Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

731) சமூகப் பழக்கங்கள் ஒரே தலைமுறையில் மாறும். சமூகத்தின் நம்பிக்கைகள் மாற ஒரு நூற்றாண்டாகும். சமூகத்தின் அமைப்பு மாற அதன் ஆரம்ப நிலை அமைப்புகள் (units) அழிந்து புதுப்பிக்கப்பட வேண்டும். குடும்பம் இன்று அது போன்ற மாற்றத்தைப் பெற்று வருகிறது.

பழக்கமும், நம்பிக்கையும் மாறிய பின்னும் அமைப்பு மாறாது.

உடை, சாப்பாடு, படிப்பு, சட்டம் போன்றவை பழக்கங்களால் நிர்ணயிக்கப்பட்டவை. கர்மம், நேர்மை, கடமை, நாணயம் போன்றவை நம்பிக்கைகளாகும். குடும்பம், பணம், மார்க்கட், சர்க்கார், நிர்வாகம், நீதி, போக்குவரத்து, தபால் போன்றவை அமைப்பால் ஏற்படுபவை.

உடை, உணவு, படிப்பு, சட்டம் ஆகியவை நம் தலைமுறையில் மாறியதை நாம் அறிவோம். ஆங்கிலப் படிப்பு வந்தவுடன் திண்ணைப் பள்ளிக்கூடம் மறைந்துவிட்டது. வேஷ்டியும், ஷர்ட்டும் மாறி பேண்ட்டும், slack shirt சிலாக்குமாயிற்று. புடவை மாறி சுரிதார் வருகிறது.B.A, M.A போய் B.E., M.B.B.S., M.Com., C.A. வருகிறது. முதலாளிக்குச் சாதகமான சட்டம் போய் கோர்ட் தொழிலாளிக்கு சாதகமாயிற்று. விவாகரத்துக்குச் சட்டமில்லாமல் இருந்து ஏற்பட்டுவிட்டது. தீண்டாமை ஒழிக்கப்பட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை வந்தது. தொழிலாளிக்குப் பென்ஷன் வருகிறது. பழக்கங்களால் ஏற்பட்டவற்றை சமூகம் மாற்ற நினைத்தால் எளிதில் ஏற்றுக் கொள்கிறது. ஒரு தலைமுறையில் மாற்றம் தெரிகிறது. ஓரிரு தலைமுறைகளில் மாற்றம் முழுமை பெறுகிறது.

இராகு காலத்தில் நம்பிக்கை மதம் மாறிய பிறகும் போவதில்லை. 5, 6 தலைமுறைகளுக்குப் பின் போகிறது. சுமார் 70, 80, 100 வருஷமாகிறது, இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மாறுவதற்கு. வெள்ளாழன் வீட்டில் வந்தவரை சாப்பிடாமல் அனுப்பப்பமாட்டான். அனுப்பினால் தலை வெடித்துவிடும். நிலத்தைக் கரம்பாகப் போடமாட்டான். செட்டியாரால் கணக்குப் பார்க்காமலிருக்க முடியாது. வாங்கிய கடனைக் கொடுக்காவிட்டால் குடும்பம் சர்வநாசமாகும் என நம்பும் செட்டியாரால், கடனைக் கொடுக்காமலிருக்க முடியாது. மந்திரம் ஓதும் பிராமணன் சந்தியாவந்தனத்தை விடமாட்டான். அதை விட்டாலும் பித்ருக்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் இவற்றை புறக்கணித்தால் பெரிய பாவத்தைச் செய்ததாகக் கருதுவான். மாறுகிற இடங்களைப் பார்த்தால் மாற்றம் நெடுநாளையதாக இருக்கும்.

பண்டமாற்றுப் போய் பணம் வந்தது. Nomads ஊர் ஊராகத் திரிந்த கூட்டம் ஓர் ஊரில் நிலைத்து ஊர் சுருங்கி குடும்பமாயிற்று. ஜாதி ஏற்பட்டது. அமெரிக்கா போய் இரண்டு தலைமுறையானாலும் தன் ஜாதியையே திருமணத்தில் மனம் நாடுகிறது. இன்று முடியாட்சி போய் மக்களாட்சி வந்துள்ளது. 70 ஆண்டாக ரஷியாவில் மக்களாட்சியைக் கொண்டுவர முயன்றார்கள். முடிவில் முடியாட்சி வேறு உருவத்தில் வந்தது. மக்களாட்சி என்று பெயரிட ஒன்று ஏற்பட 70 ஆண்டு அனுபவம் போதவில்லை. குடும்பம் தேவையில்லை என்று நினைத்து கூட்டுக் குடும்பம் போய் தனிக்குடும்பம் ஏற்பட்ட வீட்டில் 9 பேர் உடன் பிறந்தவர்கள். மனைவியுடன் பிறந்தவர் 7 பேர். அத்தனை பேரும் தனிக்குடும்பமாக வாழ்பவர்கள். கூட்டுக் குடும்பத்தை அழித்து தனிக்குடும்பத்தை நிலைநாட்டியதாக நினைப்பவர்கள். ஏதோ காரணத்தால் இந்த 16 தனிக்குடும்பங்களும் பல்வேறு ஊர்களிலிருந்து ஒரே ஊருக்கு வந்துவிட்டனர். அழிக்கப்பட்ட கூட்டுக் குடும்பம், வேறு உருவில் இன்று ஒன்று சேர்ந்துவிட்டது. குடும்பம், சர்க்கார் போன்ற அமைப்புகளும், மார்க்கட், கல்வித்திட்டம் போன்ற பொது அமைப்புகளும் எளிதாக மாறுவதில்லை. அவை மாற வேண்டுமானால், பழைய அமைப்பை அஸ்திவாரத்தில் கலைத்து புதிய அமைப்பை அஸ்திவாரத்தில் ஏற்படுத்த வேண்டும்.

'ஆமிஷ்’ என்ற பேரில் அமெரிக்காவில் ஒரு சிறு வகுப்பு மெஷின் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையைப் பின்பற்றி டிராக்டர், கார், T.V.போன் போன்றவற்றை விலக்கி வாழ்கின்றனர். அடுத்த தலைமுறையில் இக்கொள்கை வலுவிழந்தது. மகாத்மா காந்தி கதர் உடுத்த வேண்டும், மெஷின் பயன்படுத்தக் கூடாது என்பதைப் போன்ற கொள்கை இது. கி.பி. 2000த்தில் சுமார் சில ஆயிரம் அமெரிக்கர்கள் ஆமிஷ் கலாச்சாரத்தைப் பின்பற்றுவது பழக்கங்களை மனிதன் விட முடியவில்லை என்று காட்டுகிறது.

நம்பிக்கைகள் பழக்கங்களை விட ஆழ்ந்தவை. மூடநம்பிக்கைகளையே விட முடியாத மனிதன் நம்பிக்கைகளை எப்படி கைவிடப் போகிறான்? கர்மம் என்பதே ஒரு நம்பிக்கை என்கிறார் அன்னை.

மதம் நமக்கு அளித்த நம்பிக்கைகள் பல. கலாச்சாரம், பண்பு அளித்தவை வேறு. நாட்டின் சீதோஷ்ண நிலை - தட்ப வெட்ப நிலை - நமக்குப் பல்வேறு நம்பிக்கைகளை அளித்துள்ளது.உதாரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா போன்ற பூமத்தியரேகை நாடுகளில் உழைப்பது அவசியமில்லை என்ற நம்பிக்கையுண்டு. உஷ்ணப்பிரதேசமாதலால் 12 மாதமும் பயிர் விளையும். மரம் காய்க்கும். பனி, குளிர்காலம், செடி கொடிகள் வதங்கும் winter நமக்கில்லை. ஐரோப்பாவில் 3 மாதம் குளிர்காலம். மரத்தில் இலைகளே இருக்கா. பனி, ஐஸ், snow மழைபோல் பெய்யும். வீட்டுக் கூரை மீது பனி மலைபோல் குவியும். 3 மாதம் எதுவும் பயிராகாது. 6 மாதம்தான் சூரியனைப் பார்க்கலாம். இந்த 6 மாதத்தில் 12 மாத உணவை சேகரம் செய்ய மனிதன் இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும். அத்துடன் குளிரிலிருந்து பாதுகாக்க கல்வீடு தேவை. குடிசையில் வாழ முடியாது. 3 மாத குளிரில் இரவும் பகலும் வீட்டில் குளிரில்லாமலிருக்க விறகு எரிய வேண்டும். அதை வெய்யிற் காலத்தில் சேகரம் செய்யாதவன் குளிரில் இறந்துவிடுவான். இரவும் பகலும் உழைத்தால்தான் உயிரோடு இருக்க முடியும் என்ற மேல்நாட்டுப் பழக்கம் அவர்கள் பனிக்காலத்தால் வந்தது.

நமக்குக் குளிரில்லை. பனி, ice, snow, fog, frost இல்லை. மரம் காய்க்கிறது. பயிர் விளைகிறது. அதனால் கடின உழைப்பு அவசியமாக இல்லை. நமக்குச் சோம்பேறித்தனம் வளர்கிறது. இதுவும் நம் சீதோஷ்ண நிலைக்குரிய பழக்கம். மேல் நாட்டாரால் ½ மணி அமைதியாக உட்கார முடியாது. அமெரிக்கர்கள் 10 நிமிஷம் சும்மா உட்கார மாட்டார்கள். நம்மால் அவர்கள்போல ½ மணி வேலை செய்ய முடியாது.

சமூகம் எளிதில் மாறுவதில்லை. ஆனால் மாறுகிறது. மனித சுபாவம் மாறாது என்றாலும் மாறும் என்கிறார் அன்னை. 1950 முதல் 2000 வரை உலகம் பெருமாற்றங்களைக் கண்டது. அவை மேலெழுந்தவாரியான மாற்றங்களே. மாற்றம் கடினம், ஆனால் அவசியம்.

****

 732) கடந்த 5000 ஆண்டுகளில் மனிதன் தன் மன நம்பிக்கைகளை psychological change மேல் மனத்தில் மாற்றியுள்ளான்.

கடந்த 5000 ஆண்டுகளில் உலகம் மாறி, அதன் உருவம் மாறி, அதன் அடிப்படை உந்துதல் மாறி, அதன் போக்கு, இலட்சியம், கொள்கை, அமைப்பு என அத்தனையும் மாறியதை வரலாறு அறியும்.

இத்தனை மாறுதல்களும் பகவான் மேல்மனத்தில் ஏற்பட்டவை என்கிறார். ஆதி மனிதனுக்குள்ள கோபம், நரமாமிசம் சாப்பிடும் குணம், கொடூரம், விலங்குணர்வு போன்றவை இன்றும் நாகரீக மனிதனுடைய உள் மனத்தில் அப்படியேயுள்ளது என்கிறார்.இரண்டாம் மகாயுத்தத்தில் ஒரு கப்பல் தடம் மாறி நடுக்கடலில் நின்றுவிட்டது. கரை சேர வழியில்லாமல் மாதக்கணக்கானபொழுது, உணவில்லாமல் மாலுமிகள் ஒருவரை மற்றொருவர் சாப்பிட ஆரம்பித்தனர். பர்மா அகதிகள் நடந்து இந்தியா வந்தபொழுது பசி தாங்காமல் தன் குழந்தையைத் தானே கடித்து மனிதன் சாப்பிட்டான். நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் இத்தனை நாகரீகம் வந்தும் போகவில்லை. உள்ளே அமிழ்ந்துள்ளது.

ஆதிமனிதன் கல்லால் கருவிகள் செய்ததைக் கண்டு இன்று ஆராய்ச்சியாளர் வியக்கின்றனர். நியூடன் பிறந்து சில நூற்றாண்டுகளாகின்றன. நியூடனை விட, சாக்ரடீஸை விட இனி சிருஷ்டியில் மனித மனம் உயர முடியாது என்கிறார் பகவான். இன்று electron microscope மைக்கிராஸ்கோப் செய்ய இன்றைய நிலையில் எவ்வளவு அறிவும் திறமையும் வேண்டுமோ, அவ்வளவு அறிவும் திறமையும் கல்லால் கருவி செய்ய stone tools அன்று ஆதி மனிதனுக்குத் தேவைப்பட்டது என்கிறார் பகவான். இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில் மனிதனுடைய அடிப்படை புத்திசாலித்தனம் உயரவில்லை என்கிறார் பகவான்.

இலட்சக்கணக்கான மாறுதல் ஏற்பட்டுள்ளன. அவை மேல் மனத்தின் சாதனைகள். ஆழ்ந்த மனம் அன்றுபோல் இன்றும் உள்ளது. அதில் மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை.

 மனித வாழ்வு வளர்ந்துள்ளது. அடிப்படை மனத்தின்

அமைப்போ, திறனோ மாறவில்லை என்கிறார்.

நடந்தவன் இரயிலில் போகிறான், விமானத்தில் பறக்கிறான், ராக்கெட்டில் சந்திரனுக்குப் போகிறான். இவற்றைக் கண்டுபிடிக்க விஞ்ஞானமும், விஞ்ஞான அறிவும் வளர்ந்துள்ளன. உள்ளூரில் செய்ததையே வெளியூரிலும், வெளிநாட்டிலும் போய் செய்கிறானே தவிர, போகும் வேகம், வசதி, முறை சௌகரியமாக மாறியதே தவிர போகும் மனிதன் மாறவில்லை. அவன் அடிப்படை வாழ்வு மாறவில்லை. அந்த வாழ்வை நிர்ணயிக்கும் புத்திசாலித்தனம் உயரவில்லை. அன்றே - 5000 வருஷத்திற்கு முன்பே - அந்த அறிவு உச்சகட்டத்தை எட்டி விட்டது என்கிறார். இனி உயர வழியில்லை என்பதால், பரிணாமத்தால் மனத்திலிருந்து உயர்ந்து supermind சத்திய ஜீவியத்தை எட்டினால்தான் மனத்திற்கு வளர்ச்சியுண்டு.

வாழ்வும், வசதியும், ஊரும், உலகமும் மாறியது உண்மை. அவற்றை நிர்ணயிக்கும் உணர்வும், அறிவும், திறனும், மனமும் மாறவில்லை.

ஆயிரம் வருஷமாக இருந்த வேஷ்டி இன்று pant ஆக பெரும்பாலும் மாறியுள்ளது. 12ஆம் நூற்றாண்டுவரை இந்தியப் பெண்கள் மேலாடையில்லாமலிருந்தனர். முஸ்லீம் ஆட்சி வந்து மேலாடையை ஏற்படுத்தினர். புடவை இன்று சுரிதாராகிறது.

இட்லியும், தோசையும் 100அல்லது 200 ஆண்டுகட்கு முன் வந்ததே. அதுவும் மாறலாம். இவை உடை, உணவு மாற்றங்கள்.

5000 ஆண்டுகளில் ஏற்பட்டவை பெருமாற்றங்கள். ஆனால் அவை அனைத்தும் மேல்மனத்திற்குரிய மாற்றங்களேயாகும். அவை,

  1. நாடோடியான மனிதன் ஊரை ஏற்படுத்தி அங்கேயே தங்கினான்.
  2. விவசாயத்தை மட்டும் நம்பி ஊரில் வாழ்ந்தான்.
  3. விவசாயத்தை நம் நாட்டில் 35% மக்களும் மேல்நாடுகளில் 97% மக்களும் கைவிட்டனர்.
  4. ஊரைச் சுற்றி 5 மைல் உள்ள குடும்பங்களுடன் சம்பந்தம் செய்தான்.
  5. இன்று திருமணம் தமிழ்நாடு முழுவதும் தடையின்றி நடக்கிறது. வெளியிலும் அனுமதிக்கப்படுகிறது.
  6. விஞ்ஞான வாழ்வை ஏற்றுக்கொண்டு, ரயில், காரில் பிரயாணம் செய்கிறான்.

இவ்வளவும் மேல் மனத்திற்குரிய பழக்கங்களில் ஏற்பட்ட மாறுதல் எனில் ஆழ் மனப்பழக்கங்கள் எவை? நம் ஆழ்மனப் பழக்கங்களும் விலங்கினத்திற்குரியவையும் ஒன்றே. பசி, தாகம், தூக்கம், இனஉணர்வு, நமக்கும் விலங்குகட்கும் ஒன்றே. விலங்கு வாழ்வு மாறுவதே ஆழ்மனம் மாறுவதாகும். சத்திய ஜீவன் பிறந்தால்தான் அது மாறும்.

அறிவு ஒன்றுதான் நமக்கும் விலங்குகட்கும் உள்ள வித்தியாசம். போட்டி, பொறாமை, பொய் ஆகியவற்றை மனிதன் கைவிட்டால் மேல்மனத்தில் மேற்பகுதியிலிருந்து மேல் மனத்தின் ஆழ்ந்த பகுதிக்கு மனிதன் மாறுகிறான். அம்மாறுதலே பெரும் மாறுதல் எனக் கருதப்படும்.

வாழ்க்கை வசதிகள் மாறியுள்ளன. அறிவு வளர்ந்துள்ளது. செயல் திறனடைந்திருக்கிறது. சக்தி ஏராளமாக வளர்ந்துள்ளது. உள்ளூரிலேயே இருந்த மனிதன் உலகெங்கும் சுற்றி வருகிறான். ஒரு மொழி பேசியவன், பல மொழிகளை அறிய முயல்கிறான். கல்வி பரவி வருகிறது.

 ஆனால், மனிதன், மனிதனாகவே இருக்கிறான்.

அதாவது திறமையான விலங்காக மாறியுள்ளான்.

அடிப்படையான விலங்கு வாழ்வை விட்டு மனிதன் மாறவில்லை.

 ****

733) மனிதன் பிறந்தபொழுது கடைசி முறையாக ஜீவியம் மாறியது.

ஆதி ஜீவியம்.

பெரிய மாறுதல்கள் ஆரம்பத்திலேயே தலை எடுப்பதுண்டு. Human consciousness மனித ஜீவியமும் அப்படியே. மனிதன் பிறந்தபொழுது விலங்கின் ஜீவியம் மனித ஜீவியமாக மாறியது. அதன்பின் மனித ஜீவியம் இன்றுவரை அதன் அடிப்படையில் அன்றிருந்ததுபோலவே இருக்கிறது. அதில் மாற்றமில்லை.

இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்கள் பெரிய இலக்கியங்கள். ஆனால் நாளடைவில் அவற்றுள் இடைச் செருகல்கள் ஏற்பட்டதாகப் பண்டிதர்கள் நினைக்கிறார்கள். மொழி பெயர்ப்பு என்று ஏற்பட்டபொழுது பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன. ஆனால் வேதம், உபநிஷதம், கீதை ஆகியவை அன்றிருந்ததுபோல் எந்த மாற்றமும் இல்லாமலிருக்கின்றன. வேதம் பெரியது. எனவே மாறாது. இராமாயணம் கதை. எனவே மாறக் கூடியது.

அரசியல் நிர்ணயச் சட்டம் (constitution), நாட்டில் வழங்கும் சட்டம், (Acts of Parliament and Legislatures), சர்க்கார் உத்தரவு (G.O) ஆகியவற்றுள் அரசியல் நிர்ணயச் சட்டம் அடிப்படையானது. இந்தியாவில் கடந்த 44 வருஷமாக அதில் மாற்றமில்லை. திருத்தங்களுண்டு. திருத்தமும் அடிப்படையை ஒட்டியே இருக்கும். அமெரிக்காவில் அரசியல் நிர்ணயச் சட்டம் 200 ஆண்டுகளாக இருக்கிறது. மாற்றமில்லை. அதாவது அடிப்படையான மாற்றமில்லை. இங்கிலாந்தில் (written constitution) அரசியல் நிர்ணயச் சட்டம் எழுத்துருவமே பெறவில்லை. நாட்டில் சட்டங்கள், சர்க்கார் உத்தரவு மாறும். அதிகமாக மாறும். அடிக்கடி மாறும். அடிப்படையே மாறும். ஆனால் அரசியல் நிர்ணயச் சட்டம் மாறுவதில்லை.

மனிதனுக்குப் பழக்கம், நம்பிக்கை, அமைப்பு என்பவையுண்டு. இவை மேலெழுந்தவாரியானவை. இவை மாறும். ஜீவியம் இவற்றைக் கடந்தது. அடிப்படையானது. எனவே மாறாது. மனிதன் பிறந்த பொழுது விலங்கின் ஜீவியம் மனித ஜீவியமாக மாறியது. இனி மாற வேண்டுமானால் சத்திய ஜீவியமாக மாறுமே தவிர அதன் இன்றைய அமைப்பு மாறுவதில்லை.

ஜீவியம் மனிதன் பிறந்தபொழுது மாறியது பிறகு மாறவில்லை என்பதை பகவான் அன்று மனிதனுக்கிருந்த அறிவு இன்றுவரை அதிகப்படவில்லை என்ற கருத்தாலும் தெரிவிக்கின்றார்.

ஓரளவு இந்த உண்மையை, பேனா, எழுத்து, துப்பாக்கி, டைப்ரைட்டர், பேப்பர், மருந்துகள் ஆகியவற்றில் பார்க்கலாம். இவை கண்டுபிடிக்கப்பட்டபொழுது இருந்த அடிப்படை நிலை இன்றுவரை மாறாமலும், ஏற்படும் மாறுதல்கள் மேலெழுந்தவாரியாக இருப்பதையும் காணலாம். கப்பல் அன்றிலிருந்து, இன்றுவரை ஆயிரம் மாறுதல்களை அடைந்தாலும், முதல் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது இருந்த தோற்றம், மிதக்கும் தத்துவம் இன்றும் மாறவில்லை. கம்ப்யூட்டரும் அதேபோல் ஆரம்பத்தில் எப்படி addition based manipulations கூட்டல் கழித்தல் அடிப்படையில் ஏற்பட்டதோ இத்தனை மாறுதல்கட்குப் பின்னும் அதே அடிப்படையைக் கொண்டதாக உள்ளது.

அரச மரம் அன்றுபோல் இன்றும் இருப்பதுபோல், எந்த ஜீவராசியும் (species) ஆரம்பத்திலிருந்து முடிவுவரை மாறுவதில்லை. அதனால் தான் ஸ்ரீ அரவிந்தர் ஆதிமனிதனுக்கு இன்றைய மனிதனுடைய அறிவு உண்டு என்றார்.

ஏற்படும் மாற்றங்கள் எவ்வளவு பெரியதாகத் தோன்றினாலும் அவை மேல் மனத்திற்குரியவையே. அடிப்படையான மனித ஜீவியம் (human consciousness) உண்டானால், சத்திய ஜீவன் பிறப்பான்.

மனித ஜீவியம் என்பது மேலெழுந்தவாரியாக உடல் தோற்றம், உணவு, உடை பழக்கங்களால் அறியப்படுகின்றது என்றும், அதை நிர்ணயிப்பது உடலமைப்பு, செல்லின் அமைப்பு, gene, chromosome, DNA ஆகியவை. அவை மாறாதவரை மனிதன் மாறப் போவதில்லை.

என்ஜின் என நாம் அறிவது மின்சார மோட்டாரால் இயக்கப்படுகிறது. பெட்ரோல், டீசலாலும் ஓடுகிறது. நீராவியால் ஓடிற்று. அதற்கு முன் water mill நதியின் ஓட்டத்தால் மோட்டார் இயங்கியது. எது மாறினாலும் அடிப்படையில் மோட்டார் என்பது சுழலும் சக்கரம்.

இதுவே உண்மையானால் நம் இலட்சியங்களாகக் கருதுபவை என்னாவது?

  • மனிதன் இறைவனை வழிபட வேண்டும்.
  • அன்பால் செயல்பட வேண்டும்.
  • விலங்குபோல் வாழக் கூடாது.
  • உலகம் சுருங்கி சிறு கிராமமாக வேண்டும்.
  • போர் அழிய வேண்டும்.
  • வசதி அதிகரிக்க வேண்டும்.
  • யோகம் செய்ய வேண்டும்.
  • மோட்சம் பெற வேண்டும்.
  • மனிதர்கள் சமமாக வாழ வேண்டும்.
  • ஜனத்தொகை பெருகக் கூடாது.
  • இயற்கை விபத்திலிருந்து மனிதன் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • அறிவு வளர்ந்து அன்பாக முதிர வேண்டும் என்ற இலட்சியங்களையும், இதர வேறு உலக இலட்சியங்களையும் நாம் கருதினால், ஆராய்ந்தால், ஆழ்ந்து சிந்தித்தால், அவ்வளவு மாறுதல்களும் மேல்மனத்திற்குரியன. எதுவும் மனித உடலமைப்பையோ, ஆழ்மனத்தையோ, அடிப்படையில் செல், DNAஇன் அமைப்பையோ தொடக் கூடியவையில்லை. அவை மாறாதவரை மனித ஜீவியம், மனித ஜீவியமாகவேயிருக்கும், மாறாது.

****

734) உடல் மனத்தை நிர்ணயிப்பது சிறிய உண்மை. மனம் உடலை நிர்ணயிப்பது பெரிய உண்மை.

உண்மையின் இரு உருவங்கள்.

இலட்சியம், பாசம், நட்பு, உறவு, குடும்பம் போன்ற போற்றப்படும் கருத்துகளுக்கு அடிப்படையாகப் பணம், சொத்து, ஆதாயம் இருப்பதை உலகம் அறியும். இலட்சியவாதியை யதார்த்தவாதி (materialist) அந்த அடிப்படையில் கேலி செய்வான். இது உண்மை, ஆனால் முடிவான உண்மை இது அல்ல. முடிவான உண்மையை அறியும்பொழுது பணமும், சொத்தும் இலட்சியத்தாலும், இலட்சியக் கருத்துகளாலும் எழுந்தவை என அறியலாம்.

Life Divine நூலின் கடைசி அத்தியாயம் நூல் அதிக நீளமுள்ளது. சுமார் 55 பக்கமுள்ளது. ஆரம்பத்தில் முதல் அத்தியாயம் 4 பக்கம், முதல் 15 அத்தியாயங்கள் 10 பக்கம். போகப் போக அத்தியாயங்கள் நீண்டு முடிவான அத்தியாயம் மிக நீளமானதாக அமைந்தது. அதை Divine Life என்றார். அதை மட்டும் தனியே படித்தால் அதை ஒரு தனிப் புத்தகம் என்று கருதுவார்கள். நூலின் முக்கியக் கருத்துகளின் சாரம் அதனுள் உள்ளன. அவ்வத்தியாயத்தில் முக்கியமானது மேலே சொல்லப்பட்ட கருத்தாகும்.

நடைமுறையில் பக்தர்களுக்கு இக்கருத்தை வேறுவகையாக விளக்கலாம். நாம் வாழ்வுக்கும், சந்தர்ப்பத்திற்கும், கர்மத்திற்கும், தலைவிதிக்கும், சமூகத்திற்கும், குடும்பத்திற்கும், கடமைக்கும், மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டுள்ளோம். இதனால் மனிதன் அந்த அளவில் சிறைப்பட்டவன். அவனுக்குச் சுதந்திரமில்லை. அன்னையின் வழி மாறியது. வாழ்வு அவனுக்குக் கட்டுப்படும். சந்தர்ப்பங்களை அவன் நிர்ணயிக்கலாம். கர்மத்தை அழிக்க முடியும். தலைவிதி என்பதை மனிதனால் மாற்ற முடியும். சமூகம் பக்தனைச் கட்டுப்படுத்தாது. குடும்பம் அவனுக்குட்படும். கடமை என்பது அன்னைக்கு மட்டுமேயுரியது. பக்தன் மனச்சாட்சியைக் கடந்தவன். மேற்சொன்ன உண்மையை மனம் புரிந்து ஏற்றுக்கொண்டால், ஆயிரம் வகையான சிறைகளிலுள்ள மனிதன், சுதந்திரம் பெறுவான்.

 அவன் மனம் நினைத்தது நடக்கும்.

சிருஷ்டியின் இரகஸ்யத்தை உலகில் இதுவரை எவரும் கண்டதில்லை. இதுவரை சிருஷ்டியைப் பற்றிய கருத்துகள் சிறுபிள்ளைத்தனமானவை என்கிறார் அன்னை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் சிருஷ்டியைத் தத்துவமாகவும், ஒரு முறையாகவும், இந்த நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கருத்தை எடுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பதில் கூறும் வகையிலும் எழுதியுள்ளார். அந்த விளக்கத்தின் முதற்பாகம் தெளிவாக முடிந்தபின் “இது பெரிய கருத்து. கீழிருந்து மேலே போவதற்குப் பதிலாக (from matter to mind) மேலிருந்து கீழே வந்தால் தெளிவிருக்கும்” என்றவர் இது மாறும் இடத்தில் மேற்கண்டதைக் கூறுகிறார்.

உடல்தான் நடைமுறையில் நம்மை நிர்ணயிக்கிறது எனினும், உடலினுள் உள்ள subconscient ஆழ்ந்த மனமே உடலை நிர்ணயிப்பதால், முடிவாக நிர்ணயிப்பது மனமாகும் என்கிறார். தத்துவத்தை விட்டு நடைமுறையில் இந்த உயர்ந்த தத்துவத்தின் பலனைப் பெற வேண்டுமானால் மேற்சொன்ன கருத்தை கீழ்க்கண்டவாறு கூறலாம்.

 அடிமையான மனிதன் அன்னையை ஏற்றுக் கொண்டால் அனைத்தும் அவனுக்கு அடிமையாகும்.

சர்க்கார் தன் செலவில் ரோடு போடுகிறது, பள்ளிக்கூடம் கட்டுகிறது, அபிவிருத்திக்கானவற்றைச் செய்கிறது என்பது உண்மை. மறுக்கமுடியாதது.

  • சர்க்கார் மக்களுக்குச் செலவு செய்து சேவை என்பதைச் செய்கிறது என்பது சிறிய உண்மை.
  • சர்க்காருக்குப் பணம் இல்லை. அது பொதுமக்கள் பணம் என்பது பெரிய உண்மை என்று நாம் கூறுவது போன்றது மேற்கூறிய சட்டம்.

சிருஷ்டி என்பது பிரம்மம் சச்சிதானந்தமாகி, சத்திய ஜீவியமுமாகி, மனத்தை உற்பத்தி செய்ததாகும். சிருஷ்டி மனத்தோடு முடிகிறது. மனமே சிருஷ்டியின் கடைசி கட்டம்.

மனம் வாழ்வாகவும், உடலாகவும் (ஜடம்) மாறியது என்பது ஸ்ரீஅரவிந்தம். உடலுக்கு வாழ்வு என்ற உயிரும், மனமும் உண்டு என நாம் அறிவோம். மனமே உயிராகவும், உடலாகவும் மாறியது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

உடல் என நாம் அறிவது subconscious mind ஆழ்மனத்தின் இருண்ட உருவம். உயிர் அடுத்த நிலை. முதலாளி மனம், மானேஜர் உடல். மானேஜர் கம்பனி நிர்வாகத்தை மேற்கொண்டு தன்னையே முதலாளியாகக் கருத ஆரம்பித்தார். பின்னர் அதை நம்பினார். அதையே முடிவாகவும் நம்பினார். முதலாளியிடம் அதைக் கூறினார். முதலாளியும் இன்று அதையே நம்புகிறார் என்பதைப்போல், உடல் தன் ஆதிக்கத்தில் மனமிருப்பதாகக் கூறி அதை மனம் நம்பிவிட்டது. அதனடிப்படையில் A sound mind in a sound body என்ற பழமொழியும் எழுந்துள்ளது. இது இன்றுவரை உலகம் நம்புவது.

ஸ்ரீ அரவிந்தம் சிருஷ்டியை விவரித்து மேற்சொன்ன விளக்கத்தால் கூறியது புதிய, பெரிய உண்மை. இந்த reversal of consciousness மனமாறுதல் பூரண யோகத்திற்கு இன்றியமையாதது. மனிதனுடைய தவறான எண்ணங்கள் பலவற்றிற்கு அடிப்படை இச்சிறிய உண்மை.

 அவை :

  1. பணம் வாழ்வுக்கு முக்கியம்.
  2. Technology வாழ்வை முன்னேற்றுகிறது.
  3. சர்க்கார் சமூகத்தைவிடப் பெரியது.
  4. வாழ்வு சிரமங்களாலானது.
  5. மரணம் தவிர்க்க முடியாதது.

ஸ்ரீ அரவிந்தம் எதிராகக் கூறும் உண்மைகளை மனம் ஏற்க, யோகம் அதனடிப்படையில் சித்திக்க, இச்சிறிய உண்மையைக் கைவிட்டு, ஸ்ரீ அரவிந்தர் கூறும் பெரிய உண்மையை மனம் விளங்கி ஏற்று, செயல்பட வேண்டும்.

 ****

735) உடல் அசைவுகளே நாம் என இருந்தால் உடல் மனத்தைக் கட்டுப்படுத்தும். மனத்தின் எண்ணங்களே நாம் என இருந்தால் மனம் உடலை நிர்ணயிக்கும்.

மனம் உடலின் அதிபதி.

'உலகம்’ என்று சொல்லும்பொழுது அவரவர்களுக்கு அது வேறுபடும். கிராமத்தில் பிறந்து அங்கேயிருப்பவனுக்கு அவன் குக்கிராமமே உலகமாகும். முனிசிபாலிட்டியில் வேலை செய்பவன் சேர்மனே கடவுள் என்று நினைத்தால் அவன் உலகம் முனிசிபாலிட்டி ஆகும். ஒருவர் மனத்தின் விசாலத்தைப் பொருத்து அவர் உலகத்தின் அளவு நிர்ணயிக்கப்படும்.

மனிதன் தன்னை உடலாகக் கண்டால் அவனுக்கு உழைப்பு மட்டுமே உரியது; உணர்வாகக் கண்டால் உறவே அவனுக்கு உயிராகும்; மனித மனத்தின் சிந்தனைகளையே தானாக அறிபவன் ஞானம் அவனுக்குரியது; ஆன்மாவாகத் தன்னை அறிபவன் யோகி.

25 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்று பேசும் இளைஞன் உணர்வால் உயிரற்றவன். அவனுக்குச் சாப்பாடு முக்கியம், சௌகரியம் முக்கியம், வெளியில் போய் உள்ளே வந்தால் மனைவி காத்திருக்கவேண்டும். தம்பி இரவு 12 மணிக்கு மேல் ஆபத்தான சூழ்நிலைக்கு போனவன் திரும்ப வரவில்லை எனில் போய்ப் பார்க்க முடியாதவன். பெருஞ்செல்வமிருந்தும் 34 வயதுவரை பெண்ணின் திருமணத்தை நினைக்காமல், காஷ்மீர், தாஜ்மஹால் பார்க்கவும், நகரத்தில் அரசியல் நண்பர்களுடன் பொழுதுபோக்கவும் நினைப்பவனுக்கு உடலே பிரதானம். அதன் அசைவுகளும் சந்தோஷமும் முக்கியம். அது போன்றவர்கள் சற்று வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டதால் அப்படியிருப்பார்கள். அவர்கள் வாழ்வைச் சீர்தூக்கிப் பார்த்தால், அவர்களுக்கு முக்கியமான நேரங்களில் நடந்தவற்றைக் கருதினால்,

       பலன் சூழ்நிலையால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

மனத்தின் எண்ணங்களே நாமாவோம் என்பவன் நினைப்பதற்குச் சக்தியுண்டு. அவன் சூழ்நிலைக்குக் கட்டுப்பட வேண்டாம். அவன் சிந்தனை சூழ்நிலையை மாற்றும், சிந்தனை சிறந்தால் சூழ்நிலையை நிர்ணயிக்கும். தன்னைத் தன் எண்ணங்களுடன் இணைத்துப் பார்ப்பவன் சிந்தனையாளன். சௌகரியத்தை நாடுபவன் மகளுக்குத் திருமணம் செய்ய முடிந்தால், மாப்பிள்ளை அவன் நிலைக்குக் கீழ்ப்பட்டவனாக அமைவான். வேறு வழியில்லை நான் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று என்பான். சிந்தனையை முக்கியமாகக் கருதுபவன் மகளுக்குத் திருமணம் செய்ய முனைந்தால் அவன் நிலைக்குயர்ந்த வரன் அமையும். சூழ்நிலையை மீறிய பலன் ஏற்படுவது அவனது மனத்தின் திறத்தால். நாம் எதனுடன் நம்மை இணைத்துக் கொள்கிறோமோ அது நம்மை நிர்ணயிக்கும். உடலோடு நாம் இணைந்தால் உடல் நிர்ணயிக்கும். அதாவது உடல் அடிமைப்படும். மனத்தோடு இணைந்தால் மனம் வாழ்வை அடிமைப்படுத்தும்.

ஒரே மாதிரியான இரு இளைஞர்கள் பெரும் வித்தியாசமான வேலைகளில் சேர்வதும், அதிக வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வதும் உண்டு. காரணம்,

  • ஒருவர் தம்மை உயர்வுக்குரியவர் என நினைக்கிறார்.
  • அடுத்தவர் தமக்கு உயர்வில்லை என முடிவு செய்திருக்கிறார்.

நாம் எதை நமக்குண்டு என முடிவு செய்கிறோமோ அது நமக்குப் பெரும்பாலும் கிடைக்கும்.

படித்தவன் சிந்திப்பான். சிந்தனை சிறந்தால் அது அவனை ஆட்கொள்ளும். அந்த நேரம் உடலும் உணர்வும் மறந்து போகும், இரண்டாம்பட்சமாகும். அப்படிப்பட்டவனுக்கு ஒரு வியாதி வந்தால் உடலில் பயம் எழாது. யோசனை செய்வான். மருந்து சாப்பிடுவான்.டாக்டர் இந்த வியாதி இப்படித்தான் ஒன்றும் செய்யமுடியாது. குணமாக 6 மாதமாகும் என்றால், டாக்டர் சொல்வதை புறக்கணித்துவிட்டு என்ன செய்யலாம் என நினைப்பான்.

உடலசைவுகளே முக்கியம் என்பவன் வியாதி வந்தவுடன் பயப்படுவான். உடல் நடுங்கும். செய்வதறியாது திகைப்பான். டாக்டரிடம் போக வேண்டும் என இதுபோன்றவர்க்கு அநேகமாகத் தோன்றாது. உடலே முக்கியமானது என நினைத்ததால், அதற்கே பங்கம் வந்துவிட்டதாகத் தோன்றும். ஏதோ பெரிய விபத்து வந்துவிட்டதைப்போல் வீடு முழுவதும் அலறும்.

உடல் மனத்தை நிர்ணயிக்கும் பாணி இதுவேயாகும்.

  • ஆன்மாவே முக்கியம் என்பவர் உடலையும், மனத்தையும் புறக்கணிப்பார்.
  • இறைவனே முக்கியம் என்பவர் அதற்குரிய அறிகுறிகளைக் கண்டு ஆன்மாவையும் புறக்கணிப்பார். பிள்ளையைக் கறி சமைத்துக் கொடு என சிவனடியார் கேட்பது சிவபெருமானே கேட்பது என்று நினைத்தவர்க்கு உடலில்லை, உயிரில்லை, மனத்தின் எண்ண அலைகளில்லை, ஆத்மாவுக்குரிய மோட்சம் நினைவில்லை.
  • அன்னையே முக்கியம், வாழ்வில் இறைவனே முக்கியம் என்பவர் அடுத்தது என்ன, அங்கு என்ன ஆனந்தம் எழும், எப்படி நாம் சரணாகதியை இப்பொழுது பூர்த்தி செய்யலாம் என்ற கருத்து சந்தோஷமாக எழும்.

****

தொடரும்....

 

ஜீவிய மணி

புலன்களின் உறைவிடம் மூளை.

****

Comments

யோக வாழ்க்கை விளக்கம் IV  731

யோக வாழ்க்கை விளக்கம் IV

 731

para 7, line 8 - snowமழைபோல் - snow மழைபோல்

  do.   do.12 - குளிரில்லாமலிக்க - குளிரில்லாமலிருக்க

  do. 8, line 4 - ½மணி - ½ மணி 

732

 para 5, do. 9 - supermindசத்திய - Supermind சத்திய

   do. 7, do. 1 - pantஆக - pant ஆக

733

para 7, line 2 - ஆரம்பத்திருந்து - ஆரம்பத்திலிருந்து

734

para 1, line 3 - கேலிசெய்வான். - கேலி செய்வான்.

do.  2,  do  4 - Divine Lifeஎன்றார். - Divine Life என்றார்.

do. 4,   do. 7 - (from matter to mind)கீழே - (from matter to mind)  மேலிருந்து கீழே

para 9, line 1 - mindஆழ்மனத்தின் - mindஆழ்மனத்தின்

  do. 10, do.2 - consciousnessமனமாறுதல் - consciousness மனமாறுதல்

735

para 1, line 3 - முனிசிபாட்டியில் - முனிசிபாலிட்டியில்

 do.      do. 4 - முனிசிபாட்டி - முனிசிபாலிட்டி

  do. 3,  do. 3 - மனைவகாத்திருக்க - மனைவி காத்திருக்க

  do 4 - lines 9 & 10 - to be joined.

  do. 5 - 2nd bullet point - from நாம் to  கிடைக்கும். - next para

  do.  7, line 2 - உடல்நடுங்கும். - உடல் நடுங்கும்.



book | by Dr. Radut