Skip to Content

நடந்து முடிந்த பின்தான் புரியும்

"அன்பர் உரை'' நடந்து முடிந்த பின்தான் புரியும்

(சென்னை பெரம்பூர் ஆறாவது மையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் (8.3.98) திருமதி விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)

ஒரு புதிர் போட்டால், யாரோ ஒருவர் அதற்கு விடை கூறுவார். அவர் கூறிய பின் அனைவருக்கும் புரியும்.விடையைக் கூறுபவர் முன்னோடி.அலெக்ஸாண்டர், நெப்போலியன், கொலம்பஸ், ஏசு, மார்டின் லூதர், ஐன்ஸ்டீன், அசோக சக்ரவர்த்தியிலிருந்து எடிசன், மகாத்மாகாந்தி, ரைட் சகோதரர்கள், ஆப்ரஹாம் பெல், மார்க்கோனி வரை முன்னோடிகள் பலருண்டு.திருவள்ளுவரும் முன்னோடிதான். பெட்ரோல் கண்டுபிடித்த ராமரும் முன்னோடிதான்.

முன்னோடிகளால் உலகம் முன்னேறுகிறது.

மற்றவர் முன்னோடிகளால் பயன் பெறுபவர்.

மனிதனுக்கு அடுத்த நிலையாக சத்தியஜீவன் பிறப்பான் எனவும், அம்முயற்சிக்கு முன்னோடிகள் 100 பேர் தேவை எனவும் பகவான் கூறுகிறார். அது யோகம். மவுண்ட் எவரெஸ்ட். வாழ்க்கையின் சிகரம் நிரந்தர நிலையான அதிர்ஷ்டம். வாழ்வு திருவண்ணாமலை மலை போன்றது. வருஷத்தில் 1000 பேராவது இம்மலை உச்சிக்குப் போகிறார்கள். பல ஆயிரம் பேர் உச்சிக்குப் போக முடியாததால் மலையைப் பிரதட்சிணம் வருகிறார்கள். அனைவருக்கும் அதற்குரிய பலன் உண்டு.

நடந்தபின் புரிந்தாலும், நடப்பதற்குமுன் புரிந்தாலும் அனைவரும் அன்னைக்குரியவராவர். 

நடப்பதற்குமுன் புரிந்தால் நிரந்தர நிலையான அதிர்ஷ்டம் பெறலாம். அது மலையேறி உச்சியைத் தொட்டதாகும். நடந்தபின் புரிந்தால் பிரார்த்தனை பலிக்கும். அது பிரதட்சிணம் செய்வது போன்றது.

  • அன்னையைத் தரிசிக்க மறுத்த அமெரிக்கர் அடுத்த ஆண்டு தரிசித்து "இப்படியிருக்கும் என எனக்குத் தெரியாது'' என்கிறார்.
  • பாங்கு கடன் வேண்டாம் என்று ஒரு வருஷம் மறுத்த விவசாயிகள் அடுத்த ஆண்டு கடன் பெற்று அபரிமிதமான பலன் பெற்று "பாங்கே வரவில்லையெனில் நாம் என்ன ஆகியிருப்போம்'' என்றனர்.
  • மகனுக்குச் செல்லம் கொடுத்து 29 வயதிலும் உருப்படாமல் செய்த தாயார், சுயநலத்தால் செல்லம் கொடுத்ததை அறிந்து அவனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த 6ஆம் மாதம் அவனுக்கு வெளிநாட்டில் வேலை வந்தபொழுது, "அப்பொழுதே நான் கேட்டுக் கொள்ளாமல் போய் விட்டேன்'' என்றார்.

நடப்பதற்கு முன் புரிந்து கொள்பவன் அறிவாளி, அவனுக்கு முன்னேற்றமுண்டு. அவனால் உலகத்திற்கு முன்னேற்றமுண்டு.

உணர்வால் அறிபவன் நடந்தபிறகு புரிந்து கொள்கிறான். மனத்தால் அறிபவன் நடப்பதற்கு முன்னால் புரிந்துகொள்கிறான்.

நடக்கும்வரை புரியவில்லை என்றால் மனம் என்ற கருவி இனியும் உற்பத்தியாகவில்லை என்று பொருள். 

நடந்த பிறகும் நம்பமுடியாதவர்கள்:

"கடந்த 10 ஆண்டுகளாக நடக்க முடியாத 15, 20 காரியங்கள் என் வாழ்வில் நடந்தது உண்மைதான். அவற்றோடு ஒப்பிடும்பொழுது இந்தப் பிரச்சினை பெரிதன்று எனத் தெரிகிறது. ஆனால் மனம் அன்னையை நாட மறுக்கிறது. பிரச்சினையை நினைத்தால், எப்படி நடக்கும் என்றே தோன்றுகிறது'' என்பவர் பலர்.

"இந்தக் கூடையில் நான் தொலைந்த பர்ஸை 10 முறை தேடிவிட்டேன். நேற்று படுக்கப்போகுமுன் ஒரு முறை தேடினேன். காலையில் எழுந்து அறையைத் திறக்குமுன் மறுபடியும் கூடையை சோதனை செய்தேன். கூடையின் அடியில் பர்ஸ் இருக்கிறது என்று பார்த்தபிறகும் என்னால் நம்பமுடியவில்லை'' என்பது மற்றோர் அனுபவம்.

"அடாவடியாகவே 20 ஏக்கர் நிலம் சம்பாதித்தவனிடம் தெரியாமல் நானே வலியப்போய் கொடுத்த 7000 ரூபாயை 10 முறை சால்ஜாப்பு சொன்ன மனிதன், தானே வலியத் திருப்பிக்கொடுத்ததை நானே அனுபவித்தேன். ஆனால் பெருஞ்சொத்துள்ள இந்த விவசாயியிடம் கொடுத்த 3000 ரூபாய் கோர்ட் டிக்ரி ஆன பின்னும் வாராது எனவே மனம் கூறுகிறது. மனம் அன்னையை நம்பமறுக்கிறது,'' என்பது பழம் பெரும் பக்தர் சொல்வது. 

இவற்றிற்குக் காரணம் என்ன? விளக்கம் என்ன?

  • மனிதன் அனுபவத்தால் புரிந்து கொள்கிறான்.
  • அறிவால் புரிந்து கொள்வது அரிது.
  • அனுபவம் வந்தாலும் புரியாமலிருப்பதுண்டு.
  • அனுபவத்தைப் புரிந்து கொள்ள முயல்பவர் குறைவு.
  • நடப்பது அருளால் நடந்துவிட்டால், நடந்தது ஆன்மாவுக்குத்தான் புரியும்.
  • ஆன்மாவுக்குப் புரிய வேண்டியது, அறிவுக்குப் புரியாது.
  • புரிந்ததைச் செயல்படுத்த உணர்வு இடம் கொடுக்காது.
  • உணர்வு இடம் கொடுக்கும் இடங்களிலும் சுயநலம், குணம் தடை செய்யும்.
  • நிர்ப்பந்தத்தால் மனிதன் மாறுவானே தவிர, நிர்ப்பந்தமில்லாமல் மாற முன் வரமாட்டான்.
  • மனிதன் ஆன்ம விழிப்பைத் தேடவில்லை. அதனால் ஆன்மா விழிக்காது.
  • மனிதன் அறிவை நாடவில்லை, அதனால் மனம் விழிப்பாக இருக்காது.
  • நாலுபேர் தன்னை ஏற்க வேண்டும் என்பதே மனித முயற்சி.
  • அது உணர்வின் முயற்சி, அறிவின் முயற்சியில்லை, ஆன்மாவின் முயற்சியும் இல்லை.
  • அவன் தேடுவது அவனுக்குக் கிடைக்கிறது.
  • மனிதன் தேடாதது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியமில்லை.

நாம் செய்யக்கூடியது என்ன?

அன்னையை அறிந்து நாம் பெற்ற சந்தோஷம் போதும் என்பது ஒரு நிலை. இல்லை, மேலும் மேலும் அன்னை வேண்டும், அன்னையை நெருங்கிவர வேண்டும் என்பது மற்றொரு நிலை. இரண்டாம் நிலையிலுள்ளவர்க்குரிய முறைகள் ஏராளம். அவற்றுள் "நடப்பதற்கு முன் புரிந்து கொள்ள முயல்வது'' ஒன்று. சுத்தம், தணிவான பேச்சு, நினைவு, சமர்ப்பணம், தியானம், சேவை, நூல்களைப் பயிலுதல், சமாதி தரிசனம், பிரச்சினைகளைத் தீர்ப்பது, வாய்ப்பை அனுபவிப்பது போன்ற முறைகள் ஏராளம்.  

நடப்பதற்கு முன் புரிய முயல்வது இவைபோன்ற ஒரு முறை. இதனால் வரும் பலன்கள்,

  1. நிச்சயம் காரியம் கூடிவரும்.
  2. எதிர்காலத்தில் தோல்வியேயில்லை என்ற நிலையும் உருவாகலாம்.
  3. அன்னையை ஒருபடி நெருங்கி வரலாம்.
  4. ஆத்ம ஞானம் ஓரிழை உற்பத்தியாகும்.

இதைச் சாதிக்கத் தேவையானவை:-

  1. நம்பிக்கை
  2. தைரியம், துணிச்சல்
  3. முன்னேற வேண்டும் என்ற ஆர்வம்
  4. சமர்ப்பணம்.

உதாரணம்:- வேறு வழியில்லாதபொழுது, அன்னையை நாடுவதைவிட, எல்லா வழிகளும் தெரியும்பொழுது, அவற்றை விலக்கி அன்னையை நாடுவது சிறந்தது. அந்தஸ்து அளவு கடந்து உயர்ந்தபின் பார்ட்னர் பொறாமையால் ஓராண்டு நஷ்டம் வந்தபொழுது, அதைச் சமாளிக்கும் வழியை அனைவரும் அறிவர். உதவி எனக் கேட்டால் போதும், கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர் என்ற நிலையில்,

நான் மனித உதவியை நாடப் போவதில்லை,

என் சொந்தத் திறமையையும் நம்பப் போவதில்லை,

எப்படி என்ன நடக்கும் என நினைக்கப் போவதில்லை,

நண்பர், பார்ட்னர், குடும்பம், குருவையும் நாடப்போவதில்லை,  

இந்த நெருக்கடி வந்தபின், இது அன்னையை நெருங்க கிடைத்த சந்தர்ப்பம் என அன்னையை மட்டும் நம்புகிறேன் என்றவருக்கு பார்ட்னர் கொடுத்ததைப் போன்று இருமடங்கு புதிய தொழில் தானே ஒரே நாளில் அமைந்து அன்னையின் பூரண ஆசீர்வாதத்தையும், ஆதரவையும் பெற்றது. அதன்பின் தொடர்ந்த முன்னேற்றம் கடைசிவரை இருந்தது.

நடப்பதற்கு முன்னால் புரிவது நம்பிக்கை.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம்மால் பயன்படுத்தும் அளவை மீறிய சக்தி எழுந்தால் அதைத் தீவிரம் என்கிறோம். அதையே இறைவனை நோக்கிச் செலுத்தினால், அது பக்தி  ஆர்வமாகிறது.

*********

 

Comments

Para 18 line 3இடங்களி லும்  -

Para 18 line 3

இடங்களி லும்  - இடங்களிலும்

para 15 line 4க்ரி ஆன - ?

para 15 line 4

க்ரி ஆன - ?

para 15 line 210 றை - 10

para 15 line 2

10 றை - 10 முறை

Nataraj



book | by Dr. Radut