Skip to Content

04. முயற்சி சிறியது, பலன் பெரியது

முயற்சி சிறியது, பலன் பெரியது

கர்மயோகி

வாழ்வானாலும், யோகமானாலும் இலட்சியவாதிகள் தாங்கள் ஏற்றதைச் சிறப்பாகச் (perfect) செய்வார்கள். சிறப்பாகச் செய்வதன் முன் முழுமையாகச் செய்ய வேண்டும். எந்த வேலையிலும் பல பகுதிகள் உண்டு. சிலவற்றை மட்டும் ஏற்பது சிறப்புக்கு வழி செய்யாது. எல்லாப் பகுதிகளிலும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் (disciplines) முழுமையாக ஏற்று, சிறப்பாகச் செய்வதே இலட்சியவாதிக்கு அழகு.

கீதை கூறும் கட்டுப்பாடுகள் பல. சாதாரண மனிதனைக் கருதும் பொழுது பலன் கருதாமல் செயல்படுவது, மோட்சத்தை விழைவது, சர்வ தர்மத்தையும் கைவிடுவது போன்றவை எட்டாக் கனிகள். அதனால் இப்பெரிய விஷயங்களை சொல்பமாக அப்பியாசம் செய்தாலும், பலன் மிகப்பெரியது என பகவத்கீதை கூறியது.

தமிழ்நாட்டு மக்கள் அன்னையையும், பகவான் ஸ்ரீ அரவிந்தரையும் அறிய வேண்டும் என்ற என் அவா 1958 முதல் 1980 வரை அவாவாகவேயிருந்தது. 1980இல் அமுதசுரபியில் எழுதிய கட்டுரைகள் 1985 வரை தினமும் ஓரிரு தமிழ் அன்பர்களை சமாதிக்கு வரவழைத்தது. 1986இல் அமுதசுரபிக் கட்டுரைகளை "அன்னையின் தரிசனம்''* என்ற பெயரில் வெளியிட்ட பொழுது 1000 பிரதிகள் 2 மாதத்தில் விற்றன. அது முதல் அக்கட்டுரைகளை "எல்லாம் தரும் அன்னை'' என்ற தலைப்பிலும் உடனே வெளியிட்டோம். 1986 முதல் 1900க்குள் தமிழ்நாட்டில் எல்லா மூலைமுடுக்குகளிலும் அன்னையின் படம் காட்சியளித்தது. நான் முக்கியமாகக் கூறிய செய்தி, "இதுவரை பலிக்காத பிரார்த்தனை பலிக்கும்".

அது முதல், தரிசனங்களுக்கும், இதர நாட்களிலும் ஆயிரக்கணக்காகத் தமிழ் அன்பர்கள் சமாதிக்கு வந்து தரிசனம் செய்தனர். எனது குறிக்கோள் அந்த அளவில் பூரணமாக நிறைவேறியது. அடுத்த கட்டத்தில், விரும்பும் உரிமை சரியா என நான் சிந்தனை செய்தபொழுது பல ஆண்டுகளாக, 1986 முதல் 1996 வரை நான் அன்பர்கள் வாழ்வில் கண்டவை, பகவான் கூறியவற்றை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தது, பிறகு வெளிவந்த அன்னை Agenda அஜெண்டாவில் எழுதியவை, ஆழ்ந்த பக்தியுள்ள அன்பர் வாழ்வில் நடப்பவை, இவற்றைக் கண்ணுற்று, நான் வந்த முடிவுகள்:

  • பகவான் 1930 வாக்கில் பேசிய பொழுது ஆசிரமத்தைக் குறிப்பிட்டு, "இது போன்ற ஸ்தாபனங்கள் அதன் ஸ்தாபகருக்குப்பின் மூடப்பட வேண்டும்'' என்று பேசியிருக்கிறார்.
  • 1972இல் அன்னை பேசியது வெளிவர நீண்ட நாளாயிற்று. "அன்பர்கள் இனி ஆசிரமம் வந்தால் அவர்கள் வாழ்விலுள்ள சிரமங்கள் வளரும். இருந்த இடத்திலேயே யோகத்தை மேற்கொள்வது நல்லது'' எனக் கூறியுள்ளார்.
  • ஆழ்ந்த பக்தியுள்ளவர் சமாதிக்குப் போக முயன்றால், தடை பலமாக எழுகிறது. ஒருவருக்கு ஆசிரமத்திற்கு அருகிலேயே விபத்து ஏற்பட்டது.
  • அப்படிப்பட்டவரை வீட்டிலேயேயிலிருந்து தியானம் செய்யும்படி நான் கூற முற்பட்டேன்.

அடுத்த கட்டம்

அதுவரை சுமார் 10 தியான மையங்கள் ஆரம்பித்து நடத்தி வந்தேன். புது மையங்களை ஏற்படுத்தாமல் வீட்டிலேயே சிறு அளவில் தியான மையம்போல் நடத்தலாம் என நினைத்தேன்.

இக்கட்டத்தில் தமிழ்நாடும், இந்தியாவும் முழுவதும் பகவானை நாட வேண்டும் என எனக்கு அவா இருந்தாலும், அதை எடுத்துக் கூறும் முறையை மாற்றிக் கொள்ள விரும்பினேன். Indian Expressஇல் சுமார் 2½ வருஷம் தினமும் அவர்களைப் பற்றிக் கட்டுரை எழுதினேன். கேரளா, கர்னாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டு வாசகர்கள் அதை அறிவார்கள். அக்கட்டுரைகள் அன்றாட வாழ்வில் ஆன்மீகத்தைப் பற்றியவை.

  • இந்தியர், குறிப்பாகத் தமிழர், பகவானுடைய பூரணயோகத்தை மேற்கொண்டால், சிறப்பான ஆன்மீகப் பலனடைவர் என்பது என் கருத்து. பகவான் தமிழ்நாட்டை நாடி வந்ததே அதைக் குறிக்கும்.
  • அது அவர்கட்குப் பக்க, நல்ல முறையில் சம்பாதித்த திரண்ட செல்வத்தின் அடிப்படை வேண்டும்என நான் உறுதியாக நம்புகிறேன்.
  • அதை இலட்சியமாக ஏற்றுச் சிறப்பாகப் பூரணமாகச் செய்ய முன்வரும் அன்பர்கட்காக ஒரு 100 பக்க கட்டுரையை எழுதியுள்ளேன். இதை வெளியிட எனக்கு "அனுமதி'' கிடைத்தால், அதை அன்னையிட்ட உத்தரவாகக் கருதி உடனே வெளியிட இருக்கிறேன். 51 முறைகளும், 42 சட்டங்களும் உடைய கட்டுரையிது. அது சம்பந்தமாக 141 கட்டுரைகள் 2 ஆண்டிற்கு முன் எழுதப்பட்டவைகளையும் இணைத்து வெளியிடலாம் என நினைக்கிறேன்.
  • கட்டுரை முழுமுயற்சிக்குரியது. பெருஞ்செல்வத்தை நாடுவது. முயற்சி உள்ளவர் தவறாது முழுப்பலன் பெறலாம்.
    • நாட்டின் மகுடமாக உள்ளவர் ஏற்கக்கூடிய முறைகள் இவை.
    • அன்பர் அனைவரும் கிரீடமானவர்என்பது என் அனுபவம்.
  • அன்னையைக் கட்டுப்பாடாக ஏற்க முடியாதவர்கள் ஏராளமான மக்கள். அவர்கள் ஏதாவது ஒரு சட்டத்தை நிச்சயமாகப் பின்பற்ற முடியும். அதற்குப் பலன் உண்டு. ஒரு சட்டமானாலும் அதைத் தீவிரமாகப் பின்பற்றினால் பலன் உண்டுஎன்பதை Pride and Prejudice கதையை அன்பர்கள் அறிவார்கள்என்பதால், அதன் மூலம் கூற முயலும் கட்டுரை இது. இந்தச் சட்டத்தின் பதத்தை அன்பர்கள் தங்கள் வாழ்வில் ஏற்கனவே பார்த்ததை நினைவுகூர்வதும் பலன் தரும்.

Pride and Prejudice கதையில் உதாரணம்

பென்னட் என்ற உயர்குடிப் பிறந்தவர் (gentleman, aristocrat) £2000 வருஷ வருமானமுள்ளவர். இது 1797இல். இந்த வருமானம் நமது ரூபாயில் அன்று மாதம் 2000 ரூபாயாகும். இந்தியாவில் வேலை செய்யும் ஆங்கிலேய கலெக்டருக்கு அன்று மாதம் ரூ.400/- சம்பளம். அழகி என்பதால், படிப்பறிவில்லாத, மன வளர்ச்சியற்ற, எளிய குடும்பப் பெண்ணை அவர் திருமணம் செய்கிறார். திருமணமானவுடன் அவள் அர்த்தமற்ற, ஆர்ப்பாட்டமான பழக்கங்களால் அவர் மனம் உடைகிறது. அன்று ஆங்கிலேயர் மனைவியை நம் நாட்டில் இன்று முதலாளியை நடத்துவது போல் நடத்துவர். மனைவியை மறுத்துப் பேசுவதோ, கண்டிப்பதோ நாடறியாதது. ஆண்கள் உட்கார்ந்திருக்கும்பொழுது ஒரு பெண் உள்ளே வந்தால் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவர்.

  • பென்னட் தம் தலைவிதியை ஏற்று, வீட்டில் தம் அறையை விட்டு, சாப்பிட மட்டும் வெளிவரும் பழக்கத்தை மேற்கொண்டு, நேரத்தை எஸ்டேட்டில் கழித்தார்.

மனைவி Mrs.பென்னட், £200 வருமானமுள்ள வீட்டிலிருந்து £2000 வருமானமுள்ள வீட்டிற்கு வந்தவுடன் . 2000த்தையும் செலவு செய்ய ஆரம்பித்தார். கணவனுடைய பண்பு எதுவுமில்லாதவர். எதிரான மட்டமான பண்புகளுடையவர். 5 பெண்கள் பிறந்தனர். மூத்தவளுக்கு 23 வயதுவரை வரன் வரவில்லை. அனைவரும் அழகான பெண்கள். மூத்தவள் ஜேன் பேரழகி எனப் பெயர் வாங்கியவள். சீதனமாக வருஷம் £50 மட்டும் பெற்றிருப்பதால் வரனே வரவில்லை. அவர்கள் நாட்டில் பெண்களே தமக்குரிய வரனை ஏற்பாடு செய்ய வேண்டும். பெற்றோர் அதில் தலையிட முடியாது. Mrs. பென்னட் கணவனுக்குப் பிறகு எஸ்டேட் அவர்களை விட்டுப் போகும் - ஆண் வாரிசு இல்லை என்பதால் - என்ற காரணத்தால் பெண்கள் திருமணம் முடிய வேண்டும் எனப் பதைக்கிறார். தம் பதைபதைப்பைத் தன் குடும்பப் பண்புக்கு எதிராகக் காட்டுகிறார். அது அனைவரும் வெட்கப்படும் விஷயம், அவருக்கு வெட்கம் தரவில்லை.

  • Mrs.பென்னட் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை வரன் - பிங்லி- விஷயத்தில் அவசரம், ஆர்ப்பாட்டம், மட்டமாகப் பேசுவது, பலர் கேட்கும்படி தம் சொந்த அபிப்பிராயத்தைக் கூறுவது ஆகியவற்றைத் தொடர்கிறார். தம் மட்டமான பாஷை அருவருப்பானது, நல்ல வரனை விலக்கும் என அவருக்குத் தெரியவில்லை.

மூத்த பெண் ஜேன், வயது 23. திருமணமாவதானால் ஓரிரு வருஷத்தில் ஆக வேண்டும். 23 என்பதே அதிக வயது. 25க்கு அப்புறம் திருமணமில்லை. அவளுக்கும் வருமானம் £50. இருந்தபோதிலும் அவளால் பிங்லியுடன் தன் ஆசை வெளிப்படும்படி பழக முடியவில்லை. அது பெண்மைக்கு உகந்ததன்று. ஷார்லோட் அதை எலிசபெத்திடம் எடுத்துக் கூறியும் எலிசபெத்தோ, ஜேனோ மனத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

  • பெண்மையின் சிறப்பு ஆண்மகன் அவளைத் தேடி வருவது, அவனைத் தேடிப் போக பெண்ணால் முடியாது. தேடிப் போக விரும்புவதாகவும் பிறர் நினைக்கக்கூடாதுஎன்பது ஜேனுடைய கொள்கை.

எலிசபெத் நியாயமானவள்; அறிவுடையவள்; அதற்கேற்ப நடப்பவள். ஆரம்பத்தில் விக்காம் பொய்யை நம்பி டார்சியைத் தவறாக நினைக்கிறாள். பிறகு டார்சி விவரம் கூறியதால் விக்காம் பொய்யை அறிகிறாள். £10,000 வந்தவுடன் மிஸ் கிங்கை விக்காம் நாடுகிறான். லிடியாவுடன் ஓடுகிறான். எலிசபெத் மனம் மாறுகிறாள். டார்சியின் உண்மை தெரிகிறது.

  • மனம் மாறினாலும் தான் "நியாயமாக, அறிவுடையவளாக” நடக்க வேண்டும் என்ற கொள்கையினின்று அவள் மாறவில்லை.

டார்சி கர்வி, சுயநலம், எவரையும் வெறுப்பவன். அதை எலிசபெத் எடுத்துக் கூறியபொழுது அந்த உண்மையை ஏற்கிறான்.

"நான் உண்மையானவன்” என்ற கொள்கைப்படி தானறிந்த புது உண்மைக்கேற்ப டார்சி மாறுகிறான். கதை 200 ஆண்டுகட்கு முன் இங்கிலாந்தில் நடந்தது. அவர்கள் அன்றும், இன்றும் கர்மத்தை நம்பவில்லை. நாம் கர்மத்தை நம்புவதால் கர்மம் வலுவாக நம் வாழ்வில் செயல்படும். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் செயலுக்குப் பவர் உண்டு. அதிலிருந்து எவரும் தப்ப முடியாது. கர்மம் எந்த நாட்டிலும் அந்த அளவுக்குச் செயல்படும். இக்கதையில் அது குறைவற நடக்கிறது.

  • லேடி காதரீன் தம் ஆசை பூர்த்தியாகும்என முழுமையாக எதிர்பார்க்கிறார். எதிர்பார்த்தால், நடக்காது.
  • பிங்லிவந்தவுடன் Mrs.பென்னட் கணவரைப் போய் பிங்லியைப் பார்க்கச் சொல்கிறார். தேடிப் போனால் கூடி வராது.
    இரண்டாம் முறை பென்னட் போக மறுக்கிறார்.
    கூடிவருகிறது.

எந்த நாட்டு மக்களும் கர்மத்திற்கு அந்த அளவில் கட்டுப்பட்டவர்கள். ஆங்கிலேயர் (gentlemen) நியாயமானவர், வார்த்தை தவறாதவர்கள்.

  • பிங்லி அவசியமில்லாமல் டார்சிக்குக் கட்டுப்படுவது நியாயமில்லை, தவறு. தவறு என்றாலும் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை டார்சி சொற்படியே நடக்கிறான். அவனுடைய பழக்கத்தை விடவில்லை.

ஒரு நல்ல பழக்கம் சிறியதானாலும் அதை பூரணமாகப் (100%) பின்பற்றினால் பலன் வரும் என்ற சட்டம் இவர்கள் அனைவர் வாழ்விலும் பலிக்கிறது.

  1. ஒரு பெண்ணுக்குத் திருமணம் முடிக்க முயன்ற Mrs. பென்னட் மூன்று திருமணங்களை முடிக்கிறார்.
  2. பொறுப்பே ஏற்காத பென்னட்டின் பொறுப்பை டார்சியும், கார்டினரும் ஏற்று, லிடியா திருமணத்தை முடிக்கிறார்கள்.
  3. ஜேனைத் தேடி பிங்லி வருகிறான்.
  4. எலிசபெத் பெரும் செல்வரை மணக்கிறாள்.

இவர்கள் அனைவர் மனதிலும் உண்மை (sincerity) இருக்கிறது. ஒரு சட்டத்தைப் பூரணமாகப் பின்பற்றுகிறார்கள், பலன் பெறுகிறார்கள்.

சட்டங்கள் ஏராளமானாலும் ஒரு சட்டத்தைப் பூரணமாகப் பின்பற்றினால், பலன் உண்டுஎன்பதை இவை காட்டுகின்றன.

இன்று உலகில் சத்தியஜீவிய சக்தி செயல்படுகிறது. கர்மத்திற்கு உலகின் சூழலிருந்த பவர் அழிந்துவிட்டது. அன்னை சக்தி - தோல்வியறியாதது - செயல்படுகிறது. எதையும் முறையாகச் செய்தால், முழுப்பலன் உண்டு.

  • யோகத் தகுதியுள்ள எல்லா அன்பர்களும் "அபரிமிதம் " என்ற கட்டுரையை முழுமையாகப் பின்பற்றி பெருஞ்செல்வத்தையும், அதன் மூலம் யோகப் பலனையும் பெற வேண்டும்.
  • அன்பர்கள் அனைவரும் யோகத் தகுதியுடையவர் என்பது என் அபிப்பிராயம்.

அன்னையை அறியாதவரும் ஒரு சட்டத்தைப் (உ.ம். குறித்த நேரத்தில் செயல்படுவது, கணக்கெழுதுவது போன்றவை) பூரணமாகப் பின்பற்றினால், அவர்கள் எதிர்பார்க்கும் முழுப்பலனை அடைவார்கள். ஒரு திட்டத்தில் (project) 40 இலட்சம் லாபம் எதிர்பார்த்தால், 10 பேரில் இரண்டு பேர் அதைப் பெறுகிறார்கள். மற்றவர் 15 அல்லது 20 இலட்சம் பெறுகின்றனர். ஒருவர் நஷ்டமடைகிறார் என்பது அனுபவம். ஒரு சட்டத்தைப் பின்பற்றும் அனைவரும் தவறாது 40 இலட்சம் பெறுபவர், "அபரிமிதம் " என்ற கட்டுரையைச் சிறப்பாகப் பின்பற்றினால், 400க்கு குறையாமல் 4000 இலட்சம் வரை திட்டம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தரும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
யோகம், அதன் முறைகள் எல்லாம் சுருங்கி, தியானத்தில் முடிகின்றன. ஒவ்வொரு யோகமும், தியானத்தின் வகையை நிர்ணயிக்கும்.
 
பூரணயோகம் சைத்தியபுருஷனில் தியானிக்கிறது.



book | by Dr. Radut