10. யோக வாழ்க்கை விளக்கம் VI
யோக வாழ்க்கை விளக்கம் VI
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
II/41) யதார்த்த இலட்சியம் சரியான யுக்தியையும் சரியான குறிக்கோளையும் நாடும்.
- குறிக்கோளும், யுக்தியும் சரியானால் இலட்சியம் யதார்த்தமாகும்.
- பகவான் ஸ்ரீ அரவிந்தர் யோகம் பூரணயோகம், ஆன்மீகப் பரிணாம யோகம், அனைத்தையும் உள்ளிட்ட யோகம் எனப்படும்.
- இந்த யோகத்தில் பல முக்கிய அம்சங்களுண்டு.
- இதன் முக்கிய நோக்கம் திருவுருமாற்றம்.
- அதையடையும் வழி சரணாகதி.
- தீமை நன்மையாக மாறுவது திருவுருமாற்றம்.
- உலகில் தீமை படைக்கப்படவில்லை.
- அகந்தையின் கண்ணுக்கு நன்மை தீமையாகத் தெரிகிறது.
- அகந்தை அழிந்து இயற்கையின் ஆன்மா வெளிவருவது யோகம் பூர்த்தியாவது.
- மனிதனுக்கு மூன்று அம்சங்களுண்டு.
- மனிதன், பிரபஞ்சம், பிரம்மம் ஆகியவை அந்த மூன்று அம்சங்கள்.
- உடலும், உயிரும், மனமும் ஆன்மாவாலாயின.
- அவற்றுள் புதைந்துள்ள ஆன்மா வெளிவருவது ஆன்மீகப் பரிணாமம்.
- கடந்ததை விலக்கினால் பூரணமாகாது.
- வாழ்வு அற்புதமானது என்பது இலட்சியம்.
- அஞ்ஞானம் சிருஷ்டியில் முதிர்ந்து தீமையாயிற்று.
- அஞ்ஞானம் ஞானமாவது பூர்த்தியானால் தீமை நன்மையாகும்.
- பூரணயோகம் பெறும் ஆனந்தம் சச்சிதானந்த ஆனந்தத்தைக் காட்டிலும் உயர்ந்தது.
- அசைவற்ற ஆனந்தம் வளரும் ஆனந்தமாவது பூரண யோகம்.
- இது இறைவன் வரும் தருணம்.
- ஆயிரமாண்டு பலன் அரைக்கணத்தில் பெறும் நேரமிது.
- அதை அறிவிக்க வந்த இறைவன் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
- இறைவன் மனிதனை நாடி வந்து அருள் பாலிக்கும் யோகமிது.
- யதார்த்தமாக - நடைமுறையில் - பலிக்காத இலட்சியம் இலட்சியமில்லை.
- இலட்சியம் பூரண சிறப்புடையதானால் அது யதார்த்தம், யுக்தி, இலட்சிய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளும்.
- மலையினின்று இறங்கி வரும் அருவி ஆறாகப் பெருக எவரும் வழி வகுப்பதில்லை. தானே தன் பாதையை அமைத்துக் கொள்ளும்.
- மக்கள் வாழ்வை வளப்படுத்தும் ஜீவனுடையது என்பதால் அவற்றை ஜீவநதி என்கிறோம்.
- ஜீவனற்றது நதியாகாது.
- மண் பிருத்வி, நீர் அதன் ஜீவன், நெருப்பு அதன் சக்தி, ஆகாயம் அவற்றைச் சூழ்ந்துள்ள ஜீவன். சப்தம் அனைத்தின் மூலம்.
- பஞ்ச பூதங்கள் சிருஷ்டியாகும். மகத், அகங்காரம் பின்னணியில் உள்ளன. நடுநாயகமானது ஆன்மா. அனைத்து ஜீவியமும் அதன் தொடர்பால் எழுவன.
******
II/42) வலிமை எளிமையை ஆள்வதால் - குடும்ப வாழ்வு வெற்றி பெற்றதால் - அதுவே சரியான யுக்தி.
- வலிமை வெல்லும் - வலிமை மட்டுமே வெல்லும்.
- புத்தர் பிறந்த பொழுது ஜோஸ்யர்கள் இந்தக் குழந்தை
- அரசாட்சியை நாடினால் உலகையாளும்
- ஆன்மீகத்தை நாடினால் உலகையாளும் என்றனர்.
- புத்தர் பிரயாணம் செய்யும் பொழுது 50 மைலுக்கு அப்பால் அவர் வருவதை மக்கள் அறிவார்கள்.
- இதுவரை புத்தர் போன்ற பெரிய ஆத்மா பிறந்ததில்லை என பகவான் கூறுனார்.
- புத்தர் பெற்ற வலிமை ஆன்மீக வலிமை.
- நூறாண்டுகட்கு முன் ஒரு ஆங்கிலேய கலெக்டர் சதாவதானியைக் காண விழைந்தார். சதாவதானியை
- 100 பேர் அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் சொன்னார்கள்.
- பலர் கடினமான கணக்குகளைத் தீர்க்கக் கொடுத்தனர்.
- எவரும் பதிலிறுக்க முடியாத கேள்விகளைப் பலர் கூறினர்.
- இவையெல்லாம் நடக்கும்பொழுது ஒருவன் நெல்லை மணிமணியாக அவர் தோள் மீது கொட்டினான். முடிந்த பின் அவன் கொட்டிய நெல்லின் எண்ணிக்கையை அவர் கூற வேண்டும்.
- 100 விதமான கேள்விகளை வரிசைக்கிரமமாகக் கேட்டனர்.
அனைத்திற்கும் முடிவில் அவர் சரியான விடையை வரிசைக்கிரமமாகக் கூறினார்.
- இது மனிதனாலோ, மனித மனத்தாலோ என்றும், இன்றும் முடியாதது.
ஆத்மாவால் என்றும், எந்த வகையில், எந்த நேரமும் தவறாது முடியும்.
அஷ்டாவதானம், சதாவதானம் எனப்படும்.
- ஆத்மா ஞாபகத்துள் விழிப்பதால் ஆத்ம ஞானம் இதைச் செய்ய முடிகிறது.
- உலக சரித்திரத்தில் ஆத்மா செயல்படாத நேரமில்லை.
அனைவரும் அறிந்த நிகழ்ச்சிகள் குறைவு.
மீண்டும் மீண்டும் நான் அடிக்கடி குறிப்பிடும் அது போன்ற நிகழ்ச்சிகள் மூன்று.- 1929இல் ரூஸ்வெல்ட் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்தது.
- 1940இல் சர்ச்சில் உலகப் போரை வென்றது.
- 1915 முதல் 1942 வரை மகாத்மா காந்தியின் அகிம்சாவாதம் பலித்தது.
- சர்ச்சிலுக்கும், சுதந்தர இயக்கத்தில் பகவானுடைய ஆன்மீக சக்தி செயல்பட்டதை அவரே குறித்துள்ளார்.
- மனிதனுடைய திறமையுள் ஆன்மா விழித்தால் அது வலிமையாகும்.
அதை எவராலும் வெல்ல முடியாது.
எளிமையான ரூபத்தை அது மேற்கொண்டாலும், அதை வெல்ல முடியாது.
- எலக்ட்ரானிக்ஸுக்கு ஒரு முறை நம் அறிவு அறியும் சட்டத்தைக் கூறிவிட்டால் அது முடிவின்றி அதையே வெளிப்படுத்துகிறது.
- நிலம் ஆன்மீக விழிப்புப் பெற்றால் உணவுப் பஞ்சம் இராது. டெக்னாலஜியில் ஜடம் ஆன்ம விழிப்புப் பெற்றால் அது சூழலைப் பாதிக்காது.
******
II/43) பற்றாக்குறையில் தேவைகள் பூர்த்தியாவதில்லை. உபரியான நேரத்தில் பொருள்களை முழுவதும் பயன்படுத்த முடிவதில்லை. இரு நேரங்களிலும் பூர்த்தியாகாத தேவை நிலைக்கிறது.
- தேவையும் விரயமுமில்லாவிட்டால் தெய்வம் செயல்படும்.
- பற்றாக்குறை என்பது அறிவு, உணர்வு, திறமை, முயற்சி, சொரணை பற்றாக்குறை.
- நிறைந்த உள்ளத்திற்கு உலக வாழ்வில் எதுவும் பற்றாக்குறையாக இருப்பதில்லை.
- அறிவு, உணர்வு, திறமை, முயற்சி, சொரணை நிறைவாக இல்லையெனில் ஜீவன் சிறியது எனப் பொருள்.
- நிறைவு என்பது மனநிறைவு.
- சிறிய ஜீவன் ஆர்வத்தால் பெரிய ஆத்மாவாகும் புற உபாயம் பற்றாக்குறை.
- மு.வ.வின் பரிசு பெற்ற நாவல்களில் "அகல் விளக்கு' ஒன்று. இதன் கதாநாயகன் சந்திரன். வேலு அவன் நண்பன். கூரிய அறிவும், கவர்ச்சி மிகுந்த அழகுமுள்ள சந்திரன், உத்தமப் பெற்றோருக்கு, செல்வத்தில் பிறந்து, காண்பவரெல்லாம் பாராட்டும்படி வளர்ந்தான். கல்லூரி வாழ்வில் தற்செயலாய் சந்தித்த பெண் பிரியமாகப் பழகியதை மனதால் காதலாக உருவாக்கி, அவள் திருமணத்தன்று ஓடிப்போய், தேயிலை எஸ்டேட் கூலியாகி, அங்கு வயதில் பெரியவள் வாழாவெட்டியுடன் வாழ்ந்து, வீட்டார் அழைத்து வந்து உத்தம திருமணம் செய்தபின் பொலிகடாவாக அலைந்து, மனைவி தற்கொலை செய்த அன்று ஓடிப்போய், தொழுநோயால் இறந்தான். நமக்குரிய கருத்துகள் இங்கே:
- பற்றாக்குறை நிபந்தனையான வாய்ப்பு.
- வளமும், அன்பும், பண்பும் வளரும் வாய்ப்பு.
- அப்படிப்பட்ட வாய்ப்பில் தன் வாழ்வைக் கெடுத்து, உயிரை விடச் செய்தது அவனுடைய போக்கு (human choice).
- உயர்ந்த வாய்ப்பின் பெருமையை அறிய உயர்ந்த நோக்கம் தேவை.
- கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
- மு.வ. நாட்டின் பண்பாட்டை அறிந்து உயர்வை எடுத்துக் கூறுகிறார்.
- செல்வம், பண்பு, படிப்பு, வாய்ப்பு, சூழல் அமைந்த- போதிலும் மனித முடிவே (choice) வாழ்வின் முடிவை நிர்ணயிக்கும்.
- அவன் நண்பன் வேலுக்கு அறிவில்லை, அழகில்லை, வசதியில்லை, ஓர் ஆண்டு பெயிலாகி, முறையாகப் படித்துத் தேறி உத்தியோகம் பெற்று விரும்பிய பெண் கிடைக்கும் சூழலில் கேட்க தைரியமின்றி அத்தை மகளைத் திருமணம் செய்து நல்வாழ்வு வாழும் பொழுது சந்திரன் அவன் வீட்டில் வந்து மனம் மாறி வருந்தி சாகிறான்.
- பற்றாக்குறை முன்னேற்றம் தருகிறது.
- செல்வம், பண்பு, கல்வி, அறிவு, சொத்து, அன்பு உபரியாக இருந்து கதாநாயகனை அழிக்கிறது.
- சிறிய ஆத்மாவுக்குப் பற்றாக்குறையும், பெரிய ஆத்மாவுக்கு நிறைவையும் வளரும் வாய்ப்பாக இயற்கை அளிப்பது வழக்கம். தவறாது இந்த உபரியை அளித்து மகிழ்விப்பது இயற்கையின் ஒரு சட்டம்.
- அன்னை அதே சட்டத்தை அபரிமிதத்தை கொசுறு ஆகும்படி ஏராளமாகப் பொழிகிறார். அதைப் பயன்படுத்தி முன்வந்தவர் 26 பேரில் என் அனுபவத்தில் ஒருவரும் இலர்.
- பெரிய வாய்ப்பைப் பெரிய பரந்த மனத்தோடு பெற்றுயர்ந்தால் பெறுவது இம்மைப் பேறில்லை. உலகம் அறியாத இம்மைப்பேற்றை தன்னுட் கொண்ட மானுடப்பேற்றை அன்னை இல்லற வாழ்வில் தருகிறார்.
- இந்தியாவுக்கு அந்த வாய்ப்பை வற்புறுத்தி அன்னை அளிப்பதை 1947 முதல் 1987 வரை உலகம் அறியவில்லை. 1987க்குப் பின் அதைப் பார்க்கத் தவற முடியாது என வாழ்க்கை விளக்குகிறது. அதுவே நான் திரண்ட செல்வம் எனக் கூறுவது. அதன் அம்சங்களில் அத்திரண்ட செல்வமே மிகச் சிறியது.
*****
II/44) நமக்குள்ள எல்லாப் பொருள்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வாழ்வு பூரணமானதாக இருக்க வேண்டும்.
- அனைத்தையும் பூர்த்தி செய்யும் அன்னை.
- 1947இல் சுதந்தரம் வந்தபொழுது நாடு ஏழை நாடாக இருந்தது.
- சுபிட்சம் வேண்டும் என்பதே அன்று அனைவருடைய குறிக்கோள்.
- முதல் 40 வருஷம் ஏழ்மை குறைந்து வந்தது. அது எவர் கண்ணிலும் படவில்லை.
- சுபிட்சத்திற்காகப் பல வகையான அடிப்படைகளை இட்டனர். சுபிட்சம் கண்ணுக்குத் தெரியவில்லை.
- இன்று நமக்கும் புரியும் சுபிட்சம் இந்த 40 ஆண்டு செய்த அபிவிருத்திக்கான முயற்சியால்தான்.
- 1947இல் 25 பைசாவாக இருந்த கூலி 1000 மடங்கு உயர்ந்து இன்று 250 ரூபாயாக இருக்கிறது.
- இன்றும் இளைஞர்கள், பட்டதாரிகள் 5 ஆயிரம், 10 ஆயிரம் சம்பாதிக்க சிரமப்படுகின்றனர்.
வேறு பட்டதாரிகள், இளைஞர்கள் 20 ஆயிரம், 50 ஆயிரம் சம்பாதிக்கும்பொழுதும் இதுவே நிலை.
- வாழ்வு பூரணமாக இருக்க வேண்டுமானால் 5 ஆயிரம், 10 ஆயிரம் சம்பாதிப்பவர் 10 ஆயிரம், 20 ஆயிரம் சம்பாதிக்க வேண்டும். அவருள் சிறப்பானவர் ஒரு இலட்சம், 2 இலட்சம் சம்பாதிக்க வேண்டும்.
- இதற்குண்டான முறையுண்டா? அன்பரல்லாதவருக்கும் அது உண்டா? உண்டு எனில் அன்பருக்கு எது உண்டு?
- இளைஞர்களை 20 முதல் 25 வயதுள்ளவரை இளைஞர்கள் எனவும், அவர்களைப் பட்டதாரிகள், மற்றவர் எனவும் பிரிக்கலாம்.
- வாழ்வு கடுமையானது, கரணம் தப்பினால் மரணம், இருப்பதைக் காப்பாற்றினால் போதும், ஆசைப்படக்கூடாது, பேராசைப்படக் கூடவே கூடாது, ஆட்டிற்கும் வால் அளவோடு வைத்திருக்கிறான் என்பவை 1947 வரை இருந்த நம்பிக்கைகள். இன்றும் இச்சொற்கள் அடிக்கடி காதில் விழும்.
- காலம் மாறிவிட்டது. சமூகம் மனிதனுக்கு எதிரியில்லை. முன்னுக்கு வர முயலும் எந்த மனிதனுடைய முயற்சியையும் சமூகமும் சர்க்காரும் பூர்த்தி செய்ய முனைந்துள்ளனர். மற்றவர்க்கும் பல்வேறு வகையான உதவிகள் புதியது புதியதாக வந்துள்ளன.
- காலம் மாறி உயர்ந்துவிட்டது. செய்யும் காரியங்கள் பெரும்பாலும் கூடிவருகின்றன. எதிர்பார்த்ததற்கு மேலும் கூடிவருகின்றன. மார்க்கட் வளர்கிறது. முயற்சியுள்ள மனிதனுக்கு நல்ல காலம் வந்துள்ளது. இந்தக் காலத்தில் ஒருவன் முன்னுக்கு வராவிட்டால், அது அவனுடைய பொறுப்பே என பெரும்பாலோர் அறிகிறார்கள். அதன்படி பலன் பெறுகிறார்கள்.
- அப்படிப்பட்டவர் 1000 ரூபாய் சம்பாதிக்க சிரமப்பட்டவர் இன்று 5000 சம்பாதிக்கிறார்கள். அவர்கள் 10 ஆயிரம் பெறலாம். முயற்சியின் தரத்தைப் பொறுத்து ஒரு இலட்சமும் பெறலாம். அதையும் இரு மடங்காக்கும் வழியுண்டு.
- மனிதன் படிப்பு, திருமணம், வேலை பெற்று குடும்பம் நடத்துபவனுக்கு வருமானம், வெற்றி, அபிவிருத்தி, முன்னேற்றம், நிம்மதி, சந்தோஷம், குடும்ப சந்தோஷம் எனப் பல இலட்சியங்களுண்டு. இதைக் கடந்து பிரபலம், அந்தஸ்து, பொது வாழ்வில் முன்னேற்றமுண்டு.
- இவற்றுள் மிக எளிமையானது வருமானம்.
- மிகக் கடினம் சந்தோஷமான குடும்பம்.
- இடைப்பட்ட நிலைகளையும் முடிவான உயர்ந்த நிலைகளையும் ஒதுக்கி, இவ்விரு நிலைக்குரிய சட்டங்களை மட்டும் கூறுகிறேன்.
- தொழில் எதுவானாலும் மனம் தொழிலில் நிலவும் நேர்மையில் சராசரிக்கு மேலிருக்க வேண்டும் - இது வருமானம் பெறும்.
- ஒரு தொடர்பு தவறாது பிறர் கோணத்தில் மட்டும் காரியங்களைச் செய்வது குடும்ப சந்தோஷம் பெற்றுத் தரும். இதனுள் மேற்சொன்ன வருமானம் அடக்கம்.
- அன்பருக்குரியது அடுத்த கட்டத்திற்குரியது. அன்பரல்லாதவர் கையாளும் முறைகள் அன்பருக்கு இரு மடங்கு முதல் இருபது மடங்கு வரை வருமானத்திலும், சந்தோஷத்திலும் தரும். அவருக்குரிய நிபந்தனை:
அன்னையை மனம் தானே எந்த நேரமும் விரும்பி அழைப்பவர் அன்பர் என்ற இலட்சணத்திற்கு அவர் உரியவரானால், மனத்தின் அமைதியைக் கடந்து நெஞ்சத்தின் மௌனத்தின் ஆழத்திலிருந்து அந்த அழைப்பு சென்று நிரந்தரமாகத் தங்குவது குறைந்தபட்சம் பெறாதவரில்லை. அதிகபட்சம் பெற்றவர் அநேகம் பேர்.
தொடரும்....
*****
- Login to post comments