Skip to Content

11. பூரண யோகம் - முதல் வாயில்கள்

பூரண யோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(20) பிரம்மம், புருஷன், ஈஸ்வரன், மாயா, பிரகிருதி, சக்தி ஆகிய அனைத்தும் ஒன்றே என்ற அனுபவம்.

தத்துவம் தத்துவமாகப் புரிவது யோகம் செய்யும் சாதகர்க்குரிய அனுபவம். தத்துவம் நடைமுறையாகப் புரிவது ஒரு வகையில் அதைவிடப் பெரியது எனினும், எளிய அன்பர்கள் அதை மட்டும் காண முடியும்.

இந்து மதப் பரம்பரையில் பிரம்மம், மாயாஎன்பது புருஷப் பிரகிருதிக்கு எதிரானதுஎனக் கருதப்படுகிறது. இந்த மூன்று தத்துவங்களில் எதுவும் மற்றதை ஏற்பதில்லை. ஸ்ரீ அரவிந்தம் இந்த மூன்று தத்துவங்களும் ஒரு கொள்கையின் 3 தோற்றங்கள் எனக் கூறுகிறது. ஏதாவது ஒரு வகையில் நமக்கு அது தட்டுப்படுமானால், நமக்கு ஸ்ரீ அரவிந்தம் பலிக்கும் என்பது இக்கட்டுரை.

சும்மாயிருந்து சுகம் பெறும் ஞானி, பக்தனை கூத்தும் பாட்டும் பக்குவமற்ற பக்தனுக்குடையதுஎன்றும், கர்மம் வளர்ச்சியடையாத ஆத்மாவுக்குரியதுஎனவும் கூறுகிறான். ஞானமும், பக்தியும், கர்மமும் சேர்ந்ததே வாழ்வு, எதுவும் விலக்கன்றுஎன்பது ஸ்ரீ அரவிந்தம்.

கைதானே மனிதன் கால் அதில் சேர்ந்ததில்லைஎன நினைத்து காலை வருத்தினால் பாதிக்கப்படுவது மனிதன். அவனுள் கையொரு பகுதி. தமிழ்நாடும், கர்நாடகாவும் இந்தியாவின் பகுதிகள். அவை சண்டையிடுவது நாட்டைப் பாதிக்கும். நம் அன்றாட வாழ்வில் பிரம்மமும், புருஷனும் எங்கு காணப்படும்? நேரடியாக உதாரணம் எழுதுவது முடியாது.

5 வயதுக் குழந்தை வழிதவறி வந்து தடுமாறுவது நம் கண்ணில் பட்டால் நாம் அனுதாபத்தால் அக்குழந்தையைப் பெற்றோரிடம் சேர்க்கிறோம். அது நல்ல குணம். என் குழந்தை இதுபோல் வழி தவறினால் யாராவது உதவக்கூடாதாஎன நான் நினைப்பதுபோல், இப்பொழுது நினைவு எழுவது அனுதாபத்தைவிடச் சிறந்தது. தத்துவப்படி பிரம்மமும், புருஷனும் ஒன்றுஎன்ற கொள்கை மனத்தில் உணர்வாக அப்படி எழுகிறது. ஒலிம்பிக்கில் ஓர் இந்தியன் பரிசு பெற்றால் அது நான் பெற்ற பரிசாக நினைப்பது புருஷனும், ஈஸ்வரனும் ஒன்றுஎன்ற கொள்கை என் மன உணர்வாக எழுகிறது. ஒலிம்பிக்கில் யாரோ ஒருவன் 100-yards ஓட்டத்தில் புதிய ரிகார்ட் ஏற்படுத்தியபொழுது, நான் பெருமிதம் அடைந்தால் அது, பிரம்மம், புருஷன், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் ஒன்றேஎன என் மனம், உணர்வு அறிவது எனப் பொருள்.

உலகம் ஒன்று என்பதை பிரம்மம் முதல் நிலையிலும், புருஷன் இரண்டாம் நிலையிலும், ஈஸ்வரன் மூன்றாம் நிலையிலும் உணர்கிறான். இவை மூன்றும் ஒன்றுஎன உணர்வதில் 3 நிலைகள் உள்ளன.

  • நமக்கு வேண்டியவரும் நாமும் ஒன்றேஎன்பது ஒரு நிலை.
  • நமக்கு அறிமுகமில்லாதவரும் நாமும் ஒன்றேஎன்பது அடுத்த உயர்ந்த நிலை.
  • நமக்கு வேண்டாதவரும் நாமும் ஒன்றேஎன்பது மேலும் உயர்ந்த நிலை.
  • உலகமும் நாமும் ஒன்று, என் எதிரியும் நானும் ஒன்று, என்னை அழிப்பவனும் நானும் ஒன்று, என் மானம், மரியாதை, உயிர், உடலை அழிக்கக் கங்கணம் கட்டியவனும் நானும் ஒன்று என்பவை ஐக்கியத்தின் நிலைகள்.
  • எதிரி பதவிக்கு வந்தால் உறவு கொண்டாடி, உதவி கேட்பவர் உண்டு.

    அவர்கள் ஆதாயத்திற்காகச் செய்வதை நாம் இலட்சியத்திற்காகச் செய்ய வேண்டும்.

  • அரசியலில் பெரிய விஷயங்களிருப்பதால், பகைமை பாராட்ட முடிவதில்லை.
  • பலனுக்காகப் பகைமை பாராட்டாததுபோல், பிரம்மம், புருஷா, ஈஸ்வரன் ஒன்றுஎன்ற ஞானத்தெளிவால் இலட்சியத்திற்காக நாம் எளிய மனிதன் போல் நடக்க முடிவது யோக அம்சம் செயல்படுவதாகும்.
  • நாம் ஆதாயத்திற்காகச் செயல்படுகிறோமா, இலட்சியத்திற்காகச் செயல்படுகிறோமாஎன்பதை மனம் தெளிவாகக் காட்டும்.

    அது யோகத் தெளிவானால், யோகம் பலிக்கும். 

(21) உலகை சிருஷ்டித்தது மனமில்லை, சத்தியஜீவியம்.

மனம் என்பது பிரம்மா. பிரம்மா உலகை சிருஷ்டிக்கவில்லை. பிரம்மா பிறந்த இடமான சத்தியஜீவியம் உலகை சிருஷ்டித்தது என்பது ஸ்ரீ அரவிந்தம். இது நமக்குப் புலப்படுவது எப்படி?

  1. கர்மம் வாழ்வில் பலிக்கவில்லைஎனில்,
  2. மனிதன் தன் சுபாவத்திற்கு மாறாக, அல்லது எதிராகச் செயல்பட்டால்,
  3. புயல், பூகம்பம், எரிமலை வெடிப்பது பிரார்த்தனைக்குக் கட்டுப்பட்டால்,
  4. இதுவரை நம் அனுபவத்திலில்லாதது, நம் அனுபவத்திற்கு எதிரானது நம் வாழ்வில் அதிர்ஷ்டமாக, அருளாக நடந்தால்
  5. ஆண்டவன் கை அரணாக விபத்திலிருந்து தடுத்துக் காப்பாற்றினால்,

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மனத்தில், "இதுவரை நாமறிந்த உலகம் இதுவல்லவே" என்ற கருத்து உதயமானால், மனம் தலைப்பைக் கருதுகிறதுஎனப் பொருள். அப்படிக் கருதும்பொழுது ஒளி மனத்தில் உதயமானால் அவ்வொளியின் நிறத்திற்கு ஆன்மீகப் பொருள் உண்டு.

வெண்மையான ஒளி
சத்புருஷன், அன்னை Supreme
எனக் குறிப்பிடுவது.
பொன்னொளி
சத்தியஜீவியம்.
நீல ஒளி
கிருஷ்ணபரமாத்மாவின் தெய்வீக மனத்தின் நிறம்.
இதை அன்னை ஸ்ரீ அரவிந்தரது ஜோதி என்கிறார்.
ஆசிரமக் கட்டிடங்கள் இப்படிக் காட்சியளிக்கும்.

பொன்னொளிக்கு இந்த ஞானத்தைத் தரும் திறன் உண்டு. புயல் வேகமாக உருவாகும்பொழுது, ரேடியோ புயல் 150 மைல் வேகத்தில் எழுகிறதுஎன அறிவிக்கிறது. இதைக் கேட்டவுடன் தியானத்தில் அமரும் பக்தர் உள்ளே புயல் வீசுவதைக் காண்பார். தியானத்தால் உள்ளே எழும் புயல் அடங்கினால் வெளியே புயல் அடங்கும். விலகிப் போகும்.

  • பகவான் ஸ்ரீ அரவிந்தரை ஏற்றவர் சூழலில் பகவான் சக்தி அவரையறியாமல் செயல்படும். பூகம்ப அதிர்ச்சி அவரை வந்து தொட்டவுடன் அடங்கி, அமைதியாகி, அழியும்.
  • ஜாதகத்தில் இந்த 30ஆம் வயதில் தவறாது 6 மாதம் படுக்கையாக இருக்க வேண்டும்என்று கூறியிருந்தால், அச்செய்தியை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், கண்டத்தின் சுவடேயறியாமல் அது விலகும்.

இந்த எண்ணம் - சத்தியஜீவியம் உலகைச் சிருஷ்டித்தது - மனத்தில் தோன்றினால், அவ்விடத்தில் பொன்னொளி ஒரு துளி எழும். அது பகவான் ஸ்ரீ அரவிந்தர் உருவமாக மாறும். நமக்கு யோகம் பலிக்கும் அடையாளம் இதுஎன ஓர் அன்பர் அறிந்து கொள்ளும் தடயம் இது.

எல்லா அன்பர்களை நோக்கியும் வரும் சித்திகள் இவை. ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவன் Ist class முதல் வகுப்பில் பாஸ் செய்தால், அவன் பெறப்போகும் M.A. பட்டத்திற்கு அக்கல்லூரி ஆசிரியராகும் வாய்ப்புண்டு என அவன் அறியலாம். பல்கலைக்கழகத்தில் முதலாவதாக, Ist classஇல் பாஸ் செய்த மாணவன் LICஇல் கிளார்க்காகச் சேர்ந்தான். அவனுக்கு அப்பல்கலைக்கழக ஆசிரியராகும் வாய்ப்புண்டுஎனத் தோன்றவில்லை. அதை ஒருவர் எடுத்துச் சொன்னபிறகு, அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது. இக்கட்டுரைகள் அது போல் தகுதியுள்ளவர்கட்கு சொந்தமாக அது தோன்றவில்லையெனில், அவர் தகுதியை எடுத்துக் கூறுபவை.

தொடரும்.....

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உயர விரும்புபவனுக்கு, தெம்புக்கு பஞ்சமில்லை. விருப்பம் தேவையான தெம்பை உற்பத்தி செய்ய வல்லது.
 
 
*******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையின் கோட்பாடுகளை ஜீவன் ஏற்பதால் ஏற்படும் மனநிலை, அன்னையின் சக்திக்குரிய கருவி. புற ஸ்தாபனமன்று.
 
ஜீவன் ஏற்ற மனநிலையே கருவி.
 
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
விஷயத்தை நாடுபவன், தோற்றத்தைப் போற்றுபவனைத் திருப்திப்படுத்த முயன்றால் காரியம் கெடும்.
 
 
******



book | by Dr. Radut