Skip to Content

11. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

6. சூட்சுமப் பார்வை

கண் பார்வை இல்லாத திருதராட்டினனுக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றை அறிவிக்க, சஞ்சயனுக்குச் சூட்சுமப் பார்வையை அளித்தார் வியாச பகவான். வெகுதூரத்தில் - கண் காணாத இடத்தில் - நடப்பதைப் பார்க்கக்கூடியச் சக்திக்குச் "சூட்சுமப் பார்வை' (subtle vision) என்று பெயர். ஊனக் கண்களுக்குத் தெரியாதவற்றைக்கூட இந்தச் சக்தியால் கண்டறியலாம். என்றாலும் அவை ஞானக் கண்கள் ஆகா. ஞானத்தால் சூட்சுமப் பார்வை ஏற்பட்டால், அதற்குப் பெயர் ஞான திருஷ்டி.

கடவுளர்க்கும், கன தவம் மிக்கார்க்கும் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த ஞான திருஷ்டி, சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அரிதாகக் கிடைப்பதுண்டு. பொதுவாக, ஆண்களைவிட பெண்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களைவிடக் கிராமத்தில் இருப்பவர்களுக்கும், படிப்புக் குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த ஞான திருஷ்டி இயல்பாய் அமையும். இது அவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ புரிவதில்லை.

அது நடந்தது 1958இல். அது ஒரு பெரிய குடும்பம். அது வசதியில் பெருத்த குடும்பம் இல்லை. உறுப்பினர்களை அதிகமாகக் கொண்ட குடும்பம். ஒரு நாள் அந்தக் குடும்பத்தின் தலைவி, "இன்று மாலை மகாலட்சுமியைப் போன்ற தோற்றமுள்ள ஒரு பெண் எங்கள் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்து வந்ததை நான் என் கண்களால் கண்டேன்'' என்றாள்.

அதைக் கேட்ட அனைவரும் அவளைக் கேலியாகப் பார்த்துச் சிரித்தார்கள்; "உளறுகிறாள்" என நினைத்தார்கள். அடுத்த ஆண்டு, அந்தத் தலைவியின் குடும்பத்தில் ஊற்றெடுத்துப் பெருகிய செல்வ வளத்தைக் கண்டு அவர்களே பிரமித்து நின்றார்கள். இத்தனைக்கும் ஒரே சமயத்தில் ஆயிரத்தை மொத்தமாகப் பார்க்காத குடும்பம் அது. ஆனால் அந்தக் குடும்பம் அடுத்த ஆண்டு இலட்சத்தை இருப்புக் காட்டியது. போகப் போக இலட்சம் கோடி ஆயிற்று; கோடி பல கோடியாயிற்று. அந்தக் குசேலக் குடும்பம் சில ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரக் குடும்பமாகிவிட்டது. எல்லாம் மகாலட்சுமி அந்தக் குடும்பத்தில் கால் எடுத்து வைத்த மகத்துவம்!

இந்த மகத்துவத்தைப் புலனுக்கு அப்பாற்பட்ட திருஷ்டியின் மூலம் கண்டறிந்து கூறிய அந்தக் குடும்பத் தலைவி, எழுத்து வாசனையையே அறியாதவர். ஆனால் அவர் 1958இல் வார்த்தையாகச் சொன்னது, 1980இல் வளமான வாழ்க்கையாக மலர்ந்தது.

1963இல் ஓர் எஸ்டேட் முதலாளி தம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் ஸ்ரீ அரவிந்தரின் திருவுருவம் சுவரில் ஒளிமயமாகத் தெரிவதைக் கண்டார். பக்திப் பரவசத்துடன் அங்கு ஓடினார். கீழே சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு வெறுஞ் சுவர்தான் தெரிந்தது. சூட்சுமப் பார்வை தமக்கு இருப்பது தெரியாமலே சூட்சுமப் பார்வையால் ஸ்ரீ அரவிந்தரின் திருவுருவத்தைக் கண்ட எஸ்டேட் முதலாளியின் இருள் படர்ந்த வாழ்க்கை, அதற்குப் பிறகு ஒளி நிறைந்ததாயிற்று.

அகலக் கால் வைத்து மூன்றே முக்கால் இலட்சத்திற்கு அந்த எஸ்டேட்டை வாங்கிவிட்டு, அதை அபிவிருத்தி செய்யப் பணம் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருந்த நிலையில் அவர் ஸ்ரீ அரவிந்தர் தரிசனத்தைக் கண்டார். பின்னர் கீழாறு மண்டிக் கிடந்த அந்த எஸ்டேட், மாநிலத்திலேயே புகழ் பெற்று ஓங்கியது. அதை வாங்கப் பலர் போட்டி போட்டார்கள். ஆனாலும் அவரை நேருக்கு நேராகச் சந்தித்துக் கேட்க அஞ்சினார்கள். பதின்மூன்றே முக்கால் இலட்சம் வரை விலை கொடுப்பதாகத் தரகர்கள் மூலம் பேரம் பேசினார்கள்.

அவர் கொடுக்கத் தயாராக இல்லை. 1983இல் அதை 76 இலட்சத்துக்குக் கேட்டார்கள். பெரிய விலை. வந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாமல் பாதியை விற்றுவிட்டு, மீதியை வைத்துக்கொண்டார். அவர் போன்று சூட்சுமப் பார்வையுள்ளவர்களுக்கு எதிர்காலம் தெரியும். அதைக் கொண்டு அந்த எஸ்டேட் முதலாளி தம் சோதனை வாழ்க்கையைச் சாதனை வாழ்க்கையாக மாற்றிக்கொண்டார்.

அன்னைக்குச் சூட்சுமப் பார்வை உண்டு. ஆனால் அன்னை அதன் மூலம் செயல்படுவதில்லை. ஆரோவில் நகரில் உள்ள ஆலமரம் வலியால் வாடுவதைச் சூட்சுமப் பார்வையால் உணர்ந்து, அதை நீக்கும் முயற்சியை உடனே செய்தார். ஆசிரமத்தின் உணவு விடுதியில் நாட்பட்ட மாமரம் ஒன்று இருக்கின்றது. ஒரு நாள் அந்த மாமரம் தன்னைக் காப்பாற்றும்படி அன்னையிடம் முறையிட்டது. அன்னை அதைப் பற்றி விசாரித்தபொழுது, அந்த மாமரம் பட்டுப்போய்விட்டதாகவும், அதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடு நடந்துகொண்டு இருப்பதாகவும் செய்தி கிடைத்தது. "அந்த மரம் உயிருடன் இருக்கிறது. அதை வெட்ட வேண்டாம்'' என்று அன்னை ஆணை பிறப்பித்தார். அதன் பலனாக, மரத்தைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து, நீர் பாய்ச்சி, எருவிட்டு, மரத்தில் வைக்கோலைச் சுற்றி வைத்து, வேளைக்கு ஒரு வைத்தியமும், நாளைக்கு ஒரு போஷாக்குமாகச் செய்தார்கள். அதற்குப் பிறகு அந்த மரம் தளிர்த்து, பூத்து, காய்த்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டது. முப்பதாண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, இன்று அந்த மரம் பசுமையான சாட்சியாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

1962 வரை அன்னை காலை 6.15க்கு ஆசிரமத்தின் பால்கனிக்கு வந்து தரிசனம் தருவது வழக்கம். ஒருவர் அன்னையைத் தரிசிப்பதற்காக ஆசிரமத்திற்கு வந்தால், அன்னை அவரை பால்கனித் தரிசனத்திற்கு அழைத்து வரச் சொல்வார். அவர் எந்தச் சாதகர் மூலம் வருகிறாரோ, அவரைச் சாதகரின் அருகில் நிற்கச் செய்வார். அன்னை தரிசனச் சமயத்தில் அவரைப் பார்த்துவிட்டு, "அவரைப் பார்க்க அனுமதிக்கலாமா?' என்று முடிவெடுப்பார்.

ஒரு சமயம் ஆப்பிரிக்காவில் குடியேறிவிட்ட இந்தியர் ஒருவரை, ஒரு சாதகர் அன்னையின் பால்கனித் தரிசனத்துக்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் அன்னை அவரை அழைத்து வந்த சாதகரை நோக்கி, "காலையில் உன் நண்பரைப் பார்த்தேன். அவரை அழைத்து வா. உன் நண்பர் நல்ல உயரத்துடனும், தாடியுடனும் காணப்பட்டார்'' என்றார்.

அதைக் கேட்டுத் திகைத்துப்போன அந்தச் சாதகர், "என் நண்பர் குள்ளமானவர். அவர் தாடி வைத்துக்கொண்டிருக்கவில்லை'' என்றார். அதை அன்னைக்குத் தெளிவுபடுத்துவதற்காக அவரை மீண்டும் மறுநாள் பால்கனித் தரிசனத்திற்கு வருமாறு கூறி, அந்தச் சாதகரின் வலப் பக்கமாக நிறுத்தி வைத்தார்கள். அன்றும் அன்னை அந்த ஆப்பிரிக்க இந்தியரை உயரமாகவும், தாடியுமாகவே கண்டார். அன்னை பார்த்தது அவருடைய இன்றைய உருவம் இல்லை. அது அவருடைய முற்பிறவித் தோற்றம். சூட்சுமச் சக்திக்கு எந்தப் பிறவியையும் நோக்கும் திறன் உண்டு.

தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளில் ஒருவரான வ.ரா.வைத் தரிசன வரிசையில் பார்த்து ஸ்ரீ அரவிந்தர், அவருடைய முக ஜாடையை விளக்கியபோது அவர் நண்பர்களே திகைத்துப்போனார்கள். ஏனென்றால், ஸ்ரீ அரவிந்தரின் விளக்கத்திற்கும், வ.ரா.வின் தோற்றத்திற்கும் துளிக்கூடச் சம்பந்தம் இருக்கவில்லை.

ஓராண்டுக்குப் பிறகு வ.ரா. ஆசிரமத்தில் தங்கி இருப்பதற்கான அனுமதியைப் பெற்று வந்தபொழுது, அவர் முகம் சென்ற ஆண்டு ஸ்ரீ அரவிந்தர் விளக்கியதைப் போலவே இருந்தது. சூட்சுமச் சக்திக்கு எதிர்காலத்தையும் ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் உண்டு.

"ஒருவருடைய நோயைக் குணப்படுத்த ஸ்ரீ அரவிந்தர் திருவுள்ளம் கொண்டால், நீல நிறமுடைய ஒரு கரம் நோயாளியை நோக்கிச் சென்று வியாதியைத் துடைத்து நீக்குவதை நான் பல முறை கண்டிருக்கிறேன்'' என்று அன்னை கூறி இருக்கின்றார்.

நாம் நலம் காண்பதற்கு அதையே கொஞ்சம் மாற்றிச் சிந்திக்கலாம். ஒருவருக்கு உடம்பில் உபாதை இருக்கும்பொழுது அதை அன்னையின் கரம் துடைப்பதாகக் கற்பனை செய்தால், கற்பனையின் செறிவில் அந்தக் காட்சி பலித்துவிட்டால், வேதனை மறைந்துவிடும். சூட்சுமப் பார்வையுள்ளவர்களுக்கு அந்தக் கரம் தெரியும். தெரியாவிட்டாலும்கூட வியாதி போய்விடும். ஒரு பெரிய களேபரம் நடக்கும் இடத்தில், நாம் அன்னையின் அமைதி (peace) அக்கூட்டத்தின் மீது பொழிவதாகக் கற்பனை செய்தால், சாந்தம் மழை போல் பொழிவது தெரியும். அது கண்ணுக்குத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கலவரம் நிமிடப்பொழுதில் அடங்கிவிடும். அங்கு செயல்படுவது ஒரு சூட்சுமச் சக்தி.

"ஒரு வம்புக்காரர் தம்மை அடிக்கடிச் சந்தித்துத் தொந்தரவு செய்கின்றார்'' என்று ஒருவர் அன்னையிடம் முறையிட்டார். "அந்தச் சமயங்களில் என் உருவத்தைக் கற்பனை செய்துகொள்'' என்றார் அன்னை. அவரும் அப்படியே செய்தார். கற்பனையேயானாலும் கண்ணுக்கு அன்னையின் உருவம் புலப்பட்டது. அடுத்த நொடியே அந்த வம்புக்காரர் எழுந்து போய்விட்டார். பிறகு அவருடைய தொல்லை முற்றிலுமாக நீங்கிப்போயிற்று.

"என் உடலில் எங்காவது வலி ஏற்பட்டால், அங்கு நான் இறைவனைப் பிரதிஷ்டை செய்வது வழக்கம்'' என்று கூறுகின்றார்

அன்னை. உடலில் உபாதை உள்ள இடத்தில் அன்னையின் வெள்ளொளியைக் கற்பனை செய்ய முடியுமானால், உபாதை விலகுதல் இயற்கை. "ஓர் இயந்திரத்தைப் பழுது பார்க்க இயலவில்லை” என்றால், "ஒரு வியாபாரப் பேச்சுவார்த்தையின்பொழுது எதிர்ப் பார்ட்டி குழப்பம் செய்கிறது' என்றால், "ஒரு கோப்பு பல மாதங்களாக இருக்கும் இடத்தை விட்டு நகர மறுக்கிறது' என்றால், அந்நிலைகளில் அன்னையின் உருவத்தையோ, ஒளியையோ கற்பனையில் காண முடிந்தால், அந்தப் பிரச்சினை விலகித் தெளிவு பிறக்கும். நாம் கற்பனையைப் பயன்படுத்தினாலும், செயல்படுவது சூட்சுமச் சக்தியேயாகும்.

இருவர் கூட்டாகப் பேரளவு நிலம் வாங்கத் திட்டமிட்டார்கள். அவர்களின் திட்டமும் வெற்றி பெற்றது. அவர்களில் ஒருவர் குறுக்கு வழியில் சென்று முழுச் சொத்தையும் கபளீகரம் செய்ய, தம் செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றிக்கு மேல் வெற்றியைக் குவித்துக்கொண்டிருந்தார். சட்டம், செல்வாக்கு, அதிகாரம், சந்தர்ப்பம் ஆகிய எல்லாமே அவருக்குச் சாதகமாக இருந்தன. ஒரு மார்ச் 22இல் நெருக்கடியான ஓர் இறுதிக் கட்டம். அதில் சாமர்த்தியசாலி பண பலத்தால் வெற்றி பெற்றார். மார்ச் 31இல் அந்த முடிவை இறுதியாக்கி எழுதிக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம், எல்லா வகைகளிலும் பலவீனமாக இருந்த மற்றொருவருக்கு ஏற்பட்டது. அவர் அன்னையின் பக்தர். "இனி தம்மைக் காப்பாற்றக்கூடியவர் அன்னை ஒருவரே' என்று இறுதியாகவும், உறுதியாகவும் முடிவு செய்த அவர், தம் சொத்தில் அன்னையின் உருவத்தைக் கற்பனையாகப் பார்க்க, அன்னை அந்தச் சொத்து முழுவதும் ஒளியாகவும், உருவமாகவும் நிறைந்து வழிவதை உணர்ந்தார். காட்சியில் காணப்பட்ட ஒளியில் களங்கமாக ஒரு கறுப்புப் புள்ளிகூட இல்லை. மார்ச் 24இல் நிலைமை மாறியது. 25ஆம் தேதி, "சொத்து முழுவதும் அன்னை அன்பருக்கே சொந்தம்' என முடிவாகியது. மே மாதம் 6ஆம் தேதி அப்படியே எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார், சந்தர்ப்பச் சதிராட்டம் செய்து வந்த கூட்டாளி.

தியானம் செய்யும்பொழுது சந்தன வாசனையோ, தாமரை வாசனையோ பலருக்கு வருவதுண்டு. அப்பொழுது சூட்சுமக் குரல் கேட்கும்; காட்சியாகவும் தெரியும். "சூட்சுமச் சக்தி' என்பது தெய்வீகச் சக்தி இல்லை (subtle vision is not spiritual), ஆனால் சூட்சுமச் சக்தியைத் தெய்வ அனுக்கிரகத்தைப் பெற நன்கு பயன்படுத்தலாம். சூட்சுமப் பார்வையுள்ள ஒருவர் வயதான ஒருவருக்கு blessing packet வாங்கிக்கொண்டு போகும்பொழுது, பாக்கெட்டின் மேல் ரத்தமும், குதமும் தெரிவதைப் பார்த்தார். வயதானவர் தனக்கு பௌத்ர (piles) ஆப்பரேஷனுக்காக blessing packet கேட்டதாகக் கூறினார்.

நான் இதுவரை இது பற்றி அறிந்த செய்திகளில் சிறப்பாகக் கூறக்கூடியவை இரண்டு. 68 வயதுப் பெரியவர் ஒருவர் திருவாரூரில் தன் தோட்டத்தில் நின்றுகொண்டு வானத்தை நோக்கி அன்னையை நினைத்து மனம் நெகிழ்ந்தபோது, வானில் வைரத்தோடு அளவில் ஓர் ஒளி தோன்றி அவரை நோக்கி வந்து, அவரது புருவ மத்தியில் நுழைந்து அவரை புல்லரிக்கச் செய்த நிகழ்ச்சி ஒன்று. 1973, நவம்பர் 17ஆம் தேதி இரவு ஏழரை மணிக்குத் தம் வீட்டு வாசலில் மிகப்பிரம்மாண்டமான ஓர் ஒளி உருவத்தைக் கண்டார் ஓர் அன்பர். அது கோடிக்கணக்கான துளிகளாகச் சிதறி, ஒவ்வொரு மனித இதயத்திலும் புகுவதைப் பார்த்தார். அதற்கு மறுநாள் அன்னை சமாதி அடைந்த செய்தியைக் கேட்டு, "அன்னையின் பேரொளி” என்பதை அவர் உணர்ந்தார். இது சிறந்த செய்தி மட்டுமன்று; மிகப்பெரிய செய்தியும்கூட.

தொடரும்....

*******



book | by Dr. Radut