Skip to Content

10. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

44. அன்னை பிரார்த்தனை பலிப்பதைத் தடுப்பது - பேரருள்

  • அன்னை கேட்டதெல்லாம் தருபவர்.
  • கேட்காததையும் தருபவர்.
  • கேட்டதையும்விட அதிகமாகத் தருபவர்.
  • கேட்கத் தெரியாததையும் தருபவர்.
  • அவர் பிரார்த்தனையைத் தடை செய்கிறார் என்பது நம்ப முடியாதது.
  • நம் நாட்டை நெடுநாளாக ஆளும் ஆங்கிலேயன், சுதந்தரம் வழங்க முன் வருவது நமக்கு நம்ப முடியாதது. அது நடந்தது. அது பகவான் ஸ்ரீ அரவிந்தர் அருளால் நடந்தது.
  • நாம் பெற்ற சுதந்தரம் ஆசிய நாடுகட்குப் பரவியது அதைக் கடந்தது - பேரருள்.
  • நேரு உயிருள்ளவரை பிரதமராக இருந்தார். இது ரூஸ்வெல்டிற்குப் பலித்தது. சர்ச்சிலுக்குப் பலிக்கவில்லை. ஸ்டாலினுக்கு எதேச்சாதிகாரம் என்பதால் பலித்தது.
  • அவருக்குப் பின் மகள் அவர் ஆயுள் உள்ளவரை நாட்டை ஆண்டார்.
  • அவர் மகனும் அப்பேற்றைச் சிறிது பெற்றார்.
  • இவை அருளைக் கடந்த பேரருளின் செயல்.
  • நேருவும், பட்டேலும் காந்திஜி பேச்சைத் தட்டாமல் கேட்டவர்கள். 1947இல் அவர் பேச்சைக் கேட்கவில்லை என்பது நாட்டிற்குப் பேரருளாகும். மகாத்மா இந்தியாவைப் பிரிவினை செய்யாமலிருக்க ஜின்னாவை இராஷ்ட்ரபதியாக்கச் சொன்னார். அதைத் தடுக்க நேருவும், பட்டேலும் அவர் பேச்சை மறுத்தனர்.
  • அன்னை பகவான் 1950இல் சமாதியான பின் 1959இல் சூட்சும உலகில் தினமும் சந்திப்பது வழக்கம். அப்பொழுது தன் எதிர்காலத்தைப் பற்றி ஏராளமாகக் கேள்விகள் கேட்பார். பகவான் அனைத்திற்கும் பதில் கூறுபவர், சில கேள்விகட்கு "இது உனக்குத் தேவையில்லை'' என்பார்.
  • பகவான் பதில் கூறுவது அருள்; கூற மறுப்பது பேரருள்.
  • அன்னை ஸ்ரீ அரவிந்தர் அறைக்கு அடுத்தாற்போன்ற வராண்டாவில் நடக்கும்பொழுது கிருஷ்ண பரமாத்மா பின் தொடர்ந்தார்.

    கொஞ்ச நாட்களுக்குப் பின் கிருஷ்ண பரமாத்மா, பகவான் ஸ்ரீ அரவிந்தரானார்.

    அப்பொழுது, "நான் செய்யும் இதர வேலைகளைவிட இது இனிமையானது'' என அன்னை நினைத்ததை அறிந்த பகவான் அன்றோடு வருவதை நிறுத்திவிட்டார். அன்னைக்கு ஏமாற்றமாகிவிட்டது. கிருஷ்ண பரமாத்மா தெய்வீக மனம். அது ஸ்ரீ அரவிந்தராக மாறியது. இது சத்தியஜீவியம். இந்த மாற்றத்தின் இரகஸ்யத்தை அறிந்து அன்னை பகவான் வருவதை நிறுத்தியபின் தொடர்ந்ததால் பகவான் அன்னையாக மாறி அன்னை நடக்கும்பொழுது பின்னர் வந்தார். பகவான் தொடர்ந்து வந்திருந்தால் அன்னை யோகத்தில் இக்கட்டத்தை எட்டியிருக்கமாட்டார்.

  • கேட்டதெல்லாம் பலிக்கும்பொழுது, ஒரு விஷயத்தை அன்னையே தடை செய்வதை ஏற்றுக் கொண்டு, பின்னர் பொறுத்திருந்து பார்த்தால், அது எவ்வளவு பேரருள் என அப்பொழுது தெரியும்.
  • ஒரு பெண் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த பணமெல்லாம் தடையாகி, விரக்தியாய்விட்டது. அன்னை மீது நம்பிக்கையே போய்விட்ட நிலையில் ஒரு நாள் அண்ணன் வந்து ஒரு கிரயப் பத்திரத்தில் கையெழுத்து கேட்டார். இது பெரியம்மா நிலம். அன்பருக்குப் பாதி உரிமையுண்டு. 22 ஆண்டுகளாக அண்ணன் அனுபவித்தார். இப்பொழுது விற்கிறார். தம்பிக்கு எதுவும் தருவதில்லை. தம்பி மறுப்பவரில்லை. கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். எதுவும் வாராது எனத் தெரியும். கிரயத் தொகையும் தெரியாது. ஒரு வாரம் கழித்து ரிஜிஸ்டருக்குப் போனார்கள். நிலம் வாங்குபவர் தம் பங்குக்குரிய தொகையை தம்பியின் கையில் தர விரும்பி 3½ இலட்சம் கொடுத்தார். பணம் திருமணத்திற்குத் தடையானது, இப்பொழுது விளங்கியது.

இது பேரருள்.

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எண்ணம், உணர்வுக்குரிய சூட்சுமப் பகுதியுண்டு. அவை சூட்சும வாழ்வுக்குரியவை. சூட்சும வாழ்வு, ஆழ்ந்த வாழ்விலிருந்து வேறுபட்டது. எண்ணம் சூட்சுமமானதானாலும், அதற்கு ஸ்தூலமான பகுதி, சூட்சுமமான பகுதி என இரண்டுண்டு.
 
சூட்சுமமான எண்ணத்திலும் அதற்குரிய சூட்சுமம் உண்டு.

*******



book | by Dr. Radut