Skip to Content

12. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

தோழிகள் இருவர். அதில் ஒருவருக்கு திருமணம் நடந்த பின்பு இருவருக்குமிடையே பல ஆண்டுகளாகத் தொடர்பு இல்லை.

தாமதமாக இரண்டாவது நபருக்கும் திருமணம் ஆகி, 9 மாத கர்ப்பிணி. வயிற்றில் குழந்தை வளருகிறது என்றாலே, மற்றவர்கள் கேட்கும் கேள்வி, குழந்தை வயிற்றில் உதைக்கிறதா என்பது. இவருக்கு குழந்தை உதைக்கவே இல்லை மேலும் அசைவுகளை அவ்வளவாக உணர முடியவில்லை என்ற கவலை. ஸ்கேன் எடுக்கப் போகும் போதெல்லாம் இவருக்கு அச்சமும் பயமும் சூழ்ந்துகொள்ளும். ஸ்கேன் செய்யும் நபரே கடவுளை வேண்டிக்கொண்டு ஸ்கேன் செய்யத் தொடங்கும் அளவு பயம் கொள்வார்.

இந்த முறை ஸ்கேன் செய்யப் போனபொழுது அவருக்கு ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. இம்முறை ஸ்கேன் செய்ய வந்த புதிய நபர் வேறு யாரும் அல்ல, அவருடைய நெருங்கிய தோழி. பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த மகிழ்ச்சி. நலம் விசாரிப்புகள் எனத் தொடங்கி பயம் வரை பகிர்ந்து, ஸ்கேன் எடுக்கும் தோழியின் அம்மாவைப் பற்றி விசாரித்தார். அம்மா நன்கு பாடுவாங்களே, எப்படி இருக்கிறார்கள், அவர் குரலைக் கேட்க வேண்டும் போலுள்ளது என்றாள்.

எனது 6 வயது பெண், பாட்டி பாடுவதை அடிக்கடி மொபைலில் ரெக்கார்டு பண்ணுவாள். ஏதாவது இருக்கிறதா எனப் பார்க்கிறேன் என்று சொல்லி ஒரு ரெக்கார்டிங்கை ear phone-இல் கேட்கும்படியும் தான் ஸ்கேன் எடுப்பதாகவும் கூறினாள்.

கேட்ட தோழி “என்னடி பாட்டு என்றாய், அம்மா ஏதோ படிக்கிறார்கள்” எனக் கேட்டாள். அம்மா தினமும் பரம்பொருள் என்ற புத்தகத்தைப் படிப்பார்கள். அதை என் பெண் ரெக்கார்டு செய்திருக்கிறாள். வேறு ரெக்கார்டிங் இல்லையே எனச் சொல்ல, பரவாயில்லை நீ ஸ்கேன் முடிக்கும் வரை நான் இதையே கேட்கிறேன் என்று கூறியபடி ஸ்கேனுக்குத் தயாரானாள்.

இவள் காதில் பரம்பொருள் கேட்டுக்கொண்டிருக்க, அவளுடைய தோழி Jell தடவி ஸ்கேன் செய்ய எத்தனித்த போது, திடீரென்று வயிற்றிலிருந்த குழந்தை பலமாக எட்டி உதைக்க, வலி தாளமுடியாமல் வாய்விட்டு கத்திவிட்டார். அவளை சோதனை செய்த தோழி பிரசவ நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்தாள். ஸ்கேனை நிறுத்தி விட்டு உதவிக்கு ஆட்களை அழைத்து அவசரமாக அவளை லேபர் ரூமுக்குக் கொண்டுபோனார்கள்.

நொடியில் சுகப்பிரசவத்துடன் பெண் குழந்தை பிறந்தது. வயிற்றிலுள்ள குழந்தையின் அசைவை உணர முடியவில்லை, உதைக்கவில்லை என்ற மனக்கவலையைப் பரம்பொருள் வாசிப்பு உடனே தீர்த்து வைத்ததுமட்டுமல்லாமல், கேட்டுக்கொண்டிருக்கும்போதே குழந்தை உதைத்து அந்த க்ஷணமே பிரசவமும் நல்ல முறையில் முடிந்தது. அசைவற்றது பரம்பொருளின் அருளால் அசைவு பெற்று உலகில் ஜனித்தது.

அன்னை பிரச்சனை தீர்ப்பது மட்டுமல்லாமல் அதனுடன் உபரியாக வாய்ப்பையும் அருளுவார் என்ற நம் குருநாதர் கர்மயோகியின் வாய்மொழியை இந்நிகழ்ச்சி சத்தியமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தோழிகள் இருவரும் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் அருளுக்குப் பக்தியுடன் நன்றி கூறினர்.

அவர் வாசிக்கக் கேட்ட கட்டுரையின் விவரத்தை சில நாட்களுக்குப்பின் விசாரித்த பொழுது தெரியவந்த விஷயம், அன்று ஏப்ரல் 24, ஸ்ரீ அன்னை புதுவைக்கு நிரந்தரமாகத் தங்க வந்த தரிசன நாள் என்பது. அவர் வாசிக்கக் கேட்ட கட்டுரை பரம்பொருள் முதல் பாகத்தில் கடைசியாக உள்ள “ஜீவாத்மாவுக்கு இறைவன் வகுத்த வழி”.

பரம்பொருள் புத்தகத்தில் உள்ள லைப் டிவைன் கருத்துக்களை வாசிப்பது நம் சூட்சுமச் சூழலை உயர்த்தும். நம் வாழ்வில் ஏற்படும் சுருக்கங்களை நேராக்கி சுகம் தரும் என்பதற்கு இவ்வனுபவமும் சான்று.

ஸ்ரீ அரவிந்த மம சரணம்.

***********



book | by Dr. Radut