Skip to Content

08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

12. சுத்தம்:

சுத்தம் புறத் தூய்மை, அகத் தூய்மை என இரு பகுதிகளாகும். இரண்டும் இருந்தால் சிறப்பு. வாழ்க்கையில் அது முழு யோகம். அகத் தூய்மை மிக உயர்ந்தது. அதை நான் இங்கு எடுத்து விளக்கவில்லை. புறத் தூய்மையை மட்டுமே குறிப்பிடுகிறேன். அதற்குரிய சிறப்பை விளக்கவே இப்பகுதியில் முயல்கிறேன். (purity of atmosphere) வீட்டுச் சூழலில் தூய்மை என்றும் ஒன்றுண்டு. அன்னையின் திருவுருவப்படம் அந்தத் தூய்மையை வளர்க்கும். தெய்வச்சிலை, படங்கள் அதை வளர்க்கும். குட்டிச்சாத்தானை வணங்கினால், சித்து விளையாடுபவர்களுடன் தொடர்புகொண்டால் அந்தத் தூய்மை கெட்டு, இருளின் சூழல் ஏற்படும். பிறருக்குத் தீங்கு செய்யும் மந்திரப் பிரயோகங்கள் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டால், அவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள், படங்கள் வீட்டிலிருந்தால், அன்னையின் திருவருள் அங்குச் செயல்படாது. அப்படியே செயல்பட்டாலும் மிகக்குறைந்த பலனையே தரும்.

வீட்டில் புறத் தூய்மை என்றால் என்ன என்பது எளிமையான கேள்வியாகத் தோன்றுகிறது. அன்னையின் சக்தி (Mother's Force) சத்தியஜீவிய சக்தியாகும் (Supramental Force). அது ஓர் இடத்தில் வர, வந்து நிரந்தரமாகத் தங்க, புறத் தூய்மை (physical cleanliness) அத்தியாவசியம். இது எவ்வளவு முக்கியமானது, கடினமானது என்பதை விளக்க ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். ரூ.25 இலட்சம் செலாவணியுள்ள கம்பெனி முதலாளியின் மனைவி கல்லூரிப் பேராசிரியர். அவர்களுடைய வீட்டில் முக்கிய விருந்து நடந்த அன்று உள்ளே நுழைந்தவுடன் நமக்கு அறிமுகமானது ‘அழுக்கு வாடை’. வீட்டில் பல நாட்களாகச் சேர்ந்துள்ள தூசி, அழுக்கு, அழுக்குத் துணிக்குவியல், இவை எல்லாவற்றையும் மறைத்து வைத்தாலும் தாங்கள் இருப்பதை அறிவிக்க அவை வாடை மூலம் நம்மை வந்தடைகின்றன.

கையை வைத்த இடங்கள் தூசியில்லாமல் இருப்பது என்பது எத்தனை வீடுகளில் இருக்க முடியும்? நம் வீட்டிற்கு அந்தத் தகுதி உண்டா? சுவரில் மாட்டியுள்ள படங்களைத் தொட்டுப் பார்த்தால், விரலால் கோடிட்டுப் பார்த்தால், நாம் எத்தனை நாளைக்கு ஒரு முறை அந்தப் படங்களைச் சுத்தம் செய்கிறோம் என்பது நினைவுக்கு வரும். “குடித்தனம் செய்யும் பெண்ணின் சுத்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அலமாரிக்கு அடியில் பார்த்தால் தெரியும்” என்பார்கள். நாம் தினமும் குளிக்கின்றோம். சிலர் தலையில் தினமும் தண்ணீர் விட்டுக் கொள்வார்கள். தலைமுடி நீளமாக இருப்பதால் தமிழ்நாட்டுப் பெண்கள் தினமும் தலையை நனைப்பதில்லை. வங்காளத்தில் அந்தப் பழக்கம் உண்டு. தலையை தினமும் நீராட்டாவிட்டால் தலையில் அழுக்கு சேர்வது இயல்பு. வீட்டைப் பெருக்குகிறோம். ஆனால் வீட்டில் உள்ள மேஜை, நாற்காலிகளைத் தட்டுகிறோம். அவற்றில் உள்ள தூசி நாம் பயன்படுத்துவதால் அகற்றப்படுகிறது. தினமும் மேஜை, நாற்காலி, படம், அலமாரி, இவற்றை நாம் சுத்தம் செய்வதில்லை. அதிகக் குப்பை சேர்ந்தால் சுத்தம் செய்கிறோம். படங்களுக்குப் பின்புறம், சோபா சீட்டிற்கு அடியில், அலமாரிக்குப் பின்புறம் ஒட்டடை சேரும். எண்ணெய் பொருட்கள் உபயோகிக்கப்படுவதால், பெஞ்சு, ஸ்டூல், முதலியவற்றில் அழுக்கு படை படையாக ஒட்டிக்கொண்டு இருக்கும். சமையல் அறை ஆசாரமானவர்கள் வீடுகளில் சுத்தமாக இருக்கும். மற்ற வீடுகளில் சுத்தமாக இருக்காது. (store room) சாமான்கள் அறை ஒரு வீட்டில் சுத்தமாக இருந்தால், அதை மிகச் சுத்தமான வீடாக நாம் கருதலாம். ஜன்னல், கதவு, மேஜைக்கு அடிப்புறம் முதல் ஆரம்பித்து ஸ்டோர் அறை வரை எல்லா இடங்களையும், எல்லாப் பொருட்களையும், எல்லா நேரத்திலும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் அவசியத்தை நாம் உணர வேண்டும். உணர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை. ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, மற்ற காரியங்களை நிறைவேற்றியபின், இந்த அளவு வீட்டில் தூய்மையை நிலைநிறுத்த முடியுமா என்பது கேள்வி. என்னுடைய பதிலுக்கு இரு பகுதிகள் உண்டு. 1. இந்த அளவு தூய்மையை நம் இன்றைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நிறைவேற்றுவது இயலாத காரியம். 2. தூய்மையை நாம் அன்னையின் வழிபாடாக ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற கங்கணம் கட்டிக்கொண்டால், நம் அத்தியாவசியமான வேலைகள் எதற்கும் குந்தகமின்றி நிறைவேறும். அத்துடன் நம் அத்தியாவசியமான வேலைகள் சிறப்புறும். என் இரு பதில்கள் முரணானவைபோல் தோன்றுகின்றன. முரண்பாட்டை நீக்கி, விளக்கம் கொடுக்கிறேன்.

பொதுவாக நாம் ஆபீஸ், குடும்ப வேலைகள் முடிந்தபிறகு, முக்கியமாக நேரத்தைச் செலவிடுவது எதில் என்று பார்த்தால், சினிமா, நண்பர்களை வரவேற்றுப் பேசுவது, விசேஷங்களுக்குச் சென்று அதிகபட்ச நேரத்தைச் செலவிடுவது, சாரமில்லாத பத்திரிகைகளைப் படிப்பது, அக்கம் பக்கத்துச் செய்திகளை அத்தியாவசியமாகச் சேர்ப்பது என்பன போன்ற செயல்களில் என்று தெரியும்.

மாறாக, பரீட்சைக்குப் படிக்கும்பொழுது, வீடு மாற்றும் பொழுது, திருமணம் ஏற்பாடு செய்யும்பொழுது, எப்படி அவற்றிற்கு முக்கிய முதலிடம் கொடுத்து, பின்னரே அன்றாட வேலைகளை இரண்டாம்பட்சமாகச் செய்கிறோமோ, அதுபோல், “வீட்டின் சுத்தம் அன்னை வழிபாடு” எனக் கொண்டு, அதற்கு முதலிடம் கொடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்கு வேலை செய்வதைப் போல் வேலை செய்து, சுத்தத்தை முழுத் திருப்தியுடன் பூர்த்தி செய்த பிறகு கவனித்தால், ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, அத்தியாவசியமான கடமைகள் எதுவும் தடைபடவில்லை என்று தெரியும். சுத்தத்தைத் தலையாய காரியமாக மேற்-கொண்டு நிலைநிறுத்தியபின் நேரமில்லை என்பது வம்பளப்பதற்கு, ஊர் சுற்றுவதற்கு, சினிமா பார்ப்பதற்குத்தானே அன்றி, அவசியமான கடமைகளுக்கு நேரமில்லாமல் இல்லை என்பது தெரியவரும். இந்த முறையின் ரகஸ்யமே அதுதான்.

வீணான காரியங்களில் மனதைச் செலுத்தாமல் இருக்க முடிவு செய்தால்தான் சுத்தத்தைத் திருப்தியாக நிறைவேற்ற முடியும்.

அப்படிப்பட்ட சுத்தம் அன்னைக்குச் சிறந்த வழிபாடு. அந்த வழிபாடு ஒன்றே வாழ்க்கைச் சிறப்பைத் தேடித் தரும்.

13. ஒழுங்கு (Orderliness):

ஒழுங்கு என்பது (discipline) கட்டுப்பாட்டைக் குறிக்கும். இங்கு orderliness என்ற கருத்தை ஒழுங்கு என்ற சொல்லால் குறிக்கின்றேன். Discipline, regularity என்பவற்றுக்கும், ஒழுங்கு என்ற தமிழ்ச் சொல் பொருந்தும். என்றாலும், Orderliness என்பதே என் தலைப்பு. அதைக் குறிக்கவே ஒழுங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.

பொதுவாக (discipline) கட்டுப்பாடு என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல் regularity என்றாலும் தெரியும். இவை இரண்டையும் நீக்கி (orderliness) ஒழுங்கு என்ற கருத்தை மட்டுமே இங்கு நான் கருதுகிறேன். மேலும் தெளிவுபடுத்த வேண்டுமானால் (clumsiness) குளறுபடி என்ற கருத்துக்கு எதிரானது ஒழுங்கு என்று நான் குறிப்பிடுவது.

அலமாரியில் உள்ள புத்தகங்கள், மேஜை மீதுள்ள பொருட்கள், ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே இங்குக் கூறப்படும் கருத்து. அலமாரி, மேஜையில் ஆரம்பித்து, வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருட்களும் - தலையணை, பாய், பெட்டி, படுக்கை, சமையல் சாமான்கள், மற்ற அறைகளில் உள்ள பொருட்கள் - வேலை நடக்காத நேரத்தில் அழகாகவும், அடுக்காகவும், வரிசையாகவும், ஒழுங்காகவும், நிரந்தரமாகவும் இருக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதையே ஒழுங்கு என்று நான் குறிப்பிடுகிறேன். ஒழுங்கு இருந்தால், அதற்குரிய சுத்தம் தேவை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

வீட்டில் உள்ள பொருட்கள் பலவகைப்பட்டவை; சமையல் சாமான்கள், கடப்பாரை, அரிவாள் போன்ற கருவிகள், புத்தகங்கள், படுக்கை சம்பந்தப்பட்டவை, எப்பொழுதோ உபயோகிக்கப்படும் பொருட்கள் எனப் பல தரப்பட்டவை.

அவையெல்லாம் உபயோகமில்லாதபொழுது ஒழுங்காக, சுத்தமாக அடுக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஓர் எலெக்டிரிக் பில் வேண்டுமானால், L.I.C. ரசீது வேண்டுமானால், B.A. சர்ட்டிபிகேட் வேண்டுமானால் வீடு முழுவதும் தேடுவது பெரும்பாலோர் பழக்கம். அப்படியின்றி, எவை, எங்கு இருக்கின்றன என்ற தெளிவுடன் வைக்கப்பட்டு இருந்தால், ஒன்று வேண்டும் எனும்பொழுது நேராகச் சென்று எடுத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு ஒழுங்குமுறை தேவை. இம்முறையின் சிறப்பு மனதில் இருக்கிறது. மனம் முறையாக இருந்தால்தான், பொருட்களை முறையாக வைக்க முடியும் (பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்பதன் மூலம், மனத்தை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பொருள்). முறைப்படுத்தப்பட்ட மனத்தில் அன்னையின் சக்தி தீவிரமாகச் செயல்படும்.

இதைச் செய்வதில் என்ன கஷ்டம்? ஒருவர் இதைக் கையாள ஆரம்பித்தால் 2, 3 நாட்களுக்குப்பின் அதை விட்டுவிடுவார். அப்படியே அவர் தொடர்ந்து செய்தாலும், இவர் அடுக்கி வைப்பதையெல்லாம் மற்றவர் கலைத்துக்கொண்டே வருவார். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

வெற்றிகரமாக, தொடர்ந்து, சிறப்பாக ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமானால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் வீடு முழுவதையும் ஒழுங்குபடுத்தியபின் அவரவர்கள் தங்கள் தங்கள் பகுதியில் ஒழுங்கைக் கலைக்காமல் தொடர்ந்து கடைப்பிடிக்க ஒத்துக்கொள்ள வேண்டும். அந்த ஒத்துழைப்பில்லாமல் இதைச் செய்ய முடியாது. சுத்தம் (Supramental Force) அன்னையின் சக்தி வந்து தங்க அவசியம் என்பதைப்போல், ஒழுங்கு, குறிப்பாக மனத்தில் ஒழுங்கு, அன்னையின் சக்தி நம்முள் வந்து செயல்படவும், தங்கவும் அவசியம். சிறப்பாக இதைச் செய்து முடிக்க வேண்டுமானால்,

  1. நாம் முதலில் நம் மனத்தில் தீர்க்கமான முடிவை எடுத்து, ஒழுங்கைப் பூரணமாக ஏற்படுத்தி, தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.
  2. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற தீவிர முடிவுக்கு வரவில்லை என்றாலும், செய்து வைத்த ஏற்பாடுகளைக் கலைக்கக்கூடாது. தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அளவிலாவது தீவிரம் கொள்ள வேண்டும்.
  3. ஒழுங்கைப் பூரணமாக நிலைநாட்டத் தேவையான மற்ற பழக்கங்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  4. மாதம் ஒரு முறை அல்லது இரு முறை முதலில் ஏற்படுத்திய அளவுக்கு ஒழுங்கை மீண்டும் திருத்தி அமைக்க வேண்டும் ((Every month the original level of orderliness must be restored).
  5. ஒவ்வொரு மாதமும் அல்லது வாரமும் ஒழுங்கின் தரத்தைச் சிறிதளவு உயர்த்த வேண்டும்.

14. தணிவான பேச்சு:

பொதுவாக நாம் உயர்ந்த குரலில் பேசுகிறோம் என்பது நமக்கே தெரிவதில்லை. மேலைநாட்டார் குழுமியுள்ள இடத்தில் நாம் பேசும்பொழுது அவர்கள் குரல் அளவுக்கும், நம் குரல் அளவுக்கும் உள்ள மாறுபாடு தெரியும்.

பேச்சு என்பது சக்தி (energy). சக்தி என்பது செல்வம். பேச்சைக் குறைத்தால் சக்தி சேரும். சக்தி சேர்ந்தால், பணம் சேரும். அதிக அளவு செல்வத்தைப் பெற பேச்சைப் பெரிதும் குறைத்தல் நலம்.

முதலில் நாம் உயர்ந்த குரலில் பேசுகிறோம் என்று உணர வேண்டும். எதிரில் உள்ளவர்கட்குக் கேட்கும் அளவிலேயே குரலைத் தாழ்த்திப் பேச முயன்று, வெற்றி காணவேண்டும். அதன் பின்னர் பேச்சின் அளவு (i.e number of words) குறைக்கப்பட வேண்டும். ஒரு 10 நிமிஷம் நாம் பேசியபின் - சுமார் 800, 1000 வார்த்தைகள் 10 நிமிஷத்தில் பேசப்படும் - மீண்டும் நாம் சொல்லியவற்றை நினைவுகூர்ந்து அதற்கு ஒரு (precise) சுருக்கம் எழுத வேண்டும். அப்படிப் பார்த்தால் அதே கருத்துகளைச் சுமார் 40, 50 வார்த்தைகளில் சொல்லியிருக்கலாம் என்று தெரியும். குரலின் அளவைத் தாழ்த்தியும், வார்த்தைகளின் ஓட்டத்தைச் சுருக்கியும் பேச வேண்டும்.

குரலைத் தாழ்த்துவதால் நாம் நம் பிராணனை (vital) நம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருகிறோம். வாழ்க்கையை நடத்துவதே பிராணன் என்பதால், பிராணன் கட்டுப்பட்டால் வாழ்க்கை கட்டுப்படும். கட்டுப்பட்ட வாழ்க்கையின் மூலம் அன்னை செயல்படுவது எளிது. வாழ்க்கை நமக்குக் கட்டுப்பட்டு விட்டதால், அன்னையால் நம் வாழ்க்கையை எளிதில் வளப்படுத்த முடியும்.

தாழ்ந்த குரலும், குறைந்த சொற்களும், உயர்ந்த வாழ்க்கை நிறைந்து விளங்க உதவும்.

15. சண்டைகளைத் தவிர்த்தல்:

வாய்ச்சண்டை (quarrel), வாக்குவாதம் (discussion), ஒருவரோடு ஒருவர் பேசாமலிருத்தல் (disharmony), பிணக்கு (conflict), விதண்டாவாதம் (contention) ஆகியவை நம் வாழ்வில் பங்குபெறுகின்றன. “நாலு பேர் சேர்ந்தால் சண்டை வராமல் இருக்காது”, “எவ்வளவு பெரிய இடமானால் என்ன, அங்கே போய்ப் பார்த்தால் தெரியும். எங்கேயும் இதெல்லாம் இருக்கும்”, “சென்ட்ரல் காபினெட்டிலிருந்து, உள்ளூர் காலேஜ்வரை சண்டையில்லாத இடமே இல்லை”, “பெரிய மதாச்சாரியார்களெல்லாம் தவிர்க்க முடியாததை, நம் வீட்டில் இருக்கக்கூடாது என்றால் எப்படி அது நடக்கும்?” என்றெல்லாம் சொல்லி, நாம் சண்டையிடுவது சகஜம் என்று கொள்கிறோம்.

நாம் பழகும் இடத்தில் எந்தச் சண்டையும் என்னால் வரக் கூடாது என்ற முடிவை ஓர் அன்பர் கொண்டால், சண்டைகளைத் தவிர்ப்பதே என் கொள்கை என்றொருவர் ஆரம்பித்து அதில் வெற்றி பெற்றால், அன்னையிடம் அவர் பரிசு பெறலாம். இப்படி ஒருவர் சொன்னால் அதற்கென்ன அர்த்தம்? அவர் மனதில் வெறுப்பு, கசப்பு, பிணக்கு, பொறாமை இல்லை என்று பொருள். அந்த வெற்றியை அவர் பெற்றபின் அவர் நெஞ்சம், அன்னையின் பொக்கிஷம்.

சண்டைகளைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்?

  1. சண்டை அன்னைக்குப் பிடிக்காது என்பதால், அதை அறவே நீக்க வேண்டுமென முடிவு செய்தல்.
  2. நம்முடன் ஒருவர் சண்டைக்கு வந்தால், “இதற்கு நான் எப்படித் துணையாவேன், அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து விலக்குவேன்” என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும்.
  3. பிறர் சொல்வதில் உள்ள உண்மையை அலசிப் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  4. நம் கருத்தில் உள்ள தவற்றை ஆராய்ந்து விலக்க வேண்டும்.
  5. நம் பழக்கத்தில் சண்டையை வளர்ப்பதற்குத் துணையானவற்றைக் கண்டு விலக்க வேண்டும்.

16. குறை கூற மறுத்தல்:

அன்னை (psychic education) சைத்தியப்புருஷனை முன் கொண்டுவரும் கல்வி என்ற பகுதியில் 10 சட்டங்களைச் சொல்கிறார். இது அவற்றில் ஒன்று.

மேல்நாட்டு மனநூல் (psychology) துறையில் ஒரு வாசகம் உண்டு. “உனக்கு ஒருவரைப் பற்றித் தெரிய வேண்டுமானால், அவரைத் தூண்டி பிறரைக் குறைகூறச் சொல். பிறர் மீது அவர் கூறும் எல்லாக் குறைகளும் அவரிடம் இருக்கும்”. நம்மிடம் உள்ள குறைகள் நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உண்மையிலேயே, நம் குறைகளை - நமக்குத் தெரியாதவற்றை - நாம் விரும்புவது இல்லை; வெறுப்பதும் உண்டு. பிறரிடம் நம் குறைகளைக் கண்டவுடன் நம் வெறுப்பு வெளிப்படுகிறது. பிறர் மீது நாம் குறை கூறுவதன் மூலம் நாம் நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறோம். நாம் அவர் மீது குறை சொல்லிவிட்டால் மனம் திருப்தியாகிவிடுகிறது. குறை சொல்லாவிட்டால் அந்தச் சக்தி (energy) நம்மைத் திருத்திக்கொள்ள உதவும். குறையைச் சொல்லிவிட்டால் நம்மைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகிறோம்.

“பிறரைத் திருத்த முடியவில்லை என்றால், அவர் மீது குறை கூறாதே” என்கிறார் அன்னை.

பிறரிடம் ஒரு குறையைக் கண்டபின், அதைப் பேச மனம் துடிக்கும். அந்தத் துடிப்பு நமக்குக் கட்டுப்படாது. அவருடைய குறைக்குக் காரணம் புரிந்துவிட்டால், குறை சொல்லத் தோன்றாது. ஆகவே குறையைச் சொல்வதற்குப் பதிலாக, அதன் காரணத்தை அறிய முற்பட வேண்டும். அந்தக் குறையுள்ள மனிதனுடன் நாம் பழகவேண்டியது எதனால்? நம்மிடம் உள்ள ஒரு குறையே குறை உள்ள ஒரு மனிதனை நம்மிடம் கொண்டு வந்துள்ளது என்று உணர வேண்டும். நம் குறையை அகற்றினால், அவர் மாறுவார் அல்லது நம்மை விட்டகலுவார்.

ஓர் இளைஞன் தன்னைவிட 10 வயது பெரியவர் ஒருவருடன் பழகினான். பெரியவருடைய முழு சுயநலம் இளைஞனைப் பாதித்தது. ஏன் சுயநலமி என்னிடம் வரவேண்டும்? என யோசனை செய்தான். சுயநலம் நிரம்பியவருடனும், அவர் மனம் கோணாமல் தன்னால் பழக முடியும் என்று தான் பெருமைப்படுவதை உணர்ந்தான். அடுத்த நாளிலிருந்து அந்தச் சுயநலமிக்கு வேறு வேலை வர இவர்களுடைய சந்திப்பு 1%ஆகக் குறைந்துவிட்டது.

யார் மீதுள்ள குறையையும் வெளியில் சொல்ல முழுவதுமாக மறுத்தால், நம் மனத்திலுள்ள குறைகளை அகற்ற முடியும். இது அன்னை விரும்பும் மனப்பாங்கு. இதை ஏற்று பூரணமாகப் பயின்றால், அன்னை நம்மிடம் பூரணமாக வந்து தங்குவார்கள்.

17. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அன்னை கூறியதைத் தெரிந்துகொள்ளுதல்:

அன்னையைப் பற்றிய முக்கிய விஷயங்கள் பல. அவை எல்லாம் (public secret) எல்லோருக்கும் தெரிந்த இரகஸ்யங்கள் எனலாம். உதாரணமாக, பொய் சொல்லக்கூடாது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததே. ஆனால் வேறொரு வகையாகப் பார்த்தால், அதுவே பெரிய யோக ரகஸ்யமாகும். அதனால் சாதிக்க முடியாத யோக சித்திகள் கிடையாது.

அழைப்பு, சமர்ப்பணம் என்பவை அதுபோல் அன்னைக்கு முக்கியமானவை. இதைத் தெரியாதவர்கள் இல்லை. எவரும் பின்பற்றுவதில்லை. அன்னை கூறியதைத் தெரிந்துகொள்ளுதல் எனும்போது அன்னை எழுதியுள்ளவற்றைப் படிப்பது எனப் புரிந்துகொண்டால் விஷயம் தடம் மாறிப்போகும். எதிர்பார்த்த பலன் இருக்காது. சாதாரணமாக ஒரு விஷயத்தைப் படித்துத் தெரிந்துகொள்வதற்கும் (to know it as information), அதன் உட்கருத்தை உணர்ந்து புரிந்து கொள்வதற்கும் (to receive it as knowledge) உள்ள வித்தியாசத்தை ஓர் உதாரணத்தின் மூலம் கூறுகிறேன்.

அன்னை தம் சாதகர்கள் மௌனமாயிருப்பதை விரும்பவில்லை. அதிகமாகப் பேசுவது தவறு என்கிறார். நம் மரபுக்கு மாறாகப் பேச்சை அவசியமான அளவுக்குப் பேச வேண்டும் (controlled speech) என்று சொல்கிறார். இதன் உட்கருத்து விளங்காவிட்டாலும், இந்த முறையைக் கையாள்பவர்களுக்கு அது பலன் தரும். (இங்கு நாம் கருதுவது என்னவென்றால் முறையைக் கையாளாமல், அம்முறையின் சூட்சுமக் கருத்தைப் புரிந்துகொள்வதால் அம்முறையைக் கையாண்ட பலன் எப்படி கிடைக்கும் என்பதே. இந்தத் தலைப்பு அதற்காக ஏற்பட்டதே. ஒரு முறையைக் கையாண்டால் அதற்குப் பலன் உண்டு. எல்லாக் கருத்துகளின் சூட்சுமத்தை உணர்ந்தால், ஒரு முறையைக் கையாளும் பலன் உண்டு). அளவோடு பேச வேண்டும் என்பதை எவரும் எளிமையில் புரிந்துகொள்ளலாம். மௌனம் தேவையில்லை. அதிகமாகப் பேசக்கூடாது. தேவையான அளவுக்குப் பேசவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை. அப்படிப் புரிந்துகொண்டால் அதன் உட்கருத்துப் புரியாது. சூட்சுமம் புரியாது. இதன் உட்கருத்து ஒரு யோகப் பயிற்சி. பேசுவது இயல்பு. அதைக் கட்டுப்படுத்துவது கடினம். அதை விலக்கி, 10, 20 ஆண்டுகள் ஒருவர் பேசாமலிருப்பது சிறப்பு. அவரை மௌனி, சாது என்கிறோம். இவர் வாயால் பேசுவதில்லை. மனத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கும். மனத்திலும் மௌனம் நிலைத்தால் இவர் முனிவராகிறார். அது பெரிய நிலை.

மௌனம் என நாம் சாமியார்களிடையே அறிந்தது வாயால் பேசுவதில்லை என்பதே. அதுவும் மிகக்கடினம்.

அன்னை, மனத்தில் உள்ள மௌனம் நிலைத்த பிறகும் வாயால் பேசாமல் இருப்பது அவசியமில்லை என்கிறார். கரு உள்ள இடம் இதுதான்.

சிறப்பான மனிதன் யோகத்திற்கு வருகிறான். அவனைப் பேசு என்றால் பேசுவான். பேசாதே என்றால் பேசாமலிருப்பான். சாதாரண மனிதனால் முடியாததை அவன் செய்வான். ஆனால் அன்னை, “தேவைப்பட்ட அளவுக்குப் பேசு” என்கிறார். கூர்ந்து கவனித்தால் வாயால் பேசாதவன் மனத்தில் பேசிக்கொண்டிருக்கிறான். மனத்திலும் மௌனம் பூண்டவனுக்கும் பேசவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அது அழியவில்லை. தன் மன வலிமையால் அந்த ஆசையை அடக்கிவைத்திருக்கிறான். அவன் சில வார்த்தை பேச ஆரம்பித்தால் தன் கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து பேசுகிறான். ஏனெனில் பேசவேண்டும் என்ற ஆசை அழியவில்லை. அந்த ஆசையையும் ஒழித்தவன் சில வார்த்தைகள் பேசினால், அதன் மூலம் கட்டுப்பாட்டை இழக்கமாட்டான். எனவே அன்னை அளவோடு பேசு என்று சொல்வதன் உட்கரு பேசவேண்டும் என்ற ஆசையை அழித்திடு என்று பொருள். ஆசையானது பேச்சைப் பொறுத்த அளவில் அழிக்கப்பட வேண்டும் என்பதே இதில் உள்ள சூட்சுமம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.

நமது அன்றாட வாழ்வில் பெற்றோருடன் பழகுவது, குழந்தைகளைக் கண்டிப்பது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது, படிப்பது, பொழுதுபோக்குக்காக ஒன்றைச் செய்வது, என்றெல்லாம் சுமார் 400, 500 விஷயங்கள் உள்ளன.

முதலில் சொல்லியதுபோல் - எல்லோருக்கும் தெரிந்த இரகஸ்யம் - அன்னை ஒரே ஒரு விஷயத்தில்கூட நம் மரபை ஏற்றுக்கொள்வதில்லை. மரபில் உள்ள ஒவ்வொரு விஷயத்திலும் அன்னை மாறுபட்ட கருத்தை, பழக்கத்தை அளிக்கின்றார். நாம் நம் வாழ்வில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் அன்னை என்ன சொல்லியிருக்கிறார்? அதன் சூட்சுமம் என்ன? மரபிலிருந்து எப்படி அது மாறுபட்டது? என்பதைத் தெரிந்துகொண்டால் - ஒரு விஷயத்தில் இல்லை, எல்லா விஷயத்திலும் தெரிந்துகொள்ள வேண்டும் - அந்த ஞானத்திற்கு ஒரு முறையை முழுவதும் கையாளும் பலன் உண்டு.

ஆன்மீக ஞானத்திற்கும் (spiritual knowledge) அன்னையின் ஞானத்திற்கும் (Mother's knowledge) உள்ள வித்தியாசம் முக்கியமானது. ஆன்மீக ஞானத்தின் திறனை ஆன்மா மட்டுமே பெற முடியும். அன்னையின் ஞானத்தின் திறனை வாழ்க்கையும் பெற முடியும். ஒரு தபஸ்வி ஆன்ம ஞானம் பெற்றால், அதனால் அவர் மோட்சமடையலாம். அவருடைய வாழ்வைப் பொலிவுபடுத்தும் திறன் அவருடைய ஆன்மீக ஞானத்திற்குக் கிடையாது. அவருக்கு வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கைத் தேவையும் இல்லை. அதனால் அவருக்குப் பிரச்சனை இல்லை. வாழ்க்கையில் ஞானி ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால், வாழ்க்கையில் உள்ள பெரியவர்கள் எவரும் அவருக்குக் கட்டுப்படுவார்கள். அவர்கள் மூலமே அதை அவர் நிறைவேற்ற வேண்டும். அன்னையின் ஞானத்திற்குத் தன்னிறைவு (self fulfilment) உண்டு. ஞானம் இருப்பதால், தானே அது வாழ்க்கையில் பூர்த்தி பெறும். இது அன்னையின் சிறப்பு. அதனால் அன்னையின் முறைகளின் சூட்சும ஞானத்தை அறிவதால் அன்பர்களுக்கு வாழ்க்கையில் பூரணம் உண்டு.

18. பிறர் கண்ணோட்டத்தில் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்:

அக்பர் அரண்மனையில் உள்ள வீடு பெருக்குபவன் (sweeper) ஒருவனுடைய இராசி பயங்கரமானதென அறிந்து, அவனைக் காலையில் பார்க்க எல்லோரும் பயப்படுவார்கள்.

ஒரு நாள் அக்பர் அவன் முகத்தில் விழித்தார். அன்று அரண்மனையில் தகராறு. வெளிநாட்டுப் படையெடுப்பைப் பற்றிய ஒற்றர் தகவல். அக்பர் அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தார். அவருடைய மந்திரி, “தண்டனைப் பெரிது. பெருக்குபவனது (sweeper) மனதில் என்ன இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்வதும் அவசியம்” என்றார். அக்பர் அவனைக் கூப்பிட்டனுப்பினார். மந்திரி, “இன்று காலையில் நீ யார் முகத்தில் விழித்தாய்?” என்று கேட்டார். அவன் சக்கரவர்த்தி முகத்தில் விழித்ததாகச் சொன்னான். மந்திரி மேலும் அவனை என்ன நேர்ந்தது என்றார். தன்னைத் தூக்கு மேடைக்கு அனுப்பினார்கள் என்றான். அரசன் மன்னித்தான்.

பெருக்குபவன் முகத்தில் விழித்ததால், தனக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன என அரசன் நினைத்தால், அரசன் முகத்தில் விழித்த அவனுக்கு உயிர் போகும் ஆபத்து வந்தது என்று அவன் கருதுகிறான். அது உண்மையும்கூட. எந்தப் பிரச்சனையையும் எதிராளியின் நோக்கில் புரிந்துகொள்ள முயன்றால் உண்மை விளங்கும்.

ஒரு பிரச்சனை நம்மை எப்படிப் பாதிக்கிறது என்றுதான் நாம் நினைப்பது வழக்கம். பிறர் கண்ணோட்டம் என்ன என்று நினைப்பவர் குறைவு. அப்படி நினைப்பதே ஒரு நல்லெண்ணம்; விசால புத்தி. அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் அப்படி நினைக்க நாம் நமக்குப் பயிற்சி அளித்துக்கொண்டால், மனமும் ஆத்மாவும் பக்குவம் அடையும். பக்குவமான ஆத்மா மூலம் அன்னை சிறப்பாகச் செயல்பட முடியும்.

19. நம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்தல்:

ஒரு பிரபலமான ஹனுமார் கோயில். அங்குக் கொண்டாடும் லக்ஷ தீப திருவிழாவுக்கு ஜில்லாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதுண்டு. அக்கோயிலின் பிரபலத்திற்கு முக்கியக் காரணம் அங்குள்ள குருக்கள்தான் என்பார்கள். குருக்களுக்கு ஹனுமாரிடம் ஈடுபாடு அதிகம். அவருடைய ஆர்வத்தாலேயே கோயில் பிரபலம் அடைந்தது. அவருடைய முகம் ஹனுமார் போலவே இருக்கும். குருக்கள் ஹனுமாரைத் தம் ஆன்மாவிலும், உடலிலும் பிரதிஷ்டை செய்துள்ளார். ஹனுமார் மீதுள்ள பக்தியால் (identification) அவருடன் ஒன்றிப் போய்விட்டார். தம் முகம்கூட தாம் வணங்கும் தெய்வத் திருவுருவம் தாங்கும் அளவுக்கு ஹனுமாருடன் குருக்கள் உள்ளும், புறமும் இரண்டறக் கலந்துவிட்டார்.

நம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்யும்முன், நாம் அன்னையை மனதில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். கண்களை மூடி உள்ளே மூடிய கண்களின் பார்வையைச் செலுத்தினால், அன்னை மனத்தில் கோயில் கொண்டுள்ளது தெரிய வேண்டும். அந்நிலைக்கு வந்த பின்னரே வீட்டில் அன்னையின் சாந்நித்தியத்தை நிலைபெறச் செய்ய முடியும்.

சுருக்கமாகச் சொன்னால், வீட்டில் உள்ளவர் அனைவரும், அன்னைக்குப் புறம்பான செயல்களை விலக்கி, அன்னைக்கு முக்கியமான செயல்களை விரும்பிச் செய்தால், அன்னையை வீட்டில் பிரதிஷ்டை செய்வது எளிது. அப்படியில்லை என்றால் அதிகமான பிரயத்தனத்தால்தான் அதைச் சாதிக்க முடியும். நம் மனத்திலும், உடலிலும் அன்னையைப் பிரதிஷ்டை செய்தல் முதற்படி. இடையறாது மனத்தால் நினைத்தால் அன்னை அங்கு நிரந்தரமாகக் குடியேறுவார். உடலைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, உடலால் மனதறிந்த தவறு எதுவும் செய்யாவிட்டால், உடல் அன்னை குடியேறுவதற்குத் தகுதி உள்ளதாகிவிடும். நம் உடல் அல்லது உடலுக்குரிய சூட்சுமச் சக்கரத்தில், அதாவது மூலாதாரத்தில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முயன்று, வெற்றி பெறுதல் அடுத்த கட்டம். எளிதானது இல்லாவிட்டாலும், அது பலித்துவிடும். பின்னர் நம் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறிது நேரம் தினமும் நின்று தியானம் செய்தால், நாளடைவில் வீட்டில் அன்னையிருப்பது தெரியும். 19 வயது பையன் ஓர் அன்பர் வீட்டிற்கு வந்தான். சற்றுத் தொலைவில் அவனுக்கு அவர் வீட்டிற்கு மேலே பெரிய ஒளி தெரிந்தது. யாரிடமும் சொல்லக் கூச்சப்பட்டான். அவர் வீடு மாறினார். புது வீட்டில் அவனுக்கு ஒளி சிறிதே தெரிந்தது. 3 மாதங்களுக்குப் பின்னர் புது வீட்டில் பழைய அளவுக்கு அவனால் ஒளியைப் பார்க்க முடிந்தது. பின்னர் அவன் அவரைச் சந்தித்து தான் கண்டதைச் சொல்லி விளக்கம் கேட்டான்.

பக்தருடைய இடைவிடாத தியானம் அன்னையின் ஒளி அவர் வீட்டில் வானளாவ உயரும்வரை கொண்டு வந்துள்ளது.

20. அன்னையை நம் வீட்டில் உள்ளவர் அனைவர் மனத்திலும் பிரதிஷ்டை செய்வது:

தம் மனதில் அன்னையைப் பிரதிஷ்டை செய்தவராலேயே இதைச் செய்ய முடியும். இடைவிடாது அன்னையைப் பக்தியுடன் நினைவுகூர்பவருக்கு மனதில் அன்னை வந்து நிரந்தரமாகத் தங்குவார். நம் மனதில் அன்னை தங்கிவிட்டார் என்பதற்கு ஏதாவது அறிகுறி உண்டா? என்றால் முக்கியமானவற்றை மட்டும் சொல்கிறேன். ஏராளமான அறிகுறிகள் உண்டு.

  1. மனம் அலாதியான சந்தோஷத்தால் நிரம்பி வழிந்து, லேசாகி, வாழ்க்கையில் பிரச்சனையே இல்லை என்று கருதும்.
  2. தூக்கம் தியானம் போன்றிருக்கும். தூங்கி எழுந்தால் தியானம் கலைந்தது போன்றிருக்கும்.
  3. பயம், சந்தேகம், கவலை போன்றவை எக்காரணத்தை முன்னிட்டும் எள்ளளவும் இருக்காது.
  4. கண்களை மூடினால் அன்னை நெஞ்சில் இருப்பது தெரியும். உருவம் தெரியாவிட்டாலும், அன்னை இருப்பதைத் தெளிவாக உணர முடியும்.

தன் மனதில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ததைப் போலவே அன்னையை உணர்விலும், உடலிலும், வீட்டிலும் முழுமையாகப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதுவே முதற்படி. சுருக்கமாகச் சொன்னால் எந்த உணர்ச்சி வரும் முன்னரும் அன்னை நினைவு வந்தால் அன்னையை உணர்வில் பிரதிஷ்டை செய்தாயிற்று எனலாம். எந்தச் செயலையும் ஆரம்பிக்கும் முன்னே அன்னை நினைவு தானே வந்தால் உடலில் அன்னை உறைகின்றார் என்று பொருள். நம் வீட்டிற்கு வருபவர்கள் இது அன்னை குடியிருக்குமிடம் என்று உணர்ந்தால், நம்மிடம் சொன்னால் அன்னை நம் வீட்டிற்கு வந்துவிட்டார் என்று அர்த்தம்.

இதுவரை செய்வதே பக்தனைப் பொறுத்தவரை பெரிய காரியம். அடுத்த கட்டமே அன்னையை நம் வீட்டார் மனதில் பிரதிஷ்டை செய்வது. அதையும் பூர்த்தி செய்வது யோகத்தில் வெற்றி கண்டதற்கு நிகராகும்.

நம் வீட்டில் உள்ள அனைவரும் நம்மிடம் நல்லெண்ணம், அன்பு, நம்பிக்கையுடையவராயிருந்தால்தான் இதைச் செய்ய முடியும். நமக்கு முரணானவர், நம்மைப் பிடிக்காதவர், நம் மீது நம்பிக்கையில்லாதவர், நம் மீது கசப்புள்ளவர்கள் மனதில் நம்மால் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முடியாது.

முயன்றால் பலன் எதிர்மாறாக இருக்கும். இதைச் செய்யும்பெõழுது பிறரைக் கலந்து ஆலோசிக்காமலே செய்ய வேண்டும்.

எப்படி ஒருவருடைய மனதைத் தெரிந்துகொள்வது என்ற கேள்வி 10-இல் 9 பேரிடம் எழாது. ஏதோ ஒருவர் விஷயத்தில் நாம் தெளிவில்லாமல் இருப்போம். நாம் அன்னையை இவர் மனதில் இருத்தினால் இவர் ஏற்றுக்கொள்வாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்தால், சுலபமாகச் சோதனை செய்யலாம். நாம் மனதை ஒரு நிலைப்படுத்தும்பொழுது (concentrate) தலையிலாவது, நெஞ்சிலாவது ஒரு நிலைப்படுத்துகிறோம். அதே போல் தியான அறையில் இருந்து ஆபீஸில் நம் அறையில் நாம் நம் மனதை ஒரு நிலைப்படுத்தலாம் (we can concentrate on our office while sitting in our meditation room). அதே போல் மற்றவர் மனதில் நம் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்தினால், அன்னையை அவர் மனதில் நாம் நினைத்தால், மாடியிலிருந்த அவர் எழுந்து உங்களை நோக்கி வந்தால், அல்லது அவர் முகம் மலர்ந்தால், அல்லது உங்கள் கருத்தை அவர் வெளியிட்டால், (நீங்கள் நினைத்தபடி அவர் செய்தால்), அல்லது பொதுவாக அவர் நல்ல காரியம் செய்தால், நீங்கள் அவர் மனதில் அன்னையை இருக்கச் செய்ததை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள். மாறாக அன்னையை அவர் மனதில் நீங்கள் நினைத்தவுடன் அவருக்கு எரிச்சல் வந்தால், உங்களிடம் சண்டைக்கு வந்தால், உங்களைத் திட்டிப் பேசினால், கொட்டாவி வந்தால், அவர் எழுந்து நடக்கும் பொழுது மேஜை மீது இடித்துக்கொண்டால், அன்னையை அவர் ஏற்றுக்கொள்ளவில்øல எனப் பொருள்.

பிள்ளைகளானாலும், கணவனானாலும், மனைவியானாலும், பெற்றோரானாலும், அன்னையை அவர்களுக்கு வலியுறுத்தி, அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக, கொடுக்க முயலக் கூடாது. அது தவறு; பிடிவாதமாக அதை ஒருவர் செய்தால் மற்றவரால் அவருக்குத் தீங்கிழைக்க முடியும்.

நம்மவர் அனைவரும் நம்மிடம் நல்லெண்ணம் உள்ளவர் எனக் கொள்வோம். நம் மனதில் concentrate செய்வதற்குப் பதிலாக அவர் மனதில் வர ஆரம்பிப்பார். நம்முள் எப்படி அன்னையைப் பிரதிஷ்டை செய்தோமோ, அப்படியே மற்றவர் மனத்திலும் பிரதிஷ்டை செய்யலாம். “நான் உங்கள் நெஞ்சில் எல்லாம் குடி இருக்கிறேன்” என அன்னை ஆசிரமவாசி ஒருவரிடம் சொல்லியது இதைத்தான். நம்முள்ளும், நம்மவர் மனதிலும், நம் வீட்டிலும் அன்னையைப் பிரதிஷ்டை செய்தவருடைய வாழ்க்கை புனிதம் நிறைந்ததாகவும், புதுமை உள்ளதாகவும் இருக்கும்.

21. பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களைப் பயிலுதல்:

22. அன்னையின் நூல்களைப் படித்து ஆன்மீகப் பலன் பெறுதல்:

பகவான் எழுதியவை, அன்னை எழுதியவை ஆகியவற்றிற்கு மந்திரசக்தியுண்டு. தினமும் இந்த நூல்களில் சில பக்கங்களைப் படிப்பது தியானத்திற்கு ஒப்பாகும். படித்து முடித்தவுடன் தியானம் வருவது தெரியும். பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டவர் Life Divine படிக்கச் சொல்லிக் கேட்டு அதனாலேயே குணம் அடைந்தார்.

இரவு படுக்கப் போகும் முன் Synthesis of Yoga எனும் நூலில் ஓரிரு பக்கங்கள் படிப்பது நல்லது என்று அன்னை சொல்கிறார். அன்னையின் நூல்களைப் பயிலும் முறையை, பொதுவாக, படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளுதல் நலம்.

ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களைப் பயில விரும்புபவர்கள் தீவிரமாக ஒரு காரியத்தைச் செய்பவர்களாக (serious people) இருத்தல் நலம். அன்னையின் நூல்கள் எளிமையானவை. நுணுக்கமான கருத்துகளை அன்னை அவற்றில் தெரிவிக்கிறார். இந்நூல்களைப் பயில்பவர்கள் அன்னையின் விளக்கங்களின் நுணுக்கத்தை அறிந்து படித்தல் முழுப் பலனைத் தரும். அவை எளிமையாக எழுதப்பட்டுள்ளன.

ஸ்ரீ அரவிந்தருடைய நூல்கள் எளிமையானவை அல்ல.

ஆழ்ந்த கருத்துகளைத் தாங்கி வருபவை. சரியான மனப்பக்குவத்துடன் அவற்றைப் பயின்றால் பகவானுடைய (consciousness) யோகப் பக்குவம் படிப்பவரை வந்தடையும் என்கிறார்.

(Serious minded people) நெறியான வாழ்க்கையை உடையவர்களுக்குப் பகவானுடைய நூல்களும், மற்றவர்களுக்கு அன்னையின் நூல்களும் பொருந்தும். இவற்றைப் பயிலுவது ஒரு யோகப் பயிற்சியாகும். தியானத்திற்கு ஒப்பாகும்.

23. மந்திர ஜெபம்:

மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. தொடர்ந்து அவற்றை ஜெபிப்பதால் அந்தச் சக்தி நம்முள் செயல்படும். ஸ்ரீ அரவிந்தர் எழுதிய ஸ்ரீ அரவிந்தரின் காயத்ரி மந்திரம் அன்னையைப் பற்றி எழுதிய மந்திரம் சிறப்பானவை. அன்னை விரும்பி ஜெபித்த மந்திரம் “ஓம் நமோ பகவதே”. அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் திருநாமங்களே இந்த யோகத்தில் எல்லா மந்திரங்களைவிட உயர்ந்தவை என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

மந்திர ஜெபத்தால் தியானம் பலிக்கும். நம் பிரார்த்தனைகளுக்கும் வலிமை கூடும். மந்திர ஜெபத்தை விரும்பி ஏற்றுக்-கொள்பவர்களுக்கு இது ஏற்ற முறையாகும்.

24. புற நிகழ்ச்சிகளை நம் உள்ளுணர்வைப் பிரதிபலிப்பதாகக் கருதுவது:

அடிப்படையில் மண்ணும், மனிதனும் ஒன்றே. நம் சூழ்நிலையின் ஒரு பகுதியே நாம் என்ற கருத்தை அஸ்திவாரமாகக் கொண்ட கருத்து. மரத்தின் வேர், அடிமரம், கிளை, பட்டை, காய்ந்த சருகு, தளிர் இலை, பூ, மொக்கு, காய், பழம், எதையும் மைக்ரோஸ்கோப்பின் (microscope) அடியில் வைத்துப் பார்த்தால் எல்லாம் ஒன்றுபோல் இருக்கும். பழத்திற்கு ருசி உண்டு; பூவுக்கு வாசனை உண்டு; தளிர் பச்சையாக இருக்கும்; பட்டை காய்ந்து போனது; ஆனால் மைக்ரோஸ்கோப்பின் அடியில் தெரிவது அவற்றின் அடிப்படை அமைப்பு. அவை எல்லாம் ஒரே அமைப்பு. மேலும் சொல்லப்போனால், மரமும், அது வளரும் மண்ணும் ஒன்றே. மரம் ஒரே இடத்திலிருக்கிறது; மனிதன் நடமாடுகிறான். மரத்தையும், மனிதனையும் உற்பத்தி செய்தது மண். எனவே, மண்ணும், அது உற்பத்தி செய்த மரமும், மனிதனும் அடிப்படையில் ஒன்றேயாகும். அதே போல் நம் அக உணர்வுகள், புற நிகழ்ச்சிகள் என்கிறோம். அது நமக்குத்தான் வேறுபாடாகத் தெரிகிறது. புறமும், அகமும் ஒரு பெரிய சூழலின் பகுதிகளே. எனவே அகமும், புறமும் ஒன்றே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்துகொள்ளலாம். கண்ணாடி முகத்தைப் பிரதிபலிக்கிறது. புற நிகழ்ச்சிகள் அக உணர்வைப் பிரதிபலிக்கின்றன. பல நாட்கள் கழித்து வரப்போகும் பெரிய நல்ல செய்தியையும், கெட்ட செய்தியையும் புற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பவரால் தெரிந்துகொள்ள முடியும்.

இரு கூட்டாளிகள். பணம் போட்டவர் ஒருவர். உழைப்பவர் ஒருவர். Project ஆரம்பித்த 12 மாதத்தில் 2 இலட்ச ரூபாய் முதல் 6 இலட்சம் இலாபம் சம்பாதித்தது. தகராறு வந்தது. கஷ்ட கூட்டாளி தாமே விலகிவிட்டார். விலகியவர் ஆசிரமச் சாப்பாட்டறையில் சாப்பிட வரிசையில் வந்து நின்றார். தோளில் ஒருவர் கைவைத்து அவரை அழைத்து, கையில் கொஞ்சம் பாதாம் அல்வாவைக் கொடுத்து, “அன்னையிடமிருந்து வந்தது; பிரசாதம்; சாப்பிடுங்கள்” என்றார்.

11-ஆம் நாள் பணம் போட்டவருடைய குடும்பத் தலைவர், கூட்டாளிகளுக்குள் நடந்ததைக் கேள்விப்பட்டு Project-ஐ கஷ்டக் கூட்டாளிக்கே கொடுக்கும்படிப் பணம் போட்டவரைப் பணித்தார். அன்னையிடமிருந்து வந்த பிரசாதம் அவர் மனநிலையைப் பிரதிபலித்தது. கூட்டாளிகளுக்குள் பிணக்குக் கூடாது என்ற மனநிலை அன்னையின் பிரசாதத்தில் பிரதிபலிக்கிறது. அன்னையின் பிரசாதமாக அவருக்கு முழு Project கிடைத்தது.

பெரிய விஷயங்களில் அக உணர்ச்சியைப் புற நிகழ்ச்சிகள் பிரதிபலிப்பதை உணர ஆரம்பித்து, எல்லா நிகழ்ச்சிகளையும் அது போல் புரிந்துகொள்ள ஆரம்பித்து, கடைசியில் மிகச்சிறிய நிகழ்ச்சிகளுக்கும் அதே போல் விளக்கம் தெரிந்துகொண்டால், ஒரு வகையில் யோகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டதற்குச் சமம். ஒருவருக்கு வாய் தெற்றும் (stammering). அவர் யாரைப் பார்த்தால் வாய் அதிகமாகத் தெற்றுகிறது, யாரைப் பார்த்தால் குறைவாகத் தெற்றுகிறது என கவனிக்க ஆரம்பித்தால், இந்த படிப்பினையே அவருடைய தெற்றுவாயை முழுவதுமாகக் குணப்படுத்த உதவும்.

நாம் இருக்கும் இடம், நாம் பழகும் நபர்கள், மனத்தில் எழும் எண்ணங்கள், ரோட்டில் போகும்பொழுது கண்ணில் படும் காட்சிகள், காதில் விழும் சொற்கள், ஆகிய அனைத்தையும் கவனித்துப் பார்த்தால், அவற்றுக்குள்ள தொடர்பு தெளிவாகத் தெரியும். நம் மனம் பதட்டமாக இருந்தால், கண்ணில் படும் காட்சிகள் சச்சரவாக இருக்கும். கண்ணில் தெரியும் தோற்றம் இனிமையானதானால், நம் எண்ணங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். ஒருவர் இப்பயிற்சியை ஆரம்பித்துக் கூர்மையாகத் தம்மையும், நிகழ்ச்சிகளையும் கவனித்தால், அவருடைய செயல்கள் சிறப்படையும். அந்நிலைக்கு வந்தவருக்கு அவரை அறியாமல் எதுவும் நடக்க முடியாது. அவருடைய வாழ்க்கை அந்த அளவில் அவருக்குக் கட்டுப்படும். அவரால் தம் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்க முடியும். இது ஒரு பெருந்திறன்.

தொடரும்...

*********



book | by Dr. Radut