Skip to Content

09. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. "உலகம் உள்ளேயிருக்கும் பொழுது தனிமை ஏது?" என்றும் உடல் தனித்திருக்கலாம், ஜீவன் எப்பொழுதும் தனித்திருக்காது. தனிமை ஆன்மீக நெருக்கத்தை அதிகப்படுத்தும்.

    உலகம் உள்ளேயுள்ளபொழுது தனிமைக்கு வழியில்லை.
    • புறம் என்பது உலகமில்லை, புலன் காண்பது.
    • அகம்என்பது உலகம், அதனுள் பிரபஞ்சமும் உள்ளது.
    • புலன் காண்பது பிம்பம் போன்றது.
    • பிம்பமில்லாவிட்டால் நாமில்லை எனப் பொருளில்லை. நாம் உண்மை. பிம்பம் உண்மையில்லை.
    • ஒரு நாள் பகவான், "நான் ரிஷபசந்த் என்ன செய்கிறார் எனப் பார்க்கிறேன்'' என்றார். எவரையும் பகவான் தம் மனத்துள் காண்பார்.
    • சினிமாவில் உள்ளது போல் திரையில் உலகம் கண் முன்னே நகரும் என்கிறார்.
    • உள்ளே உலகம் மட்டுமன்று, பிரம்மமும் இருக்கிறது.
    • ரிஷி ஞான திருஷ்டியில் காண்பது காலத்தைக் கடந்த நிலை.
    • சத்தியஜீவியம் திரிகால திருஷ்டியைக் காண்பது மூன்றாம் நிலைக் காலம்.
    • மனிதன் அகந்தை உள்ளவன்.
    • அகந்தை அழிந்தால், புருஷன் வெளிப்படுவான்.
    • அது பிரபஞ்சத்திற்குரிய புருஷன்.
    • பிரபஞ்ச அனுபவத்தை ஒருவர் பெறச்செய்வது தனி மனித ஆத்மா உருவாவது.
    • பிரபஞ்ச அனுபவத்தை உள்ளே காணலாம்.
    • அதன் புருஷன் பிரம்மம்.
    • மனிதனுக்கு 3 அம்சங்களுண்டு.
    • மனிதன், உலகம், பிரம்மம் ஆகியவை அவை.
    • ஐக்கியம் என்பது ஜீவன்.
    • மனிதன் என்பது ஜீவனுடைய சக்தி.
    • உலகை உள்ளே காண்பது ஆன்மீக சித்தி.
    • கிருஷ்ணன் குழந்தை வாயினுள் உலகம் தாயாருக்குத் தெரிந்தது.
    • சாதாரண மனிதருக்கும் சில சமயங்களில் தெரிவதுண்டு.
    • ஒரு பெரிய கூட்டத்தில் நாம் விரும்புபவர் - எந்த நேரமும் மனதிலுள்ளவர் - இருந்தால், அது உணர்வில் தெரியும்.
    • நமக்கு வேண்டியவர்கட்கு நடப்பது கனவில் தெரியும்.
    • சத்தியஜீவியம் பெற்றவர்க்கு உலகம் முழுவதும் உள்ளே தெரியும்.
    • அன்னை தம் உடல் பிரபஞ்சம் முழுவதும் பரவியது எனக் கூறினார்.
    • ஆன்மீகம் என்பது தனிமை.
    • உலகம் முழுவதும் உள்ளேயுள்ள பொழுது தனிமை ஏது?
    • உள்ளே காண்பது சூட்சுமவாழ்வு.
    • புறத்தில் காண்பது ஜடவாழ்வு.
    • 1959 முதல் அன்னை பகவானை சூட்சுமஉலகில் கண்டார்.
    • ஒரு சாதகிக்கு அக்கி வந்து, எந்த மருந்திற்கும் குணமாகவில்லை.
      அன்னையிடம் கூறினார்.
      அன்னை அவருடைய குரு, காலமானவரை அழைத்தார்.
      அன்னை அவரை விசாரித்தார்.
      "பாசம் அவளுக்கு வலி தருகிறது'' என்றார் குரு.
    • நம் வாழ்வை சற்றுக் கூர்ந்து கவனித்தால், நம்மைச் சார்ந்தவர் செய்கையும் நாமும் கலந்திருப்பது தெரியும்.
    • பொதுவாக நாம் எழுதும் கடிதம் போய்ச் சேரு முன் அவரிடமிருந்து கடிதம் வருவதுண்டு (letters cross in the post).
      நமக்கும் அவருக்கும் எண்ணம் ஒன்று போல இருப்பதால் இது நடக்கிறது.
    • டிசம்பர் 4ஆம் தேதி 1950இல் சுதந்திரப் போராட்ட வீரர் கனவில் சேலத்தில் பகவான் தோன்றினார்.
      5ஆம் தேதி காலை ரேடியோ அவர் சமாதியானதைத் தெரிவித்தது.
      அவர் புதுவை வந்து தரிசனம் செய்தார்.
    • புதுவை கவர்னர் கனவில் பகவான் தோன்றி, "ஏன் என்னை வந்து பார்ப்பதில்லை?" என்றார்.
    • அதிலிருந்து கவர்னர் ஞாயிறன்று சமாதிக்கு வரும் வழக்கத்தை மேற்கொண்டார்.
  2. எந்தக் கட்டுப்பாடும் அதனளவில் நிறைவேறாவிட்டால் பலன் தாராது. யோகம் என்பது உயர்ந்த வாழ்வு. கட்டுப்பாடு அதன் ஆரம்பம்.

    செயல் அறிவுக்குக் கட்டுப்படுவது யோக வாழ்வின் முதற்படி.
    • உலகில் பல பெரிய இலட்சியங்கள் உள்ளன.
    • அவற்றுள் தலையாய இலட்சியம் ஆண்டவனைத் தேடுவது என்கிறார் பகவான்.
    • ஜடமான மண்பிண்டத்தை மனிதனாக்குவது கட்டுப்பாடு.
    • கட்டுப்பாடின்றி வாழ்வில்லை.
    • நாகரீகமடைவதன் முன் வேட்டையாடிப் பிழைத்தவன் உறங்கும் பொழுது தன் உடலைக் காட்டு விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள உஷாராக இல்லாவிட்டால் உயிருடன் இருக்க முடியாது.
      உஷார், உணர்வின் கட்டுப்பாடு.
    • ஆண்டவனையடைய உதவுவது தவம், யோகம்.
    • உடலைச் சுத்தம் செய்து, குந்தளினியை விடுவித்து, சகஸ்ரதளம் மூலமாக மோட்சம் பெறுவது ஹடயோகம்.
      செயலைத் தூய்மைப்படுத்தி, அதே முறையில் மோட்சம் பெறுவது கர்மயோகம்.
      பக்தியோகம், உணர்வின் தூய்மையாலும், செறிவாலும்,வமையாலும் மோட்சமடைகிறது.
      ஞானயோகம் அறிவைக் கருவியாக்கி மோட்சம் பெறுகிறது.
      கீதையின் யோகம் அதைக் கடந்தது. அதன் கருவி சரணாகதி.
    • ஜீவனை அடைபவன் ஜீவன் முக்தன். அது முதல் நிலை மோட்சம்.
      ஆத்மா, புருஷா, புருஷோத்தமா, ஈஸ்வரா, பரமாத்மா, பரபுருஷா, பரமேஸ்வரா என்பவை இறைவனுக்குரிய பல நிலைகள்.
      யோகத்தின் நிலைகள் பல.
      புருஷனின் நிலைகள் பல.
      மோட்சத்தின் நிலைகள் பல.
      மனித முயற்சியடையும் பலன் அவனையும், அவன் கருவியையும், முறையையும் பொருத்தது.
    • இவையனைத்தும் ஆத்மாவின் சுயநலம், ஆண்டவன் திருவுள்ளம் இல்லை என்கிறார் பகவான்.
    • இறைவன் இகஉலகில் இன்பமயமாய் உருவம் பெற்று, ஜீவன் ஜீவனோடு கலந்து, ஜீவியம் ஜீவியத்துடன் இணைந்து, ஆனந்தம் ஆனந்தத்தை அனந்தமாக்கும் லீலை - அற்புதம்
      - இறைவன் திருவுள்ளம் என்கிறார் பகவான்.
    • அதைச் செய்வது புருஷோத்தமனோ, அக்ஷரபுருஷனோ இல்லை, முழுமையாக பிரம்மம்.
    • முழுமையான பிரம்மம் உலகில் தன்னைத் தன்னுள் ஒளித்து - அஞ்ஞானத்தை உற்பத்தி செய்து - அதனினின்று வெளிவரும் ஆனந்தத்தை அனுபவிக்க ஏற்பட்டது சிருஷ்டி.

      அதைச் செய்வது பூரணயோகம்.
      அதன் கருவி முழுமையான சரணாகதி.

    • சத்தியஜீவியம் உலகில் இறங்கி வந்து அற்புதமாக மாறுவது முதற்கட்டமானால், அது பகவான் ஸ்ரீ அரவிந்த அவதாரமானால், அதற்கு முன்கட்டம் கிருஷ்ணாவதாரம்.
      அதற்கும் முன் உள்ள நிலை யோகிக்குரியது.
      ஞான திருஷ்டியுள்ள ரிஷி அதற்கும் முந்தையவர்.
      தவம் செய்து மௌனம் பூண்ட முனி முதற்கட்டத்திற்குரியவர்.
      இலட்சியமான நல்ல மனிதன் அடுத்த கட்டம்.
      இலட்சியம், திறமை, இனிமையுடைய மனிதன் இப்பெரு நெறிக்கு ஆரம்ப வாயில்.
    • அவனுக்குரியது கட்டுப்பாடு.
      எண்ணம் கட்டுப்பட்டு,
      உணர்ச்சி கட்டுப்பட்டு,
      செயலும் கட்டுப்பட்டால்
      வாழ்வு கட்டுப்படும்.
      கட்டுப்பட்ட வாழ்வு உயர்ந்து தெய்வீக வாழ்வாகும்.
    • கட்டுப்பாடு அதனளவில் நிறைவேறலாம். அது அதற்குரிய பலன் தரும்.
      முழுக் கட்டுப்பாடு, எல்லாக் கரணங்களும் கட்டுப்படுவது, யோகம் ஆரம்பிக்க வேண்டிய முதல்நிலை.
  3. சரித்திரத்திலும் குடும்பத்திலும் பெருஞ்சாதனைகட்குப்பின் பெருங்கொடுமைகளும், அவற்றைப் பொறுத்துக்கொண்ட தியாகங்களும் நிறைந்துள்ளன. கஷ்டங்களைப் பட்டவர் அவற்றைப் பொருட்படுத்தாமல் அந்தச் சாதனைகளைப் போற்றுவதே வாழ்வின் சூட்சும இரகஸ்யம். இதை மக்களின் ஒத்துழைப்பு, தியாகம் என்கிறோம். எந்தக் குடும்பம் அல்லது நாடு இந்த நோக்கத்தை விரும்பி ஏற்கிறதோ அவர்கள் எந்த உயர்வையும் எட்டலாம்.

    கொடுமையைப் புறக்கணித்துப் போற்றிய சாதனையே சாதனை.
    • சாதனையும் கொடுமையும் சேர்ந்திருப்பதைக் காணலாம்.
    • கொடுமையில்லாத சாதனையில்லை.
    • சாதனையில்லாத கொடுமையுண்டு.
    • கொடுமையில்லாத சாதனையும் உண்டு.
    • விரதமும் தவமும் போல, கொடுமையும் சாதனையும் சேர்ந்துள்ளன.
    • இருளான சூழலில் கொடுமையைத் தவிர்த்து சாதிக்க முடியாது.
    • ஒளிமயமான சூழலில் சாதனைக்குத் திறமை போதும், கொடுமை தேவையில்லை.
    • இருண்ட சூழலில் திறமை, கொடுமை மூலம் வருகிறது.
    • திறமை சக்தியின் திண்மை.
    • இயற்கையில் செயல்படும் வரை கொடுமை அவசியம்.
    • ஜீவனுக்கு மாறிவிட்டால் கொடுமை அவசியமில்லை.
    • அன்பனுக்கு இயற்கை தேவையில்லை, ஜீவனிலிருந்து செயல்படும் உரிமையுண்டு.
    • நேரம் வரும்பொழுது அன்பனின் முடிவு முக்கியமாகும்.
    • மேல்மனத்தில் முடிவு எளிது.
    • ஆழத்தில் முடிவு சிரமம்.
    • அடிமனத்தின் முடிவு கொடுமையை விலக்கும்.
    • ஒளியைத் தருவது பண்பு, கொடுமையை அவசியமாக்குவது பொய்.

    நான்கு பெண்கள்

    அயலா, லூசி என்ற இரு பெண்கள் பணமும் பண்பும் உள்ள குடும்பத்தில் பிறந்து, செல்லமாக வளர்க்கப்பட்டு, பண்பால் செப்பனிடப்பட்டவர். தாய் இறந்துவிடுகிறார். பிறகு தகப்பனாரும் இறந்துவிடுகிறார். லூசி பெரியவள். அவளை சித்தி அழைத்துக் கொள்கிறாள். அயலா சிறியவள். தாய்மாமன் அழைத்துப் போகிறார். சித்தி புருஷன் வசதியற்ற குமாஸ்தா. தாய்மாமன் கோடீஸ்வரன். சித்திக்குக் குழந்தைகளில்லை. கோடீஸ்வரனுக்கு ஒரு மகனும் இரு பெண்களும் உள்ளனர். தாய்மாமன் பெரும்பணக்காரன், புதுப் பணக்காரன். அவன் மகன் தெளிவற்ற நல்ல குணம் படைத்தவன். எந்தக் குறையுமில்லை. ஆனால் மனம் அயலா, லூசி அளவுக்கு வளரவில்லை. தாய்மாமன் மகள் இருவர். பெரியவள் தன்னைக் கெட்டிக்காரியென நினைப்பவள். பிறர் உயர்வை அவள் மனம் ஏற்காது. சிறியவளுக்கு அந்தக் குறையில்லை. ஆனால் அந்தநேரம் எது ஆதாயமோ அதை வெட்கமின்றி செய்துவிடுவாள். பெரியவள் அந்தஸ்திற்கு ஆசைப்பட்டு வருமானமில்லாத பிரபுவின் 40 வயதான மகன் M.P.யைக் கட்டிக் கொண்டு, சீதனமாக £120,000 பெறுகிறாள். சிறியவள் அதே பணம் தனக்கும் கிடைக்கும் என வருமானமற்ற (gentleman) நல்லவரை மணக்க சம்மதித்து, தகப்பனாரை அணுகி பணம் கேட்கச் சொல்கிறாள். தகப்பனார் மட்டமாகப் பேசுவதால், “பணம் வேண்டாம்” என அவர் விலகியபோது, "நாம் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால் பணம் வரும்'' என்று வரனை அழைக்கிறாள். அவர் மறுத்துவிடுகிறார். அயலாவை மணக்க இவர்கள் வீட்டிற்கு வந்த கேப்டனுக்கு £3000 வருமானமுண்டு. சிறியவள் கேப்டனிடம் அயலாவைப்பற்றிக் கோள் சொல்லி, தன்னை ஓடிப்போய் மணம் செய்ய அழைக்கிறாள். ஓடிப்போகிறாள். தகப்பனார் பின்னாலேயே வந்து அழைத்துப் போய் திருமணம் செய்து வைத்து, பணம் தர மறுக்கிறார். அயலா கற்பனை உலகில் கோட்டையில் ராஜகுமாரனிருப்பதாக நினைக்கிறாள். தாய்மாமன் மகனும், இந்த கேப்டனும், ஒரு விகாரமான பெருந்தன்மையான கர்னலும் அவளை விரும்புகிறார்கள். கர்னலை ஆடம்பரமாக அற்புதமாக மணக்கிறாள். லூசி ஓர் உயர்ந்த மனமுள்ள ஏழைச் சிற்பியை விரும்பி மணக்கிறாள். தாய் மாமன் சிறுஉதவியைச் செய்கிறார். கர்னலுக்கு £6000 வருமானம். அவர் உயர்ந்தவர், உன்னதமானவர், அயலா அவரை விரும்புகிறாள். ஆனால் அவள் கற்பனைக்குரிய ராஜகுமாரன் அவரில்லை. கர்னல் விகாரமானவர். ஆனால் மிகப்பெரிய இடத்துப் பிள்ளை. இதே சமயத்தில் அயலாவுக்கு அவர்கள் வீட்டில் நெருங்கிப் பழக்கமான பெண்ணை, பெரும்பிரபு திருமணம் செய்துகொள்கிறார். போப் ஆண்டவர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அயலாவின் நிலை மடுவு. கர்னல் அந்தஸ்து மலை. திருமணம் நடக்கிறது.

    மனம் ஒளியில் லயித்தால் உயர்வு கொடுமையின்றி வரும். 1900க்குமுன் உலகம் கொடுமை நிறைந்தது. 1956இல் நரகம் அழிந்து, 1973இல் சொர்க்கம் பிறந்துவிட்டது.

  4. அருள் நிர்ப்பந்தப்படுத்தாது. நிச்சயமாகச் சுட்டிக்காட்டும். நிர்ப்பந்தம் செய்யும் அருள் உள்ளிருந்து எழுவது. அதை ஆன்மாவின் அருள் என்கிறார்.

    உள்ளிருந்து எழுந்து நிர்ப்பந்தம் செய்யும் அருள் ஆன்மாவின் அருளாகும்.

    இலட்சக்கணக்கானவர் வாழும் இவ்வூரில் 150 பேர் பல முனைகளில் வெற்றி பெறுகின்றனர். 15,000 பேர் சிறு அளவில் முன்னேறுகின்றனர். மற்றவரில் சிலர் இவர்கள் முன்னேற்றத்தைக் கண்டு வியக்கின்றனர். மீதிப்பேர் எதையும் கண்டுகொள்வதில்லை.

    • சாதாரண மனிதன் சும்மாயிருந்தாலும், குடும்பம் அவனை முன்னுக்கு வரக் கட்டாயம் செய்யும்.
    • சமூகம் மாறி வளரும் நேரத்தில், சமூகம் அனைவரையும் முன்னுக்கு வரக் கட்டாயப்படுத்தும்.
    • அன்னையை அறிந்தபின் அவர் சூழல், நம்மையறியாமல் நம்மை முன்னுக்குவரக் கட்டுப்படுத்தும்.
      அன்பர்கள் அதுவரை தவறாது பெற்றுக் கொள்கின்றனர்.
      அப்படிப் பெறுவதுதான் வேலையே கிடைக்காதவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது.
    • அன்னையின் சூழல் கட்டாயப்படுத்தாமல், வாய்ப்பாக அளிப்பது பெரிது. கட்டாயப்படுத்தியது சாஸ்திரியும், இந்திராவும் பிரதமரானது. கட்டாயப்படுத்தாத வாய்ப்பு உலகத் தலைவராவது.
    • அன்பருடைய ஆன்மா விழிப்பாக இருந்தால், அதன் அருள் செயல்படுமானால், அது நிர்ப்பந்தம் செய்யும். அது விழிப்பான ஆத்மா, அன்னைச் சூழலில் செயல்படுவது.

      "கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரும்" என்ற சொல் மனிதனுடைய ஆத்மா விழிப்புற்று செயல்படுவதைக் குறிக்கும். அன்பன் அன்னைச் சூழலில் ஆன்ம விழிப்போடு செயல்படுவது அவனுடைய அதிகபட்சம் பெறும்நிலை.

    • 1910இல் பகவானுக்கு இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதுஎனத் தெரியும். 1908இல் அசரீரி அவருக்கு அதைக் கூறியது.
      1917இல் அன்னை, இந்தியா சூட்சும உலகில் சுதந்திரம் அடைந்ததைப் பார்த்தார்.
      இந்தியத் தலைமையில் ஆன்ம விழிப்புற்றவரில்லை என்பதால் சுதந்திரம் 30 ஆண்டு தாமதமாயிற்று.
    • பகவான் நெஞ்சம் சுதந்திரத்தை நாடியது.
      சுதந்திரத்திற்காக யோகத்தை நாடினார்.
      அவர் மனம் யோகத்தை நாடவில்லை.
      அவர் ஆன்மா விழிப்புற்று, அருள் பாலித்து, யோகத்தை மேற்கொள்ள கட்டளையிட்டது.
      அதனால் பகவான் பூரணயோகத்தைக் கண்டார்.
    • அன்பர் வருமானம் தேடி விவசாயத்தை நாடினார்.
      விவசாயம் அன்னைச் சூழலால் அபரிமிதமாகப் பலித்தது.
      அன்பர் ஆழ்மனத்தில் நாட்டுச் சேவையிருந்தது. அதற்கு வழியில்லை.
      அன்னைச் சூழலின் அதிகபட்சம் அதைச் சுட்டிக்காட்டியது.
      அது கிராமச் சேவையாகவும், நாட்டு விவசாயிகட்குச் செய்த சேவையாகவும் மாறியது.
      உலகெங்கும் அக்கருத்து பரவியது.
    • ஒருவர் பெற்ற ஆன்மவிழிப்பை உலகம் பெற்ற ஆன்ம விழிப்பாக்குவது அன்னைச் சூழல்.
    • பண்பை வலியுறுத்துவதால், மரியாதையைப் பாராட்டுவதால், செயல் சில்லரையாக இருக்க மறுத்தால், ஆன்மா விழிப்புற்று, அதன் அருள் செயல்படும்.
      அதன் செயல் அன்பரைக் கட்டுப்படுத்துவது.

      மேரி, தாயாருக்குத் திருமணமாகுமுன் தரித்தவள். தாயார் குழந்தை பிறந்தவுடன் அமெரிக்கா போக முடிவு செய்து குழந்தையை, யாருக்குத் தரித்ததோ அவர் தம்பியிடம் கொடுத்துவிட்டுப் போனார். மேரியின் தகப்பனார் அடித்துக் கொல்லப்பட்டார். மேரி 12 ஆண்டு வெளியூரில் வளர்ந்தாள். சித்தப்பா, பெண்ணை பண்புமிக்க பெருந்தன்மையாக, குடும்பப் பெண்ணாய் வளர்த்தார். இவள் பிறப்பின் இரகஸ்யம் எவருக்கும் தெரியாது. பிரான்க் என்ற இளைஞன் உயர்குடி பிறந்தவன், மேரியை விரும்புகிறான். அவன் குடும்பம் எதிர்க்கிறது. மேரிக்கோ, பிரான்க்குக்கோ மேரியின் பிறப்பின் இரகஸ்யம் தெரியாது. குடும்பம் பெண்ணுக்குப் பணமில்லை என எதிர்க்கிறது, இரகஸ்யம் தெரியாது.

    • மேரி தன் மனச்சாட்சிப்படி நடக்க பெருமுயற்சி செய்கிறாள்.
    • மனச்சாட்சி தூய்மையாக இருப்பதால் ஆன்ம விழிப்பு ஏற்படுகிறது.
    • ஆன்மா விழிப்பதால் நிலைமை மாறி, பெருஞ்செல்வம் அவளுக்கு வருகிறது. அது அவள் தாய்மாமன் பெற்ற செல்வம்.
    • அந்தப் பகுதிகளில் மேரி அதிகபட்ச பணக்காரியாகிறாள். பிரான்க் குடும்பம் திருமணத்தை ஏற்கிறது.
    • ஆன்மா விழித்து, அனைத்தையும் மாற்றுவதற்கு இது சிறந்த உதாரணம்.

தொடரும்.......

*****

 

ஜீவிய மணி
 
இலட்சியவாதி தன் சேவையை அறியமாட்டான்.

 

*****



book | by Dr. Radut