ஜடத்திற்கும் சூட்சுமம் உண்டு
Life Divine
நமக்கு இரு மனம் உண்டு - மேல்மனம், ஆழ்மனம்
நம் வாழ்வு இரு கூறானது - நாமறிந்த வாழ்வு, ஆழ்ந்த
பிராணனுக்குரிய வாழ்வு
ஆத்மாவுக்கும் இரு நிலைகளுள்ளன - ஜீவாத்மா, சைத்தியபுருஷன்
அதேபோல் ஜடத்திற்கும் சூட்சுமம் உண்டு
இவை உயர்ந்த தத்துவங்கள். எனவே நமக்கில்லை என நினைப்பது இயல்பு.
உயர்ந்த தத்துவங்களை உன்னத வாழ்வாக மாற்றுவது ஸ்ரீ அரவிந்தம்.
இக்கருத்தின் ஆன்மீக உண்மையை தத்துவரீதியாக நன்றாக விளக்கி நீண்ட கட்டுரைகளை எழுதமுடியும். வாழ்விலும் பல்வேறு வகைகளில் இதன் உட்கருத்தை எடுத்துரைக்க முடியும். எதற்கும் உதவாது என்று எடுத்தெறியப்பட்டவை எல்லாவற்றையும் மீறி உயர்வதை மட்டும் சில உதாரணங்களால் கூறி, அதன் தத்துவத்தை எடுத்துரைப்பதே என் நோக்கம்.
- குருடன் ஒதுக்கப்படுவது பழைய வாழ்வு. Helen Keller மலர்ந்தது புதிய நிலை.
- ஊரைவிட்டு வெளியே வாழ்ந்தவன் தாழ்த்தப்பட்டவன். நாட்டின் ஜனாதிபதியாகி உலகப் பிரசித்தி பெற்ற விருது பெறுவது நாராயணன்.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவு கோலும் மிஞ்சாது என்பது சென்ற நூற்றாண்டு. ஏக்கரில் ஒரு லட்சம் சம்பாதிப்பது இன்றைய நவீன விவசாயம்.
- வழுக்கி விழுந்தவன் எழுந்திருப்பதில்லை. வாழ்வு இனி அவனுக்கில்லை என்பது பழைய நிலை. தொழிலில் வழுக்கி விழுந்தவனை வாழ வைக்க ஸ்தாபனம் ஏற்பட்டுள்ளது புதிய நிலை.
- திருடனுக்குத் தூக்கு, விபசாரம் அபசாரம் என்பது மனிதன் அறிந்தது. திருடனுடைய அடி திருவடி, விபசாரியின் கற்பு தெய்வீகமுடையது என்பது ஸ்ரீ அரவிந்தம்.
ஜடம் என்றால் கல், மண், களிமண், கேலிக்குரியது, அசைவற்றது, எதற்கும் உதவாது என்று நாமறிவோம். ஆன்மீகம் ஜடத்திற்கும் சூட்சுமமுண்டு என்கிறது. ஸ்ரீ அரவிந்தம் அதை ஆழமாக ஆமோதிக்கிறது. மேலும் ஸ்ரீ அரவிந்தம் இருளை அடர்ந்த ஒளி என்றும், தீமை என்பதை நன்மையின் சிறப்புருவம் என்றும், வலியை ஆனந்தத்தின் உச்சகட்டம் என்றும் தொடர்ந்து கூறுகிறது. நடைமுறையில் நமக்கு இது எப்படிப் பயன்படும்?
கஷ்டம் வந்த காலத்து மனிதன் துவண்டு போகிறான். சிலர் சமாளிக்கின்றார்கள். அன்பர்கள் கஷ்டம் வந்த காலத்தில், அதிர்ஷ்டம் எதிரான ரூபத்தில் வந்துள்ளதாக அறியவேண்டும். அறிந்து பயன்பெற்றவர் அனுபவம்,
- உள்ள வேலையைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில் எடுத்த முயற்சி பெரிய வேலையைத் தந்தது.
- பாஸ் செய்ய முடியாது என்றவன் மனம் மாறியபொழுது பள்ளியில் முதல்வனானான்.
- உள்ளூர் பள்ளியை முடிக்காத 9 பேர்களுள்ள குடும்பத்தில் ஒருவன் வெளியூர் பட்டம் பெற்றான்.
ஜடத்தை ஜடமாக ஏற்று மடிவது பழைய வாழ்வு. ஜடத்திற்கு சூட்சுமம் உண்டு என்பதை அறிவது ஸ்ரீ அரவிந்தம். சூட்சுமத்தை அறிந்தால் கஷ்டத்தின் மறுபுறம் தெரியும். அதை ஏற்று, அதன் பயன் பெற முயன்றால் கஷ்டம் மட்டும் தீராது. அதன் மூலம் அதிர்ஷ்டம் வரும்.
Life Divine என்ற நூல் 1070 பக்கங்களில் இதுபோன்ற ஓர் உயர்ந்த கருத்து இல்லாத பக்கமில்லை, விளக்கத்திற்குத் தகுந்த கருத்துகளை இப்பகுதியில் எழுதவே இப்பகுதியை ஆரம்பிக்கின்றோம்.
*******
- Login to post comments
Comments
Para 10 Line 2 - தெய்வீக
Nataraj