Skip to Content

07. அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

உடலாலும், உணர்வாலும் மனிதன் உழைத்தபொழுதும் மனம் பின்னணியிலிருந்தது. பின்னணியிலிருந்த மனம் முன்னணிக்கு வந்து நேரடியாகச் செயல்பட்டது. வீராணம் ஏரியை இங்கிலாந்து இன்ஜினீயர்கள் வந்து பார்த்தனர். 1000 ஆண்டுகட்கு முன் இன்ஜினீயரிங் அறிவு வளராத காலத்தில் எப்படி இந்த ஏரியைக் கட்டினர் என ஆச்சரியப்பட்டனர். கோபுரம், பிரமிட் போன்றவை கட்டியது உடல் உழைப்பால் முடியாது. அது அறிவு வளர்ச்சியால் நடந்த செயல்கள். பணம் என்று முதலில் ஏற்பட்டபொழுது அது ஓர் எண்ணம், அது மனத்தின் செயல். பணம் மனத்தால் ஏற்படுத்தப்பட்டது. மனம் எண்ணத்தாலானது. எண்ணக் கோவைகள் சிக்கலின்றி சீராக அமைந்தால், எண்ணம் நிர்வாகத் திறன் (organising power)) பெறுகிறது. அதுவே சட்டமாகிறது. மனத்திற்கே எண்ணமுண்டு. எண்ணம் செயலைக் கட்டுப்படுத்தும். செயல்களின் போக்கையறிந்து அவற்றை எண்ணத்தின் திறனால் கட்டுப்படுத்துவது கட்டுப்பாடு. அதன் சிகரம் சட்டம், ஒழுங்கு (rule). மனிதனுடைய உழைப்பு, பொருள்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய உதவும் கருவி மனம். உழைப்பின் சிறப்பு, பொருள்களின் அளவு, தன்மை, விநியோகத்திற்குரிய நிபந்தனைகள் மனத்தால் அறிந்து, அதை நிதானப்படுத்தி, நிர்ணயம் செய்வது விலை எனப்படும். விலை என்பது மனத்தால் குறிக்கப்படுகிறது. இவ்வெண்ணக் கோவைகளின் மையம் பணம். இதற்கு அமைப்பு, ஸ்தாபனம், நிர்வாக அமைப்பு எனப் பெயரிடலாம். இது மனத்தின் செயல். மனம் செயல்பட்டால், அங்கு இவ்வமைப்பிருக்கும். இது சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாறுதல், சமூகம் வளர (evolutionary) உதவும் மாறுதல். அதனால் ஏற்பட்டவை,

  • தன் உபரி சக்தி, உபரி உற்பத்தி அழிவதற்குப் பதிலாக அதை வேறொரு நாளைக்குப் பயன்படுத்த முடியும்.
  • ஒருவருடைய உபரியை மற்றொருவர் பயன்படுத்தலாம்.
  • சமூகம் தனிமனித வாழ்வைச் சிறப்பாக்க முடியும்.
  • ஒவ்வொருவரும் அடுத்தவர் வாழ்வு பயனுற உதவ முடியும் என்பவை பணம் ஏற்பட்டதால் ஏற்பட்ட பெரிய புரட்சிகரமான மாறுதல்கள்.
  • Unity, Mutuality, Harmony ஒற்றுமை, பரோபகாரம், சுமுகம் என்பவை சத்தியஜீவிய வாழ்வுக்கு உயிர். அவற்றை நிலைநாட்டப் பயன்படுவது பணம் என நாம் அறிகிறோம்.

பணம் என்பது மனிதத் திறமையின் சின்னம். நேற்றைய உழைப்பைப் பணம் மூலம் நாளைக்குப் பயன்படுத்த முடியும். இளம் வயது சேமிப்பை வயோதிகத்திற்குப் பயன்படுத்தலாம் என்பது தினமும் வேட்டையாடி உழைத்தவனுக்குப் புரியாத ஒன்று. புலியானாலும், பல் போனபின், உடலில் தெம்பு குறைந்தபின், பட்டினி கிடந்து சாகும். மனிதன் அப்படியிருந்தவன். சேமிப்பால் எதிர்காலத்தில் வாழலாம் என்பது காலத்தை வெல்வதாகும். கங்கையில் பிரவாகமாக வெள்ளம் கடலையடைகிறது. காவிரி வரண்டுள்ளது. கங்கை நீர் காவிரிக்குப் பயன்படாது. பணம் ஓரிடத்தில் சம்பாதிக்கப்பட்டாலும், வேறு இடத்தில் உதவும். வெளிநாட்டிலும் உதவும். இது இடத்தை வெல்வதாகும். தனிமனிதன் தனிமனிதனாகவே வாழ்ந்தால் பணம் இல்லை. சமூகமாக வாழும்பொழுதும் நோட்டிற்கு மதிப்பு வருவது மனிதனுக்கு சர்க்கார் மீது நம்பிக்கையிருப்பதால்தான். சர்க்கார் மீது நம்பிக்கை போன நாடுகளில் பணக்கத்தைகள் வீசப்பட்டன. காலத்தையும், இடத்தையும் வெல்லும் பணம் நம்பிக்கையால் உற்பத்தியாகிறது. இதன் மதிப்பு நிர்வாகத் திறமையைப் (organisation) பொருத்தது.

  • கடந்த கால உழைப்பை எதிர்காலத்திற்கு உபயோகப்படுத்துவதும்,
  • ஓரிடத்து உற்பத்தியை அடுத்த ஊருக்கு, அடுத்த நாட்டிற்கு எடுத்துப் போக உதவுவதும்,
  • சமூகத்தை நம்பும் மனிதனுக்கு சமூகம் உதவும் கருவியாக இருப்பதும்,
  • உழைப்பு, திறமை, தரம், மதிப்பு, இவற்றைச் சேர்த்து (organise) நிர்ணயிப்பதும் பணம் என்பதால்,
  • Energy, organisation, trust உழைப்பு, நிர்வாகத் திறமை, நம்பிக்கை ஆகியவற்றால் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உழைப்பு என்பது சக்தி; நிர்வாகம் என்பது எண்ணக் கோவை; நம்பிக்கை என்பது மனம் ஏற்பது ஆகியவை முழுவதுமாக மனத்தின் அம்சங்கள். மனம்,

  • சக்தியை அளவுகடந்து எழுப்பும்.
  • Organisation நிர்வாக முறையை மனம் உற்பத்தி செய்ய அளவில்லை.
  • முடிவில்லாத நம்பிக்கையை மனத்தால் எழுப்ப முடியும்.

இவை மூன்று மட்டுமே பணத்தின் அம்சங்கள். இவற்றை மனம் முடிவில்லாமல் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், மனத்தால் அளவு கடந்து பணத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது தெளிவு. மேலும் பணத்திற்குச் சில அம்சங்களுண்டு.

  1. பணம், பணப்புழக்கம் விரிவடைய உதவும்.
  2. பணத்தின் வேகம் பணத்தின் மதிப்பை நிர்ணயிக்கும்.
  3. எவ்வளவு தூரம் பணம் ஏற்கப்படும் என்பது ஓர் அம்சம்.
  4. எத்தனை நாடுகளில் நம் பணம் ஏற்கப்படும் என்பது அடுத்தது.
  5. எத்தனை வகையாகப் பணம் பயன்படும், எந்தக் கருவியைப் பணம் வாங்க முடியும், எதை வாங்க முடியாது என்பது முக்கிய அம்சம்.

வேகமாகப் பணம் புரளும்பொழுது பணம் அதிகமாகச் சம்பாதிப்பதை வியாபாரி அறிவான். வாடகைக்கு வீடு வேண்டுமானால், பணம் மட்டும் போதாது. கேட்ட வாடகையைத் தருகிறோம் என்றால், எல்லோருக்கும் வாடகைக்கு வீடு தர மாட்டார்கள். கம்பனி நடத்த குடியிருக்கும் வீட்டைத் தர மாட்டார்கள். அதுவே பெரிய கம்பனி எனில் தருவார்கள். வாடகைப் பணம் சாதிக்காததை கம்பனியின் செல்வநிலை சாதிக்கும். இன்று IAS உத்தியோகம் விலை கூறப்படவில்லை. சென்ற நூற்றாண்டில் இங்கிலாந்தில் ராணுவ ஆபீசர் வேலைகள், கப்பல் கேப்டன் வேலைகள் விலைக்கு விற்கப்பட்டன. மெடிகல் டிரீட்மெண்ட்டுக்கு அதிகப் பணம் தேவை. சுப்ரீம் கோர்ட்டுக்குப் போக ஏராளமான பணம் தேவை. எலக்ஷனில் ஜெயிக்க லட்சக்கணக்கான பணம் தேவை.

  • பெரும் பணம் தேவைப்படும் செயல்கள் இவை என்றாலும், பணம் இவற்றைச் சாதிக்கிறது என்பது உண்மை என்பதால், பணத்தின் மதிப்பு வளருகிறது.
  • இன்றும் பணத்தால் சாதிக்க முடியாதவையுண்டு. அவை பணத்திற்கு எட்டுமானால், பணத்தின் மதிப்பு உயரும்.

இந்திய ரூபாய் 20 நாடுகளால் ஏற்கப்படுகிறது என்பது 40 நாடுகளானால், நாம் செலவு செய்யும் ரூபாயின் மதிப்பு உயருகிறது. 1 டாலர் விலை 3¾ ரூபாயாக 1950லிருந்து இன்று 45 ரூபாயாகிவிட்டது. மீண்டும் 3¾ ரூபாயானால் நாம் அமெரிக்கப் பொருள்களை மலிவாக வாங்கலாம். ரூபாயின் மதிப்பு உயரும். ரூபாயின் பயன் அதிகப்பட்டால், மதிப்பு அதிகப்படும்.

மனிதன் உடலுழைப்பிலிருந்து உயர்ந்து அறிவால் உழைக்க ஆரம்பித்தால், அவனது உற்பத்தித் திறன் வளருகிறது. பாங்க் செக்கும் தபாலில் (physical transmission) அனுப்ப வேண்டி இருக்கிறது. இது ஆயிரத்தில் ஒரு விஷயம். இன்று அது கம்ப்யூட்டர் வழியாகப் போகிறது. வருஷத்தில் 10 கோடி வியாபாரம் உள்ள கம்பனியில் தினமும் ரூ.3 லட்சம் சராசரியாக செலவாகும். பணவரவு 2½ லட்சமானால், தட்டுப்பாடு 4 லட்சமானால் சௌகரியமாக இருக்கும். ஒரு லட்ச ரூபாய் செக் வசூலாக 1 வாரம் ஆகிறது. இந்த மாதம் 30 லட்ச ரூபாய் செக் வந்துள்ளது. கம்பனி 30 லட்சம் வாடிக்கைக்காரர்கட்குத் தர வேண்டும். வர வேண்டிய பணம் 1 வாரத்தில் பாங்க் மூலம் வசூலாகும். கம்ப்யூட்டர் மூலமாக வசூலானால் 1 நாளில் வசூலாகும். அதாவது 30 லட்ச ரூபாய் பணம் 7 நாட்கள் அதிகமாகப் பயன்படும். இந்த மாதம் 30 லட்சம் வசூலாவதற்குப் பதிலாக 23 நாளில் 30 லட்சம் வந்து பணத் தட்டுப்பாடு குறையும். இது ஒரு சிறு உதாரணம். இது போன்ற சிறு செயல்கள் பணத்தைப் பொருத்தவரை 15, 20 உள்ளன. ஒவ்வொரு முறையும் கம்பனியின் பணப் புழக்கத்தை 5 or 10% அதிகப்படுத்தும். அதனால் கம்பனி தன் பணப் புழக்கத்தை (cash flow) 100% அதிகப்படுத்த முடியும். மாதம் 30 லட்சம் செலவாகும் கம்பனிக்குப் பணம் தாராளமாகப் புரளும்படி மாதம் 60 லட்சம் பணம் வரும். அனுபவப்படுபவர்கட்கு இது தெரியும் என்றாலும், இவை மனதில் படுவதில்லை.

இவை புற நிகழ்ச்சிகள். ஒவ்வொரு புற நிகழ்ச்சிக்கும் உரிய அகவுணர்வுண்டு. ஒருவருக்கு பாக்கித் தர வேண்டுமானால், அவர் கேட்கட்டும் கொடுக்கலாம் என்பதும், கேட்பதற்கு முன் கொடுத்துவிட வேண்டும் என்பதும் எதிரான மனநிலைகள். அகவுணர்வு எல்லாப் புற நிகழ்ச்சிகட்கும் உண்டு. அவை சக்தி வாய்ந்தவை. நம்பிக்கையை நேரடியாகவும், சக்தியை மறைமுகமாகவும் வளர்ப்பவை. பணம் சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களையும் ஒருவர் அறிந்து ஒன்றுவிடாமல் பின்பற்றினால் அவர் பணவரவு 30 அல்லது 40 மடங்கு பெருகும் என்பது உண்மை, அனுபவம். இவற்றை செய்வது மனம், மனத்தின் சிருஷ்டித்திறனை இங்குக் காணலாம்.

  • எண்ணத்தைப் பொருத்து, ஆர்வத்தைப் பொருத்து, சக்தி அதிகரிக்கும். தனக்காகச் சம்பாதிப்பதைவிட குடும்பத்திற்காகச் சம்பாதிக்க அதிக ஆர்வம் எழும்.
  • மனம் செயல்படும் வகை (organisation), யாருடன் எப்படிப் பழகுகிறோம் (co-ordination), எவற்றை எப்படிச் செய்கிறோம் என்பதாகும். இது அளவுகடந்து விரிவடையக்கூடியது. அளவுகடந்து co-ordination விரிவடையுமானால், பணம் அளவுகடந்து பெருகும் என்ற தத்துவத்தை நடைமுறையில் காணும் இடம் இது.
    • பணம் நம்பிக்கையால் ஏற்பட்டது. மனிதனை நம்புவதாலும், சமூகத்தை நம்புவதாலும் பணம் உற்பத்தியாயிற்று. பணம் என்பது நம்பிக்கை. நம்பிக்கையை அதிகமான பேருக்கு அளித்தால் பணம் அதிகமாகும். எத்தனைப் பேரை நம்பலாம் என்பதற்கு முடிவில்லை. நம்பிக்கையின் அளவை - ஆழத்தை - அதிகப்படுத்தலாம், அதற்கும் முடிவில்லை.

மனம் இந்த மூன்று விஷயங்களை - சக்தி, நிர்வாகம், நம்பிக்கை ஆகியவற்றை - வளர்க்க இசையும்வரை, மனத்தால் பணத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த மூன்று அம்சங்கள் வளர அளவில்லை. பணத்தை உற்பத்தி செய்ய அளவில்லை.

உலகில் நாம் பெரும் பணம் பெருகும் இடங்களில் காண்பது இரண்டு. (1) திறமை, (2) டெக்னாலஜி. திறமையின்றி டெக்னாலஜி பயன்படாது. திறமை தன்னளவில் பயன்படும். அறிவு, ஜடத்தில் வெளிப்படுவது டெக்னாலஜி. கத்தரிக்கோல் என்பது இரும்பு. இரண்டு கூரான இரும்புத் துண்டுகள் சரியாக இணைக்கப்பட்டால் வெட்டும் என்ற அறிவை கத்தரிக்கோல் இரும்பில் வெளிப்படுத்துகிறது. மரத்திலிருந்து ஒரு கிளை வேண்டுமானால் ஒடிக்க வேண்டும், பல முறை இழுக்க வேண்டும், சிம்ப வேண்டும், இச்செயலை நன்றாகச் செய்ய கத்தியால் வெட்டலாம். கத்தி என்பது வெட்டும் டெக்னாலஜி. கூரான இரும்பு நாம் கிளையை ஒடிப்பதை அழகாகச் செய்யும் என்பது டெக்னாலஜி. மனம் உடலைவிட உயர்ந்தது. உடல் சக்தியை வெளிப்படுத்துவதைவிட மனம் அதிக சக்தியை வெளிப்படுத்தும். உடல் வேலை செய்யும். என்ன வேலை செய்ய வேண்டும் என மனம் கூறும். அதனால் உடலின் பல வேலைகளைச் செய்யும் சக்தியைத் தர முடியும். உடல் தன் வேலையைச் செய்யும். மனம் பலரை வேலை செய்யச் சொல்லும். மனம் பெரியது. உடல் மனத்தை ஏற்றால், மனம் (descent) இறங்கி உடலில் வந்து உறைந்தால், உடல் தான் வழக்கமாக வெளியிடும் சக்தியைப் போல் பல மடங்கு சக்தியை வெளிப்படுத்தும். வேலை செய்யும் பொழுது எப்பொழுது 5 மணி அடிக்கும் என உடல் காத்திருக்கும். எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கேற்ப ஊதியம் (piece rate) உண்டு என்றால் 5 மணிக்குக் களைக்கும் உடல் 5ணீ வரை வேலை செய்யும். செய்யும் வேலை எவரும் அறியாத அளவுக்கு நமக்குத் தெரிந்தால் - அறிவு உடலில் வந்து வேலை செய்தால் - 5½ இல்லை, 6½ வரைக்கும் நேரம் போவது தெரியாது.

நாம் ஒரு வேலையை ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் இத்தனை நாள் செய்கிறோம். அது கடமையால் வந்தத் திறமை. அறிவு உடலில் வந்து வேலை செய்வது என்றால் என்ஜினீயருக்குத் தெரியாதது helperக்குத் தெரியும். வேலையின் நுணுக்கத்தை அறிவுபூர்வமாகத் தெரிவது அறிவு உடலில் செயல்படுவதாகும். இவர்கட்கு 3, 4 மடங்கு தெம்பும், உற்சாகமும் இருக்கும். பொதுவாக கீழிருந்து எளிதில் மேலே போய்விடுவார்கள்.

  • மனம் உடலை விட அதிகத் தெம்புள்ளது.
  • மனம் உடலில் வந்து விழிப்புற்றால் தெம்பு ஏராளமாக எழும்.

மேல்நிலை கீழே வந்து வேலை செய்யும்பொழுது பலன் அதிகம். ஒரு நாட்டின் சிறப்பு நாட்டில் அடிமட்டத்திலுள்ளவர் திறமையைக் காட்டும். பணம் அதுபோல் உற்பத்தியானது. அதனால் பணத்திற்கு வளரும் தன்மையுண்டு, வளர்ச்சிக்கு முடிவில்லை.

தொடரும்...

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
முன்னேற்றத்திற்குரிய கட்டங்கள்:
-  ஒரு குறிப்பிட்ட காரியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
-  நம் சொந்த உணர்வுகள் தடை என்பதை அறிய வேண்டும்.
-  அவற்றை விட முடிவு தேவை.
-  அன்னையை அழைக்க மனம் விழைய வேண்டும்.
-  சர்வாரம்பப் பரித்தியாகியாக வேண்டும்.
-  எவ்வளவு நாள் இம்முடிவு நீடிக்கின்றதோ அதுவே முன்னேற்றத்தின் அளவு.
 
கட்டங்கள் சரியானால் சட்டங்கள் செயல்படும்.

*****



book | by Dr. Radut