Chapter 06 பென்னட் குடும்பத்தினரின் இன்னல்கள்
திரு. பென்னட்டிடமிருந்து கடிதம் வரும் என்ற பெரிய நம்பிக்கையில் எல்லோரும் இருந்தனர். ஆனால் வந்த தபால்களில் அவரிடமிருந்து ஒரு வரியும் இல்லை. சாதாரண சமயங்களில் அவர் உடனுக்குடன் கடிதம் எழுதமாட்டார் என அவரது குடும்பத்தினருக்குத் தெரியும். ஆனால் இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் அவர் முயற்சி செய்து உடனே கடிதம் எழுதுவார் என எதிர்பார்த்தனர். நல்ல விஷயம் எழுத எதுவும் இருந்திருக்காது, அதனால்தான் அவர் கடிதம் எழுதவில்லை என அவர்கள் தாங்களாகவே ஒரு தீர்மானத்திற்கு வந்தனர், ஆனால் அதைப்பற்றியாவது ஏதாவது தீர்மானமாகத் தெரிந்தால் நல்லது என விரும்பினர். திரு. கார்டினர், தான் கிளம்புவதற்குமுன் கடிதத்திற்குத்தான் காத்துக் கொண்டிருந்தார்.
அவர் கிளம்பிச் சென்றவுடன் இனிமேல் என்ன நடக்கிறது என்பதுபற்றி அடிக்கடி தகவலாவது வரும் என நம்பினர். திரு. பென்னட்டை சந்தித்தவுடன், அவரை லாங்க்பர்னுக்குத் திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொள்வதாக, அவர்களது மாமா, அவர் கிளம்பும்முன் வாக்களித்தார். தன்னுடைய கணவர் சண்டையில் கொல்லப்பட மாட்டார் என்றாவது திருமதி. பென்னட் சமாதானம் அடையட்டும் என்று எண்ணினார்.
தன்னுடைய மருமகள்களுக்கு தான் அங்கு இருப்பது உதவியாக இருக்கும் என நினைத்ததால், திருமதி. கார்டினர் தனது குழந்தைகளுடன் மேலும் சில நாட்களுக்கு அங்கு தங்க தீர்மானித்தாள். அவர்களுடன் சேர்ந்து, திருமதி. பென்னட்டை கவனித்துக் கொண்டாள், அவர்கள் ஓய்வாக இருக்கும் சமயத்தில் ஆறுதலாகவும் இருந்தாள். அவர்களைச் சற்று உற்சாகமூட்டும் நோக்கத்தில் அவர்களுடைய சித்தியும் அடிக்கடி வந்து பார்த்தாள். ஆனால் ஒவ்வொரு முறை வரும் பொழுதும் விக்காமின் ஊதாரித்தனத்தைப்பற்றியும், அவனுடைய முறைகேடுகளைப்பற்றியும் புதிது புதிதாக செய்திகளைக் கூறியதால் முன்பு சற்று உற்சாகமாக இருந்தவர்களது கவலைதான் இன்னும் சற்று அதிகரித்தது.
மூன்று மாதங்களுக்குமுன் யார் நல்லவனாக இருந்தானோ அவனை மெரிடனில் இருப்பவர்கள் எல்லோரும் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். அங்குள்ள வியாபாரிகள் எல்லோரிடமும் அவன் கடன் வாங்கியிருக்கிறான் எனவும், அக்குடும்பத்தில் உள்ள பெண்களை மயக்க முயற்சி செய்தான் எனவும் கூறலானார்கள். உலகத்திலேயே மிகவும் மோசமான மனிதன் அவன்தான் என்றும் கூறினார்கள்; அவன் நல்லவன் என்பதைத் தாங்கள் எப்பொழுதுமே நம்பவில்லை எனவும் கண்டுபிடித்தனர். மற்றவர்கள் கூறியதை பாதியளவுகூட எலிசபெத் நம்பவில்லை என்றாலும் தனது சகோதரியின் அழிவு உறுதி எனும் அளவுக்கு நம்பினாள். ஜேன் மற்றவர்களுடைய கருத்தை அதிகம் நம்பவில்லை, இருப்பினும் லிடியாவைப்பற்றிய நம்பிக்கையை முற்றிலும் இழந்தாள். ஸ்காட்லாண்டிற்குப் போகாமல் இருந்திருக்க மாட்டார்கள் என அவள் முதலில் நம்பவில்லை, ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் அங்கு சென்றிருந்தால், இந்நேரம் ஏதேனும் ஒரு தகவல் கிடைத்திருக்கும் என நினைக்கலானாள்.
ஞாயிறு அன்று திரு. கார்டினர் லாங்க்பர்னிலிருந்து கிளம்பினார். செவ்வாயன்று அவரது மனைவிக்கு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் தனது சகோதரனை தாமதமில்லாமல் சந்தித்துவிட்டதாகவும், அவரை கிரேஸ் சர்ச் தெருவிலுள்ள இல்லத்திற்கு வரும்படி தூண்டியதாகவும் எழுதியிருந்தார். எப்ஸம் மற்றும் க்லாப்ஹாமிற்குச் சென்று விசாரித்ததில் திருப்திகரமாக எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் லண்டனிற்கு முதலில் வந்திறங்கியவுடன், தங்குவதற்கு வீடு கிடைப்பதற்குமுன் ஏதாவது உணவு விடுதியில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தில் அங்குள்ள எல்லா முக்கிய விடுதிகளிலும் விசாரிக்க திரு. பென்னட் தீர்மானித்திருப்பதாகவும் எழுதியிருந்தார். இதில் திரு. கார்டினருக்கு எந்தவித நம்பிக்கை இல்லையெனினும், தனது சகோதரர் ஆர்வமாக இருந்ததால், இவ்வாறு தேடும் முயற்சியில் அவருக்கு உதவி செய்வதாக இருந்தார். தற்சமயம் லண்டனைவிட்டுக் கிளம்பும் எண்ணம் திரு. பென்னட்டிற்கு இல்லை என்றும், அடுத்த கடிதம் விரைவில் எழுதுவதாகவும் கூறியிருந்தார். இதற்கு ஒரு பின்குறிப்பும் இருந்தது.
‘விக்காமிற்கு யாரேனும் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா, அவர்களுக்கு, இவன் லண்டனில் எந்த இடத்தில் இருக்கிறான் எனத் தெரிய வாய்ப்பிருக்கிறதா என்று இராணுவத்தில் இருக்கும் அவனுடைய நெருங்கிய நண்பர்களை விசாரிக்கும்படி கர்னல் பார்ஸ்டருக்கு கடிதம் எழுதியுள்ளேன். யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால், அது ஒரு வேண்டிய பலனைத் தரும். இப்பொழுது எங்களுக்கு வழிகாட்ட எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் கர்னல் பார்ஸ்டர் செய்வார். ஆனால் யோசித்துப் பார்க்கும் பொழுது மற்ற எவரையும்விட அவனுடைய உறவினர்களைப்பற்றிய விவரம் எலிசபெத்தால் சொல்ல முடியும்.‘
தன்னுடைய அதிகாரத்தின்மேல் எவ்வாறு இப்படி ஒரு மதிப்பு வந்தது என எலிசபெத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் அவளைப் பாராட்டியதற்கு ஈடாக, அவளுடைய சக்திக்குட்பட்டு திருப்தியாக, எந்த ஒரு தகவலையும் அவளால் கொடுக்க முடியவில்லை.
அவனுக்கு, அவனது பெற்றோர்களைத் தவிர வேறு உறவினர்கள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்களும் காலமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இராணுவத்தில் இருக்கும் அவனுடைய நண்பர்கள் ஏதேனும் தகவல் தரலாம். அதில் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றாலும், முயற்சி செய்யலாம் என நினைத்தாள்.
லாங்க்பர்னில், ஒவ்வொரு நாளும் கவலையுடன் கழிந்தது. அதுவும் தபாலை எதிர்பார்த்து இருப்பதுதான் மிகுந்த கவலைக்குரிய நேரமாக இருந்தது. கடிதத்தை எதிர்பார்த்து, ஒவ்வொருநாள் காலையும் பொறுமையில்லாமல் காத்திருந்தனர். நல்ல செய்தியோ, கெட்ட செய்தியோ அது கடிதம் மூலம்தான் தெரிவிக்கப்படும் என்பதால், மறுநாள் ஏதாவது முக்கியமான செய்தி வராதா எனக் காத்துக் கொண்டிருந்தனர்.
திரு. கார்டினரிடமிருந்தும், தங்களது தந்தையிடமிருந்தும் கடிதம் வருவதற்குமுன் திரு. காலின்ஸிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஜேனிற்கு, கடிதத்தைப் பிரித்துப் படிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், அதனைப் படிக்க ஆரம்பித்தாள். அவனுடைய கடிதங்கள் எவ்வளவு ஆவலைத் தூண்டும் என்பது எலிசபெத்திற்குத் தெரியும் என்பதால், ஜேன் படிப்பதை, ஆவலோடு எட்டிப் பார்த்து தானும்கூட படிக்கலானாள்.
அன்புள்ள ஐயா,
‘ஹர்ட்போர்ட்ஷயரிலிருந்து நேற்று வந்த கடிதத்திலிருந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் துன்பத்தைப்பற்றி கேள்விப்பட்டு, நமக்குள்ள பந்தத்தின் காரணமாகவும், வாழ்க்கையில் நான் இருக்கும் நிலை காரணமாகவும், உங்களது துக்கத்தில் பங்கு எடுத்துக் கொள்ள விழைகிறேன். காலத்துக்கும் மறக்க முடியாத இக்கசப்பான சம்பவத்திற்கு நானும், எனது மனைவியும், உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் எங்களுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெற்றோர்களின் மனது, மிகுந்த துன்பத்தில் இருக்கும் இச்சமயத்தில் நான் அதனை அதிகப்படுத்துவது போலவோ, சமாதானப்படுத்துவதுபோலவோ உங்களுக்கு விளக்கம் அளிப்பதில் எந்தவித குறையும் வைக்க மாட்டேன். இதைவிட உங்களது மகள் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தங்களுடைய தவறான வளர்ப்புதான் அவளுடைய நெறிகெட்ட நடத்தைக்குக் காரணம் என சார்லெட் கூறுகிறாள். அதே சமயம் தங்களுக்கும், தங்களது மனைவிக்கும் சமாதானம் சொல்ல வேண்டும் என்றால், அவளுடைய விருப்பமே மோசமாக இருந்திருக்கிறது, இல்லையெனில் இவ்வளவு மகத்தான தவறு இந்த இளவயதில் செய்ய முடியாது என வைத்துக் கொள்ளலாம். எப்படியிருப்பினும், உங்களை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. தங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதில் எனது மனைவியுடன், லேடி காதரினும், அவரது மகளும் சேர்ந்து கொள்கின்றனர். அவர்களுக்கும் இந்த சம்பவத்தைப்பற்றி நான் கூறியிருக்கிறேன். ஒரு பெண்ணின் தவறான நடத்தை, மற்ற பெண்களையும் பாதிக்கும், யாரும் இக்குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். போன நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தை நினைத்து இப்பொழுது எனக்கு திருப்தியாக இருக்கிறது. வேறுவிதமாக அமைந்திருந்தால், இந்த துயரத்திலும், அவமானத்திலும் நானும் பங்கேற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். உங்களை சமாதானப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுடைய நினைவிலிருந்து உங்களது மகளை அப்புறப்படுத்திவிடுங்கள், அவள் செய்த தவற்றின் பலனை அவளே அனுபவிக்கட்டும்.‘
இப்படிக்கு உங்களுடைய
‘அன்பு காலின்ஸ் மற்றும் சார்லெட். ‘
கர்னல் பார்ஸ்டரிடமிருந்து கடிதம் வரும்வரை திரு. கார்டினர் மறுபடியும் கடிதம் எழுதவில்லை. பிறகு அவருக்கு நல்ல சமாசாரமாக எழுத ஒன்றுமில்லை. விக்காமிற்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை என்பது தெரியாமல் இருந்தது. நிறைய நண்பர்கள் இருந்தாலும், இராணுவத்தில் இருந்ததால் யாருடனும் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் யார் செய்தி கொடுக்க முடியும் என்று தெரியவில்லை. லிடியாவின் உறவினர்கள் தங்களைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயம் மட்டுமல்லாமல், அவர்கள் இரகசியமாக இருப்பதற்கு மற்றொரு காரணம், மிகப் பெரிய தொகையை சூதாட்டத்தில் இழந்து கடன் வைத்துவிட்டுப் போனதுதான். பிரைட்டனில், அவன் செலவழித்ததைக் கொடுப்பதற்கு, ஆயிரம் பவுனிற்கு மேல் தேவைப்படும் என கர்னல் பார்ஸ்டர் நம்பினார். அவன் அங்கு விட்டுச் சென்ற கடனைவிட, அவனுடைய மதிப்பையும், பெயரையும் இழந்ததுதான் அதிகமாக இருந்தது. திரு. கார்டினர் இவைகளை லாங்க்பர்ன் குடும்பத்தினரிடமிருந்து மறைக்க முயற்சிக்கவில்லை. கலவரத்துடன் கேட்டுக் கொண்ட ஜேன், ‘சூதாடி! இது முற்றிலும் எதிர்பாராதது. நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை‘ என்றாள்.
மறுநாள் காலை, சனிக்கிழமையன்று அவர்களது தந்தையை அவர்கள் எதிர்பார்க்கலாம் என திரு. கார்டினர் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். தேடும் முயற்சிகளில் எந்த வெற்றியும் கிடைக்காததால் மனம் உடைந்துபோன அவர், தேடும் பொறுப்பினை தன்னுடைய மனைவியின் சகோதரனிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்புவதாக இருந்தார். அவருடைய உயிரைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்த திருமதி. பென்னட்டிடம் இதைக் கூறியவுடன், அவளது குழந்தைகள் எதிர்பார்த்த அளவுக்கு தனது திருப்தியினை அவள் தெரிவிக்கவில்லை.
‘என்ன, அவர் வீட்டிற்கு வருகிறாரா, பாவம் லிடியா இல்லாமல்!‘ என்று கேட்டாள். ‘அவர்களைக் கண்டுபிடிக்கும்வரை லண்டனை விட்டு நிச்சயமாகக் கிளம்ப மாட்டார். அவர் வந்து விட்டால் யார் விக்காமுடன் சண்டைபோட்டு அவனை லிடியாவிற்குத் திருமணம் செய்து கொள்ள வைப்பது?‘
திருமதி. கார்டினர், தன் குழந்தைகளுடன் தங்களுடைய இல்லத்திற்குச் செல்ல விரும்பினாள். திரு. பென்னட் லண்டனிலிருந்து திரும்பும் அதே சமயம் இவர்களும் கிளம்புவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கார்டினர் குடும்பம் கிளம்பிய வண்டியில் முதற்கட்ட பிரயாணமாக லண்டனுக்குப் போய் சேர்ந்தவுடன் அதே, வண்டியில் திரு. பென்னட் லாங்க்பர்ன் திரும்பினார்.
எலிசபெத்தைப்பற்றியும், டெர்பிஷயரில் இருக்கும் அவளது நண்பனைப்பற்றியும் ஒருவித குழப்பத்தோடு திருமதி. கார்டினர், கிளம்பிச் சென்றாள். அவனைப்பற்றி ஒரு வார்த்தைகூட அவளது மருமகள் வேண்டும் என்றே அவர்கள்முன் பேசவில்லை. தங்களைத் தொடர்ந்து அவனுடைய கடிதம் வரும் என்று ஒருவிதமான எதிர்பார்ப்பினை வளர்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அது நடக்கவில்லை. பிம்பெர்லியிலிருந்து ஒரு கடிதமும் எலிசபெத்திற்கு வரவில்லை.
எலிசபெத்தின் சோர்வுக்கு வேறு ஏதாவது ஒன்று காரணமாக இருக்கலாம் என ஊகிக்க வேண்டிய அவசியமில்லாமல், தற்போதைய சந்தோஷமற்ற குடும்ப சூழ்நிலைதான் காரணம் என்பது தெளிவாக இருந்தது. இப்பொழுது அவளால் தன்னுடைய உணர்வுகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. டார்சியைப்பற்றி எதுவும் தெரிந்திருக்காவிடில், லிடியாவின் நடத்தையால் வந்த அவமானத்தை இன்னும் சற்று எளிதாகத் தாங்கிக் கொண்டிருந்திருக்கலாம் என்பது அவளுக்குப் புரிந்தது, மேலும் இப்பொழுது இருக்கும் மன வருத்தத்தில் பாதியளவுதான் வருத்தம் இருக்கும் எனவும் நினைத்தாள்.
திரு. பென்னட் வீடு திரும்பிய பொழுது, அவர் வழக்கம்போல் வேதாந்தமாகக் காட்சியளித்தார். வழக்கம்போல் மிகக் குறைவாகவே பேசினார், எந்த விஷயத்திற்காகச் சென்றாரோ அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. அவருடைய பெண்களுக்கு அவரிடம் பேசுவதற்கு தைரியம் வர சிறிது நேரம் எடுத்தது.
மதியம் தேநீர் அருந்தும் சமயத்தில், அவர் எல்லோருடனும் சேர்ந்து அமர்ந்த பொழுது, எலிசபெத் விஷயத்தை ஆரம்பித்து, அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என்ற வருத்தத்தைத் தெரிவித்தாள். அதற்கு அவர் ‘அதைப்பற்றி எதுவும் பேசாதே, என்னைத் தவிர வேறு யார் கஷ்டப்பட வேண்டும்? நான் செய்த தவற்றிற்கு நான்தான் வருத்தப்பட வேண்டும்‘ என்றார்.
‘உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ள வேண்டாம்,‘ என்று எலிசபெத் பதிலளித்தாள்.
‘இதுபோல் நான் என்னையே தண்டித்துக் கொள்வதற்காக நீ என்மேல் அனுதாபப்படலாம். இது மனித இயல்பு. சரி லிசி, நான்தான் இவற்றிற்கெல்லாம் காரணம் என்று ஒரு தடவையாவது எனது வாழ்நாளில் நான் வருத்தப்பட வேண்டும். இந்த வருத்தம் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் என்ற பயம் எனக்கில்லை. எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும்.‘
‘அவர்கள் லண்டனில் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?‘
‘ஆமாம், வேறு எங்கு அவர்களால் இப்படி மறைந்து இருக்க முடியும்?‘
‘லிடியாவிற்கு லண்டனுக்குப் போக வேண்டும் என்ற ஆசை எப்பொழுதும் இருந்தது‘ என்று கிட்டி கூறினாள்.
‘அப்படியெனில், அவள் அங்கு சந்தோஷமாக இருப்பாள். அவள் அங்கு சிறிது காலம் தங்கலாம்‘ என்றார் அவளது தகப்பனார்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு ‘போன மே மாதம், நீ எனக்கு அறிவுரை தந்தாய். நீ கூறியது சரி என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. உன்பேச்சைக் கேட்காததற்கு இப்பொழுது உனக்கு என்மேல் எந்த கோபமும், வருத்தமும் இருக்காது என்று நம்புகிறேன். நடந்த விஷயங்களைப் பார்க்கும் பொழுது உன்னுடைய அறிவின் திறன் தெரிகிறது‘ என்றார்.
தனது தாயாருக்குத் தேநீர் எடுத்துப் போக வந்த மிஸ். பென்னட்டின் வருகையால் அவர்களது பேச்சு தடைப்பட்டது.
‘துரதிர்ஷ்டம்போல் ஒரு சம்பவம் நடந்திருக்கும் பொழுது இப்படி நடந்து கொள்வதால், அந்த விஷயத்திற்கு ஒரு அழகு வந்துவிடுகிறது. மறுபடியும் நான் இதையேதான் செய்வேன். இரவு நேரத்திற்குரிய உடையை அணிந்து கொண்டு நூலகத்தில் உட்கார்ந்துக் கொண்டிருப்பேன், என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரச்சினைகளை கொடுத்துக் கொண்டிருப்பேன் அல்லது கிட்டி ஓடிப் போகும்வரை அதைத் தள்ளிப்போடுவேன்‘ என்று கூறினார்.
‘நான் ஓடிப்போக மாட்டேன், அப்பா. நான் பிரைட்டனுக்குப் போனாலும், லிடியாவைவிட மேலாக நடந்து கொள்வேன்‘ என்றாள் கிட்டி.
‘நீ பிரைட்டனுக்குப் போவாயா!--ஐம்பது பவுனிற்காக நான் உன்னை கிழக்கு பர்னுக்குக்கூட அனுப்பமாட்டேன். நான் உன்னை நம்ப மாட்டேன். நான் இனி கவனமாக இருக்கக் கற்றுக் கொண்டு விட்டேன், நீயே தெரிந்து கொள்வாய். இனி ஒரு இராணுவ அதிகாரிகூட என் வீட்டில் நுழைய முடியாது. ஏன், நமது ஊர் வழியாகக்கூட செல்ல முடியாது. நடனத்திற்குச் செல்வதற்கும் இனி உனக்கு அனுமதி கிடையாது. உன் சகோதரிகளுடன் மட்டுமே நீ செல்லலாம். ஒரு நாளைக்கு ஒரு பத்து நிமிடமாவது விவேகமாக நடந்து கொள்ளும்வரை நீ வெளியே செல்லக் கூடாது.‘
இவையெல்லாவற்றையும் நிஜம் என்று நம்பி கிட்டி அழத் தொடங்கினாள்.
‘சரி, சரி, அழாதே. பத்து வருடங்களுக்கு நீ நல்ல பெண்ணாக நடந்து கொண்டால், பிறகு என்ன தீர்மானிக்கலாம் என்று பார்க்கிறேன்‘ என்றார்.
- Login to post comments