Skip to Content

12. அன்னை ஸ்ரீ அரவிந்தரின் புரட்சிகரமான சிந்தனைகள்

அன்னை ஸ்ரீ அரவிந்தரின் புரட்சிகரமான சிந்தனைகள்

என். அசோகன்

அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் ஆன்மீகத்தில்தான் புரட்சிகரமான சிந்தனைகளை வெளியிட்டார்கள் என்றில்லை. சமூகரீதியாகவும் அவர்கள் சிந்தனைகள் புரட்சிகரமானதாக அமைந்தது. அதிலொன்று காதல் திருமணமாகும். காதல் திருமணம் என்பது மேலை நாடுகளில் வெகுநாட்களாகவே பழக்கத்திலிருக்கின்ற ஒன்றாகும். 1950-க்குப் பிறகுதான் இது இந்தியாவிலேயே தலைகாட்டத் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னர் பெற்றோரே பார்த்துப் பத்துப் பதினைந்து வயதிலேயே திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆண்பிள்ளைகளுக்குப் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி எல்லாம் வந்துவிட்டதால், இளைஞர்கள் பள்ளி, கல்லூரிகள் முடித்து, வேலை தேடிக் கொள்ளும் வரையிலும் திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டியதாயிற்று. 1950-க்குப்பின் பெண்களுக்கும் கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கல்லூரிப் படிப்பு, அதன்பின் வேலை என்று பரவ ஆரம்பித்ததால் கல்லூரியில் வைத்து, அலுவலகத்தில் வைத்து, காதல் திருமணங்கள் அரங்கேறின. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைப்போலவே காதல் திருமணங்களும் சகஜமாகி விட்டது.

அன்பர்களாக வருபவர்களுக்குப் பொதுவாக எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை என்று பகவான் குறிப்பிட்டுள்ளார். பிரம்மச்சரியமும் இதிலடங்கும். ஆகவே அன்பர்கள் அவரவர்களுக்கு என்ன கட்டுப்பாடு ஏற்றுக்கொள்ள முடியுமோ அதை அவர்களேதான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அன்னையிடம் வந்த அன்பர்கள் பெரும் பாலானவர்கள் குடும்பஸ்தர்களாகவே இருக்கிறார்கள். அப்படி வருபவர்களில் யாருக்காவது ஆன்மீக ஆர்வம் எழுந்து, அதற்குண்டான கட்டுப்பாடுகளை மேற்கொண்டார்கள் என்றால், அவர்கள் உயர்ந்த மனிதர்களாகிவிடுகிறார்கள். பகவான் ஆரம்ப காலத்திலேயே ஜாதியும், தீண்டாமையும் நீக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார். இப்பொழுது காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் இவ்விஷயத்தில் அன்னை மற்றும் பகவானுடைய கருத்துகள் என்னவென்று புரிந்து கொள்வது நல்லது. வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வதை அவர்கள் முதலில் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அடுத்த பிரச்சனை வெவ்வேறு ஜாதி பழக்கங்கள் ஒத்துப் போவது எப்படி என்று பார்ப்பதுதான். சைவ, அசைவ உணவு என்பது இதில் பிரதானமாக அமைகிறது. கணவராக வரப்போகிறவர் அசைவம் உண்பவர் என்று முதலிலேயே தெரிந்தால், அதை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிய பின்பு பேச்சை மாற்றி அதை ஆட்சேபிப்பது சரியில்லை. வாழ்க்கையிலேயே பொதுவாக அடுத்தவருடன் பழகும்போது நிறைய இடங்களில் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டியுள்ளது. ஆகவே திருமணம் என்ற விஷயத்தில் இம்மாதிரி சாப்பாட்டு விஷயங்களில் விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும். திருமணத்திற்கு முன்பு ஏற்றதை, பின்பு வேண்டாம் என்று மாற்றுவது சரியில்லை. இதைவிட பெரிய பிரச்சனை திருமணத்தில் குறுக்கிடுகிறது. அதுதான் தன் குடும்பம் அந்தஸ்த்தில் உயர்ந்ததா அல்லது அடுத்தவர் குடும்பம் உயர்ந்ததா என்பது. P&P நாவலில் வருகின்ற கதாப்பாத்திரமான டார்சி, இவ்விஷயத்தில் தன் குடும்பப் பெருமையை அளவிற்கதிகமாகப் பாராட்டிக் கொண்டிருந்தான். வருமானம், கலாச்சாரம், அந்தஸ்த்து, அறிவு என்ற எல்லா விஷயங்களிலும் போட்டி எழுவது வழக்கம்.

இப்படித் தன் குடும்பம் உயர்ந்ததா அல்லது அடுத்தவர் குடும்பம் உயர்ந்ததா என்று சதா போட்டியிடும்போது இருவர் சந்தோஷமும் கெட்டுத்தான் போகிறது. கலப்புத் திருமணங்களிலும் இதே பிரச்சனை வர வாய்ப்புள்ளது. காதல் திருமணம் செய்பவர்கள் இந்தப் பிரச்சனையை எழுப்புவது அறிவிற்குப் பொருத்தமானதாக இல்லை. கலப்புத் திருமணங்களில் ஒருவர் அன்னை அன்பராக இருந்து, மற்றவர் அன்னை அன்பராக இல்லாவிட்டால் குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டிற்குச் செல்வது என்ற பேச்சு வரும்போது தகராறாகிவிடும். சடங்கு, சம்பிரதாயம் போன்ற நிகழ்ச்சிகளில் அணிகின்ற உடைகள் விஷயமாகவும் கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் இருவரும் அன்னை பக்தர்களாக இருக்கும்பட்சத்தில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பில்லை.

கலப்புத் திருமணங்களில் சடங்கு முறைகள் பால், பழம் கொடுப்பதிலிருந்து, ஸ்தோத்திரம் சொல்வது, சீர்வரிசை செய்வது, தாலி கோர்ப்பது, சாப்பாட்டிற்கு அழைப்பது என்று எல்லாக் கட்டங்களிலும் வேறுபடலாம். ஆனால் இவைகளைச் சர்ச்சைக்கு ஆளாக்காமல் அன்பர்கள் விடுபடுவது நல்லது. எல்லாத் திருமணங்களிலும் மனநிலை வேறுபாடுகள் வரத்தான் செய்கின்றன. ஆகவே கலப்புத் திருமணங்களிலும் இது தலையெடுக்கிறது. ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இது தலையெடுக்காது என்று சொல்வதில் அர்த்தமில்லை. எழுகின்ற பிரச்சனைகளில் உண்மையிலேயே ஜாதி சம்பந்தப்பட்டது எது என்று கவனமாக ஆராய வேண்டும். எவ்வளவு கடினமான பிரச்சனையாக இருந்தாலும் அன்னை அன்பர்களுக்கு அவை தீராத பிரச்சனையாக இருக்க முடியாது. அடுத்தவர்கள் கண்ணோட்டத்தை மதித்தல் என்ற அன்னை அணுகுமுறையைக் கொண்டு இத்தகைய பிரச்சனையைச் சமாளித்து விடலாம்.

பெண்களுக்கும், ஆண்களுக்கு நிகரான சமவுரிமை: சமத்துவம் என்பது பிரெஞ்சுப் புரட்சி கொள்கைகளில் இரண்டாவது ஆகும். முதல் கொள்கையான சுதந்திரமே இன்னமும் முழுமையாக ஏற்கப்படவில்லை. ஒரு கருத்தை பொதுமக்கள் ஏற்கும் பொழுதுதான் அதற்கு வலிமை வருகிறது. அந்நாட்களில் வேதகாலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக இருந்தார்கள். இன்றுகூட கேரளாவில் மருமக்கள் தாயம் என்ற பெண்வழி சொத்துமுறை அமலில் உள்ள இடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முகமதியர்களைத் தவிர மற்ற எல்லா சமூகத்தினரும் பெண்களுக்கு சமவுரிமை கொடுக்கிறார்கள். அன்னையும், பகவானும் பெண்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது மட்டுமின்றி ஆன்மீகத்திலும் அவர்களுக்கு சமவுரிமை கொடுத்தார்கள். அன்னையிடம் பகவானே சரணடைந்து அன்னையை ஒருபடி மேலே உயர்த்தினார். சுதந்திரமடைவதற்கு சில வருடங்களுக்கு முன்பு அன்னை, ஆசிரமத்தில் பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு உரிமை வழங்கினார். பெண்களும் அந்த உரிமையை ஏற்றுக் கொண்டு தீவிரமாக உடற்பயிற்சி செய்தார்கள். இந்தியாவிலேயே பகவானுடைய ஆசிரமத்தில்தான் பெண்களுக்கு முதன்முதலாக சாதகர்களாகும் சம உரிமை வழங்கப்பட்டது. இந்திய சரித்திரத்தில் பெரிய மகாராணிகளும், பெரிய பெண் அடியார்களும் இருந்துள்ளார்கள். ஆனால் இப்படி அமைவது விதிவிலக்கு. இங்கிலாந்தில் ஒரு பெண்மணி ஒரு ஹாலுக்குள் நுழைந்தால், அங்கு அமர்ந்திருக்கும் ஆண்கள் அனைவரும் எழுந்து நிற்பார்கள். ஆனால் அந்த நாட்டில்தான் கல்யாணமான பெண் கணவனுடைய ஒரு உடைமையாகக் கருதப்பட்டாள். ஆங்கிலேயர்களின் பழக்கம் என்னவென்றால் ஒரு பெண்ணை மணக்க விரும்பும் இளைஞன் அவள்முன் மண்டியிட்டு, தன்னை மணம் புரிந்து தன்னை கௌரவிப்பாளா என்று வாய்விட்டுக் கேட்க வேண்டும். கலாச்சாரம் அப்படி இருந்தாலும் பெண்களுக்குப் பொருளாதார ஆதரவு தேவைப்பட்டதால் அவர்கள் நிலைமை பலஹீனமாகவே இருந்தது. ஒரு பெண்ணிற்குத் திருமணம் ஆகும்போது அவளுடைய சொத்து அவளை மணம் புரியும் கணவனுக்குப் போய்ச் சேரும். சொத்தைப் பெறுவதற்குக்கூட உரிமை இல்லாமல் பெண்கள் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் இருந்தார்கள். ஆகவே நடைமுறையில் சமூகத்தில் பெண்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. திருவள்ளுவர் சாப்பிடும் சமயத்தில் தன்னுடைய மனைவி வாசுகியைத் தண்ணீரையும், ஊசியையும் தன்னுடைய பக்கத்தில் வைக்கச் சொல்வாராம். பல வருடங்களாக இப்படிச் செய்தாலும், ஒரு தடவைக்கூட ஏன் என்னை ஊசியும், தண்ணீரும் வைக்கச் சொல்லுகிறீர்கள் என்று வாசுகி அம்மையார் திருவள்ளுவரைக் கேட்டதேயில்லை. கடைசியாக ஒருநாள் அவரே அந்தப் பேச்சை எடுத்து, உன்னை ஊசியும், தண்ணீரும் வைக்கச் சொல்லுவேன். நீயும் ஏன் எதற்கு என்று கேட்காமல் வைத்துக் கொண்டிருந்தாய். நீ உணவு பரிமாறுகின்றபோது சாதம் சிந்தினால், அதை ஊசியால் எடுத்துத் தண்ணீரில் கழுவி என் தட்டில் போடுவதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தேன். ஆனால் ஒருநாள்கூட நீ சிந்தியதில்லை. அந்தளவிற்குக் கவனமாகப் பரிமாறினாய் என்று புகழ்ந்து பேசினார். பகவான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வந்தாலும், இந்திய சமூகம் அவர் இஷ்டப்பட்டதுபோல் பெண்களை நடத்தவில்லை, 1920, 30-இல் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் மற்றும் மூன்றாம் மனைவியரை ஆண்கள் மணந்து கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில் குழந்தைப் பருவத்திலேயே ஒரு பெண் திருமணமாகி ஏழு வயதிலேயே விதவையானாலும் அவளை ஒரு அபசகுனமாகக் கருதியதும் உண்டு.

ஆன்மீக அளவில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்றுதான் பகவான் கூறியுள்ளார். பெண்களுக்கு ஆசிரமத்தில் உறுப்பினராகும் தகுதியை அளித்துள்ளார். மேலும் படிக்கும் உரிமையையும் வழங்கியுள்ளார். ஆசிரமத்தைப் பொறுத்தவரை ஜாதி என்பது என்றுமே பிரச்சனையாக இல்லை. ஏனென்றால் எல்லா ஜாதி மக்களும் ஆசிரமத்தில் இடம் பெற்றிருந்தார்கள். அதுபோக வெளிநாட்டிலிருந்தும் உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். சில ஆசிரமத் துறைகளுக்கே பெண்கள் தலைமை தாங்கியதுமுண்டு. சில குறிப்பிட்ட விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகத் திறமையை வெளிப்படுத்தியதும் உண்டு. பகவான் தன்னுடைய சாவித்திரி காவியத்தில் கதாநாயகி சாவித்திரியை எமனையே கரைக்குமளவிற்கு ஆன்மீக பலம் வாய்ந்த கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளார். சாவித்திரி வாங்கித் தரும் வரங்களைப் பெற்று அனுபவிக்கும் இடத்தில்தான் சத்தியவானே இருக்கிறார். அன்னையை இந்திராகாந்தி அம்மையார் 1970-இல் சந்தித்தபொழுது அவர்கள் அன்னைக்கு மிகவும் மனோதிடம் உள்ள பெண்மணியாகத்தான் காட்சியளித்தார். தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்க வேண்டுமென்று அன்னையிடம் கேட்டபோது அன்னை பலமாகத் தலையசைத்து நல்ல மெஜாரிட்டி கிடைக்கும்படி செய்தார். வங்கதேச விஷயமாக பாகிஸ்தானுடன் போர் மூண்டபொழுது அன்னை, இந்திரா அவர்களுக்குப் போர் நிதிக்காக தங்கத்தையே அனுப்பினார். சமூகத்தின் பலஹீனமானவர்களை ஆதரிப்பது என்பது சாதாரணமான விஷயமில்லை. நாம் யாரை ஆதரிக்கிறோமோ அவர்களே நமக்கு எதிரியாக மாறினாலும் ஆச்சரியமில்லை. இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் பெண்களை ஆண்களுக்குச் சரிநிகர் சமானம் என்று சொல்வதோ, அவர்களை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்வதோ, கால்சட்டை அணிந்து உடற்பயிற்சி செய்ய அனுமதிப்பதோ, என்றிவையெல்லாம் மிகவும் புரட்சிகரமான விஷயங்கள். 1904-ஆம் ஆண்டிலேயே இந்தியா உறங்கிக் கொண்டிருந்தபோதே நாடு பூரண சுதந்திரம் அடைய வேண்டும் என்று பகவான் கருத்துத் தெரிவித்தார். இந்தப் புரட்சிகரமான கருத்தை காங்கிரஸ் கட்சி 1929-ஆம் ஆண்டில்தான் ஏற்றுக் கொண்டது. இம்மாதிரியே பாகிஸ்தான் இந்தியாவை விட்டுப் பிரிந்து போனபோது, அடுத்த இருபத்தைந்து ஆண்டில் பாகிஸ்தான் இரண்டாக உடையும் என்று தீர்க்க தரிசனமாக ஒரு எச்சரிக்கை விடுத்தார்.

வாழ்க்கையை கைவிடாமல் இருத்தல்

வன்முறையான புரட்சி நிகழ்த்தாமல் ஒரு சமூகத்தை மாற்ற முடியும் என்றால் அப்படிப்பட்ட மாற்றம் கொண்டு வரக்கூடிய கருத்தை நாம் புரட்சிகரமான கருத்து என்கிறோம். உதாரணமாக கலப்புத் திருமணம் இருநூறு வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் வந்திருந்தது என்றால் அப்பொழுதே இந்திய சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றி இருக்கும். தற்பொழுது வன்முறையின்றி சமூகம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. குடும்பத்தைத் துறந்து காட்டில்போய் தவம் செய்வது என்பது நம் நாட்டில் வழக்கமான காரியமாகி விட்டது. ஸ்ரீ அரவிந்தர் இதே கருத்தை வேறுவகையாகச் சொல்கிறார். அதாவது குடும்பத்தைத் துறக்காமல் குடும்பத்திற்குள்ளேயே இருந்து கொண்டு யோகத்தைச் செய்யலாம் என்கிறார். இது மிகவும் புரட்சிகரமாகத்தான் இருக்கிறது. இதன் புரட்சிகர அம்சங்கள் என்ன என்று பார்ப்போம். திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருப்பது கடினமான காரியமாகும். அதேசமயத்தில் எல்லா வாழ்க்கையும் யோகம்தான் என்று சொல்லியதுமுண்டு. வாழ்க்கையே யோகம் என்றால் நாம் பற்றுதல் இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அர்த்தமாகிறது. 1960-இல் ஒரு இந்திய அரசாங்க அதிகாரி அமெரிக்காவிற்குப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். அந்த காலத்தில் அமெரிக்காவிற்கு அப்படி செல்வது மிகவும் விசேஷமாகக் கருதப்பட்டது. அங்கு, இந்தியர் என்பதால் அவருக்கு ஹோட்டலில் ரூம் கிடைப்பது சிரமமாக இருந்தது. அதுபோக மனைவி மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து அவரால் இருக்க முடியவில்லை. ஒரே வாரத்தில் இந்தியாவிற்குத் திரும்பி வந்துவிட்டார். ஒரு அமெரிக்க ஸ்காலர்ஷிப்பிற்கு 1200 பேர் போட்டியிட்டபொழுது அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வழியில் அமெரிக்கா சென்றவர் அங்கிருந்து கொண்டே தன்னுடைய நண்பர் ஒருவருக்குத் தான் ஒரு ஸ்காலர்ஷிப் ஏற்பாடு செய்தார். நண்பர் அமெரிக்கா வந்திறங்கியவுடன் குடும்பத்தைப் பிரிந்து வந்த ஏக்க உணர்வு அதிகமாகி வந்த வேகத்திலேயே ஊர் திரும்பினார். நம் வீட்டில் இருக்கும் பொழுது நாம் மற்றவர்களுடன் உணர்வில் ஐக்கியமாகியிருக்கிறோம். அந்தப் பற்றுதலை விடுவதுதான் யோக முயற்சி.

வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் ஏராளமாக பணத்தையும், அதிகாரத்தையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். அப்படி அவர்கள் சேமித்த பணமும், அதிகாரமும் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. ஆன்மீக கட்டுப்பாடுகள் இப்படிப் பணபோதை, அதிகார போதையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கச் சொல்கிறது. கட்டுப்பாடு தீவிரமானால் பணத்தையே தொடக் கூடாது என்றும் சொல்கிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் தங்கக் காசை கண்டாலே உடல் கூசும் அளவிற்கு ஆகிவிட்டது. பகவான் இப்படியெல்லாம் நம்மை இருக்கச் சொல்லவில்லை. சத்திய ஜீவிய ராஜ்ஜியத்திற்கு அடிப்படை செல்வம் என்பதால் பகவான் நம்மை நிறையவே பணம் சம்பாதிக்கத்தான் சொல்கிறார். ஆனால் சம்பாதித்த பணத்தின்மேல் பற்றுவைக்காமல் அந்தப் பணத்தை அன்னையின் திருவடிகளில் சமர்பிக்கச் சொல்கிறார். பணம், அதிகாரம், குடும்பம் என்று இவை எதற்குமே பகவான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இவற்றின்மேல் பற்று வைக்கக் கூடாது என்ற புரட்சிகரமான கருத்தைத்தான் அவர் தெரிவிக்கிறார். அந்தப் பற்று வராமல் விடுபட வேண்டும் என்கிறார். வெளிநாடுகளில் நெடுங்காலமாக வசிப்பவர்கள் கடைசிக் காலத்தில் தாய்நாடு வர விரும்புவதுண்டு. தான் பிறந்த மண்ணின்மேல் தன் உடம்பு கொண்ட பாசத்தை அது காட்டுகிறது. ஒரு அன்பான தகப்பனார் தன்னுடைய ஒரு மகனையும், மகளையும் டாக்டருக்குப் படிக்க வைத்தார். அவருடைய மகன் மெடிக்கலில் மேற்படிப்பு படித்து வாழ்க்கையில் நன்றாக செட்டிலாகி விட்டான். தகப்பனார் தன்னுடைய விதவை அத்தையை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தன் அத்தை பிள்ளையை இஞ்சினீயரிங் படிக்க வைத்தார். தன் மூத்தமகனை இவ்வளவு செலவு செய்து படிக்க வைத்த பின்பு அந்தப் பிள்ளை தன்னுடைய சகோதரர்களின் படிப்புக்குப் பொறுப்பேற்கவில்லை என்று தெரிந்தபோது அவர் மனம் உடைந்து போனார். அவருடைய மற்ற பிள்ளைகளில் ஒருவன் தகப்பனாருக்கு எதிரியாக மாறினான். கல்லூரியில் படிக்க மறுத்தான். வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டான். குடும்பமே திவாலாகிப் போனது. நாற்பது வருடமாக மரியாதையாக இருந்த ஊரில் தொடர்ந்து இருக்க முடியாமல் வெளியேற நேரிட்டது. தகப்பனார் தற்கொலை செய்ய முடிவு செய்து கடலில் மூழ்கி இறந்து போனார். ஒரு வாரம் கழித்து அவருடைய மூத்தமகன் டாக்டராக வேலை செய்யும் அதே மருத்துவமனைக்குத் தகப்பனாருடைய உடல் வந்தது. விலகிப்போன மகனைத்தேடி அவர் உடல் வந்தது. தகப்பனாருக்குப் பிள்ளைமேல் இருந்த அதீத பாசத்தை இது காட்டுகிறது. இத்தகைய கெட்டியான பாசத்தை விட்டுவிட வேண்டும் என்றுதான் பகவான் சொல்கிறார்.

இப்போது Rules of Psychic Education என்ற தலைப்பில் அன்னை கூறியுள்ள புரட்சிகரமான கருத்துகளுக்கு வருவோம்.

1. அறிவை நம்பாமல் ஆன்மாவை நம்பு: வாழ்க்கையில் அறிவு சாத்தியமில்லை என்று சொன்ன பல விஷயங்கள் உண்மையில் சாத்தியமாகி இருக்கிறது. உதாரணமாக இங்கிலாந்திடமிருந்து, இந்தியா சுதந்திரம் பெற முடியாது என்று பெரும்பாலான இந்தியர்கள் திடமாக நம்பினார்கள். ஆனால் காந்திஜி கிடைக்காது என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி இங்கிலாந்தைத் தாக்கியபோது சரணடைவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று உலகமே நினைத்தது. ஆனால் ஹிட்லரின் தாக்குதலை முறியடிக்கலாம் என்று இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் திடமாக நம்பினார். அந்த நம்பிக்கை அறிவிற்குப் பொருத்தமாக இல்லை. இருந்தாலும், அந்த நம்பிக்கை வென்றது. 1929-ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரம், அமெரிக்க ஸ்டாக் மார்க்கெட் சரிந்துவிட்டபோது வங்கிகள் எல்லாம் திவாலாகின்றன என்று பொதுமக்கள் பயந்து தங்கள் பணத்தை எல்லாம் எடுக்க ஆரம்பித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் FDR அவர்கள் வங்கிகள் நன்றாகத்தான் உள்ளன. மக்களாகிய நீங்கள்தான் பீதியில் மூழ்கியிருக்கின்றீர்கள். இப்படிப் போட்ட பணத்தை எல்லாம் எடுத்தால் உண்மையில் வங்கிகள் எல்லாம் திவாலாகிவிடும், ஆகவே எடுத்த பணத்தை மீண்டும் அதே வங்கியில் போடுங்கள், பீதியிலிருந்து விடுபடுங்கள் என்று அறிவுறுத்தினார். அவருடைய அறிவுரை அறிவிற்குப் பொருத்தமானதாகப் பலபேருக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அவர் சொன்னதற்கு மக்கள் கட்டுப்பட்டார்கள். ஆகவே எடுத்த பணத்தை மீண்டும் அதே வங்கியில் போட்டார்கள். அவர் சொன்னது போலவே நிலைமை நார்மலுக்கு வந்தது.

நாம் இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது தன்னால் முடியாது என்று அறிவு நினைக்கும்பொழுது அறிவைவிட உயர்ந்த சக்திகளுக்கு முடியும் என்று நமக்குப் புரிய வேண்டும். மாதம் லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என்று அப்பா அவர்கள் சொல்லுகின்றபோது நமக்கு நம்புவதற்கு கஷ்டமாக உள்ளது. ஆனால் நம் ஆன்மாவிற்கு இந்தச் சக்தி உண்டு என்று நம்பினால், இப்படி முடியாது என்று நினைப்பதும் சாத்தியமாகிவிடும். 1990-ஆம் ஆண்டு அன்னை பக்தராக இருந்த ஒரு இளம் வாலிபர் சில ஆயிரங்கள்தான் சம்பாதித்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தபோது அவருக்கு அமெரிக்காவில் ஐ.டி. துறையில் வேலை கிடைத்து, இப்போது இலட்ச ரூபாய் சுலபமாக சம்பாதிக்கிறார். ஒரு விமான விபத்தில் படுகாயமடைந்த ஒருவரால் நடக்கவோ, பேசவோ, சாப்பிடவோ கூட முடியவில்லை. அவரைக் கவனித்த டாக்டர்கள் அவர் பிழைப்பது அரிதிலும் அரிது என்று சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் அவர் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. ஒரே வருடத்தில் இந்த ஆஸ்பத்திரியிலிருந்து எழுந்து வெளியேறுகிறேன் என்று சபதம் பூண்டார். அவர் சொன்னமாதிரியே செய்தும் காட்டினார். மருத்துவ விஞ்ஞானம் அவரால் நடக்கவும் முடியாது என்று சொன்னது. ஆண்டவனின் கிருபையால் தன்னை நடக்க வைக்க முடியும் என்று நம்பினார். ஆண்டவனின் கிருபையில் அவர் வைத்த நம்பிக்கைதான் ஜெயித்ததே தவிர மருத்துவ விஞ்ஞானம் ஜெயிக்கவில்லை. தாங்க முடியாத கடன்பாரத்தில் மூழ்கியிருக்கும் அன்பர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தால்கூட இந்தக் கடனை அடைக்க முடியாது என்று நம்புவதுண்டு. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்- களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பெரிய வருமானம் வந்து, மலைபோலிருந்த கடன் அப்படியே கரைவதுமுண்டு. இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? Finite-ஆன நம்முடைய பார்வைக்கு நமக்குத் தெரிந்த வழிகள் எல்லாம் அடைத்து விட்டதுபோல தோன்றுகிறது. ஆனால் அருளின் அகன்ற பார்வைக்கு, நமக்குத் தெரியாத இன்னும் பலவழிகள் தெரிகிறது. அப்படி நமக்குத் தெரியாத ஒரு வழியின் மூலம் நமக்குப் பெரிய வருமானம் கிடைத்து, நம்முடைய கடன் பிரச்சனை தீரும்போது, இதுவும் சாத்தியமா என்று ஆச்சரியத்தில் மூழ்குகிறோம்.

2. வேலையைச் செய், செளகரியத்தை நாடாதே: வழக்கமாக நம்முடைய செளகரியங்கள் பாதிக்காத வகையில்தான் நாம் நம் வேலையைத் தேடுவோம். ஆனால் பெரிய காரியங்களை நாம் இம்மாதிரி செய்ய முடியாது. எந்த ஒரு பெரிய வேலையைத் தொடங்கினாலும் நாம் நம் செளகரியங்களைத் துறந்து அந்த வேலையை முடிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். ஒரு வியாபாரத்தை தொடங்குவதற்காக ஒருவர் கட்டடம் கட்டுகிறார் என்றால் நேரம், காலம் பாராமல் அவர் அந்த வேலையை முடிக்கத் தயாராக வேண்டும். தேவைப்பட்டால் அந்த வேலை நடக்கும் இடத்திலேயே தூங்கவும் முன்வரவேண்டும். ஏ. சி. வசதிகள் எல்லாம் வேண்டும் என்று கேட்க முடியாது. கட்டடத்திற்குத் தேவையான கட்டுமானப் பொருட்களை வாங்குவதற்குத் தேவைப்பட்டால் நெடுந்தூரம் பயணம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். இம்மாதிரி நேரங்களில் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. காடாக இருக்கும் நிலத்தை விளைநிலமாக மாற்ற ஒரு விவசாயி முன்வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். இது மிகவும் கடினமான வேலையாகும். இந்த வேலையைச் செய்யும்போது அவர் எல்லா செளகரியங்களையும் மறந்து விடவேண்டும். தேவைப்பட்டால் ஒரு கொட்டகையில்கூட படுக்க வேண்டும். நன்றாக சமைத்த வீட்டுச் சாப்பாட்டை மறக்க வேண்டும். நவீன குளியலறை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. திறந்த வெளியில் தண்ணீர் கொட்டுகின்ற போர்களில் கூட குளிக்கத் தயாராக இருக்க வேண்டும். காட்டைத் திருத்தி விளைநிலமாக மாற்றிய பிறகுதான் இந்தமாதிரியான செளகரியங்களுக்கு அவர் ஆசைப்பட வேண்டும். எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த அரசியல்வாதிகள் தேர்தல் வரும்போது, பிரச்சாரத்திற்காக நீண்ட தூரப்பயணம் மேற்கொள்வதை நாம் பார்க்கிறோம். ஒரு நாளைக்கு நான்கைந்து இடங்களில் மீட்டிங் போடுகிறார்கள். இதற்காகக் காலை நான்கு மணிக்கே எழுந்துவிட வேண்டியுள்ளது. கடைசி மீட்டிங் முடிந்து இரவு ஓய்வு எடுக்கும்போது பதினொரு மணியாகி விடுகிறது. இதற்கெல்லாம் அவர் தயாராக இல்லை என்றால், அவரால் அந்தத் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிகழ்த்த முடியாது. கால்சென்டரில் வேலை செய்பவர்களெல்லாம் நைட் ஷிப்ட்டிற்கு வேலைக்குப் போயாக வேண்டும். வெளிநாட்டு கஸ்டமர்கள்தான் போன் செய்வார்கள் என்பதால் நைட் ஷிப்ட் செய்ய வேண்டியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம். நைட் ஷிப்ட்டிற்குப் போக பெண்கள் யோசிப்பார்கள். இருந்தாலும் அப்படிப்போனால்தான் சம்பளம் கிடைக்கும் என்ற நிலையில் அவர்கள் தங்களுடைய பாதுகாப்பையும் தியாகம் செய்து விட்டுத்தான் வேலை செய்கிறார்கள். ஐ. டி. கம்பெனி வேலையில் லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றால் அது நமக்குப் பெரியதாகத் தெரிகிறது. ஆனால் இரவெல்லாம் கண் விழித்து அமெரிக்காவில் உள்ளவர்களுடன் transactions செய்துதான் அத்தகைய பெரிய வருமானத்தை அவர்கள் பார்க்கிறார்கள். வருமானம் லட்ச ரூபாயாக இருந்தாலும் எனக்கு நைட் ஷிப்ட் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு இந்த லட்ச ரூபாய் இல்லை என்று நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

3. வேலையில் Perfection-ஐ உயர்த்திக் கொண்டே போகவேண்டும்: எந்த வேலையிலும் முழு Perfection-ஐ அடைவது எப்பொழுதும் சிரமமாகும். உதாரணத்திற்குச் சுத்தத்தை எடுத்துக்கொள்வோம். நூறு சதவிகிதம் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறோம் என்று எவரும் சொல்ல முடியாது. சுத்தப்படுத்த வேண்டிய இடங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நேற்று நாம் தரையைப் பெருக்கிக் கழுவினோம் என்றால், இன்று மின்விசிறிகள், மின்விளக்குகள், அலமாரிகள், மற்றும் புத்தக அலமாரிகள் ஆகியவற்றைத் துடைத்துச் சுத்தப்படுத்தலாம். மறுநாள் குளிர் சாதனம், மிக்ஸி, கிரைண்டர், ஹீட்டர் போன்ற சாதனங்களைச் சுத்தப்படுத்தலாம். இந்நிலையில் வீட்டை யாரேனும் பரி÷சாதனை செய்யச் சொல்லி அவர்களை நம் சுத்தத்திற்கு மதிப்பீடு செய்யச் சொன்னால் அவர்கள் கண்களுக்கு நம் கண்களுக்குப்படாத இடங்கள் எல்லாம் படும். இந்த இடத்தைச் சுத்தம் செய்யாமல விட்டுவிட்டீர்கள். இது உங்கள் கண்களில் படவேயில்லை என நமக்கு நிறைய சுட்டிக் காட்டுவார்கள். தலைவாரும் சீப்பு சுத்தமாக இல்லை, கம்ப்யூட்டர் கீ போர்டு சுத்தமாக இல்லை, கட்டிலுக்குக் கீழே சிலந்தி வலை உள்ளது என்றெல்லாம் சொல்லி நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்குவார்கள் . ஆகவே சுத்தம் என்ற விஷயத்தில் எப்போதும் அதை மேம்படுத்திக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். சுத்தத்திற்கு   இது எவ்வளவு பொருந்துமோ அதேயளவிற்கு நாம் செய்கின்ற மற்ற வேலைகளுக்கும் அது பொருந்தும். உதாரணமாக பெயிண்டர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர், தச்சு வேலை செய்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் செய்கின்ற வேலைகளில் கூட முன்னேற்றத்திற்கு நிறைய வாய்ப்புள்ளது. பெயிண்டரை எடுத்துக் கொண்டால் மார்க்கெட்டில் என்னென்ன புதுவிதமான பெயிண்ட் வந்துள்ளது என்று விசாரித்துக் கொண்டேயிருக்- கலாம். அம்மாதிரியே எலெக்ட்ரீஷியன்களை எடுத்துக் கொண்டால் புதிதுபுதிதாக என்ன பவர் சேவிங் சாதனங்கள் எல்லாம் மார்க்கெட்டில் வந்துள்ளது என்று பார்க்கலாம். அம்மாதிரியே பிளம்பரை எடுத்துக் கொண்டால் என்ன புதுப்புது ஜாயிண்ட் வந்துள்ளது என்று பார்க்கலாம். பெயிண்டர் பழைய பெயிண்ட் ஒரு லிட்டருக்கு ஐநூறு சதுரடி பரப்பளவில் அடிக்கலாம் என்றால், புதிய பெயிண்ட்டில் ஐநூற்று ஐம்பது சதுரடி பரப்பளவில் அடிக்கலாம் என்றால், கஸ்டமர்கள் அவர்களுடைய அறிவு நுணுக்கத்தினைப் பாராட்டி அவரை அதிகமாக வேலைக்கு அழைப்பார்கள். அம்மாதிரியே எலெக்ட்ரீஷியனும் பதினைந்து வாட் பல்ப் கொடுக்கும் வெளிச்சத்தைப் பத்து வாட் பல்ப்பும் கொடுக்கக்கூடிய புது மாடல்கள் எல்லாம் வந்துள்ளது என்று கஸ்டமர்களிடம் தெரிவிக்கிறார் என்றால் கஸ்டமர்கள் அவருக்குத்தான் விரும்பி வேலைகளைக் கொடுப்பார்கள். அம்மாதிரியே பிளம்பரும் தண்ணீர் கசிவைத் தடுப்பதற்கு எந்தவிதமான புதுப்புதுப் பொருட்கள் எல்லாம் மார்க்கெட்டில் வந்துள்ளன என்று விவரம் தெரிந்து வைத்துள்ளார்கள் என்றால் அத்தகைய பிளம்பர் கஸ்டமரிடம் பாப்புலர் ஆகிவிடுவார். நம் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவோருக்கு நல்ல மரியாதை உண்டு. அதுவும் ஒருவர் பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்றால் அவருக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. தினமும் ஒரு புது ஆங்கில வார்த்தையைக் கற்றுக் கொள்ள முயற்சி எடுக்கலாம். தான் ஏற்கனவே எழுதிய ஒரு கட்டுரையை மேலும் சுருக்கமாகத் தெளிவாக எழுத முயற்சி எடுக்கலாம். வங்கிகளில் ஒரு புது ப்ராஜெக்டிற்குக் கடன் கொடுக்க சுலபமாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எல்லாவிதமான கேள்விகளும் கேட்பார்கள். அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல கஸ்டமர்கள் அலுத்துக் கொள்வார்கள். ஆனால், அழகாக ப்ராஜெக்ட்பற்றி எழுதத் தெரிந்தவர்கள் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். அதாவது இந்த ப்ராஜெக்டின் நோக்கம் என்ன? இதற்குத் தேவைப்படும் மூலதனம் என்ன? உற்பத்தியாகும் பொருளுக்கு என்ன தேவை இருக்கிறது? ஒரு வருடத்திற்கு எந்த அளவு இந்தப் பொருளை விற்கலாம்? நம்பிக் கொடுக்கின்ற கடனை எத்தனை வருடத்திற்குள் திருப்பி அடைக்கலாம் என்றெல்லாம் வங்கியின் கண்ணோட்டத்திலிருந்து என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்பார்களோ அந்தக் கேள்விகளை எல்லாம் ப்ராஜெக்டை தொடங்குபவர் தன்னையே கேட்டுக் கொண்டு அழகான ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுதி, வங்கி அதிகாரியிடம் வழங்கினால் அவர்கள் லாபநட்ட கணக்குகளைப் பார்ப்பதோடு மட்டுமின்றி எழுதியவரின் ஆங்கிலத் திறனைப் பாராட்டியும் கடனை வழங்குவதுண்டு.

4. அடுத்தவர்களைத் திருத்த முடியவில்லை என்றால், பேசாமல் இருக்க வேண்டும். குறை சொல்லாதே: அடுத்தவர்களைக் குறைசொல்வது என்பது நிறைய பேர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கிறது. இது அன்னைக்குச் சுத்தமாகப் பிடிக்காத ஒன்று. அடுத்தவர்களைத் திருத்த முடியும் என்றால் நாம் திருத்தலாம். ஆனால் அது முடியாத பட்சத்தில் நாம் சும்மா இருப்பது நலம் என்று சொல்கிறார். அப்படிக் குறை சொல்லாமல் நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று அன்னை விரும்புகிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். மற்றவர்களைக் குறை சொல்லாமல் நாம் சும்மா இருக்கும்போது அவர்களைத் திருத்தக் கூடிய மனோபலம் நமக்குள் தாமாக சேகரமாகிறது. அதாவது அடுத்தவரால் வரும் சிரமங்களை நாம் குறை சொல்லாமல் பொறுத்துக் கொள்ளும் பொழுது அந்தச் சகிப்புத் தன்மை நமக்குள் சாதிக்கும் திறனாக மாறுகிறது. அது நாளடைவில் படிப்படியாக வளர்ந்து, நம்முடைய செயலாற்றலை உயர்த்துகிறது. இப்படி அந்தச் சாதிக்கும் திறனை வளர விடாமல் இடையிடையே குறை சொல்லி திருப்திபடும்போது உள்ளே சேகரமாகின்ற மனோபலம் விரயமாகின்றது. P&P கதையில் திருமதி. பென்னட்டிடம் இதை நாம் காணலாம். முதலில் திரு. பென்னட் சரியில்லை என்று குறை கூறினார். அடுத்ததாக டார்சி சரியில்லை என்று ஆரம்பித்தார். மூன்றாவதாக லிஸிக்குப் போனார். இறுதியாக சார்லெட்டின் பெற்றோர்களைக் கேலி செய்தார். இவர் குறை சொல்லிக் கொண்டிருக்கும் வரையிலும் இவரால் எதுவுமே சாதிக்கவே முடியவில்லை. அதேபோல் டார்சியின் செயல்பாட்டையும் கவனித்தால் பென்னட் குடும்பத்தைக் குறை சொல்லும்வரை அவனால் எதையும் சாதிக்கவே முடியவில்லை. லிஸியிடம் திட்டு வாங்கிய பிறகு இனி யாரையும் குறை சொல்லப் போவதில்லை, லிடியா வீட்டைவிட்டு ஓடியதற்குத் தான் விக்கமைப் பற்றிய உண்மைகளை மறைத்ததுதான் காரணம் என்று உணர்ந்து டார்சி மௌனமானபின்தான், அவனால் விக்கம் மற்றும் லிடியா இருக்கும் இடத்தையும் கண்டுபிடிக்க முடிகிறது. அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து அதன் வழியே லிஸியின் மனதைமாற்றி அவளையும் திருமணம் செய்து கொள்ள முடிகிறது.

5. உள்மனத்தின் பிரதிபலிப்பே வெளி சூழ்நிலை: அன்னையின் ஆன்மீகக் கருத்துகளில் இது மிகவும் முக்கியமானதாகும். ஆகவே இதை நமக்கு ஏற்றுக்கொள்ள மனம் வராவிட்டாலும் அன்னை சொல்லி இருக்கின்றார், அதனால் அது உண்மையாக இருக்கும் என்று ஏற்றுக் கொள்ளலாம். உதாரணமாக சென்ற வருடம் தமிழ் நாட்டில் சரியாக மழை பொழியவில்லை. கடுமையான மின்பற்றாக்குறையும் நிலவியது. இது எதைக் காட்டுகிறது என்று நாம் அறிய வேண்டும். முன்பு நிறைய கிடைத்தது இப்போது அரிபொருளாகிவிட்டது என்றால், நாம் அந்தப் பொருளைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றுதான் அர்த்தமாகிறது. நாம் எந்த ஒரு பொருளை தவறாகப் பயன்படுத்தினாலும் அது நம்மேல் கோபித்துக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் போய்விடும். நம்மூரில் ஆறுகளையும், ஏரிகளையும் நாம் அசுத்தப்படுத்துகிறோம். குளங்களிலும், ஆறுகளிலும் ஆகாயத்தாமரை செடிகள் முழுவதும் பரவி தண்ணீர் ஓடுவதற்கே பெரிய இடையூறு செய்கிறது. முனிசிபாலிட்டி குழாய்கள் பல இடங்களில் தண்ணீர் கசிந்து கொண்டு யாருமே அதனைக் கவனிக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம். பெரும்பாலானோர் முனிசிபாலிட்டி தண்ணீர் வரியைச் சரியாகக் கட்டுவதில்லை. அதன் பலனாகத் தான் வழங்குகின்ற தண்ணீருக்குப் போதுமான கட்டணம் முனிசிபாலிட்டிக்குக் கிடைப்பதில்லை. இவையெல்லாம் இயற்கை கவனிக்கத்தான் செய்கிறது. அப்படிக் கவனிப்பதால் இயற்கையே மழையைக் குறைக்கிறது. தண்ணீர் ஏராளமாகக் கிடைத்தபோது விரயம் செய்த மக்கள் இப்போது பயிர் செய்வதற்கே போதுமான தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். தண்ணீரை விரயம் செய்யும் நம் மக்கள் மின்சார விஷயத்திலும் அதே தவற்றைத்தான் செய்கிறார்கள். கம்பெனிகள் மின்சாரத்தைத் திருடுகின்றன என்று பேப்பரில் அடிக்கடி படிக்கிறோம். பல லட்ச ரூபாயளவிற்குக்கூட இது போகிறது. பல ஊர்களில் மின்கட்டணத்தையே பல வாடிக்கையாளர்கள் கட்டுவதில்லை என்றும் நான் கேள்விப்படுகிறேன். இது மிகவும் மோசமான நிலையை எட்டியதால் அண்மையில் புதுச்சேரி அரசு மின்கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு மின்தொடர்பைத் துண்டிப்போம் என்று எச்சரிக்கை வழங்கி ஒரு கலெக்ஷன் டிரைவை தொடங்கியது. இதன் விளைவாக நான்கே நாட்களில் மின்வாரியம் நான்கு கோடிக்குமேல் வசூல் செய்தது. நான்கு நாட்களில் நான்கு கோடி வசூலாகியது என்றால், எத்தனை பேர்கள் மின்கட்டணம் கட்டாமல் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. மேலும் அரசாங்கம் ஒன் லைட் சர்வீஸ் என்றொரு இலவச திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் யாருமே ஒரு மின்விளக்குடன் நிறுத்திக் கொள்வதில்லை. அதே சர்வீஸில் கிரைண்டர், மிக்ஸி என்று எல்லாவற்றையும் உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். இதுபோல் விவசாயிகளுக்கு பம்ப்செட் இயக்குவதற்கு இலவச மின்சாரம் கிடைப்பதுபற்றி மிக்க மகிழ்ச்சி. இந்த மின்சாரத்திற்கு விவசாயிகள் பணம் கட்டாமல் போனதால் மின்துறையில் கூடுதல் முதலீடு செய்வதற்கோ அல்லது கூடுதல் மின்மாற்றிகள் அமைப்பதற்கோ போதுமான நிதிவசதி இல்லாமல் போகிறது. மின்னுபயோகம் அதிகரிக்கும் அளவிற்கு மின்னுற்பத்தி ஈடுகொடுக்க முடியாமல் போகிறது. இது நாளாவட்டத்தில் பெரிய மின்பற்றாக்குறையாக விஸ்வரூபம் எடுக்கிறது. இதன் காரணமாக அரசாங்கம் பல ஊர்களில் பதினைந்து அல்லது பதினான்கு மணி நேரம் மின்வெட்டை பொதுமக்கள்மேல் திணிக்கிறது. இந்தச் சிரமத்தை எல்லாம் உணர்ந்து பொது மக்கள் தண்ணீர் கட்டணம் மற்றும் மின் கட்டணம் ஆகியவைகளை முறையாகச் செலுத்தி தண்ணீரையோ, மின்சாரத்தையோ விரயமாக்கும் மனப்பான்மையை விட்டொழித்தார்கள் என்றால், இந்த மனமாற்றத்திற்கு வாழ்க்கை நல்ல ரெஸ்பான்ஸ் வழங்குவதைப் பார்க்கலாம். அப்படிச் செய்யாமல் அரசாங்கத்தைக் குறை சொல்வதும், கண்டன ஊர்வலங்கள் நடத்துவதும் அறிவுடைமையாகாது.

6. உண்பதையும், உறங்குவதையும் சமர்ப்பணம் செய்தல்:  பொதுவாக அன்னை பக்தர்கள், அவர்கள் செய்கின்ற எல்லாச் செயல்களையுமே சமர்ப்பணம் செய்துதான் செய்ய வேண்டும். ஆனால் அதெல்லாம் மிகவும் கடினம் என்பதால் அன்னை குறிப்பாக உண்பது மற்றும், உறங்குவது என்ற இரண்டையும் கண்டிப்பாக சமர்ப்பணம் செய்யச் சொல்லியிருக்கின்றார். இவை இரண்டையும் சமர்ப்பணம் செய்ய முயற்சி செய்தால் எவ்வளவு கடினம் என்பது அப்பொழுதுதான் தெரியும். முதல் ஓரிரு வாரங்களுக்கு இது கட்டுப்பாட்டிற்கே வராது. மறந்து போய் கொண்டேயிருக்கும். மூன்று வேளைகள் உண்பதையும், ஒரு வேளை உறங்குவதையும் சமர்ப்பணம் செய்வது கடினம் என்றால், அன்னை தன் ஒவ்வொரு செயல்பாட்டையும் சமர்ப்பணம் செய்துதான் செய்தார் என்ற விஷயம் எவ்வளவு மகத்தானது என்பது இப்போது நமக்குப் புரியும். அவர் செய்வதில் கடுகளவுதான் நம்மை செய்யச் சொல்கிறார். அதுவே நமக்குக் கடினமாக இருக்கிறது என்றால், பூரண யோகத்தில் இன்னும் எத்தனை படிகளை நாம் கடக்க வேண்டும் என்பதைச் சற்று நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாக இருக்கிறது.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
Stolen pleasure is sweet. திருட்டு ஆசைக்கு ருசி அதிகம் என்பது பழமொழி. மறைவாகச் செய்வதால் திறமை அதிகமாகத் தேவை என்பதால் ருசி அதிகமாக இருக்கும். மனித வாழ்வு, தெய்வீக வாழ்வு என மாறும்பொழுது சரி என்பது எல்லாக் கட்டங்களிலும் தப்பாகத் தெரியும். மனம் மாற்றத்திற்கு ஒத்துக் கொள்ளாது. பாரத யுத்தமும், கிருஷ்ண பரமாத்மாவின் யுக்திகளும் இதற்கு உதாரணம். திருவுருமாற்றத்தை நாடினால், நாம் கிருஷ்ண பரமாத்மா செய்தவற்றைச் செய்ய வேண்டியிருக்கும். கிருஷ்ணன் தெய்வம். தெய்வம் எதையும் செய்யலாம். நாம் தெய்வமாக நடக்க முடியாது என்பதால் ‘கிருஷ்ணன் சொன்னதைச் செய், செய்ததைச் செய்யாதே’ என்றனர் பெரியோர். ஸ்ரீ அரவிந்தத்தை ஏற்க வேண்டுமானால் கிருஷ்ணன் செய்தவற்றைச் செய்ய வேண்டும். எப்படிப் போவது? கிருஷ்ணன் எதிரிகளுக்குச் செய்த துரோகம், தவறான யுக்திகளை கிருஷ்ணன் என்ன மனநிலையில் செய்தானோ அம்மனநிலையில் செய்ய வேண்டும் என்பது பொருத்தமான பதில்.
 



book | by Dr. Radut