Skip to Content

10.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

அண்ணன் - இப்பெற்றோர் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள், அன்பர்கள். ஆனால் இவையெல்லாம் தானே புரியுமா? சொன்னால் ஏற்பார்களா? நடக்கும் அளவுக்கு ஏற்பார்களா? அது நடக்க உதவுமா? என்பவை கேள்விகள்.

தம்பி - அன்னையைப் பெரும்பாலோர் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது இப்பொழுது தெரிகிறது. மழை வேண்டும் என்றால் பெய்கிறது என்று எத்தனைப் பேர் பார்க்கவில்லை? பணம் வேண்டும் என்றால் வரும் என அவர்கள் நம்புவார்களா?

அண்ணன் - ஓர் அன்பர் சொன்னார், "அன்னைக்குச் சக்தியிருப்பது சரி. மழை கேட்டால் தருகிறார்கள். வேறு பல விஷயங்களிலும் பலிக்கிறது. பணம் மட்டும் வரமாட்டேன் என்கிறது'' என்றார். இவர் பணத்தைச் சரியாகச் செலவு செய்வதில்லை. அதனால் வருவதில்லை. பணத்தில் சிரத்தையாக உள்ள அன்பர்களைக் கேட்டால், "மதர் எது கொடுக்கிறார்களோ இல்லையோ, இன்று ரூ.8000 கட்டவேண்டும் என்றால், அது எங்கிருந்துதான் வருமோ, தெரியாது, வந்துவிடும்'' என்கிறார்கள். யார் எந்த விஷயத்தில் சிரத்தையாக, முறையாக இருக்கிறார்களோ அந்த விஷயம் அபரிமிதமாகப் பலிக்கும்.

தம்பி - ஒரு விஷயத்தில் பலிக்கவில்லை என்றால், அந்த விஷயத்தில் அவர் சரியில்லை எனப் பொருள்.

அண்ணன் - முரட்டுக் குணமுள்ள தாயார், "என் பெண்ணைத் தவிர எனக்கு எல்லாம் பலிக்கும்'' என்கிறார். பெண் விஷயத்தில் பலிக்கவில்லை எனில் தாயாருக்கு அதே குணம். அது மாறினால் பலிக்கும். வேறு சிலர், அன்னை பலிப்பார்கள், ஆனால் நீங்கள் சொல்வது போல் ஓஹோ! என்றிருக்காது என்கிறார்கள். அவர்கள் குணம் ஓஹோ! என்றிருந்தால் பணம் அதுபோல் வரும்.

தம்பி - குணம் தடையாக இருந்தால் பேச வேண்டிய அவசியமில்லை.

அண்ணன் - அது மட்டும் போதாது. மலரும் மனம் (expansive) தேவை. மலர்ந்த உணர்ச்சி காரியத்தைப் பெருக வைக்கும். இறுக்கமான குணமிருந்தால் எதுவும் மலராது.

தம்பி - அப்படியானால், அன்னையாகப் பலிக்கமாட்டார்களா ? நம்மைப் பொருத்துத்தான் பலனிருக்குமா?

அண்ணன் - தானே எல்லோருக்கும் பலிக்கும். அதற்கு அளவுண்டு. மலரும் மனம், பரந்த இலட்சியம் உள்ளவருக்கு அபரிமிதமாகப் பலிக்கும்.

தம்பி - 100 விஷயங்களை இப்பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றீர்களே. சில உதாரணங்கள் வேண்டும்.

அண்ணன் -

  1. 35ஆம் வயதில் குள்ளமானவர் வளர ஆசைப்பட்டார், 12'' வளர்ந்தார்.
  2. மார்க்கட் விலைக்கு விலை போகாத நிலம் 3 மடங்கு விலைக்குப் போயிற்று.
  3. நின்றுபோன பேச்சுத் திரும்ப வந்தது.
  4. சர்வதேசக் கமிஷன் கொள்கையால் பெர்லின் சுவர் அழிந்தது.
  5. மெக்ஸிகோவில் தொலைந்த பர்ஸ் கிடைத்தது.
  6. புதுச்சட்டம் வந்து உதவியது.
  7. பாலைவனத்தில் பேரூற்று எழுந்தது.

நாமே சொல்லலாம், விளக்கம் தரலாம். அவர்களே புத்தகங்களைப் படித்து - சுமார் 500க்கு மேற்பட்டவை வெளியாகியுள்ளன - இவற்றைச் சேகரம் செய்து, ஏற்றுக்கொண்டு, பிறகு விபரம் கேட்கவேண்டும்.

தம்பி - இதைப் பற்றி தனியாகக் கட்டுரையிருக்கிறதா?

அண்ணன் - தனிக் கட்டுரையில்லை. படித்துச் சேகரம் செய்யவேண்டும்.

தம்பி - வேறு ஏதாவது இது சம்பந்தமாகச் சொல்லக் கூடியதுண்டா?

அண்ணன் - தினசரி வாழ்வு அன்னை வாழ்வாக வேண்டும். It must be full of energy and surprises. வளரும் தெம்பும், ஆச்சரியமும் கலந்ததாக வாழ்வு மாறினால் அன்னையை ஏற்றுக்கொண்டோம் என அறியலாம்.

தம்பி - அன்னை நம் வாழ்விலிருந்தால் நாம் செய்யும் காரியங்கள் பல மடங்கு பெருக வேண்டும். அதுவே அன்னையிருப்பதற்கு அடையாளம்.

அண்ணன் - வாழ்வு பல நிலைகளில் (layers) அமைந்துள்ளது. ஒரு நிலையில் வேலை செய்து அது பூரணமானால், அடுத்த நிலைக்குப் போகலாம். ஆபீஸ் பிரமோஷன் அதுபோலுள்ளது. குத்தகைக்காரன் நிலம் வாங்குவது, டிரைவர் கார் வாங்குவது உடனே நடப்பதில்லை. பல ஆண்டுகள் வேலை செய்தால் நூறில் ஒருவருக்குப் பலிக்கும். இன்று சமூக நிலை மாறியுள்ளது. டாக்ஸி டிரைவர் கார் வாங்கத் திட்டம் உண்டு. வேலையில் சேர்ந்தவுடன் வீடு கட்டத் திட்டம் உண்டு. தாலுக்காபீஸ் குமாஸ்தா திறமைசாலியானால் டிப்டி தாசில்தார் பரீட்சை எழுதலாம், டிப்டி கலெக்டர் பரீட்சை எழுதலாம்.

தம்பி - வாழ்வு நிலைகளை நிதானமாகவே கடப்பது வழக்கமானாலும், உடனே தாண்டும் சந்தர்ப்பமும் உண்டு.

அண்ணன் - அன்பர் கிளார்க் உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தால், ஆபீசராக செலக்ட் ஆகிறார். ஒரே வருஷத்தில் 3 பிரமோஷன்கள் வருகின்றன. எல்லா நிலைகளிலும் (layers) அடுத்த நிலை ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவை உடனுக்குடன் தொடர்ந்து கிடைப்பது அருள் செயல்படுவதற்கு அடையாளம்.

தம்பி - அருள் செயல்பட நாம், "காரியத்தைவிட அன்னையை முக்கியமாக மனதில் ஏற்று ஆத்மாவில் சந்தோஷப்பட வேண்டும்''.

அண்ணன் - காரியத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். ஆனால் மனதில் அன்னை மட்டுமேயிருக்க வேண்டும் (care-free attitude & causeless joy).

தம்பி - அதைத்தான் soul's freshness ஆத்மாவின் அற்புதம் என்று கூறுகிறார்களா? Freshness, spontaneity, opening, sincerity, receptivity, விழிப்பு, இயல்பாக இருப்பது, உண்மை, அன்னையை ஏற்கும் பாங்கு இவை முக்கியம்.

அண்ணன் - உணர்வால், மனதால் வாழாமல், ஆத்மாவால் வாழ வேண்டும். காரியத்தையும், பலனையும்விட கடமையையும், சிறப்பையும் கருதவேண்டும். குழந்தையுள்ளமும், குணச் சிறப்பும் தேவை.

தம்பி - வயது முதிர்ந்த அனுபவமும், திறந்த வெள்ளை மனதும் தேவை. உயர்ந்த அனுபவமும், சிறிய குழந்தை மனசும் சேர்ந்திருக்க வேண்டும்.

அண்ணன் - நல்லது மட்டும் இருந்தால், அற்புதம் மட்டும் நடக்கும். ஆத்ம விழிப்புக்கு ஆனந்தம் மட்டுமே பரிசு.


தொடரும்...

****   

Comments

10.பிரார்த்தனை பலிக்க

10.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 
Para 11 -  Point no. 2  - Please indent the last word in the line.



book | by Dr. Radut