Skip to Content

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

621) மனிதனுடைய நிலைகள் பல.மேலெழுந்த மனத்திலும், ஆழ்ந்த உணர்விலும், சூட்சும உடலிலும், உணர்விலும், உடலிலும், காரணதேகத்திலும், அகந்தையிலும், சைத்தியப்புருஷனிலும், புருஷனிலும், ஈஸ்வரனிலும் மனிதன் நிலை பெற்றிருக்கிறான்.இந்த எல்லா நிலைகளிலும் அன்னையிருக்கின்றார்.நம் அழைப்பின் திறனுக்கேற்ற நிலையிலிருந்து அன்னை பதிலளிக்கின்றார்.ஆழ்ந்த நிலைக்குப் போனபின்னும், மேல்மனத்தின் பழக்கம் அங்கும் வருமானால், அந்தக் குறையால், அழைப்பின் திறன் குறையும்.

அன்னையில்லாத இடமில்லை.பழைய பழக்கம் அழைப்புக்குத் தடை.

கருவுருதல் என்பது முழுமையான நிறைவான நிகழ்ச்சி. தாவரங்களிலிருந்து, விலங்கு, மனிதன், தெய்வம்வரை அது உண்டு. நிலையின் உயர்வு, தாழ்வு கருதாமல் ஒரு பெரிய செயல், நிலைக்குத் தகுந்தவாறு எல்லா நிலைகளிலும் இருப்பதை நாம் பல விஷயங்களில் அறிவோம்.உருவம், உணர்வு, அறிவு, அதேபோல் ஜடத்திலிருந்து, சச்சிதானந்தம்வரை எல்லா நிலைகளுக்கும் உண்டு.வெற்றி, தோல்வி என்பது வாழ்வின் ஆயிரம் நிலைகளிலும் உண்டு. நிலைக்கேற்றபடி செயல் மாறும்.பிரம்மத்தை அறிய மந்திரமுண்டு. பிரம்மத்திலிருந்து படிப்படியாக இறங்கி வந்தால் எல்லா நிலைகளுக்குரிய மந்திரம் உண்டு.சூளை கொளுத்து முன்னும் அதற்குரிய "மந்திரம்" உண்டு.அதேபோல் அன்னை எல்லா நிலைகளிலும் உள்ளார்.

நாம் எந்த நிலையிலிருந்தாலும், அன்னை நம் அழைப்பின் ஆர்வத்தின் நிலைக்கே பதிலளிக்கிறார்.உயர்ந்த நிலையிலுள்ளவர் அழைப்பு தாழ்ந்திருக்கலாம்.தாழ்ந்தவர் அழைப்பு உயர்ந்திருக்கலாம். நம் நிலை வேறு, நாம் அன்னையை அழைக்கும் நிலை வேறு. மாணவனுடைய புத்திசாலித்தனம் வேறு, அவன் படிக்க எடுக்கும் முயற்சி வேறு.நன்கொடை செல்வர் நிலையைப் பொறுத்திருப்பதைவிட, அவர் எவ்வளவு தாராளமாகக் கொடுக்கப் பிரியப்படுகிறார் என்பதைப் பொறுத்தது.

நாம் அன்னையிடம் பிரார்த்தனை செய்து பலிக்காதவை அன்னைக்கு சக்தியில்லை எனச் சொல்வதில்லை.நம் பிரார்த்தனையை எத்தனை நம்பிக்கையுடன் எழுப்புகிறோம், இந்தப் பிரார்த்தனையில் நம்பிக்கை அன்னை மீது இருக்கிறதா என்பதைப் பொறுத்துள்ளது.ஓடும் கார் நின்றவுடன் டிரைவர் ரிப்பேர் செய்தான். அது புறப்படவில்லை.காரில் இருந்தவர்கள் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்ததால், அன்னையை அழைக்க வேண்டும் என நினைக்கவில்லை.கார் புறப்படவில்லை என்றபொழுது ஒருவர் அன்னையை அழைத்தார்.பேச்சு சுவாரஸ்யம் மனநிலையைத் தாழ்த்திவிட்டதால், பிரார்த்தனை எடுபடவில்லை.சற்று பொறுத்துப் பார்த்தார்.கார் ரிப்பேராகவில்லை.மனமும் பழைய நிலைக்கு வரவில்லை.20, 30 முறை அன்னையை அழைத்தார்."சப்"பென இருந்தது.ஒரு புதிய யோசனை தோன்றியது.டிரைவர் இந்த நேரம் முழு முயற்சி செய்கிறான்.எனவே அன்னையை அழைப்பதற்குப் பதிலாக, டிரைவரில் உள்ள அன்னையை அழைத்தால் பலனிருக்குமா என நினைத்து, அதை முயன்றார்.முதல் அழைப்பில் கார் புறப்பட்டது. இதுவும் பலிக்காத நேரத்தில் எஞ்சினிலுள்ள அன்னையை அழைத்தால், உடனே எஞ்சின் புறப்படுவதுண்டு.இக்கொள்கையை மனம் ஏற்றுக்கொண்டால், பொதுவாக அன்னையை அழைப்பதை விட, இம்முறைக்கு அதிகப் பலனிருப்பதுண்டு.இலாக்கா டைரக்டர் வேண்டியவரானாலும், அந்த ஆபீஸ் சூப்பிரண்டெண்டண்ட் மூலம் அதிவிரைவாகக் காரியம் முடிவதைப் போன்றது இது.

எவருக்கு நம்மீது முழுப் பிரியமுள்ளதோ "அவரிடம்" நம் மனதிற்குள்ள ஒரு குறையைச் சொன்னால் அது உடனே தீர்வதைப் பார்க்கலாம்.12 நாள் வேலை செய்யாத போன் அதுபோல் ஒரு மணி நேரத்தில் ஒரு சமயம் வேலை செய்தது.நேரில் வாயால் சொல்வதும் பலிக்கும்.மனதால் சொல்வது அதைவிட அதிகமாகவும் பலிக்கும்.அன்னையுடன் அதுபோன்ற தொடர்பு நமக்கிருப்பது நல்லது, ஆனால் அரிது.

**********

622) தெய்வம் உலகை நாடிவரும்பொழுது ஞானம், அஞ்ஞானமாகிறது.மனிதன் தன்னை உணர்ந்து இறைவனை நோக்கிச் செல்லும்பொழுது அஞ்ஞானம், ஞானமாகிறது.

உலகை நாடும் தெய்வம் அஞ்ஞானம்.தெய்வத்தை நாடும் மனிதன் ஞானம்.

தாய்மை குழந்தையைத் தொடும்பொழுது அன்பாகவும், அரவணைப்பாகவும், கொஞ்சலாகவும் மாறுகிறது.உடலாலும் தாய் அன்பை வெளிப்படுத்துகிறாள்.அதை வெளிப்படுத்த அவள் இரத்தம் பாலாக மாறுகிறது.அடம் பிடிக்கும் குழந்தைக்குத் தாயின் பாசம், தண்டனையாகப் போய்ச் சேருகிறது.

இமயமலையை ஆன்மா சிவபெருமானாக அறியும்.ஜீவன் இமவான் என்றறியும்.கட்புலனுக்கு இமயமலை பிரம்மாண்டமான உயர்ந்த அகன்ற தோற்றம்.உணர்ச்சி பிரமிக்கிறது.100 மைலுக்கு அப்பால் பிரமிப்பு குறைந்து வானை எட்டும் சிகரம் தெரிகிறது. பூகோளப் படத்தில் அது ஒரு புள்ளி, ஒரு பெயர், அதன் உயரம் ஒரு நெம்பராக (29,000 அடி) மாறுகிறது.இமயமலை மாறவில்லை. நாம் உள்ள தூரத்தைப் பொறுத்து, அதன் தோற்றம் நமக்கு மாறித் தோன்றுகிறது.பாடப்புத்தகத்தில் உயரத்தால் (29,000 அடி) மட்டும் குறிக்கப்படுகிறது.

இந்தியா அடிமைத்தளையை உடைத்தெறிந்து சுதந்திரம் பெற முடிவு செய்தபொழுது நாடு மக்கள் மனத்தில் சுதந்திரம் பெற்றது. அது சுதந்திர வேட்கை.அதன் பலன் சுதந்திரம்.இனி நம்மை அன்னியன் நிர்ணயிக்கக் கூடாது, நாமே நம்மை நிர்ணயிக்க வேண்டும் என முடிவு செய்ததை சுயநிர்ணய உரிமை என அறிவோம்.நாடு அடிமையிலிருந்து சுதந்திரம் (sovereign state) பெற்றுவிட்டது.சுதந்திரம் என்பது அரசியல் சட்டமாக மாறி - பார்லிமெண்டால் அரசியல் சட்டமாக்கப்பட்டு - சுதந்திரத்திற்கு உருவம் அளித்தது.இது பாமரனை எட்ட வேண்டும்.ஆயிரம் வகைகளில் இது பாமரனை எட்டுகிறது.பார்லிமெண்ட் சட்டங்களை இயற்றுகின்றது.சர்க்கார் இந்தச் சட்டத்தின் பேரில் rule ஏற்படுத்துகின்றது.டிபார்ட்மெண்ட் இந்த ரூலின் அடிப்படையில் சர்க்கார் உத்தரவு (Government order) போடுகிறது.அதன் அடிப்படையில் பாமரன் விண்ணப்பத்தை ஆபீசர் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கின்றார்.ஒருவருடைய நிலத்தை முனிசிபாலிட்டி அவருடைய அனுமதியின்றி எடுத்துக்கொண்டால், அல்லது உரிய நஷ்டஈடின்றி எடுத்துக்கொண்டால் அவர் சர்க்காருக்கு மனுப் போடுகிறார்."நான் சுதந்திரமான பிரஜை.என் சொத்து எனக்குரியது. என் அனுமதியின்றி அதைத் தொட எவருக்கும் உரிமையில்லை. முனிசிபாலிட்டிக்கும் உரிமையில்லை.இந்தியா சுதந்திரமான நாடு. நான் அதன் பிரஜை.அரசியல் நிர்ணயச் சட்டப்படி எனக்குச் சொத்துரிமையுண்டு.பார்லிமெண்ட் சட்டப்படி எனக்கு அந்த உரிமையுண்டு.அதை மீட்டுத் தரவேண்டும் என மனுப் போடுகிறேன்'' என்றால் சர்க்கார் உத்தரவு போடுகிறது.அவர் சொத்து மீட்கப்படுகிறது.அதற்குரிய G.O.வை உத்தரவு சான்றாகக் காட்டுகிறது.G.O.க்கு அடிப்படை சட்டம் (Act) , சட்டம் அரசியல் நிர்ணயத்தின் (constitution) பேரில் எழுகிறது.அதை நமக்களித்தது சுதந்திரம்.Sovereignty -constitution -Parliament Act -Government order -order of collector, எனச் சுதந்திரம் நம்மிடம் சர்க்கார் உத்தரவாக வந்து சேருகிறது.சிருஷ்டியைத் தத்துவமாக விளக்கும்பொழுது எது, எதுவாக மாறுகிறது என பகவான் கூறுகிறார். 

சத்து ஜடமாக மாறுகிறது.

சித்து வாழ்வாகிறது.

ஆனந்தம் ஆன்மாவாக (சைத்தியம்) உருப்பெறுகிறது.

சத்தியஜீவியம் மனமாகிறது.

சச்சிதானந்தமே சிருஷ்டி, உலகம்.இந்த மாறுதல்களில் ஞானம், அஞ்ஞானமாவது ஒரு மாற்றம்.பரிணாம வளர்ச்சியை நாம் மேற்கொண்டு பூரண யோகத்தால் திருவுருமாற்றத்தை நாடினால் நம் மனம், சத்தியஜீவியமாகி, நமது ஆன்மா ஆனந்தமாகி, வாழ்வு சித்தமாகி, உடல் சத்தியமாகி, இத்தனையும் சேர்ந்து சிருஷ்டி பிரம்மமாகிறது.

**********

623) தன்னையறிந்த நிலையில் இவையிரண்டையும் புரிந்து கொள்ளமுடியும்.மனோமயப்புருஷனை அறிந்தாலும் ஜீவாத்மா சித்தித்தாலும், இந்நிலைகளை அறிய முடியாது.அவை சலனமற்றிருப்பதால், இவற்றை வெளிப்படுத்துவதில்லை.நம் அனுபவத்தின் சாரத்தைச் சேர்க்கும் சைத்தியப் புருஷனே இவற்றை அறிவான்.

புருஷனும், ஜீவாத்மாவும் பெறாத ஆத்மஞானம் சைத்தியப்புருஷனுக்குண்டு.

உலகத்தை மட்டும் அறிவது அஞ்ஞானம்.ஜோதியைமட்டும் அறிவதும் அஞ்ஞானமே.இவையிரண்டும் இறைவனின் பகுதிகள். இறைவனாகிய முழுமையை அறிவதே ஞானம்.எவ்வளவு உயர்ந்ததானாலும், ஒரு பகுதியை அறிவது அஞ்ஞானம், ஞானமில்லை என்று உபநிஷதம் கூறுகிறது.

குழந்தை வாழ்வை அறிவதில்லை.படிக்காதவன் சட்டத்தை அறிவதில்லை.சாதாரணமனிதன் வாழ்வின் முழுமையை அறிவதில்லை.ஞானி இறைவனின் முழுமையை அறிவதில்லை. வளர்ந்தபின் குழந்தை வாழ்வை அறிகிறது, ஆனால் குழவிப் பருவத்தின் ஆன்மவிழிப்பை இழக்கிறது.குழந்தையுள்ளம்பெற்ற வயதானவர் விவேகியாகிறார்.அவர் சிறு வயதின் ஆன்மவிழிப்பை இழக்காமல், வாழ்வின் அனுபவத்தை வயதானபின் பெற்று வாழ்வின் முழுமையை அறிகிறார்.படிக்காதவன் சட்டத்தை அறிவதில்லை. சட்டத்தை நிலைநிறுத்த வாதாடும் வக்கீல் பாமரனின் வாழ்வை அறிவதில்லை.பாமரனாய்ப் பிறந்து, சட்டத்தை இயற்றும், அரசியல்வாதியாக (காமராஜ்போல் உயர்ந்தவர்) உயர்ந்தபின் பாமரனுடைய வாழ்வையும், சட்டத்தின் நுணுக்கத்தையும் சேர்ந்த முழுமையை அரசியல் அனுபவமாகப் பெறுகிறார்.ஞானி நிஷ்டையில் ஜீவாத்மாவோடும், பரமாத்மாவோடும் தம்மை மறந்து - சமாதிநிலையில் - இரண்டறக் கலக்கின்றார்.பரமாத்மாவோடு கலந்தாலும், ஞானி பரமாத்மாவை சிருஷ்டிக்குமுன் உள்ள நிலையில் மட்டும் அறிவதால் அது பூரண ஞானமாகாது.சிருஷ்டிக்கப்பட்ட வாழ்வின் பிடியிலுள்ள மனிதன் பரமாத்மாவை அறியாது இருளிலிருப்பது உண்மையானால், வாழ்வை அறியாது பரமாத்மாவை மட்டும் அறியும் ஞானி பெரிய இருட்டிலிருப்பதாக உபநிஷதம் கூறுகிறது.பரமாத்மாவும், அவரது சிருஷ்டியான வாழ்வும் சேர்ந்ததே முழுமை, முழு உண்மை, இருள் கலப்பில்லாத ஜோதியாகும்.அதை ஆன்மாவால் உணர முடியாது.ஏனெனில் மனோமயப் புருஷனான ஆன்மா சலனமற்றது, ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டது.சலனமான வாழ்வைச் சலனமற்ற மனோமயப் புருஷன் அறியமுடியாது.ஜீவாத்மா அழிவற்றது, சலனமற்றது, மாற்றமற்றது.சலனத்தால் மாறி, ஒன்றழிந்து மற்றது தொடர்ந்து உற்பத்தியாகும் வாழ்வை அறிய, வாழ்விலுள்ள ஆத்மாவாகிய சைத்தியப் புருஷனால்தான் முடியும்.

உலகில் இருளும் ஒளியின்றி எழாது.பொய்யும் சத்தியத்தின் அடிப்படையில் ஏற்பட்டதே.திருடனுக்கும் வாழ்வளிப்பது அவனுடைய சகாக்களுடன் உண்மையாக இருப்பதுவேயாகும்.10 பேர் சேர்ந்து பொய் சொல்லி, திருடினாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இல்லாவிட்டால், ஒருவர் மற்றவர்க்குத் துரோகம் செய்தால் தொடர்ந்து திருட முடியாது.அனைவரும் பிடிபடுவர். தொழில் திருடு, பொய், சூது, ஆனாலும் அவர்களுக்குள் உள்ள உண்மையே அவர்கள் வாழ்வைக் காப்பாற்றுகிறது.பொய்யும் உலகில் சத்தியத்தின் அடிப்படையின்றி வாழமுடியாது என்பதை இது விளக்கும்.

பிரகிருதி, இயற்கை என நாம் கூறுவது இருளின் வடிவம். எனினும் இதுவும் ஒளியின் அடிப்படையின்றி உருவாகாது. சத்தியத்தின் அடிப்படையில்லாவிட்டால் வாழ முடியாது.அந்த சத்தியம் சைத்தியப் புருஷனாகும்.வாழ்வின் ஆன்மீகச் சாரம் சைத்தியம்.சைத்தியம் தன்னையறியும், வாழ்வை அறியும், அது வளரும், மாறும்.ஜீவாத்மா வளராது, மாறாது, தன்னையறியாத நிலையில் மனோமயப் புருஷனாக இயற்கையை அறியாத - ஆனால் அறிய முடியாமலில்லை - சாட்சி புருஷனாக இருக்கிறது.

தன்னை ஒருபொழுதும் மறக்காத சைத்தியப் புருஷனால் மட்டுமே ஞானம், அஞ்ஞானமாக மாறுவதையும், அஞ்ஞானம் ஞானமாக மாறுதையும் அறியமுடியும்.

*********

624) துக்கமான சூழ்நிலையில் சந்தோஷமாக இருப்பது மனதைப் புண்படுத்தும்.துக்கமும், சுகமும் எதிரெதிரான உணர்வுகள், மனத்திற்கு மட்டும் உரியவை.மனிதச் சூழ்நிலை ஒன்றை அனுமதிக்கும், அடுத்ததை அனுமதிக்காது.சைத்தியப் புருஷனுக்குத் துக்கமில்லை. உடல் உணர்வின் சந்தோஷம் அதற்கில்லை.துக்கமான சூழ்நிலையில் சைத்தியப்புருஷன் அமைதியாகவும் இனிமையாகவுமிருப்பான், பொருத்தமற்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தமாட்டான்.

துக்கமும், அமைதியையும், இனிமையையும் கொடுப்பது சைத்தியப்புருஷன்.

ஆன்மீக உணர்வுக்குத் துக்கமில்லை.துக்கப்பட்டால், ஆன்மீகத்தை ஏற்றுக் கொண்டதாகாது.பகவான் ஸ்ரீ அரவிந்தர் சமாதியடைந்தபொழுது பல சாதகர்கள் துக்கமேலீட்டால் தன்னிலை இழந்தபொழுது, "நாம் துக்கப்படுவது பகவானை அவமதிப்பதாகும்" என்றார்.அவர் நம்மிடையேயிருக்கிறார், நம்மைவிட்டுப் போகவில்லை என நாம் அறியாததால் துக்கப்படுகிறோம் என்றார்.

ஒரே மகன் கடலில் மூழ்கியபொழுது போலீஸ் அதிகாரியான தகப்பனார் துக்கத்தில் மூழ்கிப் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாதபொழுது, அன்னையின் ஆசிபெற்றால் துக்கம் கரையும் என்றனர்.அன்னையைத் தரிசிக்க வந்தார்.அவரைத் தரையில் தம் நாற்காலியின் அருகே உட்காரவைத்து, வருகிறவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார் அன்னை.அவர் மனப்பாரம் நிமிஷத்திற்கு நிமிஷம் குறைய ஆரம்பித்தது.இடைஇடையே அன்னை அவர் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார்.துக்கம் முழுவதும் அரை மணியில் கரைந்துவிட்டது.துக்கம் சந்தோஷத்தின் மறுபுறம்.துக்கமான சூழ்நிலையில் அன்னையை இடைவிடாது அழைத்தால் துக்கம் கரையும்.தொடர்ந்து அழைத்தால் சந்தோஷமாக மாறும்.இது மனதைப் புண்படுத்தும்.எப்படி துக்கம் கொண்டாடும் பொழுது சந்தோஷமாக இருப்பது?தவறல்லவா?அன்னையை அழைத்தால் சைத்தியம் மேலெழும்.அவனுக்குத் துக்கமில்லை. இயல்பான சந்தோஷமுடையவன் துக்கமான இடத்தில் சைத்தியப் புருஷனின் சந்தோஷம், சந்தோஷமாக வெளிப்படாது.துக்கத்தை மீறி ஆளும் அமைதியாக மாறும்.

இந்நிலையில் எழும் சந்தோஷத்தைக் கண்டு மனம் புண்பட்டு, வெட்கப்படுவதற்குப் பதிலாக, அதைச் சூழ்நிலையில் உள்ளவரை எட்டும்படிச் செய்தால், அதாவது பிறருக்குக் கொடுத்தால், நம் துக்கம் அழிந்ததைப்போல் இதைப் பெறுபவர் துக்கமும் அழிவதைக் காணலாம்.வெட்கப்படுதல் சமூக உணர்ச்சிக்குக் கட்டுப்படுதலாகும். அதற்குக் கட்டுப்பட்டால், அங்கு எழும் பலன் - முடிவு - சமூகம் அனுமதிக்கும் பலனுக்குட்பட்டதாக இருக்கும்.மனம் புண்பட்டால், psychology மன உணர்வுக்குக் கட்டுப்படுவதாகும்.இதற்குரிய பலனையே இது அனுமதிக்கும்.சமூக உணர்வையும், மனஉணர்வையும் புறக்கணித்துவிட்டு, துக்கம் மாறி சந்தோஷமாவதைச் சூழலுடன் பகிர்ந்து கொண்டால், சமூகம் அனுமதிக்காததை, மன உணர்வு அறியாததை, துக்கத்திற்குரியவர் பலனாகப் பெறுவார்.குடும்பத்தில் சம்பாதிப்பவர் ஒருவர் இறந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம்.அங்கு வந்த ஒருவரால் துக்கசூழ்நிலை மாறியது என்றால், முழுவதும் மாறிய நிலையில் அவர் மரணத்தால் வருமானத்தில் ஏற்பட்ட நஷ்டம் ஈடுசெய்யப் படும்படி ஒரு நிகழ்ச்சி அங்கு நிகழும்.மனம் துக்கத்தைப் பாராட்டினால், துக்கத்திற்குரிய - மரணத்தால் கொண்டுவரப்பட்ட - நஷ்டம் இயல்பானது எனச் சூழல் ஏற்கும்.மனம் துக்கத்தைவிட்டு வெளிவந்தால், சூழல் மரணத்தால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து வெளிவரும்.அதை ஈடுகட்டும் வழி எழும்.

இறந்தவர் பக்தரானால், இறப்பதற்கு முன் அவருக்கு இத்தெளிவு இருந்தால், மரணம் அவரை நாடாது.அவர் விரும்பும் பொழுது மரணம் ஏற்படும்.மரணம் நாடாத அளவுக்கு பக்தியில்லை எனில், மரணத்திற்குரிய நஷ்டம் நாடாது.அடுத்த நிலையில் அதற்குரிய துக்கம் சூழாது.

************

625) மேலெழுந்தவாரியான மனம் (surface mind): எண்ணம், உணர்வு, செயலனைத்தும் மேல் மனதைச் சார்ந்தது. நாம் மேலெழுந்தே வாழ்கிறோம்.உடலும் அதற்குரியது.

மனம், உணர்வு, உடல் மூன்றும் சேர்ந்தது மேல் மனம்.

ஒரு கம்பனியில் ஆயிரம் தொழிலாளர் இருந்தாலும், கம்பனி எங்கு முதலீடு செய்கிறது, எங்குக் கடன் வாங்குகிறது, எவ்வளவு முதலீடுள்ளது என்பனவெல்லாம், இந்தத் தொழிலாளருக்குப் பங்கில்லை.பல கம்பனிகளில் தெரிந்து கொள்ளவும் முடியாது.Bata பாட்டா கம்பனி தனிப்பட்ட முதலாளியுடையது.அதனால் கம்பனிச் சட்டப்படி அவர்கள் வரவு, செலவை இன்கம்டாக்ஸ் ஆபீசுக்குத் தர வேண்டுமென்பதே சட்டம்.மற்ற கம்பனிகள்போல் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தமில்லை.இன்றுவரை பாட்டா கம்பனியின் டர்ன்ஓவர் எவ்வளவு என வெளியில் தெரியாது.வருஷத்தில் எத்தனை ஜதை செருப்பு விற்றது என்பதையே வெளியிடுகிறார்கள். குடும்பங்களில் குழந்தைகள் 20, 25 வயதுவரை குடும்பத்தின் அந்தஸ்து, சொத்து விபரம், அதன் இரகஸ்யங்கள் தெரியாமலிருப்பதுண்டு.அவை சில குடும்பங்களில் பெரியவர்களோடு நின்றுவிடும்.நேரம் வரும்பொழுது சொல்வார்கள்.அதுவும் தேவைப்பட்டதையே சொல்வதுண்டு.நேர் எதிரான குடும்பங்களுண்டு.நாளைக்கு அமெரிக்காவுக்கு கணவன் போகிறான் என்பதை இன்றுவரை அறியாத மனைவி ஒருத்தி.கணவனுக்கு என்ன சம்பளம் என்றும் அறியாதவருண்டு.எங்கு வேலை செய்கிறார் என அறியமுடியாத வாழ்வும் உண்டு.

இந்தியச் சர்க்காரின் நடவடிக்கைகள் அனைத்தும் பகிரங்க மானவை.பார்லிமெண்ட்டில் பேசப்படுகின்றன.சர்க்கார் கெஜட்டில் வெளிவருகின்றன.பேப்பரில் எழுதுகிறார்கள்.ஆனால் பொதுஜனம் அறிவது என்ன?நரசிம்மராவ் பிரதமர் என்பதுவரை அனைவருக்கும் தெரியும்.அதிகப்படிப்புள்ள நாடு அமெரிக்கா.ஒரு சர்வேயில் இரண்டாம் உலகயுத்தத்தைப்பற்றி 53% பதில் சொன்னவர்கள் அமெரிக்கா இரண்டாம் உலகயுத்தத்தில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டது என்றனர்!பொதுஜனம் மேலெழுந்த மனம் போலும், சர்க்கார் உள்மனம் போலும் ஆகும்.சர்க்காரில் நடப்பது வெளிப்படையானாலும், பொதுமக்கள் அறிய முயல்வதில்லை. இரகஸ்யமாகச் சர்க்காரில் நடப்பவை ஏராளம்.அவை வெளி வருவதில்லை.

நம் வீட்டில் 7 வயதுக் குழந்தைக்கு நம் வீட்டு விஷயங்கள், அந்தரங்கங்கள் எவ்வளவு தெரியுமோ, படிக்காத பொதுஜனம் சர்க்கார் வரவு செலவு எப்படி அறிவதில்லையோ அதேபோல் நம் மேல் மனம் "நம்மை", நம் ஆழ்ந்த வாழ்வை அறிய முடிவதில்லை. முடிந்த இடங்களில் முயல்வதில்லை. 

T.T. கிருஷ்ணமாச்சாரி தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சட்ட நிர்ணயப் பிரச்சினையைப்பற்றி சூடான விவாதம் நடந்தபொழுது அபிப்பிராயம் தெரிவித்ததை ரேடியோ ஒலி பரப்பியது.இரு கல்லூரி மாணவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.ஒருவருக்கு T.T.K. சொல்லியது பிடிக்கவில்லை, வயிற்றெரிச்சலைக் கிளப்பியது, அவரால் பொறுக்கமுடியவில்லை."யார் இந்த T.T.K. இவர் அபிப்பிராயத்தை ஏன் ஒலி பரப்புகிறார்கள்?யார் இவரை அழைத்தது?'' என ஆத்திரமாகக் கேட்டார்.அடுத்தவர் விஷயம் தெரிந்தவர்."T.T.K. constitution making body அரசியல் நிர்ணயச் சட்டத்தை இயற்றியவரில் ஒருவராயிற்றே.அவர் பேசாமல் வேறு யார் பேசுவது?'' என்று கேட்டார்.கல்லூரி மாணவர் நிலை இதுவானால் கல்லூரிக்குப் போகாதவர் நிலை என்ன?பள்ளிக்குப் போகாதவரும் ஓட்டுப் போடும் ஜனநாயகத்தில், அரசியலிலுள்ள கல்லூரி மாணவனுக்கு அரசியல் விஷயம் தெரியவில்லை என்றால், "பொதுமக்கள்'' நாட்டின் அந்தரங்கங்களை அறிவது எப்படி? மேல் மனமே நாம்.நம் உடலும், மனமும் சேர்ந்தது மேல் மனம் எனப்படுவது.வடதுருவத்தில் கடலினுள் பனிமலைகள் பிரமிட் உருவத்தில் மிதக்கும்.அவற்றின் நுனி மேலே தெரியும்.கப்பல்கள் அதில் மோதி சேதமடைவதுண்டு.சிகரம் மேலே தெரிந்தால், நம் கண்ணுக்குத் தெரியாமல் நீருள் அமிழ்ந்துள்ளது ஒரு பெரிய மலையாகும்.மேல் மனத்தை பனிமலையின் நுனிக்கு ஒப்பிடுவது வழக்கம்.நாம் மேல் மனமே மனிதன், புலன் வாழ்வே வாழ்வு என இருப்பது கண்மூடியான வாழ்வாகும்.கண்டதே காட்சி, கொண்டதே கொள்கை என்ற நிலையில் வாழ்பவர் மேல் மனத்தையே மனிதனாகக் கருதுவர்.ஆன்மீகத் திருஷ்டியுடையவர் மனிதஜீவனின் அகன்ற உருவத்தை அறிவர்.

*************

626. எண்ணம், உணர்வுக்குரிய சூட்சுமப் பகுதியுண்டு. அவை சூட்சும வாழ்வுக்குரியவை. சூட்சுமவாழ்வு ஆழ்ந்த வாழ்விலிருந்து வேறுபட்டது.எண்ணம் சூட்சுமமானதானாலும், அதற்கு ஸ்தூலமான பகுதி, சூட்சுமமான பகுதி என இரண்டுண்டு. சூட்சுமமான எண்ணத்திலும் அதற்குரிய சூட்சுமம் உண்டு.

இன்று உலகில் நடப்பவையெல்லாம், சூட்சும உலகில் முதலில் தயாராக வேண்டும்.பிறகு அங்கிருந்து ஸ்தூல உலகில் வெளிப்படுகிறது.அதனால்தான் மகாபுருஷர்கள் எதிர்காலத்தைச் சொல்லமுடிகிறது.அவர்களுக்குச் சூட்சுமப் பார்வையுண்டு.சூட்சும உலகில் உருவானவை அவர்கள் கண்ணுக்குத் தெரிவதால், அவர்களால் சொல்லமுடிகிறது.சூட்சும உலகு ஒன்று என்று இல்லாவிட்டால், முதலில் அங்கு விஷயம் உருவாகாவிட்டால், ஜோஸ்யம் என்ற சாத்திரம் ஏற்பட்டே இருக்க முடியாது.குறி சொல்ல முடியாது.இராமலிங்க சுவாமி வடலூர் கடலூர் ஆகுமென நூறாண்டுக்கு முன் சொன்னார்.நேரு சிறு பிள்ளையாக இருக்கும்பொழுது போட்டோவில் அவரைக் காண்பித்து இவரே இந்தியாவின் எதிர்காலத் தலைவர் என்று அன்னை சொல்லியதை அன்று எவராலும் நம்ப முடியவில்லை.செயலுக்கு சூட்சுமம் உண்டு என்பதால், இது முடிகிறது.

மனத்தைக் கவனிக்க முடியும்.அங்கு எண்ணம் உருவாவதைக் காணலாம்.அது முடிந்தால், அவர்கள் அதைத் தொடர்ந்து கவனித்தால், எண்ணம் சூட்சும மனதிலிருந்து மனத்துள் நுழைவதைக் காணலாம்.எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்வது பெரியது.எண்ணத்தைச் சூட்சும நிலையிலேயே சமர்ப்பித்தால் பலன் பெரியது.சமர்ப்பணத்தை மேற்கொண்டவர் ஓர் ஏக்கர் நிலம் வாங்க முயன்றார்.எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ததால் அதற்கான முயற்சிகள் தடையின்றி நடந்தன.எண்ணத்தைச் சூட்சும நிலையில் சமர்ப்பணம் செய்தார்.அது ஓர் ஆனந்தமான அனுபவம்.தன் எண்ணம் கூடிவரவேண்டும் என்பதைவிட சமர்ப்பணம் மேல்.சூட்சும நிலையில் சமர்ப்பணம் அதிலும் உயர்ந்தது.அவருக்கு அது பலித்தது.  ஓர் ஏக்கர் வாங்க பணம் திரட்ட முயன்றவர்க்கு 7 1/2 ஏக்கர் நிலம் அமைந்தது.சூட்சும நிலையில் சமர்ப்பணம் பெரும் பலன் அளிக்கும். சூட்சுமநிலையில் எண்ணத்தைக் காண முடிந்தால், விபத்து, வியாதி சூட்சுமநிலையில் தங்களைத் தெரிவிக்கும்.அதே நிலையில் சமர்ப்பணம் செய்தால் அவை விலகுவதைக் காணலாம்.

உணர்வும் அப்படியே.உணர்வைச் சமர்ப்பணம் செய்வதைப்போல் சூட்சும நிலையில் உணர்வைக் கண்டு சமர்ப்பணம் செய்வது பெருந்திறன்.இவை சகுனமாகவும் வெளியில் தெரியும்.உணர்வில் ஒருவர் எரிச்சலைக் கிளப்புவதைச் சூட்சுமநிலையில் கண்டு சமர்ப்பணம் செய்தால், அவரால் வர இருந்த தொந்தரவு விலகும். பிறகு அவர் எப்படித் தொந்தரவு செய்ய முயன்றார், எப்படி அது தடுக்கப்பட்டது எனத் தெரியவரும்.

ஆழ்ந்த மனம், சூட்சுமமனம் ஆகியவை வேறு. சூட்சுமமனத்திற்கு ஆன்மீகம் இல்லை.ஆழ்ந்த மனத்தில் ஆன்மிகம் உண்டு.

எண்ணமே சூட்சுமமானதாயிற்றே, அதன் சூட்சுமப்பகுதி என்றால் என்ன என்று கேள்வி எழலாம்.வானிலை இலாக்காவில் பெருமழை என 2"க்கு மேற்பட்டதைக் குறிப்பார்கள்.5", 9" மழையை அதிகமான பெருமழை என்பார்கள்.உயர்ந்ததில் மேலும் உயர்ந்ததை உன்னதம் என்பதுபோல் சூட்சுமத்திலும், அதிக சூட்சுமமும் உண்டு.மனம் என்பதற்கு அஸ்திவாரம் மூளை.அது ஸ்தூலமானது.மூளையில் உதிக்கும் எண்ணம் ஸ்தூலமானதாகவும் (gross), சிந்திக்கும் மனத்தில் உதிப்பவை சூட்சுமமான எண்ணமாகவும் கருதப்படும்.

***********

627) கரணங்கட்குரிய நிறைவு பூரண நிறைவாகாது. பரம்பொருள் மட்டுமே சிருஷ்டிக்கு முன் நிறைவுடையவன்.நாம் தேடும் நிறைவு அதைவிடப்  பெரியது.அது சிருஷ்டியிலுள்ள நிறைவு (refer 617, 633)

நாம் நாடுவது சிருஷ்டியின் நிறைவு, கரணங்களுடையதன்று.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கவி பாடிய காலத்தில் எல்லோருக்கும் ஓட்டுரிமையுமில்லை.இன்று எல்லோருக்கும் இந்நாட்டு மன்னரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.சுதந்திரம் பெற்றுக் கொடுத்த உரிமை இது.எல்லோரும் இந்நாட்டு மன்னராவது இதுவரை உலகச் சரித்திரத்திலில்லாதது.பூரணயோகம் மனிதனுக்குக் கொடுக்க முயல்வது அதுபோன்ற ஆன்மீக நிறைவு.

இறைவன், சச்சிதானந்தமாகி, பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து, பூமியையும் அங்குத் தாவரம், விலங்கு, மனிதனையும் சிருஷ்டித்தான். பிரபஞ்சத்திற்கு மேலே சுவர்க்கம், கோலோகம், சிவலோகம் ஆனந்தம், சித்தம், சத்தியமுண்டு.பிரபஞ்சத்தினுள் தெய்வம், மனிதன், விலங்கு, தாவரம், ஜடமுண்டு.பிரபஞ்சத்தினுள் உள்ள இன்பம் சிற்றின்பம், இங்கு பிறப்பு, இறப்புண்டு, இன்பதுன்பமுண்டு, இரவு, பகலுண்டு, பிரபஞ்சத்திற்கு மேல் இரவில்லை, இருளில்லை, மரணமில்லை, அங்குள்ளது பேரின்பம்.இதுவே நாம் அறிந்தது. மனிதன் வாழ்வில் பிறவியையும், சிற்றின்பத்தையும் ஏற்கலாம்.தவம் மூலம் விடுதலைபெற்று, மரணமிலா நித்தியத்துவத்தையும், பேரின்பத்தையும் பெறலாம்.பூவுலகிலில்லாத ஆன்மீகப் பூரணம் சுவர்க்கத்திலுண்டு.

இதைத் தாண்டிய நிலையில் உள்ள பூரணத்தை நாடுவது பூரண யோகம்.பூவுலகில் இருளை ஒளியாக்கி, மரணத்தை அழித்து, பொய்மையை விலக்கி, பேரின்பத்தை பூவுலகவாழ்வுக்குக் கொண்டுவந்தால், அது தெய்வீக இன்பமாகி, பேரின்பநிலையைக் கடந்து நிற்கும்.

ஆங்கிலேயர் நாட்டை ஆண்டு வந்தபொழுது, வைஸ்ராய் கவுன்சிலில், அஷ்ட்டோஷ்முகர்ஜி, சி.பி.இராமசுவாமி அய்யர், இராமசாமி முதலியார் போன்றவரிருந்தார்கள்.அது அன்னியன் கொடுத்த பரிசு.இன்று மத்திய மந்திரி சபையில் அனைவரும் இந்தியர்.பிரதமரும், ஜனாதிபதியும் இந்தியர்கள்.இது சுதந்திரம் பெற்று நாம் பெற்ற உரிமை.ஆன்மா மோட்சம்பெற்று பெறும் பேறு, வாழ்வை நீத்து, வாழ்வின் நிலையை மாற்ற முடியாத நிலையில், ஆன்மா தான் பெறும் பேறாகும்.இது சி.பி.இராமசுவாமியும், இராமசுவாமி முதலியாரும் மத்திய மந்திரிகளாக இருந்தது போலாகும். அன்னியனை விலக்கி, அனைவருக்கும் சுதந்திரம்பெற்று, சுதந்திரத்தின் உரிமையாக நரசிம்மராவும், நாராயணனும், மன்மோகனும் பதவி வகிப்பது, பூவுலகில் இருளை விலக்கி, பொய்ம்மையை அழித்து (எளிய பிரஜைக்கு எட்டாத பதவியை உரிமையாக அவனை உயர்த்திக் கொடுப்பதுபோல்) பேரின்பத்தைப் பூவுலகுக்குக் கொண்டு வருவது போலாகும்.

மனம், உடல், பிராணன், ஆன்மா கரணங்கள்.ஆன்மா மோட்சமடைந்தால், ஒரு கரணம் பெற்ற நிறைவு அது.இவை நான்கும் சேர்ந்தது ஜீவன்.ஜீவன் நிறைவு பெற வேண்டுமானால் பூவுலகில் பெற வேண்டும்.இறைவன் ஜடத்தை சச்சிதானந்தமாக்க முயன்று பெறும் இன்பம், பூரணம் இன்று உலகிலில்லை, சிருஷ்டியிலில்லை.

இன்று சிருஷ்டியில்லாத பூரணத்தைப் பரம்பொருள் நாடுகிறது. அது நிறைவேற ஜடம் சத்தியமாக மாற வேண்டும்.வாழ்வு சித்தமாகவும், ஆன்மா ஆனந்தமாகவும், மனம் சத்திய ஜீவியமாகவும் மாறவேண்டும்.அது ஜீவன், சத்திய ஜீவனாவதாகும்.ஒரு கரணம் பெறும் பூரணமில்லை அது.நான்கு கரணங்களும் சேர்ந்த ஜீவன் பெறும் பூரணம் அது.அந்தப் பூரணம் பரம்பொருளுக்கு, இதுவரை அவரறியாத ஆனந்தத்தைக் கொடுக்கும்.அதுவே பூரணயோக இலட்சியம்.

நாம் தேடும் நிறைவு பரம்பொருள் நாடும் நிறைவு.அது இதுவரை சிருஷ்டி காணாதது.அந்த நிறைவை ஜீவன் மட்டுமே பெறமுடியும். ஆன்மாவானாலும், ஒரு கரணம் என்பதால் - பகுதி என்பதால் - அதைப் பெறமுடியாது.

தொடரும்.

Comments

யோக வாழ்க்கை விளக்கம் IV621 -

யோக வாழ்க்கை விளக்கம் IV

621 - 1st heading

Almost all the quotation marks are double in the beginning and single in the end.

Para No.2, line nos. 3 &  4 extra space. 

Para No.4, line nos. 3 &  4 extra space

622 - 2nd heading

Para No.3, line nos. 3 &  4 extra space

Para No.3, line no. 8 - அüத்தது. - அளித்தது 

Para No.3, line no. 11 - ழ்ன்ப்ங் - rule

Para No.3, line no. 26 நமக்கüத்தது - நமக்களித்தது

Para No.3, between last line and next point extra space is there.

623 - 3rd heading

Para No.2, line nos. 3 &  4 extra space

Para No.2, line no. 18 - இருளி ருப்பது - இருளிலிருப்பது

Para No.3, line no. 5 & 6 extra space.

624 - 4th heading

Para No.1, line No.2 & 3 extra space.

Para No.2, line no.7 - கைவத்து - கைவைத்து

Para No.2 - last line - வெüப்படாது - வெளிப்படாது

Para No.3 - line No.9 & 10 extra space.

625 - 5th heading -  line no. 4 - from மனம், etc. next sentence.

Para No.1, line No.5 & 6 extra space

Para No.1, line No. 10 - குடும்பங்கüல் - குடும்பங்களில்

Para No.1, line No. 15 - குடும்பங் களுண்டு - குடும்பங்களுண்டு

Para No.2, line No. 9 -  வெளி ப்படையானாலும் - வெளிப்படையானாலும்

between last line of para No.3  & 1st line of para No.4 extra space. 

626 - 6th heading - line no.2 & 3 -extra space.- line No.3 -சூட்சுமமான தானாலும்,

சூட்சுமமானதானாலும்,  

Para No.2, line No.5 & 6 extra space

Para No.2, line No. 13 - அüக்கும். - அளிக்கும். 

627 - 7th heading - line no.3 & 4 extra space

Para No.4 - line No.4 & 5 - extra space.

 

 

 

 

 

 



book | by Dr. Radut