Skip to Content

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி 

736) சிந்தனை மூளையின் செயல். சிந்தனைக்குரியவன் (மூளையின்) ஜடத்தின் செயலால் நிர்ணயிக்கப்படுவான்.

சிந்தனைக்கு சிறப்பல்ல.

உடலசைவுகளைவிடச் சிந்தனை உயர்ந்தது. அது நம் வாழ்வை உடலிலிருந்து மனத்திற்கு மாற்றும். அதற்கடுத்த கட்டம் உண்டு. இங்குச் சிந்தனையை உடலுக்குரிய செயலாகக் கருதி, அதைவிட உயர்ந்த நிலையை அடைய முடியும் எனக் காட்டப்படும்.

படிக்காதவனைவிடப் படித்தவன் உயர்ந்தவன். பட்டத்திற்காகப் படித்துப் பட்டம் பெற்றவனைவிட அறிவுக்காகப் படித்தவன் அதிக உயர்வுள்ளவன்.

ஊர்ப் பஞ்சாயத்தைவிட முனிசிபல் சட்டம் சர்க்கார் அதிகாரத்தைச் செலுத்தும். முனிசிபாலிட்டியிலும் ஊரார் இருப்பதால், அதைவிட கோர்ட் சர்க்கார் அதிகாரத்தை நல்ல முறையில் செலுத்தும்.

சிந்திப்பவன் வாழ்வு ஜடத்திற்குக் கட்டுப்படாமல் மனத்திற்குக் கட்டுப்படும். சிந்தனையின்றி மௌனமானவன் வாழ்வு ஆன்மாவுக்குக் கட்டுப்படும்.

செயலிலிருந்து சிந்தனைக்கும், சிந்தனையிலிருந்து மௌனத்திற்கும் மனிதன் நகர்ந்து வந்தால் ஜடத்திலிருந்து மனத்திற்கும், மனத்திலிருந்து ஆன்மாவுக்கும் அவன் வாழ்வு மையம் நகர்ந்துவரும்.

(Intellect is inert) அறிவு ஜடத்தின் உணர்வு என்பது பகவான் கூற்று. இரு நூற்றாண்டுகட்கு முன் உலகம் மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்தது. அம்மனிதர்களைப் பார்த்து பாரதி நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்தால் என்றான். எங்கும் அவனுக்குப் பிசாசு தெரியும். பிசாசின் வகைகளைப் பிரித்து கதை எழுதுவான். "பெரிய துரை எனில் உடல் வேர்ப்பான்'' என்பவை இந்நாட்டு நிலை. ஐரோப்பாவில் பாதிரிமார் ஆட்சி நிலவியது. அவர்களை மக்கள் நம்பியதால் அவர்கள் சொல்லிய "கதைகள்'' அனந்தம். அரசனே அவர்களை எதிர்க்க முடியாத நிலையும் ஏற்பட்டது. பைபிளைப் படிக்கவும் அனுமதியில்லை. பாதிரிகள் மட்டுமே பைபிளைப் படிக்கலாம். இந்தியாவில் வேதத்தைப் படிக்க அனுமதியில்லை.

விஞ்ஞானம் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்தது, உடைத்தது. பாதிரிகளிடமிருந்து மனிதனுக்கு விடுதலை கொடுத்தது. ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆயிரம் மருந்துகளைக் கண்டுபிடித்தது. வலியை வென்றது. நோயை வென்றது. புயலையும், வெள்ளத்தையும், அம்மையையும், காலரா, பிளேக்கையும் வென்று வருகிறது. இலட்சக்கணக்கான விந்தைகளைப் புரிந்து வாழ்வை சுவர்க்கமாக்கிற்று. நூறாண்டில் நாம் பெற்ற சௌகரியம் கணக்கில் அடங்காதது. இது மனிதன் உடலசைவுகளைவிட்டுச் சிந்தனையை நாடியதைப் போன்றது. பகவான் விஞ்ஞானத்தை "மூடநம்பிக்கை'' என்கிறார். அதன் சாதனைகள் "மூளை'' intellect, physical mind, ஜடத்தின் சாதனை என்கிறார். மூளையைக் கடந்து அறிவுக்கு வந்தால், சிந்தனையைக் கடந்து ஆன்மாவுக்கு வரலாம். Divine Life தெய்வீக வாழ்வு அதனடிப்படையில் ஏற்பட்டது. மூடநம்பிக்கைக்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள மாற்றம் விஞ்ஞானத்திற்கும், சிந்தனையைக் கடந்த அறிவுக்கும் உண்டு. அதையே பூரண யோகம் நாடுகிறது.

சிந்தனை என்றால் என்ன? அது எதன் செயல்? மூளை என்பது மனத்தின் பீடம். மூளை என்பது தசையாலான உறுப்பு. சிந்தனை அதன் செயல். கண் உறுப்பு, பார்வை அதன் செயல் என்பதுபோல், மூளை என்பது ஜடமான கருவி.

  • தத்துவம் மனத்தின் எண்ணம்.

  • சிந்தனை மூளையின் செயலான எண்ணம்.

மூளையைச் செயல்பட வைப்பன புலன்கள். கண் பார்க்கிறது, காது கேட்கிறது. நாம் ஒருவரைப் பார்க்கிறோம். கண் அவர் உருவத்தை மூளைக்குச் சொல்கிறது. உண்மையில் பார்ப்பது கண் அன்று, மூளையே. மூளை கண்மூலம் பார்க்கிறது. நாம் பார்த்தவர் உருவம் மூளையில் பதிகிறது. அது புலனறிவு. இப்புலனறிவின் அடிப்படையில் மூளை செயல்படுவது சிந்தனையாகும்.

மனம் என்ன செய்கிறது? நாம் பார்த்தவர் உருவம் உயரமானது, கனமானது என்றால், புலன் கொடுத்த உயரம், எடையை ஒதுக்கிவிட்டு - புலனறிவை விலக்கி - மனம் மூளையிலிருந்து உயர்ந்து சிந்திப்பது சிந்தனை. இது மனதிற்குரிய சிந்தனை. பார்த்தவர் உருவமும், எடையும் மூளைக்கு அதிர்ச்சி தருகிறது, பயம் எழுகிறது, உடல் பயத்தால் நடுங்குகிறது. மூளையின் செயல் இம்மனிதன் செயலை நிர்ணயிக்கின்றது.

மனம் மூளையிலிருந்து விடுபடும் தன்மையுடையது. உயரம், எடையைப் புறக்கணித்து மனம் "யார் இது?'' எனக் கேட்கிறது. இவன் கூலி வேலை செய்பவன் என்ற பதில் மனத்தை நிதானமாகச் செயல்படச் செய்கிறது. இம்மனிதனை ஜடமான மூளை நிர்ணயிக்காது.

ஸ்ரீ அரவிந்தம் பொதுவாக மனித நம்பிக்கையின் அடிப்படையை மாற்றி, மனம் உடலை நிர்ணயிக்கிறது என்று கூறுகிறது. நாம் உடல் மனத்தை நிர்ணயிக்கிறது என்று நம்புகிறோம்.

Matter என்ற அத்தியாயம் Life Divineஇல் கடினமானது. Knot of Matter டுத்தது. Matter என்ற அத்தியாயத்தில் Matter சச்சிதானந்தம் என்று முடிகிறது. Knot of Matter என்ற த்தியாயத்தின் முடிவில் மனிதன் ஜடத்தைப் பற்றிய கருத்தை மாற்றிக்கொண்டால், ஜடம் திருவுருமாறும், ஜடம் சச்சிதானந்தமாகும். ஜடம் சச்சிதானந்தமானால் kingdom of heaven on earth பூலோகம் சுவர்க்கமாகும். அதன் இதர அம்சங்கள்:

  • மனிதன் சிந்தனையைக் கடந்தால் தெய்வமாவான்.
  • சமூகத்தை முடிவாகக் கருதாமல், மனத்தையே முக்கியமாக மனிதன் கருதுவதைத் தவிர்த்தால், உலகில் வறுமையிருக்காது, கவலை சந்தோஷமாக மாறும்.

****

 737) மனத்தின் தலையாய செயல் சிந்தனையில்லை, புரிந்துகொள்வதாகும். சிந்தனையின்றிப் புரிந்தால் மனம் உடலை நிர்ணயிக்கும்.

சிந்திக்காதே, புரிந்து கொள்.

உடலின் முக்கியக் கடமை செயல். உணர்வின் தலையாய கடமை செயலுக்குரிய சக்தியை அளிப்பது. அதுபோல் மனத்தின் முதல் பொறுப்பு செயல் அன்று, சக்தியைத் தருவதில்லை, புரிந்து கொள்வது.

சிந்தனையில் ஆரம்பித்து புரிவதில் முடிவது மனத்தின் வாழ்வு. நாம் சிந்தனையில் ஆரம்பித்து, சிந்தனையிலேயே நின்றுவிடுகிறோம். கல்லூரிக்குப் போன மாணவன் 4 வருஷத்திலோ, 8 வருஷத்திலோ படிப்பை முடித்துவிட்டு வாழ்வை ஆரம்பிக்கவேண்டும். 30, 40 வருஷமாகப் படித்துக் கொண்டேயிருப்பது வாழ்வாகாது, முறையாகாது.

நாம் சிந்தித்துக்கொண்டேயிருப்பதால் திறனற்றவராகிறோம். 20 ஆண்டாக ஒருவன் படித்துக்கொண்டிருந்தால் குடும்பம் அவன் செலவை ஏற்கும், குடும்பத்திற்கு அவன் கட்டுப்படவேண்டும். 6ஆம் வருஷம் படிப்பை முடித்து வேலைக்குப் போயிருந்தால், 14ஆம் வருஷம் குடும்பம் அவனுக்குக் கட்டுப்படும்.

  • சிந்தனை ஆரம்பத்தில் அவசியம்.
  • சிந்தனை புரிவதில் முடியவேண்டும்.
  • தொடர்ந்த சிந்தனையால், புரிந்துகொள்ளும் திறமை போய்விடும்.
  • சிந்திப்பதை நிறுத்தி, புரிந்துகொள்ள முயன்றால், செயல் உருவாகும்.
  • செயல் மனத்தால் உருவாக்கப்பட்டால், மனம் தலைமை தாங்கும், உடல் கட்டுப்படும்.
  • இது வாழ்வு முன்னேற உதவும்.
  • சிந்திப்பது தொடர்ந்தால் உடல் மனதை நிர்ணயிக்கும்.
  • உடல் மனத்தை நிர்ணயித்தால், படிப்பில்லாதவன் நாட்டின் தலைவனாகி ஆட்சி செலுத்துவது போலாகும்.
  • நாம் குடும்ப வாழ்வில் முன்னேற, அறிவின் அடிப்படையில் வாழ்வை அமைக்க, தேவையற்ற சிந்தனையை நிறுத்தி, புரிந்துகொள்ள முயன்று, அதன் அடிப்படையில் நடந்தால் வாழ்வு வளம் பெறும், அதிர்ஷ்டம் பிறக்கும்.

மனம் என்ற சொல் மனஸ் என்ற சமஸ்கிருதச் சொல். 5 புலன்களின் மையம் மனம். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் உணர்வுகளை மூளையில் அறியும் திறன் மனம். மனம் புலனுணர்வை அறியும் பாகம். புத்தி என்பதே அறிவுக்குறைவிடம். நடைமுறையில் நாம் மனம் என்ற சொல்லை mind என்பதின் தமிழாக்கமாகப் பயன்படுத்துகிறோம். Mind என்பது மனமும் புத்தியும் சேர்ந்ததாகும். இதை மனம் என்ற சொல்லாலே நாம் பொதுவாகக் குறிக்கின்றோம்.

மனம் (mind) என்பதின் திறன்கள் பல. (thinking, feeling, memory, observation, creation, judgement, imagination, conception, perception, sensation, ratiocination, construction, ideation, opinion, etc.) சிந்தனை, உணர்வு, ஞாபகம், கவனம், படிப்பு, தீர்ப்பு, கற்பனை, கருத்து, கருத்துணர்வு, பகுத்தறிவு, அமைப்பு, எண்ணமிகுதல், அபிப்பிராயம் போன்ற பல்வேறு திறன்கள் மனம் என நாம் கூறுவதற்குண்டு. இத்தனையும் சேர்ந்து நமக்கு புரிந்துகொள்ளும் திறனை comprehension அளிக்கின்றன. புரிந்துகொள்வதற்குச் சிந்தனை நேரடியாகப் பயன்படும். சிந்தனையின்றியும் புரிந்துகொள்ள மனிதனால் முடியும். இதை நேரடி ஞானம் intuition என்கிறோம்.

புதிதாக ஒருவரைச் சந்தித்துப் பழகினால், இவர் நேர்மையானவர் என்று கொஞ்ச நாள் கழித்து அனுபவத்தில் புரிந்துகொள்கிறோம். அவரை நம்புகிறோம். வேறொருவர் வந்தால் நாம் இவரை அறிமுகப்படுத்தி இவர் நேர்மையானவர் எனச் சொல்ல நினைக்கும்பொழுது, வந்தவர் உடனே அவரை நேர்மையானவர் எனப் புரிந்துகொள்கிறார். நாம் பல மாதம் பழகி நேர்மையைப் புரிந்துகொண்டால், வந்தவர் பார்த்தவுடனே புரிந்துகொள்கிறார். எப்படி இவர் நேர்மையானவர் என உங்களுக்குத் தெரியும் எனக் கேட்டால் பார்த்தாலே தெரிகிறதல்லவா என்பார்.

அனுபவசாலிகள் பல பேரைப் பார்த்து நேர்மை எது, எது நேர்மையில்லை என்று பாகுபாடு செய்திருப்பார்கள். நெடுநாளைய அனுபவம் இன்று பார்த்தவுடனே புரிந்துகொள்ள உதவுகிறது. தகப்பனாருடைய அனுபவம் அதுபோல் பிள்ளைக்கு வருவதுண்டு. போன ஜென்மத்தில் ஆன்மா பெற்ற அனுபவமும் அதுபோல் நேரடியாகப் பொருள்களையும், மனிதர்களையும் புரிந்துகொள்ள உதவும். மனத்தை மௌனமாக்கினாலும் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும்.

 சிந்தனை மூலம் புரிந்துகொள்வதைவிடச் சிந்தனையில்லாமல் புரிந்துகொள்ள மௌனம் உதவும்.

அனுபவத்தாலோ, பரம்பரையாலோ, பிறப்பாலோ, மௌனத்தாலோ ஒருவரால் சிந்தனையின்றி நேரடியாகப் புரிந்துகொள்ள முடியுமானால், அவருக்கு நினைத்தது நடக்கும். அவர் மனம் நினைப்பதை அவர் உடலும், உலகமும் பூர்த்தி செய்யும். அவருடைய திறமை வளரும், உயரும். சிந்தனையே உயர்ந்த கருவி என்று முடிவாக நம்பும் இவ்வுலகத்தில் சிந்தனையைக் கடந்த நிலையுண்டு. அதற்கு உயர்ந்த திறனுண்டு என்று ஆன்மீகம் அறிவிக்கிறது.

****

 738) சகுனம் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஒரு திட்டத்தில் எழும். அவை வெற்றிக்கு அளவுகோல், அறிகுறிகள் வெற்றியாகப் பூர்த்தியானால், திட்டம் வெற்றியாகும். இது சட்டம், விலக்குண்டு.

வெற்றியின் அறிகுறிகள்.

சாவித்ரியைப் பிரித்துப் பார்க்கும் பழக்கம் நம்மவர்க்குண்டு. அது சொல்பவை அசரீரி போலிருக்கும். ஓர் அன்பர் அடிக்கடி அதைச் செய்தவர் தினசரி இதையே செய்வதும், அதன் அற்புதமான சொற்களை அனுபவிப்பதும், பலமுறை ஒரு நாளில் செய்வதுமாக இருந்தார்.

அன்னை பற்றிய வேறு சில புத்தகங்கள் ஒரு செட் வந்தபொழுது சாவித்ரியுடன் அவற்றையும் பார்க்க ஆரம்பித்தார். அவற்றுள் சில புத்தகங்களின் ஆசிரியரை அன்பர் அறிவார். ஆசிரியரிடம் பேசும்பொழுது தம் கேள்விகட்கு ஆசிரியர் சொன்ன பல பதில்கள் நினைவிருந்தன. அவர் எழுதிய புத்தகங்களைப் பிரித்துப் பார்த்தால் அவர் நேரடியாகச் சொன்ன பதில்கள் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அன்பருக்கு அது ஆச்சரியமாக இருந்ததே தவிர அது புரியவில்லை.

நாம் ஊன்றி மனதை ஒரு புத்தகத்திலிருத்திப் பிரித்துப் பார்த்தால், புத்தகம் ஆசிரியரின் எழுத்து உருவம் என்பதால் அவர் பேசும் அதே சொற்களைச் சொல்ல வல்லது என்பதே இச்சட்டம்.

"சரி, இனி இந்த வேலையை - பிரித்துப் பார்ப்பதைக் - கைவிடுவோம்'' என்று முடிவு செய்துவிட்டார். வாரப்பத்திரிகை ஒன்றைப் படிக்க எடுத்தார். சாதாரணக் கதைப் புத்தகம் போன்ற பத்திரிகை அது. முதல் சொல் கண்ணில் பட்டது, "மனம் சந்தோஷமானால், வாழ்வு நிறைந்திருக்கும்''. ஒரு வாரம், பத்து நாட்களாக அன்பர் அன்னையின் 18 வால்யூம்களில் படித்தது "சந்தோஷம்'' என்ற தலைப்பு.

இதுபோன்ற விஷயங்களையும் காதில் போட்டுக்கொள்ளாமல் வேலையைக் கவனிப்போம் என அன்பர் முடிவு செய்தபின், எந்தப் புத்தகமும் அன்றிலிருந்து சாவித்ரிபோல் பேசுவதைக் கண்டார்.

மனம் அன்னையால் நிறைந்திருந்தால் கண்ணில் படும் எழுத்துகளெல்லாம் சாவித்ரியாகும் என்பது அன்னைக்குண்மை.

ஒரு பெரிய திட்டத்தை ஆரம்பித்தவர் தம் கண்ணில், காதில் படுவனவெல்லாம் சகுனங்கள் போலிருப்பதைக் காண்பார். அவை கூறும் செய்திகள் முக்கியமானவை. அவை எதிர்காலத்தைக் காட்டும், கடந்ததை உணர்த்தும், நிகழ்காலத்தை கண்ணாடிபோல் பிரதிபலிக்கும்.

****

 739) விலக்கான இடங்களில் அறிகுறிகள் தோற்பது திட்டத்தின் வெற்றியைக் குறிக்கும்.

வெற்றி தரும் கெட்ட சகுனம்.

பொதுவான அறிகுறிகள் பொதுவான போக்கை உணர்த்தும். விலக்கான இடங்கள் உயர்ந்த நல்ல அறிகுறிகளைக் காட்டும், எதிரானதையும் காட்டும். இவைகளை நாம் சரிவர அறிய முயலவேண்டும். அதற்கு வேண்டியது சட்டமன்று, பக்குவமான மனப்பான்மை. இவற்றுள் சில,

  • சிறிய நல்ல அறிகுறி பெரிய நல்லதைக் காட்டும்.
  • தவறான இடத்தில் தவறான அறிகுறி நல்லதற்கடையாளம்.
  • பெரிய இடத்தில் பெரிய நல்ல அறிகுறி நமக்குச் சிறிய நல்லது வருவதைக் குறிக்கும்.
  • இடம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். அறிகுறி நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். முடிவை நம் மனநிலை பக்குவமாக அறியவேண்டும்.

தொழிலதிபர் புதிய சரக்கை மார்க்கட்டில் அறிமுகப்படுத்தும் பொழுது மார்க்கட் விரும்பினால் பெரிய இலாபம், இல்லாவிட்டால் பெரிய நஷ்டம் என்ற நிலை. எதிர் வீட்டுக்காரர் வந்து தம் பையன் வகுப்பில் முதல் மார்க்கும் பரிசும் பெற்றதைச் சொல்லி சந்தோஷப்பட்டார். இந்தப் பையன் பாஸ் செய்யமுடியாதவன், முதல் மார்க் வாங்கியுள்ளான் என்பதை, "என் சரக்கு மார்க்கெட்டில் முதல் மார்க் வாங்கும்'' என எடுத்துக்கொண்டார். மார்க்கட்டில் சரக்கு பரிசும் பெற்றது. இது நேரடியான அறிகுறி. தெளிவானது. அதே சமயம் அவர் குமாஸ்தா வந்தான், "நான் கேட்ட எந்த இடத்திலும் கடன் கிடைக்கவில்லை, அதனால் நீங்கள் அவசியம் உதவ வேண்டும்'' என்றான். இவன் சூதாடி, மகளுக்கு ஆப்பரேஷன் எனப் பலரிடமும் கடன் கேட்டிருக்கிறான். கிடைக்கவில்லை. சூதாடிக்கு "இல்லை'' என்பது நல்ல சகுனம். இந்தியாவுக்கு உலக வங்கி $1 பில்லியன் கடன் கொடுத்தது என்ற செய்தி கண்ணில்பட்டால், நமக்கு நம் அளவில் நம் காரியம் பலிக்கும் எனப் பொருள்.

உள்ளூர் காலேஜில் நம் பையன் முதல் மார்க் வாங்கியிருந்தும் இடம் கிடைக்கவில்லை என்றபொழுது, அந்த ஆபீஸ் குமாஸ்தா நம் குடும்பத்திற்கு எதிரி. அதனால் அதுபோல் நடந்திருக்கிறது எனில் சரக்கை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தும் நேரம் "முதல் மார்க்கும் இடம் பெற்றுத் தராததுபோல் நல்ல சரக்குக்கும் வரவேற்பிருக்காது'' என நினைக்கத் தோன்றும். மனம் நிதானமாக (without reaction) இருந்தால் அடுத்த தபால் பெரிய காலேஜில் இடம் கொடுத்து தபால் வருகிறது. மனம் சஞ்சலப்பட்டிருந்தால் இந்த நல்லது நடந்திருக்காது. சரக்கு பிறகு பார்த்தபொழுது அதேபோல் வெற்றி பெற்றது.

****

 740) சட்டத்திற்கும் விலக்கிற்கும் இவை புறம்பானவை. அன்னை செயல்படும் இடங்கள் பொதுவாக அப்படிப்பட்டவை. இத்திட்டங்கள், அறிகுறிகள் வென்றாலும், தோற்றாலும் வெற்றி பெறும். மேலும் ஒரு நிலையுண்டு. திட்டமே தோற்றாலும் "வெற்றி'' நிச்சயமாக உண்டு.

தோற்றாலும், வென்றாலும் வெற்றி.

தண்ணீர் சூடானால் ஆவி வரும். ஆவி எழுந்தால் தண்ணீர் சூடாகிவிட்டது என்று பொருள். இது (ஸ்தூல உலகில் material life) நிஜ உலகில் நடப்பதால் நமக்கு வியப்பாக இல்லை. நாம் ஒரு காரியத்திற்குப் போகிறோம். ஒரு வீடு வாங்கப் போகிறோம். பேரம் படியுமா எனத் தெரியவில்லை. காலையில் 8 மணிக்கு நாம் வீட்டிலிருந்து புறப்படுகிறோம். விற்பவர்கள் காலை ஆறு மணிக்கே நாம் கேட்ட விலைக்குக் கொடுக்க முடிவு செய்துவிட்டார்கள் என்றால், அவர்கள் மனதில் ஏற்பட்ட நல்ல முடிவு, சூட்சும உலகில் நம் மனதை எட்டித் தொடும். இரவெல்லாம் நாம் பதைபதைப்பாக இருந்தால் 6 மணிக்கு அவர்கள் முடிவெடுத்த நேரம், அம்முடிவு சூட்சுமமாக நம் மனதை எட்டியவுடன் நம் மனம் அமைதியடையும். நாம் சூட்சுமமானவர்களானால் அதை அறிவோம். இல்லையேல் இல்லை. வீடு வாங்குவது நமக்கு வாழ்வில் ஒரு தரம். முக்கியமான செயல். பெரிய காரியம். வீடு வாங்க பணம் பெட்டியிலிருக்கிறது. நெல் விற்று வந்த பணம் அது. அந்த வீட்டை ஆளப்போவது மனைவி, சொத்தாகப் பெறப்போவது மகன். வீட்டை வாங்கியபின் நம் அந்தஸ்து உயரும். இன்று சகஜமாகப் பேசும் அண்ணன், அண்ணி, மாமன் மகன் வீடு வாங்கியபின் நமக்கு மரியாதை தருவார்கள். வயதில் பெரியவர்களுக்கு மரியாதை வந்தால் இளைஞர்களிடம் மரியாதை உணர்வைப் பிரியமாகக் காட்டுவார்கள். சிக்கனமான அத்தை எப்பொழுதும் வீட்டிற்கு வெறும் கையாக வருபவர்கள் வீடு வாங்கியபின் இரண்டு பழம் கொண்டு வருவார்கள். தெருவில் நடந்துபோகும்பொழுது தெரிந்தவர்களைக் கடந்துசென்றால் அவர்கள் இன்று நம்மைக் கவனிக்காமல் செல்பவர்கள், வீடு வாங்கியபின் பார்த்து சிரித்து வணக்கம் சொல்வார்கள். அவர்கள் அத்தனைப் பேருக்கும், வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களுக்கும், நடக்கும் நிகழ்ச்சிகள் அத்தனைக்கும் விற்பவர்கள் காலை 6 மணிக்கு முடிவு எடுத்தவுடன் விஷயம் தெரிந்துவிடும். நெல்லை உற்பத்தி செய்து வீடு வாங்கப் பணம் கொடுத்த நிலத்திலுள்ள பாளை வெடிக்காத தென்னை மரம் பாளை வெடித்த செய்தி நாம் புறப்பட ஒரு மணி நேரத்திற்கு முன் வரும். சிரித்தே அறியாத மனைவியின் முகத்தில் புன்னகை எழும். தினமும் 7 மணிவரை தூங்கும் மகன் அன்று காலையில் எழுந்து சுறுசுறுப்பாக இருப்பான். அண்ணி தற்செயலாய் வந்து சற்று நேரம் பிரியமாக என்றுமில்லாமல் பேசுவார்கள். அத்தை வீட்டிலிருந்து பக்ஷணம் வரப்போவதாகச் செய்தி வரும். தெருவில் இறங்கியவுடன் எதிர்வீட்டுப் பங்காளி சந்தோஷமாக விசாரிப்பது புதியதாகத் தோன்றும். ஆபீசில் உடன் வேலை செய்பவர் வருஷக்கணக்காகப் பேசியறியாதவர் வழியில் பார்த்து சிரித்துப் பேசி, "எங்கோ முக்கியமாகப் போகிறீர்கள் போலிருக்கிறது. லீவு லெட்டர் தருவதானால் நான் எடுத்துப் போகிறேன்'' என்று கூறுவது வினோதமாக இருக்கும். அவரைத் தாண்டிப் போனால் சுமங்கலி நிறைகுடம் நீர் எடுத்துவருவாள். இதுவரை எதையும் கவனிக்காவிட்டாலும், சுமங்கலியையும் நிறைகுடத்தையும் பார்த்தவுடன் நல்ல சகுனம், பேரம் முடியும் என்று நினைக்கிறோம். எல்லாப் பொருள்களும், எல்லா நிகழ்ச்சிகளும் சூட்சும உலகத்தில் உயிரோடு இருந்து சகுனமாகின்றன என்றாலும், நமக்குச் சுமங்கலியும் நிறைகுடமும் நல்ல சகுனங்களாகத் தெரிகின்றன. ஏனெனில் அவற்றை மட்டும் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். அனைத்தையும் நாம் தெரிந்துகொள்ளவில்லை.

வீடு பேரம் முடிவதை இவை சகுனமாகக் காட்டுவதுபோல், அந்த வீட்டிற்குப் போனபின் பிரமோஷன் வரப்போவதையும், வீட்டை வாங்கியபின் அதன்மூலம் கேஸ் வரப்போவதென்றால் அதையும் சகுனங்கள் காட்டும். நாம் அவற்றைக் கூர்ந்து பயின்றிருந்தால் தெரியும்.

  • நல்லது தொடர்ந்து நல்லதாக இருப்பது,
  • நல்லது மூலம் அதிர்ஷ்டம் வருவது,
  • நல்லதில் கெட்டது கலந்திருப்பது,
  • நல்லதாக ஆரம்பித்து கெட்டதாக முடிவது,
  • நல்லதாக ஆரம்பித்து கெட்டதாக மாறி முயற்சியால் அதிர்ஷ்டமாவது,
  • சிறியது, பெரியது, சௌகரியமானது, சந்தோஷம் தரக்கூடியது, ஆகிய அனைத்தும் ஆரம்பத்திலும், பின்னர் நடைமுறையிலும் தொடர்ந்து தவறாது நிகழ்ச்சிகள் மூலம் நமக்குச் செய்தி அளிப்பது சகுனம் எனப்படும்.

நாலு வாலிபர்கள் சேர்ந்து அவர்களுடன் வேலை செய்யும் பெண்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபொழுது ஒரு பெண்ணைப் பற்றி அனைவரும் அபிப்பிராயம் சொன்னார்கள். ஒருவருக்கு மட்டும் அவள் யார் என்று தெரியவில்லை. மறுநாள் அவளைக் கவனித்து அபிப்பிராயம் சொல்லும்படிக் கேட்டார்கள். மறுநாள் அவளை அவர் கவனித்தார், "விதவையின் தோற்றம்'' உள்ளவள் என்றார். மற்றவர்கட்கு வியப்பாக இருந்தது. பிறகு அவரே அவளைத் திருமணம் செய்யும்படி அமைந்தது. அவளால் அவர் உயிருக்கு ஆபத்து என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தபொழுது தாம் பல ஆண்டுகட்குச் சொன்ன சொல் அவருக்கு நினைவு வந்தது. ஆயுள் கெட்டியாக இருந்ததால், மரணம் வரவில்லை, பொய்யான மரணச் செய்தி வந்து போயிற்று, வருமானம் போயிற்று, உயிரின் இலட்சணமான உணர்வு அழிந்தது. அவர் நினைவு உண்மை, வாழ்வு நிதர்சனப்படுத்தியது.

வயது வந்த பெண் சற்று நிதானமற்றவள் வழிதவறிப் போய் காணவில்லை. அவளைப் பல இடங்களிலும் தேடினார்கள். இரவில் 11 மணிக்கு தெருத்தெருவாகத் தேடி அலைந்து ஓரிடமாகப் பாதையோரம் உட்கார்ந்தபொழுது தெரிந்தவர் ஒருவர் வந்து விசாரித்து "என்னிடம் 50,000 ரூபாய் உள்ளது. கடனாக நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்களா?'' என்று கேட்டது வாழ்வில் நாம் அறியாத ஒன்று. சில ஆண்டுகட்குப்பின் அவர் பணத்தைத் திருப்பிக் கேட்க நினைத்து வாங்கியவரைச் சந்திக்க வந்தவர், அவர் போயிருந்த இடத்தின் எதிரில் வந்து காத்திருந்து பணம் வேண்டும் என நடுரோட்டில் கேட்கும்பொழுது மணி இரவு 11! அன்றைய ஆரம்பம், இன்றைய நிகழ்ச்சிக்குரிய சகுனம்.

சீனுவாச ராமானுஜம் பரீட்சையில் பெயிலானார். பிற்காலத்தில் உலகப் பிரசித்தி பெற்றார். பெயிலானது எதைக் குறிக்கிறது. அம்சம் பெரியதாகவும் அந்தஸ்து சிறியதாகவுமிருந்தால் உள்ள நிலையில் மற்றவர்கள் சாதிப்பதையும் சமயத்தில் சாதிக்க முடிவதில்லை. கணிதத்தில் மனம் முழுவதும் லயித்ததால் அவரால் ஆங்கிலத்தில் மனத்தைச் செலுத்த முடியவில்லை. அதனால் அவர் விலக்காக (exception) அமைந்தார்.

திருமண ஏற்பாட்டுக்குச் சொந்த ஊரைவிட்டு அவசரமாகப் புறப்பட்டவர், தாம் போகவேண்டிய ஊருக்குள்ள பஸ்ஸை ஒரு திருமணத்திற்காக ஏற்பாடு செய்துவிட்டதை அறிந்து, தடையாக இருப்பதை உணர்ந்து, பஸ் புரோக்கருடன் சண்டை போட்டார். மேலும் அவர் அறிந்தது பஸ் அங்கிருந்து காலியாகப் புறப்பட்டு, ஒரு கிராமத்திற்குப் போய் நிரம்பிப் போகும் என்றும் அறிந்தார். தாம் போகும் வேலை தம் திருமணம், அது தகறாரான நிலையில் உள்ளது. கடைசி பஸ்ஸில் டிக்கட் இல்லை. அதில் போகும் அத்தனை பேரும் திருமணத்திற்குப் போகிறார்கள். அதுவும் காலியாகப் புறப்படுகிறது. அது நிறையும் இடம் தம் சொந்த கிராமம்! அத்தனையும் நினைவிலிருந்தது, எதுவும் புரியவில்லை. திருமணம் ஆயிற்று, அத்தனையும் புரிந்தது. திருமணத்தை உறவினர் அத்தனை பேரும் எதிர்த்தனர். காலியான பஸ்ஸில் இடம் இல்லை என புரோக்கர் சொல்கிறான். "காலி''யான சம்பந்தம், முழு கிராக்கி செய்தார்கள். சொந்த ஊர்வரைதான் போகலாம் என்ற நிலை திருமணம் முடிந்தபின் சொந்தத்தில்தான் உறவுள்ளது. அதைத் தாண்டிய உறவு காலி என்பது விளங்கிற்று. அன்று புரோக்கருடன் அவர் போட்ட சண்டை திருமணத்திற்கு முன்னால் ஆரம்பித்து வாழ்நாள் முழுவதும் அவர் போட்ட "சண்டை''களை குறித்தது!

பெரிய திட்டத்தின் பொறுப்பேற்க அழைத்தபொழுது நேரம் இராகு காலம், ஏற்றார். திட்டத்தையும், பொறுப்பையும் கொடுத்தார்கள். பாங்கில் பணம் வாங்கும் உரிமை power of attorneyயைக் கொடுக்கவில்லை. இராகு காலம் பவர் ஆப் அட்டர்னியை விழுங்கியது. பவரைப் பெற்றவர் "நான் பேங்கில் கையெழுத்துப் போட்டுப் பணம் வாங்கமாட்டேன். உனக்கு எல்லாச் சுதந்திரங்களும் தருகிறேன்'' என்றார். பணமில்லாத சுதந்திரத்தை என்ன செய்வது? இராகு காலம் தன் கடுமையைக் காட்டுகிறது. நடந்ததை அன்னையிடம் சமர்ப்பணம் செய்தார். 4 மாதமாயிற்று. பாங்க் தானே முன்வந்து பணம் தருகிறது. பவர் இல்லாமல் எப்படி வாங்குவது! "நீங்கள் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் பவருக்குரிய கையெழுத்தைப் பெறுகிறோம்'' என்றது பேங்க். பாங்கில் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கமாட்டேன் என்றவர், எந்தக் கையெழுத்தும் இல்லாமல் சொந்தப் பணத்தை பாங்க் கொடுத்ததைப் போல் 4 மடங்கு கொடுத்தார். இராகு காலம் கெட்ட சகுனம். பவரை விழுங்கியது. திட்டத்தில் அன்னையிருப்பதால் எவரும் முறை தவறிப் பேசக்கூடாது. பேசினால் மாறாக, நேர் எதிர்மாறான பலன் வரும் என்பது அன்னை சட்டம். அதனால் அவர் தாமே பணம் தர வேண்டியதாகப் போயிற்று.

பாஸ் செய்ய முடியாதவனுக்கு முதல் மார்க் வாங்கிக் கொடுத்ததற்குப் பதிலாக அவன் செய்த சேவை கூலியைப் பெற்று பத்தில் ஒரு பாகம் வேலை செய்தான். அடுத்த 30 வருஷமாகப் பெற்ற பெரிய சொத்தில் கூலி பெற்றவர்கள் பத்தில் ஒரு பாகம் வேலை செய்தார்கள். சொத்து அந்தப் பையன் ஊரில் வாங்கும்படி அமைந்தது!

மனிதன் தோற்றத்தைப் பார்ப்பவன். அதுவும் இன்று கண்ணில் படுவதை மட்டும் கணக்குப் போடுபவன். சமூகம் அதன் கணக்குப் போடும். காலம் சமூகத்தைக் கடந்தது. இறைவன் காலத்திற்கும் அகப்படாதவன். "வெற்றி'' நிச்சயம் உண்டு என நான் கூறுவது இறைவன் கணக்குப்படி "வெற்றி''.

 ஸ்ரீ அரவிந்தம் இறைவன் என்று கூறும்பொழுது மேல் உலகில் உள்ள  இறைவனைக் கூறவில்லை, நம்முள் மறைந்துள்ள ஜீவாத்மாவையும்  குறிப்பிடவில்லை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறும் இறைவன்  நம்முள்ளிருந்து, நம் வாழ்வில் வெளிப்பட்டுச் செயல்படும் இறைவனைக் குறிப்பிடுகிறார். அவருக்கு வெற்றி தவிர வேறெதுவும் தெரியாது.  

  • சகுனத்தின் சட்டங்கள் எளியவை.
  • நல்ல சகுனம் நல்ல முடிவையும், கெட்ட சகுனம் கெட்ட முடிவையும் குறிக்கும்.
  • விலக்கான நேரங்களில் சகுனம் விலக்காகச் செயல்படும்.
  • இவையெல்லாம் வாழ்வில் உள்ள மனிதனுக்குரியவை.
  • துறவிக்கு வாழ்வில்லை. ஆனால் சட்டம் இல்லாமலில்லை.
  • துறவியின் சட்டத்தை நாம் ஆராயாவிட்டாலும், நாம் கூறும் சட்டமும் விலக்கும் துறவிக்குரியதுமில்லை.
  • துறவிக்கில்லாத சட்டம் மேல் உலகிலுள்ள இறைவனுக்கும் இல்லை.
  • நம் சட்டம் இறைவனுக்குரியது, ஆனால் வாழ்விலுள்ள இறைவனுக்குரியது.
  • நாம் அதை இல்லறத்தின் துறவறம் என்கிறோம்.
  • அங்கு இறைவன் என்பது சைத்தியப் புருஷனாகும்.

நான் அடிக்கடி கூறும் உதாரணத்தை மீண்டும் இங்குக் குறிப்பிடுகிறேன். அன்னைக்கு ஆசிரம வருஷச் செலவை சம்பாதித்துக் கொடுக்க ஏற்பட்ட திட்டம், அன்று அதைப்போல் 32 மடங்கு வருமானத்தைக் காட்டியது. நிலமும், பணமும், நீரும், டெக்னாலஜியும், ஊரும், உதவியும் ஆறாகப் பெருகியது. மனம் முனைப்பாகி 32 மடங்கை சுருக்கி 1இல் 1/10 மடங்காக்கியது. சேவை அழும்பாயிற்று, தலைமை தலைகிறுக்காயிற்று, உதவி உபத்திரவமாயிற்று, இந்தச் சுருக்கமான வருமானமும் சுடுகாடாயிற்று. ஆரம்பித்த அன்பரின் சமர்ப்பணம் மட்டும் வளர்ந்தது. அத்தனையையும் கடந்து 12 மாதம் கழித்து வருமானமாக வரவேண்டிய 1/10 பாகம் காணிக்கையாக வந்தது. வேறுவகையில் அன்னைக்கு 3/10 பாகம் "காணிக்கை''யாக வந்தது. இது "வெற்றி''.

****

தொடரும்....

 

ஜீவிய மணி

முழுமையை நாடினால் சுமுகம் எழும்

Comments

01. யோக வாழ்க்கை விளக்கம்

01. யோக வாழ்க்கை விளக்கம் IV 

736

para 1, line 4 - from படிக்காதவனைவிடப் படித்தவன் to  உயர்வுள்ளவன். - 2nd paragraph

para 1, line 6 - from ஊர்ப் பஞ்சாயத்தைவிட to செலுத்தும்.   - 3rd paragraph 

para 2, line 2 - ஜடத்திலி ருந்து - ஜடத்திலிருந்து

do.    do.      - மனத்திலி ருந்து - மனத்திலிருந்து   

do. 3, do. 1, (Intellect is alert) - (Intellect is inert) 

do.     do. 7 - சொல்லி ய - சொல்லிய                                                                      

do.        do. 8 - அமைதியில்லை.- அனுமதியில்லை.

do.   7,  do. 3 - மூளையிலி ருந்து - மூளையிலிருந்து

do.      do.   - இது மனதிற்குரிய சிந்தனை. - to be highlighted.

do. 8,   do. 3 - from இம்மனிதனை to  நிர்ணயிக்காது. - to be highlighted.

do. 10, do. 1 - Matterஅடுத்தது.  - Matter அடுத்தது.

do.       do. 2 - Matterஎன்ற  - Matter என்ற

do.       do. 2 - Matterசச்சிதானந்தம் - Matter சச்சிதானந்தம்

do.       do. 3 - from அத்தியாயத்தின் to இதர அம்சங்கள்: - to be joined.

737

para 4, do. 4 - mindஎன்பதின்  - mind என்பதின்

do.       do.  5 - Mindஎன்பது - Mind என்பது

do.    5, do. 6 - comprehensionஅளிக்கின்றன - comprehension அளிக்கின்றன

738

para 1, line 2 - போலி ருக்கும் - போலிருக்கும்

do.     3, do. 1 - புத்தகத்திலி ருத்திப் - புத்தகத்திலிருத்திப்

do.  7,   do.  2 - போலி ருப்பதைக் - போலிருப்பதைக்

 

739

para 3, line 6 - தபால் - தபாலில் 

740

para 1,line 12 - பெட்டியிலி ருக்கிறது. - பெட்டியிலிருக்கிறது.  

do.       do.  28 - வீட்டிலி ருந்து - வீட்டிலிருந்து

do.       do.   32 - போலி ருக்கிறது. - போலிருக்கிறது.

 do.  6,  do.   4 - காலி யாகப் - காலியாகப் 

do.        do.   8 -    do.                      do.   

do.      do.   9 - நினைவிருந்தது -  நினைவிலிருந்தது

do.      do.  11 - காலி யான - காலியான

do.      do.  11 - "காலி ''யான  - "காலி''யான

do.  8  do.   2 - கூலி யைப் - கூலியைப்

do.  9, Bullet point 5 - இல்லாமலி ல்லை. - இல்லாமலில்லை.



book | by Dr. Radut