Chapter 18 பிரைட்டனுக்கு வரும்படி லிடியாவிற்கு கிடைக்கும் அழைப்பு
அவர்கள் திரும்பி வந்த முதல் வாரம் வேகமாகச் சென்றது. இரண்டாவது வாரம் தொடங்கியது. படைப்பிரிவு மெரிடனில் தங்கப் போகும் இறுதி வாரம் அது, சுற்றுவட்டாரத்தில் உள்ள இளம் பெண்கள் தலையை தொங்கப் போட்ட வண்ணம் இருந்தனர். அந்த மனச்சோர்வு ஏறத்தாழ எல்லா இடங்களிலும் இருந்தது. மூத்த இரு மிஸ். பென்னட்களுக்கு மாத்திரம்தான் எப்பொழுதும்போல் சாப்பிடவும், குடிக்கவும், தூங்கவும், அவர்களுடைய அன்றாட வேலைகளையும் கவனிக்க முடிந்தது. எல்லையில்லா துயரம் அடைந்திருந்த கிட்டியும், லிடியாவும் அவர்களை, இவ்வாறு உணர்ச்சியில்லாமல் இருப்பதற்கு கண்டனம் செய்தனர். மேலும் இந்த குடும்பத்தில் இவ்வாறு கல்நெஞ்சக்காரர்களாக இருப்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
‘கடவுளே! நாங்கள் என்னாவது! நாங்கள் என்ன செய்வது!‘ என்று அவர்கள் துக்கத்தால் மனம் கசந்து அடிக்கடி கூவினர். ‘லிசி உன்னால் எவ்வாறு இப்படி சிரித்துக் கொண்டு இருக்க முடிகிறது?‘ என்றார்கள்.
அவர்களுடைய பாசமிகுந்த தாயும் அவர்களுடைய எல்லா துக்கங்களிலும் பங்கெடுத்துக் கொண்டாள். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் அனுபவித்த வேதனையை நினைவு கூர்ந்தாள்.
‘கர்னல் மில்லரின் படைப்பிரிவு கிளம்பிய பொழுது நான் இரண்டு நாட்களாக தொடர்ந்து அழுதேன். என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது‘ என்றாள்.
‘எனக்கு இப்பொழுது நெஞ்சு வெடித்து விடும் போலிருக்கிறது‘ என்றாள் லிடியா.
‘பிரைட்டனுக்கு மட்டும் போக முடிந்தால்‘ என்றாள் திருமதி. பென்னட்.
‘ஓ, ஆமாம்!--இப்பொழுது பிரைட்டனுக்கு மட்டும் போக முடிந்தால், ஆனால் அப்பா சம்மதிக்க மாட்டேன் என்கிறாரே.‘
‘சிறிது கடலில் குளித்தால் எனக்கு மிகவும் நன்றாக இருக்கும்.‘
‘நமது சித்தி பிலிப்ஸும், எனக்கு இது அதிக அளவில் நன்மை தரும் என்கிறார்‘ என்று கிட்டியும் கூறினாள்.
இதுபோன்ற புலம்பல்கள் லாங்க்பர்ன் இல்லத்தில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. எலிசபெத் இதை வேடிக்கையாக எடுத்துக் கொள்ள முயற்சி செய்தாள். ஆனால் எல்லா சந்தோஷமான உணர்ச்சிகளும், அவமானத்தால் தொலைந்து போயின. டார்சி கூறிய ஆட்சேபணைகள் எல்லாம் நியாயமானதே என்று மீண்டும் உணர்ந்தாள். அவனுடைய நண்பனின் கருத்துகளில் குறுக்கிட்டதற்கு மன்னிக்க வேண்டும் என்ற உணர்வு இந்த அளவுக்கு இதற்குமுன் ஏற்பட்டதில்லை.
லிடியாவின் வருத்தமான மனநிலை விரைவில் அகற்றப்பட்டது, ஏனெனில், படைப்பிரிவின் கர்னலாக இருந்தவரின் மனைவி திருமதி. பார்ஸ்டரிடமிருந்து பிரைட்டனுக்கு தன்கூட செல்ல அவளுக்கு அழைப்புக் கிடைத்தது. இந்த முக்கிய தோழி சமீபத்தில் திருமணமான ஒரு இளம் பெண்மணி ஆவாள். கலகலப்பிலும், உற்சாகத்திலும் இருவரும் ஒரே மாதிரியாக இருந்ததால், இருவரும் ஒன்றாகப் பழகினர். மூன்று மாத பழக்கத்தில் அவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாயினர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் லிடியா அடைந்த மகிழ்ச்சியையும், திருமதி. பார்ஸ்டரை அவள் கொண்டாடியதையும், திருமதி. பென்னட்டின் சந்தோஷத்தையும், கிட்டி அடைந்த துயரத்தையும் விவரிக்கவே முடியாது. தன்னுடைய சகோதரியின் உணர்ச்சிகளை முற்றிலும் கவனிக்காதவளாக நிலை கொள்ளாத சந்தோஷத்துடன் லிடியா வீட்டினுள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தாள். எப்பொழுதையும்விட ஆர்ப்பாட்டமாக சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தாள். அதிர்ஷ்டமில்லாத கிட்டியோ, வரவேற்பறையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள். அதில் நியாயமும் இல்லை, எரிச்சல் மட்டுமே இருந்தது.
‘ஏன் திருமதி. பார்ஸ்டர் என்னையும், லிடியாவுடன் சேர்த்து அழைக்கக் கூடாது என்று எனக்குப் புரியவில்லை. நான் அவளுடைய நெருங்கிய தோழி இல்லை என்றாலும், அவளை அழைப்பது போலவே என்னையும் அழைக்க எனக்கு எல்லாவித உரிமைகளும் இருக்கின்றன. மேலும் அவளைவிட நான் இரண்டு வயது மூத்தவளும் ஆவேன்‘ என்றாள்.
அவள் நியாயமாக நடந்து கொள்ள எலிசபெத் எடுத்த முயற்சியும், அவள் அதனை ஏற்றுக் கொள்ள ஜேன் எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த அழைப்பினை கேட்டு லிடியாவும், தாயாரும் அடைந்த உணர்ச்சிகள் எலிசபெத்திற்கு எழவில்லை, லிடியாவின் பொது அறிவின் அழிவுக்கு உத்திரவாதம் என அவள் கருதினாள். தான் செய்யும் வேலை வெளியே தெரிய வந்தால் வெறுக்கத்தக்கதாக இருக்கும் என்று தெரிந்தாலும், தன்னுடைய தந்தையிடம் அவளை அனுப்ப வேண்டாம் என்று இரகசியமாக அறிவுரை தராமல் இருக்க முடியவில்லை. லிடியா, பொதுவாக நடந்து கொள்வதில் உள்ள தவறான முறைகளையும், திருமதி. பார்ஸ்டர் போன்ற பெண்மணியின் நட்பினால் எந்த நன்மையும் பெறப் போவதில்லை என்றும், இதுபோன்ற ஒரு துணையுடன், பிரைட்டனில் அவள் மேலும் அஜாக்கிரதையாக நடந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும், வீட்டைவிட அங்கு தவறு செய்வதற்கு தூண்டுதல் அதிகமாக இருக்கும் என்று தனது தகப்பனாரிடம் எடுத்துரைத்தாள். மிக உன்னிப்பாக அவள் பேசுவதைக் கேட்டு கொண்டு, பிறகு அவர்,
‘லிடியா தன்னை ஏதாவது ஒரு பொது இடத்தில் வெளிக் காண்பித்துக் கொள்ளாவிட்டால் அமைதியாக இருக்க மாட்டாள். இப்பொழுது அவளுக்கு கிடைத்து இருக்கும் இச்சந்தர்ப்பம், இதைவிட மிகக் குறைந்த செலவிலோ அல்லது தன் குடும்பத்தினருக்கு சௌகரியமான முறையிலோ அமையும் என நாம் எதிர்பார்க்க முடியாது.‘
‘லிடியா, அஜாக்கிரதையாகவும், விவேகமில்லாமலும் நடந்து கொள்வதால் உண்டாகும் அவப்பெயர், இல்லை ஏற்கனவே உண்டான அவப்பெயரைபற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் இந்த விஷயத்தை வேறுவிதமாக கையாண்டிருப்பீர்கள்‘ என்று எலிசபெத் கூறினாள்.
‘ஏற்கனவே உண்டாகி விட்டதா! என்ன, அவள் உன்னுடைய காதலர்கள் சிலரை பயமுறுத்தி அனுப்பிவிட்டாளா? பாவம் லிசி! இதனால் மனம் தளராதே. சிறு விஷயங்களுக்கெல்லாம் மனம் உடையும் இளைஞர்கள், ஒரு சிறிய தவற்றைக்கூட சகித்துக் கொள்ள முடியாதவர்கள், நாம் வருத்தப்படுவதற்கு தகுதியுடையவர்கள் அல்ல. லிடியாவின் முட்டாள்தனத்தால் ஒதுங்கி நிற்கும் பரிதாபத்திற்குரிய நபர்களின் பட்டியலை நான் பார்க்க வேண்டும்.‘
‘நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள். நான் கோபப்படுவதற்கு எனக்கு எந்தவித காயங்களும் இல்லை. நான் இப்பொழுது குறை சொல்வது குறிப்பிடும்படியான கெடுதலைப்பற்றி அல்ல. ஆனால் பொதுவான தீமைகளைப்பற்றி தான். ஸ்திர புத்தியும், தன்னடக்கமும் இல்லாத லிடியாவின் குணத்தினால் நம்முடைய மதிப்பும், மரியாதையும் பாதிக்கப்படுகிறது. நான் வெளிப்படையாகப் பேச வேண்டும்--என்னை மன்னித்துவிடுங்கள். எனதருமை தந்தையே, நீங்கள் அவளுடைய அதீத உற்சாகத்தைத் தடுத்து நிறுத்தி, தற்சமயம் அவள் நாடிப் போவதெல்லாம் அவளுடைய வாழ்க்கை முறையாக ஆகக் கூடாது என சொல்லிக் கொடுக்காவிடின், அவளை திருத்தவே முடியாமல் போய்விடும். அவள் இப்படித்தான் என முத்திரை குத்தப்படுவாள். அவள் இந்த பதினாறு வயதில், பெரிய சபல புத்திக்காரியாக விளங்கி தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் எல்லோரும் பார்த்து சிரிக்கும்படி ஆக்கிவிடுவாள். மிகவும் கீழ்த்தரமாக காதல் வேட்கையில் ஈடுபடுகிறாள். இளமையும், அழகையும் தவிர வேறு எந்த கவர்ச்சியும் அவளிடம் இல்லை. எல்லோரும் தன்னைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற அவளுடைய தீவிர ஆர்வம் எல்லோரும் அவளைப் பார்த்து இகழ்வதுபோல் ஆக்கிவிடும். அறியாமையினாலும், புத்தியில்லாததினாலும் மற்றவர்கள் இகழ்வதை அவளால் தடுத்து நிறுத்தவே முடியாது. இந்த ஆபத்தில் கிட்டியும் அகப்பட்டுக் கொள்வாள். லிடியாவை பின்பற்றிதான் அவளும் செல்வாள். அறியாமை, சோம்பேறித்தனம், சிறிதும் அடக்கமில்லாதவள், எதற்கும் பிரயோஜனமில்லாதவள்! ஓ! எனதருமை தந்தையே, எங்கெல்லாம் அவர்களைத் தெரிந்திருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் கண்டனத்திற்கும், வெறுப்புக்கும் ஆளாவார்கள் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா, அவர்களுடைய சகோதரிகளுக்கும் இது ஒரு அவமானம் இல்லையா?‘
அவளுடைய முழு மனதும் இந்த விஷயத்தில்தான் இருக்கிறது என்பதைப் பார்த்த திரு. பென்னட், அவளுடைய கையை அன்புடன் பற்றிக்கொண்டு, பதிலளித்தார்.
‘உன்னை நீயே கஷ்டப்படுத்திக் கொள்ளாதே, எங்கெல்லாம் நீயும், ஜேனும் அறிமுகம் ஆகியிருக்கிறீர்களோ, அங்கெல்லாம் நீங்கள் மதிக்கப்பட வேண்டும், மரியாதை அளிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற இரண்டு--அல்லது மூன்று அர்த்தமில்லாத சகோதரிகள் இருப்பதினால், உங்களை யாரும் குறைவாக நினைக்க மாட்டார்கள். லிடியா, பிரைட்டனுக்குப் போகவில்லையெனில் நமக்கு லாங்க்பர்னில் நிம்மதியே இருக்காது. அவள் போகட்டும். கர்னல் பார்ஸ்டர் ஒரு விவேகமான மனிதர், அவளை எந்த வம்பிலும் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வார். அதிர்ஷ்டவசமாக அவள் மிக ஏழை என்பதால் யாரும் அவளை நாடமாட்டார்கள். இங்கு இருப்பதைவிட பிரைட்டனில் அவளுடைய காதல் கேளிக்கைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. இராணுவ அதிகாரிகளுக்கு இவளைவிட நல்ல பெண்மணிகள் கிடைப்பார்கள். ஆகையால் அவள் அங்கு இருப்பது, அவளுக்கு தான் யார் என்பதை உணர்த்தும் என்று நம்புவோம். எப்படியிருந்தாலும், இதைவிட மோசமாக நடந்து கொண்டால் நாம் அவளை எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் பூட்டி வைக்க வேண்டும்.‘
இந்த பதிலில் எலிசபெத் திருப்தி அடைய நேர்ந்தது; ஆனால் அவளுடைய அபிப்பிராயம் அப்படியேதான் இருந்தது, அவள் அவரைவிட்டு ஏமாற்றத்துடனும், வருத்தத்துடனும் அகன்றாள். அதைப்பற்றியே நினைத்து வெறுப்படைவதோ, கோபப்படுவது என்பதோ அவளுடைய சுபாவத்தில் கிடையாது. தன்னுடைய கடமையை செய்து விட்டோம் என்ற நம்பிக்கை இருந்தது, தவிர்க்க முடியாத தீமைகளை நினைத்து கோபப்படுவதோ அல்லது கவலைப்பட்டு அதை பெரிதாக்குவதோ அவளுடைய விருப்பம் கிடையாது.
லிடியாவிற்கும், அவளுடைய தாயாருக்கும், அவள் தனது தகப்பனாரிடம் பேசிய விஷயத்தைப்பற்றி அறிந்திருந்தால், அவர்களுடைய கோபம் அவர்களது ஒருமித்த வாக்குச் சாதுர்யத்தில் வெளி வந்திருக்கவே முடியாது. இந்த உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களும் பிரைட்டனுக்குச் செல்வதில் கிடைக்கும் என்று லிடியா கற்பனை செய்தாள். அந்த சந்தோஷமான குளிக்கும் இடத்திலுள்ள தெருக்கள் அதிகாரிகளால் நிரம்பியிருப்பது போலவும், பத்து இருபது நபர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருளாக தான் இருப்பது போலவும், அந்த முகாமின் அத்தனை பெருமைகளையும்; கூடாரங்கள் வரிசையாக சீராக ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதையும், சந்தோஷமாக காட்சியளித்த இளவயது அதிகாரிகளால் கூட்டமாக இருந்த அந்த இடம் சிகப்பு நிறத்தினால் பிரகாசித்துக் கொண்டிருந்ததையும், இந்த கற்பனை முழுமை பெற, கூடாரத்தின் அடியில் தான் உட்கார்ந்து கொண்டு ஒரே சமயத்தில் ஆறு அதிகாரிகளுடன் பேசிக் கொஞ்சுவதாகவும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்புகளிலிருந்தும், இதுபோன்ற உண்மைகளிலிருந்தும், தன்னுடைய சகோதரி தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள் என்று தெரிய வந்தால் லிடியாவின் மனவெழுச்சி எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? இதேபோன்ற உணர்வுகளையுடைய தாயாரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய கணவருக்கு பிரைட்டனுக்குச் செல்லும் எண்ணமே இல்லை என்பது தாயாருக்கு மிக வருத்தத்தை அளித்தது. அந்த வருத்தத்திற்கு லிடியா அங்கு செல்வது ஒரு ஆறுதலை அளித்தது.
ஆனால் என்ன நடந்தது என்பதைப்பற்றி அவர்களுக்கு முழுவதுமாகத் தெரியாததால், லிடியா வீட்டைவிட்டு கிளம்பும் நாள்வரை அவர்களுடைய சந்தோஷமான ஆரவாரம் இடைவிடாது தொடர்ந்தது.
எலிசபெத் இப்பொழுது கடைசி தடவையாக விக்காமை சந்திக்கப் போவதாக இருந்தது. அவள் திரும்பி வந்ததிலிருந்து அவனுடன் அடிக்கடி இருக்க நேர்ந்ததால், அவள் மனதிலிருந்த சங்கடம் எல்லாம் தீர்ந்தது, முன்பிருந்த விருப்பம் முற்றிலும் காணாமல் போயிற்று. எந்த மென்மையான நடத்தை அவளுக்கு முன்பு சந்தோஷத்தை அளித்ததோ, அதுவே இப்பொழுது போலியாகவும், மாறுபாடு இல்லாமலும் இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அது அவளுக்குக் களைப்பையும், வெறுப்பையும் அளித்தது. தற்பொழுது அவன் அவளிடத்தில் நடந்து கொள்ளும்விதம், அவளுக்கு மனக்கசப்பை அளித்தது, ஏனெனில், அவர்கள் முதன்முதலில் பழகிய பொழுது இருந்த உணர்வுகளை புதுப்பிக்க விரும்பினான் என்பது, நடந்து முடிந்த விஷயத்தினால், கோபத்தைதான் உண்டாக்கியது. ஆழமான காதல் இல்லாமல், ஒரு விளையாட்டுக்காக அவன் தன்னை விரும்பினான் என்பதைப் புரிந்து கொண்ட எலிசபெத் அவன் மேலுள்ள எல்லா அக்கறையையும் இழந்தாள். ஏதாவது ஒரு காரணத்திற்காக அது எவ்வளவு நாட்களாக இருந்தாலும், தன்னிடம் செலுத்திய கவனத்தை திருப்பி வேறு ஒரு இடத்தில் செலுத்தியபின், பிறகு மீண்டும் தன்னிடமே வந்தாலும், தான் அதனை மறுபடியும் ஏற்றுக் கொண்டு மீண்டும் சந்தோஷமடைவோம் என்று அவன் நம்புகிறான் என்பது தெரிந்தது. அது அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
இராணுவம், மெரிடனிலிருந்த இறுதி நாளன்று, அவன் மற்ற அதிகாரிகளுடன் லாங்க்பர்னில் உணவருந்தினான். அவனிடம் நல்ல மனநிலையில் விடைபெற எலிசபெத்திற்கு விருப்பமில்லை. ஹன்ஸ்போர்டில் அவள் எப்படி நேரத்தை செலவழித்தாள் என்று அவனுடைய கேள்விக்கு, கர்னல் பிட்ஸ்வில்லியமும், டார்சியும் மூன்று வாரங்கள் ரோஸிங்ஸில் தங்கியிருந்தனர் என்று கூறி, முதல் நபரின் அறிமுகம் அவனுக்குண்டா என்று அவனிடம் கேட்டாள்.
அவன் ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சி குன்றியவனாக, கலவரத்துடனும் பார்த்தான். ஆனால் ஒரே நிமிடத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்டு ஒரு புன்முறுவலுடன், தான் அவனை முன்பு அடிக்கடி சந்தித்திருப்பதாகவும், அவன் மிகவும் நற்பண்புகள் உடைய நபர் என்று கூறிய பிறகு, அவளுக்கு எந்த அளவு அவனை பிடித்திருந்தது என்று கேட்டான். அவனைப்பற்றி அன்பாகப் புகழ்ந்து பேசினாள். அவன் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் உடனேயே, ‘எவ்வளவு நாட்கள் அவன் ரோஸிங்ஸில் தங்கினான் என்று கூறினாய்?‘ என்று கேட்டான்.
‘கிட்டத்தட்ட மூன்று வாரங்கள்.‘
‘அப்படியானால் நீ அவனை அடிக்கடி பார்த்தாயா?‘
‘ஆம், பெரும்பாலும் தினமும்.‘
‘அவனுடைய சகோதரனின் நடத்தையைவிட அவனது நடத்தை மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.‘
‘ஆம், மிகவும் வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆனால் டார்சியுடன் பழகும் பொழுது அவனை மேலும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.‘
‘அப்படியா! ‘ என்று விக்காம் கேட்ட பொழுது அவனுடைய முகபாவத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை. ‘நான் உன்னைக் கேட்கலாமா?‘ என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சந்தோஷமான குரலில் ‘எதில் தேறியிருக்கிறான். அவனுடைய பேசும் விதத்திலா? மரியாதை கலந்து பேச வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறானா? ஏனெனில் முக்கியமானவற்றில் அவன் தேறிவிட்டான் என்று எனக்கு நம்பிக்கையில்லை‘ என்று தணிவான, தீவிரமான குரலில் கூறினான்.
‘ஓ! இல்லை‘ என்ற எலிசபெத் ‘முக்கியமானவற்றில் அவன் எப்படி இருந்தானோ அப்படியேதான் இன்னும் இருக்கிறான் என்று நம்புகிறேன்‘ என்றாள்.
அவள் பேசும் பொழுது விக்காம், அவள் பேசுவதைக் கேட்டு ஆனந்தப்படுவதா அல்லது அதனை நம்பாமல் இருப்பதா என்று புரியாமல் பார்த்தான். அவளுடைய முகத் தோற்றத்தில் இருந்த ஏதோ ஒன்று, அவனை பயத்துடனும், ஆர்வமாக கவனத்துடனும் கேட்க வைத்தது. அவள் மேலும் தொடர்ந்து,
‘அவனுடன் பழகப்பழக அவன் தேறி வருகிறான் என்று நான் சொன்னது, அவனுடைய மனதும், நடத்தையும் தேறி வருகிறது என்றல்ல. ஆனால் அவனை மேலும் நன்கு தெரிய ஆரம்பிக்கும் பொழுது, அவனுடைய இயற்கையான குணம் நமக்கு மேலும் நன்கு புரிய ஆரம்பிக்கின்றது.‘
விக்காமினுடைய பயம் மேலும் அதிகரித்தது, அவனது முகத் தோற்றத்தில் தெரிந்தது. படபடப்பாக காணப்பட்டான். சில நிமிடங்களுக்கு அவன் மௌனமாக இருந்தான்; பிறகு தன்னுடைய தர்மசங்கடமான நிலையை உதறித் தள்ளி, அவளை நோக்கி மிகவும் மென்மையான குரலில்,
‘டார்சி சரியானவன் என்ற தோற்றத்தை அளிக்கும் அளவிற்கு புத்திசாலியாக மாறிவிட்டான் என்று நான் மனமார சந்தோஷப்படுவதை, டார்சியைப்பற்றி நான் எப்படி உணருகிறேன் என்பதை நன்கு அறிந்த நீ புரிந்து கொள்வாய். அந்த வகையில் அவனுடைய பெருமிதம் அவனுக்கு சகாயம் செய்யாவிட்டாலும், மற்றவர்களுக்கு பெரிய உதவி செய்யும். எப்படியெனில் என்னிடம் தவறாக நடந்து கொண்டதுபோல் மற்றவர்களிடம் நடந்து கொள்வதை தடுத்து நிறுத்தும். நான் எதற்கு பயப்படுகிறேன் என்றால், நீ குறிப்பாக சொல்வதுபோல் அவனுடைய எச்சரிக்கையான நடத்தை, அவனுடைய சித்தி வீட்டிற்குச் செல்லும் பொழுது, அவளுடைய நல்ல எண்ணத்திற்கும், அவளுடைய மதிப்பீட்டிற்கும் பெரிதும் மதிப்புக் கொடுப்பதினால் நடந்து கொண்ட ஒன்றாக இருக்கும். அவர்கள் சேர்ந்து இருக்கும் பொழுது அவனுக்கு அவளிடம் பயம் இருக்கும் என்று எனக்குத் தெரியும். மிஸ் டீ பர்க்குடன் ஜோடி சேர வேண்டும் என்ற அவனுடைய விருப்பத்திற்கு உகந்தவாறு அவன் நடந்து கொள்ள வேண்டும், ஏனெனில் எனக்கு நிச்சயம் தெரியும் அவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும் என்று.‘
இதை கேட்டதும் எலிசபெத்திற்கு வந்த புன்முறுவலை கட்டுப்படுத்துவதற்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் தலையை சற்று சாய்த்து பதில் அளித்தாள். அவன் தன்னுடைய பழைய சோகக் கதையை அவளிடம் மீண்டும் சொல்ல விரும்புகிறான் என்று புரிந்து கொண்டாள். அதை எந்த விதத்திலும் ஆதரிப்பதற்கு அவள் தயாராக இல்லை. அந்த மாலை நேரத்தின் பிற்பகுதி, அவன் பக்கத்திலிருந்து கலகலப்பாக இருப்பதுபோல் தோற்றமளிப்பதில் செலவழிந்தது. ஆனால் எலிசபெத்தை கவருவதற்கு மீண்டும் அவன் முயற்சி எடுக்கவில்லை. அவர்கள் பிரியும் பொழுது ஒருமித்த மரியாதையுடன் பிரிந்தார்கள். இனிமேல் மீண்டும் சந்திக்கவே வேண்டாம் என்ற ஒருமித்த விருப்பமும் இருந்திருக்கலாம்.
அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் பிரிந்த பொழுது லிடியா திருமதி. பார்ஸ்டருடன் மெரிடன் சென்றாள். அங்கிருந்து மறுநாள் விடியற்காலை கிளம்ப இருந்தனர். அவள் தன் குடும்பத்தினரை விட்டு பிரிந்து செல்லும் பொழுது, பிரிவதினால் ஏற்படும் துயரத்திற்கு பதில் கூச்சல்தான் அதிகமாக இருந்தது. கிட்டி மட்டும்தான் பொறாமையினாலும், வருத்தத்தினாலும் கண்ணீர் விட்டாள். திருமதி. பென்னட் தன்னுடைய மகளின் மகிழ்ச்சிக்காக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு சந்தோஷமாக இருக்கக் கூடிய எந்த ஒரு வாய்ப்பினையும் நழுவ விட வேண்டாம் என்று மனதில் பதிய வைப்பதுபோல் உத்தரவு இட்டுக் கொண்டிருந்தது, நிச்சயமாகக் கடைபிடிக்கப்படும் அறிவுரையாகவும் இருந்தது. ஆரவாரமாக சந்தோஷமாக இருந்த லிடியாவின் விடை பெறுதலில் மிகவும் மென்மையாக விடை கொடுத்த சகோதரிகளின் குரல் கேட்காமலேயே போய் விட்டது.
-------
- Login to post comments