Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

 யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

 

655) ரியாகச் செய்தால் திருவுளம் நிறைவேறட்டும் என்பது அகந்தையைக் கரைக்கும் என்கிறார் அன்னை. எது சரி?

பேச்சு, நோக்கம் போன்றவற்றிற்கு ஒரு நோக்கம் இருப்பதைப்போல் திருவுளம் நிறைவேறட்டும் என்பதற்கும் ஓர் உண்மையுண்டு. வாயால் சொன்னால் அது சப்தமாகி சீக்கிரம் அலுத்துவிடுகிறது. ஆழத்திலிருந்து உண்மையில்லாமல் சொன்னால் சீக்கிரம் எரிச்சல் வரும். ஒவ்வொரு சமயத்திலும் நம் இச்சை (will) ஓர் அபிப்பிராயம், பிரியம், வேகம், உந்துதலாக வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். இறைவனை அழைப்பதன் முன் நம்மை ரத்து செய்ய வேண்டும். ஆழ்ந்த இடத்தில் திருவுள்ளத்தை நாட வேண்டும். அது சரி. அப்படி உச்சரித்தால் அது உள்ளுறை பிரம்மத்தைத் தொடும். அதற்கு மேல் உலகம் குரல் எழுப்பும். (refer 657)

ஆழ்ந்து திருவுள்ளத்தை நாடினால் உலகம் குரல் எழுப்பும்.

       மனித வாழ்வில் இறைவனின் திருவுள்ளம் என்ன? மனிதன் இறைவனாவதே அவன் திருவுள்ளம். அது நிறைவேறட்டும் என்றால், அதற்குத் தடையான அகந்தை கரைய வேண்டும். எதையும் உண்மையாகவும் சொல்லலாம், உண்மையில்லாமலும் சொல்லலாம். செலவாளி கடன் வாங்கிக் கொடுக்கமுடியாத நேரத்தில் எதிர்பாராமல் பெருந்தொகை வரும்பொழுது, முதலில் கடனைத் தரவேண்டும் என “உண்மை”யாக நினைக்கும்பொழுது, மனம் தனக்கு ஆர்வமான செலவை நாடும். முடிவாக தன் ஆர்வத்தைப் பூர்த்தி செய்து கொள்வானே தவிர, கடனைத் திருப்பித் தருவதில்லை. பணம் வரும்பொழுது,

கடனை மறப்பது ஒரு நிலை.

கடனைக் கொடுக்கக் கூடாது என்பது வேறொரு நினைப்பு.

கடனைக் கொடுக்க வேண்டும் என்ற நினைவும், வேறு செலவு

செய்யும் நிலையும் ஒன்று,

கடனைக் கொடுக்க வேண்டும் என்ற தீவிர உறுதி

உண்மையான மனநிலையாகும்.

       கடன் விஷயத்தில் 4 மனநிலையிருப்பதுபோல் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்பதிலும் 4 நிலைகளுண்டு. சொல்லும், நினைவும், நிலையும் தீவிரமாக உண்மையாக இருந்தால் அது சரியான முறையாகும்.

       மந்திரத்தை வாயால் சொல்வதில் பலன் ஏற்படுவதைப் பார்க்கிறோம். விஷக்கடிக்கு மந்திரித்தால் அது எளிய செயல் என்பதால் வாயால் சொன்னாலும் பலன் ஏற்படுகிறது. ஆழத்திலிருந்து உண்மையில்லாமல் சொன்னால் மனக்கோட்டை கட்டுவதாகும். அதில் உண்மையில்லை என்பதால் அலுத்துவிடும். வற்புறுத்தினால் எரிச்சல் வரும். நாம் என்பது அபிப்பிராயமாகவும், இச்சையாகவும்(will), பிரியமாகவும், வேகமாகவும், உந்துதலாகவும் வெளிப்பட்டுக் கொண்டேயிருப்பதைக் காணலாம். பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்பொழுது மனம் வேறொன்றை நினைக்கும். கண்ணால் படிப்பதைவிட நினைப்பதற்கு வேகம் அதிகம். அத்துடன் மனம் பல நிலைகளில் உள்ளது. உதாரணமாக தனக்கு பிரமோஷன் வேண்டும் என்று நினைப்பவர், அந்த நினைவுக்குப் பின்னால் பிரமோஷன் வந்தால் அந்தப் பெரிய போஸ்டில் நல்ல பெயரெடுக்க அதிகமாக உழைக்கவேண்டும், அது தன்னால் முடியாது என நினைப்பார். அந்த நினைவு பிரமோஷனைத் தடுக்கும். இடைவிடாது பிரமோஷனை நினைப்பதைவிட உள்ளூர உள்ள பயம் நிச்சயமாகப் பலிக்கும். அதனால் பிரமோஷன் வேண்டும் என்பது உண்மையில்லை என்று அறிய வேண்டும். மாறாகவுமிருக்கும். உதவி மேனஜேராக பிரமோஷனை விரும்புபவர் மனம், அவரை அறிந்தோ அறியாமலோ தீவிரமாக “மானேஜராகிவிட்டால் முதலாளிக்குக் கம்பெனியைப் பற்றி சில ரகஸ்யங்களைச் சொல்லலாம். அது பலித்தால் பார்ட்னராகி விடலாம்” என்ற நினைவிருக்கும். அது பலிக்கும். அது பலித்தால் உண்மை அதுவேயாகும். திருவுள்ளம் நிறைவேறட்டும் என்று நினைப்பதை, சொல்வதை அதுபோல் நம் மனதிலுள்ள பல நிலைகளைக் கடந்து, உண்மையாக ஆண்டவன் விருப்பம் நிறைவேறட்டும் என ஆழத்தில் உண்மையுடன் சொன்னால், அதற்குத் தடையான அகந்தை கரையும். அது பூர்த்தியாக உதவும் கற்பனை ஒன்றையும் அன்னை எழுதுகிறார். “இறைவன் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை ஒவ்வொரு முறையும் கற்பனை செய்ய வேண்டும்” என்கிறார்.

****

 656) கையால் வேலை செய்கிறோம். அறிவால் புரிந்து கொள்கிறோம். அறிவு செயலைவிட உயர்ந்ததைப் போல், ஆன்மாவால் செயல்படக் கற்றுக் கொள்ள வேண்டும். புறநிகழ்ச்சிகளின் பலனை நாடுவதற்குப் பதிலாக, அகவுணர்வின் பலனை நாடினால் அளவு கடந்த ஆன்மீக வாய்ப்பு எழும்.

புறம் அகமானால் ஆன்மீக வாய்ப்பு அபரிமிதமாகும்.

       ஆன்மா சாட்சியானது, செயலற்றது என்பதால் ஆன்மாவால் செயல்படுவது எப்படி? ஆன்மாவின் பிரதிநிதியான சைத்தியப் புருஷன் ஆன்மாவாகும். அது இடையறாது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் நாம் செயல்பட வேண்டும்.

       ஆன்மாவால் செயல்படுவதை ஆன்மீக உழைப்பு எனலாம். ஆன்மீக உழைப்புக்குப் பலன் அளவு கடந்தது

       இங்கிலாந்தில் ஒரு பெண்மணி காலிங்பெல் அடிப்பதைக் கேட்டு வெளிவந்தாள்.திடகாத்திரமான ஓர் ஆள் நின்றிருப்பதைக் கண்டு என்ன வேண்டும் என்றாள். அவன் பிச்சைக்காரன். சாப்பிட ஏதாவது வேண்டும் என்றவுடன் அவளுக்குக் கோபம் வந்தது. திடகாத்திரமாக இருக்கிறாயே, ஏன் வேலை செய்யக்கூடாது என்றாள். அவன் அறிவைப் பயன்படுத்த முயன்றான். பிரபல சினிமா நடிகையின் அழகோடு நீங்கள் சமையலறையில் உழலவில்லையா? நானும் அதைப் போன்று உழல்கிறேன் என்றான். “ இரு, என்ன இருக்கிறது என்று பார்க்கிறேன்” என்றாள். கோபம் சந்தோஷமாக மாறியது.

       சமர்ப்பணம் செய்து வேலை செய்வது ஆன்மாவால் செயல்படுவதாகும். சமர்ப்பணம் ஆன்மீக முன்னேற்றத்தைத் தரும். அத்துடன் அபரிமிதமாக வேலையைப் பூர்த்தி செய்யும்.

      தினமும் 7, 8 தபால் எழுதி அனுப்புபவர் தபால் ஸ்டிரைக் வந்தவுடன், வழக்கம்போல் தபால் எழுதினார். அவருடைய டைப்பிஸ்ட் தபால் ஸ்டிரைக் கால வரையறையின்றி இருக்குமாம். இப்பொழுது எழுதி எப்படி அனுப்புவது என்றார். தபால் ஸ்டிரைக் நமக்குப் புறநிகழ்ச்சி. அதை நாம் கருத வேண்டாம். அது நின்றபின் தபால் எழுதலாம் என்பது பக்தர்களாகிய நமக்குச் சரியில்லை. நாம் செய்வதைச் செய்ய வேண்டும். நம் கடமையில் குறையிருக்கக் கூடாது. அதுவே நம் பங்கு என்றார். அவர் எழுதினார், கடிதங்கள் டைப் அடிக்கப்பட்டு, தபாலுக்குத் தயாராகின. அடுத்த நாளும், மறுநாளும் அதையே செய்ய டைப்பிஸ்ட்டுக்குச் சலிப்பு. ஒரு நாள் கடிதங்களை டைப் செய்யவில்லை, தவற்றை உணர்ந்து அடுத்த நாள் அவற்றை சேர்த்து முடித்தார். குவிந்திருந்த எல்லாத் தபால்களையும் அடுத்த நாள் மாலை மணிக்குப் பதில் எழுதி முடித்தார். வேலை நிறைவேறியது போன்ற உணர்வு. 7 மணிக்கு ஸ்டிரைக் நின்றுவிட்டதாகச் செய்தி. தபால் ஸ்டிரைக் என்பது அகில இந்தியாவிலும் நடப்பது. ஒருவர் எழுதும் தபாலுக்கும் அதற்கும் தொடர்பு என்பது ஓரிழை, அதுவும் இலட்சத்தில், கோடியில் ஓரிழை, என்றாலும் அகவுணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் நாம் எத்தனைச் சிறிய பகுதி என்று கருதாமல், நாம் எதையோ சாதிக்கப் போகிறோம் என்று நினைக்காமல், புற நிகழ்ச்சியைப் புறக்கணித்து, அகவுணர்வான கடிதம் எழுதும் கடமையை மட்டும் கவனித்தால், தன் கடமை பூர்த்தியான நேரம், தனக்கு தடையாயிருந்த ஸ்டிரைக் விலகுவதைக் காணலாம். “நான் எழுதி முடித்தேன். ஸ்டிரைக் அதனால் நின்றது” என்ற “ஞானம்” உதயமானால் அது அகந்தை வளரும் வழி. அடக்கம் வளரும் முறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நான் எழுதியதால் ஸ்டிரைக்கை எப்படிப் பாதித்தது என்று ஆராய்ச்சி செய்வதைவிட, பாக்கியான தபால்களை எழுதி முடித்தவுடன், தடையாக இருந்த வேலை நிறுத்தம் நின்றது என்று புரிந்து கொள்வது உதவும்.

       அகவுணர்வு, புறநிகழ்ச்சிகளை நிர்ணயிக்கும். அதைக் கண்டு கொண்டு அதன் மூலம் அகந்தையை வளர்க்காமல், ஆன்மிக உழைப்பை வளர்க்க முயன்றால்,ஆன்மீக வாய்ப்பு தொடர்ந்தெழும்.

****

 657) திருவுள்ளம் நிறைவேறட்டும் என்று மந்திரமாக உச்சரித்தால் ஆன்மா நம்மையறியாமல் விழித்துக் கொள்ளும். அதற்கும் பலனுண்டு. சூட்சுமத் தரிசனம், மனம் அடங்குதல், ஆசையின் வேகம் அழிவது, செயலும் இரண்டாகப் பிரிந்து நம்மை நாடியும் விலகியும் போவது ஆகிய பலன் தெரியும். ஆசைக்குரியது அகன்று போய், அது நம்மிடம் வக்கிரமாக நடந்து கொண்டு நமக்கு மனிதர்களைப் பற்றி அதிகமாகப் புரிய ஆரம்பித்து சூழ்நிலை மாறும். விடாமுயற்சி, ஆர்வம், ஞானத்தேடல் அவற்றை புது உலகமாக நமக்களிக்கும்.(refer 655)

  •  திருவுள்ளம் நிறைவேறப் பிரார்த்தனை செய்தால் ஆன்மா விழிக்கும்.
  • ஆசையழிந்து, சுபாவம் புரிந்து, சூழல் மாறி, ஞானத்தைத் தேடும் புது உலகம் பிறக்கும்.

       மந்திரத்தின் உட்பொருளை மனதில் வாங்கி, புரிந்து, ஏற்றுக் கொண்டு அதன் சக்தியை மனத்தின் மூலம் ‘ஜீவனுள்’ பரவ அனுமதித்தால், அதன் முழுப் பலன் உடனே ஏற்படும். ஆன்மா விழிப்பாக இருப்பதில்லை, மனம் கருத்தை விளங்கிக் கொள்வதில்லை. மனம் விளங்கிக் கொண்டதை உணர்வு ஏற்றுக் கொள்வதில்லை. உடல் இருளால் நிறைந்து எதையும் அனுமதிப்பதில்லை. மனம் மந்திரத்தைச் சொல்வதையே எதிர்க்கும். நான் நன்றாகப் படித்துப் பாஸாக வேண்டும் என்று ஒரு சோம்பேறி நினைக்கும்பொழுது, படிக்க விரும்பாத உடல் அவன் சொல்லை மாற்றிவிடும். நான் நன்றாகப் படித்துப் பாஸாகக்கூடாது என்று வாய் உச்சரிப்பதைக் காணலாம். இது உடலின் எதிர்ப்பாகும். திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற எண்ணத்திற்கு உடலும், உணர்வும் உடன்பாடில்லை என்றாலும், மனம் புரிந்து கொள்ள முடியாத நிலையிலிருந்தாலும், மந்திரமாகத் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்று உச்சரித்தால் அதற்கும் பலன் உண்டு. விழிப்பில்லாத ஆன்மா விழித்துக் கொள்ளும். ஜீவன் ஓரளவு சூட்சுமமாக இருப்பவர்கட்குச் சூட்சுமப் பார்வை உற்பத்தியாகி அன்னை சூட்சுமத் தரிசனம் கிடைக்கும். யோகம் பலித்த பிறகும் மனம் பூரணமாக அடங்காது. பலருக்கு மனம் அடங்கவே அடங்காது. திருவுள்ளம் நிறைவேறட்டும் என்பதை அதற்குரிய உச்சகட்ட உணர்வோடு இல்லாமல் வெறும் மந்திரமாகச் சொன்னாலும், மனம் அடங்கும்.

       இந்திர பீடத்திற்கு ஆபத்து வரும் அளவு கடுமையாகத் தவம் செய்து பலித்த பின் தெய்வலோகக் கன்னிகையைக் கண்டு ஆசை எழுந்து, அத்தனைத் தவப் பலனையும் இழந்தவர்கள் முனி சிரேஷ்டர்கள். ஆசை அழிதல் என்பது உயர்ந்தது. ஆசையின் வேகம் அழிவதற்கே 60, 70 வயது போதாது. இம்மந்திரத்தால் ஆசையின் வேகம் அடங்குவதையும் காணலாம்.

       செயல் நல்லது, கெட்டதாகப் பிரிந்து, நல்லது நம்மை நாடுவதையும், கெட்டது விலகுவதையும் காணலாம். தானே கெட்டது நம்மை விட்டு விலகும் சந்தர்ப்பம் இன்று உலக வாழ்விலில்லாதது.

       நாம் ஆசைக்குரியதாக நமக்குப் பொருத்தமற்றதை விரும்புகிறோம். அது தானே தூரப் போகும். போனபின் அதன் குணத்தைக் காட்டும். அதனால் நாம் மீண்டும் அதை நாட வேண்டும் என்ற எண்ணத்தை மறப்போம். இந்நிலையில் நாம் விடாமுயற்சி, ஆர்வம், ஞானத்தை நாடும் பாங்கு ஆகியவற்றை மேற்கொண்டால், நம் உலகம் தாழ்ந்தது விலகி, உயர்ந்த புது உலகம் உற்பத்தியாகி, நாம் புது மனிதராவோம். இம்மந்திரம் அதன் உச்சகட்டத்தில் மனிதனை சத்திய ஜீவனாக்கும், அதன் முழு உட்பொருளையும் நாம் பெற முடியாவிட்டாலும், புது உணர்வு, புது நிலை, புது மனம் உற்பத்தியாகி புதிய உலகத்தை நமக்குக் காட்டவல்லது இது.

****

 658) அறியாமை விழித்து அறிவாக மாறும்பொழுது அது செயலிலும், உணர்ச்சியிலும், எண்ணத்திலும் பிரதிபலிப்பது உள்ளுணர்வைக் கண்ணாடியாக வாழ்வு பிரதிபலிப்பதாகும்.

அறியாமை அறிவாகி நம்முள்ளுணர்வு வாழ்வை பிரதிபலிப்பது ஆன்ம விழிப்பாகும்.

       இறைவனை அறியாதது அறியாமை. அறிவது அறிவு. ஒரு குழாய் கசிகிறது எனில், கசிவை அடைப்பது நம் செயல் (a physical work). ஏன் கசிவை அடைக்கிறோம் என்ற கேள்வி நமக்கு எழுவதில்லை. எப்படி அடைக்காமலிருக்க முடியும் என்ற கேள்வியே எழும். மனிதன் அறியாமையுடையவன். அவன் திறமையைச் செயலில் வெளிப்படுத்த கசிவை அடைக்கும் முயற்சியை மேற்கொள்கிறான். நாமெல்லோரும் இப்படித்தான் செயல்படுகிறோம். இதை முறைமை, திறமை, அறிவு எனக் கொள்கிறோம். இது நம்மைப் போன்ற சாதாரண மனிதனுக்குச் சரி.

        அன்னையை ஏற்றுக் கொண்டு, பக்தனாய், சாதகனாய், விழிப்புற விரும்புகிறவன் இப்படிச் செயல்படுவது சரியில்லை. அவன் உடலால் மட்டுமோ, அறிவால் மட்டுமோ செயல்பட்டால், அவனுக்கு அது அறியாமை. ஆன்மாவால் செயல்படுதல் அறிவுடைமையாகும். குழாய் கசிவதில் ஆன்ம விழிப்பு எப்படி வரும். ஆன்ம விழிப்பு, ஆன்மீக சக்தி கசிவை அடைக்க முடியும், நிறுத்த முடியும் என்று நம்ப ஒருவருக்கு ஆன்மா விழிப்பாக இருக்கவேண்டும். ஆன்மா விழிப்பாக இருந்தால், கசிவை நிறுத்த முடியும் என்று நம்ப முடியும். நம்பினதால் கசிவு நின்ற நிகழ்ச்சியை வேறொரு கட்டுரையில் எழுதியிருந்தேன்.

       கசிவு நின்றால் ஆன்மா செயல்பட்டுக் கசிவை நிறுத்திவிட்டது எனப் பொருள். அறியாமை விழித்து அறிவாக மாறியது எனப் பொருள். இது செயலிலும், உணர்விலும், எண்ணத்திலும் பிரதிபலிப்பது எப்படி?

        ஜடமான ரிப்பேர் செய்யும் செயலை நம்புவது அறியாமை. கண்ணுக்குத் தெரியாத ஆன்மாவை நம்புவது அறிவுடைமை. கசிவு நிற்கும் என மனம் நம்பியவுடன், மனம் பரந்து விரிவதை உள்ளே உணரலாம். மனநிறைவாக அது தெரியும், மனம் நிறைந்தவுடன் நம்பிக்கை முழுமை பெறும். மனத்தில் ஏற்படும் நம்பிக்கை, குறுகிய மனம் விரிவது, மனம் நிறைவது ஆகியவை எண்ணத்தில் ஏற்படும் பிரதிபலிப்புகளாகும்.

        ஆன்மா இனிமையானது. வாழ்வுக்கில்லாத இனிமை ஆன்மாவுக்குண்டு. ஆன்மா விழிப்புற்றவுடன் நெஞ்சில் இனிமை தோன்றும். நெஞ்சம் இனித்தால் ஆன்மா - சைத்தியம் - மேலே பூத்து வருகிறது எனப் பொருள். மற்றவர் மீது இதுவரை இல்லாத கருணையும், பரிவும் தோன்றும். ஜடப்பொருள்கள் மீதும் அன்பு சுரக்கும்.

        கசிவு என்ற செயலிலும் நம் ஆன்ம விழிப்பு பிரதிபலித்து, கசிவு நின்றுவிட்டது என்று மாறும். கசிவு, துவாரம் அடையாமல், நின்றுவிட்டால், தடையில்லாத துவாரத்தின் வழியே தண்ணீர் கசியவில்லை என்றால், ஜடமான குழாய் ஆன்ம விழிப்பை ஏற்றுப் பிரதிபலிக்கிறது என்று பொருள். 

       இதைக் கண்ட பின் முதலில் செய்ய வேண்டிய காரியம், கசிவை அடைக்க வேண்டும். ஆன்மவிழிப்புக்கு அவசியமானது எல்லாப் பொருள்களும் ரிப்பேரில்லாமலிருப்பது. எனவே அதை முதற்காரியமாகச் செய்ய வேண்டும்.

****

659) பகுத்தறிவு வெற்றிக்குத் தடை. சக்தி பிராணனை நிரப்பினால் காரியம் பூர்த்தியாகிறது. அறிவு சக்தியின் ஒரு பகுதியைச் செலவிடுகிறது. காரியம் முடிந்தபின் விளக்கத்தைத் தேடி அறிவு வரலாம். முதலிலேயே அறிவு செயல்பட்டால் காரியம் தடையாகும்.

பகுத்தறிவு விலகி சக்தி பிராணனை நிரப்பி காரியம் பூர்த்தியாகும்.

       நமக்குக் காரியம் சிறப்பாகக் கூடி வந்தபொழுது “நான் இதையெல்லாம் நினைக்கவில்லை. தானே நடந்தது. எப்படி நடந்தது என்று தெரியவில்லை” என்று பெரும்பாலும் சொல்வதாக இருக்கும்.

       வேறு சில நேரங்களில் அதேபோல் காரியம் சிறப்பாகக் கூடி வந்தால், “எல்லாம் முதலிலேயே திட்டமிட்டது. திட்டம், போட்டது போல் எழுத்துக்கு எழுத்து அப்படியே நடந்தது” என்று சொல்வதாக அமையும்.

       நம் நிலைமைக்கு மீறியது கூடி வருவது முதலில் சொல்லியது, அடுத்தாற்போல் சொல்லியது நம் நிலைக்குட்பட்டதாகும். நம் நிலைமைக்கு உட்பட்ட காரியம் திட்டமிடுவதால், யோசனை செய்வதால், மீண்டும் மீண்டும் பேசுவதால் சிறப்பாகப் பூர்த்தியாகும். அம்முறையை நம் நிலைமைக்கு மேற்பட்ட செயல் பின்பற்றினால் பகுத்தறிவு தடையாகும். காரியம் பூர்த்தியாக வேண்டிய சக்தியில் ஒரு பகுதியைச் சிந்தனை செலவிடும். அதனால் காரியம் பூர்த்தியாகாது.

       1977இல் 2000ரூபாய் சம்பாதிப்பவர் 15 இலட்ச ரூபாய் கம்பெனி ஆரம்பிக்க முயன்றபொழுது எவருக்கும் கிடைக்காததுபோல் அத்தனைப் பணமும் விரைவில் சாங்ஷனாயிற்று. தொழிற்கூடம் கிடைப்பது அரிது என்ற நிலையில் தற்செயலாய் இன்ஸ்பெக்ஷனுக்கு அடுத்த கட்டடத்திற்கு வந்த டைரக்டர் இக்கம்பெனியைப் பார்த்து வியந்து, ஒரு தொழிற்கூடத்தைக் கொடுத்தார். டெக்னாலஜி, மார்க்கெட், முதல், கூடம் எதிர்பாராமல் கிடைத்தன. பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. அடுத்தாற்போல் நடக்க வேண்டியவற்றைப் பற்றிச் சிந்தனை செய்தது. அதாவது மனம் ஓடியது. ஒவ்வொன்றாக ரத்தாகியது. அடுத்த 6, 7 வருஷம் போராட்டமாயிற்று. முடிவில் சிந்தனை நின்றது. சிந்திக்க எதுவுமேயில்லை. சிந்தனை ஓடவில்லை. பல கோடி தொழிலில் பங்கு அமைந்தது. சிந்தனை எழவில்லை. முழுத் தொழிலும் தனக்கே வந்தது.

       ஆகையால் செயல்பாட்டிலும், தனக்கு மீறிய நிலையில், அறிவால் செயல்பட்டாலும் காரியம் தடையாகும். தனக்கு மீறிய நிலையில் வருவது அருள். அதைப் போற்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

       நம் திறமைக்கு உட்பட்ட இடத்தில் திட்டம், பகுத்தறிவு, சிந்தனை, எழுத்து, பேப்பர், அத்தனையும் பலன் தரும். புள்ளி போட்டால், போட்டதுபோல் நடக்கும். பார்ப்பவர் பிரமிக்கும் வகையில் காரியம் பூர்த்தியாகும். இதையும் சிந்தனையை விலக்கிச் செய்ய முடியும். அது சமர்ப்பணம். அது முடிந்தால், பலன் அளவு கடந்து வரும். தொழிலுக்குரிய முறையன்று அது. யோகத்தில் செயலைச் சமர்ப்பணம் செய்து மலரச் செய்யும் வழி அது.

****

 660) ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி அவர் தத்துவம்.

பரிணாமம் முடிவானால் அதன் ஆரம்பம் உயிர் பிழைத்து வாழ்தலாகும்.

பிழைப்பு - வளர்ச்சி - அடுத்த நிலைக்குரிய வளர்ச்சி -பரிணாமம் என்பது முழு அளவுகோலாகும்.

இந்த அளவுகோல் நம் ஒவ்வொரு கரணத்திற்கும் பொருந்தும்.

இன்று நாம் இந்த அளவுகோலின் எந்த நிலையிலிருக்கிறோம்?

முதல் நிலையான உயிர் பிழைத்தல் புரிகிறது.

வளர்ச்சி நமக்குத் தெரிவதில்லை. உடல் வளர்வதாலும், அது நம் கண்ணுக்குத் தெரியாததாலும் அது புரிவதில்லை.

உடலின் வளர்ச்சியை அறிய முடியாத நிலையிலிருந்து,

முயன்று ஆன்மீகப் பரிணாம வளர்ச்சிக்குப் போவது யோகம்.

  1. நிலையான வாழ்வே ஆரம்பம்.

  2. பிழைத்து வளர்ந்து மாறுதல் எந்நேரமும்.

  3. நம் நிலை தெரிவது விழிப்பு.

  4. முதல் நிலையிலிருந்து முடிவான நிலைக்குப் போவது ஆன்மீகப் பரிணாமம்

        போதுமான தெம்பில்லாமல், வருமானமில்லாமல் பிழைக்க முடியுமா என்று போராடி பிழைப்பவன் (survival) தன் முயற்சியை விவரமாக அறிவான். தனக்கு வந்த இடர்களும் தான் எடுத்த முயற்சியும் அவனுக்கு நினைவிருக்கும்.

       வளரும் குழந்தைக்குத் தான் வளர்வது தெரியாததுபோல் வளமான சந்தர்ப்பத்தில் பிறந்து, வசதியான வாய்ப்புகள் - கல்வி, சொத்து, அன்பு, ஆதரவில் - வந்து நிலை தொடர்ந்து உயர்ந்தால், அது சந்தோஷமாகச் சௌகரியமாக இருக்கும். தனக்கு வந்தவை வாய்ப்புகள் என்பது தெளிவாகத் தெரியாது. சில சமயங்களில் தெரியவே தெரியாது. இது வளர்ச்சியின் தன்மை. (This is unconscious growth).

     இருக்கும் நிலையிலேயே - குமாஸ்தா, சிறு விவசாயி, பெரிய வியாபாரி, அதிகாரி - உள்ள வளர்ச்சி நமக்குத் தெரிவதில்லை. அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சி (development) என்பது குமாஸ்தா ஆபீசராகும் வளர்ச்சி, அதிகாரி அரசியல்வாதியாவது. இவை நாம் அறிந்த முயற்சிகள். சுலபத்தில் நடக்காது. பெருமுயற்சி தேவை. நூறில் ஒன்று பலிக்கும். சாண் ஏறினால் முழம் சறுக்கும். வெற்றி அரிது.

       பரிணாமம் என்பது மனிதன் குரங்கிலிருந்து பிறந்தது. மனிதன் சத்திய ஜீவனாவது. சமூகத்தில் பரிணாம வளர்ச்சிக்கு ஓரளவு உதாரணம் சொல்லலாம். அனாதைப் பையன் தொழிலதிபராவது பரிணாம வளர்ச்சி எனலாம். அனாதைக்கும், தொழிலுக்கும் சம்பந்தமில்லை. இது அடுத்த கட்டமுமில்லை. அடுத்த பரிணாம நிலை என வர்ணிக்கலாம்.

       பிழைப்பு - வளர்ச்சி - அடுத்த நிலைக்குரிய வளர்ச்சி - பரிணாமம் என்பது முழு அளவுகோலாகும். இது மனத்திற்கும், உடலுக்கும், உணர்வுக்கும், ஆன்மாவுக்கும் பொருந்தும். முதல் தலை முறையில் படிப்பவன் 4 வகுப்போடும் அடுத்த அடுத்த தலை முறைகளில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து சில தலைமுறைகளில் பெரிய படிப்பு, பெரிய அறிவு பெறுவதும் வழக்கம். அது போன்றில்லாமல் முதல் தலைமுறையிலேயே வெளிநாட்டு Ph.D. டாக்டர் பட்டம் பெற்று மேதையாக முயல்வது போலுள்ள நிலை வளர்ச்சியை அறியமுடியாத மனிதன் பரிணாம வளர்ச்சியை நாடுவது, பல நிலைகளை ஒரே முயற்சியில் கடக்கும் செயல் இது.

       இது மனித முயற்சிக்குரியதன்று. அன்னை சக்தியால் முடியக் கூடியது. மனிதன் சத்திய ஜீவனாக அன்னை அருளால் உயர முடியும். இது முடியாதவர்கள் மற்ற கரணங்களில், வாழ்வில் இது போன்ற பலனை நாடலாம். அதற்கு அன்னையின் உதவியை நாடலாம். இதுவரை நம் அனுபவங்களில் நம்மை அறியாமல் அன்னை செயல்பட்டு ஓரளவு இது போன்ற பலன் பெற்றிருப்பதைப் பலரும் நினைவுபடுத்தலாம். நம்மையறியாமல் பலன் இதுபோல் வந்தது என்றால், நாம் முயன்று பெற விரும்பினால் (conscious effort) பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

       நாமுள்ள நிலை எதுவானாலும் அதிலிருந்து உச்சகட்ட நிலைக்கு ஒருவர் போக விரும்பினால், அதற்குரிய முறைகளை அவர் பின்பற்றினால், அது நிச்சயம் பலிக்கும் என்பதற்கு அன்பர்கள் வாழ்வில் அநேக நிகழ்ச்சிகளுண்டு.

       நம் பங்கு அதற்குரிய முயற்சி. நாம் எட்ட நினைக்கும் நிலைக்கும் குறைவான நிலையின் பழக்கங்களை நாம் விருப்பமாக தயாராக அறவே அகற்ற முன்வர வேண்டும்.

 

தொடரும்...

 

****

_________________________________________________

ஜீவிய மணி

சொரூபம் சுபாவமாவது சிருஷ்டி.

_______________________________________________

 

 

 

 

 

 



book | by Dr. Radut