Skip to Content

05.நவம்பர் 24th சித்தி தினம்

"அன்பர் உரை"

நவம்பர் 24th சித்தி தினம்

(சென்னை - மாம்பலம் தியான மையத்தில் நவம்பர் 24, 2002 அன்று திருமதி விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினமான August 15 என்றும் தரிசன நாளாகும். 1920இல் அன்னை இரண்டாம் முறையாக புதுவை வந்தபின் இங்கேயே நிரந்தரமாகத் தங்கினார். 1926ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பகவான் அடுத்த கட்டத்தில் ஒரு சித்தி பெற்றார். அன்று ஆசிரமம் இல்லை. பகவானுடனிருந்தவர் சுமார் 15 பேர். "அனைவரையும் அழைத்து வா'' என பகவான் உத்தரவிட்டதன் பேரில் உத்தரவைப் பெற்ற சாதகருக்கு எவரை அழைப்பது, எவரை அழைக்காமல் விடுவது என்ற தெளிவில்லாததால் மீண்டும் யாரையெல்லாம் அழைக்கவேண்டும் என்று விளக்கம் கேட்டார். "ஒருவர் தவறாமல் அனைவரும்'' என்று பதிலிறுத்தார் பகவான். அன்னையின் ஜன்ம தினமான Feb 21 தரிசன நாள். பகவான் Nov. 24இல் சித்தி பெற்றதால் அன்றிலிருந்து Nov.24. தரிசன நாளாயிற்று. Feb. 21க்குப் பின் சாதகர்கள் பகவானை தரிசிக்க ஆகஸ்ட்15 வரைக் காத்திருக்க வேண்டியிருப்பதால் கொஞ்ச நாள் கழித்து சாதகர்கள் விண்ணப்பத்தை ஏற்று, April 24ஐத் தரிசன நாளாக்க முடிவு செய்தனர். அன்னை முதல்முறை புதுவை வந்தது March 29. ஜப்பான் போய் போர் முடிந்தபின் இரண்டாம் முறையாக புதுவை வந்த நாள் April 24.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் யோகம் செய்த ரிஷியில்லை. அவதாரப் புருஷனுமில்லை. அவதாரம் என்று பகவானையோ, அன்னையையோ விவரிப்பது தவறாகாது. அச்சொல் அவர்களது ஆன்மீக முக்கியத்துவத்தை முழுமையாகக் குறிக்காது. வெளிநாட்டார் ஒருவர் வந்து தமிழ்ப் பண்பைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும்பொழுது கம்பனைப் பற்றிக் கூறுபவர், அறிஞர் என்று கூறினால் சரி என்றாலும், அது வெளிநாட்டவருக்கு கம்பனின் சிறப்பைக் கூறாது. அவரைக் கவி என்றால் பொருந்தும். ஆனால் அது கம்பனைப் பூரணமாக விவரிக்காது. அமரகவி என்றால் பொருந்தும். கம்பனுக்கு முன் கவிகளும், அமர கவிகளும், அழியா இலக்கியங்களும் ஏற்பட்டிருந்ததால், இச்சொற்கள் வழக்கிலிருந்தன. நம் நாட்டு ஆன்மீகப் பரம்பரையில் துறவி, சன்னியாசி, முனிவர், ரிஷி, யோகி, அவதாரப் புருஷர் என்ற கருத்துகள் உண்டு. இவற்றை நாம் அறிவோம். விபூதி, அவதாரம் என்பவை தெய்வீகமானவை. சிவாஜி போன்றவரை விபூதி எனவும், இராமன், கிருஷ்ணன் போன்றவரை அவதாரம் எனவும் கூறுகிறோம். இராமனும், கிருஷ்ணனும் தெய்வலோக (overmental) அவதாரங்கள். ஸ்ரீ அரவிந்தர் சத்தியஜீவிய அவதாரம். ஸ்ரீ அரவிந்தர் அவதாரம் என்றால், பிரதமரை முதல்வர் என்பது போலாகும். 1956இல் சி. சுப்ரமணியம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவைத் துவக்கிப் பேசினார். அன்று மேடையில் தமிழ் உலவாத நேரம். சுப்ரமணியம் தமிழில் பேச ஆரம்பித்தார். முதற்சொல் தமிழ் என்றவுடன் மாணவர்கள் பெருத்த ஆரவாரத்துடன் கை தட்டினர். கல்லூரி பிரின்சிபால் என்ற சொல்லுக்கு முதல்வர் என்ற சொல் அன்று வழக்கிலில்லை. மந்திரிக்குப் பிரின்சிபால் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பதிலாகத் தமிழ்ச் சொல் கூற ஆசை. என்ன சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. தெரிந்த சொல்லைச் சொன்னார், "தலைமையாசிரியர் அவர்களே.....'' எனப் பேச்சைத் தொடங்கினார். பிரின்சிபால் ஆசிரியர்கட்குத் தலைமை வகிப்பதால் தலைமை ஆசிரியர் என்பது தவறான சொல்லில்லை. நாட்டு நடைமுறையில் தலைமை ஆசிரியர் என்பது பள்ளித் தலைமை ஆசிரியரைக் குறிப்பதால் நூற்றாண்டு விழாவில் விருது பெறவிருக்கும் பிரின்சிபாலுக்கு ஏமாற்றமாய்விட்டது. பகவான் ஸ்ரீ அரவிந்தரை பலர் ரிஷியாகக் கருதினர். அவருடைய சிஷ்யர்கள் அவதாரம் என்றனர். அது கல்லூரி முதல்வரைத் தலைமை ஆசிரியர் எனக் கூறுவது போலாகும்.

Sri Aurobindo is not God, but portion of God.  பகவான் கடவுளில்லை. கடவுளின் ஒரு பகுதி என்று அன்னை கூறுகிறார். பகுதியென்றால், இராமன் முனிவர் உலகத்தின் அவதாரம். கிருஷ்ணன் தெய்வலோக அவதாரம். ஸ்ரீ அரவிந்தர் அதைக் கடந்த சத்தியஜீவியலோக அவதாரம் என்பதால், அவதாரம் என்ற சொல் அவருடைய ஆன்மீக அம்சத்தின் சிறப்பை வெளிப்படுத்தாது. அவரை Supramental Avatar சத்தியஜீவிய அவதாரம் எனலாம். The Life Divine இல் 17ஆம் அத்தியாயத்தில் Divine Soul விவரிக்கப்படுகிறது. தமிழில் தெய்வீக ஆன்மா என மொழி பெயர்க்கலாம், பொருத்தமாகாது. அவ்வத்தியாயம் பகவான் அவதாரத்தை விளக்கும். சத்தியஜீவியலோகத்தில் பகுதியில்லை. அங்குப் பகுதி முழுமையுடையது. சத்தியஜீவியலோகத்தில் பகுதி என்றால் அது முழுமையான கடவுள் என்றாகும். பகவான் ஸ்ரீ அரவிந்தர் கடவுளின் முழுமை பெற்றவர். அவதார நிலையைக் கடந்தவர்.

"நீங்கள் பிரார்த்திப்பதுண்டா?'' என ஒரு சாதகர் பகவானைக் கேட்டபொழுது, "யாருக்குப் பிரார்த்திப்பது?'' என பதிலாக ஒரு கேள்வியைக் கேட்டார். அது அவர் யார் என்பதைக் காட்டும். 1938இல் காலை முறித்துக் கொண்டபொழுது, "என்னைத் தீயசக்திகள் தாக்கா'' என நான் நினைத்தது சரியில்லை என்றார். தாமே முழுமுதற் கடவுளானபின் தீயசக்திகள் எப்படித் தாக்கும் என்பது உண்மை.

முழுமுதற்கடவுளானாலும், மனித உடலில் பிறந்ததால் மனித சட்டத்திற்கு உட்படவேண்டும் என்பதும் உண்மை. "நான் என்ன சர்க்கார் கஜானா என நினைத்தாயா?'' என்ற வாக்கு சர்க்கார் கஜானாவில் உலகத்துப் பணம் அனைத்தும் உள்ளது எனப் பொருள். அன்று - சுதந்திரத்திற்குமுன் - சர்க்கார் செய்த வேலைகள் நாட்டில் ஒழுங்கை நிலைநிறுத்துவது மட்டுமே. மக்கள் வாழ்வில் பங்கு கொள்ளவில்லை. ஒருவர் படிக்கவேண்டுமானாலும், வேலைக்குப் போகவேண்டுமானாலும், தொழில் செய்யவேண்டுமானாலும் அது அவரவர் பொறுப்பு. இன்று எவர் படித்தாலும் அச்செலவு சர்க்காருக்குரியது, எவர் பயிரிட்டாலும் மின்சாரம் சர்க்கார் செலவு, யார் தொழில் செய்தாலும் சர்க்கார் முதலில் பகுதியைத் தருகிறது. மக்கள் வாழ்வில் பங்குகொண்டு, வாழ்வுத் தரத்தை உயர்த்த சர்க்கார் முனைவதால் சர்க்கார் கடன் வாங்குகிறது, "கஜானா காலி '' என்ற செய்தி வருகிறது.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் முந்தைய அவதாரங்கள்போல் எடுத்துக்காட்டாக வரவில்லை. வாழ்வின் யோகத்தை, புவியின் யோகத்தை தாமே ஏற்று பூரணயோகமாகச் செய்தார். அதனால் அவருடைய சக்திக்குச் செலவு அதிகம். தீயசக்திகள் நேரம் பார்த்துத் தாக்க முடியும்.

நவம்பர் 24இல் அவர் பெற்ற சித்தி தெய்வீகலோக சித்தி. அவர் செய்த யோகம் திருவுருமாற்றம். மனித நிலையை உயர்த்தும் யோகம். மனித நிலைக்குமேல் முனி, ரிஷி, யோகி, தெய்வம், சத்திய ஜீவியம் என்ற நிலைகளுண்டு. அலிப்பூர் ஜெயிலில் உள்ளபொழுதே - 1910இல் - பகவான் சத்தியஜீவிய அனுபவத்தைப் பெற்றார். இந்த சித்தியில் உள்ள நிலைகள் மூன்று.

  1. சத்தியஜீவியத்தை எட்டுவது.
  2. ஒவ்வொரு நிலையாக உயர்ந்து, அந்நிலை கீழ்நிலையை பூரணமாகப் பூர்த்தி செய்வது.
  3. இரண்டாம் முறையாக சத்தியஜீவியத்தை எட்டுவது.

முடிவாக சத்தியஜீவியத்தை எட்டியபின் சத்தியஜீவியம் உலகை ஏற்பது. அது நடக்க 12 யோகிகள் தேவை. அலிப்பூர் ஜெயிலில் சுத்த அத்துவைத சித்தி - அக்ஷர பிரம்மத்தை அடைவது - முடிவன்று, சத்தியஜீவியமே முடிவு என்று சுவாமி விவேகானந்தர் கூறிப் போனார். பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கு இலட்சியம் தெரிந்துவிட்டது. அதை அடையும் வழி தெரியவில்லை. 10 ஆண்டுகளாக அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார். முடிவாக அவர் கண்டுபிடித்ததை முதல் புத்தகம் 28ஆம் அத்தியாயத்தில் கூறுகிறார்.

  1. பரம்பொருளை பிரபஞ்சம் வழி அடையவேண்டும்.
  2. அதற்கு உள்மனம் வழி அடி மனமடைந்து, மீண்டும் மேலே போகவேண்டும்.

இதுவரை ரிஷிகள் செய்த ஹடயோகம், கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், மந்திரயோகம், தந்திரயோகம், ராஜ யோகம் ஆகியவற்றிலிருந்து பூரணயோகம் வேறுபடும் இடம் இது.

  1. மரபு உள் மனத்துடன் முடிகிறது
    பூரணயோகம் அதைக் கடந்து அடிமனம் சென்றடைகிறது.
  2. மரபு தேடுவது ஜீவாத்மாவுக்கு மோட்சம்.
    பூரணயோகம் உலகுக்குத் திருவுருமாற்றம் தேடுகிறது.
  3. தூய ஆத்மா, பரமாத்மாவை அடைவது மரபு.
    சைத்தியப் புருஷன் ஆன்மீக மனம் வழி சத்திய ஜீவியம் அடைவது ஸ்ரீ அரவிந்தம்.

ஓர் ஆத்மா தான் விடுதலை பெற முயன்று வெற்றி பெறுவது மரபு. ஓர் ஆத்மா தன் வளரும் பகுதியால், மோட்சம் அடைவதைத் தியாகம் செய்து, முனிவர், ரிஷி, யோகி, தெய்வம் வழி சத்தியஜீவியத்தை அடைந்து அதை உலகுக்குக் கொண்டுவந்து உலகை இருளிலிருந்து விடுவித்து, மரணம், நோய், மூப்பு, வலியிலிருந்து விடுவிப்பது பூரணயோகம். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்,

  • மரபு மனத்தால் பகுதியாகச் செயல்படுவது ஆன்மீக சுயநலம்.
  • பூரணம் சத்தியஜீவியத்தால் முழுமையாகத் திருவுருமாறுவது இறைவனுக்கு நாம் செய்யும் சேவை.

பூரணயோகம் இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்கிறது.

நவம்பர் 24, 1926இல் என்ன நடந்தது?

பகவான் ஸ்ரீ அரவிந்தர் அலிப்பூரில் சத்தியஜீவிய தரிசனம் கண்டார். உலகை நாராயணனாகக் கண்டார். அர்ஜூனன் கண்ட விஸ்வரூபம் இரு பகுதியானது. அவற்றுள் ஒன்று உலகம் கோரமானது. ஸ்ரீ அரவிந்தர் கண்ட நாராயண தரிசனம் கோரத்தைக் கடந்த பூரணம் முடியாக அமைந்தது. சத்தியஜீவியத்தை முதன்முறையாக மின்னலாக பகவான் கண்டபின் புதுவை வந்து முறையாக, அடியிலிருந்து யோகத்தை ஆரம்பித்தார். அதன் நிலைகள்,

  • மனித மனத்திலிருந்து முனிவர் மௌனத்திற்கு உயர்வது முதல் நிலை.
  • மேலே சென்றால் அந்நிலையின் மௌனம், மனத்தையும் மற்ற பகுதிகளையும் வந்து நிரப்புவது (descent) பூரணயோக நியதி.
  • ஒரு நிலை உயர்ந்தால் அந்நிலை யோகியின் ஜீவனை நிரப்புவது அடுத்த கட்டம் செல்ல அவசியம்.

முதல் 5 வகுப்புப் படிப்பை உலகம் பெற ஆரம்பித்தால், உலகம் முழுவதும் அதைப் பெற்றபின் 10ஆம் வகுப்புப் படிப்பை பெற உயருவது வழக்கம். அதுபோல் முனிவர் நிலை என்பது முதல். அது மௌனத்திற்குரியது. ரிஷியின் நிலை திருஷ்டி தருவது. அது அடுத்தது. யோகி ஞானம் பெற்றவர், அடுத்த நிலை அது. தெய்வம் பெற்றது ஞானம் என்றாலும், அஞ்ஞானம் இடையூறு செய்யாமல் செயல்படும் நிலையில் தெய்வம் உள்ளது. முனிவர், ரிஷி, யோகி ஆகியவர் உடலில் வாழும் மனிதர்கள். தெய்வத்திற்கு உடலில்லை. அதன் சூட்சுமச் சரீரம் பூமியளவு பெரியது. தெய்வத்திற்கு நம்மைப்போல் குணங்களுண்டு, அகந்தையுண்டு, அஞ்ஞானம் உண்டு, என்றாலும் அஞ்ஞானம் தடை செய்யாமல் செயல்படும் திறனும் உண்டு. சத்தியஜீவியம் செல்ல தெய்வலோகம் வழியாகப் போகலாம். ரிஷி, தெய்வ நிலையை அடையாமல் நேராக சத்தியஜீவியம் சென்றடையலாம். தெய்வலோகத்திற்கும், சத்தியஜீவியத்திற்கும் இடையே புத்தர் பெற்ற நிர்வாணம் உண்டு. நிர்வாணம் பெற்றால் சத்தியஜீவியத்தை அடைவது எளிது. பெறாமலும் போகலாம். M.A. படித்தபின், M.Phil. பெறுவது Ph.D பெற உதவியாக இருக்கும். M.Phil பெறாமல் M.A.யிலிருந்து Ph.D போக சட்டம் உண்டு. M.Phillஇல் I class பெறுவது இயல்பு M.A.யில் I கிளாஸ் பெற்றால் M.Phillஐத் தவிர்த்து Ph.D. எடுக்கலாம். M.A.யில் 55%க்கு மேல் மார்க் பெற்றாலும் எடுத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கும். நிர்வாணம் அது போன்றது.

புதுவையில் பகவான் செய்த யோகம் படிப்படியாக அவர் உயர்வதும், உயர்ந்த நிலை கீழே வந்து அவர் ஜீவனைப் பூர்த்தி செய்வதாகவும் அமைந்தது. 1926இல் அப்படி அவருடைய யோகம் overmind தெய்வநிலையை அடைந்து, அந்நிலை பகவான் மனத்திலும், வாழ்விலும், லிலும் இறங்க ஆரம்பித்தது. அதுவே அவர் பெற்ற சித்தி. சத்தியஜீவியம் அடுத்தது. அது 1936இல் பகவானுக்குச் சித்தித்தது.

இன்று உலகுக்கு USA தலைமை வகிக்கிறது. செல்வம் நிறைந்த நாடு. உலகப் போரை வெல்ல ஆயுதம் தயாரித்தது. உலக வங்கியை நிறுவியது. .நா.வை நிறுவியது. அதுவரை இங்கிலாந்து உலகத் தலைவனாக இருந்த நிலை மாறி தலைமை அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் சென்றது. 1990இல் ரஷ்யா அத்தலைமையை இழந்தபின் USA ஏகபோக சாம்ராஜ்யம் நடத்துகின்றது. நம்மவர் உடுக்கும் உடை, சாப்பிடும் உணவு, பயன்படுத்தும் பொருள்கள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்டம் ஆகியவை USA கொடுத்த பாணி. நம் நாட்டில் எவரும் சீண்டப்படாத மகான்கள் அமெரிக்கா போய் பிரபலமானால் அதன்பின் இந்தியாவில் பிரபலமாகின்றனர். அமெரிக்கா உலகத் தலைவன்.

அதைப் பெற USA செய்ததென்ன? 400 ஆண்டுகளாக உழைத்து செல்வம் ஈட்டியது. அது உடல் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து முடித்தது. அத்துடன் பொருளைப் பெருக்கியது.பொருளைப் பெருக்கும் முறையை ஸ்தாபனமாக்கியது. Organised production . அது அடிப்படை. அவ்வடிப்படையின் பேரில் அறிவை வளர்த்தது. அது அறிவு, ஞானமில்லை. அதனால் அது தடையாகிறது. தடையான அறிவு தடையற்ற செல்வத்தை ஈட்டுகிறது. தலைகீழே மனிதன் வளர உதவுகிறது. மேலும் ஆன்மீகத்தைத் தேடுகிறது. ஆன்மீகத்தை இந்தியன் அந்நாளில் தேடியதுபோல் ஹடயோகத்தில் தேடுகிறது. ஆரம்ப நிலையில் இது அசுர முயற்சி.

இந்தியா ஞானம் பெற்று பல்லாயிரம் ஆண்டுகளாயின. பெற்ற ஞானம் பெரியது எனினும் முழுமையானதன்று. அதை நாடு முழுவதும் பெறவில்லை. பெற்றவர் தாமே வைத்துக்கொள்ள முயன்றனர். உலகத்தின் முயற்சி ஒருவரில் பலிப்பதால், பெறுவது கொடுப்பதற்காக. பெற்றவர் உலகத்தின் சார்பாகப் பெற்றார், தாமே எடுத்துக்கொள்ள முடியாது. முயன்றால் கரு கிடைக்காது, கருகிய புறம் கிடைக்கும். பெற்றவர் சந்ததிகளுக்குப் பெரிய ஞானம் வரவில்லை. கிடைத்தது ஜீவனற்ற சொல். அது பொய்யின் உறைவிடம். இருப்பினும் இந்தியர் உடலில் அன்று பெற்ற ஆத்ம ஜோதியிருப்பதாக அன்னை கூறுகிறார். மேல்நாட்டார் உடல் இருளால் நிறைந்தது என்கிறார். உடல் இருளானாலும், மேல்நாட்டார் ஜடத்தில் பிரம்மத்தைக் கண்டு விஞ்ஞான வெற்றி பெற்றனர். அதன் விளைவாக அமெரிக்கா உலகுக்குத் தலைமை வகிக்கிறது.

நம் உடலில் ஜோதியிருந்தாலும் வாழ்வில் ஜீவனில்லை, சொல்லில் சத்தியமில்லை. உடல் பெற்ற ஜோதி உயிர் பெற்று வாழ்வில் வெளிப்படுவது அமெரிக்கா பெற்றதைவிடப் பெரியது. இதை இந்தியர் அறியவில்லை. அறிந்தால் ஏற்படுவது ஆன்மீகப் புரட்சி. வாழ்க்கை வளமாகும். இந்தியா ஜகத்குருவாகும் என்பது பகவான் அருளியது. இந்தியாவும், ஆசியாவும் சுதந்திரம் பெற்று உலகம் ஒன்றுபட்டால், இந்தியா ஜகத்குருவாகி சத்தியஜீவன் பிறப்பான் என பகவான் கூறினார். முதலிரண்டும் அவர் வாழ்நாளில் பூர்த்தியாயின. உலகம் ஒன்றுபடும் அறிகுறி 1916இல் பகவான் கூறியபடி ஐரோப்பாவின் மேற்பகுதி நாடுகள் இணைந்துள்ளன. இந்தியர் ஆன்மீக விழிப்புற்று அடுத்த நிலையை அடைய சத்தியத்தை இலட்சியமாகக் கொண்டால் அது நடைபெறும். பகவான் இலட்சியம் நிறைவேறும்.

****

Comments

05.நவம்பர் 24th சித்தி

05.நவம்பர் 24th சித்தி தினம்
 
Para 14   - Line 2   - ஆகியவற்றிலி ருந்து   -   ஆகியவற்றிலிருந்து
Para 17   - Line 2   - ஸ்ரீ அரவிந்தம்               -   ஸ்ரீ அரவிந்தம்
Para 27   - Line 7   - உடல்லை                       -   உடலில்லை
Para 28   - Line 4   - உlடலும்                          -   உடலிலும்
Para 29   - Line 7   - மநஆ                                  -   USA
Para 29   - Line 13 - அறிவை .                       -   அறிவை வளர்த்தது.



book | by Dr. Radut