஓர் ஆதரவு உள்ளவர்கள் உண்டு. அவர்கள் பெறும் முன்னேற்றத்தை உலகம் கண்டு ஆச்சர்யப்படுகிறது. இன்று சமூகம் வளர்ந்துள்ள நிலையில் சமூகத்தை அறிந்து ஏற்றுக் கொள்பவர்கள் பெறும் வரப்பிரசாதம் இது. சமூகம் சமுத்திரத்தில் ஒரு துளி. சமுத்திரத்தை அறிந்து ஏற்றுக் கொள்வது பெரியது. சமுத்திரம் அன்னையின் பகுதி. அன்னை நம்மை ஏற்றுக் கொள்ள விரும்பி நாடி வருகிறார்கள். நாம் அவர்களை ஏற்றுக் கொண்டு நம் வாழ்வை அன்னைமயமாக்கலாம். அகந்தை இருந்தால் சமுத்திரம் தெரியாது அகந்தை போனபின் சமுத்திரம் தெரியும். தெரிந்தபின் போன அகந்தை திரும்பி வந்து சமுத்திரத்தை தனக்கு வேலை செய்யச் சொல்லும். அது நமக்கு வேலை செய்யவில்லை என்றவுடன் அதை விட்டு நாம் விலகி விடுகிறோம். இவையெல்லாம் இல்லாமல் இருக்க நாம் அன்னையை ஏற்றுக்கொண்டால் சமுத்திரமான சக்தி நம் வாழ்வில் பலிக்கும்படிச் செய்கிறார். அன்னையைச் சரண் அடைவது என்றால் என்ன? ஏன் அன்னையைச் சரணடைய வேண்டும்? சமூகம் பிரம்மம் போல் அதன் முழு உரிமையுயம் ஓட்டு உரிமை மூலமாகக் கொடுக்கிறது. நாம் ஓட்டை போட்டுவிட்டுப் பேசாமல் இருக்கிறோம். பெறுவது ஓட்டுரிமை, நாடு நமக்குக் கொடுத்தது. நாட்டின் முழு உரிமை. ஒவ்வொரு முறை பிரார்த்தனை பலிக்கும் பொழுதும் அன்னை தன்னை முழுமையாகக் கொடுக்கிறார். நம் பிரார்த்தனை பலிப்பது தெரிகிறது. அன்னை அதன் மூலம் தன்னை முழுமையாகக் கொடுக்கிறார் என்பதே தெரிவது இல்லை. அன்னைக்குச் சரண் அடைந்தால் நாம் அன்னையாகிறோம். அன்னை என்பது ஜீவியத்தின் ஸ்தாபனம். சமுத்திரத்திற்கு நாம் முக்கியம் என்பது தெரிய வேண்டுமானால் நம்மால் முடிந்த காரியங்களை சமுத்திரத்திடம் விடவேண்டும் அப்படி விட்டால் மனை வாங்கவேண்டும் என்னும் போது, வீடு ரிஜிஸ்டர் ஆனது போல் நடக்கும். அதே போல் எல்லாக் காரியங்களையும் சமுத்திரத்திடம் விடும் போது ஸ்தாணு தெரியும். வெளியில் தெரியும் ஸ்தாணுவை உள்ளே பார்த்தால் பிரம்மம் தெரியும். பணத்தை வினியோகம் செய்ய Bank இருப்பது போல் திறமையையும், வாய்ப்பையும் வினியோகம் செய்ய ஸ்தாபனம் உலகில் ஏற்படவில்லை. அந்த ஸ்தாபனமாக அன்னை செயல்படுகிறார். அதை சூட்சுமமாகச் செய்கிறார்.

உலகில் எவர் எதைப் பெற்றாலும் அது அனைவருக்கும் உண்டு என்று சொன்னோம். பைபிளை மக்கள் படிக்கக் கூடாது என்ற காலம் இருந்தது. பிரிண்டிங் வந்தபின் பைபிள் அனைவருக்கும் கிடைத்துவிட்டது. டெக்னாலஜி முன்னேறும் பொழுது சமூகத்தின் கட்டுப்பாடுகள் உடையும். தான் கண்டுபிடித்தது தனக்கு மட்டுமே என்ற காலம் மாறி எவர் கண்டுபிடித்தாலும் நாட்டின் சொத்து என்று வந்துவிட்டது. நம் வீட்டுத் தோட்டத்தில் 3 சந்தனமரங்கள் இருந்தால் அவை நமக்குரியன இல்லை. அது சர்க்காருக்குரியது. செய்திகளை மறைக்க முடியாது என்பதால் விபரம் தெரிந்தவர் விபரம் தெரியாதவரை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. நமக்குத் தேவையான செய்திகளை Internet கொடுப்பது போல் அன்னையை அழைத்தால் நமக்குத் தேவையானது கண்முன் வருவது அன்பர்கள் அறிந்தது. அன்னையை அழைப்பதற்குப் பதிலாக அந்தக் காரியத்தை அன்னையிடம் ஒப்படைப்பது சிறந்தது. நம் வாழ்வையே அன்னையிடம் ஒப்படைக்கலாம். தமது வாழ்வையும், உழைப்பையும், உயிரையும், ஆன்மாவையும் அர்ப்பணம் செய்பவர்கள் அன்னையின் குழந்தைகள். மற்றவர் அர்த்தமற்ற சூன்யம் என்று அன்னை கூறுகிறார். அதை நம் பிரார்த்தனையின் பலனாகப் பெறுகிறோம். பிரார்த்தனைக்குப் பலனாக அன்னை கொடுப்பதை அன்னை என்னும் ஸ்தாபனம் அன்பருக்குக் கொடுக்கும் உரிமை என்று புரிந்தால் ஸ்தாபனத்திற்குள்ள அவ்வளவு திறமைகளையும் நாம் தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டால் பெற முயலலாம். திறமை, படிப்பு, ஞானம், அதிர்ஷ்டம், பாட்டு, பரிசு ஆகியவற்றை அன்னை நமக்கு இதன் மூலமாகத் தருகிறார்கள்.

பிரம்மம் என்பது சிருஷ்டிக்கு அப்பாற்பட்டது. பிரம்மம் சிருஷ்டிக்கஆரம்பிக்கும் போது அது முதலில் சிருஷ்டித்தது சத் புருஷனை. சத் புருஷன் மனத்திற்கு க்ஷர, அக்ஷர பிரம்மமாகவும், தெய்வத்திற்குப் புருஷனாகவும் தோன்றுகிறார். அக்ஷர பிரம்மத்துள் க்ஷர பிரம்மம் அடக்கம். அக்ஷர பிரம்மம் புருஷோத்தமனில் அடக்கம். சத் புருஷன் தன்னைப் பிறராக (objective) பார்த்தால் ஏற்படுவது சத்தியம். சித் என்பது சத் புருஷனுடைய அடுத்த நிலை. ஆனந்தம் சித்துடைய அடுத்த நிலை. சத்திய ஜீவியம் (சத்) சச்சிதானந்தத்தின் அடுத்த நிலை. மனம் அடுத்தது. வாழ்வும் உடலும் அடுத்த அடுத்த நிலைகள். உடல் முழுவதும் பொய். வாழ்வில் பொய் அதிகம். சத்தியத்தையும் சத் புருஷனையும் தொடர்புபடுத்துவது ஆன்மா (spirit). பிரம்மம் முதலில் சிருஷ்டிக்க ஆரம்பித்து சத் புருஷனை சிருஷ்டித்ததால் அது குறையவில்லை. சத் புருஷன் சத்தியமாக மாறுவதும், சித்தாக மாறுவதும் வேறு வேறு. மனம் மெய்யை நேரடியாக அறிய முடியாது, (trial and error) மூலம் அறியும். செய்து பார்த்து அறியலாம். நம் மனதில் ஆரவாரம் இருக்கும்வரை சிந்திக்க முடியாது. சிந்திக்க வேண்டுமானால் ஆரவாரம் அடங்கவேண்டும். அதே போல் சிந்தனை போய் மௌனம் வந்தால்தான் ஆன்மா வெளிப்படும். சிந்தனை இருக்கும் வரை ஆன்மா வெளிப்படாது. ஆன்மா முக்கியம். ஆனால் முழுமையல்ல. முழுமை என்பது ஜீவன் (ஜீவன் = mind+vital+body+soul). முழுமை என்பது சைத்தியப் புருஷனுக்குள்ளது. சைத்தியப் புருஷன் ஆன்மாவிலிருந்து வந்ததானாலும் (ஆன்மா முழுமை இல்லை) சைத்தியப் புருஷனுக்கு முழுமை உண்டு. மனிதனுடைய ஆத்மா ஜீவாத்மா. இது ஆதியும், அந்தமும் இல்லாதது. வளர்ச்சியற்றது. அதாவது இதற்குப் பரிணாமம் இல்லை. மேல் உலகத்திற்கு மட்டும் உரியது. மனித வாழ்வில் பங்கு கொள்ளாதது.சைத்தியப் புருஷன் பரிணாமத்தில் ஜீவாத்மாவின் பிரதிநிதி. பிரகிருதியின் பரிணாமச் சாரத்தைத் தன்னுள் சேர்ப்பது. சைத்தியப் புருஷன் பிரகிருதியின் ஆத்மா (Being of the Becoming). பரிணாமம் என்பதால் சைத்தியப் புருஷனுக்கு முழுமையுண்டு. இது மனதில் ஆரம்பித்து (double opening) மேலும் கீழும் போகிறது. முடிவாக ஈஸ்வரனை அடைகிறது.

ஜீவாத்மா, கடைசிவரை ஜீவாத்மாவாகவே இருக்கும்.

சைத்தியப் புருஷன் முதலில் ஜீவியமாக மனதில் ஆரம்பிக்கும், வளரும், உருவம் பெற்று ஜீவனாகும்.

இம்மாற்றம் நிகழும் பொழுது மேல் நோக்கியும், கீழ்நோக்கியும் செல்லும்.

கீழே உடன் சைத்தியப் புருஷனாகும். மேலே ஈஸ்வரனாகும்.

எனவே இதற்கு முழுமையுண்டு.

 
 
 
 
 

ஜீவாத்மாவைக் கல்லூரிப் படிப்பு எனவும் சைத்தியப் புருஷனை தொழிற்கல்வி எனவும் கூறலாம். முழுவதும் பொருத்தமானதன்று. கல்லூரிப் படிப்பு வாழ்க்கைக்கு உதவாது. தொழிற்கல்வி வேலை பெற்றுத் தரும். சொந்தமாகச் சம்பாதிக்க உதவும்.

சைத்தியப் புருஷன் நம்மை சத்திய ஜீவியத்திற்கு அழைத்துச் செல்லும். மனம் பகுதி பகுதியான மனம் சிந்திக்கும் வரை முழுமை கிடையாது. பகுதி சிந்திப்பதை நிறுத்தினால் முழுமை சித்திக்கும். அப்போது சத்திய ஜீவியத்தை அடையலாம்.சிந்தனை நின்றால் ஆனந்தம் வரும். ஆனந்தத்தை நாடவில்லை என்றால் 'சித், தாகிவிடும். (நம்மை நாம் உணர முயலவில்லை என்றால் சத்தாகிவிடுகிறோம்.) நாம் (ego)* இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என்றால் பிரம்மமாகிவிடுகிறோம்.


* நாம் (ego) அகந்தையாக இல்லாவிட்டால் அது கீதை கூறும் பிரம்ம நிர்வாணமாகும். அப்பொழுது தெரிவது cosmic self கடவுள். சத் புருஷனாக இல்லாவிட்டால் சத் புருஷன் பிரம்மமாகிவிடும்.


மனத்தால் பொய்யை விலக்கினால் செய்யும் காரியங்கள் 100 மடங்கு அனுமதித்தால், அந்த மெய் நம்மை சத் புருஷன் உள்ள இடமான சத்தியத்திற்குக் கொண்டு போகும். மெய் சொல்வது என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம். கண்ணால் கண்டதை, காதால் கேட்டதை மாற்றாமல் சொல்வது மெய். அதை மட்டும் இங்குக் குறிப்பிடவில்லை. ஒருவர் தம் அண்ணனுடைய சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தினால் அவனுடைய வாழ்வின் அடிப்படையில் உண்மையில்லை. அவர் தாமே சம்பாதிப்பதாக நடித்தால் அது பெரிய பொய். அண்ணன் சம்பாதிப்பதை ஏற்றுக் கொண்டு அவர் வாழ்வை நடத்தினால் அவர் வாழ்வே பொய் என்பதால் அவர் சொல்லும் மெய் அனைத்தும் மெய்யாகாது. ஊரில் நியாயம் பேச, மத்தியஸ்தம் பேச இவர் போன்றவர்களை அழைக்கமாட்டார்கள். இவர் வாழ்வின் அடிப்படை பொய். அது குடும்ப வாழ்வு. அதுபோல் மனத்துக்குரிய வாழ்வுண்டு. அதன் அடிப்படைகளை நாம் சோதனை செய்தால் சில உண்மைகளாகவும், பல பொய்களாகவும் இருக்கும். உதாரணமாக ஒரு விஷயம் நடந்த பிறகு அதிலுள்ள உண்மையை எவரும் கூற மறுத்தால் நாம் மற்றவர்களை ஒட்டிப்போவோம் என்றால் நம் மன வாழ்வின் அடிப்படை பொய். மன வாழ்வின் அடிப்படை அனைத்தும் மெய்யாக இருப்பவர்கள் கூறுவதே மெய்யாகும். அதற்கு அடுத்தாற்போல் ஆத்மாவின் அடிப்படையிலுள்ள வாழ்வுண்டு. ஆத்மா இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்வது மெய். தனக்கு மட்டும் மோட்சம் தேடுவது மெய்யாகாது. மெய் என நாம் கூறுவது மன வாழ்வு (அகவாழ்வு), ஆத்மாவினுடைய வாழ்வு உண்மையான அடிப்படையில் இருந்தால் நம் சொற்கள் சத்தியமாகும். **ரிஷிகள் தவம் செய்து அடைந்த அக்ஷர பிரம்மத்தை மெய்யை மட்டும் சொல்வதால் நாம் பொய்யை விலக்கிய நேரம் அடையலாம்.


** நிரந்தரமாக இதை அடைவது சத், சித், ஆனந்தமான சச்சிதானந்தத்தை சத்திய ஜீவியத்தைக் கடந்த சச்சிதானந்தத்தை அடைவதாகும்.


  1. செயல் அடங்குவதால் வாழ்வு ஏற்படுகிறது.
  2. ஆர்ப்பாட்டம் அடங்கினால் மனம் ஏற்படுகிறது.
  3. சிந்தனை அடங்கினால் சத்திய ஜீவியத்திற்குச் செல்லலாம்.
  4. ஞானத்தைத் தேடவில்லை என்றால் 'சித் ஆகிறோம்.
  5. ஆனந்தத்தையும் தேடவில்லை என்றால் 'சித் ஆகிறோம்.
  6. தன்னை உணரத் தேவையில்லை என்றால் 'சத் ஆகிறோம்.
  7. நம்மை வெளிப்படுத்த அவசியம் இல்லை என்றால் அல்லது நாம் இருக்கவேண்டாம் என்றால் பிரம்மம் ஆகிவிடுகிறோம்.

1. காலமும் இடமும்

இடம் என்பது புறம்.

அகம் என்பது காலம்.

புறத்தைக் கடக்கலாம். (உ.ம்) வெளியிலுள்ள ஜடப்பொருட்களை நகர்த்தலாம், தூக்கலாம். அகம் என்பது உள்ளே என்பதால் அகத்தைக் கடக்க முடியாது. அது நம்மை நாமே தூக்குவது போல் ஆகும். யோகியால் அது முடியும். அதுபோல் காலத்தைக் கடப்பது என்றால் கடந்த காலம் எதிர்காலம் நிகழ்காலம் சேர்ந்தது காலம் என்பதால் கடந்ததை நினைக்காமல் வருவதை எதிர்பார்க்காமல் நிகழ்காலத்தில் நாம் நம்மை மறந்துவிட்டால் நாம் காலத்தைக் கடப்பதாக அர்த்தம்.

கடந்ததைக் கைவிட வழி : வேலையை நாம் மேலோட்டமாகச் செய்கிறோம். வேலையை முழு ஈடுபாட்டுடன் நாம் செய்வது இல்லை. (உ.ம்) சமைக்கும் போது பேசுவது T.V. பார்த்துக் கொண்டே சாப்பிடுவது.

2. பிரம்மம் என்பது சொல்லுக்கு அகப்படாது. அதை அடையலாம். விளக்க முடியாது என்று வேதகாலத்திலிருந்து இன்று வரை கூறுகிறார்கள். ஆனால் அதையும் விளக்கலாம் என்று பகவான் கூறுகிறார். விவரிக்கலாம் என்கிறார். அதை விளக்கும்போது ஆன்மா வெளியில் வந்து கேட்டுக் கொள்ளும். பிறருக்கு ஆன்ம விளக்கம் கொடுக்க முடியும் என்பவரால் பிரம்மத்தை விளக்க முடியும். குரு சிஷ்யனுக்குப் பிரம்மத்தை மௌனமாக விளக்கலாம். சொல்லால் சொல்ல முடியாது.

சத், சித், ஆனந்தம் என்பது பிரம்மம். களி மண்ணிலிருந்து பானை செய்கிறோம். பானை செய்ய களிமண் தேவை. துணி தைக்க நூல், ஊசி தேவை. இவை எல்லாமே ஜடப்பொருட்களுக்கு உண்மை. கதை சொல்ல கற்பனை தேவை. இதற்கு ஜடப்பொருள் தேவையில்லை. அறிவு கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும் அறிவால் பேசும் பேச்சு காதிற்குக் கேட்கும். அறிவு ஜடத்தைவிட உயர்ந்தது. சூட்சுமமானது. ஆன்மா அறிவைவிட உயர்ந்தது. ஜடத்தில் உற்பத்தியாவதைவிட அறிவில் உற்பத்தியாவது நீண்டகாலம் இருக்கும். அறிவு உற்பத்தி செய்தால் ஞானமுடையதாக இருக்கும். அறிவுக்கே எட்டாதது ஞானம். கண்ணுக்குத் தெரியும் பானை, கண்ணுக்குத் தெரியாத கதை ஆகியவற்றை கடந்தது ஆன்மா. ஆன்மா உற்பத்தி செய்வது ஞானம். ஞானம் உற்பத்தி செய்வது தத்துவம். ஆன்மா என்பது சத்தியத்திற்கும் சத் புருஷனுக்கும் இடையில் உள்ளது. அறிவு கண்ணுக்குத் தெரிவது இல்லை. ஆன்மா அறிவிற்குத் தெரிவது இல்லை.

ஆன்மாவை உற்பத்தி செய்தது சத் புருஷன். அது அறிவு, உணர்வு இரண்டிற்கும் தெரியாது. அந்த சத் புருஷனை உற்பத்தி செய்தது பிரம்மம். அதைவிடப் பெரியது. எவ்வளவுக்கு எவ்வளவு தெரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பெரியது. தெரியாததைத் தெரியவைப்பது அறிவு.

1. முரண்பாடு உடன்பாடு

மனிதனுக்கு அவன் திறமை அவனையறியாமல் தெரியாமல் வெளிப்பட வேண்டும். நம் திறமையை வெளிப்படுத்தும் அறிவே நமக்கு இருப்பது இல்லை. திறமை வெளிப்பட்டால் அவன் பெரிய மனிதனாக வருவான். திறமை உச்சகட்டத்தில் பரிமளிக்க நம் குறைகள் தெரிவது அவசியம் அவற்றை விலக்கவேண்டும். நம் குறையை மற்றவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை ஏற்று நம் குறையை உணர்ந்தால் நம் குறை நிறைவாகத் திருவுருமாறிவிடும். அதுவே முரண்பாட்டை உடன்பாடாக மாற்றுவது நம் குறை நிறைவாகத் திருவுறுமாறிவிடும். அதுவே முரண்பாட்டை உடன்பாடாக மாற்றுவது ஆகும். பொய் சொல்லுவது இல்லை என்ற முடிவை எடுத்தால் 10 மடங்கு வருமானம் வரும். 10 மடங்கு வருமானம் யாருக்கு வருகிறதோ அவர்களிடம் உண்மை இருக்கிறதாக அர்த்தம்.

2. நாத்திகனின் மறுப்பு

ஜடமும் ஆன்மாவும் ஒன்று. பொருட்களை ஜீவனுள்ள பொருட்களாகக் கருத வேண்டும். நாம் வீடு என்றால் பொருட்களை (ஜடம்) அஸ்திவாரமாக வைத்திருக்கிறோம். ஆன்மாவை அஸ்திவாரமாகக் கொள்ள ஆன்ம விழிப்பு வேண்டும். ஆன்ம விழிப்பு என்றால் என்ன? ஒரு வேலை செய்யும்பொழுது ஆன்ம விழிப்பு இருக்கிறதா என்று தெரியவேண்டும். மனச்சாட்சியைக் கவனிப்பது போல் ஆன்மாவைக் கவனிக்கத் தெரியவேண்டும். ஆன்ம விழிப்புள்ளவர் இனிமையாகப் பேசுவார்கள். உண்மையாகப் பேசினால் ஆன்மாவில் இனிக்கும். கடுமையான சொல் வந்தால் ஆன்மா கறுப்பாக இருக்கும்.

சத் புருஷன்

மனதில் எண்ணங்கள் இருக்கின்றன. அறையில் காற்று இருக்கிறது என்றால் காற்று எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறது. உலகில் உள்ள காற்று நம் அறையிலும் இருக்கிறது. நம் உடல் உள்ள எல்லாப் பாகங்களிலும் காற்று இருக்கிறது. காற்று எப்படிப் பரவியிருக்கிறதோ அப்படி எண்ணங்கள் பரவியுள்ளன. அறையில் உள்ள காற்றை எப்படி வெளியேற்ற முடியாதோ அதைப்போல் நம் மனதிலுள்ள எண்ணங்களை வெளியேற்ற முடியாது. அறையில் உள்ள காற்றை அகற்ற (Vacuum) மெஷின் வைத்து அகற்றவேண்டும் அதற்குரிய நுணுக்கத்துடன் அம்முறையைக் கையாள வேண்டும். அதற்கு நாம் விஞ்ஞானியாகவோ, இன்ஜினீயராகவோ இருக்கவேண்டும். மனத்திலுள்ள எண்ணத்தை வெளியேற்ற நிஷ்டையை மேற்கொள்ளவேண்டும். அவை காற்றில்லாமலிருப்பதும், மனம் எண்ணமில்லாமலிருப்பதும் ஒன்று. விஞ்ஞானி அறையில் காற்றை அகற்ற வேலை செய்ய வேண்டும். யோகி அதுபோல் நிஷ்டையில் ஜபத்தை மேற்கொள்ளவேண்டும். 18 வருஷ தவத்தில் மௌனம் பலிக்கும் என்கிறார்கள். இந்த சித்தியை சமாதியைத் தரிசிப்பவருக்கு அன்னை வழங்குகிறார். இப்படி ஒரு விஷயமிருப்பதும் நாமறியோம். நாம் இவற்றை எல்லாம் அன்னையிடம் கேட்பதில்லை. இவையெல்லாம் பெற நாம் அன்னையின் கட்சியில் மெம்பராக இருக்கவேண்டும். அசைபோடும் மனம், அலைபாயும் எண்ணமுள்ள வாழ்வில் உறுப்பினராக இருக்கிறோம்.

மனத்தில் மௌனம் குடி கொள்வது முனிவர் நிலை. அலைபாயும் எண்ணம் நிற்பது முதற் கட்ட மௌனம். வெளியிலிருந்து வரும் எண்ணத்தை நிறுத்தலாம். நம் உள்ளிருந்து எழும் எண்ணங்கள் அடுத்த கட்டம். அது கடினம். சிந்தனையற்றுப் போகும் மனம் பெரிய மனம். அதற்கடுத்தும் உண்டு. மனம் உள்ளவரைதான் இவ்வளவும், மனமே கரைவது நிர்வாணம். அதற்குமேல் சத்திய ஜீவிய மௌனம் உண்டு.

இளம்பெண் அடிக்கடி கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது போல் நாம் அடிக்கடி, நம்மையும், நம் குடும்பத்தையும், வேலைகளையும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது என்ன? நாம் நம்மை நினைப்பதுபோல், அன்னையை நினைப்பவர் பக்தர். நமக்காக அன்னையை நினைப்பது சுயநலமான பக்தி. அன்னையை அன்னைக்காக நினைப்பது பக்தி. மனம் நினைக்கும்வரை அது மனத்தின் பக்தி. உணர்வின் பக்தியுண்டு. ஆன்மாவிற்கும் பக்தி உண்டு. சைத்தியப் புருஷனின் பக்தி, பக்திக்குரிய இலட்சணம் உடையது. நம் இன்றைய வாழ்வை ரசித்து அனுபவிப்பவர் அன்னைக்குகந்தவரில்லை. அதை ரசிக்கக் கூடாது. அதை ரசிக்கும் வரை அங்கு அன்னையிருக்கமாட்டார்கள்.

நாம் சிறுபிள்ளையாய் இருக்கும்போது ஓடிவிளையாடி, உருண்டு புரண்டதை ரசித்தோம். வயது வந்தபின் அப்படிச் செய்வதில்லை. உணர்வில் சிறுபிள்ளையாய் இருப்பவர்கள் ஆர்ப்பாட்டமான வாழ்வை ஆர்வமாக ஏற்று திளைக்கிறார்கள். அது (child soul) பாலகனான ஆத்மாவிற்குரியது. நிதானம், அமைதி வளர்ந்த ஆத்மாவிற்குரிய முறை. ஆத்ம வளர்ச்சி இல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பது தவறல்ல. ஆனால் அழகல்ல, நமக்காக அன்னையை நினைப்பது சுயநலமான பக்தி, ஆனாலும் அன்னையைத் தெரியாமல் இருப்பதைவிட உயர்ந்தது. அன்னையை அறிந்த பிறகு அன்னைக்காக அன்னையை நினைப்பது ஆண்டாள், மீரா பக்தியை போன்றது. நாம் எப்படி அன்னையை அணுகினாலும் அன்னை நம்மை அப்படியே ஏற்கிறார். நம்முடைய வயதிற்கும், படிப்பிற்கும், அந்தஸ்திற்கும், ஆன்ம விழிப்பிற்கும் ஏற்றவாறு அன்னையை அணுகுவது சிறப்பு.

வாழ்வு என்றால் என்ன? உடலாலான வாழ்வு என்பது உழைப்பாளியின் வாழ்வு. Vital (பிராணன்) வாழ்வு என்பது கடைக்குப் போவது, தரிசனத்திற்குப் போவது ஆர்ப்பாட்டமான வாழ்வு. ஒரு யோசனைப்படி வாழ்பவர் (mental life) மனத்திற்குரிய வாழ்வை வாழ்பவர் மூளை வேலைக் செய்பவர். ஆன்மீக வாழ்வு என்பது பூஜை, தியானம், நிஷ்டை ஆகியவை. அவற்றிற்கு ஒத்துவராததை விட்டுவிட்டு ஆன்மாவிற்குத் தகுந்தபடி வாழ்பவர்கள் அவர்கள். உதாரணமாக இப்படிப்பட்டவர்களை டாக்டர் முட்டைச் சாப்பிடச் சொன்னால், அடுத்தாற்போல் அந்த டாக்டரிடமே போகமாட்டார்கள்.

மேல் மனம் (surface mind) ஆழம் (depth) என மனத்தில் இருநிலைகள் உள்ளன. மேல்மனத்திற்குரிய அம்சங்கள் 5. மேல்மனம், மனம், அகந்தை, சிறியது, காலம். (Surface, mind, ego, finite, time)

மேல்மனத்திலிருந்து உள்ளே போனால் (inner mind) உள்மனம் உண்டு. அதனுள் அடிமனம் (subliminal mind) உண்டு. மேலேயிருந்து உள்ளே போக நாம்.

  • அகந்தையை விட்டகன்று சைத்தியப் புருஷனை நாட வேண்டும்.
  • காலத்தைக் கடக்க வேண்டும்.
  • சிறியதை விட்டுப் பெரியதாக வேண்டும்.
  • மனத்தைக் கடந்து சத்திய ஜீவியத்தை எட்டவேண்டும்.

விகாரத்தில் அழகைக் காண்பவன் கவி. நம் எண்ணம், செயல், உணர்ச்சி, உடல், மனம், ஆத்மாவுக்கு உள்ள ஆணவ மலம் இல்லாமலிருந்தால் ஆன்ம விழிப்பு வரும். ஆன்மவிழிப்பு உள்ளவர்க்கு பிறரின் ஆத்மா ஒளியாகத் தெரியும். அதிகமான பேரின் ஆத்மா தெரிந்தால் ஹிருதய சமுத்திரம் தெரியும். நாம் சுத்தமாக இருந்தால் ஆன்மா வெளிவரும். ஹிருதய சமுத்திரம் சிந்தனையாளனுக்கு சிந்தனைக் கடலாகத் தெரியும். கவிக்கு செய்யுள் மழையாக எழும். காவியம் அது. கலைஞனுக்கு ஓவியக்குவியலாகவும், புதையலாகவும் தெரியும். யோகிக்கு ஹிருதய சமுத்திரமாகத் தெரியும்.

ஆன்ம விழிப்பு யார் யாருக்கு எப்படித் தெரியும்?

  1. என்னை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் நீங்கள் தான் என்று ஒருவர் நம்மிடம் சொன்னால் நமக்கு ஆன்ம விழிப்புண்டு என்று பொருள். ஆன்ம விழிப்பு முழுமையாக இருந்தால் உலகம் ஹிருதய சமுத்திரமாகவும், ஜடப்பொருள்கள் சக்தியலைகளாகவும், மனிதர்கள் உருவம் கரைந்து சக்தி வடிவமாகவும் தெரியும். ஓரளவு இருந்ததால் ஒரு அம்சம் தெரியும். பிறரை சரியாகப் புரிந்து கொள்வது ஒரு அம்சம்.

  1. ஆன்ம விழிப்புள்ளவர்கள் பிறரை சந்தித்தால் அவர்களுடைய ஆசை, அபிலாஷை, சோகம், துக்கம், சந்தோஷம் தெரியும். அவற்றைப் பூர்த்தி செய்ய முயல்வார்கள். ஆன்ம விழிப்புள்ளவரை சந்தித்த பின் ஆசைகள், தேவைகள் தானே பூர்த்தியாகும்.
  1. ஆன்ம விழிப்பிற்கு அடுத்த நிலை சத்தியம். சத்தியத்தை மனம் ஏற்றுக்கொண்டால் அவனுக்குப் பிறர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அம்சமிருக்கும் (சத் ஆன்மாவாகி சத்தியமாகிறது.)

சத்தியம் - அகம் என்ற சத் தன்னைப் புறமாகப்

பார்ப்பது சத்தியம். இவற்றை இணைப்பது ஆன்மா. (சத் ---- ஆன்மா --- சத்தியம் 

  • ஆன்ம விழிப்புள்ளவர்கள் செய்யும் செயல் பிறருக்கு ஆனந்தம் தரும்.

காலத்திற்குள் இருக்கும்வரை ஹிருதய சமுத்திரம் தெரியாது. அடை, இட்லி, தோசை, உப்புமா, அதிரசம் எல்லாமே அரிசியில் செய்தவை என்றாலும், நமக்குள் இவற்றுள் உள்ள அரிசி தெரியாது. அரிசி இருக்கிறது என்று அறிவுக்குத் தெரியும், கண்ணுக்குத் தெரியாது. அரிசி தெரிய வேண்டுமானால் முன் கட்டத்திற்குச் செல்ல வேண்டும். அதாவது அடை, இட்லி, தோசைக்கு அரிசியை ஊறப்போடும் கட்டத்தில் பார்த்தால் அரிசி தெரியும். ஹிருதய சமுத்திரம் அரிசி எனில் நாம் பார்ப்பது ஹிருதய சமுத்திரம் இல்லை. காலத்தைக் கடந்து சென்றால் ஹிருதய சமுத்திரம் தெரிகிறது. காலத்துள்ளிருக்கும் பொழுது பொருள்களும், மனிதர்களும், இட்லியும், தோசையும் தெரிகின்றன.

T.V.க்குப் பின்னால் உலகம் இருப்பது போல் (T.V பார்க்கும் பொழுது நமக்கு T.V. மட்டுமே தெரிகிறது), உலகத்திற்குப் பின்னால் ஹிருதய சமுத்திரம் உள்ளது. ஹிருதய சமுத்திரத்தைக் காணும் ஆத்மா பெரிய ஆத்மா. நாம் பார்க்கும் T.V. நம்மைப் போன்ற மனிதர்கள் உற்பத்தி செய்தது. ஹிருதய சமுத்திரத்தைப் பார்க்கக் கூடிய ஆன்மா உலகத்தை சிருஷ்டிக்கவல்லது.

ஹிருதய சமுத்திரம் நம் கண்ணுக்குத் தெரிந்தால், எல்லாமே அர்த்தமற்றதாகிவிடும். அறிவுச் சொல்வதை உணர்வு ஏற்றுக் கொள்ளாது. அறிவு புரிந்து கொள்வதற்கு உணர்வு ஒத்துழைக்கும். உணர்வு ஒத்துழைக்காவிட்டால் அறிவுக்குப் பலன் குறைவு. அறிவு செயல் செயல்படாது.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தவன் நகரத்தின் நவீன தேவைகட்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மாற்றிக் கொள்கிறான். நாம் பிரவாகத்தைக் கண்ணுற்றால், அதற்குத் தகுந்தாற்போல் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்யும் பொழுது நமக்கு என்ன வசதியுண்டு என நினைப்பது குறுகிய மனப்பான்மை. அது நடக்காது என்று புரிந்தவுடன் அதை விட்டுவிடுகிறோம்.

படிக்காதவன் படித்தவனைவிட அறிவுள்ளவனாகப் பேசுவது, பணக்காரன் முன் ஏழை தன் 'பெரிய வசதியை விவரிப்பது, நாம் காணக் கூடியவை. இது எல்லோரிடமும் இருப்பதால் நம்மிடமும் இருக்கும். தத்துவத்தை அடிக்கொண்டு ஆராய்ச்சி செய்தால்.

யாராவது ஒருவரிடம் ஒரு குணமிருந்தால் அது அனைவரிடமும் இருக்கும்.

நம்மிடம் இருப்பதைக் கண்டுபிடிப்பது நமக்கு உதவும். கண்டுபிடிப்பது ஞானம், விலக்குவது சித்தி. கண்டுபிடித்தவன் அதை விலக்குவது அறையிலுள்ள காற்றை விலக்குவது போலாகும். அக்குறையை விலக்கியபின் ஏற்படுவது அடக்க உணர்வு. அடக்கத்திற்கு ஓர் அடையாளம் உண்டு. அவை பல நிலைகளில் உள்ளன.

  • நம்மைவிட உயர்ந்தவர் பாராட்டு.
  • உடனிருப்பவர் இத்தனை நாளில்லாமல் இன்று நம் திறமையை ஏற்பது.
  • எதிரிகளும் பாராட்டுவது.

எல்லாப் பெரிய மனிதர்கட்கும் தாங்கள் பெரியவர்கள் என அறிவார்கள் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

தெரிவது அறிவுக்குரியது. நினைப்பது அகந்தைக்குரியது. சமுத்திரத்தின் முன்னால் நாம் தூசி என்பதும், சமூகத்தின் முன் நாம் தூசி என்பதும், எவர் முன்பும், எதன் முன்பும் நாம் தூசி என்பதும் உண்மை. எவருக்கும் பெரிய திறமைகள் உண்டு. அதன் முன் நாம் தூசிதான். மற்றவரின் திறமையைக் காணும் போது நாம் பிறரில் ஆண்டவனைக் காண்கிறோம். அப்பொழுது சமுத்திரத்தின் முன் நிற்கிறோம். நம் பெருமையை உணரும் பொழுது பிறர் நம்மை தூசியாக்கும் நிலைமைக்கும் வந்தது விடுகிறோம்.

  • ஆண்டவனைக் காண்பது ஆத்மா.
  • நம்மைக் காண்பது அகந்தை
  • நம்மை தூசியாகக் காணும் பொழுது நம் திறமை அபரிமிதமாக வளரும். வெளிவரும். நம் செயல் இனிமையாக இருக்கும்.
  • கடுகு போன்ற மனிதன் முக்கியம்.

பெரிய மெஷினுக்குச் சிறு ஆணி முக்கியம். இவ்வளவு பெரிய உடல் ஒரு சிறு முள்ளையும் தன் உடல் அனுமதிக்காது. முழு மனிதன் கண்ணோட்டத்தில் முள்ளை அறிவது ஞானம். முள்ளின் கண்ணோட்டத்தில் உடலை அறிவது அஞ்ஞானம். அணு சிறியது. அதனுள் உள்ள சக்தி பெரியது. மரத்தைத் துண்டு செய்தால் சக்தி வெளிவருவது இல்லை. அணுவைக் பிளந்தால் பெருஞ்சக்தி எழுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு அணு சிறியதோ, சக்தி அவ்வளவுக்கவளவுப் பெரியது.

ஞானம், அஞ்ஞானம்

இறைவன், உலகம் என்று சிருஷ்டியை வேதத்தில் இரண்டாகப் பிரித்தனர்.

  • இறைவனை அறிவது ஞானம். (சித்தி)
  • இறைவனை அறியாதது அஞ்ஞானம் என்றனர். (அசித்தி)
  • இறைவனை அறிவது ஞானம்.
  • உலகத்தை அறிவது அஞ்ஞானம் என்பதை வித்யா, அவித்யா என்றனர்.

ஸ்ரீ அரவிந்தம் ஞானம் சிருஷ்டியில் அஞ்ஞானமாயிற்று என்று கூறுகிறது. Knowledge,Ignoranceஎன்ற சொற்களால் அதைக் குறிக்கிறார்.

சத்தியத்தின் பிறப்பிடம் சத், சத்தியம் சிருஷ்டியில் அசத்தாயிற்று. மெய் சிருஷ்டியில் பொய்யாயிற்று.

அன்று மனிதன் பொய் சொல்லாவிட்டால் சத்தியமானவனாக இருப்பான். போகிற கதிக்கு நல்ல கதிக்குப் போவான். இன்று அன்னையை ஏற்றவர் பொய்யை கைவிட்டால், அறவே கைவிட்டால், பொய் மெய்யாகத் திருவுறுமாறும், நாம் சத்தியத்தின் ஆரம்பமான 'சத் என்பதை அடைவோம்.

பிரம்மம் முழுமை

  • பிரம்மத்திற்கு எதுவும் இல்லை. எதனாலும் விளக்க முடியாது.
  • எதுவுமில்லாத பிரம்மத்திற்கு அனந்தம் உண்டு.
  • பிரம்மத்திற்கு ஜடத்தன்மையோ, சூட்சுமமோ, காரணதேகமோ இல்லை.
  • எதுவுமில்லாத பிரம்மம், எல்லாவற்றையும் (பிரபஞ்சத்தை) சிருஷ்டிக்கும்.
  • அப்படி சிருஷ்டிப்பதால் குறையாது. அதன் அனந்தம் அதைக் குறையவிடாது.

எதனாலும் விவரிக்க முடியாது பிரம்மம், எந்த அம்சமுமில்லாத பிரம்மம், எதுவுமில்லை என்ற காரணத்தால் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கிறது. அதற்குரிய அம்சம் infinity ஒன்று தான். அந்த அனந்தம் என்பதை முடிவில்லாமல் சிருஷ்டிக்கின்றது. நாம் அந்த பிரம்மம், அப்பிரம்மம் நம்முள் உள்ளது. நாம் அப்படி சிருஷ்டிக்கப்பட்டவர்கள். பிரம்மம் சிருஷ்டிக்காத பிரபஞ்சம் நம்முள் உள்ளது. எதை எதனாலும் விளக்க முடியாதோ, எதற்கு எந்த அம்சமும் இல்லையோ, அக்காரணங்களால், எதனால் எல்லாவற்றையும் சிருஷ்டிக்க முடியுமோ அதுவே பிரம்மம்.

அந்த சிருஷ்டியால் அது குறையாது. நாம் சிறியவரிடம் பேசினாலும், பெரியவரிடம் பேசினாலும், சிறிய வேலை செய்தாலும், பெரிய வேலை செய்தாலும், எந்த இடத்திலும், எந்த நேரமும் நாம் முழுவதுமாகவே அங்கு போக முடியும். பகுதியாகப் போக முடியாது. நம் உடலின் பகுதியை அனுப்பமுடியாது. அதே போல் பிரம்மம் எங்கும், எந்த நேரமும், எந்த வேலையிலும் முழுவதுமாகவே இருக்க முடியும். பகுதியாக இருக்க முடியாது. அதனால் சிறியது பெரியது என்பது இல்லை. ஏனெனில் சிறியதில் இருப்பதும் பிரம்மம். இரண்டும் சமம் என்பதால் சிறியதும், பெரியதும் சமம். சிருஷ்டியில் எறும்பு புற்று சிறியதாகத் தோன்றினாலும், சூரியமண்டலம் பெரியதாக இருந்தாலும் இரண்டும் ஒன்று. பிரம்மம் முழுமை என்பதால் அதற்கு சிறியது பெரியது கிடையாது.

கம்ப்யூட்டரில் ஒரு சிறு வேலை செய்ய வேண்டுமானாலும் முழுக்கம்ப்யூட்டரும் உபயோகப்படுகிறது. டிக்ஷனரியில் எந்த வார்த்தைப் பார்க்க வேண்டுமானாலும் முழு டிக்ஷனரியைப் பயன்படுத்த வேண்டும்.

பிரம்மம் எடுக்க எடுக்க குறையாது. அக்ஷயப் பாத்திரம். நாம் எவ்வளவு பேசினாலும், பேச்சுக் குறைவதில்லை, தீருவதும் இல்லை. பேச்சுத் திறமை வளரும். பாட்டும் அப்படியே. பாடப்பாடப் பாட்டு குறையாது.

ஜடப் பொருள் எடுத்தால் குறையும். அரிசி, சர்க்கரை, கல், மண், தண்ணீர் ஆகியவை எடுத்தால் குறையும். மனத்திலிருந்து படிப்பை எடுத்தால் குறையாது. ஆன்மாவுக்குக் குறையும் தன்மையில்லை.

ஒரு போலீஸ்காரன் வந்தாலும் சர்க்காரின் முழு அதிகாரம் நடக்கும். ஒரு பட்டனைத் தட்டினாலும் முழு கம்ப்யூட்டரும் வேலை செய்யும். பிரம்மம் அதுபோல் எறும்பு மூலமும் முழுவதுமாக வரும். பழத்தைத் துண்டு செய்யலாம். நம் பெயரைத் துண்டாட முடியாது. இனிமையைத் துண்டு செய்ய முடியாது. நாணயத்தை பகுதியாக்க முடியாது.

 இந்த சமுத்திரம் இதன் எல்லாப் பகுதிகளையும் கவனமாகக் கவனிக்கிறது. நமக்கு சமுத்திரம் முக்கியமில்லை. சமுத்திரத்திற்கு நாம் முக்கியம்.

விளையாடும் குழந்தைக்கு விளையாட்டு முக்கியம், தாயின் பார்வை குழந்தையின் மீதிருக்கும். குழந்தைக்கு விளையாடும்போது தாயார் நினைவு வராது. தாயார் முக்கியமாக தோன்றாது. சமுத்திரத்திற்கு நாம் ரொம்ப முக்கியம்.

மனிதன் தன்னைத்தானே கவனித்துக் கொள்வதைவிட குடும்பம் அவனை நன்றாகக் கவனிக்கும். குடும்பமேயில்லாத மனிதனை, குடும்பத்தில் வாழ்பவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது தேவைகள், உடல் நலம், ஆசைகள், பாசம் எப்படிக் குடும்பத்தால் பல மடங்கு அதிகமாக கவனிக்கப்படுகிறது எனத் தெரியும். இன்று சர்க்கார் உத்தியோகஸ்தனுக்கு பென்ஷன் உண்டு. அவனுக்குப் பிறகு குடும்பத்திற்குப் பென்ஷன் உண்டு. ஓய்வு பெறும் பொழுது (gratutity) கிராச்சுவட்டி, P.F, insurance உண்டு. வேலை செய்யும் பொழுது மருத்துவ உதவியுண்டு, தீபாவளி, பொங்கல், போனஸ் உண்டு, L.T.A. உண்டு. சர்க்கார் ஊழியரை கவனிப்பது போல் ஊழியரால் தன்னை கவனித்துக் கொள்ள முடியுமா? சர்க்கார் ஊழியர்களை கவனிப்பது புரியும். சமூகம் கவனிப்பது புரியுமா?

சுமார் 20 அல்லது 30 ஆண்டுகட்கு முன் இருந்த வசதிகளைவிட இன்று அதிகமான வசதிகளை சமூகம் ஏற்படுத்தி, நம் வாழ்வை கவனிப்பதை நாம் அறிவோம்.

சமூகம் மனிதனுக்கு ஆயிரம் வசதிகள் செய்து தருகின்றது. நம்மால் நமக்கு அவற்றை செய்து கொள்ள முடியாது. சமூகத்திற்கு அடுத்தாற்போல் சமுத்திரம். நாம் சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நம் வாழ்வை அதன் கையில் விட்டுவிட்டால் சமுத்திரத்தின் அத்தனை சக்தியும் நம் வாழ்வுக்குப் பயன்படும். அதாவது நமக்கு எவ்வளவு சக்தி வசதி தேவைப்பட்டாலும் சமுத்திரம் தரும்.

  • நம்மைவிட குடும்பம் நம்மை அதிகமாகக் கவனிக்கிறது. குடும்பம் தரும் பயிற்சிகளையும், வசதிகளையும் நாமே குடும்பமில்லாமல் பெற முடியாது.
  • வீட்டில் பயில்வதைவிட பள்ளியில் அதிகமாகப் பயில்கிறோம். பள்ளிப் படிப்பை வீடு கொடுக்க முடியாது.
  • சர்க்கார் தரும் வசதிகளை நாமே பெற முடியாது.
  • சமூகம் தரும் வசதிகளை நாம் சமூகத்தில்லாமல் பெற முடியாது. சர்க்காரும் தர முடியாது.
  • சமுத்திரம் தருபவை அனந்தம். அதை நாமே பெற முடியாது, வீடு தர முடியாது, சர்க்காரோ, சமூகமோ தராது.
  • வீட்டையும், பள்ளியையும், சர்க்காரையும், சமூகத்தையும் நம் வாழ்வை நடத்த அனுமதிப்பதுபோல் சமுத்தித்தை நம் வாழ்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.
  • அடுத்தது அன்னை.

நாம் அன்னையை நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம். அன்னை நமக்கும் தருவதைப் பெற நாம் அன்னையை அனுமதிப்பதில்லை. நம் வாழ்வை அன்னையை நடத்த நாம் அனுமதிக்க வேண்டும்.

நாம் அன்னையிடம் பிரச்சினை தீர்க்க வருகிறோம். வாய்ப்புப் பெற வருவதில்லை. நம் வாழ்வை நாமே நடத்த விரும்புகிறோம். அதற்கு அன்னையின் உதவி தேவை என்கிறோம். அன்னையிடம் நம் வாழ்வை ஒப்படைக்க நமக்கு மனம் வருவதில்லை. அப்படிச் செய்தால், நம் வாழ்வுக்குத் தேவையான அவ்வளவு சக்திகளும் அன்னையிடமிருந்து வரும்.

பிரம்மம் ஆனந்தத்திற்காகவே இவ்வுலகை சிருஷ்டித்தது. ஒரு நிமிடம்கூட ஆனந்தம் தவிர வேறெதுவுமில்லை. ஒரு செயல்கூட இல்லை. பையன் ஹாஸ்டலில் இருப்பது படிப்பதற்காக. வேறெதற்காகவுமில்லை. நாம் பிறவி எடுத்ததே ஆண்டவனைத்தேட. அதை விட்டு நான் ஒழுங்காகக் குடும்பம் செய்கிறேன். என் கடமையை ஒழுங்காகச் செய்துவிட்டேன், என்று பேசுகிறோம். இது சரியில்லை என்றால், எப்படியிருப்பது சரி? பிறந்தபொழுது குழந்தையின் ஆன்மான எப்படி விழிப்பாக இருந்ததோ, அப்படி இப்பொழுது இருக்கிறதா? சமூகம் நம்மை நல்லது செய்ய வற்புறுத்தாவிட்டாலும், கெட்டது செய்ய வற்புறுத்தவில்லை. சமூகம் நம்மைப் பொய் சொல்ல, திருட வற்புறுத்தவில்லை. அதை நாம் செய்யாமலிருந்தால் போதும். கடந்த கால சமர்ப்பணத்தை மேற்கொண்டால் ஆன்மா அந்த அளவில் விழிப்புறும். நாம் நம் கணக்கைச் சரியாகப் போட வேண்டும் என்றால் ஆன்மா விழிப்புடனிருக்க வேண்டும்.

குடும்பம் நிர்ப்பந்தம் செய்யாத தவற்றை செய்யாமலிருந்தால் மனித வாழ்வு சுத்தமாகிவிடும். குழந்தையுள்ளம் நமக்கிருப்பதுதான் நம் கணக்கு சரி எனப்பொருள். சமுத்திரம் இருப்பதாக பகவான் கூறுகிறார். நாம் சமுத்திரத்தைப் பார்க்கவில்லை என்றாலும், இருப்பதாக வைத்துக் கொள்வோம். நாம் சமுத்திரத்திற்கு முக்கியம் என்பதுபோல் நடந்துகொள்ள வேண்டும். சமுத்திரத்தின் சக்தி நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது. அதை நம்பி, அதை உணர்ந்து நடக்க வேண்டும். அந்த சக்தியில் தான் MOTHER பிறந்திருக்கிறார்கள். அந்தச் சக்தியை நினைக்கும் பொழுது, அது நம் வாழ்வில் செயல்படுகிறது. பிரச்சினை மட்டும் வாழ்வல்ல. பிரச்சினையும், வாய்ப்பும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வுக்காக அன்னையை நினைக்கவேண்டும். மனத்திற்காக அன்னையை நினைக்க வேண்டும். ஆன்மாவுக்காக அன்னையை நினைப்பது சரியான கணக்காகும்.

அறியாமை

அஞ்ஞானம், அறியாமை என்பது ஏழு வகை. அனைத்தும் போனபின் வருவது முழுமை. 1. நடைமுறை அறியாமை Practical Constitutional, Psychological, Temporal, Egoistic

2. அமைப்பின் அறியாமை Cosmic and Original Ignorances

3. சூட்சும அறியாமை

4. காலத்தின் அறியாமை

5. பிரபஞ்சத்தின் அறியாமை

6. சிருஷ்டியின் அறியாமை

7. ஆதியின் அறியாமை

அகந்தை தரும் அறியாமை நம்மை சமுத்திரத்தில் இருந்து இருவகையாக விளக்குகிறது. 1. சமுத்திரம் நமக்கு சேவை செய்ய வேண்டும். 2. நாம் சமுத்திரத்திற்கு முக்கியமில்லை. இவை உண்மையில்லை. நாம் சமுத்திரத்திற்கு முக்கியம். சமுத்திரத்திற்கு நாம் மட்டுமல்ல, நம் காரியங்களும் முக்கியம். சிறு காரியங்களும் சமுத்திரத்திற்கு முக்கியம். சிறிய காரியம் சமுத்திரத்திற்கு அதிக முக்கியம். இவ்வுண்மையை நாம் ஏற்றுக் கொண்டால் சமுத்திரம் நம் எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும். நம்மையே சமுத்திரமாக்கும். அடுத்தக் கட்டத்தில் நம்மையே சமூகமாகும். நடைமுறையில் நாம் ஆபீசிற்கும், வீட்டிற்கும் முக்கியமானவர்கள் ஆவோம். அப்படி மாறினால் சமுத்திரத்துடன் நமக்கு அகந்தையற்ற உறவுண்டு. மாறவில்லை எனில் நாம் சமுத்திரத்தை அகந்தையால் அணுகுகிறோம்.

சலனத்திற்குண்டான சக்தி மௌனத்திலிருந்து வருகிறது. There is a Silence behind the Silence. அந்த Silence ஸ்தாணு.

சலனம் - ஸ்தாணு - பிரம்மம்.

சலனம் என்பது நம் வீட்டிலுள்ள வாழ்வு, தோற்றம்,

நாமும், நம் மனமும் அதற்குரியது.

தோற்றம் - அந்தஸ்து - நல்ல குணம்.

ஸ்தாணு என்பது நம் அந்தஸ்து போல. பிரம்மம் நல்ல குணம் போல. நாம் சலனத்தின் ஒரு சிறுபகுதி என்று தெரிந்த பின், சலனத்திற்கு நாம் முக்கியம் என்று தெரிந்த பிறகு நமக்குத் தோல்வியில்லை. (சலனம் சமுத்திரம்), சமுத்திரத்திற்கு நாம் முக்கியம் என்று தெரிந்தபின் சமுத்திரத்தின் முழு சக்தியும் நம் வாழ்வில் செயல்படும் என்பதால் நமக்குத் தோல்வியில்லை. இந்நிலை வாழ்வின் விழிப்பு எனலாம். நாம் ஸ்தாணுவிலும் ஒரு பகுதி என்று தெரிந்த பிறகு ஸ்தாணு ஆத்மாவில் செயல்படுகிறது. இது ஆத்ம விழிப்பாகும். நாம் பிரம்மத்தின் பகுதி என்று தெரிந்தவுடன் பிரம்மம் ஆத்மாவின் பின்னணியில் பரமாத்மாவாக வெளிப்படுகிறது.

1. இது ஜீவாத்மா பரமாத்மாவாவது,

2. இதை Being of Becoming என்கிறார்.

3. வாழ்வில் ஆண்டவன் வெளிப்படுவதாகும்.

4. இதுவே பூலோக சுவர்க்கம்.

இல்லறம் என்பது பிரகிருதி. காலத்திற்குட்பட்டது. கர்மத்திற்குட்பட்டது. துறவறம் காலத்தைக் கடந்தது. கர்மத்தையும் கடந்தது. இவை இரண்டையும் அறிவோம்.

ஸ்ரீ அரவிந்தம் மூன்றாம் நிலையைக் கூறுகிறது. அது காலமும், காலத்தைக் கடந்த நிலையும் சந்திக்குமிடம். இம்மூன்றாம் நிலை காலத்துள் உள்ளது. அதற்குரிய ஆத்மா சைத்தியப் புருஷன், அதையடைய துறவறத்தின் தூய்மை இல்லறத்திற்கு வரவேண்டும்.

ஆரம்பம், முடிவு என்பவையில்லை. அவை நிகழ்ச்சிகட்கு இல்லை, காலத்திற்கு இல்லை. இடத்திற்கில்லை, ரூபத்திற்கில்லை, சக்திக்கில்லை, ஆனந்தத்திற்கில்லை, சித், சத்திற்கில்லை, பொருள்கட்கில்லை, மனிதனுக்கில்லை, உலகில் ஆரம்பம் முடிவு என எதற்கும் இல்லை. ஆரம்பமும், முடிவுமில்லாவிட்டால் அது அனந்தம். எனவே அனைத்தும் அனந்தம். நம் செயல்களின் பலன் முடிவில்லாமல் வந்தால் (செலவிடும் பணம், சக்தி energy) நமக்கு அனந்தம் சித்தியாகிவிட்டது என்பது பொருள். அனந்தம் சித்தியானால் ஆனந்தம் சித்திக்கும்.

அனந்தத்தின் உணர்ச்சி ஆனந்தம்.

நாம் செய்யும் செயல்கள் பெருகினால் நமக்கு அனந்தம் சித்தியாகிவிட்டது. பிரம்மம் சொல்லுக்கு அகப்படவில்லை. பிரம்மத்தை எட்ட சொல்லைக் கைவிட்டு மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பிரச்சினைகள் நம்மை மீறியது. நமக்குத் தெரிந்த வழிகளில் பிரச்சினை கட்டுப்படவில்லை. பிரச்சினை கட்டுப்பட வேண்டுமானால், நம் வழிகளை கைவிட்டு பிரச்சினைக்குரிய வழி. அதைத் தீர்க்கும் வழி. கடந்த வாழ்வு மனத்துள் அடங்கும். மனம் என்பது ஒரு புள்ளி. கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலத்தைத் தன்னுட்கொண்டது.

இறைவனுடைய கற்பனையில் ஏற்படுவது காலம்.

அது அகத்திற்குரியது.

அகத்திற்குரிய காலம், புறத்தில் செயலாக எழும்..

புறத்தில் எழும் செயல் இடம்.

காலம் என்பது கடந்தது, நிகழ்வது, வருவது எனப் பிரியும்.

அவை அனைத்தும் ஒரு புள்ளியில் இறைவன் மனதில் சேரும்.

இடம் என்பதும் அதுபோல் இதுவரை கடந்த இடம், இன்றுள்ள இடம், இனி கடக்கப் போகும் இடம் எனப் பிரியும். அவையும் இறைவன் செயல் ஒரு புள்ளியில் சேரும்.

காலம் இறைவனின் அகத்தின் ஒரு புள்ளி

அப்புள்ளியின் புறமானது இடம் என்ற ஒரு புள்ளி.

பூகோளத்தில் நாம் படிக்கும் நாடுகளை நாம் கற்பனை என நம்ப மறுக்கலாம். அந்த நாடுகட்கெல்லாம் போனவர்கள் உண்டு. அவர்கள் அனுபவம் உண்மை. நாம் அதை ஏற்கலாம். ஏற்க மறுத்தால், நாமே அங்கெல்லாம் போய்ப் பார்க்கலாம். நிஷ்டையில் ரிஷிகள் ஸ்தாணுவைப் பார்த்துள்ளனர். அதனால அது உண்மை, அது கற்பனை இல்லை. நாம் சலனத்திலிருக்கிறோம். சலனம் ஸ்தாணுவில் ஒரு பகுதி. ஸ்தாணு அமைதி, சலனத்தின் பக்கமிருந்து பார்க்கும் பொழுது ஸ்தாணு அமைதி. பூமி உருண்டை, வேகமாக சுற்றுகிறது. நமக்கு அமைதியாகத் தெரிகிறது. சலனம், ஸ்தாணு பிரம்மத்தின் பகுதி. ஸ்தாணுவின் அமைதி பிரம்மத்திற்கு அதிவேகமாகத் தெரிகிறது. இரயில் போகும் பொழுது தந்திக் கம்பம் நகர்வது தோற்றம், ஸ்தாணுவும் சலனமும் வெவ்வேறல்ல. ஸ்தாணு அமைதியானது. சலனம் ஆர்ப்பாட்டமானது. ஸ்தாணு என்று மையம் சலனம் என்ற புற வெளிப்பாடாகிறது. ஸ்தாணு சிவன், சலனம் காளி. உலகத்தை ஏற்று ஆண்டவனை விலக்குவது இல்லறம். ஆண்டவனை ஏற்று, இல்லறத்தை விலக்குவது துறவறம். இரண்டையும் ஏற்பது பூரணயோகம், ஸ்ரீ அரவிந்தம். இரண்டிற்கும் உள்ள தொடர்பை அறிவது விவேகம்.

  • இல்லறத்தையோ, துறவறத்தையோ ஏற்பது பகுதி.
  • இரண்டையும் ஏற்பது முழுமை.

உபநிஷம் பரமாத்மாவையும், ஜீவாத்மாவுயம் (புருஷப் பிரகிருதி) கண்டது, ஜீவாத்மாவை பரமாத்மாவின் பகுதியாகக் கண்டது. சர்வம் பிரம்மம் என்ற பொழுது பிரகிருதியையும் பிரம்மமாகக் கண்டது உபநிஷம். எப்படி பிரகிருதி புருஷனிலிருந்து வந்தது என்று கேட்க நமக்குரிமையில்லை என்றது உபநிஷம். அதனால் நடைமுறையில் முடிவாக

மோட்சத்தை நாடியது. இதனால் உலகம் புறக்கணிக்கப்பட்டது. வேதரிஷிகள் உலகத்தைப் புறக்கணிக்கவில்லை. உலகத்தை பிரம்மமாகக் கண்டார்கள். கண்டவர்கள் கண்டதை ஏற்று அதன்படி வாழ்ந்தார்கள். பௌத்தர்களும், உபநிஷமும் ஜடம் வேறு, ஆன்மா வேறு என்றனர். ஜடத்தையும் ஆன்மாவையும் இணைப்பது சக்தி என்பது ஸ்ரீ அரவிந்தம். சக்தி ஆன்மாவிலிருந்து வருகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சக்தி சக்தியே என்பது விஞ்ஞானம். ஆன்மாவுடன் தொடர்பு உண்டா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி சித்சக்தி என்ற அடுத்த அத்தியாயத்தில் பதில் கூறுகிறார். தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு வந்தால் உபநிஷம் உண்மை. விஞ்ஞானி கூறுவதும் உண்மை. நாத்திகன் கூறுவதும் உண்மை. தொடர்புண்டு என்றால் வேதம் கூறுவது உண்மை. வாழ்வுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு வெளிவரும். அது நடந்தால் சத்திய ஜீவன் பிறப்பான். வாழ்வில் தோல்வியிருக்காது. நோய், துன்பம், வறுமை, மரணம் இருக்காது.

அகம் - புறம்

அகம் என்பது புறம்

புறம் என்பது அகம்

புறம் அமைதியற்ற அகம்

அகம் சலனமற்ற புறம். அகமும் புறமும் ஒன்றே. அகத்திலிருந்து புறத்தைப் பார்ப்பவன் ரிஷி. புறத்திலிருந்து அகத்தைக் காண்பவன் மனிதன். அகத்தையும் புறத்தையும் காண்பது ஆன்மா. அகத்தையும், புறத்தையும் கடந்தது ஆன்மா. ஆன்மாவைக் கடந்தது பிரம்மம். நாமே பிரம்மம், பிரம்மமே நாம் என்றறிவது பிரம்ம ஞானம். (உபநிஷம் Vol.12 ஸ்ரீ அரவிந்தர்)

கீழிலிருந்து பார்க்கிறோம், சமுத்திரம் தெரிகிறது. அதற்கு மேல் ஸ்தாணு உள்ளது. பிரம்மம் அதற்கும் அடுத்த கட்டம். பிரம்மத்திலிருந்து சமுத்திரத்தைப் பார்த்தால் ஸ்தாணு தெரியும். இந்த ஸ்தாணு அதிவேகமான சுழற்சி. மனிதன் கீழிருந்து அதிகபட்சம் சமுத்திரத்தைத்தான் பார்க்கமுடியும்.

  • அகந்தையற்ற பார்வைக்கு சமுத்திரம் தெரியும்.
  • மனம் நிஷ்டையில் உயர்ந்து overmindக்குப் போய்ப் பார்க்கும் பொழுது தெரிவது சச்சிதானந்தம்.
  • அது புருஷோத்தமனாகத் தெரிகிறது.
  • மேலிருந்து பார்க்கும் பொழுது முதற்கட்டம் unknowable பிரம்மம் அறிய முடியாதது. அடுத்தது ஸ்தாணு, சமுத்திரம் ஆகியவை.

மேலேயிருந்து பார்ப்பது பிரம்மம். கீழேயிருந்து பார்ப்பது மனிதன். மனிதனும் பிரம்மமும் ஒன்று என்பது பிரம்மம் சித்திக்கும் பிரம்ம ஞானம். அது முழுபிரம்மம். ரிஷிகட்கு சித்திக்காத முழுபிரம்மத்தை மனிதனுக்குக் கொடுக்க அன்னை அவதாரம் எடுத்தார். அதைப் புரிந்து கொள்வது அன்னையைப் புரிந்து கொள்வதாகும். அன்னையை அப்படிப் புரிந்துகொண்டால் நம் வாழ்வை சமுத்திரம் நடத்தும். நாம் புரிந்து கொண்டதை ஏற்றுக் கொண்டால் நம் வாழ்வை அன்னை நடத்துவார். எதிர் முனைக்கு வந்தால் இன்று நம் வாழ்வை குடும்பம் நடத்தவும் நாம் அனுமதிப்பதில்லை.

குடும்பம் நம் வாழ்க்கையை நடத்த அனுமதிப்பது என்பது நாம் குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்று அதன்பிறகு அதற்கேற்றபடி நம் வாழ்வை குடும்பத்தையொட்டி நடத்துவதாகும். அப்படி நடந்தால் நாம் குடும்பத்தில் தன்மையாக இருப்போம். அதே போல் சமூகத்தை ஏற்று நம் வாழ்வை சமூகம் நடத்தினால் நாம் சமூகத்தின் சிகரத்திலிருப்போம். குடும்பத்தில் ஒவ்வொருவர் பொறுப்பையும் நாம் மனதால் ஏற்றால் அவர்கள் திறமை நம் வாழ்வில் வெளிப்படும். அது உண்மையானால் நாம் குடும்பத் தலைவராவோம். அதே போல் சமூகத்தின் எல்லா அங்கங்களோடு நாம் உணர்வால் தொடர்பு கொண்டு அதன் பொறுப்பை மனதால் ஏற்றுக் கொண்டால் சமூகத்தின் எல்லா திறமைகளும் நம் வாழ்வில் செயல்படும். நாம் சமுத்திரத்தை அறிந்து, ஏற்றுக் கொண்டால், சமுத்திரம் நம் வாழ்வை ஏற்று நடத்தும், அதன் முழுத் திறமையும் நம் வாழ்வில் வெளிப்படும். நாம் இறைவனின் கருவியாகி சமுத்திரத்தில் செயல்படுவோம். இதற்கடுத்த கட்டம் அன்னை. நமக்காக அன்னையை நாடாமல், அன்னைக்காக அன்னையை ஏற்றால், நம் வாழ்வில் அன்னையின் முழுத்திறன் வெளிப்படும். இது அன்னையுடன் நாம் ஐக்கியமாவதற்கு முன் கட்டம்.

நாமே பிரம்மம், நாமே அனந்தம் என்று புரியும் பொழுது நம்மைப்போல் அனைவரும் பிரம்மம், அனந்தம் என்று புரிகிறது. எனவே அனைவரும் சமம். பெரியது, சிறியது இல்லை.

நாம் அனந்தமாக இருப்பதால் காலத்தைக் கடக்கிறோம் காலத்தால் உற்பத்தியான கர்மத்தைக் கடக்கிறோம். காலத்தைக் கடந்து ஸ்தாணுவின் அமைதியை பிரம்மத்தின் அதிவேகம் அடைகிறோம். காளி நடனம் காலம். சிவன் நடனத்தின் மையம். மையம் என்பது ஸ்தாணு. ஸ்தாணு என்ற சிவனாகிய மையத்தைச் சுற்றி காளி என்ற காலம் நடனமாடுகிறது. அதுவே சிவனுடைய ஆனந்தத் தாண்டவம்.

காளியின் நடனம் மனிதனுக்கு இல்லறம். அது காலத்திற்குட்பட்டது. பிரகிருதி எனப்படும் இயற்கை (Becoming) ஆகும். துறவறம் என்பது நமக்கு ஸ்தாணு. அது காலத்தைக் கடந்தது (Being)

ஸ்ரீ அரவிந்தம் இல்லறம், துறவறம் ஆகிய இரண்டையும் கடந்த அன்னை வாழ்வை நமக்குக் கூறுகிறது. இது காலமும், காலத்தைக் கடந்ததும் சந்திக்குமிடத்தில் உள்ளது. Being of Becoming.

  1. இல்லறத்திலுள்ள மனிதனுக்கு தோல்வி, வறுமை, நோய் துன்பமுண்டு.
  2. துறவிக்கு அவற்றைக் கடக்கும் திறனுண்டு.
  3. அன்னை வாழ்வில் தோல்வியில்லை, நோயில்லை, துன்பமில்லை.

The Unknowable- அப்பாலுக்கும் அப்பால் பிரம்மம்- The Absolute-That-The Unmanifest- சச்சிதானந்தா- ஆதி- Origin- The Infinite Eternal.

  • மேலே போகப் போக ஜடத்தன்மை குறைந்து சூட்சுமமாகிறது.
  • சூட்சுமம் சத்திய ஜீவியத்தில் காரணமாகிறது. (causal-plane-gross-subtle-causal)
  • In the Being,Time and Space vanish.. சத்தில் காலமும், இடமும் இல்லை.
  • In the Being there is no subjectivity or objectivity.அகம் புறம் சத்தில் இல்லை.
  • காலம் இடத்தைக் கடந்தால், அகம் புறம் என்பவற்றை இழந்தால் சத் மீண்டும் பிரம்மமாகும்.
  • காலம் இடத்தைப் பெற்றால், அகம் புற நிலைகளை ஏற்றால் சத்., சித்தாகும், சத்தியமாகும்.
  • சத் நம்மை அசத்திற்கு அழைத்துச் செல்லும்.
  • சத் பரிணாம முடிவில் பிரம்மத்திற்கும் நம்மைக் கொண்டு போகும். அப்பொழுது நாம் பிரம்மமாகிறோம்.
  • மேலே போகப் போக பிரச்சினையில்லை, ஜடத்தன்மை குறையும், சூட்சுமமுமில்லை, ரூபம் மறைகிறது. குணத்தை இழக்கிறோம், சக்தி தன் நிலையிழந்து சத்தாகி, சத் பிரம்மமாகிறது. காலம், இடம், காரணகாரியம்; அகம், புறம், ஞானம், ஆனந்தம், ஜீவியம் ஆகியவை அற்றுப் போகின்றன. ஜீவியமும் அற்றுப் போன ஜீவன் சத் எனப்படும். அதை எண்ணத்தால் நினைக்க முடியுமா?
  • Thought seeks the Absolute எண்ணம் பிரம்மத்தை நாடுகிறது என்கிறார் பகவான்.
  • எண்ணம் பிரம்மத்தை எட்டினால் பிரம்மம் எண்ணத்தில் சித்திக்கிறது.
  • 'சத்' என்ற எண்ணத்தில் பிரம்மம் சித்தித்தால் 'சத்' உண்டாகிறது.
  • ஜடம் என்பதை பகவான் சத் தன் எண்ணத்தால் ஏற்படுத்தியது என்கிறார்.
  • எண்ணத்திற்கு எட்டாதவன் என ரிஷிகள் கூறினார். பகவான் எண்ணம் பிரம்மத்தை எட்டும் என்கிறார்.
  • சத்திய ஜிவியம் நிலையாக பிரம்மத்தைத் தொட்டபடியிருக்கிறது என்கிறார் பகவான்.
  • சத்திய ஜீவியம் பிரம்மத்துடன் நிலையான தொடர்புள்ளது. சத் தன்னை comprehend புரிந்து கொள்ள முயல்வதால் சத்திய ஜீவியம் உற்பத்தியாயிற்று.
  • சத் சத்தியமாகி ஜீவியம் பெறுவதால் சத்திய ஜீவியம் எழுகிறது. Truth-Consciousness (வேகத்தின் சொல்)
  • Truth,Vast,Rhythm. சத்தியம், ரிதம், பிருஹத் என்பது சத்திய ஜீவியம்.
  • பிரம்மம் சத்திய ஜீவியம்வரை நேரடியான தொடர்புடனிருக்கிறது.
  • அத்தொடர்பை ஏற்படுத்துவது எண்ணம்.
  • அதன் அடிப்படை சுமுகமான எண்ணம்.
  • போட்டியழிந்து, பொறாமையழிந்து ஏற்படும் சுமுகத்தை எண்ணம் ஏற்றால் சத்திய ஜீவியம் வெளிப்படும்.
  • சத்திய ஜீவியம் ஜடத்திலும் வெளிப்படும்.
  • பிரம்மம் ஜடம் வரை சித்திக்கும், பகவானுக்கும், அன்னைக்கும் சித்தித்தது.
  • சித்திப்பதின் அடிப்படை சுமுகம்.
  • எண்ணத்தால் இவற்றை எட்டலாம். இது வேறுவகையான எண்ணம். சொல்லாலானது அல்ல.மௌனத்தையும் கடந்தது. மௌனத்திற்குப் பின்னாலுள்ள மௌனத்தைச் சேர்ந்தது.
  • பிரம்மத்தை எண்ணத்தால் சிந்திக்க முடிவது, மனத்தில் பிரம்மம் சித்திப்பது ஆகும்.
  • இதற்கு அத்தியாவசியமான அம்சங்கள். சத்தியம், சுமுகம், ஆனந்தம்.

  • போட்டியை மனம் ஒத்துழைப்பாக்கி, பொறாமை பெருந்தன்மையாக திருவுறுமாற்றி, வலியை பிறருக்கு நாம் கொடுக்கும் வலியை ஆனந்தமாக்கி பிறருக்கு ஆனந்தம் கொடுத்து பிரம்மத்தை மனதில் கொண்டு வந்தால் சத் சத்திய சுமுக ஆனந்தம் வழி நம் மனதிலுதிக்கும்.
  • இதை நாம் செய்ததற்கு அடையாளம் நமக்கு போட்டி, பொறாமை, பிரச்சினை, வலியிருக்கக்கூடாது. அடுத்த கட்டத்தில் எவரும் நம் மீது பொறாமை, போட்டி, வலியை திணிக்க முயலக்கூடாது.
  • நாம் சுமுகத்திற்கு உற்பத்தி ஸ்தானமாக இருக்கவேண்டும்.
  • It is by self-giving that one grows into something. பிரம்மத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்பவர் பிரம்மமாவார். பிரம்மம் குணம், எண்ணம் அற்றது என்பதால் நமது குணம், எண்ணம் அற்ற பிறகே நாம் நம்மை பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்ய முடியும்.
  • அன்னைக்கு செய்யும் சமர்ப்பணம் நம்மை பிரம்மத்துடன் தொடர்பு கொள்ளச் செய்யும்.
  • Mother is an organisation of Brahmic consciousness in the evolution.. சிருஷ்டியிலும் பரிணாமத்திலும் பிரம்மம் செயல்பட ஏதுவான அமைப்பாக ஸ்தாபனமாக அன்னையிருக்கிறார்.
  • அன்னையின் அவதார நோக்கம் சிருஷ்டியில் உள்ள பிரம்மத்தைத் தன்னுட் கொண்டது.
  • பிரம்மம் வேறு, சிருஷ்டியிலுள்ள பிரம்மம், பரிணாமத்திலுள்ள பிரம்மம் ஆகியவை வேறு.
  • மனம் பிரம்மத்தைத் தொடும் பாக்கியம் பகவான் தருவது.
  • பகுதியான பிரம்மத்தை விளக்க முடியாது பொழுது முழுமையான பிரம்மத்தை சிந்தனைக்கு எட்ட வைத்த அத்தியாயம் சத் பிரம்மம்.
  • மனித ஹிருதயம் சமுத்திரம்.
  • சமுத்திரம் நம் வாழ்வை நடத்தக் காத்திருக்கிறது.
  • அகந்தை அழிந்தால் சமுத்திரம் தெரியும்.
  • சமுத்திரம் வாழ்வை நடத்தினால் ஸ்தாணு தெரியும்.
  • ஸ்தாணுவை உள்ளே கண்டால் பிரம்மம் தெரியும்.
  • ரிஷிகளுக்கெட்டாத பிரம்மம் நமக்கு சித்திக்க வந்தவர் அன்னை.
  • உலகில் எவர் பெறுவதும் உலகம் பெறுவதேயாகும்.
  • உலகிலுள்ள அத்தனையும் நாம் பெற அவதாரமெடுத்த சூட்சும ஸ்தாபனம் அன்னை.
  • பெரியதும் சிறியதும் ஒன்றே.
  • அகம் காலம், புறம் இடம்.
  • காலத்திற்குரிய அனந்தம் பிரம்மத்திற்குரியது. ஜடம் முதல் சித் வரை அனைத்துக்கும் உரியது.
  • சிவன் துறவறம், காளி இல்லறம். இவற்றை ஏற்பது யோகம். அறிவது விவேகம்.
  • சத்தியத்தை சத்தியமாக ஏற்பவருக்கு பிரம்மம் சித்திக்கும்.
  • அசுரன் பொய்யைக் கைவிட்டால் உலகத்திற்கு குரு ஆவான்.
  • எல்லாவற்றிற்கும் உள்ள அனந்தம் பணத்திற்கும் உண்டு.
  • நாம் அன்னை யார் என உணர்ந்தால் அன்னை நம்மை பிரம்மமாக்குகிறார்.

'நான்'

  • 'நான்' வளருவது வழக்கம்.
  • ஞானம் 'நான்' என்பதை அழிக்கவல்லது.
  • 'நான்' ஞானத்தை, தான் வளரப் பயன்படுத்தும்.
  • 'நான்' இறைவனையும் தனக்குப் பயன்படுத்தும்.
  • 'நான்' நம் கண்ணுக்கு அகப்படாது.
  • 'நான்' இருப்பதைக் காண முடிவது பெரிய ஞானம்.
  • ஞானத்தை 'நான்' என்பதற்கு கருவியாக மறுப்பது sincerity உண்மை.
  • ஞானம் வந்து அது 'நான்' அழிய உதவுவது அடக்கம்.
  • சரணாகதி எந்த வழியிலும் 'நான்' வளரக்கூடாது.
  • சரணாகதியால் 'நான்' அழிவது பூரண யோகம்.
  • 'நான்' என்பதை அழிக்கும் 'நான்' உலகில்லை.
  • ஆத்மா மட்டுமே 'நான்' அழிய உதவும்.
  • ஆத்மாவும் 'நான்' என்பதற்கு பலியாவதை ஆணவ மலம் spiritual ego என்றும் எனவும் கூறுவர்.

  • சைத்தியப் புருஷனுக்கு 'நான்' இல்லை. 'நான்'போன பின் வருவது சைத்தியப் புருஷன்.
  • சைத்தியப் புருஷனை சரணாகதியால் மட்டும் அடைய முடியும்.

சத் பிரம்மம் ஸ்ரீ அரவிந்தம்

விவேகம்

  • சிவனையும் காளியையும் ஏற்பது விவேகம்.
  • காளி சிவனுடைய சக்தி என்று அறிவது சூட்சுமம்.
  • நாம் பொறாமைப்படுகிறோம், போட்டி போடுகிறோம், அதைவிட்டு மனிதர்களுடன் தொடர்பு கொள்வது விவேகம். தொடர்பைப் புரிந்து கொள்வது அதிர்ஷ்டம்.

தொடர்பு புரிய நாம் தூசி என்ற அடக்கம் வேண்டும்.

 

 

சத் புருஷன்

சமுத்திரம் - அனைவரும் சமம் - அனந்தம் - காலம் - பிரம்மம் - ஸ்தாணு - சிவன் - காளி - விவேகம்

                                 - ரிஷிகள் சொல்லாதது.

ஸ்ரீ அரவிந்தம்

(வாழ்வு இறைவனின் சக்தி)

பிரகிருதி புருஷனின் வெளிப்பாடு

உரிமையை அறிந்து கொண்டாடினால் உலகம் உன் காலடியில்.

  • உருவ வழிபாடு நம் நாட்டிற்குரியது.
  • ரூபங்களைக் கடந்த பிரம்மம் நம் நாட்டின் ஞானம்.

  • ரூபங்களைக் கடந்தது, குணங்களையும் கடந்தது.
  • அரூபி, நிர்குணி என பிரம்மம் வழங்குகிறது.
  • பிரம்மம் பிறந்தது நம் நாட்டில். ஆனால் நாம் அறிவது 'பிரம்மஹத்தி' 'அடபிரம்மமே.
  • ஏதோ ஒரு ரூபத்தில் பிரம்மம் அன்றாட வழக்கிலும் வந்துவிட்டது.
  • அது கொச்சை மொழி. ஞானம் பிரம்மத்தை எட்டாது எனக் கேள்விப்பட்டுள்ளோம்.
  • ஞானி பிரம்மத்தை எட்டுவார். அது சமாதியில் நடைபெறும். கண்டாலும், விண்டுரைக்க முடியாது.
  • சித்தித்தவரே பேச முடியாவிட்டால், நமக்கு அங்கு என்ன வேலை?
  • நாமே பிரம்மம் எனவும் கூறுகிறார்கள்.
  • ஸ்ரீ அரவிந்தர் பிரம்மத்தை வரம் கேட்டார். நம்மைப் போன்றவர்கள் உள்பட ஜடத்திற்கும் கேட்ட வரம்.

“அந்த பிரம்மம் நம் வாழ்வில் சித்திக்க வேண்டும்.”

  • நாம் ஜடம், ஜடப்பிரம்மம், ஜடப்பிரம்மத்திற்கும் பிரம்ம ஞானம் உண்டு என்று நினைக்க முடியுமா?

உண்டு எனக் கூறுகூது ஸ்ரீ அரவிந்தம்

  • உண்டு என்பதே ஆச்சிரியமாக இருக்கிறது. நம்ப முடியவில்லை. பெறலாமா? பெற முடியுமா?
  • உண்டு என்ற பகவான் வழியும் கூறுகிறார். ஆனால் நம்மை வருந்தி அழைக்கவில்லை. அழைக்கவும் தயங்குகிறார். உண்டு, வழியுண்டு என்கிறார். வழியைக் கூறுகிறார்.

மனப்பூர்வமான தூய்மையான சரணாகதி அவர் வகுத்த வழி

  • உண்டு என்பதால் பலிக்குமா? வழியுண்டு என்பதால் கிடைக்குமா? வழி தெரியும் என்பதால் பின்பற்ற முடியுமா? ஏன் பகவான் நம்மை அழைக்கவில்லை? அழைத்தால் போக முடியுமா?
  • இறைவன் தேடுவது லீலையில் ஆனந்தம். நாமே இறைவன். மறந்துவிட்டோம். மறந்ததை நினைவுபடுத்துவது அருள். நினவுபடுத்தினால் நினைவு வருமா? நினைவு எழுந்து தேடுவது ஆனந்தம்.
  • தேடிக் கண்டுபிடிக்கும் முன், பிரம்மத்தை உணர வேண்டாமா? உணருமுன் தெரிய வேண்டாமா?
  • இதுவரை தெரிய முடியாது என்பதை சத்புருஷன் என்ற அத்தியாயம் தெரிவிக்கிறது.
  • பிரம்மம் தெரியாவிட்டால், அது சமுத்திரமாகத் தெரியும் என அறிவிக்கிறது.
  • சமுத்திரத்திற்கு நம்மீது அக்கறையுண்டு எனக் கூறுகிறது.
  • சமுத்திரம் நம் வாழ்வை சமுத்திரமாக்கும் எனவும் விளக்குகிறது.
  • சமுத்திரம் சமுத்திரமில்லை, அமைதியான ஸ்தாணு எனவும் மேலும் கூறுகிறது. ஸ்தாணு முடிவில் பிரம்மமே என்று நாம் அறிகிறோம்.
  • பிரம்மத்திற்கு எறும்பும், சூரியனும் சமம் எனவும் பேசுகிறது.
  • ஒரே சக்தி, சமமான சக்தி எறும்பை சிருஷ்டித்தது, அதுவே சூரியனை சிருஷ்டித்தது, அதுவே சூரியனை சிருஷ்டித்தது, நம்மையும் உற்பத்தி செய்தது.
  • பிரம்மத்திற்கு எல்லாம் சமம், சர்வம் சமம் எனத் தத்துவமாக விளக்குகிறது.
  • அகந்தையைக் கடந்து சமுத்திரத்தைக் காணலாம், சலனத்தைக் கடந்து ஸ்தாணுவைக் காணலாம், ரூபத்தையும், குணத்தையும், காலத்தையும், இடத்தையும், அகந்தையும், புறத்தையும் கடந்து 'சத் புருஷனை அடையலாம்.
  • சிருஷ்டியே தேவையில்லை எனில் சத்புருஷனைக் கடந்தும், பிரம்மமாகலாம் என நூல் கூறுகிறது.
    • பிரம்மமாகு முன் உணரலாம், உணர்வதற்கு முன் அறியலாம் (conception, perception, sensation) என இவ்வத்தியாயத்திலிருந்து அறிகிறோம்.
    • அறியும் நிலைகள் மூன்று intelligence,intution,integral experience.Integral experience என்பது நாமே பிரம்மமாவது.Intution என்பது ஞானத்தால் அறிவது. Intelligence என்பது பகுத்தறிவால் அறிவது.
    • ஞானத்தாலும் அறிய முடியாது என இதுவரை கூறியதை பகுத்தறிவால் அறிய முடியும் என்பது சத் புருஷனுடைய விளக்கம்.
    • இருப்பது சொத்து என மனிதன் அறிவான்.இல்லாதது சொத்து என்பது புது விளக்கம்.
    • இல்லாதது, இருப்பதை உற்பத்தி செய்யும் என்பது மனிதனுடைய நீண்டகால அனுபவம்.

    • எதுவுமேயில்லாத மனிதன் இந்த நாகரீக உலகத்தை ஏற்படுத்தியுள்ளான். அவனுடையது அறிவு.
    • அறிவே அனைத்தையும் சிருஷ்டித்தது. அறிவு அழிந்தபின் எழுவது ஞானம். ஞானத்திற்கு சக்தியுண்டு. ரூபம் உண்டு. குணம் உண்டு. ஞானமும், சக்தியும், ரூபமும், குணமும் அழிந்தபின் ஏற்படுவது பிரம்மம்.
    • எதுவுமேயில்லாத பிரம்மம், எல்லாப் பிரபஞ்சங்களையும் சிருஷ்டித்தது.
    • எதுவும் இல்லாவிட்டால், எல்லாம் இருக்கும் என்பது பிரம்மத்தை அறிவது அதுவே பிரம்ம ஞானம்.
    • எதுவுமே சக்தி, ரூபம், குணம் இல்லாத காரணத்தால், எல்லாவற்றையும் சிருஷ்டிக்கும் பிரம்மத்தை நாம் எப்படி அறியலாம்?
    • நமக்கும் எதுவுமில்லாவிட்டால் அகந்தை, அறிவு, காலம், சக்தி, குணம் நாமும் எதுவும் இல்லாத பிரம்மத்தை அறியலாம்.
    • நமக்கு என்ன இருக்கிறது?
    • ஜடமான உடலும், சத்தியமான வாழ்வும், அறிவுள்ள மனமும், அதைக் கடந்த ஆத்மாவும் நாம்.
    • ஜடமான உடல், ஜடமான பொருள்களை மட்டும் அறியும்.
    • வாழ்வு, வாழ்வுக்குரிய உணர்வுகளையும், உறவுகளையும் அறியும்.
    • மனம் அறிவுலக பொக்கிஷங்களை பெற விழையும்.

    • நாம் உடல் வாழ்ந்தாலும், உடலுக்குக் கட்டுப்பட்டவரில்லை என்றால் உடலைக் கடந்து செல்லலாம்.
    • உணர்வுமயமான உறவுகள் உற்சாகப்படுத்தாவிட்டால், உயிர் உணர்வைக் கடந்து செல்லும்.
    • அறிவு முக்கியம் எனில் அறிவு பயன்படும். அறிவே முக்கியம் என்றால் நாம் அறிவுக்கு அடிமையாவோம். அறிவுக்கு அடிமையாகாவிட்டால், அறிவையும் கடக்கலாம்.
    • அறிவைக் கடந்தால், ஞானமுண்டு. அறிவைக் கைவிட்டதுபோல், ஞானத்தைக் கைவிடலாமா?
    • பிரம்மத்தைத் தேடுபவனுக்கு ஞானமும் விலங்கு. பொன் விலங்கு எனலாம்.
    • ஞானம் சக்தி வாய்ந்தது. அதற்கு ரூபம் உண்டு. குணமும் உண்டு.
    • சக்தியையும், ரூபத்தையும், குணத்தையும் சிருஷ்டி என அறிவது அவற்றைக் கடக்க உதவும்.
    • அவற்றைக் கடந்தால், காலமும், இடமும் உள்ளன.
    • புறமான இடமும், அகமான காலமும் கடப்பதற்கு கடினம்.
    • இடத்தையும், காலத்தையும் கடந்தபின் அவற்றிற்குரிய புறமும், அகமும் நிற்கும்.
    • சத்தியமே புறத்திற்குரியது. சத் அகத்திற்குரியது.
    • சத்தியத்தை கடந்து புறத்தையும், 'சத்' தைக் கடந்து அகந்தையும் கடக்கலாம்.
    • அவற்றையும் கடந்தபின் எஞ்சி நிற்பது பிரம்மம்.

    • நாமே பிரம்மம் என்பதால், அவற்றைக் கடந்தபின் பிரம்மம் அறிவுக்குப் புலப்படும்.
    • அறிவுக்குப் புலப்பட்டது அகத்திற்கு தேவை என்ற ஆர்வம் பக்தியாக எழுந்தால் அறிவு ஞானமாகி பிரம்ம ஞானமாகும்.
    • ஞானத்திற்கு தேவைப்பட்டது ஆத்மாவிக்குரியது. ஆத்மாக அதனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்றால் ஞானம், அனுபவமாகும்.
    • அனுபவம் பூரண அனுபவமானால் (integral experience) பிரம்மம் சித்திக்கும்.
    • சித்தித்த பிரம்மத்தை ஏற்று, அதன்படி வாழ்வது தெய்வீக வாழ்வு.
    • அதை வாழ்பவன் Supramental  being சத்திய ஜீவன்.
    • ஸ்ரீ அரவிந்தர் நமக்காக பிரம்மத்தைக் கேட்ட வரம் அது.

    வரம் பூரண சரணாகதியால்

    பலிக்கும்.

 



book | by Dr. Radut