Skip to Content

அன்பர் கடிதம்

அன்னையின் பக்தை எழுதுவது. எனக்குக் கடிதம் எழுதவே தெரியாது. சரியாக எழுதுவேனோ இல்லையோ என்று இருந்தாலும் உங்கள் மகிமையைத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆர்வத்துடன் எழுதுகிறேன்.

எங்கள் குடும்பத்தினர் 20 வருடங்களாகவே அன்னையை வணங்குகிறோம். நாங்கள் தினம் தினமும் அன்னை எங்களுடன் இருப்பதை உணர்கிறோம். இருந்தாலும் தற்பொழுது நடந்த நிகழ்ச்சியை எழுதுகின்றேன். என் கணவர் Bhilai steel plant இல் Rail mill இல் வேலை செய்கிறார். October மாதம் 6ஆம் தேதி காலை first shift இல் வேலை செய்ய 5.30 மணிக்குப் புறப்பட்டுப் போனார். அவரை வழி அனுப்பிவிட்டு வந்தவுடன் எனக்கு என்றைக்கும் இல்லாமல் அன்றைக்குத் தலை ஒரு பாரமாக இருந்தது. மனசிலே வேறு ஏதோ இனம் புரியாத பயமாக இருந்தது. மறுபடியும் படுத்துவிட்டேன். அன்னை பெயரை சொல்லிக் கொண்டே இருந்தேன். மணி 7.30 மணி ஆகியும் எழுந்திருக்கவோ, வேலை செய்யவோ முடியவில்லை. நான் அன்னையிடம் ஏன் இன்றைக்கு இப்படி உள்ளது ஏதோ B.P. அப்படின்னு சொல்றாங்களே அந்த மாதிரி ஏதேனும் ஆயிடுத்தா, தலையில் ஏதோ பாரம் அழுத்தற மாதிரி உள்ளது. வீட்டிலே வேறு யாரும் இல்லை. என் மைத்துனர் குடும்பத்துடன் பாண்டிச்சேரி ஆசிரமத்திற்குப் போய் உள்ளார்கள். கூட என் மகளும் போய் உள்ளாள். வீட்டிலே வயதான படுத்த படுக்கையாகிவிட்ட மாமியார், அவரைக் கவனித்துக் கொண்டு இருக்கும் மாமனார். இவர்களுக்கு நான் சமையல் பண்ணனுமே என்னைக் காப்பாற்றம்மா என்று பிரார்த்தனை செய்தேன். அதற்கப்புறம் கஷ்டப்பட்டு எழுந்திருந்து இட்லி பண்ணி மாமியார் அறையில் வைத்துவிட்டு என்னாலே எடுத்துக்கூட வைக்கமுடியவில்லை. நீங்களே சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு மறுபடியும் படுத்துவிட்டேன். திடீரென்று ஏன் இப்படி, தலை பாரம் உள்ளது? மனசு வேறு அழனும் போல் உள்ளது. சோபாவில் படுத்துக்கொண்டு ஹாலில் இருக்கும் அன்னையின் படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மனசிலே அன்னையே என்னைக் காப்பாற்று, "save me from all difficulties" என்று பிரார்த்தித்துக்கொண்டு இருந்தேன். இதே நேரத்தில் காலிங்பெல் அடிக்கவே எழுந்து கதவைத் திறந்தேன். என்னுடைய உறவினர் மூலம் அவர்கள் வீட்டிற்குப் போன் வந்ததாகவும் அதாவது என் கணவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து அவருக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் செய்தி வந்தது. இச்செய்தி கேட்டவுடன் அன்னையே என்று கதறிவிட்டேன் எனக்கு அப்போ இருந்த மனநிலையை இப்பொழுது வார்த்தைகளால் எழுத முடியவில்லை. ஆஸ்பத்திரிக்குப் போக கால் அடி எடுத்து வைக்க முடியவில்லை. அன்னையே நீயே சரணம். காலையிலேருந்து எனக்கு ஏன் அப்படி இருந்தது என்று புரிந்துவிட்டது. தலை பாரம் எங்கேபோயிற்று என்று தெரியவில்லை. ஸ்கூட்டரில் போகும்போது மேலே ஆகாயத்தை பார்த்து Mother என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். வேறு எதுவும் சொல்லத் தோணவில்லை. என் மாமியார் வேறு வீட்டிலே அழுதுகொண்டு இருந்தார்கள். ஆஸ்பத்திரிக்குப் போய் நான் என் கணவரைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அதாவது பேசிக் கொண்டு இருந்தார். அவர் வேலை செய்யும்பொழுது spindle ஒன்றைத் தூக்கிக் கொண்டு இருந்தபொழுது சிக்னல் கொடுத்துக் கொண்டு பக்கத்தில் நின்று இருந்த என் கணவர் மீது அது உடைந்து சிதறி ஏதோ ஒரு வேகத்துடன் பட அங்கிருந்து அனைவரும் ஓடி இருக்கிறார்கள். இவர் அங்கேயே விழுந்துவிட்டார். உடனேயே ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டுபோய் உள்ளார்கள். அடி வலப்பக்கம் வயிற்றில் பட்டுள்ளது. S வடிவத்தில் இருக்கும் ஊக்கு கழன்று இவர் வயிற்றில் பட்டுள்ளது. அங்கேயே ஊசி, மருந்து கொடுத்து main ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள். அங்கே உடனே X-ray எடுத்து பார்த்து செக் பண்ணி மார்பு எலும்பு முறியவில்லை. உள்ளே ஒன்றும் ஆகவில்லை என்று கூறி ஏதாவது சாப்பிடச் சொன்னார்கள். வாந்திவருதா என்று செக் பண்ணி உள் காயம் ஒன்றும் இல்லை என்று கூறி மேல் காயம் தான் அது சரியாகிவிடும் என்றும் 15 நாட்கள் unfit லீவ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். என் கணவர் அடிபட்டு துடிக்கும் பொழுது, நான் இவ்வளவு பூஜை பண்ணும்பொழுது எனக்கு ஏன் அம்மா இந்தத் தண்டனை கொடுத்தார்கள் என்று கூறினாராம். அப்பொழுது அங்கே இருந்த shift manager ராய் என்பவர், அவரும் அன்னையின் பக்தர், நீ அன்னையை பூஜை செய்வதனால்தான் உன்னைக் காப்பாற்றியுள்ளார். இல்லையெனில் நீ இப்படிக் கத்தமாட்டாய். இந்நேரம் சத்தமே வராது நின்று போயிருக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஜாதகத்தில் 48 வயதில் ஒரு பெரிய கண்டம் உள்ளதாகவும் பிழைப்பது அரிது என்றும் என் மாமியார் கூறியுள்ளார். நான் இந்த விஷயம்பற்றி அன்னையின் சமாதியில் கூறிவிட்டு நீங்கள் என்னுடன் இருக்கும்போது எனக்கு எந்த ஜாதகத்திலும் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு வந்தேன். நான் தினமும் "சாவித்திரி'' நூலை வணங்கி வந்தேன். அந்த அன்னைதான் இவரைக் காப்பாற்றி உள்ளார். அந்த அன்னையின் சக்தியைத்தவிர வேறு யாராலும் காப்பாற்றியிருக்க முடியாது. எனக்கு நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. அன்னை என்னுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு இந்தக் கடிதத்தை முடிக்கின்றேன்.

                                                            *****



book | by Dr. Radut