Skip to Content

அன்பர் கடிதம்

இந்த ஒரு வருட காலமாகத்தான் எனக்கு அன்னையைப் பற்றித் தெரியும். அதற்கு முன்பு அவர்களைப் பற்றி அறியாமல் இருந்து இருக்கிறோமே என்று மிகவும் வேதனைப்படுகிறேன். நான் அன்னையை வணங்க ஆரம்பித்ததற்குப் பின் எனக்குக் கிடைத்த சந்தோஷம் எழுத்தில் எழுதித் தெரியப்படுத்த முடியாது. ஆனாலும் சில நிகழ்ச்சிகளை எழுதுகிறேன். வீட்டில் எந்தப் பொருள் காணாமல் போனாலும் அன்னையை வேண்டிக்கொண்டு தேடினால் உடனே கிடைத்துவிடுகிறது. எனக்குமட்டும் இல்லை, என்னைச் சார்ந்தவர்களுக்கும் நடக்கிறது. என் சிநேகிதியின் தங்கை வைர மோதிரம் தொலைத்துவிட்டாள் என்று என்னிடம் வந்து வருத்தப் பட்டாள். நான் அவளுக்காக அன்னையிடம் வேண்டிக்கொண்டேன். தொலைந்து 3 நாட்கள் ஆகியிருந்தது. அன்று இரவு அவர்கள் உறவினர் காரில் கிடைத்தது. அதே சிநேகிதி தன் மகன் சரியாகப் படிப்பது இல்லை, பரீட்சை சரியாக எழுதவில்லை என்று வருத்தப்பட்டாள். என் வீட்டிற்கு வந்து என்னிடம் உள்ள அன்னையின் படத்திற்கு முன் நின்று வேண்டிக்கொண்டாள். அவள் மகன் பாஸ் ஆகிவிட்டான். அவளால் நம்பவே முடியவில்லை. என் இரண்டாவது மகன் மார்க்கு குறைவாக வாங்கி வந்து கொண்டிருந்தான். பரீட்சையில் பாஸ் பண்ணவேண்டும் என்று அன்னையிடம் பிரார்த்தனைபண்ணி வந்தேன். அதன்படி பாஸ் ஆகிவிட்டான். என் கணவர் அடிக்கடி வெளியூர் ஆபீஸ் வேலையாகப் போய்வருவார். அந்த சமயத்தில் நான் தனியாக என் சிறிய மகனுடன் இருப்பேன். அவர் நல்லபடியாகப் போய் வரவேண்டும் என்றும், நான் எந்தக் கஷ்டமும் இல்லாமல் நல்லபடியாக இருக்கவேண்டும் என்றும் அன்னையை வேண்டிக்கொள்வேன். என் இரண்டு மகன்களும் நன்றாகப் படிக்கவேண்டும் என்பதும், அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்பதும்தான் நான் அன்னையிடம் நாள் தவறாமல் வேண்டிவருகிறேன். என் மகன்கள் படிப்பு விஷயத்தில் அவ்வளவு ஆக இப்பொழுது நான் கவலைப் படுவது இல்லை. ஏன் என்றால் அன்னை பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கைதான். என் பெரிய மகன் இந்த வருடம் (D.C.Te) முடிக்கிறான். பிறகு அவனை B.E.சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய விருப்பமும், அவனுக்கும் இதில் விருப்பம். அன்னையின் விருப்பமும் அதுவாக இருந்தால் அவனுக்கு நல்ல college இடம் கிடைத்து அவன் நல்லபடியாகப் படித்து முடிக்க வேண்டும். மனிதப் பிறவியாகிய எனக்கு எவ்வளவோ பிரச்சினைகள், கவலைகள், கஷ்டங்கள் என்று இருந்தாலும் அவற்றையெல்லாம் தீர்க்க அன்னை இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மன அமைதி கிடைக்கிறது. நாம் முழு நம்பிக்கையுடன் அன்னையை வழிபட்டால் நமக்கு வெற்றி நிச்சயம் உண்டு என்பது என் வாழ்க்கை அனுபவத்தில் கண்ட உண்மை.

***********

ஸ்ரீ அரவிந்த சுடர்

சத், பிரம்மம், புருஷன், ஈஸ்வரனாகிறது. மனம் சத்தியத்தைப் பிரம்மமாகவும், தெய்வமனம் புருஷனாகவும், சத்திய ஜீவியம் ஈஸ்வரனாகவும் காண்கின்றது.

பிரம்மம், புருஷனாகி ஈஸ்வரனானால் மனம் தெய்வத்தைக் கடந்து சத்திய ஜீவியத்தை அடைகிறது.



book | by Dr. Radut