12. யோக வாழ்க்கை விளக்கம் VI
யோக வாழ்க்கை விளக்கம் VI
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
II/26) சிந்தனைக்கு உரிமையில்லாத நேரம் மனம் ஓய்தல் ஒழிவில்லாமல் எதிர்பார்க்கிறது. வெளிவர முயலும் எண்ணம் உணர்வால் உந்தப்படும்பொழுது மனம் எதிர்பார்க்கும்.
- உலகம் தராத உண்மையை மனம் எதிர்பார்க்கும்.
- இல்லையென்பதை மனம் நாடும்.
- மனம் நாடுவதை உணர்வு ஆமோதித்தால் நாடுவதை மனம் தேடும்.
- மனம் ஏக்கமுற்றுத் தேடுவதை எதிர்பார்ப்பு என்கிறோம்.
- ஞானம் நால்வகை.
- உயர்ந்த ஞானம் இறைவனோடு ஐக்கியமாகப் பெறும் ஞானம்.
- இறைவனிடமிருந்து பிரிந்து மனிதன் மேல் மனத்தால் அறிவது கடைசி கட்ட ஞானம்.
- அடிமனம் பெறும் பிரபஞ்ச ஞானம் அதனினும் உயர்ந்தது.
- யோகி பார்த்தவுடன் சிந்தனையின்றி, திருஷ்டியின்றி நேரடியாகப் பெறுவது ஐக்கியத்திற்கு அடுத்த உயர்ந்த ஞானம் (intuition).
- எதிர்பார்ப்பது மேல்மனம்.
- அடிமனத்தில் எதிர்பார்ப்பது குறைவு.
- நேரடி ஞானம் எதிர்பார்க்க வேண்டியதை அறிவதால் எதிர்பார்ப்பு பெரும் அளவு கரைகிறது.
- ஐக்கியம் அனைத்தையும் பெறுவதால் எதிர்பார்ப்பு அங்கில்லை.
- ஜீவன் சத்புருஷன்.
- அவன் சக்தியால் செயல்படுகிறான்.
- ஜீவன் சக்தியால் செயல்படுவதை ஏற்று உருவகப்படுத்துவது ஜீவியம்.
- மனத்திற்கு இவை புறநிகழ்ச்சி.
- மனம் பெற்ற திறமைகள் மனநிலை, மனத்தின் உணர்ச்சி.
- புறநிகழ்ச்சியால் ஏற்படும் அலை வெள்ளத்தால் மனநிலை மாறுகிறது.
- மாறும் மனநிலை காலத்தால் இயங்கி, இடத்தில் செயல்படுகிறது.
- இந்த இயக்கமும் செயலும் மனத்திலுள்ள பிரம்மத்தின் வெளிப்பாடுகள்.
- அவை ஜீவனை எட்டுவது மனநிலை (பக்கம் 553 – The Life Divine).
- டார்சியை எலிசபெத் நிராகரித்துவிட்டாள். அவன் மேல்மனம் நாடுவது கிடைக்கவில்லை.
- நிராகரித்ததை டார்சி பொருட்படுத்தாது அவளுடன் ஆத்மாவில் ஐக்கியமாக முனைந்தான்.
- காலத்திலும், இடத்திலும் தன்னுள் உள்ள பிரம்மத்தை நாடினால் ஐக்கியம் பெறலாம்.
- அவன் மேல் மனத்தை விட்டகன்று, அடிமனத்தைக் கண்டு, நேரடி ஞானத்தை நாடாமல் - காலத்தையும் இடத்தையும் கடந்து - உள்ளே போனான். (அவன் லாங்பார்ன் போய் அவளை சந்திக்க முயலவில்லை - இடத்தைக் கடப்பது. அவளை எப்பொழுது சந்திக்கலாம் என்ற நினைவை விலக்கினான் - காலத்தைக் கடந்தான்).
- காலம் அவளை அவனிடத்திற்குக் கொண்டு வந்து, அவனை ஒரு நாள் முன்னதாக வரவழைத்து, நேருக்கு நேர் அவளை - இடத்தில் நிறுத்தியது.
- முடிவாக அவன் அவளுடன் ஐக்கியமானான்.
- ஞானம் உயர்ந்தால் அறிவு சக்தியாக செயல்படுத்துகிறது.
- எதிர்பார்ப்பு நெதர்பீல்டிலிருந்தது. அது மேல்மனம்.
- ஹன்ஸ்போர்டில் மணக்க விருப்பம் தெரிவித்தது அடிமனம்.
- பெம்பர்லியில் மேல்மனம், அடிமனம் செயலற்றவை என அறிந்து நேரடி ஞானத்தையும் கடந்து, ஐக்கியத்தை மனத்தால் நாடினான்.
- ஐக்கிய ஞானம் அவளை அவனுடன் ஐக்கியப்படுத்தி விட்டது.
*****
II/27) வெற்றியின் இரகஸ்யத்தை விரும்பி அளித்தால் இரகஸ்யம் வேண்டாம், வெற்றியைக் கொடு என்பார்கள். அவர்கட்கு நிரந்தரத் தோல்வி நிச்சயம்.
- தேடும் இரகஸ்யம் நாடி வந்தால் விலக்கி வெற்றியைக் கேட்பான்.
- வெற்றி பெற்றவன் அடுத்த வெற்றியைத் தேடுவதைவிட அடுத்தவர் பெறும் வெற்றியைத் தடுக்க அரும்பாடு படுவான்.
- மனித சுபாவம் வெற்றி பெறுவதைவிட பிறர் தோல்வியை நாடுகிறது.
- மனிதனைத் தோற்கடிக்க முனைந்த சிவபெருமானை மனிதனின் குதர்க்கம் தோற்கடிக்க தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்ணும் போக முனைந்தான்.
- வரம் கேட்கும் பக்தனுக்கு அவன் சிறுமையை உணர்த்த சிவபெருமான் உனக்குக் கிடைப்பது போல் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரு மடங்கு கிடைக்கும் என்றார்.
- வீடு, மாடு, செல்வம், பிரபலம் கேட்டவன் பெற்றான். பக்கத்து வீட்டுக்காரன் இரு மடங்கு பெற்றபொழுது வரமளித்த கடவுளைக் கடந்து மனித சுபாவமான பொறாமை பலிக்கும்படி அவன் கண் பார்வையை மனிதனால் பறிக்க முடிந்தது கதை.
- இந்த உலகில் உலகைக் கடந்த வெற்றி பெறுபவரில்லை.
- ஒருவர் பெற்றால் உலகம் அவரை உடனே பின்பற்றுகிறது.
- அந்த இரகஸ்யத்தைப் பெற்றவன் பொன் போல பாதுகாப்பான்.
- எவருக்கும் சொல்லமாட்டான்.
- கொடுத்தால் மனிதன் மறுப்பான் என்பது மனித சுபாவம்.
- பெற வேண்டியவர், பெற நெடுநாள் விழைந்து ஏக்கமுற்றால் பெறத் தகுதி பெறுகிறார்.
- தகுதி பெற்ற பின்னும் தர வேண்டியவரை நாடி தகுதியால் பணிந்து வேண்டினால் பெற்றவர் தர மறுப்பார் என்பது வழக்கு.
- வழக்கை மீறி ஒருவர் கொடுக்க விரும்பினால் பெற்றவர் அதனால் பயன் பெறமாட்டார் என்பது உலக அனுபவம்.
- வீடு தேடி வந்து நெடுநாள் விரும்பிக் கேட்டாலும் பெற்றபின் பெற்றதால் பயன்பெற நிபந்தனைகளுண்டு.
- நிபந்தனையின்றி வந்த உதவி பலன் தராமல் போனது நிதர்சனம்.
- பெருந்தன்மை, தாராள மனப்பான்மை காரணமாக பெரிய ஆத்மாக்கள் உலக மக்களை நாடி உத்தம இரகஸ்யத்தை உபதேசிக்க முயன்றால் எவரும் கேட்க முன்வருவதில்லை என்பது இலட்சிய புருஷர்களின் வரலாறு.
- நாடிப் போய்க் கிடைக்காததைத் தேடி வந்து விரும்பிக் கொடுத்தால் பெறுபவரில்லை.
- வற்புறுத்திக் கொடுத்தால், இரகஸ்யம் வேண்டாம், நீங்களே பலனை பெற்று எனக்குக் கொடுங்கள் என்பது அப்படி முயன்றவர் அனைவரின் அனுபவம்.
- கொடுப்பவர் கை உயர்ந்தும், பெறுபவர் கை தாழ்ந்துமிருப்பதை எடுத்துக் கூறுவதுண்டு.
- உலகம் இந்த நிமிஷம் அதிகபட்சம் பெறக்கூடியதைப் பெற்றுவிட்டது என்பது உண்மை.
- மேலும் பெற வேண்டும் எனக் கருதும் இலட்சிய புருஷர்கள் மனித சுபாவத்தின் அடித்தளத்தை அறியாதவர்.
- சேவையை யதார்த்தத்தை மீறிக் கருதினால் சேவை வேலையாக மாறும்.
- மாறிய வேலை பயன் தராது.
- பயன் பெற்றால், பெற்றவர் சேவைக்கு எதிராகக் குரலெழுப்புவார்.
- சேவையின் உள் நோக்கம் என்ன என்று வினவுவார்.
- "உன் சேவையை நான் பெறுவதால் உனக்கு ஏதாவது வந்துவிட்டதானால் என் செய்வது?'' என அங்கலாய்ப்பார்.
*****
II/28) ஒரு விஷயம் புரிய நாம் சிந்திக்கின்றோம். புரியா விட்டால் ஆழ்ந்து சிந்திக்கிறோம். மனிதனுக்குப் புரியாத பிரச்சனைகளுண்டு. தீர்வு கிடைப்பதில்லை என்பதுடன் சிந்தனைக்கு அவை எட்டுவதில்லை. அதைத் தீர்க்க நாம் சிந்திப்பதை நிறுத்தி மௌனத்தைக் கடைப்பிடிக்கிறோம்.
- தன் ஆழ்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க மனித குலம் சிந்தனையைக் கையாள்கிறது. சிந்தனை விலகிய பின் பிரச்சனை தீரும்.
- மனம் உடையவன் மனிதன். மனு என்றனர்.
- மனத்தின் திறன் சிந்தனை.
- "சித்”தின் செயல் சிந்தனை.
- இரு விஷயங்களை மனம் தன்னில் இணைத்துக் கருதுவது சிந்தனை.
- தொடர்பு ஏற்பட்டவுடன் துலங்குவது சிந்தனை.
- தொடர்ந்த சிந்தனை ஆழ்ந்த சிந்தனை.
- பார்வைக்குப் புரியாதது சிந்தனைக்குப் புரியும்.
- சிந்தனைக்குப் புரியாதது ஆழ்ந்த சிந்தனைக்குப் புரியும்.
- ஆழ்மனம் ஆழ்ந்த சிந்தனையை மேற்கொள்கிறது.
- ஆழ்மனம் சிந்திக்க மேல்மனம் மௌனம் பூண வேண்டும்.
- மேல்மனம் சிந்தனையைக் கைவிடாது.
- சிந்தனையால் பலனில்லை என்பது வரை சிந்தனை தொடரும்.
- தோல்வி முழுமையாகும் வரை மௌனம் வாராது.
- மேல்மனத்தின் மௌனம் ஆழ்மனத்தின் சிந்தனை.
- நாம் மனம் என்பது மேல்மனம்.
- மனத்தின் சிந்தனை தவறும்பொழுது மௌனம் தழுவும்.
- சிந்திப்பவன் சீரிய மனிதன்.
- சிந்திக்க முடியாதவன் அறிவில்லாதவன்.
- சிந்திக்க முடியாமல் சிந்தனையைக் கைவிட்டால், மௌனம் தீர்வு தரும்.
- சிந்தனையுள்ளவன், சிந்தனை பயனற்றது என அறிந்து சிந்திக்க மறுப்பது மௌனம்.
- ஆழ்மன சிந்தனை மௌனம். அது மேல்மன மௌனமாவது சிந்தனையின் உயர் பலன்.
- கைவிட்ட சிந்தனை, உடனே பலன் தரும்.
- பரந்த பெரிய விஷயங்களில் சிந்தனையைக் கைவிட்டால் மறதி எழும்.
- மறதி மௌன சித்தி.
- நெடுநாள் மறந்த விஷயம் ஆழ்மனத்தின் சிந்தனைக்கு அணி செய்யும்.
- ஆழ்மனம் சிந்தனையை முடித்து தெளிவு பெற்ற நேரம் மேல்மனம் நினைவு கூறும்.
- எழும் நினைவு ஆழ்மனம் பெற்ற தீர்வை மேல்மனம் அறிவது.
- அது அந்தராத்மாவில் குரல் எனப்படும்.
- அசரிரீ, வாணி எனவும் கூறுவர்.
- ஆழ்மனமும் மௌனமானால், ஆத்மா விழித்து வழிகாட்டும்.
- மனிதனுடைய பிரச்சனைகளை ஆழ்மனம் தீர்க்கவல்லது.
- இறைவனுடைய வாய்ப்புகளை ஆழ்மனத்திற்கு அறிவிப்பது அசரீரி.
- அசரீரி வாய்ப்பைப் பேசுவது ஆண்டவன் குரல் கேட்கும்.
- அசரீரி தீர்வைக் கூறினால் அது ஆழ்மனம் எழுப்பிய குரலாகும்.
- மேல்மனம் மௌனம் பூண்டு, அதைத் தொடர்ந்து ஆழ்மனம் மௌனம் பூண்டு எழுந்த அசரீரி "புதுவைக்கு போ'' என பகவானுக்கு சந்திரநாகூரிலிருக்கும் பொழுது பணித்தது. அது யோகம் செய்யும் பணி.
- "நானிருக்கிறேன். நீ பேசக்கூடாது'' என கோர்ட்டில் எழுந்த குரல் ஆழ்மனம் பொய்க் கேஸை வெல்லும் குரல்.
- சிந்தனை சீரியது. சிந்தனையைக் கடந்த மௌனம் மகத்தானது.
மௌனத்தைக் கடந்த மௌனம் பகவான் உறையுமிடம்.
*****
II/29) வாழ்வு ஆசையாலானது. சிறு ஆசை மனிதனை உத்வேகப்படுத்துகிறது. நாம் சும்மா இருந்தால், ஆழ்மனம் தன் சிறு ஆசைகளில் தீவிரமாக உழல்கிறது.
- மனத்தின் ஆழம் ஆசையை ஆழ்ந்து அனுபவிக்கும்.
- ஆசை அன்பின் முந்தைய நிலை.
- உணர்ச்சி இதயத்திற்குரியது.
- கிளர்ச்சி உடலுக்குரியது.
- உணர்ச்சியும், கிளர்ச்சியும் சந்திக்குமிடம் வயிறு.
- வயிறெரிகிறது என்பது ஆசை அழியும் பொழுது எழுவது.
- வயிற்றில் பால் வார்த்தால் போலிருக்கிறது என்பது ஆசை பூர்த்தியாகி உணர்வாவது.
- ஆசையை அழிப்பது துறவு.
- ஆசையை அடக்கி வாழ்வது இல்லறம்.
- ஆசை தவறு, ஆசைப்படக்கூடாது என்பவை அனுபவம் வரும் முன் எழும் எண்ணங்கள்.
- ஆசையை அடக்கினால், அடங்கும். அதிக நாள் கழித்து அதிவேகமாக வெளிவரும்.
- துறவி தன் ஆசையை மோட்சம் பெறும் ஆசையாக மாற்றுகிறான்.
- தவசிரேஷ்டர் ஆசையின் மூலத்தை அறிந்தவர்.
- திருமூலர் மூலம் அறிந்தவர்.
- திருமந்திரம் அவர் எழுதியது.
- அவர் ஆசையின் ஆழ்ந்த உருவத்தை அறிந்தவர்.
- "ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்றார்.
- ஆசை எந்த ரூபத்திலும் நல்லது செய்யாது என்று அறிந்தவர் திருமூலர்.
- அகந்தை எந்த ரூபத்திலும் நல்லது செய்யாது என நக்கீரன் வாழ்வு கூறுகிறது.
- நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என அகந்தை அவரைக் கூற வைத்தது.
- கயிலாயத்திற்கு உடலின் தசையெல்லாம் உருகி என்பாகும் வரை உருண்டு சென்று எழுந்த அகங்காரத்தை அழிக்க வேண்டும் என அவர் அறிந்தார்.
- பாசம் எழுந்து, வேகமிழந்து, ஆசையாகி, உயர்ந்து மனத்தையடைந்து அன்பாக மாறுவது பரிணாமம்.
- பாசம் உடலுக்குரியது.
- ஆசை உயிருக்குரியது.
- அன்பு மனத்திற்கும், ஆத்மாவுக்கும் உரியது.
- உடலிலிருந்து உயர்ந்து ஆத்மாவை அடைவது பரிணாமம்.
- ஸ்ரீ அரவிந்தம் ஆசையை அழிக்காதே, அனுபவிக்க முனையாதே, எல்லைக்குள் அனுபவித்து அறிவால் அதை வென்று அன்பாகத் திருவுருமாற்ற அழைக்கிறது.
- துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம் என்பது அதுவே.
- சிறு ஆசைகள் எழுந்தபடியிருக்கும்.
- அறிவு அவற்றைப் பொருட்படுத்தாது.
- பண்புள்ள அறிவு சிறு ஆசைகட்கு வெட்கப்படும்.
- வெட்கம் சிறியதினின்று மனத்தை விலக்கும் சிறப்புடையது.
- லிடியாவும், விக்காமும் திருமணமான பின் ஓடிப்போனதற்கு வெட்கப்படாமல் வீட்டிலும் ஊரிலும் பழகியதை வீட்டில் அனைவரும் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
- மாறாக, அவர்களுடன் சேர்ந்து வீடு வீடாகப் போய் திருமணத்தைக் கொண்டாடினார் மிஸஸ். பென்னட்.
- லிடியாவுக்கும், விக்காமிற்கும் வெட்கமில்லை.
- இந்த ஜன்மத்தில் வெட்கத்தைப் பெற முடியாத பிறவி மிஸஸ். பென்னட்.
*****
II/30) பரநலம், சுயநலம் என்பது கொடுப்பது, பெறுவதாகும். அது சௌகர்யமாகவோ, தொந்தரவாகவோ அமையும். தன்னலமற்றவனின் நட்பு மற்றவர் வாழ்வை மலரச் செய்யும். சுயநலமானவனின் தொடர்பு, வாழ்வில் சிரமங்களை உற்பத்தி செய்யும்.
- சுயநலம் சுருக்கும், பரநலம் மலரும்.
- மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டவன்.
- வேறுபடாமல் மனிதனாக முடியாது.
- அறிவால் வேறுபடுவது, திறமையால் உயர்வது.
- பண்பால் வேறுபடுவது, வேறுபாடு மாறுபாடாவது, தரத்தால் வேறுபட்டுயர்வது.
- நாலு கால்களால் நடக்கும் விலங்கின் பார்வை தரை மீதிருக்கும்.
- இரு கால்களால் நடக்கும்பொழுது பார்வை வெகுதூரம் போவதுடன், வானை நோக்கிப் பார்க்க இயலும்.
- ஆன்மீக ஞானப்படி, மனிதன் என்பவன் ஜீவனுள்ள ஜீவாத்மா, உயிருள்ள உடல் மட்டுமல்ல.
- ஜீவாத்மா, பல ஆயிரம் ஜீவாத்மாக்களில் ஒன்று.
- ஜீவாத்மாக்கள் பரமாத்மாவினின்று சிருஷ்டிக்கப்பட்டவை.
அவற்றின் அமைப்பை உபநிஷதம்,- எல்லா ஜீவாத்மாவிலும் பரமாத்மா உள்ளது.
- எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவில் உள்ளன.
- ஒவ்வொரு ஜீவாத்மாவும் மற்ற அனைத்து ஜீவாத்மாக்களுக்குள் உள்ளன.
- மேலும் பரமாத்மா ஒவ்வொரு ஜீவாத்மாவிலும் தனி மனிதனாக உறைகிறது.
- மனம் பகுதியான பார்வையுடையது.
- தான் அனைவரிலும் உள்ளதை மனம் அறியும்.
- அனைவரும் தன்னில் உள்ளதை மனம் அறிய இயலாது.
- தான் அனைவருள்ளும் இருப்பதால் அனைவரும் தனக்குச் சேவை செய்ய வேண்டும் என மனிதன் ஆழ்ந்து நம்புகிறான் - அது சுயநலம்.
- அத்துடன் அவன் பரமாத்மாவைக் காணும்பொழுது தன்னையே உலகம் மையமானது எனக் கொள்வதால்
- இறைவன் என ஒருவரிருந்தால் என் தேவைகளை அவர் பூர்த்தி செய்ய வேண்டும் என நினைப்பதுடன்,
- அதைச் செய்யாத இறைவன் எனக்குத் தேவையில்லை எனவும் நம்புகிறான்.
- இதனால் சுயநலம் வளர்கிறது.
- அது திறமையால் வளர்கிறது.
- வாழ்வு திறமையால் மட்டும் நடப்பதல்ல, திறமையைக் கடந்துள்ள பல வாழ்வுக்குத் தேவையென அறியும் நேரம் வரும்பொழுது பரநலமில்லாமல் மனிதன் வாழ முடியாது. இதுவரை தான் வாழ்ந்த வாழ்வை ஆயிரக்கணக்கானவர், ஆயிரக்கணக்கான வகைகளில் நடத்தியுள்ளனர் எனத் தெரியும்.
- அந்த ஞானம் பரநலத்திற்கு அடிப்படை.
- சுயநலம் பெறும், பரநலம் கொடுக்கும்.
- கொடுக்காமல் வாழ முடியாது என அறிந்தவனுக்கு நமக்குக் கொடுக்கும் உரிமை மட்டும் உண்டு எனப் புரியும். நாம் பெறுவது அனைத்தும் பிறர் கொடுப்பதால் எனவும் புரியும். கொடுப்பதால் வளர்வது வாழ்வு. இறைக்காத கிணறு பாசி பிடிக்கும், பயன்படாது.
தொடரும்....
*****
ஜீவிய மணி விரயம் இயற்கையின் சின்னம். |
*****
- Login to post comments