வ. எண் | பாரம்பரிய ஆன்மீகம் | அன்னை மற்றும் பகவான் கண்ட புதிய ஆன்மீகம் |
1. | உலகம் என்பது ஒரு மாயை, எனவே அதிலிருந்து நாம் விடுபட வேண்டும். | உலகம் மாயையில்லை. மாறாக அது உண்மையானது. ஆகவே அதிலிருந்து விடுபட நினைக்காமல் அதைத் திருவுருமாற்றம் செய்ய நினைக்க வேண்டும். |
2. | பிரம்மத்தை நம்மால் அறியவோ, உணரவோ முடியாது. | பிரம்மத்தை நம்மறிவால் உணர முடியவில்லை என்றாலும் ஜீவியத்தின் உதவியைக் கொண்டு நாம் பிரம்மத்தை உணரலாம். |
3. | ஆன்மா என்றும் மாறாதது. ஆகவே அதற்குப் பரிணாம வளர்ச்சியில்லை. | ஜீவாத்மாவின் பிரதிநிதியான சைத்தியப்புருஷனுக்கு மாற்றமும், பரிணாம வளர்ச்சியுமுண்டு. |
4. | நம் ஜீவனின் எந்த பகுதியிலிருந்தாவது ஆன்மாவை விடுவித்து அதன் மூலம் மோட்சம் அடைய வேண்டும். | நம் ஜீவனின் எல்லாக் கரணங்களையும் திருவுருமாற்றம் செய்து, அதன் மூலம் நம் பர்ஸனாலிட்டியை முழுவதும் தெய்வீகமயமாக்க வேண்டும். |
5. | வேலை செய்தால் கர்மம் உற்பத்தி ஆகிறது. கர்மம் சேர்ந்தால் மறுபிறப்பு வருகிறது. ஆகவே மறுபிறப்பைத் தவிர்க்க நாம் வேலையையே தவிர்க்க வேண்டும். | வேலையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நம் திருவுருமாற்றத்திற்கு கருவியாக வேலையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். |
6. | பணம், பதவி மற்றும் பெண்கள் ஆகியவை ஒதுக்கப்பட வேண்டும். | பணத்தை நாம் அசுர சக்திகளிடமிருந்து மீட்டு இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஆன்மீகத்தில் உரிமை இருக்கிறது. |
7. | ஆண்டவனை மனிதன்தான் தேடிப் போக வேண்டும். | மனிதன் ஆண்டவனைத் தேடுவதைவிட ஆண்டவன்தான் மனிதனை அதிகமாகத் தேடுகிறான். |
8. | குருநாதருடைய வழிகாட்டல் இன்றியமையாததாகும். | நம் உள்ளிருக்கும் இறைவன் தான் நமக்கு, குருவாக அமைவார். |
9. | தெய்வலோகத்தில் உள்ள கடவுள்களை வழிபட்டுக் கொண்டிருந்தால் மனிதனுக்கு அது போதும். | கடவுள்களை வழிபடுவதைத் தாண்டி வந்து மனிதன் சத்தியஜீவியத்தை நோக்கிச் செல்லவேண்டும். |
10. | மனிதன் வாழ்க்கைக்கும், இயற்கைக்கும் கட்டுப்பட்டவன். | உள்ளிருக்கும் இறை அம்சத்தை மனிதன் கண்டுபிடித்துவிட்டான் என்றால் மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் வாழ்க்கையையும், இயற்கையையும் கொண்டுவர முடியும். |
11. | அகந்தை கரைய வேண்டும். | அகந்தைக்குப் பதிலாக ஆன்மாவின் தனித்தன்மை வெளிப்பட வேண்டும். |
12. | மேலுலகத்தில்தான் நாம் பேரின்பத்தை அனுபவிக்க வேண்டும். | வாழ்க்கை தெய்வீகமயமாகும் பொழுது அதே பேரின்பத்தை நாம் இங்கு அனுபவிக்கலாம். |
13. | அறியாமை, தீமை, துன்பம் ஆகியவைகள் எல்லாம் உலகில் என்றும் நிலைத்து இருக்கும். | சத்தியஜீவியம் பூவுலகில் வெளிப்படும்பொழுது இவையெல்லாம் மறைந்து உலகம் ஓர் அற்புதமாகக் காட்சி அளிக்கும். |
14. | சமூகத்திற்குத் தனிமனிதன் கட்டுப்பட வேண்டும். | ஆன்மீகத் தனித்தன்மை உள்ளவரை சமூகம் கட்டுப்படுத்தாது. |
15. | உடம்பை உதாசினப்படுத்த வேண்டும். | சத்தியஜீவியத்தை பிஸிக்கல் லெவலில் கொண்டுவர உடம்பு ஓர் அஸ்திவாரமாக அமையும். |
16. | வாழ்க்கையையும், யோகத்தையும் இணைக்க முடியாது. | வாழ்க்கையையும், ஆன்மீகத்தையும் இணைத்து யோகமயமான வாழ்க்கையும் வாழமுடியும். |
17. | எதிர்மறையான இரட்டைகள்தாம் நமக்குத் தெரிந்தவை. | பொய், இருட்டு, தீமை என்றிவற்றின் கலப்பே இல்லாமல் தனித்து விளங்கக்கூடிய உண்மை, ஒளி, மற்றும் நன்மைகளும் உண்டு. |
18. | முரண்பாடுகள் ஒன்றுக்கொன்று எதிரானவை. | நமக்கு எதிர்மறையான முரண்பாடுகளாகத் தெரிபவை உண்மையில் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகக்கூடியவை. |
19. | ஜடம் சச்சிதானந்தத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. | நாம் ஜடமென்று சொல்வது ஆனந்தத்தின் திட வடிவமாகும். |
20. | பிறவித் தளையிலிருந்து விடுபடுவதற்கு ஆன்மா விரும்புகிறது. | பிறவியிலிருந்து விடுபடுவதைவிட வாழ்வில் வெளிப்படுவதைத்தான் ஆன்மா விரும்புகிறது. |
21. | கர்மத்தை நாம் கரைக்க முடியாது. ஆகவே வேலை செய்வதைத் தவிர்த்து அதன் மூலம் கர்மம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். | சத்தியஜீவிய அருளின் செயல்பாடு மூலமும், கடந்தகாலச் சமர்ப்பணத்தின் மூலமும் கர்மத்தைக்கூட நாம் கரைக்கலாம். |
22. | மனிதன் வெறும் பக்தனாக இருந்து கொண்டு ஆண்டவனை எட்ட இருந்து வழிபட வேண்டும். | மனிதனே ஆண்டவனாகலாம் என்னும்பொழுது ஏன் வழிபாட்டுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்? |
23. | கடுமையான விரதங்களும் உடம்பை வருத்திக் கொள்வதும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான அடையாளங்கள். | விரதங்களும், உடம்பை வருத்திக் கொள்வதும் ஆன்மீகப் பக்குவத்திற்கான அடையாளங்கள் இல்லை. படைப்பின் நோக்கமே ஆனந்தம் எனும்பொழுது வலியைத் தேடிப்போகாமல் நாம் ஆனந்தத்தை நாடிப்போக வேண்டும். |
24. | தனிப்பட்ட மனிதனுடைய மோட்சம் தான் ஆன்மீகத்தினுடைய நோக்கமாகும். | பூவுலக வாழ்க்கையை முழுவதுமாக தெய்வீகமயமாக்குவது தான் புதிய ஆன்மீகத்தின் நோக்கமாகும். |
25. | ஆன்மீக ஞானத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க மடங்களும், ஆசிரமங்களும் தேவைப்படுகின்றன. | அவரவரும் அவரவருக்கென்று தனியாக ஆன்மீகப் பாதையை வகுத்துக்கொள்ளலாம். ஆகவே எவரும் மற்ற எவரையும் பின்பற்றத் தேவையில்லை. மடங்களும், ஆசிரமங்களும் நாளாவட்டத்தில் சாரத்தை இழந்து வெறுந் தோற்றத்தைமட்டும் தக்க வைத்துக்கொள்கின்றன. இப்படி இருப்பது ஆன்மீகத்தின் உண்மைக்கும், புதுமைக்கும் எதிரானது. |
26. | சாஸ்திரங்களில் எழுதியிருப்பது என்றும் உண்மை. அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. | மனிதன் சேகரிக்கும் அறிவு வளர்ந்துகொண்டே இருப்பதால் சாஸ்திரங்கள் கூறுகின்ற பழைய விஷயங்களை விலக்கிவிட்டு புது விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். |
27. | படைப்பில் ஒரு தொடர்ச்சியான முன்னேற்றம் இருப்பதாகவே பாரம்பரிய ஆன்மீகத்தில் ஒரு கருத்தே இல்லை. | மனிதனுக்கு அடுத்தாற்போல் சத்தியஜீவிய மனிதன் தோன்றுவான். இப்படி ஒரு பரிணாமவளர்ச்சி படைப்பில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். |
28. | பாரம்பரிய ஆன்மீகத்தில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் மிகவும் முக்கியமாகும். | சடங்கு மற்றும் சம்பிரதாயங்களுக்குப் பதிலாக இடையறா நினைவு மற்றும் சமர்ப்பணம் ஆகியவற்றை உள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும். |
29. | ஏழ்மையும், கடுமையான விரதங்களும் ஆன்மீகப் பக்குவத்திற்கு அடையாளங்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. | ஏழ்மைக்குப் பதிலாக எளிமை வரவேற்கப்படுகிறது. செல்வவளம் ஆன்மீகத்திற்கு எதிரானதாகக் கருதப்படாமல், மஹாலஷ்மியின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. |
30. | மனிதன் தன்னுடைய யோகசாதனையைத் தானே செய்ய வேண்டும். | சாதகர் அன்னையிடம் சரணம் அடைகிறார். சாதகருக்கு உள்ளிருக்கும் அன்னையே சாதனை செய்வார். |
31. | எழுத்தில் இருக்கின்ற விளக்கங்கள் மிகவும் குறைவு. குருநாதருடைய வாய்மொழி விளக்கங்களாகத் தான் பெரும்பாலான விஷயங்கள் வருகின்றன. அவற்றைக் கேள்வி கேட்காமலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும். | எல்லா விஷயங்களும் விபரமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படுகின்றன. கலந்துரையாடலுக்கு இடம் உண்டு. |
32. | படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு ஓர் அர்த்தமுள்ள மற்றும் அறிவுக்குப் பொருத்தமான ஒரு விளக்கம் இல்லை. | படைப்பிற்குப் பின்னிருக்கும் அடிப்படையான செயல் முறைகளும் நிகழ்வுகளும் விவரமாக விளக்கப்பட்டு உள்ளன. |
33. | படைப்பில் அவதாரங்களைப் பற்றிய கருத்துண்டு. ஆனால் பிரம்மம் எப்படிப் படைப்பாக மாறியது மற்றும் படைப்பு எப்படி மீண்டும் பிரம்மத்தை நோக்கி செல்கிறது என்பது பற்றி விளக்கம் இல்லை. மேலும் படைப்பிலுள்ள பல்வேறு நிலைகளைப் பற்றியும் தகவல் இல்லை. | பிரம்மம் எப்படிப் படைப்பாக மாறியது மற்றும் மீண்டும் படைப்பு பிரம்மத்தை நோக்கி எப்படிச் செல்கிறதுஎன்பது பற்றியும், பிரம்மம் உச்சியிலும், ஜடம் கடைசியிலும் இருக்க மற்றும் இடையில் வேறு என்னென்ன நிலைகள் உள்ளன என்பது பற்றிய விவரங்கள் எல்லாம் தரப்பட்டுள்ளன. |
34. | ஒரு மனிதனுடைய வாழ்க்கை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம் என்று நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. | இப்படி நான்கு தனித்தனி பாகங்களாகப் பிரிக்கப்படவில்லை. நேரிடையாகவே இளம் வயதிலேயே ஆன்மீகத்திற்குள் நுழையலாம். குடும்பஸ்தனாகக் காலம் கழித்துவிட்டுதான் ஆன்மீகத்திற்கு வரவேண்டும் என்று இல்லை. |
35. | பாவம், புண்ணியம் என்ற கருத்துகள் மிகவும் வலியுறுத்தப்படுகின்றன. இப்பிறப்பில் நடப்பன எல்லாம் போன பிறவியின் கர்மபலன் என்று சொல்லப்படுகிறது. | பாவ, புண்ணியத்தைப் பெரிதாக வலியுறுத்தவில்லை. தர்ம, அதர்ம கண்ணோட்டங்கள் இல்லாமல் வாழ்க்கை ஒரு வெறுஞ்சக்தியாகவே கருதப்படுகிறது. |
36. | பரம்பொருளில் தான் கரைவதுதான் தனிப்பட்ட ஆன்மாவின் இலட்சியமாகக் கருதப்படுகிறது. | பரம்பொருள் நிலையை அடைந்த பின்னும் தனி ஒரு மனிதன் கரையாமல் தனி ஆன்மாவாகத் தொடர்ந்து செயல்படலாம். |
37. | ஞானயோகம், பக்தி யோகம், கர்ம யோகம், ஹதயோகம் ஆகிய மூன்றைவிட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. | இப்படி உயர்வு, தாழ்வு எதுவும் இல்லை. எல்லாயோகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு பூரணயோகம் என்ற ஒரே யோகமாக மாற்றப்பட்டுள்ளது. |
38. | மேலே உள்ள சச்சிதானந்தத்திற்கு நேரெதிரான இருளில் மூழ்கியுள்ள விஷயமாகப் படைப்பு கருதப்படுகிறது. ஆகவே இந்த உலகத்திலிருந்து விடுபட வேண்டும் என்பது லட்சியமாகக் கருதப்படுகிறது. | அறியாமை என்பது சச்சிதானந்தத்தில் உள்ள அறிவைவிட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜடத்திற்குள் ஒளிந்திருக்கும் சச்சிதானந்தத்தை வெளிக்கொண்டுவருவது நோக்கமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. |
39. | ஆன்மீகச் சித்திக்காக எண்ணற்ற மந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. | ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் திருநாமங்களும், தங்கள் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற மந்திரமும்தான் இங்கே பயன்படுத்தப்படுகின்றன. |
40. | பகுதி முழுமையைவிட எப்பொழுதும் சிறியது. | பகுதி முழுமையைவிட பெரிதாவதற்குரிய சந்தர்ப்பம் உண்டு. சைத்தியப்புருஷன் பகுதியாகும். ஆனால், அது வெளிவரும்பொழுது மற்ற பர்சனாலிட்டி பாகங்களைவிட இது பெரிதாக இருக்கும். |
41. | ஆன்மாவிற்கு எதிராக இருப்பதால் உடம்பை நாம் கைவிட வேண்டும். | உடம்பை ஆண்டவனின் இருப்பிடமாகச் செயல்படும் அளவிற்கு மாற்றி தெய்வீகமயமாக்க முடியும். |
42. | மேலுலகத்திலிருந்து பூவுலகிற்கு கீழே மனிதனை அனுப்பியதால் ஆண்டவன் மனிதனை விலக்கி விட்டதாகத் தெரிகிறது. | மனிதன் அகந்தையை உருவாக்கிக்கொண்டு செயல்படுவதால் இவன்தான் ஆண்டவனைவிட்டு விலகி நிற்பதாகத் தெரிகிறது. |
43. | கடந்தகாலம்என்பது நம் வாழ்வை பெருமளவிற்கு நிர்ணயிக்கிறது. | சைத்தியப்புருஷன் வெளிப்படும்பட்சத்தில் நிரந்தரமாக நாம் நிகழ்காலத்திலேயே இருக்கலாம். சைத்தியம் செயல்படும்பொழுது கடந்த காலம் நொடிப்பொழுதில் மறையும். |
44. | இறைவனும் படைப்பும் வேறுவேறு என்பதால் காலமும், காலம் கடந்த நிலையும் வெவ்வேறாக உள்ளன. | படைப்பிற்குள்ளேயே இறைவன் இருப்பதால் காலமும், காலம் கடந்த நிலையும் என்றிரண்டும் சேர்ந்து இருக்கும் நிலையுமுண்டு. |
45. | கிரகங்களும், நட்சத்திரங்களும் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. | உள்ளிருக்கும் இறை சாந்நித்தியத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்து செயல்படும்பொழுது கிரகங்களையும், நட்சத்திரங்களையும் முறியடித்து மனிதன் தன் தலைவிதியைத் தானே நிர்ணயித்துக்கொள்கிறான். |
46. | ஆண்டவன் கருணை நிறைந்தவன் என்பதைவிட கண்டிப்பு நிறைந்த நீதிபதியாகத்தான் இருக்கிறான். | ஆண்டவனின் அன்பும், கருணையும்தான் இந்த உலகத்தைக் காப்பாற்றி வருகிறது. அவன் நீதிபதியாகச் செயல்பட்டால், அவன் வழங்கும் நீதியை இவ்வுலகம் தாங்காது. |
47. | ஒரு புனிதத் தோற்றம் மிகவும் அவசியம். ஆகவே, ஜடா முடி தரித்து, காவி அணிந்து காட்சி அளிக்க வேண்டும். | தோற்றத்திற்கு முக்கியமில்லை. ஜடா முடி தரித்தலோ, மொட்டையடித்தலோ புனிதத்தின் அடையாளம் ஆகாது. |
48. | உண்மை மாறாமல் என்றும் அப்படியே இருக்கும்என்று கருதப்படுகிறது. இதனால் புதிதாகக் கண்டறியக்கூடிய உண்மைகள் பழைய உண்மைகளுக்கு எதிரானதாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படுகின்றன. | தற்பொழுது நிலவுகின்ற உண்மைகள் தற்காலிகமானவைதாம். புதிய உண்மைகள் தெரியவரும் பொழுது பழைய உண்மைகள் விலக வேண்டும். |
49. | இறை விரோத சக்திகள் என்றுமே நிலைத்திருக்கும். | அவை தேவைப்படும் வரையிலும்தான் அவை இருக்கும். தேவையில்லை என்ற கட்டம் வரும்பொழுது இறைவனின் பக்கம் சாதகமாகமாறி வந்துவிடும். அல்லது இவையெல்லாம் அழிந்துவிடும். |
50. | ஆண்டவனிடம் பயமிருந்தால்தான் மனிதன் ஒழுங்காக இருப்பான். | ஆண்டவனைக் கண்டு அஞ்சுவதற்கு பதிலாக ஆண்டவன் மேல் அன்பு வைத்து உறவாடினால்தான் ஆண்டவனை நெருங்க முடியும். |