Skip to Content

அன்பர் அனுபவம்

அனுபவக் கட்டுரை

அன்பர் அனுபவம்

அணையாத ஆர்வக்கனலை அன்பர்கள் நெஞ்சில் உருவாக்கும் அன்னை:

ஆன்மீகம் என்றால் என்னவென்றே அறியாத நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான் சிறு வயதில் இருந்து விநாயகர், அன்னைப் பராசக்தி மற்றும் எல்லாத் தெய்வங்களையும் வழிபட்டு வந்தேன். நான் ஆறாம் வகுப்புப் படித்தபொழுது, பள்ளியிலிருந்து  திரும்பி வரும் வழியில் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அந்தப் பேப்பரைப் படிக்க ஆரம்பித்தேன். அதில் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளின்  ஒரு சிறு பகுதி இருந்தது. அதைப் படித்தவுடன் என்னுள் ஒரு பொறி பற்றி என் தேடுதலைத் தொடங்கி உள்ளேயும், வெளியேயும் அலைந்தேன். ஸ்ரீ இராமகிருஷ்ணரின் புத்தகங்களையும், ஸ்ரீ விவேகானந்தர் புத்தகங்களையும் மிக ஆவலாகத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பயனாக அந்தத் தேடுதலில்  இருந்த ஆவல் பன்மடங்குப் பெருகியது. மந்திரங்கள் மூலமாக அன்னைப் பராசக்தியை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் பல குருமார்களைத் தேடி தீட்சை பெற்றேன். ஸ்ரீ வித்யா உபாசனை, மற்றும் குண்டலினி பயிற்சியும் மேற்கொண்டு, ஸ்ரீ இராமகிருஷ்ணர் மடத்தில் தீட்சையும் பெற்றேன். அங்கே சில அனுபவங்களை அடைந்தேன்.

1973-இல் நவம்பர் 18ஆம் தேதி  பாண்டிச்சேரி வானொலியில் ஸ்ரீ அன்னை மகாசமாதி ஆனதையும், ஸ்ரீ அன்னையின் திருவுடல் அன்பர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் செவியுற்றேன். அதைக் கேட்டபொழுது என்னை ஈன்ற தாயை இழந்தாற்போல் துக்கம் மேற்பட்டது. மேலும் ஒரு மணி நேரம் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. பாண்டி சென்று அன்னை அவர்களின் திருவுடலைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் தனியே சென்று வர துணிவு இல்லாத காரணத்தால் அப்பொழுது செல்ல முடியவில்லை. என் ஆன்மிகப் பாதையில் ஸ்ரீ அன்னை முதலிலேயே  வந்துவிட்ட பொழுதும், அவர் தம் அழைப்பு புரியாமல் வேறு தீட்சைகளையும், உபாசனைகளையும் நாடி அலைந்தேன். நான் நீண்ட நாட்கள் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் புத்தகங்களைப் படித்து அவர்பால் ஈர்க்கப்பட்டேன். அவரது அமுத மொழிகள் அடங்கிய புத்தகங்கள் என் உடன் பிரியா உடமைகளாக இருந்தன. ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பெரிய திருவுருவப் படத்தை எனது அறையில் வைத்து அவருடன் மானசீகமாக உரையாடுவேன். எந்த ஒரு விஷயமானாலும் அவரிடம் கூறிவிட்டுத்தான் செய்வேன். சில சமயங்களில் அவருக்கு விசிறியால் விசிறுவேன். மலர் அஞ்சலி செலுத்துவேன். இப்படி எனக்குள் ஸ்ரீ இராமகிருஷ்ணர் அக்னி ஜுவாலையாக இருந்தபொழுதும் நான் சிறிது சிறிதாக ஸ்ரீ அன்னையால் ஈர்க்கப்பட்டேன்.1978-ஆம் ஆண்டு, அன்னையின் எந்தப் புத்தகங்களும் கிடைக்காமல் இருந்த சமயம் நான் அன்னையிடம் வேண்டிக்கொண்டது பின் வருமாறு: "ஸ்ரீ இராமகிருஷ்ணருக்கு ஒரு மகேந்திரநாத் கிடைத்ததுபோல் உங்களுக்குத் தமிழ்நாட்டில் ஒருவர் கிடைக்கவில்லையா?'' எனக் கேட்டேன். பின்னர் 1986ஆம் ஆண்டு நான் ஒரு பெரியவர் வீட்டிற்குச் சென்றிருந்த சமயம் அங்கு வந்த சீடர் ஒருவர் "அன்னையின் தரிசனம்'' முதல் பாகம் புத்தகத்தை, கையில் வைத்திருந்தார். என் ஆவலைக் கண்ணுற்ற அவர் அப்புத்தகத்தை என்னிடம் கொடுத்துப் படித்துவிட்டுக் கொடுங்கள் என்றார். நானோ இப்புத்தகத்தின் அட்டையைக் காட்டுங்கள் போதும். நான் கடையில் வாங்கிக் கொள்வேன் என்று கூறி திருப்பிக்கொடுத்து விட்டேன். ஆனால் சென்னையிலும், மற்ற இடங்களிலும்  அந்தப் புத்தகத்தை வாங்கச் சென்ற இடங்களிலெல்லாம் அப்புத்தகம் என் கைகளுக்குக் கிடைக்கவில்லை. பின்பு 1987- ஆம் ஆண்டு ஒரு நாள் என் அத்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தூங்கிக் கொண்டு இருந்தேன். திடீரென்று விழிப்பு வந்து பார்த்தபொழுது அருகில் "அமுதசுரபி'' த்திரிகை இருந்தது. அதை எடுத்துப் படித்தபொழுது அதில் அன்னை பற்றிய கட்டுரையும், "எல்லாம் தரும் அன்னை'' கிடைக்குமிடம் ஆகிய விவரங்களும் இருந்தன. அதன்படி திரு.வாசவன் அவர்கள் வீட்டிற்கு "எல்லாம் தரும் அன்னை'' புத்தகம் வாங்கச் சென்றேன். அப்பொழுது அவர் என்னிடம் அன்னையை நான் எப்படி அறிந்தேன், என்ற விவரங்களைக் கேட்டார். நான் அவரிடம் அமுதசுரபியில் அன்னையைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த விபரம், மற்றும் நான் அன்னையின் தரிசனம் முதற்பாகம் புத்தகத்தை ஒருமுறை கண்டது எல்லாவற்றையும் கூறினேன். அதற்கு அவர் அன்னை பக்தர்கள் வருந்தக்கூடாது என்று கூறி, அன்னை தரிசனம் புத்தகம் ஒன்றை எனக்கு விலைக்குக் கொடுத்தார்கள். அதைப் பெற்றுக் கொண்ட பொழுது எனக்கு ஏதோ என் அன்னையின் மடியில் தலையை வைத்து ஓய்வு எடுப்பதுபோலச் சுகமான உணர்வைப் பெற்றேன். அதே வருடம் செப்டம்பர் மாதம் என் நண்பர் ஒருவரின் குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் முதலில் அன்னையிடம் விஷயத்தைக் கூறிவிட்டுப் பின்னர் நண்பரின் குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகிவிட்டபடியால் எனக்கு அப்பொழுது தீட்சை கொடுத்த குருவிடம் சென்று விஷயத்தைக் கூறி என் நண்பனுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு அந்த குரு "கர்மவினையைத் தீர்க்கமுடியாது. உனக்கென்றால் உதவ முடியும். மற்றவர்களுக்கு என்னிடம் கேட்காதே'' என்றார். எனக்கு அப்பொழுது என் நண்பனின் குழந்தையைக் காப்பாற்றவேண்டும் என்ற உணர்வுதான் இருந்தது. அந்தக் குருவிடம் அப்பொழுதே விடைபெற்றுக்கொண்டு வேலைக்குச் செல்லாமல் என் வீட்டிற்கு வந்து பூஜை அறையில் அன்னை முன் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன். "அன்னையின் தரிசனம்'' புத்தகத்தில் கர்மவினையை அன்னை தீர்ப்பார் என "விதிக்கு விதி செய்யும் அன்னை'' என்ற கட்டுரையில் படித்து இருந்தேன். அதை அன்னையிடமே கூறி நீங்கள் அந்தப் பையனின் கர்மவினையைத் தீர்க்க வேண்டும் என வேண்டினேன். பின்னர் நீங்கள் வாடாமல்லிகை இரண்டாகிலும் கடையில் வாங்கிப் பையனின் தலையருகில் வையுங்கள். ஒன்றும் காமல் அன்னை காப்பாற்றி விடுவார் என்று கூறினேன். தினமும் பூ கொண்டுவரும் பெண்மணி அன்று கஸ்தூரிப்பூ கொண்டுவந்தார். அதைத் தட்டில் கொட்டிய பொழுது உடன் இரண்டு வாடாமல்லிகைப் பூக்கள் இருந்தன. அதே சமயம் இது சம்பந்தமாகப் பாண்டிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். பதில் கடிதமும், blessing packet -உம் வந்து சேர்ந்தன. அப்பொழுது என் நண்பர் பூக்கடைக்குச் செல்வதற்கு என்னிடம் சொல்லிவிட்டுப் போவதற்காக வந்தார். அவரிடம் அந்த இரண்டு வாடாமல்லிகைப் பூக்களையும், blessing packet ஐயும் கொடுத்து ஆஸ்பத்திரிக்குச் சென்று அந்தப் பையனிடம் கொடுங்கள் என்று கூறினேன். அப்பையன் சிறிது, சிறிதாகக் குணமடைந்து பத்துநாட்களில்  ஓரளவு குணமடைந்தான். ஆனால், அவன் கை கால்கள் தக்க செயல்பாட்டுடன் இயங்கவில்லை. ஒரு மூன்று மாதங்கள் நண்பரும், அவர் மனைவியும் தொடர்ந்து அன்னையிடம் பிரார்த்தனை செய்தபின் நண்பர் மகன், பூரண குணமடைந்து இன்று நல்ல ஆரோக்கியத்துடன், இருக்கிறான்.

ஆசிரமம் சென்றேன். உள்ளே நுழைந்தவுடன் தாய் தன் குழந்தையை அரவணைக்க அழைப்பதுப்போல் என்னை அன்னை அழைத்தார். நான் உள்ளே சென்று சமாதியை நமஸ்கரித்து எழுந்தேன். அந்த ஸ்பரிசத்தை, யுகாந்த காலமாகத் தவித்த தவிப்பு என் ஆன்மாவிற்குக் கிடைத்த பரிசாகப் பாவித்து பெரு மகிழ்ச்சி கொண்டேன். எனக்கு இனம்புரியாத, செய்வதறியாத ஒரு சந்தோஷம் உள்ளிருந்து பொங்கி என் ஜீவன் முழுவதும் பரவியது. என் கண்களில்  நீர்த்துளிகள்  பனித்தன. நான் நிலையறியாத தடுமாற்றத்துடன் மீண்டும், மீண்டும் நமஸ்கரித்தேன். அதுவரை என் மனதில் கல்கத்தா பேலூரில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணர் மடத்திற்குச் செல்வது எனது குறிக்கோளாக இருந்தது. இந்த என் எண்ணத்தை மாற்றி எனது பழைய விஷயங்களை எல்லாம் ஒரு க்ஷணநேரத்தில் வெளியில்  கொணர்ந்து என் ஆன்மாவைக் குளிப்பாட்டித் தூய்மைப்படுத்திய அந்த நேரம் எனக்கு இறைவன் வந்த தருணமாக அமைந்தது. 

"அன்னையின் தரிசனம்'' புத்தகம் படித்தபின் அதை எழுதியவரை தரிசனம் செய்ய வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டு, பாண்டி சென்று ஆசிரமத்தில் அவர்களைப்பற்றி விசாரித்தேன். அங்கு யாரும் அவர் பற்றிய விவரங்களைக் கூறவில்லை. அன்னையின் அருள் என்ற புத்தகம் வெளியிடும்  கவரில் அவரைப் பற்றி விபரம் அறிந்து அவரைச் சந்திக்கலாம் என நினைத்து அப்புத்தகத்தில் இருந்த 4, Venkatta nagar Extn. என்ற முகவரிக்கு நடந்தே வந்தேன். அங்கு வந்தவுடன் அங்குள்ளவரிடம் விசாரித்தேன். அப்பொழுது அவர் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு permission  வாங்கி என்னை உள்ளே அனுப்பினார்.

என் தங்கையைத் திருமணம் செய்து கொடுத்த இடத்தில் தங்கை மிகவும் கொடுமையை அனுபவித்து வந்தாள். மாமியார் கரித்துக்கொட்டி தொந்தரவு கொடுத்து வந்தார். நான்கு வருடங்களாக என் தங்கையும் எங்கள் வீட்டிற்கு வரவில்லை. மிகவும் மனம் வருந்தியிருந்த நேரத்தில், பகவான் திருவுருவப்படம் வந்தது. அதை வீட்டில் மாட்டிய நேரம் போன கரண்ட் திரும்ப வந்தது. அதேநேரம் தங்கையும், அவள் கணவரும் வந்தார்கள். Aug.15th 1989 ஆம் ஆண்டு நானும், தங்கை சங்கரியும் பகவான் பிறந்த நாளை முன்னிட்டுத் தரிசனத்திற்குப் பாண்டிச்சேரிக்குச் சென்று, தங்கைக்குக் குழந்தை பிறக்க அன்னை ஆசி வழங்க வேண்டினேன். சிறுவயதில் இருந்து அவளுக்கு இதயம் பலவீனமாக இருந்து வந்தது. கருத்தரித்தால் இதயத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர் கூறியபொழுதும், அவற்றை எல்லாம் அன்னையிடம் சமர்ப்பணம் செய்து வந்தோம். அதன்பிறகு 6th Sep '90 அன்று தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது. நான் ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபொழுது பகவானும் ஸ்ரீ அன்னையும் என் தங்கையின் இருபக்கங்களிலும் நின்றவாறு தங்கையின் இதயத்தை ஒரு கையாலும், தலையை மறுகையாலும் தொட்டபடி தங்களின் பொன்னொளியை அவள் டலைச் சுற்றி ஒரு வட்டமாக அமைத்து இருந்ததைத் தரிசித்தேன். ஆனந்தப் பரவசத்தில் சில நாட்கள் இருந்தேன். இதை, பாண்டிக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்து என் நன்றியைக் காணிக்கையாக்கினேன்.

1990-இல் என் அக்காவின் கணவரிடம்  வேலை செய்து  கொண்டிருந்த வேலையாள் ஒருவர், அவருக்குத் தொந்தரவு கொடுத்து வந்தார். ஒழுங்காக வேலை செய்யும் தொழிலாளி  ஒருவரிடம் சண்டை போட்டு அவரை விலக்கிவிட்டு, தானும் வேலை செய்யாமல் அவருக்குப் பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை என்னிடம் அவர் தெரிவித்தார். நான் வழக்கம்போல் இதை ஸ்ரீ அன்னையால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்று எண்ணி, ஸ்ரீ அன்னையிடம் பிரச்சனையைச் சொல்- "பொறுப்பை அவரிடம் விடுங்கள். உடனே சரியாகிவிடும்'' என்றேன். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அன்னை மறுநாளே அந்தப் பிரச்சனைக்குரிய தொழிலாளியைத் தானே விலகச் செய்தார். யாரும் யாருடனும் பேச்சு நடத்தவில்லை. இந்த அற்புதம் அன்னையால் நிகழ்ந்தது. அன்றிலிருந்து  அவர்கள் அன்னையை ஏற்றுக் கொண்டனர்.

1986- ஆம் ஆண்டு நாங்கள் ஒரு கம்பனிக்கு sub contractor ஆகச் செயல்பட்டு வந்தோம். எனக்குப் பார்ட்னராக இருந்தவர் மிகவும் முன்கோபக்காரர். எல்லோரையும் அடிக்கடி கடிந்து கொள்வார். எங்களிடம்  வேலை பார்த்து வந்த ஆட்களுடன் சண்டைப் போட்டு அவர்கள் மனம் வருந்தும்படிச் செய்வார். இதனால் எல்லோருக்கும் மிகவும் சங்கடமாக இருந்தது. குறிப்பாக, எனக்கு பார்ட்னர் என்ற முறையில் மிகவும் கஷ்டமாக இருந்தது. இவர் விஷயத்தை அன்னைக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தேன். எனக்கு உடன் பதில் வந்தது. அதில் எனக்குக் கிடைத்த விஷயம் என்னவென்றால், பார்ட்னர் முன் கோபக்காரர் என்றால் அக்குணம் நம்மிடம் இருக்கிறது என உணர வேண்டும். அதே போல் அந்த பார்ட்னர் சண்டை சச்சரவுக்குக் காரணமாக இருந்தார் என்றால் அந்தக் குணம் நம்மிடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் விஷயம் மாறும் என்று இருந்தது. அதன்படி என்னுடைய பார்ட்னரின் குணங்கள் எல்லாம் என்னிடம் முழுமையாக அப்படியே இருக்கின்றன என்பதை உணர்ந்த அதே நிமிடம் அந்த பார்ட்னரின் பழக்க வழக்கங்களில்  நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்குப் பின் அதே பார்ட்னருடன் 13 வருடங்களாகத் தொழிலில்  ஈடுபட்டு வந்தேன்.

ஒரு முறை என் குடும்பத்தினர் எல்லோரும் திருப்பதிக்குச் செல்வதற்குக் கிளம்பியபொழுது என்னை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். திருப்பதி சென்று, அங்கு நான் கோயிலுக்குச் செல்லாமல் guest house - இல் தங்கி இருந்தேன். திரும்பி ஊர் வந்தவுடன் மறுநாள் factoryக்குச் சென்றேன். அப்பொழுது பணி புரியும் இடத்தில் 20mm பெரிய சைஸில் உள்ள plate கிரேனில் தொங்கி கொண்டு இருந்தது. அதன் அருகில் நான் வேலை செய்து கொண்டு இருந்தேன். திடீரென்று, கிரேனில் இருந்த plate தனியே வெளியில் கழன்று வந்து கீழே விழுந்தது. அருகில் வேலை செய்து கொண்டிருந்த நான் எப்படி அங்கிருந்து நகர்ந்தேன் என்பது புரியவில்லை. என்னை அவ்விடத்திலிருந்து  தப்பிக்க வைத்தது அன்னையின் அருளேயின்றி வேறில்லை.

திருப்பதி சென்று வந்த இரண்டாம் நாள் என் சின்ன மகனுக்குச் சீரியஸான நிலைமையில் IC unit- இல் admit செய்து இருந்தோம். டாக்டர்கள் 48 மணி நேரம் கழித்துத்தான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறினார்கள். கை, கால்கள் செயலற்று கோமா stage-இல் இருந்தான். நானும், எனது மனைவியும் சென்று அவனைப்பார்த்து அவன் மடியில் மகாகாளி  blessing packet வைத்துவிட்டு வந்தோம். வைத்த உடன் 5 நிமிடம் கழித்து கண் விழித்து, blessing packet ஐத் தானாகவே எடுத்து வைத்துகொண்டு சுய நினைவிற்கு வந்தான். டாக்டர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். டாக்டர் "நீங்கள் ஆசிரமம் போகிறவரா?'' என்று கேட்டார். அந்தத் தெய்வத்தின் செயல்தான் உங்கள் பையனைக் காப்பாற்றி உள்ளது. நீங்கள்  பையனை அழைத்துச் செல்லலாம் என்று கூறினார். இந்நிகழ்ச்சியிலும் அன்னையின் கருணையால்தான் பையன் பிழைத்தான்.

எங்களுக்குச் சொந்தமான இடம் ஒன்று 3/4 கிரவுண்ட் இருந்தது. அதில் ஒரு வீட்டைக் கட்டி எனது தந்தையார் தன் நண்பரை குடியமர்த்தினார். வாடகை ஏதும் வாங்கவில்லை. நண்பரின் கஷ்டமான குடும்பச் சூழ்நிலை அவரிடம் வாடகை கேட்க என் தந்தை விருப்பப்படவில்லை. அப்பாவின் நண்பர் காலமானவுடன் அவர் மனைவியும், 3 மகன்களும், மருமகள்களும் அந்த வீடு தங்களுடையது என்று கூறி கோர்ட்டில் வழக்குப் போட்டனர். கடந்த 8 வருடங்களாக அந்த வழக்கு நீடித்தது. என் தந்தை 8 ஆண்டுகளாகப் பட்ட துன்பம் எழுத இயலாது. கோர்ட் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமானது. அவர்களைக் காலி செய்ய நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். வீட்டைப் பிரித்து கற்கள், ஓடுகள் கதவுகள் அனைத்தையும் அவர்களுக்கே கொடுத்துவிட்டோம். அப்படியும் அவர்கள் அந்தப் பொருள்களை அம்மனையின் முன்புறம் உள்ள ரோட்டில் போட்டுக்கொண்டு தொல்லை கொடுத்தனர். நாங்கள் காவலுக்குச் சென்றால் தங்கும் நோக்கோடு, எங்கள் செலவில் ஒரு குடிசையை அம்மனையில் கட்டினோம். நானும், என் தம்பியும் இரவில் அங்குத் தங்கிக் காவலிருந்தோம். அக்குடிசையில் இருந்த ஒரே ஒரு பொருள் ஸ்ரீ அன்னையின் படம் மட்டுமே. அவரே எங்களுக்குத் துணை. மனையைச் சுற்றி முள்வேலிபோட்டோம். இப்படிக் காவல் தொடர்ந்தது. எல்லா விதங்களிலும் தோற்றும், அவர்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படையாகக் காட்ட 40 அடியாட்களை ஏற்பாடு செய்து ஒரு நாள் இரவு நானும், என் தம்புயிம் காவலுக்காக குடிசையில் உள்ளே இருந்தபோது எங்களைத் தாக்குவதற்குக் காத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் தாக்குதல் தொடர்ந்தது. அவர்கள் மனைக்கு வாராமல் ரோட்டில் நின்று கற்களால் எங்கள் குடிசையைத் தாக்கினர். சரமாரியான கற்கள் வந்து வீழ்ந்தபொழுது நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். மனம் ஸ்ரீ அன்னையைப் பிரார்த்தித்துப் பாதுகாப்பு கேட்டது. ஸ்ரீ அன்னையின் மகத்துவத்தை நானறிவேன். ஆகவே மனத்தில் பயம் இல்லை. மழை பெய்வதுபோல் சாலையில் இருந்து கற்களால் தாக்கினார்கள். நிலைமை மோசமானதும் வேறு வழியின்றி நாங்களும் கற்களால் எதிர்த்துத் தாக்கினோம். எங்கள் மீது சுமார் 10, 12 கற்கள் வீழ்ந்தன. ஆனால் ஸ்ரீ அன்னையின் அருளால் ஒரு சிறு காயம்கூட ஏற்படவில்லை. இதைக் கண்ட எனக்கு ஸ்ரீ அன்னையின் அற்புதத்தையே நேரில் காண ஒரு வாய்ப்பு ஏற்பட்டது என எண்ணினேன். பின்னர் அவர்கள் சற்று ஓய்ந்து திரும்பினார்கள். நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் தகவல் கொடுத்தோம். அப்போது அங்கு எதிரியின் வக்கீல் இருந்தார். அவர்கள் திட்டம் புரிந்தது. அவர்கள் தாக்கிவிட்டு நாங்கள் தாக்கியதாகப் புகார் கொடுக்க வக்கீலுடன் முன்னேற்பாடாக வந்துள்ளனர். வழக்கின் தன்மையையும், பதட்டமான சூழ்நிலையையும் புரிந்துகொண்ட போலீஸார், அவர்கள் பக்கத்தில் 3 பேர்களை கைது செய்து பாதுகாப்பில் வைத்தனர். எங்கள் இருவரையும் கூட பாதுகாப்பில் வைத்துவிட்டனர். சிறைக்குள் இருந்த போது என் மனம் "எனக்கு ஏன் இந்த நிலை'' என்று கதறியபோதிலும், இது அவமானமாகப் பட்டபோதிலும் ஸ்ரீ அன்னையை வேண்டி வந்தேன். கண்களை மூடினால் புருவ மத்தியில் ஒரு வெள்ளத்தில் ஸ்ரீ அன்னை தோன்றுகிறார். "என்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீ சும்மா இரு'' என்று கூறுவார்கள். நான் என் அண்ணன் வந்து என்னை விடுவிக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தேன். பொழுது விடிந்தது. விவரமறிந்த என் குடும்பத்தினர் வந்து கூடி விட்டனர். போலீஸார் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. சரியாக 1 மணி அளவில் என் அண்ணன் தன் நண்பருடன் போலீஸ் ஸ்டேஷன் வந்தார். அவர் பேச்சைக் கேட்டு அதன் பின் என்னை விடுவித்தனர். எதிராளிகளையும்   எச்சரித்து, போலீசார் விடுவித்தனர். அத்துடன் அவர்கள் தொல்லை தீர்ந்தது. ஆனால் மனதுக்குள் மட்டும் எனக்கு ஏன் இந்த அவல நிலை என்று கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.

மறுநாள் என் பிறந்த தினம், ஆகவே பாண்டி சென்று ஸ்ரீ அரவிந்தர் அறையைத் தரிசித்து பிரசாத பாக்கெட் வாங்கி வந்தேன். மனம் அமைதி அடைந்தது. உறவினர்கள் உன் தெய்வம் இப்படிச் செய்து விட்டதே என்று கூறினார்கள். அதற்கு நான் "முன்பைவிட இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்ரீ அன்னையிடம் திடமான பக்தியும், நம்பிக்கையும் கோடி கோடி மடங்கு பெற்றேன்'' என்று உண்மையான என் மனநிலைமையைக் கூறினேன். ஏனென்றால் எதிரிகளின் தாக்குதலுக்கு மீண்டும் ஆளாகும் அபாயத்தை விலக்கி police lock up -இல் நானோரிரவு இருப்பதுதான் எனக்குச் சிறந்த பாதுகாப்பென்று அன்னையே முடிவுசெய்து என்னை உள்ளே வைத்ததாக என் மனதிற்குப் பட்டது.

சென்னையில் தி.நகரில் 1995 மார்ச் மாதத்தில் சொசைட்டியால் பொது தியான மையம் ஆரம்பித்த பொழுது எனக்கு அங்குச் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிக் கிடைத்த வாய்ப்பு எனக்கு அன்னை தந்த அரிய பொக்கிஷம். தினமும் காலை 6 மணிக்குத் தியானமையத்தைத் திறந்து சுத்தம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு தினமும் அன்னைக்குச் செய்யும் சேவை அன்றைய தினத்திற்குரிய புத்துணர்ச்சியை எனக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. இனம் புரியாத தேடுதல் அலைந்து கொண்டிருந்த எனக்கு அன்னை என்ற மந்திரச் சொல் என்னை நின்று திரும்பிப் பார்க்க வைத்தது.

- S.கண்ணன், சென்னை

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

காரியம் முடிந்து வெகுநாளான பின் எப்படி முடிந்தது என்று தெரிவதில்லை. ஆனால் காரியம் ஆரம்பிக்கும் முன் எப்படி முடியும் என்றறிய அவா எழும்.

 

*********

Comments

 அன்பர் அனுபவம் Para 12 - 

 அன்பர் அனுபவம்

 

Para 12 -  Line 2  -  ழுமையாக  -   முழுமையாக

motnir

அன்பர் அனுபவம்   Para 7 -

அன்பர் அனுபவம்
 
Para 7 - Line 4       - கவரியில் - கவரில்
Para 8 - Line 12     - இருபக்கங்கüலும் -  இருபக்கங்களிலும்
Para 16 - Line 14   -  வெüப்படையாகக் - வெளிப்படையாகக்



book | by Dr. Radut