Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்பர் வாழ்வில் ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள்

ஸ்ரீ அன்னை அவர்களின் கருணையையும், ஸ்ரீ அன்னையின் அற்புதங்களைப் பற்றியும்,

"இதுவரை பலிக்காத பிரார்த்தனைகளும் இனி பலிக்கும்",

என்பதையும் "மலர்ந்த ஜீவியம்'', மற்றும் மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டியின் பல நூல்கள் மூலம் அறிந்துகொண்டேன். இவை என் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ அற்புதங்களை நாங்கள் கண்கூடாகக் காணமுடிந்தது. ஸ்ரீ அன்னை அவர்களின் கருணையினால், நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கும், சகோதரிகளுக்கும் ஸ்ரீ அன்னையை அறிமுகப்படுத்தக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

ஒரு சகோதரியின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம். திருமணமாகி ஒரு பெண் குழந்தை, ஓர் ஆண் குழந்தை. வயது 23 அல்லது 24 இருக்கும். அவருக்கு சிறிது காலமாக left breastஇல் அதிகமான வலி ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். அதன் பொருட்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் முழுப் பரிசோதனை செய்து, இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் முதலியன செய்து பார்த்தபொழுது, அவர்களுக்கு left breastஇல் ஒரு கட்டி இருந்தது தெரிய வந்தது. நீண்ட பரிசோதனைகள் முடிந்தபின்னர், left breastஇல் தோன்றியுள்ள கட்டி breast cancerக்கு சம்பந்தப்பட்டதாகக் கூறி, அதனை உடனடியாக ஆப்பரேஷன்மூலம் அகற்றி எடுக்கவேண்டும் என டாக்டர் ஆலோசனை கூறினார். ஆப்பரேஷன் தேதியை 2 நாட்களுக்கு பின்னர் வந்து தெரிந்துகொள்ளும்படிக் கூறி அனுப்பினார்.

இதை அறிந்த அந்தச் சகோதரி மிகவும் அதிர்ச்சியுற்று மனமுடைந்து போனார். இந்தச் சிறிய வயதிலேயே இவ்வளவு பெரிய சோதனையா என்று மனம் நொறுங்கிப் போனார். விரக்தியடைந்து போனார். என்ன செய்வது என்று கலக்கமடைந்தார். அவருடன் வந்திருந்த அவருடைய கணவரின் சகோதரி ஆறுதல் வார்த்தைகள் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரும், அவர் கணவரின் சகோதரியும் அன்னை பக்தர்கள். தினமும் அன்னையிடம் ஆழ்ந்த பக்தியுடன் பிரார்த்தனை செய்து வருபவர்கள். அவரும் இதனை அறிந்து, இது குறித்து கவலைப்பட வேண்டாமென ஆறுதல் கூறி, இது குறித்து ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தனை, ஆத்ம சமர்ப்பணம் செய்து ஸ்ரீ அன்னை விட்ட வழியே எல்லாம் நடக்கட்டும் எனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்தார்கள்.

டாக்டர் குறிப்பிட்ட தேதியில் அவர்கள் பார்க்கச் சென்றனர். சகோதரியைச் சோதனை செய்த டாக்டர், ஆப்பரேஷனைச் சிறிது தள்ளிப்போட எண்ணியுள்ளதாகவும், அதுவரை அதற்குரிய மாத்திரைகள் சாப்பிட்டு, பின்னர் மறுபடியும் முழுப் பரிசோதனை செய்து முடிவு எடுக்கலாம் எனத் தம்முடைய முடிவைத் தற்போது மாற்றிக் கூறினார். டாக்டரின் இந்த முடிவு கேட்டு அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன்பின்னர் தினமும் தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் டாக்டரிடம் சென்று முழுப் பரிசோதனை செய்து பார்த்ததில் கட்டி முழுவதும் கரைந்து போய்விட்டதாகவும், ஆப்பரேஷன் செய்ய தேவையில்லை என்று டாக்டர் கூறினார். Left breastஇல் ஏற்பட்டிருந்த வலி சிறிது சிறிதாகக் குறைந்து வலி என்பதே இல்லாமல் போய்விட்டது. இறுதியாகப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் முழுமையாகச் சுகமடைந்துவிட்டதாக டாக்டர் கூறினார். இக்கலியுகத்தில் ஸ்ரீ அன்னையின் அளவற்ற கருணையை, அற்புதத்தை எண்ணி, தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை, 2 வருடங்களுக்கு பின்னர் ஸ்ரீ அன்னையின் அறிமுகத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அற்புதத்தை என்னிடம் கூறியபொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

கீழ்க்கண்டவை முறைகளின் பல நிலைகள்:

(1) நம் உளநிலையின் உச்சநிலையை, சமர்ப்பணம் செய்யப்பட்ட வேலை வெளிப்படுத்துவதால், அதுவே தலையாய முறை.

(2) அந்த வேலையை எப்படிச் செய்வது? அதன் ஞானபூர்வமான அஸ்திவாரம் எது? என நிர்ணயிப்பது அடுத்த சிறப்புடையது.

(3) இவை முடியாதபொழுது, ஸ்ரீ அரவிந்தர், அன்னை நூல்களைப் பயில்வது நல்லது.

(4) அடுத்த நிலையிலுள்ளது தியானம்.

(5) எதுவும் முடியாதவர், நாம ஜெபத்தை மேற்கொள்ளலாம்.

  1. சமர்ப்பணம் செய்யப்பட்ட வேலை.
  2. சமர்ப்பணத்தின் ஞானபூர்வமான அஸ்திவாரம்.
  3. ஸ்ரீ அரவிந்தர், அன்னை நூல்களைப் பயில்வது நல்லது.
  4. அடுத்த நிலையிலுள்ளது தியானம்.
  5. நாம ஜெபத்தை மேற்கொள்ளலாம்.


 


 



book | by Dr. Radut