07.கன்சல்டன்சி
Consultancy
“பொறுப்பால் வரும் அதிர்ஷ்டம்”
Consultancy clients வாடிக்கைக்காரர்கட்கு நாம் சொல்பவை ஏராளம். முதற் காரியம் சுத்தம். மேலும் அதிகமான விஷயங்களைச் சொல்கிறோம். அன்னையின் கோட்பாடுகளில் சக்தி வாய்ந்தது பொறுப்பு. நானுள்ள இடத்தில் எந்தக் காரியம் தவறிப் போனாலும், அதற்கு நானே பொறுப்பு என்பது அந்த நோக்கம். இதில் மேலும் அன்னை விசேஷம் ஒரு காரியம் கெட்டுப்போனால் ஒருவர் இதுபோல் உணர்ந்து மனம் மாறினால், கெட்டுப் போன காரியம் மாறி பலன் வரும். இது உயர்ந்த திறமை. மனித சுபாவத்தில் நல்லதும், கெட்டதும் கலந்திருப்பதை நாம் கண்டு மனிதர்களை கணக்குப் போடுவதால், நமக்கு, கெட்டதுடன் கலந்துள்ள நல்லது தெரிவதில்லை.
கோள் சொல்வது, ஒட்டுக் கேட்பது, திருடுவது, கெட்ட நடத்தை, பொய் சொல்வது ஆகியவை மன்னிக்க முடியாத குற்றங்கள். நாணயம், விஸ்வாசம், பொறுப்பு, தன்மானம், திறமை, வலிமை ஆகியவை கலந்துவரும்.
ஒரு கம்பெனி நொடித்துப் போனால், அதில் முக்கியஸ்தர் மேற்சொன்னதுபோல் பொறுப்புள்ளவரானால் கம்பெனி நிமிரும். தனி மனிதனுக்கும் அதுவே சட்டம். அப்படி மாறிவரும்பொழுது கெட்ட குணங்கள் தொடர்ந்திருப்பதால் வரும் நல்லது பலிக்காது.
தோட்டத்தில் வேலை செய்பவன் அடங்காப்பிடாரி. வாயாடி. கெட்ட நடத்தைக்குப் பேர் போனவன். எந்தத் தப்பு செய்தாலும், சரி எனச் சாதிப்பான். இவனை எங்கும் நெடுநாள் வைத்திருக்க மாட்டார்கள். பெண்கள் இவனிடம் தப்ப முடியாது. ஆனால் திறமை அதிகம். யோசனை அதிகம். பொறுப்புணர்ச்சியுண்டு. தனக்குரிய வேலையில்லை என்றாலும், தன் கண்ணில் பட்டதைக் காப்பாற்றுவான். எவரும் இவனுடைய பொறுப்பைக் கண்டு கொள்வதில்லை. செய்தால் ஏற்றுக்கொள்வார்கள். வாய் வார்த்தையும் நல்ல சொல்லால் கண்டுகொள்ள மாட்டார்கள்.
40 மூட்டை தான்யம் மழையில் நனைந்து அழிவதை, செய்ய வேண்டியவர்கள் மறந்து போனபொழுது, பொருள் அழியக்கூடாது என ஒரு சிறுவனை வைத்துக்கொண்டு காப்பாற்றினான். பொருளுக்கு உரியவர் வந்து பொருள் அழிந்து போயிருக்கும் என நினைத்தபொழுது, (உரியவர் எவரும் பொறுப்பில்லாமல் போய்விட்டதால்) யாரோ காப்பாற்றினார்கள் எனக் கண்டும், அதைப் பாராட்டவில்லை. பிற்காலத்தில் இவன் அன்னையை அறிந்தான். எந்த வகையிலும் இவனுடைய போக்குக்கு அன்னை ஒத்து வரவில்லை. மனம் குரங்காக இருக்கிறது. வேலை செய்தும் சாப்பாடு இல்லை. அவனையும் மீறி அன்னை அவன் வாழ்வில் நுழைந்தார். உள்ள வேதனை அதிகமாயிற்று. பல விஷயங்கள் நடக்கின்றன. எதுவும் பிடிபடுவதில்லை. நல்லதும் ஏராளம். கெட்டதும் ஏராளம். மனம் அன்னையை அறிய விருப்பப்படவில்லை. சுபாவம் தலை தூக்கியுள்ளது. சுபாவத்திற்குரிய பலன் தவறாது கிடைக்கிறது!
தினசரி 15 ரூபாய் கூலி. இவன் தன் திறமைகளை மட்டும் ஏற்று, மற்றதை விலக்க முன் வந்தால் 15 ரூபாய், 150 ரூபாய் ஆகாது, 1500 ரூபாயாகும். இவனறியான். இவன் மாறாவிட்டாலும், நிலைமை மாறியது. இவனுக்குள்ள திறமைகட்கு வாழ்க்கை பரிசளிக்கும் என்று இவன் மனதில் பட்டது. மனம் மாற்றத்தை ஏற்றது. மனப் போராட்டம் பெரியது. போராட்டம் ஆரம்பித்தவுடன், பெரிய அதிர்ஷ்டம் பலித்துவிட்டது. படிப்பு, அனுபவம் இல்லையென்றாலும், மற்றவர்கள் விட்டுவைப்பார்களா? எனத் திகில் பற்றியது. கொடுத்ததை அன்னை எடுக்கமாட்டார். பயத்தைப் பாராட்டாமல் பக்தியைப் பாராட்ட வேண்டும் என்று அவனிடம் யார் சொல்வது?
****
- Login to post comments