Skip to Content

09. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 

  1. ஒரு காலத்தில் புனித உணர்வுகள் வேறொரு காலத்தில் கேலிக்குரியவை. உணர்வுகள் குறிப்பிட்ட காலத் தேவைகளால் நிர்ணயிக்கப்படுவதால் யுகாந்திரப் பண்புகள் அல்ல.

    புனித உணர்வும் புரையோடிப் போகும்.

    தலைமுடி, உடை, உணவு, வீட்டின் கட்டமைப்பு, பெரியோர் சிறியவர் உறவு, மரியாதை, மானம், அந்தஸ்து ஆகியவை காலத்தால் ஏற்பட்டவை. காலம் மாறினால் அவை மாறும். சில விட்டுப் போகும். மற்றவை கேலிக்குரியவையாகும்.

    புனிதம் என்றும் புனிதமானதே.
    அது காலத்தைக் கடந்தது.
    காலத்தால் ஏற்படுபவற்றால் அவை வெளிப்படா.

    • இரண்டு கட்டு வீடு, வாசல், கூடம் பெரியதுஎன்பது வீட்டு அமைப்பு.
    • திண்ணைப் பள்ளிக்கூடம் பிரசித்தி பெற்றது.
    • முந்திரி கணக்கு பிரபலம்.
    • லட்டு, ஜிலேபி, அற்புதமான இனிப்பு.
    • கட்டுக் குடுமி முக லக்ஷணம்.
    • 9 கஜம் புடவை அந்தஸ்து தரும்.
    • நெற்றி நிறைய விபூதி, திருமண் முக அலங்காரம்.
    • பஞ்சகச்சம் புருஷ லக்ஷணம்.
    • விவசாயம் புனிதத் தொழில்.
    • இன்ஜினியர், டாக்டர், மனு நீதிப்படி சூத்திரத் தொழில்.
    • இராணுவம் க்ஷத்திரியனுக்குரியது.
    • சர்க்கார் வேலை வைஸ்யனுக்குரியது.
    • கலப்புத்திருமணம் ஊரைவிட்டு ஓடி ஊருக்கு வெளியில் குடியிருக்கச் செய்யும், சண்டாளன் எனப்படும்.
    • கடல் கடந்து சென்றால் ஜாதிப் பிரஷ்டம் செய்வார்.

      இன்று காலம் மாறிவிட்டது.

    • திண்ணையும், வாசலும், கூடமும் போய் எத்தனை பெட்ரூம் என்று கேட்கிறார்கள்.
    • திண்ணையே மறந்துவிட்டது, அங்கே பள்ளிக்கூடமில்லை.
    • முந்திரிக் கணக்கில்லை, கால்குலேட்டர் வந்துவிட்டது.
    • கேக்கும், பிஸாவும் பிரபலமானவைகள்.
    • குடுமி வைத்தவரைக் காணமுடியாது. கண்டால் கேலிக்குரியவர்.
    • புடவையே இல்லை, சுரிதார் வந்துவிட்டது.
    • ஜீன்ஸ் வந்தபிறகு வேட்டிக்கு வேலையில்லை.
    • விவசாயப் பட்டம் பெற்றவர் உள்பட நிலத்துப் பக்கம் போகமாட்டார்கள்.
    • 20 இலட்சம், 40 இலட்சம் கொடுத்து டாக்டர் படிக்க, இன்ஜினியர் கல்லூரியில் சேர முயல்கின்றனர்.
    • இராணுவம் அனைவர்க்கும் உரியது.
    • சர்க்கார் வேலை கிடைத்தால் போதும்என்பது நிலை. ஜாதியே தேவையில்லை.
    • கலப்புத்திருமணம் தங்க மெடல் பெறுகிறது.
    • அமெரிக்கா போவதே இலட்சியம்.

      நட்பு, நாணயம், கற்பு, விஸ்வாசம், மரியாதை, மானம், பக்தி, தெய்வ பக்தி ஆகியவை நிலைக்கும். அவை உருமாறலாம். அதன் அர்த்தம் அழியாதது. அவை தோற்றத்திற்குரியவையல்ல. உள்ளுறை விஷயமாகும்.

  2. சுபாவத்தைக் கட்டுப்படுத்துவது பலன் தாராது. சுபாவம் முழுமையானது. அதைக் கட்டாயப்படுத்தும் எண்ணம் அதன் சிறு பகுதி. பகுதிகளின் நிர்ப்பந்தத்தைமீறி முழுமை தன்னைத் தன் நிலைக்குக் கொண்டு வரும்.

    பெரியது சிறியதைமீறி நிறையும்.

    கர்மத்தை மீற முடியாது, சுபாவம் மாறாது. சுபாவத்தை மாற்ற முயன்றால் முடிவில் சுபாவம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். நம் முயற்சி பலன் தாராது.

    • சிருஷ்டி என்பது சுபாவம், ஸ்வரூபம்.
    • கருமிக்குக் கொடுப்பது சிரமம்.
      தாராள மனப்பான்மையுள்ளவனுக்குக் கொடுக்காமலிருப்பது சிரமம்.
    • அவசரப்படுபவனுக்குப் பொறுமை வாராது.
      நிதானமானவனுக்கு அவசரம் தலைவலி.
    • பிடிவாதக்காரன் விட்டுக்கொடுக்கமாட்டான்.
      அனுசரிப்பவன் பிடிவாதம் செய்ய சங்கடப்படுவான்.
    • படிப்பு வாராதவனுக்குப் படிப்பது சிரமம்.
      படிக்க ஆர்வமுள்ளவனுக்கு படிக்காமலிருக்க முடியாது.
    • சுயநலமி எவருடைய துன்பத்தாலும் அசையமாட்டான்.
      இளகிய மனமுள்ளவர் எவர் துன்பத்தையும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்.
    • அதிகாரம் செய்பவன் கொடுமை செய்வதை ரசிப்பான்.
      அது சுபாவத்திலில்லாதவன் கொடுமை செய்யச் சொன்னால், அதைக் கொடுமையாகக் கருதுவான்.
    • பொய்யனுக்கு மெய் வாராது.
      பொய் சொல்லியறியாதவனுக்கு பொய் சொன்னால் மண்டை வெடித்து விடும்.
    • பண்பான ஊரில் வரும்விருந்தாளியைச் சாப்பிட்டுவிட்டு வரச் சொல்ல நாக்கு, கூசும்.
      பண்பற்ற ஊரில் எவரும் சாப்பிட அழைக்கமாட்டார்கள்.
    • மனிதனுக்கு இயல்பானது வன்முறை. இது ஆன்மீக நாடென்பதால் மகாத்மாகாந்தி அஹிம்சையைக் கைக்கொண்டார். சத்தியாக்கிரகத்தில் ஓரிரு கொலை விழுந்தால் சத்தியாக்கிரகத்தை ரத்து செய்வார். 1946இல் நாடெங்கும் வன்முறை பீறிட்டெழுந்தது. "இயல்பான வன்முறையை மறுத்து அடக்க முயன்றேன். இன்று வன்முறை என்னைப் பழி வாங்குகிறது'' என்றார்.

      மகாத்மா வன்முறைக்குப் பலியானார்.

      வன்முறை மனிதசுபாவம். அதைப் பெருமளவில் தடுக்க முயன்றால் வன்முறை பெரிய அளவில் எதிர்க்கும்என்பது பிரபஞ்ச சட்டம்.
    • பணம் வந்தால் பல மனைவிகளை ஆண்மகன் நாடுவான் என்பது சட்டம், அதைச் செய்யாதவரில்லை.
    • மேல் நாடுகளில் பெண்கள் நம் நாட்டு ஆண்களாகப் பழகுகின்றனர். நம் நாட்டில் அந்த சுபாவம் நாட்டின் ஆன்மீகப் பண்பிற்குக் கட்டுப்பட்டு கற்பென உருவாகி நாட்டிற்குப் பெருமை தேடியது. மனம் அறிவால் விளக்கம் பெற்றால், அதையும் உலகம் ஏற்குமானால் சுபாவமும் அடங்கும். அப்பொழுதும் சுபாவம் அடிப்படையில் மாறாது. அகல்யாபோல் இந்திரனை ஆர்வமாக நாடி அனுபவிக்கும்.
  3. அழைப்பை மீறிய பயம், பெருமுயற்சியை மீறும் எண்ணம் ஆகியவை நம் அடிப்படை நம்பிக்கையை விரிவுபடுத்த வேண்டும் என அறிவிக்கின்றன. அதைச் செய்தால் பயம் மறைகிறது. சரணாகதியை எதிர்க்கும் எண்ணம் சரணடைகிறது.

    அறிய மறுக்கும் பயம் சரணாகதியை எதிர்க்கும் எண்ணம் அடிப்படையில்லையென அறிவிக்கிறது.

    • மனிதன் என்பதற்கு அடிப்படை மனிதசுபாவம், மனிதாபிமானம்.
      இன்றைய சமுதாயத்தில் மனிதாபிமானமில்லாதவர் ஏராளமாக உண்டு.
      இன்ஷூரன்ஸ் பணம்பெற தம் 3 குழந்தைகளைத் தூக்கிலிட்ட தாயார் அழகுக்குப் பேர்போனவர்.
      அடிப்படையேயில்லாதவருக்கும் அருளுண்டுஎன வழங்குபவர் அன்னை.
    • பயந்த சுபாவமுள்ளவர், எதற்கெடுத்தாலும் பயப்படுபவர், அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டால், சமாதி அருகே வந்தால், அன்னையைத் தரிசனம் செய்தால், அன்னைபடத்தைப் பெற்றுக் கொண்டால், அவர் எழுதியதைப் படித்தால்
      • பயம் இருந்த இடம் தெரியாமற் போகும்.
      • தன்னையறியாமல் இதுவரை சிரித்தறியாதது போல் முகம் மலர்ந்து சிரிப்பு எழும்.
      • புகைமண்டலம் விலகுவதுபோல் பீடித்திருந்த பயம் விலகுவது தெரியும்.

      சுமார் 50 ஆண்டுகட்கு முன் ஆப்பிரிக்காவில் ஒருவருடைய நண்பர் இறந்துவிட்டார். மிக நெருங்கிய நண்பர்என்பதால், அவர் இறந்தவருக்குக் கொள்ளி வைத்தார். அதே நிமிஷம் அவர் வயிற்றில் பீதி வந்து நிலையாகக் குடிகொண்டது. சட்டப்படி கொள்ளி வைக்க உரிமையுள்ளவர் செய்வதை அடுத்தவர் செய்ய சட்டம் அனுமதிக்காது. இந்த அன்பர் பாண்டிச்சேரி வந்து தங்கிவிட்டார். அன்னையை பால்கனி தரிசனம், தரிசனம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் ஏராளமான முறை சந்தித்துள்ளார். அவருக்கு அன்னை மீது நம்பிக்கையில்லை. பெரிய கம்பனி முதலாளி. பிறந்த நாளில் அன்னையிடம் நேரடியாக ஆசீர்வாதம் பெறுவார். ஏதாவது ஒரு சமயம் அவர் அன்னையை தரிசிக்க அனுமதி கேட்டால் அன்னை மறுத்து விடுவார். பலகோடி சொத்துள்ளவர். காணிக்கையெனத் தர அவருக்குத் தோன்றியதில்லை. 30 ஆண்டுகட்குமுன் என்னிடம் வந்து தன் வயிற்றைப் புரட்டும் பீதி போக வழியுண்டாஎனக் கேட்டார். எருக்கம் பூவிற்கு தைரியம் எனப் பெயர். அது பயத்தை விலக்கும் என்றேன். அவர் எருக்கம்பூவை எடுத்துக்கொண்டால் பீதி அதிகமாகிறதுஎன்று கண்டார். எருக்கம் பூவை அன்னை படத்தின் முன் 1 நாள் வைத்து மறுநாள் பையில் வைத்துக்கொள்ளச் சொன்னேன். பீதி போய்விட்டது. (20 ஆண்டுகட்கு முன் மலர்களைப் பற்றி இதையே எழுதினேன்).

      • மலர்கள் தவறாது பலன் தரும்.
      • முறையாகப் பயன்படுத்தாவிட்டால் பலனிருக்காது.
      • நம்பிக்கையற்றவர்க்கு, அருளைப் பெறும் தகுதியற்றவர்க்கு மலர்கள் எதிரான பலனும் தரும்.
      • காணிக்கை ஆசீர்வாதம்பெற அவசியம்.
      • மனமும், செயலும், நேர்மையும், அம்சமும் சரியாக இருந்தால் வேறெந்த நிபந்தனையுமின்றி அன்னையின் பெயரைக் கேட்ட அரைநிமிஷத்தில் 50 ஆண்டு பிரச்சினை திடீரென மறையும்.
      • காசு செலவு செய்ய மனமில்லாதவருக்குக் காணிக்கையில்லாமல் பிரார்த்தனை பலிக்காது.
      • மனம் மலர்ந்தால் சிறுகாணிக்கையும் பெரும்பலனைத் தரும்.
      • மனம் மகிழ்ந்து, நெகிழ்ந்து, மலர்பவர்க்குக் காணிக்கையும் தேவையில்லை.
      • காணிக்கை பலன்பெற அவசியமில்லை. சேவை செய்ய அவசியம்.
      • பெறுவது, உணர்வதைப் பொருத்தது.
      • அன்னையிடம் நடக்காததில்லை.
        அன்னையிடம் நடக்காதது அகிலத்தில் வேறு எங்கும் நடக்காது.

தொடரும்....

*******

 

ஜீவிய மணி
 
கடவுளை, கடைத் தெருவில் காண வேண்டும்.

 
 

******

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எந்தப் பிரச்சினை தீரவில்லையோ அவ்விஷயத்தில் நமக்கு அன்னை மீது நம்பிக்கையில்லை.
 
நம்பிக்கை போனால் பிரச்சினை வரும்.
 
 
******

 



book | by Dr. Radut