Skip to Content

04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • அறிவுள்ள பண்புக்குரிய வாய்ப்பு
    • எதைச் சொல்ல வேண்டும் என்பதைவிட எதைச் சொல்லக் கூடாது என்பது முக்கியம்.
      அதை முழுவதும் தெரிந்தவன் பண்புள்ளவன்.
      அறிவுள்ளவன் சத்விஷயம் தெரிந்தவன்.
      திட்டு வாங்கி மனம் புண்பட்டு சண்டையிடுபவனை சமாதானம் செய்ய முடியாது. தத்துவம் தெரிந்தவன் அவனிடம் "நீ யார், ஆத்மாவல்லவா? அதைக் குறைகூற முடியுமா?'' எனக் கேட்பான். "உன் ஆத்மாவை யார் குறை கூற முடியும்'' என்ற ஞானம் மத்தியஸ்தம் செய்ய பேருதவியாக இருக்கும்.
      எந்தப் பிரச்சினையையும் ஆண்டவன் திருவுள்ளம் என எடுத்துக் கொண்டால்,
      1. தீராத பிரச்சினை தீரும்.
      2. பொங்கிவரும் ஆத்திரம் சற்று தணியும்.
      3. அதன் வழியாகவும் நல்லது நடக்கும் என நம்ப முடியும்.

      ஆத்மஞானம் வாழ்வில் வெற்றிபெற அளவு கடந்து உதவும். நேருவை "the perfect Aryan type'' சிறந்த ஆரியன் என்கிறார் பகவான். தத்துவம் படித்தவன் நல்லவனாக இருந்தால் ஊரை ஆள்வான். அவன் சத்தியத்தை கைவிட்டுவிட்டதால் பலன் பாதிக்குமேல் அழிந்துவிட்டது. பொல்லாதவனாக இருந்தால் அவனை எவரும் எளிதில் தண்டிக்க முடியாது. அறிவு அதிகமாக இருப்பதால் முடிவில் தப்பித்துக்கொள்வான்.

      நானாவதி கடற்படை ஆபீசர். உயரமாக, சிவப்பாக, அழகாக இருப்பார். அவர் மனைவி அழகி. கடற்படையில் வேலை செய்வதால் வீட்டிற்கு வருஷத்தில் கொஞ்ச நாளைக்குத்தான் வருவார். பம்பாயில் அகூஜா என்பவன் பணக்காரன். பெண்கள் விஷயத்தில் மோசமானபேர் வாங்கியவன். ஒரு மயக்கம் தரும் பவுடரை அவன் விரும்பும் பெண்ணுக்குத் தந்து அவளைக் கெடுப்பது அவன் வழக்கம். நானாவதியின் மனைவி அதற்கு பலியானாள். நானாவதி விஷயம் கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்து மனைவியை விசாரித்து உண்மையை அறிந்தார். "நீ அவனையே மணம் செய்து கொள்'' என்றார். அவன் சம்மதப்படவில்லைஎன மனைவி கூறினாள். அவனை நானாவதியே பார்க்கப் போனார். அவன் குளித்துக் கொண்டிருந்தான். கதவைத் தட்டி திறக்கச் சொல்லி, "என் மனைவியை நீயே மணந்து கொள்'' என்றார். "எத்தனையோ நாய்களுடன் நான் பழகுகிறேன். அத்தனை பெயரையும் நான் மணக்க முடியுமா?'' என்றான். நானாவதி கோபப்பட்டு அவனைச் சுட்டுக் கொன்றார்.

      மும்பாய் ஹைகோர்ட்டில் வழக்கு முழுவதும் நானாவதிக்கு எதிராக நடந்தது. எல்லா சாட்சிகளும், சந்தர்ப்பங்களும் எதிரானவை. நானாவதி வக்கீல், "நானாவதி சுடவில்லை, இருவரும் துப்பாக்கியுடன் (wrestle) முரண்டியபொழுது துப்பாக்கி வெடித்து அகூஜா இறந்துவிட்டான்'' எனப் பேசினார். எடுபடவில்லை.

      கேஸ் ஜூரிக்குப் போயிற்று. ஜூரிகட்கு நானாவதி மீது அனுதாபம். அவமானப்பட்ட கணவனுக்கு நியாயம் வழங்கப் பிரியப்பட்டு ஏகமனதாக விடுதலை செய்தது.

      கோர்ட்டில் சட்டம் செல்லும். நிலைமை (exceptional) முக்கியமானால் ஊரார் அபிப்பிராயமே சட்டமாகச் செயல்படும்.

      அட்மிரல் நானாவதியை விடுதலை செய்தார்கள். உலகம் அவன் குற்றம், குற்றமில்லைஎன நினைத்தது.

      அன்பர்கள் சத்தியசீலர்களானால், செல்வம் USAவைவிட அதிகமாக இருக்கும். எதுவும் செய்ய வேண்டாம்.

    • எல்லாம் திறமையாகச் செய்தால், அமெரிக்காவில் அதிகபட்சப் பணக்காரன் இந்தியாவில் ஏழை ஆவான்.
      • ஞானம் இந்தியாவில் உள்ளது.
      • செல்வம் இங்குள்ளது.
      • ஞானம் தரும் செல்வம் உழைப்புதரும் செல்வத்தைப் போல் ஆயிரமடங்கு பெரியது.
      • ஞானம் பெறும் செல்வம் சத்தியத்தால் பெற்றால் செல்வம் காற்றுப் போலாகும்.
      • இந்தியா ஜகத்குரு.
      • அன்பன் அகில உலகுக்கும் எடுத்துக்காட்டு.
      • மனம் நேர்மையாக, நிர்மலமாக, நிதானமாக, பெருந்தன்மையாக, பண்பால் பக்குவப்பட்டால் பணம் கண்ணுக்குத் தெரியாது. மலையாகக் குவியும்.

    6 மாதம் விவசாயி பயிரிட்டு 10,000 ரூபாய் செலவுசெய்து பெறுவது லாபமா, நஷ்டமாஎன நிலையில்லை. பொதுவாக இலாபம் ரூ. 500 அல்லது ரூ. 1,000 வரும். சமயத்தில் நஷ்டமும் வரும். அவன் சரக்கை வாங்கி அடுத்த நாள் அதில் ரூ. 1,000 இலாபத்திற்கு வியாபாரி விற்கிறான்.

    • வியாபாரத்தில் இலாபம் விவசாயத்தைவிட அதிகம். பாங்க் நம் ஊரில் ஆரம்பித்து நாமெல்லாம் போட்ட டெபாசிட் 1 கோடி ரூபாயானால் பாங்க் 9 கோடி ரூபாய் கடன் கொடுக்கிறது. அது சட்டம். பாங்க்கிற்கு 9 கோடிக்குரிய வட்டி வரும். பொதுமக்கள் 1 கோடியை 9 கோடியாய் பெருக்கும் சக்தியை சட்டம் பாங்கிற்குக் கொடுத்துள்ளது. மேலே போகப்போக பணம் எளிதில் உற்பத்தியாகும்; அபரிமிதமாக உற்பத்தியாகும்.

      அமெரிக்கக் கம்பனி மெக்கன்சி சமீபத்தில் வெளியிட்ட ரிப்போர்டில் "இந்தியா பேனாவால் பெரும்பணம் உற்பத்தி செய்யலாம். உதாரணமாக இந்த ஆண்டு சில சட்டங்களை முக்கியமாக மாற்றினால் அதனால்மட்டும் 2 இலட்சம் கோடி ரூபாய் உபரியாக நாட்டிற்கு உற்பத்தியாகும்'' என்று கூறுகிறது. 2001இல் நாட்டில் 100 கோடி மக்கள் சம்பாதித்த மொத்த பணம் 18 இலட்சம் கோடி. பேனாவால் 2 இலட்சம் கோடி சர்க்காரால் உற்பத்தி செய்ய முடியும்.

      • உலகத்தில் மேலைநாடுகளில் பல வழிகளில் பணம் தானே உற்பத்தியாகிறது.
      • மெக்கன்சி இந்தியா அதைச் சில விஷயங்களில் பின்பற்றிப் பயனடையலாம்எனக் கூறுகிறது.
      • இதனுள் உள்ளது ஒரு சூட்சுமம்.
        விபரம் தெரிந்தால் எளிதில் பெரும்பணம் ஈட்டலாம்.
      • அன்பர்கட்கு இந்த விவரங்களைத் தெரிவிக்க "பணம்'' என்றொரு நூல் சமீபத்தில் வெளி வர இருக்கிறது.
      • அன்னையை சமர்ப்பணத்தால் ஏற்பது அந்த விபரம் தெரிவதற்கு ஈடாகும்.
  • கொடுமைப்பட்டவன் சம்பாதிப்பான்
    • நாடு 60 ஆண்டுகளாக, சுதந்திரம் அனுபவிக்கிறது.
      சுதந்திரம் பெரிய வாய்ப்பு.
      ஒரு வாய்ப்பு வந்தால் ஏற்கனவே பணக்காரனுக்கு அது அதிகமாகப் பலிக்கும். சுதந்திரம் வந்தபின் ஏழை மேலும் ஏழையாகப் போகிறான்;
      பணக்காரன் மேலும் சம்பாதிக்கிறான். சுதந்திரம் பணக்காரனுக்குத்தான் வந்ததுஎன்ற குறை 1970, 1980 வரை கேட்டோம். இப்பொழுது அது காதில் விழுவதில்லை.
      இது உண்மை. ஆனால் முழுஉண்மையில்லை.
      புதிய வாய்ப்பு வந்தால் ஏற்கனவே வசதியுள்ளவன் அதை அதிகமாகப் பெறக்கூடிய வசதி படைத்தவனாக இருப்பதால் அவனுக்குச் சாதகமாகிறது.
      கல்லூரி வந்தால் பணக்காரன் படிக்கலாம்.
      டிராபிக் ஏராளமான இலாபம் தந்தால் பஸ் ஓனருக்கு லாபம்.
      இதில் வேறோர் உண்மையும் உண்டு.

      தாழ்த்தப்பட்டவன், கொடுமைக்கு ஆளானவன், புறக்கணிக்கப்பட்டவன், எவரும் ஏறிட்டுப் பார்க்காதவரெல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்தால் அளவு கடந்து சம்பாதிக்கலாம். எந்த ஊரிலும் உள்ள புதுப் பணக்காரர்களில் 100 பேரை எடுத்துப் பார்த்தால் 50 பேருக்குமேல் அடி மட்டத்திலிருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் திறமை உண்டு; உழைப்புண்டு; ஆர்வமுண்டு. அது சம்பாதிக்கும். 

      • ஏற்கனவே வசதியுள்ளவன் வசதியால் சம்பாதிக்கிறான்.
      • ஏற்கனவே தாழ்ந்தவன் திறமையால் சம்பாதிக்கிறான்.
      • உழைப்புள்ளவர் எவரும் இன்று பெரும்பணம் சம்பாதிக்கிறார்கள்.
      • அன்னைபக்தர்கள் நிலையென்ன?
        • இந்த பக்தியுள் வசதி, திறமை, உழைப்பு, ஆர்வம் உண்டு.
          உள்ள பக்தியும், நம்பிக்கையும் உண்மையானால் அன்பர் மேற்சொன்னவர் பெறுவதைப் பெறுவார்.
        • அன்பருக்கே உழைப்பும், திறமையும், வசதியும் - ஏதாவது ஒன்று - இருந்தால் அதன் பலன் அபரிமிதம்.
        • அன்னை பக்தனுக்கு திறமையிருந்து, அன்னை முறையைக் கைப்பற்றினால் எந்தத் தொழில் செய்தாலும் அந்த ஊரில் முதன்மை பெறுவான்.
        • காலம் மாறி பலிக்காதது பலிக்கிறது.
          நாடு சுதந்திரம் பெற்று மக்கள் வெற்றி பெறும் வாய்ப்புத் தருகிறது.
          அன்பருக்கு அன்னை கஷ்டகாலத்திலும் (1940க்கு முன்) வெற்றி தருபவர்.
          இன்று 1956இலிருந்து தோல்வி அழிந்துவிட்டது.
          1973இலிருந்து சொர்க்கமே பூவுலகுக்கு வந்து விட்டது.
          இந்த நாளில் அன்பர் திரண்ட செல்வம் சம்பாதிக்க இயலும். 
  • அதிர்ஷ்டம், அருள், பேரருள்
    • நமக்கு எது அதிர்ஷ்டம், அருள், பேரருள்?
      மனம் எப்படி மதரை ஏற்பது?
      திருஷ்டிஎன்றால் பார்வை.
      அ-திர்ஷ்டம் என்றால் பார்வையில் இல்லாதது.
      போன ஜன்மப் பலன் அதிர்ஷ்டம்.
      அன்னை தரும் தவப்பலன் வரும் பிறவிகளில் பெற வேண்டியது.
      அதைக் கடந்தது (Supramental luck) சத்தியஜீவிய அதிர்ஷ்டம்.
      எதிர்காலம் நிகழ்காலமாவதும் கர்மத்தின் இராஜ்ஜியம் அழிவதாகும்.
      காலத்தைக் கடந்தது அன்னையின் அதிர்ஷ்டம் - அருளெனப்படும்.
      மூன்றாம் நிலைக்காலம் (simultaneous Time) உலகம் அறியாதது.
      அன்னை அதைத் தருகிறார்.
      ஆதாய மனப்பான்மை பூர்த்தியாகும்.
      பரந்த மனப்பான்மை அதிகமாகப் பூர்த்தியாகும்.
      அதுவும் மனப்பான்மையே - மனத்திற்குக் கட்டுப்பட்டது. அன்னை மனத்தைக் கடந்தவர்.
      எவர் ஆசிரமத்துள் நுழைய பாஸ்தர மறுத்தாரோ, எவரால் வேண்டியவர்க்கும் நல்லது செய்ய முடியாதோ அவர் டிசம்பர் 5ஆம் தேதி மிக முக்கியமான இடத்தில் - பகவான் அறையில் - தியானம் செய்ய அனுமதி தருவது, மிகப்பெரிய சொத்து வாங்க எட்ட இருப்பவருக்கு உதவுவது பேரருள் செய்வது.
      நிலம் சம்பாதித்தால் நிலத்தின் விலையை மகசூலாகச் சம்பாதிக்கும்.
      Water Divinerரும் வால்டரும் காணிக்கை தரவில்லை.
      நாம் அதைத் தர மறுக்கக் கூடாது. நாம் தரவேண்டியது நிலம் முழுவதும் காணிக்கையாகத் தரவேண்டும்.
      அன்னை தம்மை முழுவதும் நமக்குத்தர முன்வரும் பொழுது அதைப் பெற நாம் அன்னைக்கும் அன்பர்கட்கும் நம்மை முழுமையாகத் தரவேண்டும்.
      இந்தக் காணிக்கையின் சக்தியை அனுபவத்தில் பார்த்தால் பெருந் தொகை வரும்.
      இதுவரை யாரும் சம்பாதிக்காத தொகையது.
      சம்பாதிப்பது உழைப்பன்று, உயிரன்று, ஜீவன்.
      ஜீவன் சம்பாதிக்க சரணாகதியை நாடவேண்டும்.
      அது பெறுவது ஆண்டவனை முழுவதுமாகப் பெறும்.
      அன்னை நம் சரணாகதியை ஏற்பது பேரருள்.
      மனம் தயாரானால், மாநிலம் சொந்தமாகும்.
      உலகம் உள்ளேயிருப்பதைக் கண்டபின் அதைவிடக் குறைவாக எப்படிச் சம்பாதிப்பது?
      நெகிழ்ந்த மனம் நெடிது வாழும்.
      இல்லாதது இல்லை. பெறாததுண்டு.
  • சேவை
    • சேவை என்றால் என்ன?
      ஒருவர் வருஷத்திற்கு 5 இலட்சம் சம்பாதித்து பள்ளிக்கூடத்திற்குச் செலவு செய்கிறார். இதுபோன்ற சேவையை நான் கேட்டதில்லை. அவர்கள் பெற்றது கெட்ட பெயர், ஆபத்து, பிள்ளைகளை அனுப்ப கூலிக்காரர் மறுத்தனர்.
      சேவையைப் பெற்றவர் பாதகம் செய்வது தவறாது.
      எவ்வளவு மட்டமானவனும் பெறும் நிலையிலிருக்கப் பிரியப்படவில்லை.
      கொடுக்கும் அந்தஸ்தை மனம் நாடும்.
      நடைமுறையில் பெறும் பொருளையும், கொடுக்கும் அந்தஸ்தும் வேண்டும்.
      வேலை குதிரைக்கொம்பான காலத்தில் SSLCயை 5ஆம் முறை எழுதி பாஸ் செய்தவனுக்கு வலிய வேலை வாங்கிக் கொடுக்க முனைந்தவரை, பெறுபவன் "நான் உயர்ந்தவன்.
      நீ சேவை செய்ய கடமைப்பட்டவன்'' என்று வேலையை "நான் கேட்கவில்லை” என்றது இந்த மனப்பான்மை.
      ஐரோப்பாவில் ஒரு சொல்லுண்டு. ஒருவருக்கு அடுத்தவர் மீது வெறுப்பு ஏற்பட்டால் அடுத்தவர் அனைவரிடமும் "ஏன் இவர் என்மீது கோபமாக இருக்கிறார் எனத் தெரியவில்லை. நான் இவருக்கு எந்த நல்லதும் செய்யவில்லையே'' என்று கூறுவது வழக்கம். உதவியைப் பெறுபவர் உதவி செய்தவர்மீது கோபப்பட வேண்டும் என்று புரிந்த சமுதாயம் பேசும் பேச்சு இது.
      பாரதத்தில் இக்கருத்து இல்லை.
      பெறுவது ego. அது பாம்புபோல் தவறாது கடிக்கும்.
      கேட்டுக் கொடுத்தால் பாதகம் குறையும்.
      கேட்காமல் கொடுத்தால் பெரிய தீங்கிழைக்க உதவும்.
      உறவு மாறினால் - ஒரு கை வலுத்தால் - வலுவான கை உபத்திரவம் தரும்.
      சுயநலமானவர் பிறருக்கு வலிய உதவுவதில்லை.
      அவர்கட்குப் பிரச்சினையில்லை.
      கொடுப்பவருக்கே, அதுவும் வலிய கொடுப்பவருக்கே, நான் கூறும் உபத்திரவம் எழும்.
      இந்தச் சட்டப்படி எந்த உறவையும் சோதனை செய்யலாம்.
      (Equilibrium) கொடுப்பதும், பெறுவதும் சமமானால் நட்பு வளரும், உயரும், நீடிக்கும்.
      அன்னை விதிவிலக்கு.
      கொடுப்பதால் வளர்வது அன்னையின் அருள்.
      அன்னைபோல நம்மால் கொடுக்க முடியுமானால் - அகந்தையின்றி - கொடுப்பதால் உபத்திரவம் வாராது.
      கல்லூரிப் பேராசிரியரிடம் 20 மாணவர்கள் ட்யூஷன் படித்தனர். அனைவரும் பாஸ் செய்தனர். 18 பேர் வந்து சொல்லிவிட்டுப் போனார்கள். இருவர் வரவில்லை. வாராத இரு மாணவர்களும் பேராசிரியரிடம் இலவசமாகப் பயின்றனர். இலவசமாகப் பயின்றதால் நன்றி சொல்லமாட்டார் என்பது பகவான் சட்டம். ஒரு தமிழாசிரியர்பையன் அதிபுத்திசாலி. என் வகுப்பில் பயின்றவன். அவன் முதல் மாணவன். ட்யூஷன் தேவை இல்லை. நானே பிரியப்பட்டு ஆங்கிலம் கற்பிக்க அவனை அழைத்தேன்.

      X Stdஇல் சிறப்பான ஆங்கிலம் எழுதினான். 52 புத்தகங்களை (Retold English stories of each 100 pages) சுருக்கி 600 பக்கம் உயர்ந்த ஆங்கிலம் எழுதினான். சர்வகலாசாலை ஆங்கில ஆசிரியர் அதைப் பார்த்துவிட்டு "இந்த அளவுக்கு உயர்ந்த ஆங்கிலம் இன்று என்னால் எழுத முடியாது'' என்றார். 2 ஆண்டு என்னிடம் இலவசமாகப் பயின்றான். பாஸ் செய்தான். அவன் வீடு என் வீட்டின் சமீபம். வந்து சொல்லவில்லை. அவன் தகப்பனாரை தினமும் சந்திப்பேன். "என் மகனுக்கு உங்களைப் பார்க்க ஆவல்'' என தினமும் கூறுவார். ஏனோ P.U.C. பரிட்சைக்குப் போக மறுத்துவிட்டான். P.U.C. பாஸ் செய்த பிறகு அவனையும் அவன் தகப்பனாரையும் பஸ்ஸில் சந்தித்தேன். "என் மகனுக்கு உங்களைப் பார்க்க ஆவல்'' என்றார். மேலும் சில வருஷங்கள் கழித்து தமிழாசிரியர் வேறு விஷயமாக எனக்கு எழுதிய கடிதத்தில் "டாக்டருக்கு உங்களைப் பார்க்க ஆவல்'' (அவன் பல் டாக்டராகிவிட்டான்) என எழுதினார். 40ஆம் வயதில் என்னைப் பார்க்க வந்தான். நான் அன்பர்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்ட நாள் என்பதால் நான் பார்க்கவில்லை.

      இலவசமாகப் பெற்ற உதவி உறுத்தும்.
      பெற்றவரை, கொடுத்தவருக்கு எதிரியாக்கும்என பகவான் கூறுகிறார்.
      உதவி செய்து, உபத்திரவம் பெறாதவரே உலகிலில்லை.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பூரணயோகத்தின் சூட்சும இரகஸ்யங்கள்:
பிரபஞ்சம் மனிதனாகத் தன்னைச் சுருக்க முயல்கிறது.
மனிதன் பிரபஞ்சமாக மலர்ந்து விரிய முயல்கிறான்.
வாழ்வில் (surface) மனிதன் இதற்குத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான்.
ஆழத்தில் முடிவு தெரிகிறது. (மேலெழுந்த வாழ்வில் தயாரான சிருஷ்டி ஆழத்தில் உருவாகிறது).
மேலெழுந்த வாழ்விலிருந்து ஆழத்திற்குச் சென்றால் ஆன்மா விடுதலையடைந்து 3 சந்தர்ப்பங்கள் எழுகின்றன.
 
முதல் நிலை
நிர்வாணம் எய்தி ஆன்மா கரையும்.
இரண்டாம் நிலை
ஆன்மா புருஷனாகக் காட்சியளிக்கும்.
(மனோமயப்புருஷனைக் காணுதல்)
மூன்றாம் நிலை
சைத்தியப்புருஷன் வெளிப்படுதல்.
 
புருஷனைக் கண்டபின், புருஷோத்தமனை அடைந்து மோட்சம்  பெறுவது கீதைவழி. சைத்தியப்புருஷனைக் கண்டு, ஈஸ்வரனை அடைந்து, தெய்வத்தை உலகுக்குக் கொண்டு வருவது பூரணயோகம்.
 
பூரணயோகத்தின் சூட்சும இரகஸ்யங்கள்.

*****



book | by Dr. Radut