10. பிரார்த்தனை பலிக்க வேண்டும்
பிரார்த்தனை பலிக்க வேண்டும்
தம்பி - அதிகம் படிப்பது தவறோ?
அண்ணன்- தவறு நிச்சயம் வரும். அது உண்மையில் தவறில்லை. அதிகமாக எதைப் பெற்றாலும் இதைப் போன்ற தவறு எழுவதை நாம் கவனிப்பதில்லை.
தம்பி - அதிகமாக அழகிருந்தால்,
அண்ணன்- கர்வம் எழும்.
தம்பி - செல்வமிருந்தால்,
அண்ணன்- செல்வம் பல வகையான தவறுகளை எழுப்புவதை நாம் அறிவோம்.
தம்பி - நான் சொல்வது வேறு. அதிகம் படித்த குழந்தைகள் மற்றவரோடு பழகத் தெரிந்து கொள்வதில்லை. படிப்பால் குழந்தை தனித்து விடுகிறது. மற்ற குழந்தைகள் அனைவருடனும் கலந்து கொள்வதைப் போல் கலந்து (adjust) கொள்ள முடிவதில்லை. அதனால் பிரச்சினை எழுகிறது.
அண்ணன் - இது பிரச்சினைதான். ஆனால் படிப்புக்கு மட்டும் உள்ளதன்று. எந்த அம்சம் அதிகமானாலும், இந்தப் பிரச்சினை எழும். நாம் தண்ணீரை அதிக அளவு சுத்தம் செய்து பயன்படுத்தினால், வெளியில் போய் சாப்பிட முடியாதன்றோ!
தம்பி - எப்படித் தீர்ப்பது?
அண்ணன்- எந்தப் பிரச்சினையையும் அது வந்த வழியே போனால், தானே தீர்ந்துவிடும்.
தம்பி - புரியவில்லை.
அண்ணன்- எப்படி அதிகம் படிக்க வைத்தோம்?
தம்பி - குழந்தையை அதிக நேரம் படிக்க வைத்தோம்.
அண்ணன்- அது விளையாடும் நேரத்தில் அதைப் படிக்கச் சொன்னோம். படிப்பை விளையாட்டாகச் சொல்லிக் கொடுக்கும் முறையில் இந்தக் குறை வாராது.
தம்பி - விளையாடும் நேரத்தில் படிப்பதாகக் குழந்தை வருத்தப்படுவதால் பிரச்சினை வருகிறது என்று சொல்கிறீர்களா?
அண்ணன்- படிப்பையே விளையாட்டாகப் போதிக்கும் பள்ளியில் குழந்தைகள், விளையாட்டுப் போய்விட்டது என ஏங்குவதில்லை.
தம்பி - அதிகம் படித்த குழந்தைகள் தன்னோடொத்த மற்ற குழந்தைகளுடன் சமமாகப் பழக முடிவதில்லை. அதுவே பிரச்சினை.
அண்ணன் - விளையாட்டுப்போல் பயின்றால், அக்குழந்தைகள் தன்னோடொத்த (in mental age) மற்றவர்களுடன் சமமாகப் பழகும். பழக முடியவில்லை என்ற நிலை ஏற்படாது.
தம்பி - நம் இன்ஜினியர் பையனை வீட்டிலேயே 11 வயது வரை படிக்க வைத்தார்கள். அவனுக்கு M.A. பையனைவிட ஆங்கில அறிவும், B.A. பெற்றவனை விட மற்ற அறிவுமிருக்கிறது. அவனுக்கு 11 வயது குழந்தைகளுடன் சமமாக விளையாட முடிவதில்லை.
அண்ணன்- இது பிரச்சினைதான். மேலும் ஒரு பிரச்சினையுண்டு. அது வெளிநாட்டிலுள்ள நம் குழந்தைகட்குரியது. 11 வயது இந்தியக் குழந்தை 11 வயது அமெரிக்கக் குழந்தையுடன் விளையாட முடியாது. அது நம்மூர் 18 வயது பையனைப் போலிருக்கும். இந்தப் பிரச்சினையில்லை, எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுண்டு. பெற்றோர் அன்னை பக்தரானால் தீர்வுண்டு.
தம்பி - இன்ஜினியர் தரிசனத்திற்கு வருவார்.
அண்ணன் - அது போதாது. அன்னையை அறிந்தவராக இருக்க வேண்டும். தரிசனத்திற்கு வருபவர் அன்பர். நாம் சொல்வது இரண்டாம் கட்டம் வந்த அன்பருக்குத் தான் பலிக்கும். அன்னை என்பதை organisation, institution, force, consciousness, atmosphere, god, plane,, ஸ்தாபனம், சக்தி, ஜீவியம், சூழல், தெய்வம் என அறிந்திருக்க வேண்டும்.
தம்பி - பிரச்சினைக்கும், அவற்றிற்கும் என்ன தொடர்பு?
அண்ணன் - Force, personal force, limited force, force of consciousness, சக்தி, தனிமனித சக்தி, சிறு சக்தி, பொதுவான சக்தி, ஜீவிய சக்தி என்பவற்றை விவரமாகத் தெரிந்திருந்தால்தான் இப்பிரச்சினை தீர உதவும். அன்னை எனும் சக்தி, யாருக்கும் அவர் விரும்புவதைத் தரவல்லது, அவருக்குத் தேவைப்பட்டதைத் தரவல்லது, இவை குறைந்தபட்சத் திறமையைப் பூர்த்தி செய்யவல்லது என்பவற்றைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன விளக்கம் தேவை.
தம்பி - இவையெல்லாம் நம் அன்பர்கள் வாழ்வில் இன்று நடக்கிறதே.
அண்ணன்- நடக்கிறது என்பது உண்மை. அதை அன்பர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. நம்மை அறியாமல் பெறும்பொழுது நாம் பெறுவது குறைந்தபட்சம். விவரமாகத் தெரிந்தால் அதிகம் பெறலாம். அதிகபட்சம் பெற அன்னையை அதிகபட்சம் அறியவேண்டும்.
தம்பி - இவையெல்லாம் புரிய படிப்பு வேண்டும்.
அண்ணன்- படிப்பிருந்தால் நல்லது, இல்லாவிட்டாலும் பக்தியும் நம்பிக்கையுமிருந்தால் இவை புரியும். ஒரு வகையில் இவை உயர்ந்த தத்துவங்கள், வேறு வகையாகப் பார்த்தால், எந்த இந்தியனுக்கும் புரியக்கூடியவை, நுணுக்கமாக முயலவேண்டும்.
தம்பி - அன்னை இதைத்தான் நமக்கு ஞானம் உண்டு என்கிறாரோ?
அண்ணன்- இந்தியர்கட்கு அன்னையை அறிவது பெரிய பாக்கியம். நீ சொல்லும் குழந்தைக்குப் பழகப் பிள்ளைகள் இல்லை என்பது குறை. இந்தக் குறையைப் பல வகைகளில் போக்கலாம். அதற்குத் தகுந்த பள்ளியில் சேர்த்தால் அக்குறை விலகும். அது எளிது. அன்னைக்குக் குழந்தையைச் சமர்ப்பித்தால், குறை விலகும். குழந்தை மீதுள்ள கவலை எழுந்து மனத்தைத் தொடுமுன், அன்னையை அழைத்தால், பாரம் நம்மிடமிருந்து அன்னைக்குப் போகும். அதன்பின் சூழல் மாறும், குழந்தை மாறும், நிலைமை மாறும்.
தம்பி - இது சுலபமாக இருக்கிறதே. ஏன் நீங்கள் சொல்லும் தத்துவமெல்லாம்?
அண்ணன்- சமர்ப்பணம் இதுபோல் பலிக்க, கவலை மனத்தைத் தொடுமுன் அன்னையை அழைக்கவேண்டும். அது முடிந்தால் தத்துவம் தேவையில்லை. அது முதிர்ந்த சாதகராலேயே முடியாத விஷயம். அதைவிடத் தத்துவம் எளிது.
தம்பி - சொந்தக் குழந்தை என்பதால் அது முடியும்.
அண்ணன்- குழந்தை மீது அன்பிருந்தால் முடியும். ஒரு சில தாயாருக்கே அதுபோன்ற அன்பிருக்கும். பெரும்பாலும் அந்த அளவு குழந்தை மீது அன்பிருக்காது. அதுபோன்ற சமர்ப்பணத்தைச் செய்பவர் அக்குழந்தையைப் பொருத்தவரை சாதகி, யோகி. அதற்கடுத்தது ஞானம். யோக நிலை இல்லாவிட்டால், அன்னை யார் என்ற ஞானம் இருந்தால், அந்த ஞானம் பலிக்கும். Knowledge is Power.
தம்பி - அவ்வளவு பெரிய ஞானத்தைச் சாதாரணப் பெண்கள், அதுவும் படிக்காத பெண்கள் பெற முடியுமா?
அண்ணன் - தாய் என்பதால், அந்த விஷயத்தில் இந்த ஞானம் பலிக்கும். அதுவே ஆன்மீகத்தின் சிறப்பு, அன்னையின் உயர்தனிச் சிறப்பு.
தம்பி - படிப்பு அறிவு இல்லாவிட்டாலும், உணர்வு ஆழ்ந்து பூரணமாக உள்ள இடத்தில் ஆன்மீகம் பலன் தரும். அன்னை அதற்கடுத்த பலனையும் தருவார். பலன் மனநிலைக்கு, புறத்தோற்றத்திற்கு இல்லை.
அண்ணன் - Force சக்தி என்பது குறிப்பிட்டதானால், குறிப்பிட்ட வேலைக்கு மட்டும் பயன்படும். பேப்பர் எழுதப் பயன்படும், உணவாகப் பயன்படாது. சக்தி பொதுவானால் impersonal force எந்தக் காரியத்திற்கும் பயன்படும். உடலில் தெம்பிருந்தால் பல வகையான காரியங்களைச் செய்யலாம். பணம் general force பொதுவான சக்தி. எந்த வேலைக்கும் பயன்படும். பலன் பயன்படுத்துபவரைப் பொருத்தது. Personal force, impersonal force, general force, particular force, universal force, Consciousness-Force, தனிப்பட்டது, பொதுவானது, குறிப்பானது, பிரபஞ்சத்திற்குரியது, ஜீவிய-சக்தி என்பவை படிப்படியாக உயரும் நிலைகளில் அமைந்துள்ளன.
தாயார் சொல்வதை அவள் குழந்தை கேட்கும் எனில் அது personal force. அந்தக் குழந்தையிடம் மட்டும் செல்லும் சக்தியிது. பள்ளிக்கூடம் 9 மணிக்கு வர வேண்டுமென்ற சட்டம் impersonal force எல்லாக் குழந்தைகளையும் கட்டுப்படுத்தும். சென்னை - பாண்டி பஸ் டிக்கட் ரூ.75 எனில், அந்தப் பஸ்ஸில் பிரயாணம் செய்பவர் அனைவருக்கும் அது பொது வசதி. ஊனமுற்றவருக்குரிய சலுகை குறிப்பிட்ட சக்தி. நல்லது நல்லதைச் செய்யும் என்பது எந்த நாட்டிற்கும், எந்தக் காலத்திற்கும் பொது. ஜீவிய-சக்தி இவற்றை எல்லாம் கடந்தது. இவற்றை எல்லாம் தன்னுட் கொண்டது. ஜீவியம் சிருஷ்டிக்கு அடிப்படை. அதனினின்று வரும் சக்தி ஜீவிய-சக்தி. ஆகர்ஷணம், எலக்ட்ரிசிட்டி, காந்தம் போன்ற அடிப்படையான பிரபஞ்சச் சக்திகளைத் தன்னுட் கொண்டது ஜீவிய-சக்தி. அன்னை அவதரிக்குமிடம் அது. Mother Force அன்னை சக்தி என்றால் என்ன?
தம்பி - இத்தனைச் சக்திகளையும் தன்னுட்கொண்டதா அன்னை-சக்தி?
அண்ணன் - அத்துடன், இத்தனைச் சக்திகளாகவும் செயல்பட வல்லது.
தம்பி - இதை எப்படி அன்பர்கள் புரிந்துகொள்வார்கள்?
அண்ணன் - நீ கடையில் போய் அலமாரி வாங்கினால், எப்படி வீட்டிற்குக் கொண்டு வருவாய்?
தம்பி - வண்டி வைத்துக் கொண்டு வருவேன்.
அண்ணன் - பொருளை வீட்டிற்கு எடுத்து வருவது நம் வேலை. ஒருவர் வந்து அந்த அலமாரியை உன் வீட்டிற்குக் கொண்டு வர உதவினால்,
தம்பி - என்ன இல்லாததைச் சொல்கிறீர்களே.
அண்ணன் - அப்படி நடந்தால், நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்?
தம்பி - அதெல்லாம் புரியாது. சௌகரியம் என வைத்துக் கொள்வோம். யோசனை புலப்படாது.
அண்ணன் - கடையின் ஏற்பாடு என்றால்,
தம்பி - அலமாரி விற்கச் செய்வதாகக் கொள்வோம்.
அண்ணன் - மற்ற கடைகள் செய்யாதபொழுது ஏன் இவன் மட்டும் செய்யவேண்டும்?
தம்பி - அதிக வாடிக்கைக்காகச் செய்கிறார்கள் எனப் புரியும்.
அண்ணன் - அதைச் செய்ய கடைக்கு டெலிவரி சிஸ்டமும் தேவையல்லவா?
தம்பி - இப்போ புரியுது. நாம் போகுமிடமெல்லாம் நமக்கு அருள் உதவுகிறது எனில் அன்னை, சர்க்கார் ஸ்தாபனம் போல இருக்கிறார். நமக்குத் தேவையானவையெல்லாம் அருள் தருகிறது எனில், அத்தனை டெலிவரி சிஸ்டமும் அவரிடம் இருக்கிறது என்று அர்த்தமா?
அண்ணன் - இது கடவுள்களுக்கோ, சர்க்காருக்கோ, வேறு எதற்கோ இல்லாத சக்தியல்லவா?
தம்பி - அது எப்படி ஏற்பட்டது?
அண்ணன் - கம்ப்யூட்டர் ஸ்பெல்லிங் செக் பண்ணுகிறது எனில், அதனுள் உள்ள chipஇல் spelling இருக்கிறது என நாம் அறிகிறோம்.
தம்பி - அன்னைக்கு அந்த சக்தி எப்படி வந்தது?
அண்ணன் - சத்-சித்-ஆனந்தம் என்ற சச்சிதானந்தத்தில் சித் என்பது சித் ஆகவும், சக்தியாகவும் சித்-சக்தி எனப் பிரியுமிடத்தில் அன்னை அவதரிக்கிறார். உலகமே அந்த சக்தியால் உற்பத்தியாவதால், அன்னை சக்திக்கு அனைத்து சக்திகளின் திறனுண்டு.
தம்பி - சிவபெருமானுக்கும், விஷ்ணுவிற்கும் இல்லையா?
அண்ணன் - நம் அன்பர் பெறும் உதவிபோல சிவபக்தர்கட்குக் கிடைப்பதாகக் கேள்விப்படுகிறாயா?
தம்பி - தெரியாதே. அண்ணன்-ஒரு வீட்டில் திருடு போனால், நீ கூப்பிடாவிட்டாலும் போலீஸ் வரும். நீ போய் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. குற்றம் நடப்பது தெரிந்தால் போலீஸ் தானே வரும். மனைத் தகராறு, நிலம் தகராறு எனில் கோர்ட் நம்மைத் தேடி வந்து நியாயம் கொடுக்காது. நாமே போய்க் கேட்டாலொழிய கோர்ட் செயல்படாது.
தம்பி - அன்னை போலீஸ் போன்றவர், மற்ற தெய்வங்கள் கோர்ட் போன்றனவா?
அண்ணன் - அடிப்படையில் அன்னை நம்மைத் தேடி வருகிறார். சில விஷயங்களில் கூப்பிட்டால்தான் அன்னையால் செயல்பட முடியும். ஒரு வித்தியாசம். மந்திரம், பூஜை, ஸ்தோத்திரம், விரதம் எதுவுமில்லாமல் கூப்பிட்டால் வருவார். மற்ற தெய்வங்களைக் கூப்பிட அதற்குரிய முறை தேவை. அன்னைக்கு அவை தேவையில்லை.
தம்பி - அன்னை-சக்தி எப்படியெல்லாம் செயல்படும் எனத் தெரிந்தால், அதற்கு மேலும் சக்தியுண்டா?
அண்ணன் - தெரிவது எனில் சற்று விவரம் தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் ஏன் அன்னைக்கு அந்த சக்தி இருக்கிறது எனத் தெரிய வேண்டும்.
தம்பி - தெரிந்தால் மட்டும் போதுமா? அதை நம்ப வேண்டாமா?
அண்ணன் - இருப்பது தெரிய வேண்டும். ஏனிருக்கிறது என்று தெரிய வேண்டும். அதை நம்பவேண்டும். நம்பினால் அதற்கு சக்தியுண்டு.
தம்பி - என்ன பலனிருக்கும்?
அண்ணன் - நம்பிக்கைக்குரிய பலனிருக்கும். ஓரளவு நம்பிக்கை இருந்தால், குழந்தை பம்பாய் போக உதவி வரும். அதன் மூலம் பிரச்சினை தீரும். முழு நம்பிக்கை இருந்தால் உள்ளூர் நிலைமை மாறி, பம்பாய் போய் வரும் பலன், போகாமல் வரும்.
தம்பி - அன்னையிடமிருந்து பிரார்த்தனை பலிக்கும்பொழுது ஏன் பலிக்கிறது, எப்படிப் பலிக்கிறது, இது எப்படி அன்னை சக்தியால் முடிகிறது என யோசனை செய்து புரிய வேண்டுமானால், அதற்கு The Life Divine படித்திருக்க வேண்டும்.
அண்ணன் - நாம் படிக்காவிட்டாலும் படித்தவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
தம்பி - பக்தியும், நம்பிக்கையுமிருந்தால் படிக்காமலேயே புரியுமா?
அண்ணன் - புரியாது. புரிந்தால் வரக்கூடிய பலன் வரும்.
தொடரும்...
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் மிகப்பெரிய பலன் மிகச்சுருக்கமாக அமையும் வழியுண்டு. அதிகபட்ச அறிவைச் செயல்படுத்தி, கட்டுப்படுத்த முடியாத ஆசையை, அதற்கு சேவை செய்யச் சொல்வதே அவ்வழி. வக்ர புத்தியை ஞானத்தால் அடக்குவது சுருக்கு வழி. |
*****
- Login to post comments