Skip to Content

08. தனித்தன்மையும் அதற்குரிய அடையாளங்களும்

தனித்தன்மையும் அதற்குரிய அடையாளங்களும்

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் - சொற்பொழிவு ஆற்றியவர்: திரு. N. அசோகன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 24.04.2015

இப்பொழுது நான் பேச எடுத்துக்கொண்டுள்ள தலைப்பு தனித்தன்மையும், அதற்கு அடையாளமாக விளங்கும் குணவிசேஷங்களும் ஆகும். குணவிசேஷங்களைப் பற்றி விவரமாகப் பார்ப்பதற்குமுன் தனித்தன்மை என்றால் என்ன? மனித சமூகத்தில் அது எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்ற பொதுவான விவரங்களைப் பார்ப்போம். தனித்தன்மை என்றால் தனித்திருத்தல் அல்லது தனியாகத் தெரிதல் என்று நாம் விளக்கம் கொடுக்கலாம். அப்படித் தனியாகத் தெரிய வேண்டும் என்றால், அந்தளவிற்கு அவர் வேறுபட்டு நிற்கிறார். அதனால்தான் தனியாகத் தெரிகிறார் என்று அர்த்தமாகிறது. உதாரணமாக நம் ஊரில் எல்லோரும் சுமாரான வசதியோடு இருக்கும்போது ஒருவர் மட்டும் பெரும் பணக்காரராக இருந்தால், அவருடைய வீடு, அவர் வைத்திருக்கும் கார் எல்லாம் அவரைத் தனித்துக் காட்டும். அம்மாதிரியே ஒரு வகுப்பில் மாணவர்கள் எல்லோரும் சராசரியான அறிவு பெற்றிருக்கும்போது ஒருவன் மட்டும் அபார புத்திசாலியாக இருந்தால், அந்த அபார அறிவு அந்த மாணவனைத் தனித்துக் காட்டும். ஆகவே தனித்தன்மை என்பதை நாம் வேறுபாடு, வித்தியாசம் என்றும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.

இறைவனே உலகைப் படைக்கும்போது வேறுபாட்டை விரும்பிப் படைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. உலகில் ஆண்கள் மட்டுமில்லை, பெண்களும் உள்ளனர். வெறும் ஆண்கள்தாம் உள்ளனர், பெண்கள் இல்லை என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். ஆண்களுக்கு வாழ்க்கை வெறுத்து விடும். ஆகவே ஆணுக்கு எதிரான அம்சங்கள் கொண்ட பெண்ணும் படைப்பிலிருந்தால்தான் வாழ்க்கை சுவையாக இருக்கும் என்று ஆண்டவனே நினைத்திருக்கிறார் போலும். அப்படியே ஒட்டுமொத்த மானிட இனத்தை எடுத்துக் கொண்டாலும், அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஐரோப்பியர்கள் வெண்மையாகவும், ஆப்பிரிக்கர்கள் கரிய நிறமாகவும், இந்தியர்கள் பிரவுன் கலராகவும், சீனர்கள் மஞ்சள் நிறமாகவும் காட்சியளிக்கிறார்கள். உலகில் எங்குச் சென்றாலும், எல்லா இடத்திலும் மனிதன் வெண்மையாகவே இருக்கிறான். அல்லது கருப்பாகவே இருக்கிறான் என்றால் வெண்மை நிறத்தின் மேலும், கருமை நிறத்தின் மேலும் வெறுப்பே வந்துவிடும். இவ்வாறு நிறங்கள் எல்லாம் வேறுபட்டே தெரிவதால்தான், வெண்மை நிறத்திற்கு ஒரு மதிப்பு வருகிறது. அப்படி உருவ வேறுபாடுதான் மனித வாழ்க்கையில் இருக்கிறது என்றில்லை. மத, மொழி, கலாச்சார வேறுபாடு என்றிவைகளெல்லாம் இருக்கின்றன. இந்தியாவில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நாம் அதைப் பார்க்க முடியாது. முகமதிய நாடுகளுக்குச் சென்றால், அங்குப் பெண்களை வித்தியாசமாக நடத்துவார்கள்.

மனிதர்களுக்குள்ளேயே இத்தனை வேறுபாடு உள்ளபோது ஆண்டவனைப்பற்றிய மனிதனுடைய சிந்தனையும் பலவித- மாக வேறுபடுவதைப் பார்க்கிறோம். இந்தியர்கள் பல கடவுள்கள் உண்டு என நம்புகிறார்கள். அதனால் இந்த நாட்டில் சிவ பக்தன், கிருஷ்ண பக்தன், ராம பக்தன், காளி பக்தன் என்று ஆளுக்கொருவிதமான கடவுளை வழிபடுவதைப் பார்க்கிறோம். முகமதியர் மற்றும் கிருத்துவர்களை எடுத்துக் கொண்டால், கடவுள் ஒருவர்தான், பல கடவுள்கள் என்பதெல்லாம் பொய் என்று பேசுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினரையும், பகுத்தறிவுவாதிகளையும் எடுத்துக் கொண்டால், இந்த உலகம் இயங்குவதற்குக் கடவுளே தேவையில்லை, கடவுள் என்பவனே மனிதன் ஏற்படுத்தியவர்தான், மனிதனின் கற்பனையில்தான் அவர் இருக்கிறாரே தவிர அவன் கற்பனையைத் தாண்டி அவரில்லை என்பார்கள். இப்படியாக நாம் பார்த்துக் கொண்டேயிருந்தால், எண்ணற்ற வகையில் மானிட கலாச்சாரம் வேற்றுமையை வளர்த்துக் கொண்டுள்ளது. ஆகவே   தனித்தன்மையின் பிரதான அடையாளமே வேறுபட்டிருத்தலாகும்.

சமூகத்தில் இப்படி வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் முக்கியமாக ஒரு நாலைந்து விஷயங்களில்தான் தங்களுடைய வேறுபாட்டை அதிகமாக வெளிக்காட்டுவார்கள். சமூகத்தில் ஒரேமாதிரியாக காட்சியளிக்கின்ற சராசரி மனிதர்கள் 90% என்று வைத்துக் கொள்ளலாம். இந்தியர்கள் 10% தான் வேறுபட்டுக் காட்சியளிப்பார்கள். அந்த வேறுபாடு அவர்களுடைய originality, தன்னம்பிக்கை மற்றும் தன்னைச் சார்ந்திருத்தல், unconventional behaviour, அடுத்தவர் விமர்சனங்களை மதிக்காமல் இருத்தல், சொந்த முடிவுகளில் திடமாக இருத்தல், தலைமை தாங்கி அடுத்தவரை வழிநடத்துதல் என்றெல்லாம் வெளிப்படும். அதாவது மேற்சொன்ன குணவிசேஷங்களில் ஏதேனும் ஒன்று ஒருவரிடம் வெளிப்பட்டாலும் அவர் தனித்தன்மை மிகுந்தவர் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இவற்றுள் பிரதானமான originality-க்கு வருவோம்.

Originality-யை நாம் பல இடங்களில் பல்வேறு ரூபங்களில் சந்திக்கிறோம். அதுவொரு புதிய idea-வாக வெளிப்படலாம். அதற்கும்மேல் போய் புதிய கண்டுபிடிப்பாகவும் வெளிவரலாம். புதிய சமூக அமைப்பாகவும் அது இருக்கலாம். மேலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் முதன் முதலாக இவர்தான் எடுத்துச் செய்தார் என்றும் வரலாம். புதிய idea என்றால், மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்ற புரட்சிகரமான ஒரு கருத்தை டார்வின்தான் முதன்முதலாகச் சொன்னார். நாமெல்லாம் குரங்கைப் பார்க்கும்போது மனிதனைப்போல் கண், மூக்கு, காதுகள் எல்லாம் உள்ளனவே என்று தோன்றத்தான் செய்கிறது. அதிகபட்சமாக மனிதனும் குரங்கும் ஒன்றாக உள்ளனர் என்று நமக்குச் சொல்லத் தோன்றுகிறது. இதற்குமேல் நம் சிந்தனை ஓடுவதில்லை. இந்த இடத்தில்தான் டார்வின் நம்மிடத்திலிருந்து வேறுபட்டிருக்கிறார். உருவ ஒற்றுமையை கவனித்த அவர் அடுத்த கட்டமாக சிந்திக்க ஆரம்பித்தார். குரங்கும், மனிதனும் ஒரேமாதிரி இருக்கின்றனர் என்றால், ஏன் குரங்கிலிருந்து மனிதன் பிறந்திருக்கக் கூடாது, இப்படித்தான் அவர் சிந்தனை original-ஆக எழுந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிந்தனை உலகில் பரவியிருப்பதால், இன்று இது நமக்கு அவ்வளவு புரட்சிகரமாகத் தெரியவில்லை. ஆனால் டார்வின் வாழ்ந்த காலத்தில் ஆண்டவனே நேரடியாக மனிதனை பொம்மையாகப் படைத்தான் என்றும் அந்த பொம்மையின் வாயில் ஊதி மூச்சுக்காற்றை உருவாக்கி சுவாசத்தை உண்டு பண்ணினார் என்றும் பைபிளில் சொல்லப்பட்டதை பரவலாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அதனால் டார்வின் அப்படி நினைக்காமல் வேறுவிதமாக நினைத்தது புரட்சிகரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

புதியதாக ஒரு எண்ணம் உருவாவது originality என்றால், புதியதோர் சமுதாயக் கொள்கையையே உருவாக்குபவர்களும் உள்ளார்கள். அதையும் நாம் originality-க்கு அடையாளமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சோஷலிச கொள்கைகள் 1800-ஆம் ஆண்டுகளிலிருந்தே ஐரோப்பாவில் பிரபலமாகப் பரவி இருந்தன. ஆனால் அவற்றிற்கு முறையான ஒரு விளக்கம் கொடுத்து சோஷலிஷத்தை தவிர்க்க முடியாது, முதலாளித்துவத்தை அடுத்து வரப்போவது சோஷலிசம்தான், அது புரட்சியால்தான் வரும், முதலாளித்துவம் (Capitalism) நிலையானதில்லை, இதன் ஆயுட்காலம் முடியும் நேரம் வந்துவிட்டது என்றெல்லாம் விளக்கம் கொடுத்து சோஷலிசத்தைவிட உயர்ந்த கொள்கையாக கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தியவர் காரல்மார்க்ஸ் அவர்கள். அவர் கம்யூனிசத்தை ஆதரித்ததால், தனித்தன்மை அற்றவர் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அவர் உண்மையில் தனித்தன்மையை மிகவும் வலியுறுத்தியவர். முதலாளித்துவ பொருளாதார முறையில், உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகள் பறிக்கப்படுவதால் அதைத் தவிர்க்க கம்யூனிசப் பொருளாதார முறைக்கு மாறினால், உழைக்கும் வர்கத்தினரின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால்தான் கம்யூனிசத்தை ஆதரித்தார் என்று தெரிகிறது.

(தொடரும்)

***********



book | by Dr. Radut