10.இலட்சியத் திருமணம்
"அன்னை இலக்கியம்''
இலட்சியத் திருமணம்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
இல. சுந்தரி
உன் பேரென்ன? சொன்னால் ஆன்ட்டி சாக்லேட் தருவேன் என்று அவனருகில் வந்து கன்னத்தைச் செல்லமாகத் தொட்டாள். வெயிலால் வாடிய பூச்செடி மழையின் குளுமையில் பசுமை கொட்டியதைப்போல் அன்பான அவள் தீண்டல் சிறுவன் மலர்ந்தான். அர்விந்த் என்றான் மழலையாக. ஆகா! எத்தனை அழகான பெயர். இந்தா சாக்லேட் என்று தியானமையத்தில் பிரசாதமாகப் பெற்றதை இந்தக் குழந்தைத் தெய்வத்திற்கு நிவேதனமாக்கிவிட்டாள். அவனை அன்புடன் தூக்கிக் கொண்டு கண்ணை மறைக்கும் முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டு, செல்லமாய்க் கன்னத்தில் முத்தமிட்டாள். “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி” என்று பாரதி அனுபவித்துத்தான் பாடி இருக்கிறார் என்று எண்ணமிட்டாள். இந்த அன்பில் நனைந்து மேலும் மலர்ச்சி பெற்றான் சிறுவன். அப்போதுதான் பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு வரும் சிறுமியின் முகம் வாடுவதைக் கவனித்தாள். இரண்டு குழந்தைகளிருக்குமிடத்தில் ஒரு குழந்தைக்குச் சாக்லேட் கொடுத்துக் கொஞ்சியது மற்ற குழந்தையைப் பாதிக்குமே என்று தன் அறியாமையை எண்ணி வெட்கி, பாப்பா! உன் பேரென்ன? உனக்கு ஆண்ட்டி நாளை சாக்லேட் தருவேன் என்று மன்னிப்பு வேண்டும் வகையில் கூறினாள். தன்னையும் ஆண்ட்டி புறக்கணிக்கவில்லை என்று முகம் மலர்ந்த சிறுமி ஜனனி என்று தன் பெயரைக் கூறினாள். ஓகோ! இதுவும் அழகான பேர்தான் என்று கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கூறவும் சிறுமிக்கு மகிழ்ச்சி கூடிற்று. பாட்டியின் கையில் இருந்த பிடியை விட்டுவிட்டு இவளைப் பற்றிக்கொண்டாள்.
சரிதான், இரண்டு பேரும் அவங்களைப் பிடிச்சிட்டு என்னை விட்டுட்டீங்களா பாட்டிக்குத்தான் இப்போ ஆதரவில்லை, என்று விளையாட்டாகப் பேசினாள் பாட்டி.
ஏன் பாட்டி அப்படிச் சொல்கிறீர்கள். நாம் எல்லோருமே அன்னையின் ஆதரவு பெற்றவர்கள் தாமே? என்று பாட்டிக்கும் ஆதரவு கூறினாள்.
எத்தனை அழகாகப் பேசுகிறாய்? உன் பேரென்ன? என்றாள் பாட்டி.
உமாமகேசுவரி என்றாள். பேரும் அழகாய்த்தானிருக்கிறது. உலகையீன்றவளின் பேரல்லவா உன் பேர்? அதனால்தான் இத்தனை ஆதரவாய்ப் பேசுகிறாய்? என்று பாராட்டும் தோரணையில் கூறினாள்.
எந்தத் தெருவிலிருந்து வருகிறாய்? என்றாள் பாட்டி. பக்கத்தில் பாரதித் தெருவிலிருந்துதான் வருகிறேன் என்றாள்.
அட! நாங்களும் அங்கு தானிருக்கிறோம். மேலண்டை கோடி வீடு என்றாள் பாட்டி.
அப்படியா நான் அந்த வழியாகத்தான் ஆபீஸ் போவேன். இதற்கு முன் தியான மையத்தில் கூட உங்களைப் பார்க்கவில்லையே என்றாள் உமா. நாங்கள் இந்த ஊருக்கு வந்தே ஒரு மாதம்தான் ஆகிறது. இப்போதுதான் முதன் முறையாக இங்கு வந்தோம் என்றாள் பாட்டி. நீங்கள் தனியாக இவர்களை அழைத்து வந்தீர்களே. உங்கள் மகனோ, மகளோ வரவில்லையா என்றாள். சற்று நேரம் ஆடிப்போனாள் பாட்டி.
பாட்டியின் மருமகளும், பெயர்த்தியுமான இந்தக் குழந்தைகளின் தாய் அர்விந்தைப் பெற்றபோது பிரசவத்தில் இறந்து போனாளாம். அது முதல் இவர்கள் தந்தை, அதாவது பாட்டியின் மகன் வீட்டில் ஒட்டுதலில்லாமல் அலைந்தானாம். அவன் மெடிகல் ரெப்ரசென்டேட்டிவ் வேறு. அவனுக்குக் குடும்பத்தில் பிடிப்பு ஏற்படுத்த மீண்டும் திருமணத்திற்கு முயன்ற போது அவனே ஒரு பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து வந்தானாம். அவளோ இவன் தனக்குத் திருமணமானதையும், குழந்தைகள் இருப்பதையும் கூறவில்லை, ஆதலால் இங்கு வர மறுத்துப் போய்விட்டாளாம். அவள் அழகு,பணம் யாவற்றிலும் மயங்கி அவன் பிள்ளைகளைப் பார்க்கவும் வருவதில்லையாம். குழந்தைகள் தாய்ப் பாசம், தந்தை பாசம் காணாது ஏங்கிப் போனார்களாம். அனாதையாய் தன்னிடத்தில் வளர்ந்த பெண் வயிற்றுப் பேத்திதானாம் இந்தக் குழந்தைகளின் தாய். எனவே குழந்தைகளுக்குப் பாட்டி தாத்தாதான் பொறுப்பு என்றாயிற்று. வேறு வழியில்லை. பாசம் ஒரு புறம், தள்ளாமை ஒரு புறம், பாதிக்கப்பட்ட நோதல் ஒருபுறம். இந்தப் பரிதாபக் கதையைக் கேட்டவுடன்தான் இந்தக் குழந்தைகள் தன்னை ஏன் அப்படிப் பற்றிக் கொண்டார்கள் என்று புரிந்தது. அவர்கள் தாயன்பிற்கு ஏங்குவது தெரிந்தது.
சற்று நேரத்தில் உமா குழந்தைகளுடன் வந்தாள். இருவரும் சமர்த்தாக உள்ளே போய்ப் பாட்டியைத் தொந்திரவு செய்யாமல் டிபன் சாப்பிட்டுவிட்டு முகம் கழுவிக் கொண்டு, ஹோம் ஒர்க் செய்யவேண்டும். 1 மணி நேரத்தில் ஆன்ட்டி வருவேன் என்று குழந்தைகளை ஒப்படைத்துச் சென்றாள்.
வீட்டிற்குள் நுழைந்த உமாவைக் கண்டதும் என்ன உமா இன்று தாமதம் என்றாள் அம்மா. இவள் பெற்றோர்க்கு இவள் ஒரே பெண். 25 வயதாகிறது. கல்யாணச் சந்தைக்கு வந்தாகிவிட்டாள். நல்ல வரன் கிடைக்கவில்லையே, நாளாகிறதே என்ற கவலை பெற்றோர்களுக்கு. இவள் எதற்கும் கவலைப்படுவதில்லை. ஆபீஸ் வேலையில் நல்ல கவனம் செலுத்தி அங்கு நல்ல பெயர். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை எண்ணெய்க் குளியல், துணி துவைத்தல், மதியம் துணிகளுக்குப் பெட்டி போடும் செயல்,மாலை தியானமையம். சிறிது நேரம் கிடைத்தாலும் அன்னையின் மொழியமுதம் படிப்பது. சமயம் வாய்த்தபோது இயன்ற உதவிகளைப் பிறர்க்குச் செய்வது. அதன் பயன்களை, விளைவுகளை எண்ணிப் பார்க்க மாட்டாள். இந்த நிலையில்தான் பாட்டியின் பேரக் குழந்தைகளுடன் நட்பு ஏற்பட்டது.
தொடரும்...
சொசைட்டியின் வெளியீடுகள் |
|
கர்மயோகியின் நூல்கள்: |
|
1. பிரார்த்தனையும் சமர்ப்பணமும் | ரூ. 20 |
2. மனம் - ஜீவனின் முக்கிய கரணம் | ரூ. 20 |
3. சமூகம் அதிர்ஷ்ட சாகரம் | ரூ. 20 |
4. சிறியதும் பெரியதும் | ரூ. 20 |
5. கணவன் மனைவி | ரூ. 20 |
6. இரத்தினச் சுருக்கம் | ரூ. 20 |
7. பரமனை நாடும் ஜீவாத்மா | ரூ. 20 |
8. ஸ்வரூபம் சுபாவம் | ரூ. 20 |
7. ஸ்ரீ அரவிந்தம் - தத்துவம் | ரூ. 40 |
8.. ஸ்ரீ அரவிந்தரின் காவிய இதழ்கள் | ரூ. 60 |
9.வாழ்வின் அடிச்சுவடுகள் | ரூ. 60 |
10.யோக வாழ்க்கை விளக்கம் - IV | ரூ. 80 |
11. ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம் | ரூ.100 |
12.அதிர்ஷ்டம் | ரூ.100 |
13.பேரொளியாகும் உள்ளொளி | ரூ.100 |
14.பிரார்த்தனை பலிக்க வேண்டும் | ரூ.100 |
15.நூறு பேர்கள் (2 பாகங்கள் சேர்ந்தது) | ரூ.150 |
தபாலில் பெற புத்தக விலையுடன் பதிவுத் தபால் கட்டணம் ரூ.20/-சேர்த்து M.O.செய்யவும்.
- Login to post comments
Comments
10.இலட்சியத் திருமணம் Please