11.இலட்சியத் திருமணம்
"அன்னை இலக்கியம்''
இலட்சியத் திருமணம்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
இல. சுந்தரி
அங்கிள், நீ எங்க ஆபீஸ் ஆன்ட்டியை கல்யாணம் பண்ணிக்கப் போறியா என்றான் அர்விந்த்.
நீ என்று சொல்லக்கூடாது, நீங்கள் என்று அவசரமாய்த் திருத்தினாள் உமா.
அர்விந்தின் கேள்விக்கு மாப்பிள்ளைப் பையன் பதில் சொன்னான், உங்கள் ஆன்ட்டிக்கு என்னைப் பிடித்தால் கல்யாணம் செய்துகொள்வேன் என்று.
உமா வெட்கத்துடன் தலை குனிந்துகொண்டாள். உள்ளே சென்றதும், நான் உங்களை நல்ல தோழியாய் எண்ணி வெளிப்படையாய் கேட்கப் போகிறேன், கேட்கலாமா? என்றான்.
உமா மனதிற்குள் அன்னையே, அன்னையே என்று எண்ணியவண்ணம் தலையாட்டினாள்.
திருமணத்திற்குப் பிறகு மனைவியை அடிமைப்படுத்தி ஆளும் ஆண்மகன் அல்லேன் நான். நான் எடுத்த லட்சியத்திற்குத் துணை வரும் தோழிதான் எனக்கு வேண்டும் என்றான்.
லட்சியத்தைச் சொன்னால் நல்லது என்றாள். நான் என் இரத்தத்தில் உருவான குழந்தையை நேசிப்பது ஒன்றும் வியப்பில்லை. நமக்குப் பிறக்காத, நம் அன்பு பயன்படும் குழந்தைக்கு நாம் பெற்றோராக வேண்டும் என்று எனக்கொரு லட்சியம். இதனால் நான் ஆரோக்யம் குறைந்தவன் என்று எண்ணவேண்டாம். நான் பூரண நலமுள்ளவன்தான். ஆனால் என் பெற்றோர் இதற்கு உடன்படமாட்டார்கள். அதனால்தான் தனியாய் கேட்கிறேன். இதில் என்னை மணந்துகொள்ளும் பெண்ணுக்கும் பூரணச் சம்மதம் தேவை என்றான்.
உமாவிற்குப் பருத்தி புடவையாய் காய்த்ததுபோல், கும்பிடப் போன தெய்வம் எதிரே வந்தது போலவிருந்தது. உண்மையில் அவளுக்கும் அதே லட்சியம்தான். அவள் பெற்றோரும் அதை ஏற்கமாட்டார்கள்.
எனக்குப் பூரணச் சம்மதமே. ஆனால் என் பெற்றோரும் இதை ஏற்கமாட்டார்கள். நாம் நம் இலட்சியத்தில் உறுதியாயிருந்தால் நம் பெற்றோருக்குத் தெரியாதிருப்பதே நல்லது என்றாள்.
புன்னகையுடன் வெளிவரும் இவர்களை மகிழ்ச்சியுடன் பார்த்தனர் அனைவரும். திருமணம் உறுதியாயிற்று.
பாட்டி மனம் நிறைய வாழ்த்தினாள். உமா உன் நல்ல மனதிற்கு யாவும் நல்லதாக நடக்கும் என்றாள்.
திருமணத்தின்போதும் குழந்தைகளிருவரும் ஒரே மகிழ்ச்சியுடன் புதிய ஆடையணிந்து உமாவை வலம் வந்தனர். இப்போது எல்லோருக்கும் குழந்தைகள் உமாவின் பிரிவை எப்படித் தாங்கிக்கொள்வர் என்பதே கவலையாயிற்று. குழந்தைகளை யாரேனும் அருகில் வருவதைத் தடுத்தால், மாப்பிள்ளை உடனே, அவர்களைத் தடுக்கவேண்டாம், உமாவின் இந்த நல்ல குணத்திற்காகத்தான் அவளை மணப்பதாகக் கூறினான்.
இது சரி. நாளைக்குப் புகுந்த வீட்டிற்குப் போகும்போது இந்தக் குழந்தைகளைத் தள்ளிவிட்டுத்தானே போகவேண்டும் என்றாள் வாயாடிப் பெண்ணொருத்தி.
ஏன் தள்ளிவிட்டுப் போகவேண்டும். இவர்களின் உரிமையாளர்கள் சம்மதித்தால் அழைத்துக்கொண்டே போவோம் என்றான் மாப்பிள்ளைப் பையன்.
தொடரும்.....
****
- Login to post comments
Comments
11.இலட்சியத் திருமணம் Para 1
நீ என்று