Skip to Content

07. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

9. மாதக் காணிக்கை (Prosperity Offerings):

நம் மரபில் ஏற்பட்ட ஒரு முக்கியமான பழக்கம் தெய்வத்தை வழிபடும் பக்தன் தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் தன் வழிபாட்டில் ஈடுபடுத்துகிறான். வழிபாடு முழுமையாக வேண்டி வாயால் துதி பாடி, மனத்தால் பக்தி செலுத்தி, உடலால் உழவாரப்படை பணி போன்ற உழைப்பை நல்கி, தன் கரணங்கள் அனைத்தையும் வழிபாட்டில் பக்தன் ஈடுபடுத்துகிறான். மனத்தால் எவரும் பக்தி செலுத்த முடியும். வாயால் எல்லோராலும் துதி பாட முடியும். ஆனால் கோயிலுக்குப் போகின்ற எல்லோராலும் உடலால் உழைப்பை நல்க வாய்ப்பிருப்பதில்லை. இது சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட விளைவு.

ஜீவனால் மலர்ந்து தெய்வத்தைத் தன்னுள் அழைப்பது சிறந்தது. அது முடியாதவர்கள் மனத்தால் தெய்வ நாமத்தை உச்சரிக்கின்றார்கள். அதுவும் முடியாதவர்கள் வாயால் நாம ஜெபம் செய்கிறார்கள். உடலால் தெய்வத்திற்குப் பணி செய்தால்தான் உடலின் பங்கு பூர்த்தியாகும். இதைப் பூர்த்தி செய்ய முடியாதவர்கள் தங்கள் உடல் உழைப்பின் பலனைத் தெய்வத்திற்குச் சமர்ப்பித்தால், உழைப்பால் வந்த ஊதியத்தைச் சமர்ப்பணம் செய்தால், உடலால் தெய்வ வழிபாடு செய்ததற்குச் சமமாகும். இதுவே காணிக்கை செலுத்துவதன் ஆன்மீக அடிப்படை.

எந்தக் கரணத்தால் இறைவனைப் பூஜிக்கின்றோமோ, அந்தக் கரணம் அருளால் நிரம்பி வழிகிறது. ஸ்தோத்திரம் பாடி வழிபட்டால், மனம் இறைவனது அருளால் தெளிந்து, விசாலமாகி, புத்தி கூர்மை ஏற்படும். பக்தியால் பரவசப்பட்டால், மன வியாகூலங்கள் விலகி, உள்ளம் பூரித்து, சந்தோஷத்தால் நிறைகிறது. ஒரு கரணத்தால் செய்யும் தொண்டிற்கு மற்றொரு கரணத்தை நிரப்பும் திறன் இல்லை. ஆங்கிலத்தில் அதிகத் திறமையுள்ள மாணவனுக்கு கணிதத்தில் அதனால் மார்க் வாராது. கணிதத்தில் அவன் வாங்கிய 12 மார்க் 42-ஆக வேண்டுமானால், அவன் தன் நேரத்தைக் கணிதப் பயிற்சியில் செலவிட வேண்டும். கணிதத்தில் மார்க் குறைவாக இருப்பதால், ஆங்கிலப் புத்தகங்களை அனுதினம் படித்தால், அது கணிதத்திற்குப் பயன்படாது.

பொருள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. பொருளை ஈட்டுவது உடலும், அதன் உழைப்பும். பக்தன் தன் வருமானம் பெருக வேண்டுமென அன்னையிடம் பிரார்த்தனை செய்தால், அவன் அன்னைக்கு உடலால் சேவை செய்ய வேண்டும். அதுவே அவனுக்கு நேரிடையாக உதவுவது. அதற்கு நேரிடையாக உதவ, அவனது உடலால் அன்னைக்குச் செய்யும் சேவை. இந்தச் சேவையின் உட்கருத்தை அறிந்து, தான் செய்யும் சேவை அன்னைக்குச் சேரும்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி என்பதை “சேவை” என்ற கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை. நேரடியாக தியான மையம் வந்து சேவை செய்வதும் எல்லோராலும் செய்யக்கூடியதில்லை. அன்னையின் பிரதாபங்களைச் சொல்லும் புத்தகங்களை ஏராளமாக விற்று, அதனால் தனக்கிருந்த ஏழரை நாட்டுச் சனியனின் தரித்திரத்தைப் போக்கி, அபரிமிதமாக வளம் பெற்றவர்கள் பலருண்டு. அதுவும் எல்லோராலும் செய்ய முடிவதில்லை. எதுவும் முடியாதவர்களுக்கு உகந்தது காணிக்கை. இதன் சிறப்பை விளக்க ஒன்றைக் குறிப்பிட்டால் போதும். ஆசிரம டிபார்ட்மெண்ட்களில் புதிய வேலை ஆரம்பிக்கும்பொழுது அன்னைக்குக் காணிக்கை செய்வது உண்டு.

ஜனவரி முதல் தேதியை வருஷத்திற்கு (prosperity day) சுபிட்ச தினம் என அன்னை கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சாதகர்கட்கு அன்னை அவர்களுடைய தேவையை தாமே வழங்கி, தரிசனம் கொடுத்து, அனுக்கிரஹம் செய்ததுண்டு. அதனால் மாதம் முதல் தேதிக்கு சுபிட்ச தினம் (prosperity day) எனப் பெயர். இதெல்லாம் கருதியே அன்பர்கள் தங்கள் மாத வருவாயில் ஒரு பகுதியை அன்னைக்கு முதல் தேதியன்று அனுப்பி வைப்பது வழக்கம். ஓர் அன்பர் வேலை செய்த ஸ்தாபனத்தில் சம்பளத்தை 7 முதல் 10 தேதிவரையில் ஒரு பகுதியையும், 15 முதல் 20 தேதியில் அடுத்த பகுதியையும் கொடுப்பது நீண்ட கால வழக்கமாக இருந்தது. அங்கிருந்து ஆசிரமத்திற்கு ஓர் அன்பர் வர ஆரம்பித்தார். தம் ஊதியத்தில் ரூ.10-ஐ காணிக்கையாக அனுப்பினார். அதே மாதம் ஸ்தாபனத்தின் தலைவர் மாறினார். அவர் செய்த முதல் வேலை சம்பளம் சம்பந்தமானது. “சம்பளத்தைத் தாமதப்படுத்திக் கொடுப்பது சரியில்லை. இந்த மாதத்திலிருந்து சம்பளத்தை முழுவதுமாக முதல் தேதி மாலை கொடுத்துவிட வேண்டும்” என்று கூறி, அதை நிறைவேற்றினார். அன்பர் சில மாதங்களுக்குப் பின் தம் காணிக்கையை ரூ.20-ஆகச் செய்தார். அதே மாதம் சர்க்கார் புதிய சட்டம் போட்டு, அதுபோன்ற ஸ்தாபனங்களுக்கு சர்க்காரே நேரடியாகச் சம்பளம் வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அன்பருக்கு ஒரு மாதமாவது தம் முழு ஊதியத்தையும் அன்னைக்குக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும் என்று ஆவல். ஓராண்டு கழிந்து அது முடிவு பெற்றது. தம் ரூ.188.75 சம்பளத்தைக் காணிக்கையாக அந்த டிசம்பரில் செலுத்தினார். அடுத்த டிசம்பரில் அவர் தினமும் ரூ.188.75 செலவு செய்யும் ஸ்தாபனத்தின் தலைவராகி, தம் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார். 3 ஆண்டுகளுக்குப்பின் அவரது குடும்பத்தில் தினமும் ரூ.188.75 செலவாகும் நிலைக்குப் போய்விட்டார்.

மாதக் காணிக்கையாக 1 நாள் ஊதியம் கொடுப்பவருண்டு. வருஷத்தில் மொத்தக் காணிக்கை 1 மாத ஊதியமாக இருக்கும்படிக் கொடுப்பவருமுண்டு. காணிக்கை அவசியம். ஆனால் அதற்கு அளவு இல்லை. நம் பிரார்த்தனை பூர்த்தியாக காணிக்கை எந்தத் தொகையாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தபட்சத் தொகைக்கும் செய்த பிரார்த்தனை பலிக்கும். ஒருவர் அதிகமான காணிக்கை செலுத்தினால் அது சேவையாக மாறிவிடும். வியாதி உள்ள ஒருவர் ஸ்ரீ அரவிந்தர் சமாதியைத் தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீ அரவிந்தர் அறைக்குப் போனார். காணிக்கை செலுத்த நினைத்தார். அவர் எந்தக் காணிக்கை - ரூ.5 அல்லது ரூ.10 - செலுத்தினாலும் வியாதி குணமாகும். அவர் செல்வர். காணிக்கை வேண்டித் திரும்பினார். அருகிலிருந்தவர் எதுவும் புரியாமல் பல ரூ.100 நோட்டுக்கட்டுகளைக் கொடுத்தார். எல்லாவற்றையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டார். 8-ஆம் நாள் வியாதி குணம் ஆயிற்று. அத்துடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய நிலைமை ஏற்பட்டது. கனவிலும் கருதாத ஒன்று அவர் வாழ்க்கையில் நடந்தது. அவருடைய மாநிலத்தில் அவரை முதன் மந்திரியாக ஆக்க வேண்டுமென்று அநேகர் விரும்பினர். அவருக்குப் புரியவில்லை. அதுவும் நடந்தது. காணிக்கை செலுத்தும் நேரத்தில் பக்தியால் உந்தப்பட்டு பெருந்தொகைகளைச் செலுத்துபவர்களுக்குப் பெரிய விஷயங்கள் நடப்பதுண்டு.

மாதம்தோறும் காணிக்கை செலுத்துவதை மட்டும் நோன்பாக ஏற்றுக்கொள்ளும் அன்பர் அதன் மூலம் முழுப் பலன் பெற செய்யக் கூடியவை என்ன?

  1. முதல் கருத்து, காணிக்கைக்கு ஜீவனுண்டு என்பதை அறிந்து நாம் செலுத்தும் காணிக்கைக்கு ஜீவன் ஏற்படும் வகையில் அதைச் செலுத்தி, அந்த ஜீவனுடன் நாம் நித்தியத் தொடர்பு கொள்ள வேண்டும். அதை நிறைவேற்ற காணிக்கை ஒரு கடமை என்று செய்யாமல், ஜீவனுள்ள குழந்தையை வளர்ப்பது போன்ற உணர்வுடன் அதில் ஈடுபடவேண்டும்.
  2. காணிக்கை என்பது நம் உடல் உழைப்பின் பக்தியை அன்னைக்குச் செலுத்துவது என உணர்ந்து, நம் உழைப்பை அன்னையின் சேவையாக, பொதுவாகக் கருத வேண்டும்.
  3. காணிக்கையின் அளவை நம் சந்தர்ப்பத்திற்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். அளவு இரண்டாம்பட்சம்.
    நிர்ணயித்தபின் அதைக் குறைக்கக்கூடாது.
  4. மாதம் வருமானம் வந்தவுடன், முதல் செலவு காணிக்கையாக இருக்க வேண்டும்.
  5. காணிக்கை அனுப்பும்பொழுது அது சம்பந்தமான வேலைகளை, M.O. அனுப்புவது, செக் (cheque) எழுதுவது, தபாலில் சேர்ப்பது போன்றவற்றை நாமே நேரில் செய்ய வேண்டும்.
  6. மனம் காணிக்கையைப் பவித்ரமாகக் கருத வேண்டும்.
    பணமாகக் கருதக்கூடாது. 

காணிக்கை சம்பந்தப்பட்ட வேலைகளைச் சமர்ப்பணம் செய்ய முடிந்தால் சிறப்பு. நாம் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்தால், காணிக்கை நேரத்தில் உரிய இடத்திற்குச் சென்று, மறு தபாலில் பிரசாதம் வரும். காணிக்கையின் பூரணத்தையும், பவித்திரத்தையும், பிரசாதம் வரும் வேகத்தில் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக M.O. அனுப்பும்பொழுது நாம் புதிய நோட்டுக்களைப் போஸ்டாபீஸில் கொடுத்தால், அவை நேரடியாக அன்னையைச் சென்றடையாது என்று நமக்குத் தெரியும். ஆனால், நாம் கொடுக்கும் மனப்பான்மையே முக்கியம். காணிக்கையாக அனுப்பும் பணம் நம் மாத வருமானத்திலிருந்து வந்த அதே பணமாக இருப்பது நல்லது. M.O. மூலமாகவும், செக் (cheque) மூலமாகவும் அதே ரூபாய் நோட்டு போகாது என்றாலும், நாம் செய்வது நம்மைப் பொருத்தவரை நமக்குகந்தவையாகச் செய்துவிடுவது நல்லது. நம் ஸ்தாபனத்தில் சம்பளம் பல தேதிகளில் கொடுக்கலாம். நம்மைப் பொருத்தவரை நம் கைக்குச் சம்பளம் வந்தவுடன் முதல் காரியமாகக் காணிக்கையை அனுப்பிவிட்டால் போதும். ரூ.2000 சம்பளம் வாங்கிய ஒருவர் 1978-இல் ரூ.200 காணிக்கையாக அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் வேலையை விட்டு பயிற்சிக்காக ரூ.1000 சம்பளத்தில் அமர்ந்தார். ஏனோ அவர் காணிக்கையைக் குறைக்கவில்லை. தொடர்ந்து ரூ.200 அனுப்பினார். 1 வருஷம் என நினைத்த பயிற்சி 3 வருஷமாயிற்று. பல நல்ல காரியங்கள் நடந்தன. பெரிய இக்கட்டுகள் ஏற்பட்டன. 1978 முதல் 1988 வரை அவர் 5 இடங்கள் மாறினார். மூன்று வேறு தொழில்களில் இருந்தார். பயிற்சி ஓர் இடத்தில், சம்பள வேலை மற்றோர் இடத்தில், கூட்டாளியாக வேறோர் இடத்தில் எனப் பல நிலைகளில் அவர் இருந்தபொழுது பணம் அருமையானதாக மாறிய நேரங்கள் பல உண்டு. காணிக்கையின் அளவை அவர் இந்த எல்லா நிலைகளிலும் குறைக்கவில்லை. இன்று 2 கோடி ரூபாய் நிறுவனத்தில் தலைவராகவும், முக்கிய பங்குதாரராகவும் விளங்குகிறார். அதுவே காணிக்கையின் மகத்துவம்.

11. நினைவே வழிபாடு:

பகவான் ஸ்ரீ அரவிந்தருடன் சுமார் 30 ஆண்டு காலம் உடன் உறைந்து அவருக்குப் பணி செய்தவர் ஒரு சாதகர். ஒரு சமயம் பகவானை அவர் தமக்கு ஏதாவது சொல்லும்படிக் கேட்க, பகவான் “இரவும், பகலும், எப்பொழுதும், தவறாது, இடைவிடாது, பிழை இல்லாமல் இறைவன் நினைவு வேண்டும் என்று பிரார்த்தனை செய்” என்றார். அதுவே இந்த முறை. பொதுவாகப் பார்க்கப் போனால் இது மிக எளிய முறை. எவரும் பின்பற்றலாம். அதன் முழுமையைக் கவனித்தால், இம்முறைக்குச் சிறப்புண்டு என்று தெரிகிறது.

எந்தச் செயலைச் செய்தாலும் - இறைவனை - அன்னையை நினைத்துச் செய்கிறோம். எந்தச் செயலைச் செய்யவில்லை என்றாலும், அன்னையை நினைவுகூர்கிறோம். எந்த எண்ணம் தோன்றினாலும் அன்னையை நினைத்தபின் எண்ணத்தைத் தொடர்கிறோம். எந்த உணர்ச்சி தோன்றினாலும் அன்னையை முதலில் நினைக்கிறோம். அதனால் இடையறாத நினைவு ஒரு தெய்வீகப் பூரணத்தைக் கொடுக்கிறது. ஆகவே அன்னை நம் வாழ்வில் பூரணமாகச் செயல்பட முடிகிறது. வாழ்வின் அஸ்திவாரங்கள் மாறுகின்றன. அவற்றின் தன்மை மாறுகிறது. தரம் மாறுகிறது. திறன் மாறுகின்றது. வழிபாட்டின் சிறப்பு மெல்ல, மெல்ல வாழ்வு முழுவதும் பரவி, அன்னையின் ஆதிக்கத்துள் நம்மைக் கொண்டு வந்துவிடுகிறது.

இடையறாத அன்னை நினைவு:

  1. வாயால் ஒரே ஒரு வார்த்தையும் பேசுதல் கூடாது.
  2. எந்த சப்தம் கேட்டாலும், சப்தம் மனதைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.
  3. உடல் அசையும்பொழுது, அசையுமிடத்தில் அன்னைøயக் காணுதல் அவசியம்.
  4. எந்தப் பொருளைத் தொடுமுன்னும் அதன்மீது அன்னையின் உருவத்தைக் காண வேண்டும்.
  5. கண்ணில் படும் காட்சிகள் மனதைத் தீண்டும்முன் அன்னையின் உருவம் மனதைத் தொட வேண்டும்.
  6. ஓர் எண்ணம் தோன்றினால், அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.
  7. எண்ணங்கள் தோன்றுமுன் அன்னை ஒளி மனதில் பளிச்சிட வேண்டும்.
  8. ஒரு கவலை மனதில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
  9. ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதைவிட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.
  10. ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.
  11. நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனத்தால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.
  12. நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும், நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
  13. யார் நினைவுக்கு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
  14. ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற முயல வேண்டும்.
  15. ஒரு காரியத்தை மேற்கொள்ளும்முன், அன்னை இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.
  16. பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.
  17. ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றையெல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக, அன்னை நினைவு சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்ப வேண்டும் என அறிய வேண்டும்.
  18. குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்படாமல், நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை, நம்பிக்கை வளரும் வகையில் கொண்டு வர வேண்டும்.
  19. யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.
  20. கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.

இடையறாத அன்னை நினைவு:

“நினைவு என்பதென்ன” என்பது ஒரு பெரிய தத்துவ விசாரம். ஞாபகம் என்பது அனைவருக்கும் முழு அளவில் இருப்பதில்லை. அதிக ஞாபக சக்தி உள்ளவர்களைக் கண்டு உலகம் வியக்கும். ஞாபகமே மனிதன் என்றும் கருதுபவருண்டு. மேல் மனத்திற்குத்தான் (surface mind) ஞாபகம் உண்டா, இல்லையா என்ற பிரச்சனை. உள்மனம் (inner mind) அப்பிரச்சனைøயக் கடந்தது. அதற்கு அத்தனையும் நினைவுண்டு. நம் காதில் படாமல் நம்மைச் சுற்றி எழும் ஒலிகளும், நம் கவனத்தைக் கவராத காட்சிகளும் அங்குப் பதிவு செய்யப்படுகின்றன. மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டுவரும் திறன் உள்மனத்திற்குண்டு. மேல்மனம், உள்மனத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அறியாமையால் செப்பனிடப்பட்டது. அதனால், அதற்கு மற்ற அம்சங்களைப்போல, நினைவும் அளவுக்குட்பட்டது. மனத்திற்கு ஒரு மையம் உண்டு. அம்மையத்திற்கு அக்கரையுண்டு. அந்த அக்கரையில் படும் நிகழ்ச்சிகளை மனம் நினைவிலிருத்தும். மற்றவற்றை நினைவில் இருத்துவதில்லை. நிகழும்பொழுதே நினைவிலிருத்தப்படாதவற்றை, மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதில்லை. எனவே, இடையறாத நினைவு என்பது எந்த விஷயத்திலும் மனிதனுக்கு இருப்பதில்லை.

நாயன்மார் ஆண்டவனை இறைஞ்சிக் கேட்பது இடையறாத நினைவு. பகவானுடனிருந்த சாதகர் அவர் அறையிலேயே தூங்குவார். ஒரு மணி நேரம்கூட அறையை விட்டு வெளியில் போகாதவர். தனக்கு ஏதாவது கூறும்படி பகவானைக் கேட்டார். ‘இரவும், பகலும், எப்பொழுதும் அகலாத இறைவன் நினைவு வேண்டும்’ எனப் பிரார்த்திக்கச் சொன்னார். அந்தச் சாதகர் இறைவன் முன்னாலேயே இரவும், பகலும் இருக்கிறார். இருந்தாலும், கண் முன்னாலிருப்பது மனத்தில் நிலைத்திருக்கும் என்பதில்லை. மனத்தில் நீங்காமல் பகவான் குடிகொண்டால்தான் நீங்காத நினைவு ஏற்படும். இந்த நினைவு அன்னை மீதிருக்க வேண்டுமெனில் மனத்திற்கு அதிகத் திறன் வேண்டும். எளியவற்றை எளிமையாக நினைவிலிருத்தலாம். சிக்கலானவை, பெரியவை, விளங்காதவை நினைவில் எளிதில் தங்கா. அன்னையை மனத்திலிருத்த முழுத் திறனும் - சக்தி - தேவை. மனம் வேறெதிலும் ஈடுபடாமலிருந்தால் அன்னையை நினைக்க முடியும். மனத்தில் எண்ணம் எழுந்தால், மனத்தின் சக்தியை ஓரளவு எண்ணம் எடுத்துக்கொள்ளும். அதனால் அன்னையை நினைவுபடுத்துதல் கடினம். எண்ணமற்ற மனம் அன்னையை நினைவுகூரத் தேவை. எண்ணமே கூடாதெனில், எண்ணம் பேச்சாக மாறி வெளிவந்தால் அன்னை நினைவு அகலும். எனவே, வாயால் ஒரு வார்த்தை பேசினாலும் அன்னை நினைவு விலகும் என்பது உண்மை. மௌனத்தைத் தபஸ்விகள் நாடியதன் காரணத்தில் இதுவும் ஒன்று. பேசும் அவசியம் ஏற்பட்டால் என்ன செய்வது? அன்னையை நீங்காத நினைவுடன் பெற மனம் விழைந்தபின் பேச்சு தானே அற்றுப்போய், குறைந்துவிடும். அன்னை மௌனத்தைப் பாராட்டவில்லை. Controlled Speech அளவுடன் பேசுவதையே அன்னை பாராட்டினார். பேசும் சந்தர்ப்பம் எழுந்தால், நாம் பேசினால் அது பேச்சு. பேச்சு மனத்தை அன்னையிடமிருந்து விலக்கும். எழும் பேச்சை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், தேவையான பேச்சுக்கு அவர் அனுமதி அளிப்பார். அது அளவோடுள்ள பேச்சு. இது நாம் பேசுவதில்லை. இது நம்முள் அன்னை பேசுவதாகும். இப்பேச்சு மௌனத்தைக் கலைக்காது, அன்னை நினைவை அதிகப்படுத்தும். இதன்றி நம் மனத்தில் எழும் எண்ணம், சமர்ப்பணமின்றி வெளிவருவது பேச்சு. அதுபோன்ற சொல் வாயால் ஒன்றுகூட வரக்கூடாது.

இது முதல் நிபந்தனை. இடையறாத அன்னை நினைவை நாடுபவர் வாயால், ஒரு சொல்லும் சமர்ப்பணமின்றி வரக்கூடாது. ஒலி, ஒளி, மணம் போன்றவை புலன் வழி உள்ளே வருகின்றன. புலன் வழி வருபவற்றை மனம் ஏற்றுப் புரிந்துகொள்கிறது. அன்னை புலன்களிலில்லை, மனத்திலில்லை, ஆன்மாவில் - சைத்தியப்புருஷனில் - இருக்கிறார். ஆன்மாவே அன்னையை நினைக்க முடியும். மனத்தில் எழும் எண்ணம் அன்னை நினைவுக்குப் புறம்பானது. எனவே, மனத்தையும் கடந்து புறவெளியில் உலவும் புலன்களால் அன்னையை நெருங்க முடிவது இல்லை. ஓர் ஒலி கேட்கிறது எனில், காது மனத்திற்கு அதைச் சொல்கிறது. ஒலியை ஏற்கும் மனம், ஒலியை ஏற்று, அதன் பாதை வழியே ஒலி உற்பத்தியான இடத்தை நாடுகிறது. அன்னை வெளியில் இல்லை. அகத்தில் ஆன்மாவிலிருக்கிறார். அன்னை நினைவை நாடுபவர் ஒலி கேட்டவுடன், மனத்தைத் தாண்டி உள்ளே வீற்றிருக்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்பி, வெளியே போகும் சந்தர்ப்பம் வருகிறது. போகாதே, உள்ளே போய் அன்னையைக் காணுதல் தேவை என்று சொல்ல வேண்டும். அதைச் சொல்ல ஒலியை உள்ளே அனுமதிக்காமல், ஒலி மனத்தைத் தொடுமுன் அன்னையை நினைந்து, ஆன்மாவை நாட வேண்டும்.

எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனத்தைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.

நாம் நடமாடிக் கொண்டிருக்கிறோம், பேசுகிறோம், ஏதாவது செய்துகொண்டேயிருக்கிறோம். சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுதும் உடல் லேசாக அசைகிறது, கை, கால்களை அசைக்கிறோம், கண் சிமிட்டுகிறோம், ஆடையைத் திருத்துகிறோம். உடல் இருள் நிறைந்தது. மனம் ஒளியுடையது. உடலால் அன்னையை நினைப்பது கடினம். மனத்தில் அன்னை நினைவை நிலைநிறுத்தியபின், உணர்வைக்(vital) கவனித்தால், உணர்வு ஓயாமல் அசைந்துகொண்டே இருப்பதைக் காணலாம். விளையாடும் குழந்தையிடம் எதையும் சொல்வது சிரமம் என்பதுபோல், வேகமாக அசையும் உணர்விடம் எதையுமே சொல்ல முடியாது. அதை நிறுத்தி, அன்னையை நினைக்கும்படி சொல்வது எளிதல்ல. இது எவ்வளவு சிரமம் என அறிய உணர்வையே அன்னையை அழைக்கச் சொன்னால், அது முடியாது என எளிதில் காணலாம். அது முடிந்தால், க்ஷணத்தில் உடல் சக்தியால் நிரம்பி, யானை பலம் வருவது தெரியும். உடல் அதையும் தாண்டி இருளே உருவானது. உடலிடம் அன்னையைப் பற்றிச் சொல்ல மனம் முயன்றால், உடலைத் தொட்டவுடன், அதனிருளில் மனம் தன்னையே இழந்து திகைப்பதைக் காணலாம். இடையறாத அன்னை நினைவு பலிக்க வேண்டுமானால், உடலே அன்னையை நினைவுகூர வேண்டும். (Gross) ஸ்தூல உடலில்லாத தெய்வங்களால் இடையறாத நினைவு முடியாது எனத் துர்கா அன்னையிடம் கூறினார். இடையறாத அன்னை நினைவு ஸ்தூல உடலுக்குரியது. அது இருள் மயமானதெனினும் அதுவே சாதிக்க வல்லது. எனவே, உடல் அசைந்தால், அசைவுள்ள இடத்தில் உணர்வு எழுந்து மனத்தை அடையும்.

அதற்குப் பதிலாக, அசைவு எழுமுன் அங்கு அன்னையைக் கண்டால், அன்னை எழுந்து மனத்தையடைந்து, ஆன்மாவுக்குச் சென்று நினைவை நிலைப்படுத்துவார்.

உடல் அசையும்பொழுது அசையுமிடத்தில் அன்னையைக் காணுவது அவசியம்.

நம்முடலின் அசைவு நம்முள் எழுவது. உடலின் பகுதிகள் வேறு பொருளைத் தொட்டு, தொடு உணர்வு ஏற்பட்டாலும் சட்டம் இதுவே ஆகும்.

எந்தப் பொருளைத் தொட்டாலும், தொடுமுன் அதன்மீது அன்னையின் திருவுருவத்தைக் காண வேண்டும்.

காது ஒளியைக் கேட்டு மனத்தை அடைவதைப்போல், கண் தான் கண்ட காட்சியை மனத்திற்கு எடுத்துச் செல்வதால்,

கண்ணில் கண்ட காட்சிகள் மனத்தைத் தொடுமுன் அன்னையின் உருவம் மனத்தைத் தொட வேண்டும்.

அதேபோல் எண்ணத்தைப் பற்றி முதலில் சொல்லியதால்,

ஓர் எண்ணம் தோன்றினால் அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.

எண்ணம் தோன்றியபின் மின்னல் வேகத்தில் - மனோ வேகத்தில் - நகருவதால், தோன்றியபின் அதைக் கட்டுப்படுத்துவது இயலாது. எண்ணம் மனத்திற்குரியது; மனத்தில் தோன்றுகிறது. அன்னை நினைவு ஆன்மாவுக்குரியது; ஆன்மாவில் எழுவது. நாம் மனத்தில் விழிப்பாக இருப்பதால் எண்ணம் தோன்றுகிறது. ஆன்மா, எண்ணம் தோன்றும் மனத்தைவிடப் பெரியது; வலிமையானது. ஆன்மாவில் நாம் விழிப்பாக இருந்தால், மனம் அசைந்து எண்ணம் எழுமுன், ஆன்மா அசைந்து அன்னை நினைவு எழும். இந்த விழிப்பும் (உஷாரும்) அன்னை நினைவுக்கு அவசியம்.

எண்ணங்கள் தோன்றும்முன் அன்னை ஒளி ஆன்மாவிலிருந்து புறப்பட்டு மனத்தில் பளிச்சிட வேண்டும்.

ஐம்புலன்களை நாம் அறிவோம். எண்ணம், கவலை போன்றவை அவற்றைக் கடந்தவை. எண்ணம் மனத்திற்குரியது; கவலை உணர்வுக்குரியது. கவலை சகஜமாக எழும். எழுந்தமாத்திரம் உணர்வைக் கவ்விக்கொள்ளும். உணர்விலிருந்து மனத்தை எட்டி, கவலை நியாயமானது எனக் கூறும். மனம் அதை ஏற்றால், பிறகு கவலையை அழித்தல் கடினம். மனத்தைக் கட்டுப்படுத்துவதைவிட உணர்வைக் கட்டுப்-படுத்துவது சிரமம். சிரமமாயினும் செய்வது அவசியம்.

ஒரு கவலை மனத்தில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

யோசனை என்பது பல எண்ணங்கள் சேர்ந்தது. இந்தக் காரியத்தைச் செய்யலாமா எனில், அதனுள் பல எண்ணங்கள் திரண்டிருக்கும். யோசிக்க ஆரம்பித்தால் எண்ணங்கள் செயல்-படும். செயல்பட ஆரம்பித்த எண்ணங்கட்கு வலிமை அதிகம். வலிமை சேர்ந்தபின் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். அவற்றை மீறி அன்னை நினைவு எழாது. யோசித்து நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். முடிவைச் செயல்படுத்தினால், பலன் வரும். அப்பலன் நம் முடிவையும், யோசனையையும் பொறுத்தது. தினமும் நமக்குப் பல்வேறு யோசனைகள் எழுகின்றன. எனவே, அன்னை நினைவு யோசனையற்ற மற்ற நேரங்களுக்கேயுரியது எனத் தோன்றுகிறது. இந்த மனப்பõன்மையுடன் அன்னை நினைவைப் பெறலாம். ஆனால் இடையறாது பெற முடியாது. இதை மாற்ற வேண்டும். யோசிக்கும்பொழுது யோசனையை நம்புகிறோம். அதை நம்பினால் பலன் யோசனையால் நிர்ணயிக்கப்படும். யோசிக்காமல் செயல்படுவதைவிட யோசனை மேல். யோசனையைவிட நம்பிக்கை உயர்ந்தது. நாம் யோசிப்பதற்குப் பதிலாக, நம் முடிவைவிட உயர்ந்த அன்னை முடிவை நாடுதல் சிறப்பு. அன்னையை நினைவுகூர்ந்தால் நம்பிக்கை நம்மிடமிருந்து அன்னைக்கு மாறுகிறது. மாறியபின் செயல்படுவது அன்னை முடிவு. அது பெரியது. அதை நம்பினால், யோசனையை விலக்கி, அன்னையை நினைவுகூர வேண்டும்.

ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதைவிட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.

நாம் செய்யும் காரியங்களை நாம் ஆரம்பிக்கிறோம்; செய்கிறோம். அதற்கு வரும் பலனைப் பெறுகிறோம். சமர்ப்பணம் செய்தால் அன்னையின் பலன் வருகிறது. அதைவிட உயர்ந்த நிலை ஒன்றுண்டு. காரியத்தைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தையும் சமர்ப்பணம் செய்தால், காரியம் பெரிய அளவில் அன்னை பலனை அளிக்கும்.

ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.

கடந்த கால நினைவு வந்தபடியிருக்கும். அவற்றுள் நல்லவை, கெட்டவை கலந்திருக்கும். நல்ல காரியங்கள் மனத்தைச் சந்தோஷப்படுத்தும். அந்நேரம் நாம் அன்னையை மனத்தால் நமஸ்காரம் செய்து, நன்றியுணர்வால் நிறைதல் நினைவை நிலைப்படுத்தும்.

நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனத்தால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.

கெட்டவை நினைவுக்கு வந்தால், மனம் வேதனைப்படுகிறது. வேதனைப்பட்டாலும், வருத்தப்பட்டாலும் நடந்தவை - கெட்டவை - வலுப்படும். நாம் எப்பொழுதும் உணர வேண்டிய ஒரேயுணர்வு சந்தோஷம். கெட்டவை நினைவு வந்தால் சந்தோஷம் எப்படி வரும்? கெட்டவை பல காரணங்களுக்காக நடக்கின்றன.

  1. பின்னால் வரக்கூடிய பெரிய கெட்டதைத் தவிர்க்க,
  2. நம் மனம் உணர வேண்டியவைகளை உணர,
  3. நம்மை விட்டு விலக்க வேண்டியவர்களை விலக்க,

என்பன போன்ற பல காரணங்களுக்காக அவை நடப்பதை நாம் அறிந்து, வருத்தப்படுவதையும், வேதனைப்படுவதையும் மாற்றி, நமக்கு ஏன் அவை நடந்தன எனப் புரியவில்லை; எனவே, வருத்தப்படுவது சரியில்லை என்று முடிவு செய்தால் சரி. அப்படியும் அந்நிகழ்ச்சி மனத்தை விட்டகலவில்லை எனில், அவற்றின் வரலாற்றைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும் அந்நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். 

நமக்குப் பலர் பற்றிய நினைவுகள் வந்தபடியிருக்கின்றன. ஒருவரைப் பற்றி நினைத்தால் நினைவு அவ்வழியே பல நிகழ்ச்சிகளுக்கு ஓடுகிறது. ஓடியபின் அன்னை நினைவு விலகும். யாரையும் நினைப்பதைவிட, அன்னையை நினைப்பது மேல் என மனத்தை மனிதரிடமிருந்து அன்னைக்கு மாற்ற வேண்டும்.

யார் நினைவு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எரிச்சல் பல விதம். கோபத்தை அடக்கினால் எரிச்சல் வருகிறது. எரிச்சலை அடக்கினால் விரக்தி ஏற்படுகிறது. அதை விலக்க முயன்றால் படபடப்பு வருகிறது. Irritation, annoyance, irksomeness, pinpricks, tension, listlessness, impatience எரிச்சல், குத்தல், சலிப்பு, பொறுக்க முடியவில்லை எனப் பல உருவங்களில் எரிச்சலும், அதன் உருவங்களும் நம்மை நாடுகின்றன. இவை அன்னையை விட்டு விலகி அகலும் பாதைகள் என நாம் அறிய வேண்டும். அறிந்து, விலகி, அவற்றைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

நமக்குப் பழக்கமில்லாத புதிய சூழ்நிலைகள் ஏற்பட்டால், நாம் யோசிக்கிறோம்; பிறரைக் கலந்து ஆலோசிக்கிறோம். அவை நல்லவை. அன்னை இதைப் பற்றி ஏதேனும் சொல்லியிருக்கிறாரா என அறிய முயல வேண்டும். அன்னை இதுபோன்ற காரியங்களை எப்படிச் செய்வார் என நினைக்க வேண்டும். இடையறாத அன்னை நினைவுக்குப் பெருந்துணை இது.

ஒரு காரியத்தை மேற்கொள்ளுமுன், அன்னை இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.

பாசம் இயல்பாக எழுகிறது. பிரியம் சில சமயம் உதயம் ஆகிறது. ஆசைக்கு எப்பொழுதும் அலுவலுண்டு. வேலையில் ஆர்வம் திறமையுள்ளவர்க்குண்டு. வேகம், ஆவேசம், தீவிரம் மனதுள் எழும் நேரமுண்டு. அன்னையை ஏற்றுக்கொண்ட பின் ஆர்வம் அன்னையை மட்டும் நாட வேண்டும். எனவே, மேற்சொன்ன உணர்வுகளை அன்னை மீது ஆர்வமாக மாற்ற வேண்டும். எப்படி? குழந்தை மீது பாசம், மனைவி மீது பிரியம், துணி மீது ஆசை, வேலையில் ஆர்வம் எழும்பொழுது, இவற்றை அனுமதித்தால் நாம் மனிதனாக இருக்கிறோம். நாம் அனுமதிக்கக் கூடியது அன்னை ஆர்வமே என உணர்வு மையத்திலிருந்து - பாசம் போன்றவை எழுமிடம் - ஆன்மாவுக்குச் சென்று ஆர்வத்தை எழுப்ப வேண்டும்.

பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை aspiration ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.

செய்திகள் கவலையைத் தாங்கி வருகின்றன. சில ஏக்கத்தைக் கிளப்புகின்றன. மற்றவை மனத்தில் பாரமாகின்றன. சில உற்சாகத்தைக் கொடுக்கின்றன. நல்ல உற்சாகமானாலும், கெட்ட கவலையானாலும், இவை அனுமதிக்கப்படக்கூடியவையல்ல. சந்தோஷம், சுகம், ஆர்வம் ஆகியவை அனுமதிக்கப்படக்கூடியவை என அறிந்து, அவற்றை மாற்ற முயல வேண்டும்.

ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றை எல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக அன்னை நினைவு, சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்பவேண்டும் என அறியவேண்டும்.

நாம் செய்தவற்றில் குறையானவையுண்டு. அவை நினைவு வரலாம். வந்தால் மனம் குறைபடும், கவலைப்படும். அதற்குப் பதிலாக, ஏன் காரியம் குறையாக நின்றது எனச் சிந்தித்தால், நம் நம்பிக்கை குறையாக இருப்பதால், காரியம் குறையாக நின்றுவிட்டது எனப் புரியவேண்டும்.

குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்பட்டால் நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை நம்பிக்கை வளரும் வகையில் கொண்டுவர வேண்டும்.

கோபம் வந்தபடி இருக்கும். அதேபோல் பிரியம் எழுந்தபடி இருக்கும். கோபம் பொல்லாதது; பிரியம் நல்லது. நாம் எக்காரணத்திற்காகக் கோபப்பட்டாலும், யார் மீது கோபப்பட்டாலும், நஷ்டம் நமக்கு என்ற தெளிவிருந்தால், கோபம் தணியும். தணிந்த கோபம் தணலாக நிற்கும். அன்னை நினைவு குளிர்ந்த தென்றல். அன்னையை நினைத்தால் தணிந்த கோபம் குளிர்ந்தடங்கும். கோபம் இருக்கும்வரை அன்னை நினைவு நிலைக்காது என்பதால், கோபம் எழும்பொழுது, அன்னையை நினைவுபடுத்துதல் நலம். பிரியம் நல்லது; கோபத்தைப்போல் பொல்லாததல்ல. ஆனால், யார் மீது பிரியம் எழுகிறதோ, எதன் மீது பிரியம் எழுகிறதோ, அதை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். பிரியம் வளர்ந்தால், அப்பொருளோடு நாம் ஐக்கியமடையவேண்டிவரும். இது அன்னையை நினைக்கவோ, அடையவோ, இடையறாது நினைக்கவோ பயன்படாது.

யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.

மனம் பக்குவப்படவில்லை எனப் பொருள். மனம் பக்குவப்பட பல வழிகள் உள. அவற்றுள் சிறந்தது அன்னையை நினைப்பது. அதைவிடச் சிறந்தது, பழிவாங்கும் எண்ணத்தையும், அதனுடன் சேர்ந்த நிகழ்ச்சிகளையும் சமர்ப்பணம் செய்து, பிறகு அன்னையை நினைப்பதாகும்.

கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.

இடையறாத நினைவு சித்தியாகும். அது சித்தித்தால் அடுத்த கட்டத்தில் இடையறாத தரிசனம் சித்திக்கும். அதன் விளைவாக பரமாத்மா, பிரபஞ்சத்தின் ஆன்மா, ஜீவாத்மா தரிசனம் கிடைக்கும். சர்வம் பிரம்மம் என்பதை ரிஷிகள் கண்டபின், கீதையே முதன்முதலாக இம்மூன்று புருஷர்களையும் பிரித்துத் தத்துவத்தை விளக்கியதாகப் பகவான் எழுதுகிறார். ஆத்ம தரிசனம் மோட்சம். பரமாத்மாவை ஜீவாத்மா ஒன்றி, பரமாத்மாவை அடைவது பூரணயோக சித்தி, அதற்கு அடிப்படை இடையறாத தரிசனம். அதற்கு முன்நிலை இடையறாத அன்னை நினைவு. இது சித்தித்ததற்குப் பல்வேறு அடையாளங்களுண்டு. அவற்றுள் ஒன்று.

இணைபிரியாத ஆன்ம எழுச்சி:

இடையறாது நம் மனத்தை ஆட்கொள்வது ஒன்றுண்டு. அதை நாம் அறிவதில்லை. அறிந்தாலும் பொருட்படுத்துவதில்லை. விளையாட்டில் உற்சாகமுள்ள மாணவன் இரண்டு மணி நேரம் விளையாடினால், அதைப் பற்றி நண்பர்களுடன் ஐந்து மணி நேரம் பேசுவான். மீதி நேரம் முழுவதும் அவன் மனத்தை விளையாட்டு ஆட்கொண்டிருக்கும். விளையாடும் வயதில், விளையாட்டு மனத்தை நிரப்பிக்கொண்டிருக்கும். திருமண வயதில் “இளநங்கை” மனதில் அகலாமல் வீற்றிருப்பாள். வேலைக்குப் போனபின் வேலை, குடும்பம், உயர்வு, அதேபோல் மனத்தில் உரிமை கொண்டாடும். வேலை மனத்திலிருந்தால், அதனடியில் மனைவியும், அதற்கடியில் விளையாட்டும் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், அதைக் கவனிப்பதில்லை. இவை இடையறாது முழுமனதை ஆட்கொண்டு இருப்பதை ஆங்கிலத்தில் occupation என்பார்கள். அவற்றுள் ஒன்று பிரச்சனையாகிவிட்டால் தீவிரமாக மனம் அதையே நினைப்பதை preoccupation என்பார்கள். நாயன்மார்கள் மனம் சிவபெருமானால் அதுபோல் நிரப்பப்பட்டிருந்தது. மகனுக்குப் பெயரிடத் திருநாவுக்கரசு என்பதை நினைத்தவர், அடுத்தடுத்த மகன்கட்கும் அதே பெயரையிட்டு, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றார். திருமணமான பெண் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும்பொழுது, அவளைத் தினமும் 500 வாக்கியங்கள் எழுதச் சொன்னார். அவள் தன் மாமனை மணந்தவள். Uncle is tall, Uncle bought a bike, Uncle has come என 500 வாக்கியங்களில் 100-க்கு மேல் மாமனைப் பற்றி எழுதினாள். அவள் மனம் மாமனால் நிரப்பப்பட்டுள்ளது. எது நம் மனத்தை நிரப்பியுள்ளது எனில் நம் வாழ்வில் வளரும் முனை நிரப்பியுள்ளது எனப் புரிகிறது. அதற்கு முந்தைய நிலைகள் படிப்படியாக அவற்றிற்கு அடியில் அமைந்துள்ளன.

உடல் வளரும்பொழுது உடல் வளர்ச்சியும், அதற்கு உரியவையும் மனத்தை நிரப்புகின்றன. உணர்வு வளரும்பொழுது ஆசை மனத்தை நிரப்புகின்றது. மனம் வளரும்பொழுது எண்ணம் மனத்தை நிரப்புகிறது. ஆன்மா நம்முள் வளர்ந்தால் பக்தி மனத்தை நிரப்பும். அந்நிலை இடையறாத நினைவுக்குரியது. நம்முள் அன்னை வளர வேண்டும். உடல், உணர்வு, மன வளர்ச்சியைத் தாண்டி ஆன்மாவில் அன்னை வளர்ந்தால், அம்மனநிலை இடையறாத அன்னை நினைவுக்குரியது ஆகும். உடலுக்குரிய பொருளையும், உணர்வுக்குரிய ஆசையையும், மனத்திற்குரிய அறிவையும் கடந்து, ஆன்மாவுக்குரிய அன்னையை நம் ஜீவன் விழைந்தால், இடையறாத அன்னை நினைவு பலிக்கும்.

இடையறாத நினைவு மிகப்பெரிய சாதனை; யோகசித்தியில் முதற்கட்டம் எனப் புரிகிறது. மிகப்பெரிய சாதனையை, இன்று நமக்குள்ள சக்தி சாதிக்க முடியாது. நமக்குத் தொழில் செய்ய, குடும்பம் நடத்த சக்தியுள்ளது. இது ஒரு தொழிற்சாலை நடத்தவோ, கட்சித் தலைவராக இருப்பதற்கோ போதாது. சக்திகளின் நிலை பல.

மிகச்சிறியதான சக்தி உடல் உழைப்பால் எழுவது. அது உழைப்பாளியின் சக்தி. அவனுடைய முழு உழைப்புக்கு, நெற்றி வியர்வை நிலத்தில் விழுந்தால் தினக்கூலி கிடைக்கும். அதைவிட உயர்ந்தது பிராணனுடைய சக்தி vital energy. இது மானேஜர் பதவியிலுள்ளவருக்குரிய தகுதி. அதற்கடுத்த உயர்ந்த நிலை மனத்தின் சக்தி. (Experts) தொழில் நுணுக்க வல்லுநருடைய சக்தி அது. மனத்தில் ஆன்மா வெளிப்பட்டால், வல்லுநர் புதியதாக ஒரு முறையைக் கண்டுபிடித்து புகழடைவார். இது மனத்தின் சக்தியைவிடப் பெரியது. பிராணனில் உள்ள ஆன்மா வெளிப்பட்டால் அடுத்த உயர்ந்த நிலை சக்தி எழும். அது சிப்பாயின் தைரியம், I.A.S. அதிகாரியின் நேர்மையிலிருந்து எழும் சுதந்திரமான தைரியம். அதற்கு அரசியல் தலைவர்களும் அடங்குவார்கள். கடைசி கட்ட உயர்நிலை சக்தி உடலில் உள்ள ஆன்மா வெளிப்படுவதால் எழுவதாகும். இது பூரணயோகத்திற்குரிய அன்னை சக்தி. இத்தனை சக்திகளையும் அன்னை நமக்கு வழங்குகிறார். எந்த நேரம் எது வருகிறது என நாம் அறிவதில்லை. பிரார்த்தனையால் திடீரென சூழ்நிலை மாறி ஆச்சரியம் போல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்னையிடமிருந்து வருவது ஒரு காரியத்தைப் பூர்த்தி செய்து மின்னல் போல் மறையும். அதே சக்தி நம்முள்ளிருந்து எழுந்தால், அது நிரந்தரமாக இருக்கும். இந்த கடைசி கட்ட பூரணயோக சக்தி உடலிலிருந்து எழுவதால், அதிக வலுவுள்ளது. அதுவே இடையறாத அன்னை நினைவை சாதிக்கும்.

நாமுள்ள நிலையிலிருந்து அதை எட்ட நினைப்பது அறிவுடைமையா என்று நினைக்கலாம். மனம் இடையறாத நினைவை நாடினால், அது நம் முயற்சிக்குச் சித்திக்கும் எனப் பொருள். மனம் அதை நாடாதவர்க்கு அதில்லை.

மனம் அதை நாடுகிறது, அடிக்கடி இடையறாத நினைவு வேண்டும் என்று தோன்றுகிறது என்றால் பலிக்கும் வித்துளது எனப் பொருள். அதற்குரிய முயற்சி பலன் தரும். இந்நினைவு ஓரளவு இதற்குரிய சக்தியைத் தரும். நாம் உள்ள நிலையில் மற்றவர்களைவிட அதிகமாகச் சாதிக்க இது உதவும். நாம் செய்யும் காரியங்களில் இதுவரை நம் கண்ணில் படாதவை படும். எந்தத் தொழிலுக்கு முதன்முறையாகப் போனாலும், அங்கு இதுவரை பெயரெடுத்தவர்களைவிட அதிகமாகச் சாதிக்க முடியும் என்பதைக் காணலாம். விவசாயத்தை மூன்று தலைமுறையாக அறியாதவர் அவசியத்தால் விவசாயத்தை மேற்கொண்டு செய்ததைக் கண்ட பரம்பரை விவசாயி, “நாமெல்லாம் இங்கேயே இருக்கிறோம். பரம்பரையாக விவசாயம் செய்கிறோம். இவர் ஊருக்குப் புதியவர்; விவசாயத்திற்குப் புதியவர். நம்மைவிட அளவுகடந்த சிறப்போடு செய்திருக்கிறார். நாம் இவரைப் பின்பற்ற வேண்டும்” என மேடை ஏறிப் பேசினார்.

தொடரும்...

**********

ஜீவிய மணி
சிந்தனை அழிவது சாதனை சிறப்பது. எந்தச் சிந்தனையும் அற்றவன் எதையும் சிந்திக்காமல்
சாதிப்பான்
அழியும் சிந்தனை மனத்தை உணர்வாக்கும்.
உணர்வு நிறை மனம் உத்தமமான ஆத்மா.
ஆத்ம விழிப்பு சாதனையை நாடாது.
ஆத்மா விழித்தால் சாதனை ஆத்மாவை நாடும்.
சாதனை நாடி வருவது சத்தியத்தின் கருவியாவதாகும்.

 



book | by Dr. Radut