Skip to Content

10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

3. அன்னையின் வழியில் அன்றாட வாழ்க்கை

பெருந்தன்மையைப் பற்றியும், அதற்கு எதிரான "சின்ன புத்தி'யைப் பற்றியும் நாம் அறிவோம். சின்ன புத்தியில் கெட்ட புத்தியும் உண்டு; நல்ல புத்தியும் உண்டு. கோள் சொல்லுதல் கெட்ட புத்தியாகும். ஒருவருடன் பழகும்போது அவருடைய குறைகளை மட்டும் கவனிப்பது கெட்ட புத்தி இல்லை என்றாலும், மட்ட புத்தியாகும். சிறியவை, மட்டமானவை, தவறானவை என்பனவற்றை முழுவதும் தவிர்த்து, பெரியவை, உயர்ந்தவை, சரியானவை என்பனவற்றை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயல்வதை, நாம் "பெருந்தன்மை' என்கிறோம். அன்னையின் வழிக்குப் பெருந்தன்மை அஸ்திவாரம்; சிறிய புத்தி விதிவிலக்கு.

"நான் அன்னை வழியை விரும்புகின்றேன். அதைக் கடைப்பிடிக்க விழைகின்றேன். முழுமையாக அதை என் மனம் ஏற்றுக்கொள்கின்றது. நான் எதை எல்லாம் தவறாமல் செய்ய வேண்டும்? அவ்வழிக்குரிய இன்றியமையாத பாதைகள் எவை? தவிர்க்க முடியாதவை எவை? எவற்றை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்? யோகம் செய்யும் சாதகராக என்னைக் கருதாமல், வாழ்க்கை விளக்கம் பெற அன்னையை ஏற்றுக்கொண்ட அன்பராகக் கருதி, ஐயம் திரிபற எனக்கு உணர்த்த வேண்டும்' என ஒருவர் கேட்டால், அவருக்குத் தேவையான பதிலைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் கீழே தருகிறேன்.

சுருக்கம்: உடலால் உழைப்பும், மனத்தால் நேர்மையும், அறிவால் தெளிவும், மனச்சாட்சியால் சிறப்பும், பழக்கத்தால் பக்குவமும், உணர்வால் நெகிழ்ந்த பக்தியும் உடையது அன்னை வழி.

விளக்கம்: செய்ய வேண்டியவற்றை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். அவை, (1) உடலால் செய்யப்பட வேண்டியவை, (2) உணர்வால் செய்யப்படுபவை, (3) அறிவால் செய்யக்கூடியவை.

உடலுக்கு முக்கியமானது செயல். அது சுறுசுறுப்பானதாக இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் காலம் தாழ்த்தாமல் விரைவாகச் (அவசரமின்றி) செய்தல் உடலால் செய்யப்பட வேண்டியதாகும். அதுவே திறமை நிறைந்ததானால், சிறப்புள்ளதாகும். அத்திறமையும், சுறுசுறுப்பும் கடமைகளை ஆற்றும்போது அறிவுக்குகந்த இலட்சியங்களைக் கடைப்பிடித்தால், உடலால் செய்யப்பட வேண்டிய அனைத்தும் செய்யப்பட்டதாகக் கருதலாம்.

உணர்வின் பங்கை முழுமையாகச் சொல்வதாக இருந்தால் ஒன்றைச் சொல்லலாம். மற்றவர்களுடன் பழகும்போது அவர்கள் மனம் நிறையும்படிப் பழக முடிந்தால், உணர்வால் தன் பங்கை நிறைவேற்றிவிட்டதாகக் கருதலாம். எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்ளும் முன்பு தன் நோக்கில் அதைச் செய்யாமல், அதோடு தொடர்புடையவர்களின் நோக்கில் அதைச் செய்ய முற்படுதல் நல்லது. பொதுவாக ஒருவர் ஒரு சிறந்த காரியத்தை நல்நோக்கத்தோடும், ஆர்வத்தோடும் செய்ய முற்படும்பொழுது அது பலருக்கு இடையூறாக இருக்கும். அத்தகைய இடையூறுகளை நினைவுகூர்ந்து, அதற்கு ஏற்ப தன் ஆர்வத்தின் பாதையை அமைத்துக்கொள்வது சிறந்ததோர் உணர்வாகும்.

எனக்குத் தெரிந்த ஓர் என்ஜினீயர்; அவருடைய மகனும் என்ஜினீயர் பட்டத்தைப் பெற்றான். அவன் நீண்ட காலமாகப் பழகி வந்த ஒரு குடும்பத்தில் பிறந்த மூத்த பெண்ணை விரும்பினான். அவளின் தந்தை காலமாகிவிட்டார். அது வசதி அதிகம் இல்லாத நடுத்தரக் குடும்பம். அவளுக்குத் தம்பிகள் என்றும், தங்கைகள் என்றும் நிறையப் பேர் இருந்தார்கள். எனவே, அவள் வேலைக்குப் போனால்தான் குடும்பச் சக்கரம் சுழலும் என்ற நிலை. அவள் ஒரு பட்டதாரி. வலைவீசித் தேடியதில் ஆசிரியை வேலை கிடைத்தது. அவள் வேலைக்குப் போய் வந்துகொண்டு இருந்தபொழுது அவள் மனம் அவனை நாடிப் போய்க்கொண்டு இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து உருகிக்கொண்டு இருந்தாலும், அவர்கள் அதைப் பற்றி வாய் திறந்து பேசியதே இல்லை.

ஆண்டுகள் பல உருண்டோடின. அவன் ஒரு நாள் துணிந்து அவளிடம் பேசி, "உன் முடிவைக் கூறு'' என்று கேட்டான். அவள் அவசரப்படாமல் நிதானமாகச் சிந்தித்துவிட்டுக் கேட்டாள்: "தனக்காக வாழ்கிற வாழ்க்கையை விட மற்றவர்களுக்காக வாழ்கிற வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

"அது உயர்ந்த வாழ்க்கை'' என்றான் அவன்.

"நான் அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன். எங்கள் குடும்பம் என்னையே முழுவதுமாக நம்பி இருக்கிறது. என் தம்பி, தங்கைகளுக்கு என்னுடைய உதவி இன்னும் பல ஆண்டுகளுக்குத் தேவையாக இருக்கிறது. இந்த நிலையில் நான் என் விருப்பத்தை விட்டுக் கொடுத்தால்தான் அவர்கள் வாழ முடியும். அவர்கள் வாழ்வதற்காக நான் வாழாமல்போவதைத்தான் நீங்களும் விரும்புவீர்கள்'' என்று தன் முடிவைத் தெரிவித்தாள் அவள்.

அவள் தியாகம் உயர்ந்த மனநிலையைக் காட்டுகிறது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், "இதைவிடத் தெளிவாகவும், சிறப்பாகவும் செய்ய முடியுமா?' என்று சிந்தித்து, சிறப்பான ஒன்று தோன்றுமேயானால், அதைப் பின்பற்றுவதே அறிவின் கடமை.

ஒரு போலீஸ்காரர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, வயிற்றுப் பிழைப்புக்காக வாட்ச்மேன் வேலை பார்த்துவந்தார். அவருடைய மகன் எஸ்.எஸ்.எல்.ஸி.யில் தேர்வு பெற்றான். புத்திசாலிப் பையன். இன்னும் நிறையப் படிக்க வேண்டியவன். ஆனால் அதற்கான வசதியில்லை. அவனை வேலைக்கு அனுப்ப முயன்றார்கள். அந்தப் பையனின் சகோதரியின் கணவர் ஒரு கடை வியாபாரி. கடையைச் சிறிதாகத் தொடங்கினார். இப்பொழுது வசதி பெருகி விட்டது. அவரும் தம் மைத்துனனுக்கு வேலை தேடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் தம் மைத்துனன் படித்த பள்ளிக்குச் சென்று அவனுக்காக ஒரு சிறப்புச் சான்றிதழ் கேட்டார். அதற்கு ஆசிரியர், "உங்கள் மைத்துனன் நல்ல புத்திசாலி. அவனை பாலிடெக்னிக்கில் சேர்த்தால், நிச்சயம் உதவித் தொகை கிடைக்கும். அதுவரை தேவைப்படும் உதவியை நீங்கள் செய்தால், எதிர்காலத்தில் அவன் ஒரு பெரிய வேலைக்குப் போகலாம். அல்லது ஒரு தொழிலையே கூடத் தொடங்கலாம்'' என்றார்.

அவர் ஆசிரியரின் கருத்தை ஏற்று, தம் மைத்துனனை மேலும் படிக்க வைத்தார். அவனும் வெற்றிகரமாகத் தன் படிப்பை முடித்துவிட்டு, சொந்தத்தில் ஒரு தொழிலைத் தொடங்கினான். அவன் அதற்குப் பிறகு ஓராண்டு சென்று அந்த ஆசிரியரை சந்தித்து, "நீங்கள் என் மாமனின் மனத்தை மாற்றி என் வாழ்க்கையைத் திருப்பிவிட்டதால், இன்று நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்'' என்று கூறி, அவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

நாம் செல்லும் பாதையைவிடச் சிறந்த பாதை ஒன்று தெரியுமானால், அதை ஏற்றுக்கொள்ளுதல்தான் அறிவின் கடமை.

"எவற்றைச் செய்ய வேண்டும்?' என்ற விளக்கத்தைவிட, "எவற்றைச் செய்யக்கூடாது?' என்ற விளக்கம் மிகப்பயனுடையது. சோம்பேறித்தனத்தை வளர்க்கும் செயல்களையும், ஆடம்பரமான காரியங்களையும், பிறர் மனம் புண்படும்படியான செயல்களையும், "அறிவில்லாத செயல்' என்ற அழுகல் கணக்கில் வரும் செயல்களையும் அறவே புறக்கணித்தல் அவசியம்.

என் அனுபவத்தில் பார்த்த பல விஷயங்களைக் கூறி, அவற்றைச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

35,000 ரூபாய் ஆண்டு வருமானம் வர வேண்டிய ஓர் எஸ்டேட்டை, 65,000 ரூபாய் வரை செலவு செய்த பிறகும் ஒரு தன்வந்தரால் இலாப நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை. அந்த நிலையில் அவர் அதை விற்க முற்படுகிறார் என்று தெரிந்தால், எவ்வளவு பெரிய தனவந்தராக இருப்பினும் அதை வாங்கக்கூடாது. அதில் எங்கேயோ கோளாறு இருக்கின்றது. அந்தக் கோளாறு தெரியாமல் வாங்கிவிட்டு, பிறகு திணறக்கூடாது. இது அறிவுக்குப் புறம்பான செயல். மேலும் இது பெருமைக்கு ஆசைப்பட்டுச் சிறுமையை விலை கொடுத்து வாங்குவதாகும்.

ஒரு பிஎச்.டி. பட்டதாரிக்கு அந்தக் காலத்தில் 700 ரூபாய் மாத வருமானம். அவர் வாழ்க்கையில் அகலக் கால் வைத்து, ஆடம்பரமாகச் செலவு செய்து, 30,000 ரூபாய் கடனாளியாகிவிட்டார். அந்த நிலையில் அவர் திருந்துவதாக நினைத்துக்கொண்டு, "இனிமேல் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்வதில்லை' என்று தீர்மானித்தார். அப்பொழுதும் அவர் திருந்தவில்லை. வருமானத்திற்கு மேல் செலவைப் பெருக்கிக்கொள்வதும், கண்களை மூடிக்கொண்டு கடன் வாங்கி, பிறகு விழி பிதுங்கி நிற்பதும் அறிவற்ற செயலின் சிகரங்களாகும்.

"பத்தாயிரம் ரூபாய் சொத்து இல்லாத ஒருவர் பத்து லட்சம் கடன் வாங்கி இருக்கின்றார்' என்ற வதந்தி உன்னை வந்து சேர்ந்தால், அதை அப்படியே நம்பி ஊரெல்லாம் பரப்புவது அறிவுக்குப் பொருத்தம் இல்லாத, அர்த்தமற்ற செயலாகும்.

"மற்றவர்களுடைய உழைப்பின் பலன் தனக்கு வரும்' என்று கணக்குப் போட்டு, அதன் போக்கில் வேலை செய்தால், அவர்களுடைய உழைப்பின் பலன் அவர்களை நாடித்தான் போகும். உன் அறிவீனத்தின் பலன் மட்டுமே உன்னைத் தேடி வரும்.

உன்னுடைய கடமைகளை மற்றவர்கள் நிறைவேற்றும் வகையில் நீ வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், கடமைகள் நிறைவேறா; கடன்களே நிறையச் சேரும்.

"வாழ்க்கையில் எந்த ஒரு செயலும் முழுமையானது' என்ற அறிவு இல்லாமல், பணி செய்யும் இடங்களில் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிட்டு, சுயநலம் காரணமாகத் தன் வீட்டுக் காரியங்களை மட்டும் பொறுப்போடு செய்து, அதற்குரிய பலனை எதிர்பார்த்தால், வேலை செய்யும் இடங்களில் செய்த தவறுகளுக்கு இங்கே தண்டனைதான் கிடைக்கும்; பலன் கிடைக்காது.

மேலதிகாரிகளுக்கு ஆத்திரமூட்டும் காரியங்களை ஏராளமாகச் செய்து, இயக்குநருக்கு எதிரியான ஒருவரைத் தலைமை ஏற்க வைத்து விழாக் கொண்டாடினால், அதன் பின்விளைவாக ஒருவருக்கு வேலை போகின்றது. 5 ஆண்டுகளாக வேலை தேடியும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவருக்கு அதற்கான காரணத்தை உணர முடியவில்லை. "எனக்கு ஏன் இந்த நிலை?' என்று பொருமுகின்றார். அவர் செய்த தவற்றுக்குத்தான் அந்த நிலை. கையிலே பணம் இல்லை. ஆனால் மனத்தில், "சொந்தத்தில் எப்படியாவது ஒரு வீடு கட்டிவிட வேண்டும்' என்று ஆசை துடிக்கின்றது. கடன் வாங்கி மனை வாங்குகின்றார். பிறகு வாங்கிய கடனுக்குத் தம் சம்பளத்தை வாங்கி, வட்டியாகக் கட்டுகின்றார். வாழ்க்கையை ஓட்ட அவருக்கு விழி பிதுங்கிப் போகின்றது. பிறகு அவர் எந்தப் பிறவியில் வீட்டைக் கட்டி முடிக்கப்போகின்றார்? இது போன்ற அர்த்தமற்ற ஆசைகளை அடிப்படையாகக் கொண்ட காரியங்களைச் செய்தல் கூடாது.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் நல்லெண்ணம் கொண்டு செயல்படக்கூடிய ஒரு நல்ல ஆத்மா இருக்கும். அந்த ஆத்மாவிடமே தம் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ளும் குணம் பலரிடம் உண்டு. அவர்கள் ஒன்றை உணர வேண்டும். அந்தக் குணத்தால் அந்த ஆத்மாவிடம் இருந்து மட்டுமே கிடைத்துக்கொண்டு இருக்கும் ஒரேயொரு சௌகரியத்தையும் இழக்க நேரும்.

"தனக்குக் கீழேயுள்ளவர்கள், தன் பொறுப்பை நிறைவேற்றுவார்கள்' என எதிர்பார்த்தாலும், "அது நடக்காது; நாளைக்கே தன் பதவி அவர்களுக்குப் போய்விடும்' என உணர முடியாத நிலை, அவல நிலையாகும்.

"மாமனாரோ, மற்றவர்களோ சம்பாதித்த சொத்தை, தான் அனுபவிக்கலாம்' என்னும் வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், "முதலில் ஓரளவு சௌகரியமாக இருக்குமே தவிர, பின்னால் எல்லா விஷயங்களும் பிரச்சனையாக மாறிவிடும்' என்பதை பலர் உணர்வதில்லை. உணர்ந்தால் உபத்திரவம் இல்லை.

அன்னையைத் தெய்வமாக உணர்ந்து, ஏற்றுக்கொள்ளுதல் ஆத்மாவுக்குச் சிறப்பு. அன்னையின் முறைகளை உணர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் நிச்சயம் தோல்வி இருக்காது. நம் முயற்சியின் அளவுக்கு ஏற்ப வெற்றியின் அளவுகளும் இருக்கும். அளவுகள் கூடலாம், குறையலாம்; ஆனால் இந்த உலகத்திலிருந்து கிடைக்கும் மற்ற எல்லாவற்றையும் விட அவை மகோன்னதங்களாக இருக்கும்.

அன்னைக்குக் கடுமையான நோன்புகள் தேவையில்லை. ஆனால் பக்குவமான, கண்ணியமான கட்டுப்பாடு தேவை. கட்டுப்படாமல் ஓடும் நீர் காட்டாறு ஆகின்றது. கட்டுப்படுகின்ற நீர் மின்சாரம் ஆகின்றது. காட்டாறாக ஓடுகின்ற நம்மை மின்சாரமாக ஒளி பெற வழிகாட்டுகின்றார் அன்னை. இதை உய்த்து உணர்ந்து, நிதானமாகப் பக்குவத்தை மேற்கொண்டால், நம் அன்றாட வாழ்வு அன்னை வழியில் ஆத்மீகச் சிறப்பு நிறைந்த யோக வாழ்வாக மாறும்.

தொடரும்....

*******



book | by Dr. Radut