Skip to Content

07.நமக்குத் தெரிந்தது - குறைவு; நமக்குத் தெரியாதது - அதிகம்

நமக்குத் தெரிந்தது -குறைவு

நமக்குத் தெரியாதது - அதிகம்

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவாற்றியவர்: ரத்தினவேலு

சொற்பொழிவாற்றிய தேதி: 01. 06. 2014

கண் பார்வை மூன்று மைல் வரை தெரியும். நடைமுறையில் முப்பது அடி தெரியும். பார்வைக்கு அப்பாற்பட்டது முப்பது மைல், மூவாயிரம் மைல், வானவெளியில் மூன்று லட்சம் மைல். மனிதன் புலன்களால் செயல்படுகிறான். புலன்கள் சிறியவை. மனிதன் செய்த டெலிஸ்கோப்பும், டெலிவிஷனும் பார்வையையும் ஒளியையும் முடிவின்றி வளர்த்து விட்டன. இறைவனின் சிருஷ்டியான உலகம் பெரியதினும் பெரியது. இதுவரை வாழ்வில் நாம் எழுதிய நம்பர் லட்சம், கோடியாகும். நம்பரால் எதை எழுத முடியும், எத்தனை இலக்கமுண்டு என அறிவுக்கும், கற்பனைக்கும் எட்டாது. பொறுப்பான மனிதன் திறமையாக வேலை செய்து அதிர்ஷ்டமாக அவன் ஆயுளில் சாதித்தது சொத்து, வீடு, நிலம், பணம், பதவி ஆகியவை பெரியது. அதை உலகிலுள்ள சொத்து, நிலம் பதவியுடன் ஒப்பிட முடியுமா? திரௌபதி உடுத்தியிருந்த புடவை சிறியது. கிருஷ்ண பரமாத்மா கொடுத்த பரிசு பெரியது.

சிறியதை finite எனவும் பெரியதை infinite எனவும் கூறலாம். ஒரு கோடு போட்டால் அது பத்து அங்குலமுள்ள சிறியது. அதை இருமுனைகளிலும் நீட்டினால் முடிவில்லை. முடிவற்ற அனந்தமாகும். அது அங்குலம், அடியைக் கடந்த மைல்கணக்காக நீளும். நாம் போடும் கோடு சிறியது. கோடு பெரியது. வாழ்க்கை நோய், வலி, கவலை, வேதனை, கொடுமை என்ற சிறுமைகளையுடையது. இவற்றைக் கடந்து, இவற்றைத் தவிர்த்து, உடல்நலம், சந்தோஷம், இன்பம், ஆனந்தம் ஓரளவு நாம் அனுபவித்துள்ளோம். இவற்றிற்கு எதிரான அளவிறந்த ஆனந்தம் உண்டு. கவலையை நினைப்ப-தில்øல. நினைத்தால் ஆனந்தத்தை நினைப்பேன் என முடிவு செய்து முடிவை அமுல்படுத்தியவர் வெகு சீக்கிரம் இவ்வளவு ஆனந்தம் எங்கிருந்து வந்தது என ஆச்சரியப்படுவார். சோகமே உருவானவர் உண்டு. அவர் சோகத்தை மறப்பது கடினம். பொங்கி வரும் சந்தோஷமுள்ளவரைக் கண்டு சோகத்தை மறந்து அவர் போலிருக்க முயன்றால் சந்தோஷம் ஓரளவு உள்ளே வரும். எவரைச் சந்தித்தாலும் நம்மால் அவர் எப்படி சந்தோஷப்பட முடியும் என அவர் தீவிரமாக நினைக்கப் பயின்றால் சிறிது காலத்தில் இவ்வளவு சந்தோஷமும் என்னுள்ளே புதைந்து கிடந்ததா என வியக்கும்படி அலையலையாக வெள்ளமாக சந்தோஷம் பெருகும். பாரதி அதைத் தையலர் கருணைக்கு ஒப்பிடுகிறார். புண்ணியவாளர் புகழுக்கு ஒப்பிடுகிறார். பெண்ணொளியின் பெருமைக்கு ஒப்பிடுகிறார்.

மனிதன் அறிந்த இன்பம் - சிறியது.
உலகம் பெற்றுள்ள ஆனந்தம் - பெரியது.

அமெரிக்காவில் இருநூறு ஆண்டிற்கு முன் பல பகுதிகளில் ஒரு ஏக்கர் விலை ஒரு டாலர். அதற்கு ஐம்பது ஆண்டுகட்கு முன் சில பகுதிகளில் நிலம் இனாமாகக் கொடுத்தனர். ஒருவருக்கு நூற்று அறுபது ஏக்கர் இனாம் உண்டு. நிலம் வழங்கும் விழாவில் கலந்தவர் பெற்றனர். அதன்முன் அது முன்னூற்று இருபது ஏக்கராகவும், அறநூற்று நாற்பது ஏக்கராகவும் வழங்கப்பட்டது. அறநூற்று நாற்பது ஏக்கர் என்பது ஒரு சதுரமைல். அதற்கும் முந்திய நாட்களில் குடியேற வந்தவர் பரந்த நிலப்பரப்பைக் கண்டனர். நிர்மானுஷ்யமான இடம். தேவைப்பட்டதைப் பெறலாம், எடுத்துக் கொள்ளலாம் என்பது நிலை. இரண்டரை லட்சம் ஏக்கர் எஸ்டேட் அப்படி ஏற்பட்டவற்றுள் ஒன்று. நிலம் அமெரிக்காவில் அந்த நாளில் அளவின்றி இனாமாகக் கிடைத்தது. இன்று அதைவிட அதிக மதிப்புள்ள மார்க்கெட் உலகம் முழுவதும் எவருக்கும் இனாமாகக் காத்துள்ளது. ரயில்வே, நியூஸ்பேப்பர் முதல் இன்று செல்போன் வரை உலக மார்க்கெட் தொழிலதிபர்களை வரவேற்கிறது. இவை ஜட உலகம். அன்னை வாழும் உலகம் சூட்சும உலகம். அதனுள் பிரபஞ்சமே அடங்கும். இன்டர்நெட் இன்று கல்வி பெறும் முறையை கனவேகமாகப் பெருக்கியுள்ளது. ஒரு ஆண்டு கல்வியை அரை ஆண்டிலும், ஒரு மாதத்திலும் பெறும் வசதிகள் எழுந்தன. ஆர்வமும், உழைப்பும், திறமையும், இலட்சியமும் உள்ளவர் இன்று எந்தப் பட்டத்தையும் எடுக்கலாம். எந்த நாட்டுப் பட்டத்தையும் பெறலாம். எவ்வளவு உயர்ந்த படிப்பையும் பெறலாம்.

மனித முயற்சி -சிறியது.

உலகம் தரும் வாய்ப்பு - பெரியது.

உலகம் ஏற்பட்ட நாளாக இது உண்மை. கற்றது கைம்மண் அளவு. இன்று அது பெரிய உண்மை. அன்னையிடம் எது வந்தாலும் அது அனந்தமாகும். இன்று உலகம் பகவானைச் சிறிதளவே அறியும். ஐம்பது ஆண்டில் உலகில் முக்கியமான அனைவரும் பகவானை அறிவார்கள் என அன்னை 1972-இல் கூறினார். அது பலிக்கும் நேரம் வருகிறது. நாம் என்பது நம் மனம். மனம் புலன் வழி வெளியிலும், அறிவு மூலம் உள்ளேயும் செயல்படுகிறது. இவை சிறு கருவிகள். பெரியதாக சாதிக்க முடியாது. சாதிக்கக் கூடியதே பெரியது. சாதிக்கும் துறை உலகளவு பெரியது. பெரியது சிறியது என்பது புற அம்சமானாலும், அது நம் மனப்போக்கால் நிலைநிறுத்தக் கூடியது.

கிராமத்து நாட்டாமை ஒரு சிறு சாம்ராஜ்யம். அக்குடும்பங்களில் பிறந்தவர்க்கு அதன் செல்வாக்கு, அதிகாரம் புரியும். அரச பதவியில் இராணுவ அதிகாரமும், நிர்வாகமும் முக்கியமானவை. கஜானா அவர்கள் கையில். அதிகாரம் நேரடியாகச் செல்லும். பணம் அதிகாரத்தை மறைமுகமாகச் செலுத்தும். அதிகாரம் வேறு செல்வாக்கு வேறு. 1639-இல் ஆங்கிலேயர் சென்னை வந்தனர். பிரெஞ்சுக்காரர் அந்த சமயம் புதுவையிலிருந்தனர். ஆங்கிலேயர் இந்தியாவில் முதலில் வந்து தங்கிய இடம் சூரத். நூறு அல்லது நூற்று ஐம்பது ஆண்டிற்குமுன் போர்ச்சுக்கீஸியர் கொச்சி வந்து விட்டனர். வணிகம் இவர்களைக் கொண்டு வந்தது. அவர்கட்கு முக்கிய நோக்கம் வணிகம், பொருள் ஈட்டுவது. டச்சு வியாபாரிகள் இந்தோனேஷியா, தமிழ்நாடு, ஆந்திரா, வங்காளத்தில் வந்து தங்கினர். முகலாய சாம்ராஜ்யம் அழியும் காலம். அந்நிய வியாபாரம் நாட்டில் காலூன்றும் நேரம். இந்த நேரம் இந்திய சரித்திரத்தைப் படித்தவர் பொன்னும், பொருளும், செல்வமும், செல்வாக்கும், சர்க்கார் அதிகாரமும், வியாபார உரிமையும் யார் கையில் எப்படி தவழ்ந்தது என அறிவார். மொகலாய அரசர்கட்கு துபாஷ் (மொழி பெயர்ப்பவர்) என்று வந்த காஷ்மீர் பண்டிட் குடும்பம் நேருவின் குடும்பம். ஆனந்தரங்கம் பிள்ளை புதுவையில் துபாஷ். இவர்கட்கு அந்நிய ஆட்சியுடன் மொழித் தொடர்பு, வியாபாரத் தொடர்பு, நிர்வாகத் தொடர்பு, இராணுவத் தொடர்புள்ள இடங்களில் அதிகாரம் குவிந்தது. குவிந்தது அழிந்தது. சென்னை நகரம் அப்படி ஏற்பட்டதே. கல்கத்தா நாட்டின் தலைநகரமானதும் அவ்வழியே. 1911 முதல் அது டெல்லியைச் சேர்ந்தது.

அன்று போக்குவரத்து குதிரை சவாரி. பணம் பொன் நாணயம். அதிகாரி என்பவர் அதிகாரபதவிக்கு அருகிலுள்ளவர். பெரிய, சிறிய வேலைக்காரர்கள். பெரியவரா, செல்வம் படைத்தவரா, அறிவுள்ளவரா, நாணயமுள்ளவரா என்பதெல்லாம் முக்கியம். ஆனால் எவ்வளவு நெருக்கமானவர் என்பதே மிக முக்கியம். நெருக்கம் பெற்றுத் தரும். திறமை பெற்றதை அனுபவிக்க உதவும். நேர்மையுள்ளவரை திறமை பலிக்கும். நேர்மையான திறமை நெடுநாள் வரும். அது பண்பு. க்ஷத்திரியனுக்கு அரசியல் பவர், வணிகம் செய்பவனுக்கு பணம் பவர் தரும். விவசாயிக்கு நிலம் சொத்து. பவர், கல்வி, ஞானம், ஆதரவால் பெறலாம். உரிமையுடன் பெற முடியாது. சுமார் நூற்று ஐம்பது ஆண்டிற்கு முன், கல்வியால் அரசியலுடைய நிர்வாகப் பவரை, படித்தவன் பெறும் வாய்ப்பு ICS மூலம் ஏற்பட்டது. அது IAS-ஆகத் தொடர்கிறது. இதெல்லாம் உலகம் அனுபவித்தது. அறிந்தது. அவற்றுள் முதன்மையானவை

  • ஆதிநாளில் இராணுவ செல்வாக்கு.
  • பின்னர் அப்பவர் பணத்தைச் சுற்றி வளர்ந்தது.
  • கல்விக்குரிய வாய்ப்பு அதன்பின் ஏற்பட்டது.
  • இன்று பத்திரிகை உலகம், அரசியலுக்கு அது போய் நிலைக்கிறது.

இன்றைய அரசியலை தலைநகரிலிருந்து கவனிப்பவர் அறியும் உலகம் இது. இதன் முன் எவரும் நிகராகாது. இத்துறைகள் கடல் போன்றவை. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பவர் கைமாறி பரிவர்த்தனையால் எல்லா சட்டங்களையும், தர்ம நியாயங்களையும் புறக்கணித்து அதர்மத்தை ஆட்சியில் நிலைநிறுத்த முயல்கின்றனர். லஞ்சம் பெருகி சர்க்காரைவிட அதிக வலுவுள்ளதாக நம் நாட்டில் மாறுகிறது. பழைய நிர்வாகமும், புது ஊழலும் சேர்ந்து புதிய நிலைமை power structure ஏற்படுகிறது. இவையெல்லாம் பரம்பரையாக வருபவை. 1900-க்குப் பின் வேறு ஒரு நிலை சிறிது சிறிதாக வளர்ந்து வந்து unofficial power structure சர்க்காருக்குப் புறம்பாக சமூகத்தில் செல்வாக்குள்ள ‘ஸ்தாபனமாக’ வளர்ந்து இன்று கண்ணுக்குத் தெரியாமல் நிலை பெற்றுள்ளது.

இது சமுத்திரம் போன்றது. இதன் மையம் ஐ.நா. வெளிநõட்டு தூதர் உலகம் இதன் அரங்கம். சர்வதேச ஸ்தாபனங்கள் ILO முதல் FAO வரை உருவாகின்றன. இவை சேவை ஸ்தாபனங்கள். லட்சிய ஸ்தாபனங்கள் வந்தன. ராயல் சொசைட்டி லண்டனிலும், Red Cross International உலகெங்கும் ஏற்படலாயிற்று. ராயல் ஸ்வீடிஷ் அகாடமி நோபல் பரிசு கொடுத்துப் பிரபலமாயிற்று. World Academy அப்படி அறுபது ஆண்டிற்கு முன் ஏற்பட்டதே. 2000-க்கு மேற்பட்ட இது போன்ற NGO-க்கள் இன்று சர்க்கார் சார்பில்லாமல் செயல்படுகிறது. Pugwash, Club of Rome போன்ற புகழ் பெற்ற ஸ்தாபனங்கள் ஏராளம். நடைமுறையில் இவை பெயருக்கானவையே. செயல்பட ஆரம்பித்தால் International Physicians Association for Nuclear Weapons போல அவற்றின் பவர் வெளிப்படும். குரல் உலகெங்கும் கேட்கும். அவை சாதிக்கும் திறமையுடையவை. உலக சர்க்கார் அளவும் சாதிக்கும். சில சமயம் சர்க்கார்களால் முடியாததையும் சாதிக்கும்.

ரோட்டரி, Lion Club சிறு அளவில் செயல்படும். அவை சர்வதேச ஸ்தாபனங்கள். ராமகிருஷ்ண மடம், போப்பாண்டவர், ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் போன்றவை மதச் சார்பாக ஏற்பட்ட ஆன்மீக ஸ்தாபனங்கள். இது போன்று முப்பத்து ஒன்பது வெளிநாட்டு ஸ்தாபனங்கள் அறுபது லட்சம் கோடி ரூபாயை நம் நாட்டு சேவை ஸ்தாபனங்கட்குக் கொடுக்க பெருமுயற்சி செய்கின்றன. உள்ளூரிலும் செயல்படும் அரசியல்வாதி, பொதுநல ஊழியன், சர்ச் பாதிரியார் ஏராளமான செல்வாக்கு உள்ளவர். அவர்களுக்குப் பின்னணியில் கடல் போல லட்சக்கணக்கான கோடிகள் புரள்வதைச் சிலரே அறிவார்கள்.

பணம் செல்லும். அறிவு அதைவிட அதிகமாகச் செல்லும் என்பதை உலகம் இதுவரை எந்த நாட்டிலும் நடைமுறையில் அறியவில்லை. நேர்மைக்கு அதைவிட செல்வாக்குண்டு என்பதை அறிந்தவர் உலகிலிருப்பதாகத் தெரியவில்லை. ஆன்மீக ஞானம் நேர்மையான திறமை பெற்றிருந்தால் இவையனைத்தையும் கடந்த பவர் பெறும் என்பது பகவான், அன்னை கொள்கை. அறிந்தவர் யார், செயல்படுத்துவார் உண்டா எனக் காண்பது பலன் தரும்.

அன்பன் அறிந்தது பிரார்த்தனை பலிப்பது.
அன்னை அருளியது அவன் இலட்சியமெல்லாம் பலிப்பது.
அன்பர் கண்டுகொண்டது - கடுகளவு.
அன்பர் அறிய வேண்டியது - அன்னையின் கருணைக் கடல் போன்றது.

இவற்றையெல்லாம் கடந்த வாழ்வின் உண்மைகளை உலகம் அறியும். இந்தியா ஐநூறு ஆண்டுகட்கு முன் அவற்றால் வாழ்ந்தது இன்று நாட்டின் நினைவிலில்லை. திருவள்ளுவர் கூறினார். நாட்டுப் பழமொழிகள் வலியுறுத்திக் கூறுகின்றன. நடைமுறை அவற்றை நடைமுறையில் கருதுவதில்லை. எது தேவையானாலும் மக்கள் சர்க்காரை எதிர்பார்க்கிறார்கள். சர்க்கார் மின்சாரம் இலவசமாகத் தருகிறது. Gas (சமையல் எரிவாயு) மலிவாகத் தருகிறது. ஏழைகளுக்கு மனை இலவசமாகப் பட்டா தருகிறது. கல்வி இலவசம். ஹாலந்து, பணக்கார நாடுகளில் முதல் இரண்டு இடங்களில் இருந்து வருகிறது. சர்க்கார் டவுன் பஸ்ஸை இலவசமாக்க நினைத்தனர். ஒரு ஊரில் சோதனை செய்தனர். கொஞ்ச நாள் இலவச பிரயாணம் நடந்தது. வழக்கத்தைவிட எட்டு மடங்கு பிரயாணம் பெருகியது. உலகில் எந்த நாட்டிலும் எவரும் வரியைத் தானே உள்ளபடி செலுத்துவதில்லை. இதெல்லாம்

நாம் அறிவது - சிறியது.

மனிதன், குடும்பம், உழைப்பு, திறமை, நேர்மை, பண்பு, ஆன்மீகத் தெளிவுள்ள ஜோதியை ஒருவர் பாராட்டினால், அவருக்குச் செல்வாக்கு, பவர், பணம், பிரபலம், வசதி, சர்க்காரோ, உலகமோ கொடுக்க முடியாத அளவுக்குப் பெருகும். இரண்டு கோடி சொத்தில்லாத இடங்களைத் தேடி நூறு கோடி, ஆயிரம் கோடி, இலட்சம் கோடி, உலக அரசியல் பவர் தேடி வரும் எனத் தெரியாது.

நாம் அறியாதது - பெரியது.

கல்வி பள்ளியில் பெறுவது. கல்லூரி உயர்நிலைக் கல்வியைத் தருகிறது. அறிவாளி அளவு கடந்து படிக்கிறான். அனுபவசாலி காண்பதெல்லாம் கல்வியின் கருவியாகுமாறு பலன் பெறுகிறான். உலகம் நூறு ஆண்டிற்கு முன் இருந்ததை விட நூறு மடங்கு கல்வி பெற்றுள்ளது. இருநூறு ஆண்டிற்கு முன்னிருந்ததை விட ஆயிரமாயிர மடங்கு கல்வி பெற்றுள்ளது. காலையில் எழுந்தவுடன் பேப்பர் படிக்கிறோம். டெலிவிஷன், ரேடியோ செய்தி சொல்கிறது. வார இதழ், மாத இதழ், கணக்கின்றி பரவுகின்றன. படிப்பவர் ஏராளம். படித்தவர் பிறரிடம் கூறுவது அதைவிட அதிகம். 1770 முதல் கலைக்களஞ்சியம் ஏற்பட்டது. இன்று உலகில் பிரபலமாக முப்பது முதல் முந்நூறு வரை கலைக்களஞ்சியங்கள் ஏற்பட்டுள்ளன. இன்டர்நெட் வந்தது. இவற்றையெல்லாம் கடந்து செயல்படுகிறது. நாளுக்கு நாள் பரவுகிறது. அளவு கடந்து விரிவடைகிறது.

கலைக்களஞ்சியங்களில் பேராசிரியர்களே எழுத முடியும். இன்று எவரும் எழுதலாம். எழுத்தின் தரம் குறைய முடியாத ஏற்பாடுண்டு. எவரும் எழுதலாம். தவறிருந்தால் எவரும் திருத்தலாம். Wikipedia வந்து விட்டது. பிரிட்டானிக்காவில் ஆறு லட்சம் கட்டுரைகள் உண்டு. விக்கிப்பீடியாவில் முப்பத்து ஐந்து லட்சம் கட்டுரைகள் வந்து விட்டன. வளர்ச்சி 1, 2, 4, 8, 16, 32 என்ற அடுக்கில் வளர்கிறது.

இதுவரை பெற்றது - சிறியது.
இனி வருவது - பெரியதினினும் பெரியது.

இது physical plane. நாம் வாழும் ஜட உலகில், நடைமுறை யதார்த்தம். இங்கிலாந்தில், அமெரிக்காவில் இயல்பாக மக்கள் பொய் சொல்வதில்லை. நம் நாட்டில் கோர்ட்டில் ‘சாட்சி’ சொல்வதே தொழிலாக ஒருவகை மக்கள் உருவாகியுள்ளனர். எந்தக் கோர்ட்டிலும் ஒரு நாள் கவனித்தால் முக்கியமான விஷயங்களில் சௌகரியமில்லாவிட்டால் வக்கீலோ கட்சிக்காரனோ உண்மை சொல்ல மாட்டான். சுமார் 100% பொய் நடமாடுகிறது. இங்கிலாந்தில் கோர்ட்டில் சத்தியம் செய்தவர் பொய் சொன்னால் இருபது வருஷம் ஜெயில். அந்தச் சட்டம் நம்மூருக்கு வந்தால் மக்கள் பொய் சொல்வது குறையுமா எனக் கூற முடியாது. கோர்ட்டில் ஒரு பொய்யும் சொல்ல முடியாது. எதிரி தண்டனை பெற்றுக் கொடுப்பான்.

பொய் சம்பாதிப்பது - சிறியது.
மெய் சம்பாதிப்பது - பெரியது

என உலகம் அறியவில்லை.

தலைப்பு எளிமையானது என்று தோன்றும். ஒரு பொருளின் உயர்வு வெளிவருவது பல காரணங்களால். அவற்றுள் ஒன்று தெய்வ ஸ்பர்சம். நாம் அதை அன்னையின் ஸ்பர்சம் என அறிவோம். எளிமையான தலைப்பு அன்னை ஜீவியத்தை எடுத்துக் கூற முயன்றால் பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்மலோகப் பிரசித்தி (transcendent) பெறும். அன்னை அருள் செயல்படும் பொழுது பெரும்பாலும் அன்பன் மன நிலை, சூழ்நிலையை ஒட்டியே செயல்படும். இருந்தாலும் ஒரு புது மெருகு இல்லாமலிருக்காது. அது போன்ற தத்துவம்

இதுவரை உலகிலில்லாத அம்சம் ஒன்று பலனில் தெரியும்.

பாரத ரத்னம் இதுவரை அறுபத்து மூன்று வருடங்களில் பிரபலத்தைக் கடந்த பெரிய ஆத்மாக்களுக்கு விஸ்வேஸ்வரய்யா, பகவன்தாஸ் போன்றவர்க்கே கொடுக்கப்பட்டது. பாடகர், நடிகர், கலைஞர் எவரும் பெறவில்லை. M.S. சுப்புலக்ஷ்மி அன்னையை தரிசித்தவர். ஆசிரமத்தில் தங்கி திலீப் குமாரிடம் மீரா பஜன் கற்றுக் கொண்டவர். ஆசிரம தியேட்டரில் பாடியிருக்கிறார். அவர் பாரத ரத்தினம் பெற்றது அது போல. அதுவரை இல்லாத பழக்கம் அது. சுப்புலக்ஷ்மியைக் கருதினால் அது விளங்கும். அன்னையைக் கருதினால் தலைப்பின் மகிமை அதில் வெளியாவது தெரியும். பிரச்சனை தீருவது சிறியது. அன்னையின் ஸ்பர்சம் பெரியது எனப் புரியும். அன்னையை தரிசித்தவர்கள் ஆயிரமாயிரம் பேர்கள். அன்னையை அறிந்தவர் லட்சோபலட்சம். பகவானும் அன்னையும் எதிரான இரு விஷயங்களை ஏற்றனர். பிரபலம் பெறும் பிரசாரத்தை விலக்கினர். தகுதியுள்ள ஆத்மாக்களை விரும்பி வேண்டினர். அன்னார் வாழ்வில் அவற்றுள் செயல்படுவது நம்பிக்கையைக் கடந்தது. பலனை நாம் அளவில் கருதுகிறோம். சிருஷ்டியில் எத்தனை அம்சங்கள் உண்டோ அத்தனை அம்சங்களும் அன்னை அளிக்கும் பலனில் உண்டு.

சிறியது பெரியது எனில் குன்று சிறியது, மலை பெரியது. மதுரை சிறியது சென்னை பெரியது. முதல் மார்க் எண்பதானால் இரண்டாம் மார்க் எழுபத்து எட்டு. முதல் மார்க் நூறு இரண்டாம் மார்க் இருபத்து எட்டு என்ற நிலை அரிது. ஆனால் உண்டு. காங்கிரஸ் தலைவர்களில் நேரு முதன்மையானவர் எனில், இரண்டாம் நிலையில் எவரைக் குறிப்பிட்டாலும் அது போலிருக்கும். ஒலியின் வேகமும் ஒளியின் வேகமும் அப்படிப்பட்டவை. சூரியன் தூரம். நட்சத்திரம் வெகு தூரம் என்பதும் அது போல.

உலகம் தரும் பலன்களைச் - சிறியது என்றும்
அன்னையின் அருள் வரம் - பெரியது

எனவும் கூறும்பொழுது வித்தியாசம் ஏராளமாக இருக்கும். அதுவே உண்மை. ஒப்பிட்டுப்பார்க்கக் கூடியதல்ல. உலகில் அனந்தம், அட்சய பாத்திரம், காமதேனு, கற்பக விருக்ஷம் என்பவை பெரும் கருத்துகள். அனந்தம் என பகவான் கூறுவது உலகமறியும் அனந்தத்தைக் கடுகாகவும், அதை மலையாகவும் மாற்றும். உலகில் காலம், இடம் உண்டு, திறமையுண்டு, குணமிருக்கிறது. ஜடம், சூட்சுமம் உண்டு. உள்ளே, வெளியே என்பவை உண்டு. பகவான் கூறும் அனந்தம் infinity of infinities உலகிலுள்ள எல்லா அம்சங்களும் அனந்தமாகும் நிலை.

அனந்தம் பெரியது.
பகவான் கூறும் அனந்தம் - பிரம்மாண்டமானது.

இன்று நிலத்தில் 50,000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். லட்ச ரூபாயும் சம்பாதிக்கிறார்கள். 1965-இல் முதல் மடை நஞ்சை மூன்று போகம் பயிராகும் எனில் ஆயிரம் ரூபாய் நிகர லாபம் தராது. 400 ரூபாய்தான் சராசரியாகப் பெறலாம். 60 ரூபாய் ஏக்கரில் சம்பாதிக்கும் பயிரை அளவு கடந்து விஞ்ஞான முறைப்படி கவனித்தால் 1000 ரூபாய் தரும் என அன்பர் நினைத்தபொழுது அவர் தன் எண்ணத்தைச் செயல்படுத்தும்முன் மற்றொருவர் அதைச் செய்து 1700 ரூபாய் பெற்றார். இது வாழ்க்கையில் அதிசயம், ஆச்சரியம். அன்னை செயல்பட்ட விதம் வேறு. அவர்கட்கு உரிய பாணியது. புதியதை உற்பத்தி செய்வது அன்னை ஜீவியம் new creation. அன்பர் மேற்கொண்ட முயற்சிக்கு அப்பகுதிகளில் ஏற்கனவே 50,000 ரூபாய் பலன் பெறும் மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அதிலிருந்து பெறும் வாசனை திரவியம், சென்ட் செய்யும் தொழிலை பூனாவில் குடிசைத் தொழிலாக சிலர் நடத்துகிறார்கள். அதன் வருமானம் அன்றைய விலையில் ஆறு லட்ச ரூபாய்.

உலகம் அறியும் பெரியதன் பலன் - சிறியது.
அன்னை தரக் கூடிய சிறியதன் பலனும் - பெரியது.

கல்வித்துறை அரிஸ்டாட்டில் முதல் ரஸ்ஸல்வரை வந்த அத்தனை பெரியவர்களும் முக்கியமாகக் கருதி விவரித்த துறை. கடந்த நூறு ஆண்டுகளாக முறைகள் மாறி மாண்ட்டிசெரி முறை, விளையாட்டு முறை எனப் பிரபலமாயிற்று. இன்று வரை 52 புதிய முறைகள் ஏற்பட்டுள்ளன. கிளண்டோமன் முறையை முதல் ஆண்டு (PKG) மட்டும் நாம் நம் பள்ளியில் பின்பற்றுகிறோம். குழந்தைகட்கு சந்தோஷம். பலன் அதிகம். பெற்றோர் பிரியப்படுகின்றனர். பள்ளி அம்முறையால் பிரபலமாயிற்று. மனப்பாடம் செய்வது நினைவால் சாதிப்பது. படித்துப் புரிந்து கொள்வது அறிவால் சிந்தனையால் சாதிப்பது. அமெரிக்காவில் இதைப் பின்பற்றுவதால் உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பத்து லட்சக்கணக்காக அங்கு வந்து பயில்கின்றனர். அடுத்த கட்டம் ஆர்வமாகப் பயில்வது. எல்லா வல்லுநர்களும் அறியும் முறை. அளவு கடந்து பலன் தருவது. ஆர்வத்தைச் சிறுவர்கட்கு ஏற்படுத்தும் முறையை எவரும் அறியவில்லை. அது தானே வர வேண்டும். தானே வருபவர்கள் மேதையாகிறார்கள். அடுத்த கட்டம் அன்னை முறை. இதை உபநிஷதம் அறியும். எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிய முடியுமோ அதற்குப் பிரம்மம் எனப் பெயர். அந்த ஞானமுள்ளவர் பிரம்ம ரிஷி. அதைப் பெறும் ஆர்வம் ஆத்மாவின் ஆர்வம். வளரும் ஆத்மாவின் ஆர்வம். அதைத் தருவது பெரிய நூல். அது The Life Divine. நான் எழுதிய Outline-இல் அதன் சாயலுண்டு. அது virtual university மூலம் உலகத்திற்குக் கிடைத்தால் literacy என்பது பட்டப்படிப்பாகும்.

நாம் பெரிய விஷயங்களைக் கவனிப்போம். சிறிய விஷயங்களைக் கவனிப்பதில்லை. ஓர் அறையிலிருக்கும் பொழுது அப்பெரிய ஜன்னல் பெரும் வெளிச்சம் தருவது கண்ணில் படாது. அது தரும் செய்தி வேறு. அவ்வறையில் அவ்வொளி வெள்ளத்தில் நிறைந்தவர் ஒருவர் மூலம் இறைவன் ஆத்மாவுள் நுழைவான் என்பது தெரிய நாளாகும். தெரியாமலும் போகும்.

உறக்கம், விழிப்பைக் கடந்த ஜீவன் உண்டு. அது தெரிய தவம் பலிக்க வேண்டும். அவர்கள் தூங்கும்பொழுது உடல் தூங்கும். ஜீவன் விழித்திருக்கும். அன்னை அதை consciousness, விழிப்போடுள்ள உறக்கம் என்பார். உறக்கத்தில் நம் ஜீவன் உடலோடு ஒன்றி தன்னை மறப்பதைப் போல் விழிப்பில் அதற்கடுத்த நிலையிலுள்ள பெரிய ஜீவன், வாழ்வு மற்றும் உடலுடன் ஒன்றாமல் விழித்திருப்பது பூரண யோகம். அந்நிலைக்குரிய ஜீவன் ஒருவர்க்கு ஒரு நாள் விழிக்கும் எனில், அதற்குரிய சூழ்நிலையை பரந்த வெளி, ஒளிவெள்ளம் முன்கூட்டி அறிவிக்கும்.

உறக்கத்தில் விழித்த பெரிய ஜீவன் - சிறியது.
விழிப்பில் விழிப்பான ஜீவன் - பெரியது.

மௌனத்தின் நிலைகள் பல. மௌனம் பெரியது. பகவான் கூறும் மௌனம் மௌனத்தின் பின்னால் உள்ள மௌனம். அக்ஷர பிரம்மத்தின் மௌனம் அனைவரும் அறிவது. பூரண பிரம்மத்தின் மௌனம் பகவான் கூறும் மௌனம். ரமண மகரிஷி ஆஸ்ரமத்திலிருந்து வந்த மௌனி சாது பகவானை தரிசிக்கப் போன பொழுது அவர் அறையில் அதைக் கண்டார். இங்கேயே இருப்பவர், பகவானுடனேயே இருப்பவர்கட்கு அது வழக்கமாகி விடுவதால் தெரிவதில்லை.

ரமணாஸ்சிரம மௌனம் - ஜீவாத்ம மௌனம்
ஸ்ரீ அரவிந்தாஸ்ரம மௌனம் - பரமாத்ம மௌனம்.

பொதுவாகப் பள்ளிக்கூடம், கல்லூரிகளில் புத்திசாலி மாணவர்கள் சிறப்பாகப் படிப்பார்கள். இந்த நூற்றாண்டில் மேல் நாடுகளில் பள்ளி தன் கற்பிக்கும் முறையால் அனைவரையும் சிறப்பான மாணவனாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையால் படிப்பின் தரத்தை உயர்த்தி விட்டனர். முற்காலத்தில் நம் நாட்டில் ஏழையாகப் பிறப்பது தலைவிதி. மேல் நாடுகளில் ஏழையாகப் பிறப்பது தலைவிதி எனக் கூற மாட்டார்கள். ஏழை ஏழையாக இறப்பான் என்பது சட்டம். அமெரிக்கா ஏற்பட்டபின், பிரெஞ்சு, ரஷ்ய புரட்சிகட்குப்பின் ஏழ்மை என்பது சமூகம் ஏற்படுத்தியது. அதை அழிக்க வேண்டும் என்றனர். அமெரிக்காவிற்குச் சென்றவர் ஐரோப்பாவில் பிறருக்காக உழைத்தனர். அமெரிக்காவில் பிரபுக்களில்லை. நிலம் எவருக்கும் சொந்தமில்லை. பயிரிட்டவன் பலனை அனுபவிக்கிறான். ஒருவனுடைய உழைப்பு பிறருக்குப் போகாது. எனவே ஏழ்மை எளிதில் அழிந்து விட்டது. இந்தியாவில் ஏழ்மைக்கு மேலும் ஒரு காரணம். அது ஜாதி. தலைவிதி. சுதந்திரத்திற்குப் பின்தான் ஜாதி பின்னணிக்குப் போய் ஏழைக்கு உரிமையும் உயிரும் வந்தது. பசுமைப் புரட்சியில் விவசாயி விழிப்படைந்தான். நான் ஏழையாகப் பிறந்து ஏழையாக இறக்கப் போவதில்லை. எனக்கு உயர்ந்த வாழ்வு வேண்டும். படிப்பு வேண்டும். நவீன சாதனங்கள் தேவை என விழித்துக் கொண்டான்.

சுதந்திரம் கொடுத்தது - சிறியது.
பசுமைப் புரட்சி அளித்தது - பெரியது.

மூட நம்பிக்கையை அறிவாக உலகம் கருதிய நாட்கள் உண்டு. அறிவு ஏற்படும் முன் வாழ்வு நிம்மதியாக இருப்பது அவசியம் என்பதால் அறிவு அதையொட்டி எழுந்தது. வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வது என்பது அறிவு என நினைத்ததால் ஐரோப்பியர் சர்ச்சுக்கு அடிமையாயினர். இந்தியர் கர்மம், தலைவிதிக்கு அடிமையாயினர்.

மூட நம்பிக்கை அளித்த வாழ்வு - சிறியது.
மன வளர்ச்சி தந்த வாழ்வு - பெரியது.

இவற்றூடே எல்லா நாடுகளிலும், எல்லா நூற்றாண்டுகளிலும் கல்வியின் பங்கு பெரியதாயிற்று. ஆதிகாலம் தொட்டு கல்வியிருந்தது. அரசகுமாரர்கள் கல்வி பயின்றனர். செல்வர் வீட்டுச் சிறுவர்கள் பயின்றனர். பதவி, நிர்வாகம், அரசியல் அவர்களிடமிருந்தது. கல்வி 1800-க்குப் பின் அனைவருக்கும் உண்டு என ஒவ்வொரு நாடாகப் பரவ ஆரம்பித்தது. சைனா மட்டும் 2000 ஆண்டாகக் கல்வியைப் போற்றி கல்வி கற்றவர்களைப் பதவியிலிருத்தியது. பழம்பெரும் நாகரீகங்களான எகிப்து, கீரீஸ், பாரசீகம், அட்லாண்டா, மாயன் ஆகியவை ரோமாபுரி போல் அழிந்தன. சைனாவும், இந்தியாவும் அழியவில்லை. கல்வி சைனா அழிவதைத் தடுத்தது. ஆன்மீகம் இந்தியாவைக் காப்பாற்றியது.

கல்வி தரும் பாதுகாப்பு - சிறியது.
ஆன்மீகம் தரும் பாதுகாப்பு - பெரியது.

மனிதன் மனத்தால் உலகை அறிகிறான். ஆன்மீகம் ஆன்மாவில் உலகை அறியும். மனம் ஜட உலகை அறியும். ஆன்மா சூட்சும உலகை அறியும். வான சாஸ்த்திரத்தை அறிவால் எழுத முடியாது. நட்சத்திரங்களுக்கும் மனித வாழ்வுக்கும் தொடர்புண்டு என மனம் அறியாது, ஏற்காது. அது சூட்சும அறிவு. தான் நட்ட மரத்தை ஒருவர் வெட்டினால் நட்டவனுக்கு உயிர் போகிறது எனக் காட்டில் வாழ்பவன் அறிவான். ஜாதகம், ஜோஸ்யம், கைரேகை எல்லா நாடுகளிலும் உண்டு. இந்திய சாஸ்த்திரம் சக்தி வாய்ந்தது. அதை எழுதியவர் ரிஷி. அறிவால் வகுக்கக்கூடிய சாஸ்த்திரமல்ல அது. வெள்ளிக் கிழமையில் பிறந்தவனுடைய அம்சம், அஷ்டமியில் பிறந்தவன் அம்சம் அறிவுக்கெட்டாது. ஜாதகம் பெரிய சாஸ்த்திரம். அது சொல்வது சரி. உலகம் மாறும்பொழுது மக்கள் மனநிலை மாறுகிறது. Consciousness rises. ஒரு காலத்தில் எழுதிய சாஸ்த்திரம் அந்தக் காலத்திற்குப் பொருந்துவது போல் மக்கள் மனநிலை, வாழ்வு நிலை மாறிய பின் பொருந்தாது. பொருந்த வேண்டுமானால் இன்று அந்த சாஸ்த்திரம் எழுத வேண்டும். அமெரிக்காவில் பல வகையாக அது போல் எழுதுகிறார்கள். எதுவும் நம் பழைய சாஸ்த்திரம்போல் முழுமையாகச் சரி வராது.

ஜாதகம் கூறுவது சரி - சிறியது.
அன்னை கூறுவது சரி - பெரியது.

ஒரு ஜோஸ்யர் தினமும் வரும் ஓட்டலில் பழக்கமான சர்வர் கையை தற்செயலாகப் பார்த்தார். ‘உன் கை அதிர்ஷ்டமான கை. என்னிடம் காட்டு. நான் விபரம் சொல்கிறேன்’ என்றார். அவன் விபரம் அறிந்தவன். ‘அதிர்ஷ்டம் எனக்கு வந்தால் இரண்டு இட்லிக்குப் பதிலாக நாலு இட்லி கிடைக்கும்’ என்றான். அதிர்ஷ்டம், படிப்பு, தரித்திரம், உத்தியோகம் காலத்தைப் பொறுத்து மாறும். மனிதனுக்கேற்றவாறு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் என்பது விவேகம். அவனுக்கு அந்த விவேகம் உண்டு. அந்த நாளில் பணக்காரனை இலட்சாதிபதி என்பார்கள். கோடீஸ்வரன் பல ஊர்களில் இருக்க மாட்டார்கள். இந்த நாளில் டவுனில் ஒரு வீடிருந்தால் அவன் கோடீஸ்வரனாகி விடுகிறான். நூறு கோடிக்குக் குறைந்த செல்வம் இன்றைய நகரங்களில் எடுபடாது. அமெரிக்காவில் super rich என்பவர் $25 மில்லியன் உடையவர். அது 125 கோடி ரூபாயாகும். அடி மட்டம் எப்படியிருந்தாலும் உயர்நிலையில் நாட்டில் பண நிலை வெகுவாக உயர்ந்து விட்டது. இது காலம் தருவது.

மனித உழைப்பு தருவது - சிறியது.
காலம் தருவது - பெரியது.

மேல் நாடுகளில் மில்லியன் போய் பில்லியன் வந்தது. இப்பொழுது அரசு சம்பந்தமாக டிரில்லியன் அடிபடுகிறது. ஒரு மில்லியன் டாலர் என்பது ஐந்து கோடி. ஒரு பில்லியன் டாலர் 5000 கோடி. ஒரு டிரில்லியன் டாலர் என்பது 40 இலட்சம் கோடி ரூபாய்.

விவசாயம் நிலத்தால் கொடுத்தது - சிறியது.
வியாபாரம் மார்க்கெட்டால் கொடுப்பது - பெரியது.

Internet, Web வந்தபின் மார்க்கெட் கம்ப்யூட்டருக்கு வந்து விட்டது. அமெரிக்க ஜனாதிபதி எலக்ஷனுக்கு நாலு பில்லியன் டாலர் செலவானதாகக் கணக்கு. மக்களாட்சி மார்க்கெட் தரும் பணம் மூலம் பணத்தின் ஆட்சி (plutocracy)யாக மாறுகிறது. இது எவருக்கும் நல்லதல்ல. நீடிக்காது. நாகரீகத்தின் மையம் மனிதன். பணமில்லை. மனிதன் வாழ்வு மையமாகாமல் நாகரீகம் நீடிக்காது.

பணம் கொடுப்பது - சிறியது.
மனிதன் தருவது - பெரியது

என்ற ஞானம் ஏற்பட்டு, ஏற்பட்டதை ஏற்று உலகம் செயல்பட வேண்டும் என்பது இன்றைய இலட்சியம். இதை உலகுக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை. ஏற்பது மக்கள் கடமை. அறிவில் சிறந்தவர் ஏற்றால் அனைவரும் ஏற்பார்கள்.

**********

 

ஜீவிய மணி
 
அன்னையின் யோகம் சித்திக்கச் சுபாவம் மாற வேண்டும்; அன்னையை ஏற்றுக் கொண்டால்
இதுவரை பலிக்காத பிரார்த்தனைகள் பலிக்கும் என்ற இரண்டையும் அறிவோம். யோகம் பெரியது. அன்றாடப் பிரார்த்தனை சிறியது. இவற்றிடையே உள்ள நிலையை அதிர்ஷ்டம் எனலாம். பக்தனால் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும்.
சுபாவம் மாறினால் யோகம் சித்திக்கும்.
அன்னையிடம் வந்தால் பிரார்த்தனை பலிக்கும்.
மனம் மாறினால் அதிர்ஷ்டம் வரும்.
 



book | by Dr. Radut