Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV                                                                                 கர்மயோகி 
 

746) இறைவன் என்ற புதிருக்கு அவனே விடை. வாழ்வில் இறைவன் புதிர். அவனை அடைந்தால் விடை எழும்.

புதிரும் விடையும் அவனே.

       இறைவன் உலகை சிருஷ்டித்தவன். அவனே பிரம்மம். சர்வமும் பிரம்மம். அவனன்றி ஓரணுவும் அசையாது. இறைவன் ஆனந்தம். இறைவனே சத்தியம். எல்லாம் வல்லவன் இறைவன். எங்கும் நிறைந்தவன். எல்லாம் அறிந்தவன். கருணைக் கடல் என்பது கடவுள்.அவன் திருவடி தரிசனம் பாபவிமோசனம், என்றெல்லாம் உலகம் அறியும். இவையெல்லாம் உண்மை என நாம் ஆழ்ந்து நம்புகிறோம்.

       உலகை உற்பத்தி செய்த இறைவன் பூகம்பத்தையும் ஏற்படுத்துகிறான். எரிமலை வெடித்து இலட்சக்கணக்கான பேர் அழிகிறார்கள். பூகம்பம் பல நூற்றாண்டுகளாகச் சாதித்ததை, சில நிமிஷங்களில் தரைமட்டமாக்குகிறது. இதை ஏன் இறைவன் செய்கிறான், இதனால் இவனுக்கு என்ன வரும்? என்று நாம் சிந்திக்கத் தொடங்கினால், சிந்தனை நின்று போகிறது.

       உலகம் உய்ய அவதாரம் எடுத்த இராமபிரானுக்கு வனவாசம் அமைகிறது, மனைவியை இராவணன் எடுத்துப் போனான். மனிதனுக்குள்ள அவலங்கள் எப்படி அவதாரப் புருஷனுக்கு வரும்? தர்மத்தை நிலைநாட்ட வந்த பரமாத்மா அதர்மத்தைத் தயக்கமின்றிக் கையாள்கிறார். ஏன் பரமாத்மா தர்மத்தைத் தாமே நிலைநாட்டக் கூடாது? எதற்கு அர்ஜுனனை நாடி, அவனுக்கு விஸ்வரூபத் தரிசனம் கொடுத்து, கீதோபதேசம் செய்து, அவனைப் போரிடச் செய்து, தர்மத்தை நிலைபெறச் செய்யவேண்டும். கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போலல்லவா இருக்கிறது?

       ஏசுபிரான் உலகைக் காக்க வந்தார். தன்னையே காத்துக்கொள்ள முடியவில்லையே. புத்தர் துன்பத்தை அழிக்க வந்தவர், ஞானோதயம் பெற்றபின் துன்பத்தை அழிக்கவில்லையே, துன்பமே இல்லை என்றல்லவா சொன்னார்.

      வேதரிஷிகளை நாம் தெய்வம் என்கிறோம். அவர்கள் கடவுள்களை நோக்கி மாடு வேண்டும், மழை வேண்டும் என்றல்லவா கேட்கிறார்கள். புனிதமான வேதத்தைப் படித்து மாட்டைத்தான் கேட்கவேண்டுமா?

       சத்திய ஜீவியத்தை உலகுக்குக் கொண்டுவந்து மரணத்தையும், வலியையும் அழிக்க பகவானும், அன்னையும் வந்தார்கள். அன்னை தாம் பட்ட வேதனையைப் பார்த்து இந்த யோகத்தை எவரையும் செய்யும்படி நான் கூறமாட்டேன் என்றார். பகவான் பட்டதை நினைத்தால் கண்கள் நீரால் நிறைகின்றன என்றார். இறைவனான பகவானே நேரில் வந்து யோக இரகஸ்யங்களைக் கூறியபொழுது எவராலும் பின்பற்ற முடியவில்லையே.

       பெற்ற குழந்தையைக் கொலை செய்யும் பெற்றோரை எப்படி இறைவன் உலகில் சிருஷ்டிக்க முடியும்? இது என்ன புதிர்? உலகில் இன்றுள்ள ஆயிரம் கொடுமைகளுக்கு அவனேயல்லவா பொறுப்பு. ஏன் ஓர் உலகத்தை சிருஷ்டித்து, அதில் துன்பத்தை ஏற்படுத்தி, பிறகு அங்கு அவதாரம் செய்து, பின் அத்துன்பத்தை அழிக்க வழி சொல்லி, தாமே துன்பத்தை அனுபவித்து, உலகை அப்படியே துன்பவலையில் விட்டுப் போக வேண்டும் இறைவன்? இது ஒரு புதிரல்லவா? என்ற கேள்வி ஞானிகட்கும், மேதைகட்கும், விஞ்ஞானிகட்கும், எல்லோருக்கும் தோன்றுகிறது.

இறைவன் புதிரல்லன்,

வாழ்வில் நாம் இறைவனைப் புதிராகக் காண்கிறோம்.

வாழ்வை விட்டு சொர்க்கத்திற்குப் போனால் இறைவன் புதிராக இல்லை.

வாழ்வை நீத்து மோட்சத்திற்குப் போனாலும் இறைவன் புதிர் இல்லை என்பது தெரியும்.

இறைவன் மனிதனுக்குப் புதிர், ஞானிக்குப் புதிர், பூரணயோகிக்குப் புதிரல்லன்.

பூரண யோகிக்கு உலகம் ஓர் அற்புதம், இறைவன் அனந்தமான ஆனந்தம்.

மனிதனை இறைவனாக்க வந்த யோகம் பூரண யோகம்.

மனிதன் இறைவனாக முடியும் என்று பகவான் எழுதினார்.

தம் யோக நிலையை இறைவன் நிலைக்கு உயர்த்தினார்.

தாமே இறைவனானார்.

அனைவரும் இறைவனாகும் மார்க்கத்தை வகுத்தார்.

அதை உலகுக்கு அறிவித்தார்.

       அவனை நாம் அடையமுடியும். அவனாக நாம் ஆக முடியும். ஆனால் புதிர் புதிராக இருக்காது. புதிரானது அற்புதமாக மாறும். புதிருக்கு விடை அவனே. அவனே புதிர். அதற்கு விடையும் அவனே. அவனை அடைந்து, அவனாக மாறி, புதிரை விண்டு, அற்புதமாகக் கண்டு, திருவுருமாறுதல் பூரணயோகம். பூரணயோகம் அவனையடைய உதவும் என்ற பகவான், யோகமும் அவனே, யோகசித்தியும் அவனே என்றார்.

       பணத்தின் இரகஸ்யம் என்ன என்று தேடுபவர்கட்குப் பணத்தைச் சம்பாதித்தவர்கள் சொல்லும் விடை, "உழைப்பு''. பிரபலமடைய விரும்புபவர் அநேகர் நல்ல குணமும், திறமையும், பிரபலத்தைத் தரும் என்று அவர் அறியும்பொழுது பிரபலம் என்ற புதிருக்கு விடை நாணயம் என்றறிகிறார்.

       பகவான், இறைவன் ஒரு புதிர், இதற்கு விடை "இறைவனாகும்'' என்று கூறும் பதில் மற்றொரு புதிராக அமைகிறது. வாழ்வில் உள்ள இலக்குகள் பணம், பதவி, புகழ், பெண், போன்றவை வாழ்வின் பல பகுதிகளாகும். வாழ்வென்பதே சிருஷ்டியில் பகுதி. இறைவன் என்ற முழுமையில் வாழ்வு பகுதியாகும்.

       பகுதியான ஒரு திறமைக்கு அல்லது இலக்கிற்கு விடை அதன் வெளியே அமைய முடியும். இறைவன் என்பது சிருஷ்டியைக் கடந்த முழுமை.

       ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்து மோட்சம் பெற்றால் ஜீவாத்மா என்ற பகுதி பரமாத்மா என்ற முழுமையை அடைகிறது என்று தெரியும். பரமாத்மா என நாம் கூறுவதே இறைவனின் பகுதியாகும்.

இறைவன் என்பது பிரம்மம்.

அது முழுமுதற் கடவுள் எனப்படும்.

அதன் முழுமை சிதறாது, சிதையாது.

சிருஷ்டியால் இறைவனின் முழுமை குறைவதில்லை.

        முழுமையான இறைவன் என்ற புதிருக்கு பகுதியான உபாயம் விடையாக இருக்கக்கூடாதா எனலாம்?

       பகுதியான உபாயம், இறைவனை அடைய உதவலாம், இறைவனாக உதவாது. அப்படி அடைந்தால் புதிர் புதிராகவேயிருக்கும், விடை வெளிவாராது.

      இறைவனை அறிய இறைவனாவது தவிர வேறு வழியில்லை என்பதால் இறைவன் என்ற புதிருக்கு இறைவனே விடை என்றார் பகவான்.

  • இறைவன் என சச்சிதானந்தத்தைக் கூறுகிறோம்.
  • இறைவன், பிரம்மம் என்பது, சச்சிதானந்தத்தைக் கடந்தது.
  • Unmanifest என்ற நிலையைப் பரவெளி எனக் குறிப்பிடுகிறார்கள்.
  • சச்சிதானந்தம் manifest சிருஷ்டியின் பகுதி.
  • சச்சிதானந்தமும், சிருஷ்டியும் இறைவனின் பகுதிகள்.
  • சிருஷ்டியில் வெளிப்படும் இறைவனே முழுமையுடையவன்.

****

747) இதையே மற்ற எதற்கும் சொல்லலாம். அன்பின் பிரச்சினைக்கு அன்பே விடை எனலாம். தன் குறையால் அன்பு பிரச்சினையை எழுப்புகிறது. குறையை நிவர்த்தி செய்தால் பிரச்சினை மறைகிறது.

புதிரான விடை, விடையான புதிர்.

உலகில் அன்புக்கு ஏங்குபவருண்டு, அவருக்கு அன்பு ஒரு புதிர்.

பணத்திற்காக அலையும் பணக்காரருண்டு, பணம் அவருக்கு ஒரு புதிர்.

பதவிக்காக உயிர் வாழ்பவர் உண்டு, பதவி அவரை ஏமாற்றும் பொழுது அதை ஒரு புதிராகக் காண்கிறார்.

பிறருக்காகவே வாழ்ந்தவர் நன்றி கொல்வதையே பார்க்கிறார், அவருக்கு மனித சுபாவம் ஒரு புதிர்.

போரில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள், பொதுச் சேவையில் எழும் புரியாத நிலைகள், அவற்றைப் புதிராகக் காண்கின்றனர்.

விஞ்ஞானி உலகத்தையே ஆண்டாலும், உலகத்தின் சிருஷ்டி அவனுக்குப் புதிராகவே இருக்கிறது.

       இறைவன் மட்டும் புதிராக இல்லை. அவன் சிருஷ்டியில் அனைத்தும் புதிராகவே உள்ளன.

புதிர் என்றால் என்ன? அதற்கு விடை எப்படிக் கிடைக்கிறது?

       புரியாதது புதிர். பிறர்க்குப் புரிந்து நமக்குப் புரியாதது, புரியாதவர்க்கு மட்டும் புதிராகும். எவர்க்கும் புரியாதது எல்லோர்க்கும் புதிர். விடுகதை புரியும்வரை புதிராக இருக்கிறது. புரிந்தபின் எளிமையாகிவிடுகிறது. புரிந்தபின் கிடைக்கும் எளிமையை, புரிவதன்முன் பெற வழியிருந்தால் புதிர் என்பதன் தன்மை குறையும், விடை காண்பதின் சிரமம் குறையும்.

பகுதியை முழுமையாகக் கருதினால் அது புதிராகிறது.

பகுதியை முழுமையிலிருந்து பார்த்தால் புதிர் அவிழ்கிறது.

       கர்நாடகமும், தமிழ்நாடும் தங்கள் நலனை மட்டும் கருதினால் காவிரி நீர் பிரச்சினையாகிறது. நாட்டுடன் நம்மை இணைத்து நாட்டுப் பிரச்சினையாகப் பார்த்தால், அது பிரச்சினையாகாது. மாமியாரைப் பற்றி அனைவரிடமும் குறை சொல்லும் மருமகளும், மருமகளைப் பற்றி குறை சொல்லும் மாமியாரும், குடும்பத்தின் பேர் கெடக்கூடாது என நினைத்தால் குறை சொல்ல மாட்டார்கள். பணத்தைப் பணமாகக் கருதி அதை நாடினால் - பகுதியாகக் கருதினால் - பணம் ஓடுகிறது. மனிதனுடைய திறமையின் ஒரு வெளிப்பாடு பணம் என நினைத்தால் பணம் புதிராக இருப்பதில்லை. அவனை நாடி வரும்.

       விதையிலிருந்து மரம் எழுந்தால், மரத்தை விதை விளக்குகிறது, விதையை மரம் விளக்குகிறது. ஆனால் எப்படி என்று விளக்க முடியவில்லை. அவை புதிராகின்றன. சிருஷ்டியின் பகுதியாக விதையையும், மரத்தையும் கருதினால் அவையிரண்டும் உற்பத்தியான வகையை சிருஷ்டி விளக்குவதால் புதிர் புரிகிறது என்கிறார் பகவான்.

       அன்பை நாடிப் போகிறவர்களைவிட ஆசையை நாடுபவர்கள் அதிகம். ஆசை சில சமயங்களில் பூர்த்தியாகும், பல சமயங்களில் பூர்த்தியாகாது. ஆனால் அன்பைத் தேடிய எவருக்கும் உலக வாழ்வில் அன்பு பூர்த்தியானதில்லை. அது புதிராகவேயுள்ளது. I have loved since my birth, but no one loved me. பிறந்ததிலிருந்து அன்பு செலுத்தினேன், அதை எவரும் திருப்பித் தரவில்லை என்பது 'சாவித்ரி' காவியத்தில் ஒரு வாக்கியம்.Vision of Dante டான்தேயின் திருஷ்டி என்பது உலகப் பெருங்காவியம். டான்தே பியாட்ரிஸ் என்பவளை விரும்புகிறான். அவள் மற்றொருவனை திருமணம் செய்து 9 குழந்தைகள் பெற்றபின் அவள் மீதுள்ள அன்பு அனலாக எழுந்து காவியமாக மாறியது. இது இத்தாலியக் காவியம். ஏன் அன்பு புதிராகவேயுள்ளது?

       ஓர் இளம் பெண் புத்த பிக்ஷுவைப் பார்த்து அவனை விரும்பி அவன் பின்னால் போகிறாள். அது பலன் தாராது என்றறிந்தபின் விரக்தியடைந்து தன்னை அழித்துக்கொள்கிறாள். விபச்சாரியாகி தீராத வியாதியடைந்து அலைந்து மயக்கமடையும்பொழுது அந்த பிக்ஷு அவளைக் கண்டு, வாரி எடுத்து, மடியில் போட்டு, ஆறுதல் கூற முயலும்பொழுது, அவள் கண் விழித்து, "அன்றே இதை செய்திருந்தால் நான் அழிந்திருக்கமாட்டேன்'' என்கிறாள். உடலின் தேவையை அன்பு என்று கருதுபவர் பாமரர். உணர்வின் உயர்வை உலகம் அன்பு என்றறியும். அது சில சமயங்களில் பலிக்கும், பல சமயங்களில் பலிக்காது. பலித்த பின்னும் அதனுள் அன்பு இருப்பதில்லை. அதனால் டான்தேயின் அன்பு உட்பட அன்பு இன்றுவரை புதிராகவேயுள்ளது.

       அன்பின் உறைவிடம் உணர்ச்சி என நாம் அறிந்தாலும், அன்பு உணர்ச்சிக்குரியதன்று. ஆங்கிலத்தில் sensation என்ற உணர்ச்சியே அது. Feeling, emotion என்று கூறப்படும் உணர்ச்சிகள் இதயத்திற்குரியவை, இவை அன்பல்ல. இவை தாழ்ந்த (sensation), உயர்ந்த (emotion) உணர்ச்சிகள். God is Love என்று நாம் கூறும் Love அன்பை மனதில்கொண்டு, அதை நாம் உலகில் தேடி அலைந்து அது புதிராக உள்ளது என்கிறோம். அந்த Love அன்பு எப்படி உற்பத்தியாகிறது என்று Life Divineஇல் பகவான் எழுதுகிறார். அது சச்சிதானந்தத்தில் எழுகிறது.

சத்(தியம்), சித்தம், ஆனந்தம் என்பது சச்சிதானந்தம்.

சத் என்பது பிரம்மம், புருஷன், ஈஸ்வரன் எனவும்,

சித் என்பது ஞானம் (knowledge), செயல்திறன் (will) எனவும்,

ஆனந்தம் என்பது அன்பு, சந்தோஷம், அழகு (Love, Joy, Beauty) எனவும் பிரிகின்றன என்கிறார்.

ஆனந்தம் உடலில் வெளிப்பட்டால் அது அழகாகிறது.

ஆனந்தம் நரம்பில் வெளிப்பட்டால் அது சந்தோஷமாகிறது.

ஆனந்தம் ஆன்மாவில் வெளிப்பட்டால் அது அன்பாகிறது என்பது தத்துவம்.

       ஆன்மா முழுமையானது. அன்பு அதன் உருவம். இதயமும், நரம்பும், உடலும் பகுதிகள். பகுதிகளிலிருந்து அன்பைப் புரிந்துகொள்ள முயன்றால் அது புதிராக இருக்கும். ஆன்மா என்ற முழுமையிலிருந்து அன்பைப் புரிந்துகொள்ள முயன்றால், அன்பு தானே சுரக்கும், எதிர்பார்ப்பின்றி ஓடையாக ஊறி ஓடும். தன்னை அர்ப்பணிப்பதிலேயே அன்பு பூரணத்தைப் பெறும். பிரதிபலன் எதிர்பார்க்காது, தன்னை ஏற்கவேண்டும் எனவும் எதிர்பார்க்காதது தூய அன்பு என்கிறார் அன்னை.

       மனித முழுமையை நாடி அதன் பகுதியாகப் பணத்தைக் கண்டவருக்குப் பணம் புதிரன்று. அவர்கள் பணத்தைச் சம்பாதித்தவர் மட்டுமல்லர், பணத்தை உற்பத்தி செய்தவர்கள். பாங்குகளை நிறுவி நாட்டில் பெரும் பணத்தைச் சேர்த்து பலருக்கும் பணத்தின் சேவையைக் கிடைக்கும்படிச் செய்தவர்கள். அவர்களுக்குப் பணம் ஒரு கருவி, புதிரன்று. பணம் எங்கு உற்பத்தியாகிறது, எப்படி உற்பத்தியாகிறது என்று கண்டவர்கள் அவர்கள். அதனால் ஆலைகளையும், பாங்குகளையும், பெரிய ஸ்தாபனங்களையும், இன்ஷுரன்ஸ் கம்பனிகளையும் நிறுவி பணத்தை உற்பத்தி செய்தனர். அவர்கள் பணத்தை முழுமையானதாகக் கருதவில்லை. மனிதன் என்ற முழுமையில் கடமை, திறமை, காரியம், செயல், உழைப்பு என்பவை பகுதிகள். அவற்றின் பலனாக எழுபவற்றுள் பணமும் ஒன்று என்று கண்டனர். They are nation builders. அவர்கள் சமூகச் சிற்பிகள். சமூகத்தை உருவாக்கியவர்கள். பணத்தைக் கருவியாகக் கருதியவர்கள்.

       பதவி சேவைக்குரிய கருவி. எனவே சேவையின் பகுதி. பகுதியான பதவியை மனம் நாடும்பொழுது, பதவி தூரப் போகிறது, புதிராக இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் உழைத்தவனைவிட்டு இன்று வந்தவனை நாடுகிறது. பணத்தாலோ, சாமர்த்தியத்தாலோ அடுத்தவர் பெறும்பொழுது எதுவும் புரிவதில்லை. பதவியை நினைக்காமல் முழுமையாகச் சேவையை மட்டும் கருதியவரை பதவி தேடி வருவது சரித்திரம். அந்நிலையில் பதவி புதிராக இருப்பதில்லை.

        மனிதச் சுபாவத்திற்குத் தன்னைப் பூர்த்தி செய்துகொள்வதே பாங்கு. நன்றியறிதல் அதன் பகுதியில்லை. நன்றியறிதல் மனித சுபாவத்திற்குத் தேவையில்லை. சுயநலமான மனிதன் இப்பிறவியில் சுயநலத்தின் பூரண அனுபவத்தைப் பெற வந்திருக்கிறான். அவனுக்குச் சுயநலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவும் தேவையில்லை. நன்றியறிதலும் தேவையில்லை, ஏமாற்று வித்தையும் தேவையில்லை. முனிசிபாலிட்டியில் வேலை செய்பவன், தன் கடமையை முனிசிபாலிட்டியில் செய்கிறான். அவன் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை, நிலத்தில் பயிரிடவில்லை எனக் குறை சொல்வது அவனைப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள். கோபமான சுபாவமுள்ளவனுக்கு முக்கியமாகக் கோபமும், வாழ்வுக்குத் தேவையான மற்ற குணங்களும் வேண்டும். பொறுமையோ,கருணையோ, ஏமாற்றுவதோ, அவனுக்கு இப்பிறவியில் தேவைப்படாவிட்டால், அவற்றை அவன் நினைக்கப் போவதில்லை. பொதுவாக மனிதன் வாழும் வாழ்வுக்கு, கருணை, நன்றியறிதல் தேவையில்லை.

மனித வாழ்வுக்கு நன்றியறிதல் அவசியம் என நினைப்பது சரியில்லை.

       ஒரு குறிப்பிட்ட சுபாவத்திற்குப் பல குணங்கள் தேவைப்படலாம். பல தேவைப்படா. தேவைப்படும் குணங்களை விலக்கினால் காரியம் பூர்த்தியாகாது. தேவைப்படாத குணத்தைச் சேர்த்துப் பார்த்தால் விஷயம் புரியாது. சுபாவத்தை சுபாவமாகப் புரிந்துகொள்ள முயன்றால் ஏன் நன்றியறிதல் தேவை, சில சமயங்களில் தேவையில்லை என்று புரியும்.

       விதை எப்படி மரமாக வளர்கிறது என்பதை முழுவதுமாகக் கண்டுகொண்ட விஞ்ஞானி விதையைக் கொண்டு மரத்தை அறிகிறான். விதையும், மரமும் ஏற்பட்ட காரணத்தை விதையிலிருந்து கண்டுபிடிக்க முயல்வது அறிவீனம். மார்க்கட்டில் சோப் விற்கிறதெனில் வாங்குபவர்களைக் கொண்டு, அவர்கள் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து, சோப் எப்படி உற்பத்தியாகிறது என அறிய முடியாது. சோப் பேக்டரியில் உற்பத்தியாகிறது, கண்டுபிடித்தவன் விஞ்ஞானி. சோப்பின் உற்பத்தியை அறிய பாக்டரிக்கும், விஞ்ஞானியிடமும் போகவேண்டும். வாங்குபவர் பின்னால் வந்தவர். பின்னால் ஏற்பட்டதை ஆராய்ந்து முன்னால் நடந்ததை அறிய முற்படுவது இயலாது, மூடநம்பிக்கையாகும். மரம் விதையிலிருந்து வருகிறது, விதை மரத்திலிருந்து எழுகிறது. மீண்டும் மீண்டும் அதே கேள்வி, அதே பதில். விடை அங்கில்லை. விதையும், மரமும் உலகத்தின் பகுதிகள். பகுதியால் தன்னை உணரமுடியாது, முழுமை பகுதியை விளக்கும்.

       போர் சர்க்கார் தொடுப்பது. சர்க்கார் சமூகத்தின் பகுதி. சமூகம் புரிந்தால் போரின் நுணுக்கங்கள் புரியும். ரஷ்யா மீது படையெடுத்த நாடுகளெல்லாம் ரஷ்யரிடம் மாட்டித் தோற்றன. ரஷ்யக் குளிர் கடுமையானது என்று புரியாமல் போரை எப்படி நடத்துவது என்ற நுணுக்கம் போரில் வெற்றியைப் பெற்றுத் தாராது.

       அழகான பெண்கள் எளிதில் திருமணமாவதுண்டு. வசதியில்லாத அழகான பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போகும். அழகு உயர்ந்தது என்றாலும் திருமணம் செய்துகொள்ள வசதி தேவை என்பதை மறந்துவிட்டால், காரியம் பூர்த்தியாகாது. தன் வசதியைக் கொண்டு தன் திருமணத்தைக் கணித்த பெண்ணுக்கு, தனக்கு திருமணமாகாது என்று புரிந்தபோது, இதுவரையில்லாமல் வரன் வந்தது. விஷயங்கள் விநோதமாக மாறி, பணம் செலவில்லாமல் இரண்டு கல்யாணமும், ஓர் உபநயனமும் நடந்தன. அழகு பகுதி, வசதி திருமணத்திற்கு முழுமை. முழுமையை அறியும் மனத்திற்குத் திறன் உண்டு. பிரச்சினை புதிராக இருக்காது.

புதிராகக் காண்பது பகுதியின் அறிவு.

முழுமையை நாடினால் புதிர் மறையும்.

வாழ்வில் இறைவன் புதிராக இருக்கிறான்.

இறைவனில் வாழ்வு புதிரை இழந்து தெளிவாகிறது.

       வேலை, திருமணம், படிப்பு, ஆகியவை முக்கியமானவை. சில சமயங்களில் வேலையில் குறை ஏற்படும். அது திருமணத்தால் ஈடு கட்டப்படும். ஒன்றில் ஏற்படும் குறையை சில சமயங்களில் வாழ்வு மற்றதால் ஈடு கட்டும். அவை வாழ்வின் பகுதிகளாக இருப்பதால் ஒரு பகுதி அடுத்ததின் குறைவை ஈடுகட்டலாம்.

       அன்பு முழுமை பெற்றது. அதனளவில் முழுமை பெற்றது எனலாம். தாயன்பு இல்லாவிட்டால் அக்குறையை தீர்க்கவோ, ஈடுகட்டவோ முடியாது. அங்கு அன்பின் பிரச்சினைக்கு அன்பே விடை எனக் கூறலாம்.

       படிப்பால் ஏற்படும் குறைவை வேலை அல்லது திருமணம் ஈடுகட்டுவதுண்டு. அறிவால் ஏற்படும் குறையை அதுபோல் ஈடுகட்ட முடியாது.

படிப்பைப் பகுதியாகக் காணலாம்.

அறிவு முழுமையுடையது.

       ஆன்மாவின் அம்சங்கள் எதுவும் அதுபோல் முழுமையுடையன. சத்தியம், ஞானம், நன்மை, உறுதி, அழகு, ஆனந்தம், அன்பு, மௌனம், அனந்தம், காலத்தைக் கடந்த நிலை ஆகியவை ஆன்மாவின் அம்சங்கள்.

      சத்தியம் என்பதை Truth என்றால் அதன் பகுதியான fact உண்மை நிகழ்ச்சி எனலாம்.

      ஞானம் என்பதை முழுமையுடையது என்றால் பட்டம், படிப்பை பகுதி எனலாம்.

      நன்மை முழுமை எனில் நல்ல செயலை (உதவி) பகுதி எனலாம்.

முழுமை

பகுதி

உறுதி

வாக்குறுதி

அழகு

அழகி

ஆனந்தம்

சந்தோஷம்

அன்பு

ஆதரவு

வாழ்வில் முழுமையை முழுமையாலே அடையலாம். பகுதி ஒன்று தவறினால் அடுத்ததைக் கொண்டு பிரச்சினையைத் தீர்க்கலாம்.

இறைவன் என்ற புதிருக்கு அவன் மட்டுமே விடையாகும் என பகவான் எழுதியதின் உட்கருத்து இதுவாகும்.


 

****


 

தொடரும்....

ஜீவிய மணி

பிரியத்தின் கண்ணுக்கு விகாரம் அழகாகத் தெரியும்.


 


 

Comments

யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம் IV 

 
746)
 
Para   9    - Indent all the 12 lines by few spaces
Para 15    - Indent all the   4 lines by few spaces
Para 16    - Please indent first line  to make a paragraph
Para 17    - Please indent first line  to make a paragraph
Para 18    - Indent all the   6 lines by few spaces
Para 18    - Line 3  -  Unmanifestஎன்ற     -    Unmanifest என்ற
 
 747)
 
Para  1   -  Please indent the first line
Para  1   -  Separate line for the line starting with 'போரில் ஏற்படும்'
Para  1   -  Please indent all the 6 lines to match up the 2nd paragraph starting with ' இறைவன் மட்டும் '
Para  8   -  Line 3  -  'noone'                          -  'no one'
Para  8   -  Line 3  -  பிறந்ததிலி ருந்து     -    பிறந்ததிலிருந்து
Para  8   -  Line 6  -  உடலி ன்                    -    உடலின்
Para  8   -  Line 8  -  பலி க்காது                 -   பலிக்காது
Para  8   -  Line 8  -   பலி த்தபின்னும்      -   பலித்தபின்னும்
Para  8   -  Line 13 -  Loveஎன்று                   -   Love என்று
Para  8   -  Line 14  -   கர்ஸ்ங்                     -    Love
Para  8   -  Make a new paragraph from the line starting with 'அன்பின் உறைவிடம் உணர்ச்சி '
Para  9   -  Indent all the 6 lines by few spaces
Para 10  -  Line 2   -   பகுதிகளிலி ருந்து      -  பகுதிகளிலிருந்து 
Para  10 -  Line 3   -   முழுமையிலி ருந்து  -  முழுமையிலிருந்து
Para  13 -  Line 6   -   முனிசிபாலி ட்டியில்   -  முனிசிபாலிட்டியில்
Para  19  - Indent all the 4 lines by few spaces
Para  23  - Indent all the 2 lines by few spaces
Para  24  - factஉண்மை         -      fact உண்மை
Para  24  - Make a new paragraph for the  following lines
    Line starting with   'சத்தியம் என்பதை Truth என்றால் '
    Line starting with   'ஞானம் என்பதை முழுமையுடையது '
    Line starting with   'நன்மை முழுமை எனில் '
  

motnir

 

 

 

 

 



book | by Dr. Radut